Monday, August 29, 2022

கந்தரனுபூதி - வளை பட்ட கை - பாகம் 3

       

 கந்தரனுபூதி -  வளை பட்ட கை - பாகம் 3


பாடல் 


வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்

தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,

தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/3.html


(Pl click the above link to continue reading) 


வளைபட்ட கைம் = வளையல் அணிந்த கைகள் 


மாதொடு = கொண்ட பெண்கள் 


மக்கள் = மக்கள் 


எனும் = என்ற 


தளைபட்டு  = விலங்கில் அகப்பட்டு 


அழியத் = அழிவது 


தகுமோ? தகுமோ? = சரியா, சரியா ?


கிளைபட்டு எழு = கிளை கிளையாக கிளம்பும் 


சூர் உரமும் = சூர பத்மனின் உறுதியும் 


கிரியும், = (மாயா) மலையும் 


தொளைபட்டு = துளைத்து 


உருவத் = உருவிக் கொண்டு வெளியில் செல்லும் 


தொடு வேலவனே. = வேலைத் தொடுத்தவனே 


அதாவது மனைவி மக்கள் என்ற பந்தத்தில் அகப்பட்டு அழிவது சரியா என்று முருகனைக் கேட்கிறார். 


இந்தப் பாடலில் உள்ள "தளைபட்டு அழிய" என்ற வார்த்தைகளை எடுத்துக் கொள்வோம். 


தளை படுதல், அழிதல் என்று இரண்டு இருக்கிறது. 


பெரிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், தலைவர்கள் போன்றோரை சிறையில் அடைத்தால் அவர்கள் என்ன செய்வார்கள். 


சிறையில் இருந்து கொண்டு படிப்பார்கள், எழுதுவார்கள். எத்தனையோ பெரிய பெரிய புத்தகங்கள், சிந்தனைகள் சிறைச் சாலையில் பிறந்ததுதான். 


சிறை என்று நினைத்தால், அது சிறை. .


எழுதக் கிடைத்த வாய்ப்பு என்று நினைத்தால், அது வாய்ப்பு. 


நான்கு சுவர்களும், சில பல கம்பிகளும், சில காவல்காரர்களும் சிறையை உண்டாக்கி விடாது. 


வீட்டிற்குள் இருந்து கொண்டே சிறையில் இருப்பது போல தனிமையில் வாடுபவர்கள் பலர்.


குடும்பம் சிறை அல்ல. அது ஆன்மீக வளர்சிக்கு ஒரு படிக்கல். அது புரியாவிட்டால் அது சிறைதான்.


எப்படி என்று பார்ப்போம். 


ஒரு சிறுவன் இருக்கிறான். வீட்டில் அம்மா ஏதோ பலகாரம் செய்கிறாள்.  அவனுக்கு அது பிடிக்கும். எடுத்து உண்கிறான். தம்பி தங்கைகளுக்கு வேண்டுமே என்ற எண்ணம் எல்லாம் கிடையாது. எல்லாம் தனக்கு வேண்டும் என்று நினைக்கிறான். 


சிறு பிள்ளை அப்படித்தான் நினைக்கும். 


வளர்ந்து பெரியவன் ஆகிறான். திருமணம் ஆகிறது. 


அதே பலகாரம் ஒரு உணவு விடுதியில் சாப்பிடுகிறான். "நல்லா இருக்கே...அவளுக்கு கொஞ்சம் வாங்கிக் கொண்டு போவோம்" என்று நினைக்கிறான். 


தன் மேல் மட்டும் இருந்த அன்பு, சற்று விரிந்து மனைவி மேலும் செல்கிறது. அவளுக்கு இந்த சேலை நன்றாக இருக்கும், அவளுக்கு இந்த உணவு பிடிக்கும் என்று அவளைப் பற்றி நினைக்கிறான். 


பின் சிறிது நாளில் பிள்ளை வருகிறது. 


பிள்ளை வளர்கிறது. 


அதே பலகாரம். ஒரே ஒரு துண்டுதான் இருக்கிறது. பிள்ளை ஓடி வருகிறான். "இங்க வாடா...இந்தா இதைச் சாப்பிட்டு பாரு" என்று தனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று பிள்ளைக்குக் கொடுக்கிறான். பிள்ளையின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியைக் கண்டு அவன் மகிழ்கிறான். 


அன்பு இன்னும் விரிகிறது. 


மனைவி, பிள்ளை, பேரப் பிள்ளை என்று அன்பு விரிந்து கொண்டே போகும். ஒரு காலகட்டத்தில், எந்தப் பிள்ளையைப் பார்த்தாலும் தன் பிள்ளையை பார்ப்பது போலவே இருக்கும். எந்த சின்னப் பிள்ளையைப் பார்த்தாலும் தன் பேரப் பிள்ளையை பார்ப்பது போல இருக்கும்.  தெருவில் ஒரு பிள்ளை கீழே விழுந்துவிட்டால் தன் பிள்ளை விழுந்தது போல ஒரு பதற்றம் வரும். 


அன்பு மேலும் விரிந்து குடும்பத்தைத் தாண்டி சமுதாயம் வரையில் பரவும். 


தனக்கு என்று இருந்ததை மனைவிக்கு, பிள்ளைக்கு, பேரப் பிள்ளைக்கு, மற்ற பிள்ளைகளுக்கு என்று கொடுக்கத் தோன்றும். அதில் இன்பமும் இருக்கும். 


துறவு என்றால் வேறு என்ன? துறப்பதில் இன்பம் காண முடியும். 


மனைவி மக்கள் மேல் அன்பு செலுத்தத் தொடங்கினால் அது மேலும் மேலும் விரிந்து துறவு, வீடு பேறு, இறைவன் வரை கொண்டு சேர்க்கும். 


அன்பு இல்லாவிட்டால் அது தளை தான். விலங்குதான். சுமைதான். 


இந்த மனைவி மக்கள் என்பது எப்போது தளை ஆகும்? அன்பு இல்லாவிட்டால். அன்பு இல்லாவிட்டால் அருள் பிறக்காது. அருள் இல்லாவிட்ட்டால் துறவு நிகழாது. பற்று விடாவிட்டால் இறை அனுபவம் நிகழாது. 


இப்படியே நான் கிடந்து அழியத் தகுமோ என்று அருணகிரிநாதர் கேட்பது, அன்பில்லாமல் கிடந்து அழிவது சரியா என்று கேட்கிறார். 


தளைதான். ஆனால், அதனால் அழிய வேண்டியது இல்லை. அந்த அன்பு பெருக அவனருள் வேண்டும் என்று முருகனை வேண்டுகிறார். 



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html


)


 

3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 & 2


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html


4. வளை பட்ட கை - பாகம் 1 & 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_24.html


)


No comments:

Post a Comment