Friday, June 28, 2019

கம்ப இராமாயணம் - கார் விடம் ஏறுவது என்னவே

கம்ப இராமாயணம் - கார் விடம் ஏறுவது என்னவே 


இராமாயணம் சொல்லும் அறம் என்ன என்று பல விவாதங்கள் நடந்தன, நடக்கின்ற, இனியும் நடக்கும்.

சூர்ப்பனகை படலத்தில் ஒரு முக்கியமான அறத்தை கம்பன் காட்டுகிறான்.

இராவணன், மற்றவன் மனைவியை விரும்பினான்.

சூர்ப்பனகை, மற்றவள் கணவனை விரும்பினாள்.

பிறன் மனை நோக்குவதுதான் குற்றம் என்று சொல்லிவந்தது நம் தமிழ் இலக்கியம்.

கம்பன் ஒரு படி மேலே போகிறான்,  மாற்றான் மனைவியை பார்ப்பது மட்டும் அல்ல குற்றம், மாற்றாள் கணவனை நயப்பதும் குற்றம் என்று காட்டுகிறான்.

சூர்ப்பனகை மட்டும் இராமன் மேல் ஆசை கொள்ளாவிட்டால், இராவணன் அழிந்து இருக்க மாட்டான்.

சூர்ப்பனகையின் பொருந்தா காமம், ஒருதலைக் காமம், அறம் பிறழ்ந்த காமம் அரக்கர் குலத்தை அழித்தது.

ஒருவன் குற்றம் செய்தால் அது அவனை மட்டும் அல்ல, அவனைச் சேர்ந்த எல்லோரையும் பாதிக்கும் என்று தெரிய வேண்டும்.

"சினம்  எனும் சேர்ந்தாரைக் கொல்லி, இனம் எனும் ஏமப் புணையை சுடும்"

என்பார் வள்ளுவர்.

சினம் மட்டும் அல்ல, காமமும் அப்படித்தான் என்கிறார் கம்பர்.

இராமன், சூர்ப்பனகையை விட்டு விட்டு சீதையோடு குடிலுக்குள் போய் விட்டான். தனித்து விடப்பட்ட சூர்ப்பனகை காமத்தால் தவிக்கிறாள்.

இராமன் இருந்த இடம் விட்டு விலகி, அருகில் உள்ள ஒரு சோலையை அடைகிறாள்.

"நச்சுப் பாம்பு தீண்டினால் எப்படி கொஞ்சம் கொஞ்சமாய் விஷம் தலைக்கு ஏறுமோ அது  போல இராமனின் மேல் கொண்ட காமம் சூர்பனகைக்கு ஏறியது" என்கிறான் கம்பன்.

நஞ்சு முடிவில் ஆளை கொல்லாமல் விடாது அல்லவா?

பாடல்


அழிந்த சிந்தையள் ஆய் அயர்வாள் வயின்
மொழிந்த காமக் கடுங்கனல் மூண்டதால்
வழிந்த நாகத்தின் வன் தொளை வாள் எயிற்று
இழிந்த கார் விடம் ஏறுவது என்னவே.


பொருள் 


அழிந்த சிந்தையள் ஆய் = மனம் அழிந்து, வெறுத்து போனவளாய்

 அயர்வாள்  = சோர்வுற்று

வயின் = அசைச் சொல்

மொழிந்த = சொல்லப்பட்ட

காமக் கடுங்கனல் = காமம் என்ற கொதிக்கும், எரிக்கும் தீ

மூண்டதால் = மூண்டதால்

வழிந்த = பொங்கி வழியும்

நாகத்தின் = நாகப் பாம்பின்

வன் = வன்மையான, கொடுமையான

தொளை = துளையிடும்

வாள் = கத்தி போல் கூர்மையான

எயிற்று = பல்

இழிந்த = வெளிப்பட்ட

கார்  = கரிய

விடம் = விஷம்

ஏறுவது என்னவே. = ஏறியது

கொஞ்சம் இலக்கணம் படிக்கலாமா?

யாப்பிலக்கணம் என்பது இலக்கணத்தில் ஒரு பகுதி.

யாக்குதல் என்றால் கட்டுதல் என்று பொருள்.  இந்த உடம்புக்கு யாக்கை என்று ஒரு  பெயர் உண்டு. கை , கால், தலை, கண், மூக்கு என்று இவற்றை எல்லாம்  சேர்த்து கட்டிவைத்த ஒன்றுக்குப் பெயர் யாக்கை.

"ஐவருக்கு இடம் பெற, கால் இரண்டு ஒட்டி அதில் இரண்டு கை வைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்து அருளே " என்பார் அருணகிரிநாதர்.

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
 வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
 ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
 கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே.


சீர், தளை , அடி , தொடை என்று ஒரு செய்யுளை கட்டும் இலக்கணத்துக்கு யாப்பிலக்கணம் என்று பெயர். 

தமிழில் ஒரு பாடல் எப்படி எழுத வேண்டும் என்றுர் சொல்லுவது யாப்பிலக்கணம். 

சரியா?

கவிஞன் சொல்ல வந்த செய்தி ஒரு பக்கம். 

இலக்கண கட்டுப்பாடு மறு பக்கம். 

இரண்டும் பொருந்த வேண்டும். 

சில சமயம் கவிஞன் சொல்ல வந்த செய்தியை சொல்லி முடித்து விடுவான். ஆனால், இலக்கணத்துக்கு இன்னும் ஒரு சொல் வேண்டி இருக்கும். 

உதாரணமாக , குறள் என்றால் ஏழு சீர் (சொல்) வேண்டி இருக்கும். ஆறே வார்த்தையில்  சொல்லி விட்டால், என்ன செய்வது ? ஒரு சொல் பாக்கி இருக்கிறது. அந்த இடத்தை அர்த்தம் இல்லாத ஒரு சொல்லை இட்டு நிரப்புவார்கள். அதற்கு அசைச் சொல் என்று பெயர். 

மன் , மற்று , கொல் , நம்ம , வயின்  என்பவை அசைச் சொற்கள். 

மீண்டும் கவிதைக்கு வருவோம். 

விஷம் எப்படி விறு விறு என்று உடம்பில் பரவுமோ, அது போல சூர்ப்பனகை உடலில்   காமம் பரவியது. 

அப்புறம்?


1 comment:

  1. போன பாடலில் ஏதோ சூர்ப்பனகைக்கு அறிவு வந்து விட்டது போல் பார்த்தோமே! இன்னும் காமத்தால் தவிக்கிறாளா?

    ReplyDelete