Thursday, October 13, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - 3602 - அன்று செய்தது

       

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   3602 - அன்று செய்தது 



திருமாலின் மிகப் பெரிய செயல்களை சொல்லிக் கொண்டே வருகிறார் நம்மாழ்வார். 


பாற்கடல் கடைந்தது, இராவணனை அழித்தது,  ஈரடியால் உலகம் அளந்தது, குருஷேத்திர யுத்தம் நடத்தியது என்று சொல்லிக் கொண்டு வந்த அவர், இதெல்லாம் என்ன பெரிய விடயம், அரக்கர்களை அழிப்பது, மனிதர்களோடு (கௌரவர்கள் ) சண்டை போட்டு வெல்வது இதெல்லாம் ஒரு பெரிய காரியமா? 

மிகப் பெரிய காரியம் என்று எதைச் சொல்லலாம் என்று யோசிக்கிறார். 


இந்த உலகை எல்லாம் படைப்பது என்பது சாதாரண காரியமா? இந்த உலகம் எவ்வளவு பெரியது என்று நம்மால் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு பெரிய உலகை படைப்பது என்றால்?


" அன்று மண், நீர், தீ, காற்று, விண்வெளி , மலைகள் சூரியன், சந்திரன் போன்ற நட்சத்திரங்களும், கோள்களும், மழை, போன்றவற்றின் தேவர்களும், மீதி உள்ள உலகம் அனைத்தும் செய்த போது"



பாடல் 



அன்று மண்நீரெரி கால்விண் மலைமுதல்,

அன்று சுடரிரண் டும்பிற வும்,பின்னும்

அன்று மழையுயிர் தேவும்மற் றும்,அப்பன்

அன்று முதலுல கம்செய் ததுமே.



சீர் பிரித்த பின் 


அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்,

அன்று சுடர் இரண்டும் பிறவும், பின்னும்

அன்று மழை உயிர்  தேவும் மற்றும், அப்பன்

அன்று முதல் உலகம் செய்ததுமே.




பொருள் 



(pl click the above link to continue reading)




அன்று = முன்பொருநாள் 

மண் = மண் 

நீர்  = நீர் 


எரி = தீ 

கால்  = காற்று 


விண் = விண்வெளி 


மலை = மலைகள் 

முதல் = முதலியவற்றைப் படைத்ததுவும் 


அன்று  = முன்பொருநாள் 


சுடர் = வெளிச்சம் தரும் 


இரண்டும் = சூரியன், சந்திரன் என்ற இரண்டையும் 


பிறவும் = மற்ற நட்சத்திரங்களையும், கோள்களையும் படைத்ததுவும் 


பின்னும் = மேலும் 


அன்று = முன்பொருநாள் 


மழை = மழையையும் 


உயிர்  = அனைத்து உயிர்களையும் 


தேவும் = அவற்றிற்கு உரிய தேவர்களையும்  


மற்றும் = மேலும் 


அப்பன் = திருமால் 


அன்று = முன்பொருநாள் 


முதல் உலகம் செய்ததுமே. = முதன் முதலாக உலகம் செய்ததுதும் 



இந்த உலகம் எப்படி தோன்றியது, என்று தோன்றியது என்று அறிவியல் விளக்கம் சொல்லிக் கொண்டு போகிறது. ஒவ்வொரு நாளும் அறிவியலின் பரப்பு விரிந்து கொண்டே போகிறது. 


அது ஒரு புறம் இருக்க, உலகத்தை இறைவன் தோற்றிவித்தான் என்று பக்தி இலக்கியங்கள் பேசிக் கொண்டிருக்கின்றன. 


இவற்றை எப்படி பார்ப்பது? அறிவியலின் கூற்றுப் படி பக்தி இலக்கியங்கள் சொல்வது எல்லாம் தவறு. 


பக்திமான்களை கேட்டால் "அதெல்லாம் நம்பிக்கையின் பாற்பட்டது. கேள்வி கேட்கக் கூடாது"  என்று ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்கள். 


தெரியாதவற்றை நம்பலாம். தெரிந்தவற்றை எப்படி நம்புவது? இரண்டும் இரண்டும் ஐந்து என்று நம்ப முடியுமா?


இந்தச் சிக்கல் தொடர்கிறது. 


எதற்காக இவற்றைப் படிக்க வேண்டும்?


எனக்குத் தெரிந்து சில காரணங்கள்:


முதலாவது, மனம் விரியும். கற்பனை விரியும். அப்படி ஒரு பிரமாண்டமான ஒரு விடயத்தை மனம் பற்றும். ஒவ்வொரு நாளும் அது பற்றி சிந்திக்க சிந்திக்க மனம் அதை உள்வாங்கும். அப்படி ஒரு பிரமாண்டத்தை சிந்திக்க சிந்திக்க நாம் ஒன்றும் பெரிய ஆள் இல்லை, நம் துன்பங்கள் ஒன்றும் பெரிய துன்பம் இல்லை, நம் சிக்கல்கள், பிரச்சனைகள் பெரிய விடயம் அல்ல, அதற்காக சண்டை போட்டுக் கொள்வது, போட்டி போடுவது, பொறாமை கொள்வது என்பதெல்லாம் நகைப்பு இடமானது என்ற விரிந்த நோக்கம் வரும். 


இரண்டாவது,  இந்த உலகை ஒருவன் படைத்தான் என்று நம்பும் போது, அந்த நம்பிக்கை ஒரு பலம் தரும். அப்படி ஒருவன் இருக்கிறான், அவன் நமக்கு துணை செய்வான் என்ற நம்பிக்கை ஒரு தைரியம் தரும், அதனால் பதற்றம் குறையும், மன அழுத்தம் குறையும், பயம் விலகும். "எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்" என்று அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு வேலையை பார்க்க போது, மனம் லேசாகிவிடும். அது உண்மையோ பொய்யோ, அந்த நம்பிக்கை ஒரு நன்மை தருகிறது.  அதை ஏன் மறுக்க வேண்டும்


மூன்றாவது, அழகான தமிழ். கவிதை. சொற் சுருக்கம். சொல்லும் விதம். அதனையும் அள்ளிக் கொண்டு போய் விடுகிறது நம் மனதை. 


இறுதியாக, எவ்வளவோ இலயித்து, அனுபவித்து எழுதி இருக்கிறார்கள். அது பொய்யாக இருக்குமா? அந்தப் பாடல்களில் ஏதேனும் உண்மை இருக்குமா? இருக்கும் என்றால் அது என்ன என்ற தேடல் தொடர்கிறது. அதுவும் ஒரு சுவாரசியம்தான். 


படிப்போம். 






(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்


பாசுரம் 3599  - மெலிந்த பொழுது 


No comments:

Post a Comment