Friday, August 26, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - அது சாலும்

      

 திருக்குறள் - அழுக்காறாமை -  அது சாலும் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 162:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


குறள்  எண் 163: அல்லவை செய்யார்


அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து


)


நமக்கு துன்பம் எப்படி வருகிறது?


இயற்கை உபாதையால் வரலாம் - நோய், விபத்து, பொருளாதார சீர்குலைவு, போன்றவற்றால் நிகழலாம். 


அல்லது 


பகைவர்களால், எதிரிகளால், நமக்கு வேண்டாதவர்களால் நிகழலாம்.


இயற்கையை நாம் ஒன்றும் செய்ய முடியாது. மழை பெய்யும், பெய்யாமல் போகும், வெள்ளம் வரும், நில நடுக்கம் வரும்...அதை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.  எனவே, அதை விட்டு விடுவோம். 


இந்த எதிரிகள், பகைவர்கள் ..இவர்களை நாம் ஏதாவது செய்ய முடியும்.


முதலில், பகை வராமல் பார்த்துக் கொள்ளலாம். 


வந்துவிட்டால், சமாதானம் செய்து கொள்ளலாம்  அல்லது சண்டை போட்டு எதிரியின் வலிமையை ஒடுக்கலாம். 


நமக்கு எதிரியே இல்லை, பகையே இல்லை என்று வைத்துக் கொண்டால், நமக்கு துன்பமே வராதுதானே?


இல்லை என்கிறார் வள்ளுவர். 


"உனக்கு எதிரி இல்லாவிட்டால் கூட, பொறாமை என்ற ஒரு குணம் உனக்குள் இருந்தால், எதிரி செய்யும் அத்தனை துன்பத்தையும் அது தரும்" என்கிறார். 





பாடல் 


அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்கியும் கேடுஈன் பது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_26.html


(Pl click the above link to continue reading)


அழுக்காறு = பொறாமை 


உடையார்க்கு = உள்ளவர்களுக்கு 


அதுசாலும் = அது போதும் 


ஒன்னார் = பகைவர் 


வழுக்கியும் = இல்லாவிட்டாலும் 


 கேடுஈன் பது = கேட்டினை தருவதற்கு 


பகைவன் என்ன செய்வான் ?


நம் செல்வதையும் நம்மையும் பிரித்து விடுவான். 


எப்படி?


ஒன்று, நம்மிடம் உள்ள செல்வத்தை திருடிக் கொள்ளலாம், ,அல்லது அடித்துப் பறிக்கலாம்.


அல்லது, நம்மை சிறை செய்து உள்ளே தள்ளிவிடலாம்.


எப்படியும் நமக்கு உள்ள இன்பங்களை அனுபவிக்க முடியாமல் செய்து விடுவான். தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பான். நிம்மதியாக இருக்க விடமாட்டான். 


பொறாமையும் அதையே செய்யும்.


நம்மிடம் ஆயிரம் சிறப்புகள் இருக்கும், பணம் இருக்கும், ஆரோக்கியம் இருக்கும், நட்பு, சுற்றம் எல்லாம் இருக்கும். இருந்தும், அடுத்தவனுக்கு நம்மை விட ஏதோ ஒன்று கூட இருந்து விட்டால் நம் சிறப்பு ஒன்றும் தெரியாது. 


என் மனைவி அழகுதான். என்று அடுத்தவன் மனனவி என் மனைவியை விட அழகாக இருக்கிறாள் என்று நினைக்கத் தலைப் பட்டேனோ, அன்றில் இருந்து என் மனைவியின் அழகு என் கண்ணுக்குத் தெரியாது. "எனக்குன்னு வந்து வாச்சுதே" நு எரிச்சல் படத் தோன்றும். 


யார் என்ன செய்தார்கள்? 


யாரும், ஒன்றும் செய்ய வில்லை. என் பொறாமை என் நிம்மதியை குலைத்து விடுகிறது. 


இங்கு உரையில் ஒரு நுட்பம் செய்கிறார் பரிமேலழகர் 


அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்கியும் கேடுஈன் பது


என்பதில் "அதுசாலும்" என்று இருக்கிறது. 


பரிமேலழகர் "அதுவே சாலும்" என்று ஒரு ஏகாரத்தை சேர்க்கிறார். 


உன்னிடம் ஆயிரம் நல்ல குணங்கள் இருக்கலாம், ஆனால் பொறாமை என்ற ஒரு தீக்குணம் இருந்தால் அது ஒன்றே போதும், உனக்கு பகைவர்கள் செய்யும் தீங்கு அதனையும் அதுவே கொண்டு வரும் என்கிறார். 


"அதுவே" என்பதில் உள்ள ஏகாரம் பிரி நிலை ஏகாரம் என்று அழைக்கப்படும்.


பிரித்துக் காட்டுவதால். 


இராமன் நல்லவன் என்றால் இராமன் நல்லவன், மற்றவர்களும் நல்லவர்களாக இருக்கலாம் என்ற செய்தி அதில் அடங்கி இருக்கிறது. 


இராமனே நல்லவன் என்று சொன்னால். அவன் மட்டும்தான் நல்லவன் என்று அவனை மற்றவர்களில் இருந்து பிரித்துக் காட்டுவதால் அது பிரிநிலை ஏகாரம் என்று அழைக்கப்படும். .


தெரிநிலை தேற்றம் ஐயம் முற்று எண் சிறப்பு

எதிர்மறை எச்சம் வினா விழைவு ஒழியிசை

பிரிப்பு கழிவு ஆக்கம் இன்னன இடைப்பொருள்


என்பது நன்னூல் சூத்திரம் (421). இது "பிரிப்பு" என்பதன் கீழ் வருவது. 


நன்னூல் படிக்கலாம். ஆசைதான். காலம் போய்க் கொண்டே இருக்கிறதே. என்ன செய்ய? 


"இளமையில் கல்" என்று பாட்டி தெரியாமலா சொன்னாள்.



No comments:

Post a Comment