Monday, May 22, 2023

திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 2

 

 திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 2


(இந்தத் தொகுப்புரையின் முந்தைய பாகங்களின் வலை தள முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)


இதுவரை நாம் வாசித்த அதிகாரங்களின் தொகுப்பை ஒரு முறை சிந்திக்கலாம். 


முதலில் கடவுள் வாழ்த்து. 


வான்சிறப்பு , நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல், இல் வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம்


என்ற ஐந்து அதிகாரங்களின் தொகுப்புரையை முந்தைய பிளாகில் பார்த்தோம். 


தொடர்வோம்.


6. புதல்வரைப் பெறுதல் - இல்வாழ்வில், மனைவியோடு வாழும் ஒருவன் அடுத்து அடைவது குழந்தைப் பேறு. குழந்தைகள், அவர்களின் இனிமை, அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பதெல்லாம் இந்த அதிகாரத்தில் கூறுகிறார். சில இல்லறக் கடமைகளை பிள்ளைகள் மூலம் மட்டுமே செய்ய முடியும் என்றும் வலியுறுத்துகிறார். 


7. அன்புடைமை - மனைவி, குழந்தைகள் என்று வரும் போது , ஒருவனின் அன்பு வட்டம் விரிகிறது. தனக்கு தனக்கு என்று நினைத்துக் கொண்டிருந்தவன், தன் மனைவி, தன் பிள்ளைகள் என்று அவர்கள் மேல் அன்பு செலுத்தத் தொடங்குகிறான். அவனின் அன்பின் எல்லை விரிகிறது. இதுவரை பெற்றோரிடம் இருந்து அன்பை பெற்றுக் கொண்டிருந்தவன் , இப்போது அன்பை கொடுக்கப் பழகுகிறான். 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/2.html

(please click the above link to continue reading)



8. விருந்தோம்பல் - தான், மனைவி, மக்கள் என்று விரிந்த அன்பின் எல்லை மேலும் விரிகிறது. வீடு என்று இருந்தால் விருந்தினர்கள் வருவார்கள். அவர்களை வரவேற்க வேண்டும், போற்ற வேண்டும், உபசரிக்க வேண்டும். அவர்கள் மேல் அன்பில்லாமல் அது முடியாது. அன்பின் எல்லை மேலும் விரிந்து விருந்தினர்களையும் சேர்த்துக் கொள்கிறது. 


9. இனியவை கூறல் - விருந்தோம்பல் என்று கூறினால், எப்படி விருந்தை உபசரிப்பது என்ற கேள்வி வரும். இனிய சொல் சொல்லாதவன் வீட்டுக்கு யார் வருவார்கள். பேச்சில் இனிமை வேண்டும். அது இல்லறத்தில் உள்ளவனுக்கு இன்றியமையாத பண்பு. எனவே, அதை அடுத்துக் கூறினார். 


10. செய்நன்றி அறிதல் - வீடு என்று இருந்தால் நண்பர்கள், உறவினர்கள் வருவார்கள். நாம் அவர்களுக்கு சிலவற்றை செய்வோம். அவர்கள் நமக்கு சில நன்மைகளைச் செய்வார்கள். அப்படி நாம் பெற்ற நன்மைகளை ஒரு நாளும் மறக்கக் கூடாது என்பதை வலியுறுத்த இந்த அதிகாரம் செய்தார். பெற்றோர், ஆசிரியர், அக்கம், பக்கம், நட்பு, உறவு, உணவு செய்யும் உழவன், நாட்டைக் காக்கும் வீரன், உயிர் காக்கும் மருத்துவன் என்று ஆயிரம் பேரிடம் நாம் உதவிகளைப் பெறுகிறோம். அந்த உதவிகளை மறக்கக் கூடாது என்று கூறும் அதிகாரம் இது. 


(மேலும் சிந்திப்போம்) 



[

தொகுப்புரை - பாகம் 1

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/1.html


]







No comments:

Post a Comment