Sunday, September 18, 2022

திருவாசகம் - திரு அம்மானை - காட்டாதன எல்லாம் காட்டி

      

திருவாசகம் - திரு அம்மானை  -   காட்டாதன எல்லாம் காட்டி


"கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாத குருக்கள் வானம் கீறி வைகுந்தம் காட்டுவாராம்" என்று ஒரு பழமொழி உண்டு. 


வைகுந்தம் எப்படி போவது என்று நாள் கணக்கில் சொல்லுவார். வைகுந்தம் போவது என்பது எளிதான காரியமா? அவ்வளவு கடினமான வேலையை செய்து முடிக்க வழி தெரிந்தவருக்கு கூரையின் மேல் ஏறி கோழியை பிடிக்கத் தெரியாதா? இது கூட தெரியாத ஆள் எப்படி நம்மை வைகுந்தம் கூட்டிப் போகப் போகிறார்? என்பது கேள்வி. 


அது ஒருபுறம் இருக்கட்டும். 


பக்தி மார்கத்தில் உள்ள பல பேர், இந்த சிற்றின்பம், ஆண் பெண் உறவு என்றால் முகம் சுளிப்பார்கள்.  "சீ ...அதை எல்லாம் பேசிக்கிட்டு" என்று சங்கடத்தில் நெளிவார்கள். 


இந்த சிற்றின்பமே பிடிபடவில்லை என்றால், பேரின்பம் எப்படி பிடிபடும்? 



பெரிய சங்கீத வித்வானாக வேண்டும். ஆனால் இந்த சுருதி, இலயம், தாளம் எல்லாம் என்னத்துக்கு என்று கேட்பது போல. 

சிற்றின்பம் புரிந்தால்தான் பேரின்பம் புரியும். ஆரம்பப் பள்ளி முடித்தால் தான் உயர் கல்விக்குப் போக முடியும். 


நமது பக்தி இலக்கியத்தில் சிற்றின்பம் சேர்ந்து இருப்பது ஆச்சரியமான விடயம். வேறு எந்த மதத்திலாவது இப்படி இருக்குமா என்று தெரியவில்லை. 


நாயகன் நாயகி பாவம் என்பது பக்தி இலக்கியத்தின் ஒரு பகுதி. அதைக் கண்டு யாரும் முகம் சுழிப்பது இல்லை. 



அவள் ஒரு இளம் பெண். இந்த ஆண் பெண் உறவு பற்றியெல்லாம் அவளுக்கு ஒன்றும் தெரியாது. உடலின் மாற்றங்கள் புரிகிறது. ஆனாலும் அது முழுமையாகத் தெரியவில்லை. அவளுடைய காதலனோ இதில் தேர்ந்தவன். ஒரு நாள் அவளை தனியே அழைத்துச் சென்று எல்லாவற்றையும் விளக்குகிறான். அவளுக்கு கூச்சம், பயம், வெட்கம், படபடப்பு, சந்தோஷம் எல்லாம் ஒன்றாக வருகிறது. 

பின் வீட்டுக்கு வந்து விட்டாள். தோழி கேட்கிறாள். "என்னடி என்னவோ போல இருக்க. முகமே சரியில்லை...என்ன உடம்பு கிடம்பு சரியில்லையா" என்று கேட்கிறாள் 

அவள் சொல்கிறாள் 


"என் தோழியே கேள்.  என் காதலன் இருக்கிறானே அவன் என்னை மயக்கி தனியே அழைத்துச் சென்று எது எதையோ காட்டினான், அதை எல்லாம் வெளியே சொன்னால் எல்லாரும் சிரிப்பார்கள். அதை எப்படிச் சொல்வேன்..."


என்று தன் தலைவனோடு ஒன்றியதை, அவனோடு ஒன்றாகக் கலந்ததை சொல்லி முடிக்கிறாள். 



சரி, அதுக்கும் இந்த அம்மானை பாடலுக்கும் என்ன சம்பந்தம்?


பாடல் 



கேட்டாயோ தோழி! கிறி செய்த ஆறு ஒருவன்
தீட்டு ஆர் மதில் புடை சூழ், தென்னன் பெருந்துறையான்,
காட்டாதன எல்லாம் காட்டி, சிவம் காட்டி,
தாள் தாமரை காட்டி, தன் கருணைத் தேன் காட்டி,
நாட்டார் நகை செய்ய, நாம் மேலை வீடு எய்த,
ஆள் தான் கொண்டு ஆண்டவா பாடுதும் காண்; அம்மானாய்!



பொருள் 


(pl click the above link to continue reading)



கேட்டாயோ தோழி! =கேள் என் தோழியே 

கிறி செய்த ஆறு = கிறி செய்தவாறு = கிறி என்றால் மயக்கம், மாயை, வஞ்சனையாக என்று பொருள். இங்கே, மயக்கி என்று கொள்ளல்லாம் 

ஒருவன் = தன்னிகரற்ற ஒருவன் 


தீட்டு ஆர் மதில் = தீட்டு என்ற சொல்லுக்கு கூர்மையான என்ற பொருள் உண்டு. வேல், ஈட்டி, அம்பு போன்ற கூரான ஆயுதங்கள் நிறைந்த மதில் (சுவர்) 


புடை சூழ் = படைகள் சூழ 


தென்னன்  = தென்னாட்டின் தலைவன் 



பெருந்துறையான், = திருப்பெருந்துறையில் உறைபவன் 



காட்டாதன எல்லாம் காட்டி  = இதுவரை காட்டதவற்றை எல்லாம் காட்டி 




சிவம் காட்டி, = சிவம் காட்டி. சிவமாகும் தன்மை காட்டி 



தாள் தாமரை காட்டி = தாமரை போன்ற திருவடிகளைக் காட்டி 



தன் கருணைத் தேன் காட்டி, = தன் கருணை என்ற தேனைக் காட்டி 



நாட்டார் நகை செய்ய = நாட்டில் உள்ளவர்கள் நம்மைப் பார்த்து சிரிக்க 



நாம் மேலை வீடு எய்த = நாம் வீடு பேற்றினை அடைய 



ஆள் தான் கொண்டு  = இதில் 'தான்' என்பது அசைச் சொல். ஆள் கொண்டு என்பது ஆட்கொண்டு 



ஆண்டவா = என்னை ஆள்பவனை 



பாடுதும் காண்; அம்மானாய்! = பாடுவோம் அம்மானாய் 



தன்னை ஒரு இளம் பெண்ணாகக் கற்பனை செய்து கொண்டு, ஒரு பெண் தன் தலைவனிடம் அடையும் இன்பம், பின் அவனே எல்லாம் என்று அவனோடு ஒன்று படும் அந்த நிலை என்று சிற்றின்பத்தில் இருந்து பேரின்பத்துக்கு வழி காட்டுகிறார். 



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html

)


Saturday, September 17, 2022

கம்ப இராமாயணம் - பெண்களும் ஜொள்ளு விடுவார்களா ?

கம்ப இராமாயணம் - பெண்களும் ஜொள்ளு விடுவார்களா ?


எப்பப் பார்த்தாலும் திருக்குறள், பிரபந்தம், தேவாரம், திருவாசகம் என்று இல்லாமல், இடை இடையே கொஞ்சம் வேறு விடயங்களையும் பார்ப்போம். 


எவ்வளவுதான் மனதில் காதலும், காமமும் இருந்தாலும் பெண்கள் அதை வெளியே சொல்லுவது இல்லை. தமிழ் இலக்கியம் முழுவதையும் அலசி ஆராய்ந்தாலும், பெண்கள் தங்கள் உணர்சிகளை வெளிப்படுத்திய இடங்கள் மிகக் குறைவு. பெண்களின் எழுத்துக்களில், ,பெண் உணர்வுகள் வெளிப்படும் இடங்கள் மிகக் குறைவு. 


தற்காலத்தில், புதுக் கவிதைகள் எழுதுகிறார்கள். 


கம்ப இராமாயணத்தில், கம்பன் பெண்களின் மன உணர்வுகளை பல இடங்களில் மிக அழகாக படம் பிடிக்கிறான். 


அதில் ஒரு இடம், சூர்பனகை இராம இலக்குவனர்களை கண்டு காமம் கொண்டு தன் உள்ளத்தை வெளிபடுத்தும் இடம். 


இராமன் கானகத்தில் இருக்கிறான். அவன் இருக்கும் வனப் பகுதி சூர்பனகைக்கு சொந்தமான இடம். அங்கு வந்த சூர்பனகை இராமனைப் பார்க்கிறாள். 


இராமனின் அழகில் மயங்குகிறாள். சொக்கிப் போகிறாள். மனதில் காதலும், காமமும் எழுகிறது. 


அவளுக்குத் தோன்றுகிறது....


"அந்தக் காலத்தில் சிவ பெருமான் தவம் செய்து கொண்டிருந்த போது அவரின் தவத்தைக் கலைக்க தேவர்கள் மன்மதனை அனுப்பினார்கள். அவனும் சிவன் மீது மலர்க் கணைகளை தொடுத்தான். தவம் கலைந்த சிவன் சினம் கொண்டு மன்மதனை தன் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கி விட்டார். பின், இரதிதேவி வேண்ட, யார் கண்ணுக்கும் தெரிய மாட்டான், உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரிவான் என்ற வரத்தைத் தந்தார்.அந்த மன்மதன், நீண்ட காலம் தவம் செய்து எல்லோரு கண்ணிலும் படும்படி வரம் வாங்கி வந்துவிட்டானோ....இவனைப் பார்த்தால் மன்மதன் போல இருக்கிறதே " என்று ஜொள்ளுகிறாள் .



பாடல் 


 'கற்றை அம் சடையவன் கண்ணின் காய்தலால்

இற்றவன், அன்று தொட்டு  இன்றுகாறும், தான்

நல் தவம் இயற்றி, அவ்  அனங்கன், நல் உருப்

பெற்றன னாம்' எனப்  பெயர்த்தும் எண்ணுவாள்


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_17.html


(please click the above link to continue reading)




 'கற்றை அம் சடையவன் = சடை முடி உடைய அந்த சிவன் 


கண்ணின் காய்தலால் = நெற்றிக் கண்ணால் எரித்ததால் 


இற்றவன் = அழிந்தவன் 


அன்று தொட்டு = அன்று முதல் 


இன்றுகாறும் = இன்று வரை 


தான் = அவன் 


நல் தவம் இயற்றி = பெரிய தவங்களைச் செய்து 


அவ் அனங்கன் = அந்த அங்கம் இல்லாதவன், அதாவது உருவம் இல்லாதவன் 


நல் உருப் பெற்றன னாம்' எனப் = நல்ல வடிவைப் பெற்றான் போலும் 


பெயர்த்தும் எண்ணுவாள் =  மீண்டும் நினைப்பாள் 


எந்தக் கதை எப்படி வந்து நிற்கிறது..


எங்காவது வாய்ப்புக் கிடைத்தால் போதும், கம்பன் இராமனை இரசிக்கத் தவறுவது இல்லை. 


சூர்பனகை மூலம் கம்பன் இராமனை அனுபவிக்கிறான்.


கம்பன் மூலம் நாமும் அந்த இரசனையில் பங்கு கொள்வோம். 




Friday, September 16, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 3

  

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 3


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நிரந்தரமானவை, தோற்றமும், முடிவும் இல்லாதவை, இதில் பதியும், பசுவும் உயிர் பொருள்கள், அறிவு உள்ளவை, பாசம் என்பது உயிர் அற்றது, அறிவும் அற்றது என்று பார்த்தோம். 


ஆணவத்தின் காரணமாக பசு, பதியைப் பற்றாமல் பாசத்தில் அகப்பட்டுக் கொள்கிறது என்றும், அந்த அஞ்ஞான இருளில் அது தவித்து வெளி வர நினைக்கும், அந்த எண்ணமும், முயற்சியும்தான் மூல கன்மம் என்று வழங்கப் படுகிறது என்றும் சிந்தித்தோம். 


இனி மேலே செல்வோம், 



https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


(pl click the above link to continue reading)


இப்படித் தவிக்கும் உயிர்களுக்கு உதவி செய்ய இறைவன் அவற்றின் மேல் கருணை கொண்டு தன் நிலையில் இருந்து இறங்கி வருவான். 


ஏன் இறங்கி வர வேண்டும் ? அவன் நினைத்தால் அந்த உயிர்களை ஒரு நொடியில் பாசத்தில் இருந்து விடுவிக்க முடியாதா என்று என்னைப் போல ஒரு சிற்றறிவு உள்ளவன் கேட்கக் கூடும். .


செய்யலாம் செய்ய முடியும். ஆனால், ஏன் செய்ய வேண்டும்?  அப்படிச் செய்வதாக இருந்தால் இறைவனுக்கு ஒரு விருப்பு, வெறுப்பு இருக்க வேண்டும். ஒரு விருப்பும், வெறுப்பும் இல்லாதவன் எப்படிச் செய்வான். உயிர்கள் வெளிவருவதும், வெளி வரதாதும் அவற்றின் விருப்பம். ஆண்டவனுக்கு ஒரு விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை. 


எனவே, அவன் நேரடியாக செயலில் இறங்கி தனக்கு வேண்டியதை செய்து கொள்வது இல்லை.  மாறாக, உயிர்கள் செயல் படும் ஒரு சூழலை உருவாக்கித் தருவான். என்ன செய்வது என்பது உயிர்களின் பாடு.


ஒரு ஆசிரியர், பாடம் எடுப்பார், சந்தேகம் வந்தால் சொல்லிக் கொடுப்பார். அவரே பரிட்சையும் எழுதினால் என்ன என்று கேட்கக் கூடாது. அவருக்கு விடை தெரியும். அவர் பரீட்சை எழுதினால் மாணவனுக்கு அறிவு முதிர்ச்சி எப்படி வரும்?


எனவே, உயிர்களுக்கு உதவும் பொருட்டு இறைவன் இறங்கி வரும் படிகள் இருக்கின்றன. 


இந்த படிகளை மொத்தம் 36 படிகளாக பிரிக்கிறார்கள். இதை 90, 96 என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள். இப்போதைக்கு 36 என்ன என்பதைப் பார்ப்போம். 


இந்த 36 படிகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். 


சுத்த தத்துவம் 

அசுத்த தத்துவம் 

பிரகிருதி தத்துவம் 


என்று 


முதலில் சுத்த தத்துவத்தை எடுத்துக் கொள்வோம். 


இதில் மொத்தம் 5 படிகள். 


முதல் படி - நாதம். 


நாதம் என்றால் என்ன? இது அறிவின் பூர்ண வடிவம். அறிவே உருவானது. நம்மால் சிந்தித்து உணர முடியாதது. நனவிலி நிலை என்கிறார்கள். முயற்சி செய்யாதே. உன்னால் அதை அறிந்து கொள்ளவே முடியாது. இதை சைவ சித்தாந்தம் பரசிவம் என்பார்கள். நாம் பார்க்கும் வடிவங்கள் அல்ல. வடிவம் அற்ற ஒன்று அது. 


இரண்டாம் படி - விந்து 


விந்து என்றால் என்ன? இது அருள் சக்தி. ஏனைய தத்துவங்கள் பிறக்க வழி செய்யும் படி. இதை கிரியா சக்தி என்றும் சொல்லுவார்கள்.  இதுவும் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது. 


மூன்றாவது படி - சதாக்கியம் அல்லது சதாசிவம் - அறிவும் செயலும் சேரும் இடம். ஏனைய தத்துவங்களை தூண்டும் இடம். சிவ சக்தி இணையும் இடம். 


நான்காவது படி - ஈஸ்வரம் 


ஈஸ்வரம் என்றால் என்ன ?


இந்த நிலையில் இறைவன் உயிர்களில் கலந்து நிற்பான். ஆனால், உயிர்கள் அதை அறிய மாட்டா. இதைத்தான் மறைத்தர் தொழில் என்பார்கள். மறைத்தல் என்றால் பிள்ளைகள் பொருளை மறைத்து வைத்து கண்டுபிடிக்கும் விளையாட்டுப் போல அல்ல. தான் உயிர்களில் கலந்து நிற்பதை உயிர்கள் அறியாமல் மறைப்பது. 


ஐந்தாவது தத்துவம் - சுத்த வித்தை.


சுத்த வித்தை என்றால் என்ன?  படைத்தல், காத்தல், அழிதல் என்ற முத்தொழில் தொடங்கும் இடம். இறை சக்தி முழுமையாக வெளிப்படும் இடம். இந்த இடத்தில் தான் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்று இறை சக்தி வெளிப்படும். இதை அறிந்து கொள்ளாமல், உருத்திரன் உயர்ந்த கடவுள், திருமால் உயர்ந்த கடவுள் என்று சண்டை பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். 


இந்த ஐந்து தத்துவங்களும் சுத்த தத்துவம் என்று அழைக்கப்படும். 


மிக மிக மேலோட்டமாக சொல்லி இருக்கிறேன்.  ஆர்வம் இருப்பவர்கள் தேடிக் கண்டு கொள்க. 


புரிந்து சொல்லவில்லை. தெரிந்ததை சொல்லி இருக்கிறேன். மிக ஆழமான விடயம். 


மொத்தமாக இவை என்ன என்று புரிந்து கொள்வோம். பின் அதற்கு உள்ளே செல்லலாம். 


முப்பத்தாறு தத்துவங்களில் ஐந்து பார்த்து விட்டோம். 


மீதி உள்ள 31 தத்துவங்களையும் பற்றி சிந்திப்போம். 







[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html



]


Wednesday, September 14, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - நினைக்கப்படும்

  

 திருக்குறள் - அழுக்காறாமை -   நினைக்கப்படும் 


வள்ளுவர் ஆயிரம்தான் சொல்லட்டும், ஊருக்குள்ள பார்த்தால் அயோக்கியன், இலஞ்சம் வாங்குபவன், ஊரை அடித்து உலையில் போடுபவன்,பொய் சொல்லுபவன், சட்டத்தை மீறுபவன் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.நீதி, நேர்மை, ஞாயம் என்று இருப்பவன் வறுமையில், துன்பத்தில் வாடுகிறான். 


என்ன பெரிய அறம். அற வழியில் நின்றால் இன்பம், மகிழ்ச்சி வரும் என்றால் எல்லோரும் அந்த வழியில் தானே வந்து விட்டுப் போகிறார்கள். 


அறவழியில் சென்றால் துன்பம்தான என்றால் யார் அந்த வழியில் செல்வார்கள்.  இதெல்லாம் சரிப்படாது. திருக்குறள் எல்லாம் சும்மா படிக்கலாம். நல்லா இருக்கும். நடைமுறைக்கு ஒத்து வராது என்று நினைக்கத் தோன்றும். 



இந்த பிரச்சனையை வல்லுவரிடமே கேட்டு இருப்பார்கள் போல் இருக்கிறது. 


அதற்காக ஒரு குறளில் பதிலும் சொல்லி இருக்கிறார். 


பாடல் 


அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_14.html


(Pl click the above link to continue reading) 


அவ்விய = மனக் கோட்டம், பொறாமை உள்ள 


நெஞ்சத்தான் = நெஞ்சத்தை உடையவன் 


ஆக்கமும் = அவன் பெற்ற செல்வமும் 


செவ்வியான் = செம்மையாக வாழ்பவன் 


கேடும்  = பெற்ற துன்பங்களும் 


நினைக்கப் படும். = நினைக்கப்படும் 



இந்தக் குறளுக்கு பரிமேல் அழகரும், கி ஆ பெ விஸ்வநாதம் அவர்களும் செய்திருக்கும் உரை பிரமிக்கத் தக்கது. நம்மை ஒரு தனி உலகுக்கே கூட்டிச் செல்கிறார்கள். 


முதலாவது, "அவ்விய நெஞ்சத்தான்" என்றவர் "செவ்விய நெஞ்சத்தான்" என்று சொல்லவில்லை.  "செவ்வியான்" என்று நிறுத்தி விட்டார்.  அதை செவ்விய நெஞ்சத்தான் என்று நீயே புரிந்து கொள் என்கிறார் கி ஆ பெ. 


இரண்டாவது, அவ்வியம் என்றால் வளைந்த, கோணலான, என்று பொருள். இந்த அதிகாரத்தில் வருவதால் நாம் அதை "பொறாமை" குணம் உள்ள என்று எடுத்துக் கொள்ளலாம். 


மூன்றாவது,  இந்தக் குறளில் "உளவாயின்" என்ற சொல் எஞ்சி நிற்கிறது என்கிறார் பரிமேலழகர்.  எப்படி என்றால் பொறாமை குணம் உள்ளவனுக்கு செல்வமும், நேர்மையான மனம் உள்ளவனுக்கு கெடுதலும் "உளவாயின், உண்டானால்" அது நினைக்கப்படும்  என்று கொள்ள வேண்டும். அதில் உளவாயின் என்ற சொல் மறைந்து நிற்கிறது என்கிறார். அப்படி எல்லாம் நடக்காது, ஒரு வேளை நடந்தால், அது நினைக்கப்படும். 


நான்காவது, "நினைக்கப்படும்" என்றால் யாரால் நினைக்கப்படும்? அறிவு உள்ளவனால்தான் சிந்திக்க முடியும். எனவே, அறிவுள்ள சான்றோரால் இது சிந்திக்கப்படும் என்கிறார். 


ஐந்தாவது, என்ன சிந்திப்பார்கள்? 


பொறாமை குணம் உள்ளவனிடம் எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் அதை அவன் பெரிதாக நினைக்க மாட்டான். தன்னைவிட மற்றவர்கள் அதிகம் வைத்து இருக்கிறார்களே என்று எண்ணியே பொறாமைப்பட்டுக் கொண்டு இருப்பான். அவன் செல்வதை அவனே பெரிதாக நினைக்காத போது, நீ ஏன் அவன் செல்வம் வைத்து இருக்கிறான், மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று நினைக்கிறாய்?


அதே போல், பொறாமை இல்லாதவன், இருக்கிறதைக் கொண்டு சந்தோஷமாக இருப்பான். அவனுக்கு யார் மேலும் பொறாமை இல்லை. அவன், அவனுக்கு கிடைத்ததைக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறான். அவனே வருந்தாத போது நீ ஏன் அது கேடு என்று நினைக்கிறாய் என்று "நினைத்துப் பார்" என்கிறார். 


பொறாமை உள்ளவன் செல்வம் சேர்க்கலாம். அதை செல்வழிப்பானா? அதன் பலனை அனுபவிப்பானா? நாலு பேருக்கு கொடுத்து மகிழ்வானா? மாட்டான்.   மேலும் மேலும் வேண்டும் என்றே அலைந்து கொண்டிருப்பான்.  அந்த செல்வதால் அவனுக்கு ஒரு பலனும் இல்லை.  யோசித்துப் பார் என்கிறார். 


மாறாக, பொறாமை இல்லாதவன் தன் செல்வதை தானும் அனுபவித்து, மற்றவர்களுக்கும் கொடுத்து மகிழ்வான். யோசித்துப் பார். 


பொறாமை கொண்டவன், தன் அவசரத்தில் ஏதேதோ செய்து செல்வம் சேர்ப்பான். பல குருக்கு வழிகளில் சென்று செல்வம் சேர்ப்பான். அது நல்லதா? அது நன்மை பயக்குமா? 



பொறாமை குணம் உள்ளவனுக்கு நன்மையும், நல்லவனுக்கு தீமையும் வராதே. எப்படி வந்தது? சிந்தி. 


கெட்டவனுக்கு உள்ள ஆக்கம் ஒரு ஆக்கமா? சிந்தி. 


கெட்டவனின் ஆக்கமும், நல்லவனின் வறுமையும் ஒன்றா ? சிந்தி.


எது உயர்ந்தது, எது தாழ்ந்தது சிந்தி. 


இப்படி நிறைய சிந்திக்கலாம். 


வள்ளுவர் "நினைக்கப்படும்" என்று ஏன் சொன்னார் என்றால் 


உலகம் இப்படிதான் இருக்கிறது. நல்லவனுக்கு காலம் இல்லை. கெட்டவனுக்குத்தான்  காலம் என்று தீய காரியங்கள் செய்ய இறங்கி விடாதே. சிந்தித்துப்பார்.  அப்படி இருக்க வழி இல்லை. யோசி என்கிறார். 


துன்பம் எல்லாம் துன்பம் இல்லை. இன்பம் எல்லாம் இன்பம் இல்லை. 


பள்ளிக் கூடம் போகாமல் 'கட்' அடித்துவிட்டு ஊர் சுற்றுவதும், நாள் பூராவும் படிப்பதும்....எது இன்பம், எது துன்பம்? நினைக்கப்படும். 


இன்பமும், துன்பமும் நிரந்தரமா? மாறுமா?  நினைக்கப்படும். 


சிந்திக்காமல், தவறான முடிவை எடுத்து விடக் கூடாது என்று எச்சரிக்கிறார். 








நான்காவது, 






(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 162:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


குறள்  எண் 163: அல்லவை செய்யார்


அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_22.html


குறள்  எண் 164: அது சாலும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_26.html


குறள்  எண் 165: இன்றிக் கெடும்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_31.html


குறள்  எண் 166: காட்டி விடும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_24.html


குறள்  எண் 167 :உய்த்துவிடும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_10.html

)


Monday, September 12, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - உலகம் உண்ட ஊண் (3596)

   

நாலாயிர திவ்ய பிரபந்தம் - உலகம் உண்ட ஊண் (3596)



காலம் என்றால் என்ன?


மிகக் கடினமான கேள்வி. 


காலம் என்றால் வருடம், மாதம், வாரம், நாள், பகல், இரவு, மணி, நிமிடம், நொடி என்று சொல்லலாம். அவை காலங்கள் அல்ல. அவை கால இடைவெளிகள். இரண்டு நிகழ்வுகளுக்கு இடையே உள்ள அளவைகள் அவை. சூரியன் உதித்து, மறைந்து மீண்டும் உதிக்கும் அந்த இரண்டு உதயங்களுக்கு இடைப்பட்ட இடைவெளி ஒரு நாள். நாளின் பகுதி பகல், இரவு. பகல் இரவின் பிரிப்பு மணி, நிமிடம் என்பது எல்லாம். 


நமக்கு ஒரு நாள் என்பது இருபத்தி நாலு மணி நேரம். ஆனால், செவ்வாயிலோ, வியாழன் கிரகத்திலோ இருபத்தி நான்கு மணியைவிட அதிகம் இருக்கும். அது, அந்தந்த கிரகங்கள் சுற்றும் வேகத்தைப் பொறுத்தது. 


யோசித்துப் பாருங்கள், சூரியன் இல்லாவிட்டால் நம் நாள் கணக்கு என்ன ஆகும். நாளும் இல்லை, பகலும் இல்லை. கோடை, குளிர் போன்ற காலங்கள் இல்லை. இராகுகாலம், எமகண்டம் போன்றவை இல்லை.


காலம் சம்பந்தப்பட்ட அனைத்தும் இல்லை என்று ஆகும். ஜோதிடம் கணிக்க முடியாது. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


நாம் வாழும் இந்த பூமி வெகு வேகமாக சுற்றுகிறது. அது தன்னைத் தானே சுற்றுவது மட்டும் அல்ல, சூரியனையும் சுற்றுகிறது. பூமியும் சூரியனும் சேர்ந்து சுற்றுகின்றன. இப்படி எத்தனை சுற்றுகள் இருக்கிறதோ தெரியாது. ஆனால், நமக்கு ஏதாவது தெரிகிறதா? 


இவ்வளவு பெரிய பூமி, இவ்வளவு வேகமாக சுற்றினாலும், ஒன்றும் இடத்தை விட்டு அசைவது இல்லை. 


நம் வீடு அதே இடத்தில் தான் இருக்கிறது.நம் வீட்டுக்கு அருகில் உள்ள கோவில், தபால் நிலையம், கடைகள் எல்லாம் அந்தந்த இடத்தில் அப்படியே இருக்கின்றன. 



யோசித்துப் பாருங்கள், காலையில் எழுந்தவுடன் உங்கள் வீடு ஒரு ஐநூறு கிலோமீட்டர் வடக்கே நகர்ந்து போய் விடுகிறது, உங்கள் ஊருக்கு வெளியே இருந்த மலையைக் காணோம், புதிதாக உங்கள் வீட்டு வாசலில் ஒரு நதி ஓடுகிறது. எப்படி இருக்கும்?


சரி, அதுவும் ஒரு புறம் இருக்கட்டும். 


அது மட்டும் அல்ல, கடல் பொங்குகிறது, சூரியன் கொஞ்சம் நெருங்கி வந்ததில் பூமி பயங்கர சூடாகி எல்லாம் தீ பற்றி எரிகின்றன, கடல் நீர் உலை நீர் போல் கொதிக்கிறது...இதெல்லாம் நடந்தால் எப்படி இருக்கும். 


விண்மீன்கள் இடம் மாறிப் போகின்றன. அண்ட வெளியில் பூமிப் பந்து எங்கோ பறந்து கொண்டிருக்கிறது. 


அந்த பிரமாண்டத்தை உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா? கண் மூடி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். 


உலகமே கலங்குவதை உங்கள் கற்பனையில் நினையுங்கள். 


நம்மாழ்வார் சொல்கிறார் 


"காலம் என்ற ஒன்று மாறிப் போனது. கடல் நீர் இடம் மாறிப் போனது. ஊரெல்லாம் கடல் நீர். விண்ணில் கோள்கள் இடம் மாறிப் போயின. காற்று புயலாக அடிக்கிறது.  மலைகள் அடியோடு புரள்கின்றன. சூரிய, நட்சத்திரம் போன்றவை திசை கெட்டுத் திரிகின்றன."

"இது எப்போ ?" என்று கேட்டால்


ஊழிக் காலத்தில், இந்த உலகம் அனைத்தையும் திருமால் உண்டு தன் வயிற்றில் அடக்கிய அந்த நாளில். 



பாடல் 


நாளு மெழநில நீரு மெழவிண்ணும்

கோளு மெழேரி காலு மெழ,மலை

தாளு மெழச்சுடர் தானு மெழ,அப்பன்

ஊளி யெழவுல கமுண்ட வூணே.



சீர் பிரித்த பின் 


நாளும் எழ நில நீரும் எழ விண்ணும்

கோளும்  எழ காலும் எழ  மலை

தாளும் எழ சுடர் தானும் எழ  அப்பன்

ஊளி எழ உலகம் உண்ட ஊண் 


பொருள் 





(pl click the above link to continue reading)




நாளும் எழ  = நாள், வாரம், மாதம் போன்ற காலங்கள் கலங்கி எழ 


நில நீரும் எழ  = நிலமும், நீரும் கலங்கி எழ 


விண்ணும், கோளும்  எழ = அண்ட வெளியும், அதில் உள்ள கோள்களும் எழ 


காலும் எழ = காற்று எழ 


மலை தாளும் எழ = மலைகளின் அடிவாரங்கள் (தாள் = அடி) பெயர்ந்து எழ 


 சுடர் தானும்  எழ  = சூரியன், நட்சத்திரம் போன்றவை எழ 


அப்பன் = என் தந்தை திருமால் 


ஊளி எழ = ஊழிக் காலத்தில்  


உலகம் உண்ட ஊண்  = இந்த உலகம் அனைத்தையும் ஒரு உணவாக வாயில் போட்டு விழுங்கிய போது 



உண்மையோ, பொய்யோ, அது ஒரு புறம் இருக்கட்டும். 



எவ்வளவு பெரிய, விரிந்த, பிரமாண்டமான கற்பனை. 




அவர் காட்டும் அந்த நிகழ்வை மனதில் ஓட விட வேண்டும். 


இல்லாத ஒன்றை நினைக்க முடிகிறது அல்லவா?


நிகழாத ஒன்றை கற்பனை செய்ய முடிகிறது அல்லவா?


ஒரு பாடகர் கல்யாணி இராகத்தில் ஒரு பாடல் பாடுகிறார். எனக்கு இசை அறிவு இல்லை. எனக்கு அது கல்யாணி என்று தெரியாது. இசை தெரிந்தவருக்கு அது கல்யாணி என்று புரியும். 


எனக்குத் தெரியவில்லை என்பதற்காக, அது கல்யாணி இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும். 


காதில் ஒலி விழுகிறது. காது நன்றாகக் கேட்கிறது. இருந்தும் கல்யாணி புரியவில்லை. 


இசை அறிவு பெருகினால், அது புரியும். 


அவர் ஏதோ சொல்கிறார். எனக்குப் புரியவில்லை.  


உங்களுக்கு?


(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html



)


Sunday, September 11, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 2

 

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 2 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



உலகில் நிரந்தரமானவை, தோற்றமும், அழிவும் இல்லாதவை மூன்று என்று பார்த்தோம்.  (https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html)


அவை பதி,பசு, பாசம் என்பன. 


பதி - இறைவன். 

பசு - உயிர்கள் 

பாசம் - கயிறு 


ஆச்சரியமான விடயம் என்ன என்றால், உயிர்களை இறைவன் படைக்கவில்லை என்பதுதான். இறைவன் என்று உண்டோ, உயிர்களும் அன்றே உண்டு. 


"என்று நீ அன்று நான்" என்பார் தாயுமானவர். 


உயிர்களை இறைவன் படைக்கவில்லை என்றால், பின் யார் படைத்தார்கள் என்றால், யாரும் படைக்கவில்லை என்பதுதான் பதில். அது என்றும் உள்ளது. சீரணிக்க சற்று கடினம்தான். இப்போதைக்கு அதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

(pl click the above link to continue reading)


இந்த மூன்றில் பதியும், பசுவும் அறிவு உள்ளவை. பாசம் அறிவு இல்லாதது. 


இறைவன் - பேரறிவாளன்

உயிர்கள் - சிற்றறிவு உள்ளவை 


இதுவரை விளங்கி விட்டது அல்லவா? 


இனி அடுத்த கட்டம் நோக்கி நகர்வோம். 


இந்த உயிர்கள், நியாமாகப் பார்த்தால், இறைவனை நோக்கித்தான் நகர வேண்டும். அறிவு, அறிவோடு சேர்வதுதானே இயற்கை. 


மாறாக, இந்த உயிர்கள் இறைவனை விடுத்து பாசத்தில் கட்டுண்டு விடுகின்றன. ஆணவம் என்ற பாசத்தில் கட்டுண்டு விடுகின்றன.நான், எனது என்ற ஆணவத்தில் உயிர்கள் சிக்கி விடுகின்றன. 


சிக்கிவிட்டால் அவற்றால் அதில் இருந்து வெளிவர முடிவதில்லை. அறியாமை என்ற இருளில் மூழ்கிப் போய், திக்கு திசை தெரியாமல் மாட்டிக் கொள்கின்றன. சுற்றிலும் இருட்டு. பாதை எது என்று தெரியவில்லை. எந்தப் பக்கம் அடுத்த அடியை எடுத்து வைப்பது என்று தெரியாமல் திகைத்து உறைந்து போய் நிற்கின்றன. 


இப்படி கொஞ்ச காலம் போன பின்னால், இந்த அறியாமை இருளில் இருந்து வெளிவர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. 


இந்த ஆசைதான் மூல கன்மம் (கர்மம்) என்கிறார்கள். 


கர்மா கொள்கையை படிப்பவர்கள், ஒவ்வொரு காரியமும் ஏதோ ஒரு காரணத்தால் தோன்றுகிறது என்றால் முதன் முதலில் தோன்றிய கர்மம் எதனால் தோன்றியது என்று கேட்பார்கள். அதற்கு காரணம் என்ன? என்ற கேள்விக்கு, மூல கன்மம் என்பது உயிர்களின் ஆசை. அறியாமையில் இருந்து வெளிப்பட்டு அறிவை அடைய வேண்டும் என்ற ஆசை. அதில் இருந்து வந்ததுதான் எல்லாம். அது ஏன் வந்தது என்று பார்த்தோம். 


சரி, உயிர்களுக்கு ஆசை வந்துவிட்டது. ஆசை மட்டும் போதுமா? எப்படி அதை அடைவது?


அவை தானே வெளிவர முடியாது. 


உயிர்களின் துன்பத்தைக் கண்டு இறைவன் அவற்றின் மேல் இரக்கம் கொண்டு உதவி செய்ய நினைக்கறான். 


அவன் அப்படி செய்ய நினைத்த உதவியின் வெளிப்பாடுதான் இந்த 36 தத்துவங்களும். 


நான் முன்பே சொன்னது போல, இது எல்லாம் நான் அறிந்து, புரிந்து, அனுபவத்தில் தெளிந்து சொல்லவில்லை.இது என்ன என்ற ஆர்வத்தில், நான் வாசித்ததை, ,கேட்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான். இவை நான் கண்டு பிடித்ததோ அல்லது நான் புரிந்து கொண்டதோ அல்ல. 



உங்களுக்கு பல சந்தேகங்கள் வரலாம். உங்கள் தேடலை தொடங்குங்கள். அதுதான் உண்மையான ஞானத்தின் அடிப்படை. 


[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


]


Saturday, September 10, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - உய்த்துவிடும்

 

  திருக்குறள் - அழுக்காறாமை -   உய்த்துவிடும்  


என்ன முயற்சி செய்தாலும், பொறாமை வரத்தானே செய்கிறது. பொறாமை நம்மை கேட்டுக் கொண்டா வருகிறது? அதுபாட்டுக்கு வந்து உட்கார்ந்து கொள்கிறது. என்ன செய்வது? 


பொறாமை வந்து விட்டால் என்ன ஆகும்? அதனால் என்ன தீமை? பொறாமை பட்டு மற்றவர்களைப் போல நானும் முன்னேறுவேன், இல்லையெனில் பொறாமை பட்டுக் கொண்டே இருப்பேன். இதனால் யாருக்கு என்ன நட்டம்? 


வள்ளுவர் சொல்கிறார் 


"நீ பொறாமை கொண்டால் யாருக்கும் ஒரு தீமை விளையுமா இல்லையா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். உனக்கே பெரிய தீமை வருமே. அது பரவாயில்லையா? 


என்ன தீமை தெரியுமா?   


இந்தப் பிறவியில் உன்னிடம் உள்ள செல்வம் அனைத்தையும் அழித்து, பின் மறு பிறவியில் உன்னை நரகத்தில் கொண்டு போய் தள்ளிவிடும்...இம்மைக்கும் மறுமைக்கும் துன்பம் தரும் ஒன்று உனக்குத் தேவையா?" என்று வள்ளுவர் கேட்கிறார். 


பாடல் 


அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்துவிடும்


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_10.html


(Pl click the above link to continue reading) 


அழுக்காறு = பொறாமை 


எனஒரு = என்ற ஒரு 


பாவி = பாவி 


திருச்செற்றுத் = செல்வதை (திரு) அழித்து (செற்று )


தீயுழி = தீயில் 


உய்த்துவிடும் = தள்ளிவிடும் 


தீயில் தள்ளுவது என்றால் இந்தப் பிறவியில் ஏதோ தீயில் தள்ளுவது அல்ல. இறந்த பின், நரகத்தில் உள்ள தீயில் தள்ளிவிடும். 


அது எப்படி செல்வதை அழிக்கும், நரகத்தில் தள்ளும்?


என்னிடம் கொஞ்சம் செல்வம் இருக்கிறது. அதை நான் இன்பமாக அனுபவிக்க முடியும். ஆனால், அடுத்தவனிடம் என்னைவிட அதிகம் செல்வம் இருக்கிறதே என்ற பொறாமை வந்துவிட்டால் என்ன நிகழும்?


அவனை விட அதிகம் சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசை வரும். இருக்கிற பணத்தை செலவழிக்க மனம் வராது. நல்ல வீடு, கார், உடை, குடும்பத்தோடு பயணம், நல்ல உணவு என்று ஒன்றிலும் செலவு செய்ய மனம் வராது. பணம் இருந்தும், பணம் இல்லாத ஏழையைப் போல தரித்திரன் போல இருப்பான். 


இருக்கு,, ஆனால் இல்லை. 


இன்னும் சில பேர் என்ன செய்வார்கள் என்றால், மற்றவனுக்கு நான் ஒன்றும் குறைச்சல் இல்லை என்று காட்ட கடன் வாங்கி செலவழிக்க நினைப்பார்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்கி, பின் வட்டி கட்டியே இருக்கிற செல்வம் அழியும். 


வேறு சிலரோ, இப்படி வேலைக்கு போய் சம்பாதித்தால் காரியம் ஆகாது என்று குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பார்கள். இலஞ்சம் போன்றவற்றில் ஈடுபட்டு, மானம் போய், இருக்கிற வேலையும் போய், செல்வம் எல்லாம் கரைந்து அவதிப் படுவார்கள். 


வேறு சிலரோ, தொழில் தொடங்கினால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று தெரியாத தொழில் இறங்கி நட்டப்பட்டு முதல் இழப்பார்ர்கள். 


இன்னும் கொஞ்சம் பேர், இந்த மாதிரி வங்கிகளில் போட்டு வைத்தால் நிறைய வட்டி கிடைக்காது என்று அதிக வட்டி தரும் நிருவனங்களி ல் பணத்தைப் போட்டு முதல் இழப்பார்கள். 


காரணம் என்ன, மற்றவன் தன்னைவிட அதிகம் சேர்த்து விட்டானே என்ற பொறாமையால் வந்த பதற்றம். 


இருக்கிற பணமும் போகும். "திரு செற்று" 


இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், தவறான வழியில் சென்று பணம் சம்பாதிக்க நினைப்பார்கள். சட்டத்துக்கு, நீதிக்கு புறம்பான செயல்களை செய்து பணம் சம்பாதித்து விடலாம். அந்தப் பணத்தைக் கொண்டு தண்டனையில் இருந்தும் தப்பி விடலாம். 


நரகம் என்று  ஒன்று இருக்கிறது. இங்கே தப்பலாம். அங்கே முடியாது என்கிறார் வள்ளுவர். 


பொறாமையால் எவ்வளவு துன்பம். 


தேவையா? 


பொறாமை என்பது ஒரு குணம். ஆனால் வள்ளுவர் "அழுக்காறு எனஒரு பாவி" என்கிறார். பாவி என்றால் ஒரு ஆள். குணம் எப்படி ஆள் ஆக முடியும்?


ஒரு திருடன், கொள்ளைக்காரன், அயோக்கியன் நமக்கு என்னவெல்லாம் தீமை செய்யக் கூடுமோ, அதை எல்லாம் இந்த பொறாமை நமக்குச் செய்யும் என்பதால் பொறாமையை "பாவி" என்று உருவகம் செய்தார். 


ஒரு மோசமான கொள்ளைக்காரன் என்ன செய்வான்? 


நம்மை அடித்து, துன்புறுத்தி, நம் செல்வத்தை எல்லாம் பறித்துக் கொண்டு நம்மையும், நம் குடும்பத்தையும் நடுத் தெருவில் நிறுத்தி விடுவான் அல்லவா? அதையேதான் இந்த பொறாமையும் செய்யும் என்கிறார். 



(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 162:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


குறள்  எண் 163: அல்லவை செய்யார்


அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_22.html


குறள்  எண் 164: அது சாலும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_26.html


குறள்  எண் 165: இன்றிக் கெடும்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_31.html


குறள்  எண் 166: காட்டி விடும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_24.html





)