Thursday, August 30, 2018

வில்லி பாரதம் - பழி தீர் வென்றி

வில்லி பாரதம் - பழி தீர் வென்றி


எத்தனையோ பாவங்கள் இருக்கின்றன. ஆவின் முலை அறுத்தோர், குருவுக்கு துரோகம் செய்தோர், கற்புடைய பெண்களின் கற்பை சூறையாடியோர், அரசனுக்கும் நாட்டுக்கும் துரோகம் செய்தோர் என்று ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. அதில் உள்ள எந்த பாவத்தை செய்தாலும் அதற்கு ஒரு வடிகால் உண்டு, பாவ மன்னிப்பு உண்டு. ஆனால், பாவ மன்னிப்பே இல்லாத ஒரு பாவம் உண்டு என்றால், அது செய் நன்றி கொன்ற பாவம் தான்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய் நன்றி கொன்ற மகற்கு 

என்பது வள்ளுவம்.

அவ்வளவு பெரிய பாவம் அது.

கௌரவர்களும் பாண்டவர்களும் யுத்தம் செய்ய தயாராகி விட்டார்கள். நாட்டை போர் மேகம் சூழ்ந்து கொண்டிருக்கும் நேரம். கர்ணனை பாண்டவர் பக்கம் சேரும்படி குந்தி வேண்டுகிறாள். தாய் என்று தெரிந்தும், கௌரவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தும், செய்நன்றி காட்ட கௌரவர்கள் பக்கம் நிற்பேன் என்கிறான் கர்ணன்.

பாவம்

ஆரென்றறியத் தகாத என்னை அரசுமாக்கி முடிசூட்டி
பேரும் திருவும் தனது பெருஞ் செல்வம் யாவும் தெரிந்தளித்தான்
பாரின்றறிய நூற்றுவர்க்கும் பழி தீர் வென்றிப் பாண்டவர்க்கும்
போரென்றறிந்தும் செய்ந் நன்றி போற்றாதவரில் போவேனோ


பொருள்

ஆரென்றறியத் தகாத என்னை  = நான் யார் என்று அறிய முடியாத என்னை

அரசுமாக்கி = அரசனாக்கி

முடிசூட்டி = முடி சூட்டி

பேரும் = உயர்ந்த பேரும்

திருவும் = செல்வங்களும்

தனது பெருஞ் செல்வம் யாவும் = தனது பெரிய செல்வங்கள் யாவும்

தெரிந்தளித்தான் = பார்த்து பார்த்து தெரிந்து எடுத்து கொடுத்தான்

பாரின்றறிய = பார் இன்று அறிய

நூற்றுவர்க்கும் = நூறு பேரான கௌரவர்களுக்கும்

பழி தீர் வென்றிப் = பழி இல்லாத வெற்றி கொண்ட

பாண்டவர்க்கும் = பாண்டவர்களுக்கும்

போரென்றறிந்தும்  = போர் என்று அறிந்தவுடன்

செய்ந் நன்றி = செய் நன்றி

போற்றாதவரில் = போற்றாதாரில்  ?

 போவேனோ = போவேனா ? (போக மாட்டேன்)

துரியோதனன், கர்ணனுக்கு சும்மா அள்ளிக் கொடுத்து விடவில்லை. ஒவ்வொன்றையும் பார்த்து எடுத்து எது கரன்னனுக்கு தேவை என்று தெரிந்து எடுத்துக் கொண்டுத்தான்.

ஒன்றும் இல்லாதவனை அரசனாக்கி, பேரும் புகழும் தந்து அவனை எங்கோ கொண்டு போய் நிறுத்தினான்.


அந்த செய் நன்றி கடனுக்காக, கர்ணன் போராடி உயிர் விட்டான்.

அவன் நினைத்திருந்தால் பாண்டவர் பக்கம் போய் , அரசை ஆண்டிருக்கலாம்.

போகவில்லை. செய் நன்றிக்காக உயிரையும் கொடுத்தான்.




http://interestingtamilpoems.blogspot.com/2018/08/blog-post_30.html

1 comment: