Thursday, March 30, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - கருணையின் நிலையம் அன்னான்

 

 கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - கருணையின் நிலையம் அன்னான்



(அங்கதன் தூதின் முந்தைய பதிவுகளின் வலை தளளங்களின் முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)


இன்று இராம நவமி. 


இராமனின் உயர் குணங்களை எடுத்துச் சொல்லும் இராமாயணத்தில் அங்கதன் தூது பற்றி சிந்திக்கக் தொடங்க நல்ல நாள். 


தாயின் இயல்பு பிள்ளை மேல் அன்பு செலுத்துவது. 


அப்படி என்றால் பிள்ளை மேல் கோபமே வராதா, திட்டவே மாட்டாளா என்றால் வரும். வந்தவுடன் போய் விடும். மறுபடியும் அந்த இடத்தில் அன்பு வந்து அமர்ந்து கொள்ளும். அடித்தாலும், திட்டினாலும் ஓடிச் சென்று பிள்ளையை கட்டிக் கொள்வாள். அது அவள் இயல்பு. 



அது போல இறைவனின் இயல்பு கருணை. சில சமயம் கோபம் வரலாம். நமக்கு துன்பம் தருவது போல இருக்கும். வலிக்கும். அது கொஞ்ச நேரம்தான். பின் ஓடிவந்து கட்டிக் கொள்வான். 


தாயிற் சிறந்த தயவான தத்துவன் அவன். 


தன் மனைவியை கவர்ந்து சென்றவன் மேல் எவ்வளவு கோபம் வர வேண்டும். 



இராமன் கோபம் கொள்ளவில்லை. மாறாக, 


"இராவணனுக்கு ஒரு தூது அனுப்புவோம். சீதையை விடுதலை செய்யச்சொல்லி அறிவுறுத்துவோம். அவன் கேட்கவில்லை என்றால் அவனை தண்டிப்போம். அதுதான் நீதியும் , அறமும் என்று என் உள்ளம் சொல்கிறது" என்றான். 




தூதுவன் ஒருவன் தன்னை

    இவ்வழி விரைவில் தூண்டி,

“மாதினை விடுதியோ? “ என்று

    உணர்த்தவே, மறுக்கும் ஆகின்,

காதுதல் கடன் என்று உள்ளம்

    கருதியது, அறனும் அஃதே;

நீதியும் அஃதே ‘என்றான்

    கருணையின் நிலையம் அன்னான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_30.html


(pl click the above link to continue reading)


தூதுவன் ஒருவன் தன்னை = ஒரு தூதுவனை 


இவ்வழி  = இப்போது 


விரைவில் தூண்டி = விரைவில் முடிவு செய்து 


“மாதினை விடுதியோ? “ என்று = சீதையை விடுகிறாயா இல்லையா என்று 


உணர்த்தவே = கேட்போம். அவனின் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்று அறிவோம் 


மறுக்கும் ஆகின் = சீதையை விட மறுப்பான் ஆகில் 


காதுதல் = அவனை அழித்தல் 


கடன் = என் கடமை  


என்று உள்ளம்  கருதியது = என் உள்ளம் சொல்கிறது 


அறனும் அஃதே = அதுதான் அறமும் கூட 


நீதியும் அஃதே ‘என்றான் = நீதியும் அதுதான் என்றான் 


கருணையின் நிலையம் அன்னான். = கருணையின் இருப்பிடமான இராமன் 


"உள்ளம் கருதியது", "நீதியும், அறமும் அதுவே"

உள்ளமும், அறிவும் ஒன்றுபட்டு நிற்கிறது. 

இது வெறும் அறிவு சார்ந்த விடயம் மட்டும் அல்ல. 


இராமனின் உள்ளத்தில் கருணை முதலில் பிறக்கிறது. பின் அறிவு அதை சரி என்று சொல்கிறது. 


பெரும்பாலும், மக்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்யும் செயல்கள் , பேசும் பேச்சுகள்தான் அதிகம். அறிவு வேலை செய்தால் மனம் வேலை செய்வது இல்லை. மனம் வேலை செய்தால் அறிவு வேலை செய்வது இல்லை. 


சில சமயம் தவறான இடத்தில் தவறான கருவிகளும் வேலை செய்வது உண்டு. 



இராமனின் மன நிலை அதிசய வைக்கிறது. 


மனைவியை ஒரு அரக்கன் தூக்கிக் கொண்டு போய் விட்டான். அவனை கண்டு பிடிக்க காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து, கடல் நடுவில் பாலம் கட்டி, பெரிய படையை நடத்திக் கொண்டு வந்து, பின் சொல்கிறான் "சீதையை விட்டு விட்டால் சமாதானம்"  என்று. 


யாரால் முடியும்?  

பகைவனுக்கும் இரங்கும் மனம். 

நம்மால் உறவிலும் நட்பிலும் கூட இவ்வளவு இரக்கம் காட்ட முடியுமா என்பது சந்தேகமே. 

மேலும் படிப்போம். 



[ ஒரு முன்னோட்டம் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_29.html



]


No comments:

Post a Comment