Wednesday, June 26, 2019

கம்ப இராமாயணம் - அன்பினில் வலியன்

கம்ப இராமாயணம் - அன்பினில் வலியன்


சூர்பனகையை தனியாக காட்டில் விட்டு விட்டு வந்து விட்டோம். அவள் என்ன ஆனாள் என்று பார்ப்போம்.

இராமன், சீதையைக் கூட்டிக் கொண்டு குடிசைக்குள் போய் விட்டான்.

சூர்ப்பனகை தனித்து நிற்கிறாள்.

தளர்ந்து போனாள். இராமன் தனக்கு இல்லை என்று உணர்ந்தாள். அதனால், அவளுக்கு, அவள் மேலேயே ஒரு தன்னிரக்கம் பிறக்கிறது.

பொதுவாகவே, நாம் எப்போதும் நம் உடலைத்தான், நாம் என்று கூறுவோம்.

நமக்கு ஒரு தலைவலி வந்தால், என்னுடைய தலைக்கு வலிக்கிறது என்று சொல்ல மாட்டோம். என் தலை வலிக்கிறது என்போம்.

ஐம்புல இன்பங்களும் இந்த உடலுக்குத்தான்.

எப்போதாவது நாம், நம் உயிரை, ஆன்மாவை நாம் என்று சொன்னது உண்டா ? நான் என் உடலை தூக்கிக் கொண்டு நடந்து வந்தேன் என்று யாராவது சொல்லிக் கேட்டு இருக்கிறோமா?  உடலை யார் தூக்கிக் கொண்டு வந்தார்கள் என்ற கேள்வி வரும் அல்லவா?

காதல் தோல்வி, சூர்பனகைக்கு.

முதன் முறையாக தான் வேறு , தன் உடல் வேறு என்ற ஞானம் வருகிறது அவளுக்கு. தான் என்பது இந்த உயிர் என்ற ஆத்ம ஞானம் பிறக்கிறது. இந்த உடலை சுமப்பது கடினம் என்று உணர்கிறாள்.

"இராமன் போன பின், இராமன் போய் விட்டான் என்ற உணர்வு கூட அவளுக்கு இல்லை. அவன் தன் முன் நிற்பதாகவே அவள் நினைக்கிறாள். தன்னுடைய உயிரானது தனது உடலை சுமந்து கொண்டிருக்கும் பொறுமையை கை விட்டு.  மூச்சு விடக் கூட மறந்து ஒடுங்கி நின்றாள். தகுதியில்லாதவன். மனதளவில் கூட என்னை தழுவாதவன்.  கோபம் கொண்டவன். ஆனால், சீதையிடம் , நெருக்கமான அன்பு கொண்டவன் "  என்று சூர்ப்பனகை நினைக்கிறாள்.

பாடல்

புக்க பின், போனது என்னும் உணர்வினள்;
     பொறையுள் நீங்கி
உக்கது ஆம் உயிரள்; ஒன்றும்
     உயிர்த்திலள்; ஒடுங்கி நின்றாள்;
தக்கிலன்; மனத்துள் யாதும் தழுவிலன்;
     சலமும் கொண்டான்;
மைக்கருங் குழலினாள்மாட்டு அன்பினில்
     வலியன்' என்பாள்.


பொருள்

புக்க பின் = சீதையுடன் இராமன் குடிசைக்குள் புகுந்த பின்

போனது என்னும் = போய் விட்டான் என்ற

உணர்வினள் = உணர்வு உடையவளாய்

பொறையுள் நீங்கி = பொறுமை நீங்கி 


உக்கது ஆம் உயிரள் = நைந்து இருக்கும் உயிரைக் கொண்டவள். அவளுடைய உயிர், அவளின் உடலை சுமந்து தளர்ந்து விட்டது, நைந்து விட்டது

ஒன்றும் உயிர்த்திலள்; = உயிர் மூச்சு இல்லை

ஒடுங்கி நின்றாள் = அனைத்தும் ஒடுங்கி நின்றாள்

தக்கிலன் =  வசப்படாதவன்

மனத்துள் யாதும் தழுவிலன் = மனதில் கூட என்னை தழுவவில்லை

சலமும் கொண்டான் = கோபம் கொண்டவன்

மைக் = கண் மை போன்ற

கருங்  = கரிய

குழலினாள் = கூந்தலைக் கொண்ட

மாட்டு = அவளின் (சீதையின்)

அன்பினில் = அன்பினில்

வலியன்' என்பாள். = வலியவன் என்றாள்

அராக்கிதான் என்றாலும், அவளுள்ளும் ஒரு அன்புக்கு ஏங்கும் பெண் இருக்கத்தான் செய்கிறாள்.



2 comments:

  1. நன்றாக இருந்தது

    ReplyDelete
  2. "பொறுமை நீங்கி" என்ற சொற்களுக்கு என்ன பொருள் இருக்கலாம் என்று எண்ணிப் பார்த்தேன். "உக்கது ஆம் உயிரள்" என்பதுடன் சேர்த்துப் படித்தால், "வாழக் கூடப் பொறுமை நீங்கிய உயிரைக் கொண்டவள்" என்று பொருள் ஆகுமோ?

    நன்றி.

    ReplyDelete