Sunday, September 18, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்

   

 திருக்குறள் - அழுக்காறாமை -   பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் 


இந்த அதிகாரத்தின் இறுதிக் குறளுக்கு வந்து விட்டோம். 


எல்லோருக்கும் வேண்டியது என்ன -  வாழ்க்கையில் முன்னேற்றம். நாளும் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும். நேற்றை விட இன்று சிறப்பாக இருக்க வேண்டும். அதுதானே சுகம்? 


ஒருவனிடம் ஆயிரம் ரூபாய் இருக்கிறது. முயன்று, கொஞ்சம் கொஞ்சமாக பொருள் சேர்த்து அதை பத்தாயிரம் ரூபாய் வரை கொண்டு வந்து விட்டான். அது வளரும் போது ஒவ்வொரு நாளும் அவனுக்கு மகிழ்ச்சிதான். 



மற்றொருவன் இருபதாயிரம் வைத்து இருந்தான். அது நாளும் தேய்ந்து பத்தாயிரத்தில் வந்து நின்றது. 



இருவரும் இறுதியில் அடைந்த இடம் பத்தாயிரம். முதலாமவன் உயர்ந்து அங்கு வந்தான். இரண்டாமவன் தாழ்ந்து அங்கு வந்தான். 



எவ்வளவு இருக்கிறது என்பதல்ல கேள்வி. எப்படி நாம் அங்கு வந்து சேர்ந்தோம் என்பதில் இருக்கறது பெருக்கமும், சுருக்கமும். 



வள்ளுவர் சொல்கிறார் 


பொறாமை கொண்டவன் ஒரு காலும் பெருக்கம் அடைய மாட்டான். என்ன சம்பாதித்தாலும் அவனுக்கு ஒரு திருப்தி கிடையாது. தான் வளர்ந்து விட்டோம் என்று அவன் ஒரு காலும் நினைக்க மாட்டான். எப்போதும் யாருடனாவது தன்னை ஒப்பிட்டு, ஐயோ நான் அந்த அளவுக்கு இல்லையே என்று வருந்திக் கொண்டே இருப்பான். 

மாறாக, பொறாமை இல்லாதவன், என்ன கிடைத்தாலும், அவனுக்கு மகிழ்ச்சிதான்.யாருக்கு எவ்வளவு கிடைத்தது என்று அவன் சிந்திக்க மாட்டான். எனக்கு இவ்வளவு கிடைததது. சந்தோஷம் என்று மகிழ்ச்சியாக இருப்பான். 


எனக்கு தெரிந்து சிலர் இருக்கிறார்கள்.  தினமும் பங்கு சந்தை எண்களை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். கோடிக் கணக்கில் அவர்களிடம் பங்குகள் இருக்கும். அதில் ஒரு இலட்சம் குறைந்து விட்டால், ஏதோ வாழ்வே பறி போனது போல வருந்துவார்கள்.  ஏன் என்றால், அவர்களுக்கு இலக்கு வேறு. எட்டு கோடி இருந்தால், அதை எப்படியாவது பத்து கோடி ஆக்க வேண்டும். அவனை விட பெரிய ஆளாக வேண்டும். இவனை விட பெரிய ஆளாக வேண்டும். என்று சதா சர்வ காலமும் அதே நினைப்பு. 


சற்று கடினமான குறள். 



பாடல் 

அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்


பொருள் 




(Pl click the above link to continue reading) 






அழுக்கற்று  = பொறாமை கொண்டு 


அகன்றாரும் = அகன்ற செல்வதை, ஆக்கத்தை அடைந்தவர் 


இல்லை = யாரும் இல்லை 


அஃது இல்லார் = அந்த பொறாமை குணம் இல்லாதவர் 


பெருக்கத்தில்  = செல்வப் பெருக்கில் 


தீர்ந்தாரும் இல் = அடையாமல் இல்லாமலும் இல்லை 





"பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்லை " - பொறாமை இல்லாதவர்களின் பெருக்கம் முடிவே இல்லாமல் வளர்ந்து கொண்டே இருக்கும் என்கிறார். 


எனவே, அதன் எதிர்பதம் 


பொறாமை கொண்டவர்களின் ஆக்கம் முடிவில்லாமல் தேய்ந்து கொண்டே போகும் என்பது. 



இதுக்கு மேல பொறாமை பற்றி சொல்ல என்ன இருக்கிறது. 



பொறாமை எதிரிகள் மேல் மட்டும் அல்ல. நெருங்கிய நண்பர்கள் மேல், உறவுகள் மேலும் கூட வரலாம்.  அதெல்லாம் இல்லை என்று சொல்லுவதை விட, அப்படி இருக்குமா என்று ஆராய்ந்து பார்த்து சரி செய்து கொள்வது நலம். 




(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 163:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


குறள்  எண் 164: அல்லவை செய்யார்


அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_22.html


குறள்  எண் 165: அது சாலும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_26.html


குறள்  எண் 166: இன்றிக் கெடும்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_31.html


குறள்  எண் 167: காட்டி விடும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_24.html


குறள்  எண் 168 :உய்த்துவிடும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_10.html


குறள்  எண் 169  : நினைக்கப்படும் 


No comments:

Post a Comment