Sunday, August 14, 2022

கந்தரனுபூதி - எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1

   

 கந்தரனுபூதி -  எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html

)


இந்த உலகம் ஒரு கலவை. 


எதை எடுத்துக் கொண்டாலும் சில அடிப்படையான விடயங்களைக் கொண்டுதான் அவை படைக்கப் படுகின்றன. 


எப்படி என்று சில உதாரணங்கள் மூலம் காண்போம். 


எத்தனையோ விதமான உணவுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு சுவை. அத்தனை சுவைகள் இருக்கின்றனவா என்றால் இல்லை. மொத்தமே ஆறு சுவைதான் உண்டு. இனிப்பு, புளிப்பு, உரைப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு. மொத்தம் அவ்வளவுதான். இவற்றை எந்த விகிதத்தில் கலக்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல் சுவை இருக்கும். இந்த ஆறு சுவையைத் தாண்டி இன்னொரு சுவை கிடையாது.


எத்தனையோ விதமான இசை இருக்கிறது. எவ்வளவு பாடல்கள், எத்தனை மொழிகளில். அத்தனைக்கும் அடி நாதம் ஏழு ஸ்வரங்கள்தான். அதை மாற்றி மாற்றிப் போட்டு புதுப் புது இராகங்கள் உண்டாகின்றன. உலகில் உள்ள அத்தனை இசைக்கும் அடிப்படை ஏழு ஸ்வரங்கள்தான். 


எத்தனை விதமான மனிதர்கள். எல்லோருக்கும் அடிப்படை செல் தான். செல்களின் தொகுப்பு திசுக்கள் (tissues ), திசுக்களின் தொகுப்பு உறுப்புகள் (organs ), உறுப்புகளின் தொகுப்பு, உருவம். 


உலகில் உள்ள அத்தனை பொருள்களுக்கும் அடிப்படை அணுக்கள். அதற்கு உள்ளேயும் போகலாம். பொதுவாக அணுக்கள் என்று கொள்வோம். 


வெளித் தோற்றம் உண்மை அல்ல. அடிப்படையில் ஏதோ ஒன்று இருக்கிறது. அது புரிந்து விட்டால் அத்தனை தோற்றமும் புரிந்து விடும். ஒவ்வொன்றாக படிக்க வேண்டும் என்று அல்ல. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html


(Pl click the above link to continue reading) 



எனவே, நாம் எப்போதும் எது அடிப்படையானது என்று தேடிக் கொண்டிருக்கிறோம். அதை தத்துவவாதிகள் நிரந்தர வஸ்து என்பார்கள். சாஸ்வதமானது. அடி நாதமானது எது என்று தேடத் துவங்கினார்கள். 


உலகத் தோற்றம், அதில் உள்ள பொருள்கள், மனிதர்கள், உயிர்கள் எல்லாம் அடிப்படையானது அல்ல என்று புரிந்து கொண்டார்கள். 


இவை எல்லாமே பஞ்ச பூதங்களின் ஒரு விதமான தொகுப்பு என்று புரிந்து கொண்டார்கள். 


பஞ்ச பூதங்கள் அடிப்படையானவையா? அவற்றிற்கு உள்ளே வேறு எதுவும் இருக்கிறதா என்று ஆராயத் தலைப்பட்டார்கள். 


தோற்றம் என்பது என்ன? 


பொருள்களுக்கு என்று தனிக் குணம் இருக்கிறதா? அல்லது அது பார்பவரை பொறுத்து அமைகிறதா?


ஒருவன் ஒரு உணவை உண்டுவிட்டு ஐயோ, அம்மா என்ன காரம் என்று கண்ணீர் விட்டுக் கொண்டு நீரைத்தேடி ஓடுகிறான். அதே உணவை இன்னொருவன் உண்டுவிட்டு "என்ன இது ஒரு உப்பு உரைப்பு இல்லாமல் சப் என்று இருக்கிறது" என்கிறான். எது உண்மை? உணவு காரமாக இருக்கிறதா, இல்லையா? 


காரம் என்பது உணவில் இருக்கிறதா அல்லது உண்பவனின் நாக்கில் இருக்கிறதா? 


இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு போகலாம். 


பொருள் என்பது குணங்களின் தொகுதி என்றால், குணம் என்பது அதை உணர்பவனை பொறுத்து மாறும் அல்லவா? அப்படி என்றால் பொருளுக்கு என்று ஒரு தன்மை கிடையாதா? 


ஆராய்ச்சி தொடர்கிறது. 


அடுத்த பாடலில் அந்த ஆராய்ச்சிகளையும், அதில் யார் யார் என்னென்ன சொன்னார்கள் என்பதையும், தான் கண்டது என்ன என்பதையும் அருணகிரிநாதர் கூறுகிறார்.


அது என்ன என்று நாளை சிந்திப்போம். 



No comments:

Post a Comment