Tuesday, February 12, 2019

இராமாயணம் - பொருள் ஒன்று, சொல் இரண்டு

இராமாயணம் - பொருள் ஒன்று, சொல் இரண்டு 


சில சமயம் ஒரு பொருள், வேறு வேறு விதமான உணர்ச்சிகளை நமக்குத் தரும். பொருள் ஒன்று தான். அது இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்து அதன் தன்மை மாறும்.

உதாரணமாக, பூ மாலையை எடுத்துக் கொள்வோம். அது கடவுள் சிலை மேல் இருந்தால் ஒரு அழகு. புது மண தம்பதிகள் மேல் இருந்தால் ஒரு அழகு. அதுவே ஒரு பிணத்தின் மேல் கிடந்தால் நமக்கு வேறு பல உணர்ச்சிகளைத் தரும். மாலை என்னவோ ஒன்றுதான். அது இருக்கும் இடத்தைப் பொறுத்து நமக்கு பல்வேறு உணர்ச்சிகளை தூண்டுகிறது.

மரங்கள் பல உண்டு. சில மரங்கள் வெட்டி வீழ்த்தப் பட்டாலும், அது மரம்தான். நல்ல தேக்கு மரத்தில் செய்த கதவு என்று தான் சொல்வோம். பனை மரத்தில் செய்த உத்திரம் என்று தான் சொல்லுவோம். ஆனால் சில மரங்கள் இருக்கின்றன. இருக்கும் வரை மரம், இறந்த பின் அது விறகு என்று அழைக்கப் படும். வீட்டில் அடுப்பு எரிக்கும் விறகு எந்த மரம் என்று யாருக்குத் தெரியும்.

பாரதியார் சொல்லுவார், கொடுங்கோல் மன்னன் ஜார்ஜ் இறந்த பின் அவன் கூட இருந்த ஆட்கள் எல்லாம் வீழ்ந்தார்கள். மரம் விழுந்து விறகானது போல என்பான்.

இமயமலை வீந்ததுபோல் வீழ்ந்துவிட்டான் 
ஜாரரசன் இவனைச் சூழ்ந்து 
சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி 
அறங்கொன்று சதிகள் செய்த 
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார், 
புயற்காற்றுங் சூறை  தன்னில் 
திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம் 
விறகான செய்தி போலே! 

மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்தி போல...

இராமாயணத்தில், கைகேயிடம் கூனி சொல்கிறாள். "இரண்டு வரம் கேள். ஒன்றில் இராமனை காட்டுக்கு அனுப்பு. இன்னொன்றில் பரதனுக்கு அரசாட்சியைக் கேள். இதனால் 'செழு நிலம் எல்லாம்" உன் மகனுக்கு கிடைக்கும் என்கிறாள். 

கூனியின் நோக்கில் அது செழு நிலம். செழுமையான நிலம்.

'இரு வரத்தினில் , ஒன்றினால் அரசு கொண்டு , இராமன் 
பெரு வனம் அத்து இடை ஏழ் இரு பருவங்கள் பெயர்ந்து 
திரிதரச் செய்தி ஒன்றினால் ; செழும் நிலம் எல்லாம் 
ஒரு வழி படும் உன் மகற்கு ; உபாயம் ஈது ' என்றாள் 


அது கேட்ட கைகேயி மனம்  மாறுகிறாள்.

கூனியை அப்படியே கட்டிக் கொள்கிறாள். அவளுக்கு பரிசுகள் எல்லாம் தருகிறாள். இந்த உலகம் முழுவதையும் என் மகனுக்குத் தந்தாய். இந்தத் தரைக்கு நாயகனின் தாய் இனி நான்" என்கிறாள்.

அவளை அறியாமலேயே அவள் வாயில் இருந்து சொற்கள் வந்து விழுகின்றன. செழு நிலம், "தரை" என்று ஆகி விட்டது. செழுமையான நிலத்தில் எல்லாம் முளைக்கும். தரையில் என்ன என்ன விளையும்?

பாடல்

உரைத்த கூனியை உவந்தனள் , உயிர் உறத் தழுவி , 
நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி , 
'இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய் ! 
தரைக்கு நாயகன் தாய் இனி நீ ; எனத் தணியா . 


பொருள்

உரைத்த கூனியை = அவ்வாறு சொன்ன கூனியை

உவந்தனள் = உவகை கொண்டாள்

உயிர் உறத் தழுவி  = இறுக்க கட்டிப் பிடித்து

நிரைத்த மா மணி = பெரிய மணிகள் நிறைந்த

ஆரமும் = சங்கிலியும்

நிதியமும் = மற்ற செல்வங்களும்

 நீட்டி = கொடுத்து

'இரைத்த வேலை = எப்போதும் இரைந்து கொண்டே இருக்கும் கடல்

சூழ் = சூழ்ந்த

உலகம் = இந்த உலகை எல்லாம்

என் ஒரு மகற்கு ஈந்தாய் ! = என் ஒரு மகனுக்கு தந்தாய்

தரைக்கு = இந்த தரைக்கு

நாயகன் = தலைவனின்

தாய் இனி = தாய் இனிமேல் நான்

நீ ; எனத் தணியா . = நீ (மேலும் சொல்ல இருக்கிறாள் அடுத்து வரும் பாடல்களில்).

இது வரை இராமனும் தனக்கு மகன் என்று நினைத்துக் கொண்டிருந்த கைகேயி, இப்போது பரதன் மட்டும் தான் தனக்கு மகன் என்று நினைக்கத் தொடங்குகிறாள்

"என் ஒரு மகற்கு ஈந்தாய்" என்கிறாள்.

கம்பனின் சொல் நயம். நிலம் தரையானது. இராமன் இல்லாத அயோத்தி வெறும் கட்டாந்தரை தான் என்று சொல்லாமல் சொல்கிறான்.

ஒரு சொல்லுக்குள் காப்பியத்தின் போக்கை காட்டிவிட்டுப் போகிறான் கம்பன்.

இப்படி படித்து இரசிக்க நிறைய இருக்கிறது. ஒரு வாழ் நாள் போதாது. இருக்கிற கொஞ்ச நாளில் நல்லவற்றைப் படிப்போம். இரசிப்போம். 


Monday, February 11, 2019

ஒளவையார் - அரியது

ஒளவையார் - அரியது 


அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே

இந்தப் பாடல் பள்ளிக்கூடத்தில் படித்து இருப்பீர்கள். பெரிய சிக்கலான பாடல் ஒன்றும் இல்லை. சில சமயம், மிக எளிமையாக இருப்பதால் அதில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை நாம் அறியத் தவறி விடுகிறோம்.

இந்தப் பாடலில் அப்படி என்ன ஆழ்ந்த கருத்து இருக்கிறது என்று பார்ப்போம்.

மானிடராதல் அரிது - சரி தான். நாம் மானிடராகப் பிறப்பதற்கு நாம் என்ன செய்தோம்? ஒன்றும் செய்யவில்லை. பிறந்து விட்டோம். அவ்வளவுதான். நம் முயற்சி ஒன்றும் இல்லை.

பேடு நீங்கி பிறத்தல் அரிது - அதுவும் சரி தான். ஆனால், அதற்காக நாம் என்ன செய்ய முடியும். தாயின் கருவில் இருக்கும் போதே குருடு, செவிடு போன்ற குறைகளை நாம்  சரி செய்து கொள்ள முடியுமா ? முடியாது. ஏதோ, நம் நல்ல காலம் , குறை ஒன்றும் இல்லாமல் பிறந்து விட்டோம்.

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது....ஞானமும் கல்வியும் பெறுதல் அரிது என்று சொல்லவில்லை.  அடைதல் அரிது என்று சொல்லவில்லை. நயத்தல் அரிது  என்று சொல்கிறாள் ஒளவை.  நயத்தல் என்றால் விரும்புதல், இன்புறுதல், பாராட்டுதல், மகிழ்தல், சிறப்பித்தல் என்று பொருள். ஞானமும் கல்வியும்  எங்கு இருந்தாலும் அதை கண்டு முதலில் மகிழ வேண்டும், அதை அடையும் போது   மனதில் இன்பம் பிறக்க வேண்டும். "ஐயோ, இதை படிக்க வேண்டுமே " என்று மனம் நொந்து படிக்கக் கூடாது. "அடடா, எவ்வளவு நல்ல விஷயம்..இத்தனை நாளாய் இது தெரியாமல் இருந்து விட்டேனே ...நல்லது இப்பவாவது தெரிந்ததே " என்று மகிழ வேண்டும்.

ஞானம் வேறு, கல்வி வேறு. கல்வி கற்பதன் மூலம் வருவது. ஞானம் உள்ளிருந்து வருவது. உள்ளே செல்லும் கல்வி, உள்ளிருக்கும் ஞானத்தை வெளியே கொண்டு வர வேண்டும்.

"தானமும் தவமும் தான்செயல் அரிது"


படிப்பதாவது எப்படியாவது தத்தி முத்தி படித்து விடலாம்.  தானமும் தவமும்  செய்வது இருக்கிறதே  மிக மிக கடினமான செயல்.

இலட்சக் கணக்கில் செல்வம் இருந்தாலும், நூறு ரூபாய் தருமம் செய்ய மனம் வருமா ? தானம் கூட ஒரு வழியில் செய்து விடலாம். வெள்ள நிவாரண நிதி, முதியோர்  பாதுகாப்பு, பிள்ளைகள் பாதுகாப்பு நிதி என்று ஏதோ ஒன்றிற்கு நாம் தானம் கூட செய்து விடுவோம்.

தவம் ? தவம் செய்வது எளிதான செயலா ? யாராவது தவம் செய்வதைப் பற்றி நினைத்தாவது பார்த்தது உண்டா ? தவம் என்றால் ஏதோ காட்டுக்குப் போய் , மரத்தடியில் அன்ன ஆகாரம் இல்லாமல் இருப்பது என்று நினைக்கக் கூடாது. அது என்ன என்று  பின்னால் ஒரு blog இல் பார்க்க இருக்கிறோம்.

தானமும் தவமும் செய்து விட்டால், வானவர் நாடு வழி திறக்குமாம்.

சொர்கத்துப் போக வேண்டும், இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்று விரும்பாதவர் யார்.

சொர்கத்துப் போக என்ன வழி ? எப்படி போவது ?

ஔவை சொல்கிறாள் - தானமும் தவமும் செய்யுங்கள். சொர்கத்துக்கான வழி தானே திறக்கும் என்கிறாள்.

சம்பாதிப்பதை எல்லாம் வீடு வாசல், நகை, நட்டு , கார், shares , bonds என்று சேமித்து வைத்து விட்டு, சொர்கத்து எப்படி போவது ?

"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே " என்றார் பட்டினத்தார்.

தானமும் தவமும் எப்போது வரும் என்றால்,

ஞானத்தையும், கல்வியையும் நயத்தால் வரும். முதலில் கல்வி, அப்புறம் ஞானம். அது வந்தால், செல்வத்தின் நிலையாமை தெரியும். இளமையின் நிலையாமை தெரியும். அப்போது தானமும் தவமும் செய்யத் தோன்றும்.

ஞானத்தையும் கல்வியையும் எப்படி நயப்பது ?

கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்தால் , ஞானத்தையும், கல்வியையும் நயக்க முடியும்.

உங்களுக்கு கூன், குருடு, செவிடு போன்ற குறை ஒன்றும் இல்லையே ?

அப்படி என்றால், அடுத்த இரண்டையும் செய்யுங்கள், வானவர் நாடு வழி திறந்து  உங்களுக்காக காத்து நிற்கும்.

ஔவைப் பாட்டியின் ஞானத்தின் வீச்சு புரிகிறதா ?

எளிமையான பாடல் தான். எவ்வளவு ஆழம்?

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_11.html

Saturday, February 2, 2019

நாலடியார் - காக்கை கடிவதோர் கோல்

நாலடியார் - காக்கை கடிவதோர் கோல் 



பற்றிலேயே பெரிய பற்று இந்த உடல் மேல் கொண்ட பற்றுதான்.

இந்த உடம்புக்கு ஒரு சின்ன வலி, உபாதை என்றாலும் பதறிப் போகிறோம். "காலையில் இருந்து ஒரே தலைவலி ...சூடா காப்பி போட்டு குடிச்சேன், ரெண்டு ஸாரிடான் போட்டேன், தலைவலி தைலம் போட்டேன்...ஒண்ணுக்கும் அடங்க மாட்டேங்குது " என்று ஒரு சின்ன தலைவலி வந்தால் கூட நாம் இந்த உடம்புக்காக கவலைப் படுகிறோம்.

அது மட்டும் அல்ல, அதுக்கு வயதாகிக் கொண்டே போகிறேதே என்ற கவலை...முடி நரைத்ததால் கவலை, தோல் சுருங்கினால் கவலை, கண் பார்வை மங்கினால் கவலை, காது கொஞ்சம் கேட்காவிட்டால் கவலை...

வயதான படுத்திருவோமோ ? மறதி வந்திருமோ ? பிள்ளைகளுக்கு பாரமா போயிருவோமோ என்ற பயம்.

இந்த உடம்பை வைத்துக் கொண்டு நாம் எவ்வளவு அல்லாடுகிறோம்....

காரணம் என்ன ?

காரணம், நாம், இந்த உடம்புதான் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த உடம்பு பெரிய விஷயம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படியா ? அது நிஜமா ?

ஒரு ஈ இருக்கிறதே, அதன் சிறகு இருக்கிறதே, அது எவ்வளவு சின்னது? அந்த அளவுக்கு ஒரு சின்ன கீறல் உடம்பில் விழுந்தால் கூட, அதில் இருந்து இரத்தம் வரும், சீழ் பிடிக்கும், அதில் ஈ மொய்க்கும், கொஞ்சம் விட்டால் அதை காக்காய் கூட கொத்தும். அந்த காகத்தை விரட்ட, ஒரு குச்சி வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு மோசமானது இந்த உடம்பு. அதுக்கு நாம் இந்தப் பாடு படுகிறோம்.

முடிக்கு டை அடிக்கிறோம், பவுடர், லிப் ஸ்டிக், ஷாம்பு, சோப்பு, எண்ணெய் , சென்ட், அது இது என்ன என்று கொட்டி முழக்குகிறோம்.

பாடல்

மாக்கேழ் மடநல்லாய் என்றரற்று சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.

பொருள்

மா = பெரிய, சிறந்த, அழகு உடைய

கேழ் = உறவு

மட = இளமையான

நல் = நல்ல

ஆய் = ஆராய்ந்து எடுக்கப்பட்ட அணிகலன்களை அணிந்த பெண்ணே

என்றரற்று = என்று அரற்றும்

சான்றவர் = பெரியவர்

நோக்கார்கொல் = பார்க்க மாட்டார்களா ? அறிய மாட்டார்களா ?

நொய்யதோர் = இழிவான

புக்கிலை  = இடம் இல்லை

யாக்கைக்கோர் = இந்த உடம்புக்கு

ஈச்சிற கன்னதோர் = ஈ + சிறகு + அன்னது ஓர் = ஈயின் சிறகைப் போல

தோல் = தோலில்

அறினும்  = சின்ன வெட்டு காயம் ஏற்பட்டாலும்

வேண்டுமே = வேண்டுமே

காக்கை  = காக்கையை

கடிவதோர் = விரட்ட  ஓர்

கோல் = கோல் , குச்சி

இளமை நிலையானது அல்ல.

சரி, அதுக்காக எப்ப பார்த்தாலும் வயதான பெரிசுக மாதிரி கவலைப் பட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா ?

இல்லை. அது நிலையானது அல்ல என்று தெரிந்து கொண்டால் போதும்.

மரண பயம் போய் விடும். நம் மரணம் மட்டும் அல்ல, மற்றவர்களின் மரணமும்  நம்மை வருத்தாது.

"அதெல்லாம் சரி, இருந்தாலும் ...." என்று இழுப்பது கேட்கிறது...என்ன செய்ய...

மருந்தைக் கொடுக்கலாம்...யார் குடிப்பது?



Thursday, January 31, 2019

இராமானுசர் நூற்றந்தாதி - வாயமுதம் பரக்கும்

இராமானுசர் நூற்றந்தாதி  - வாயமுதம் பரக்கும் 



நாம பெரிய சந்நியாசி, துறவி எல்லாம் கிடையாது. அதே சமயம் சமய கோட்பாடுகளை முற்றும் விட்டு விட்டவர்களும் கிடையாது. குடும்ப வாழ்கை கொஞ்சம், ஆன்மீகம் கொஞ்சம், சமயம் கொஞ்சம், உண்மை பற்றிய ஆவல் மற்றும் தேடல் கொஞ்சம் என்று எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறோம். 

சமய உண்மைகளை அறிந்து கொள்ள ஆசை உண்டு. அவற்றை கடை பிடிக்கவும் ஆசை உண்டு. ஆனால், கடமைகள் மறு புறம் இழுக்கின்றன. படித்து, அவை சரி என்று அறிந்தாலும், "நடை முறையில் சாத்தியம் இல்லை " என்று ஒதுக்கி வைத்து விடுகிறோம். 

உள்ளும் இல்லை, புறமும் இல்லை. வாசல் படியில் இருக்கிறோம்.  இரணியன் கேட்ட வரம் போல - உள்ளும்  இல்லை,புறமும் இல்லை  வாசல்படி தான்  இடம். 

ஆரவமுதனார் சொல்கிறார் , "படியில் உள்ளவர்களே , உங்களுக்குச் சொல்கிறேன்" என்று இராமனுஜரின் பெருமையை கூறுகிறார். 

பாடல்  

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே 

பொருள் 

சுரக்கும் = தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் 

திருவும் = செல்வமும் 

உணர்வும் = உண்மையை உணரும் ஞானமும் 

சொலப்புகில் = சொல்லத் தொடங்கினால் 

வாயமுதம் = வாயில் அமுதம் 

பரக்கும் = தோன்றும் 

 இருவினை = இரு வினைகள் 

பற்றவோடும் = பற்றிக் கொள்ள, நாளும் அது துரத்த ஓடும் 

படியிலுள்ளீர் = படியில் உள்ளவர்களே 

உரைக்கின்றனன் = சொல்லுகின்றேன் 

உமக்கு = உங்களுக்கு 

யான்  = நான் 

அறம் சீறும்  = அறத்தை மறுக்கும் 

உறு கலியைத் = பெரிய தொல்லை தரும் கலியை 

துரக்கும் = .விலக்கி விடும் 

பெருமை = பெருமை கொண்டது 

இராமானுசன் = இராமானுசன் 

என்று சொல்லுமினே = என்று சொல்லுங்கள் 


துன்பம் ஏன் வருகிறது ? அறத்தை விட்டு விலகுவதால் துன்பம் வருகிறது. தர்மத்தை  விட்டு விலகினால் துன்பம் வரும். 

"அறம் சீர் உறு கலி"


கலி என்றால் சனியன். 

"இராமானுசன்" என்று சொன்னால் போதும் 

- செல்வம் பெருகும் 
- அறிவு வளரும் 
- துன்பம் தொலைந்து போகும்  


பாடலை வாசித்துப் பாருங்கள். 

நிச்சயம் வாயில் அமுது ஊறும் .

Wednesday, January 30, 2019

திருக்குறள் - சொற் குற்றம்

திருக்குறள் - சொற் குற்றம் 


நாம் பல விதங்களில் குற்றங்கள் புரிகிறோம்.

மனதால், செயலால், சொல்லால் குற்றங்கள் புரிகிறோம்.

வள்ளுவருக்கு இந்த சொல் குற்றத்தை கண்டாலே பிடிப்பது இல்லை. ஏழே வார்த்தைகளில் குறள் கூறிய வள்ளுவருக்கு வள வள என்று பேசுவது பிடிக்காமல் இருப்பது நாம் புரிந்து கொள்ளக் கூடியதே.

பொதுவாகவே, நம் பண்பாட்டில், வெட்டிப் பேச்சை யாரும் மதிப்பது இல்லை. ஒருவனின் அறிவுத் திறம் என்பது அவன் எவ்வளவு குறைவாக பேசுகிறான் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப் படுகிறது.

மௌனம் ஞான வரம்பு என்று சொல்லுவார்கள்.

பயனில சொல்லாமை என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

ஒருவன் நல்லவனா, அறிஞனா, படித்தவனா, நீதிமானா, அறத்தின் பால் பட்டவனா என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம் என்றால் அவன் பயன் இல்லாத ஒன்றை நீட்டி முழக்கி சொல்லுவதில் இருந்தே புரிந்து கொள்ளலாம் என்கிறார் வள்ளுவர்.

ஒண்ணும் தெரியாது. ஆனால், எல்லாம் தெரிந்த மேதாவி மாதிரி பெரிதாக பேசுவான். சின்ன விஷயத்தை கண்ணு காது மூக்கு வைத்து நீட்டி முழக்கி பேசுவான்.

பாடல்


நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கு முரை

சீர் பிரித்த பின்

நயனில்லன் என்பது சொல்லும் பயன் இல்ல
பாரித்து உரைக்கும் உரை


பொருள்

நயனில்லன் = நயம் இல்லாதவன்

என்பது = என்பது

சொல்லும் = அவன் சொல்லுகின்ற

பயன் இல்ல  = பயன் இல்லாத

பாரித்து = விரித்து

உரைக்கும் உரை = சொல்லும் உரையில் இருந்து தெரியும்

பயன் இல்லாத என்றால் என்ன என்பதற்கு பரிமேல் அழகர் மற்றொரு குறளில் உரை சொல்லி இருக்கிறார்.

"தனக்கும், பிறருக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தராத " என்று.


பேசுவதற்கு முன், whatsapp பண்ணுவதற்கு முன், மெயில் அனுப்புவதற்கு முன்,  அதனால் நமக்கோ அல்லது யாருக்கு அனுப்புகிறோமோ அவர்களுக்கோ என்ன பயன்  என்று அறிந்து பின் அதை செய்ய வேண்டும்.

அதே போல் நமக்கு பயன் இல்லாத ஒன்றை நமக்கு ஒருவர் சொல்லுகிறார் அல்லது  அனுப்புகிறார் என்றால் அவரின் அறிவின் ஆழத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். நல்லதா சொல்ல ஒன்றும் இல்லாததால் இந்த மாதிரி வெட்டித் தனமாக எதையோ சொல்லிக் கொண்டு அலைகிறார் என்று அறிந்து கொள்ள வேண்டும்.  அப்படி பட்டவர்களின் பேச்சை, அவர்கள் அனுப்பும் செய்திகளை  படித்தோ, கேட்டோ நமது நேரத்தை வீணடிக்கக் கூடாது.

பயன் இல்லாதை சொல்லுவதே தவறு. அதிலும் அதை விரிவாக விவரித்து வேறு சொல்லுவது என்றால் , சகிக்க முடியுமா.

நல்லதை, பயனுள்ளதை சொல்லுங்கள், கேளுங்கள் என்கிறார் வள்ளுவர்.

இது பயன் உள்ளதா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/01/blog-post_30.html

Thursday, January 17, 2019

108 திவ்ய தேசம் - திரு ஊரகம்

108 திவ்ய தேசம் - திரு ஊரகம் 


தேவாரம், திருவாசகம், பிரபந்தம் இவற்றை எல்லாம் படிக்கும் போது, இதில் என்ன இருக்கிறது. கடவுள் பற்றிய வர்ணனை, அவர் இப்படி இருப்பார், அப்படி இருப்பார், இன்னது செய்வார், என்று கடவுள் பற்றிய குறிப்புகள் இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வாழ்க்கை தத்துவங்கள் இருக்கும். என்னை காப்பாற்று, என்னை உன்னோடு அழைத்துக் கொள் , என்னை மன்னித்துக் கொள் என்ற பிரார்த்தனைகள் இருக்கும்.

இவற்றை நீக்கி விட்டுப் பார்த்தால், அதில் வேறு ஒன்றும் தேறாது.  அப்படியே தேர்ந்தாலும் , ஏதோ கொஞ்சம் இருக்கலாம்.

எப்படி இந்தப் பாடல்கள், பாசுரங்கள் காலம் கடந்து நிற்கின்றன? கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களையும் வசீகரிக்கின்றன?  அதில் ஏதோ ஒன்று இருக்க வேண்டும்.

திருமங்கை ஆழ்வார், தன்னை ஒரு தாயாகவும், காதல் வயப்பட்ட தன் மகளை பார்த்து பாடுவது போல ஒரு பாசுரம் எழுதி இருக்கிறார்.

படித்துப் பாருங்கள், மகளுக்காக உருகும் ஒரு தாயின் மனம் தெரியும்.

ஒரு தந்தை எவ்வளவுதான் பாசத்தை மகள் மேல் கொட்டினாலும், ஒரு தாயின் அளவுக்கு தந்தையால் மகளை நெருங்க முடியாது. ஒரு பெண்ணின் உடல் கூறுகள், உணர்ச்சி கொந்தளிப்புகள், இவற்றை இன்னொரு பெண் தான் அறிந்து கொள்ள முடியும். கூச்சப் படாமல் எளிமையாக பேச முடியும்.

மகளின் உடல் கூறுகளைப் பற்றி ஒரு தந்தை பேசுவது நாகரீமாக இருக்காது.

தாயின் இடத்தில் இருந்து, திருமங்கை ஆழ்வார் பாடுகிறார்....மனதை என்னவோ செய்யும் பாடல்....

பாடல்

கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் காமருபூங் கச்சியூ ரகத்தாய். என்றும்,

வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் வெஃகாவில் துயிலம ர்ந்த வேந்தே. என்றும்,

அல்லடர்த்து மல்லரையன் றட் டாய் என்றும், மாகீண்ட கத்தலத்தென் மைந்தா என்றும்,

சொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே.

பொருள்


கல்லெடுத்துக் = மலையை எடுத்து

கல்மாரி = கல் மழையில் இருந்து

காத்தாய் என்றும் = காப்பாற்றினாய் என்று கூறும் (கூறுகிறாள்)

காமருபூங் = விரும்பும் பூவைப் போன்ற

கச்சியூ ரகத்தாய் = காஞ்சி ஊரகத்தில் உள்ளவனே

என்றும் = என்று கூறும்

வில்லிறுத்து  = வில்லினை அறுத்து

மெல்லியல் தோள் = மென்மையான தோள்களை கொண்ட சீதையை

தோய்ந்தாய் = அடைந்தாய்

என்றும் = என்றும் கூறும்

வெஃகாவில் = திரு வெஃகா என்ற இடத்தில்

துயிலம ர்ந்த = துயில் அமர்ந்த

வேந்தே. = தலைவனே

என்றும், = என்றும் கூறும்

அல்லடர்த்து = இருள் சூழ்ந்த (கொடுமை நிறைந்த)

மல்லரையன் றட் டாய்  = மல்லரை அன்று வென்றாய்

என்றும் = என்றும் கூறும்

மாகீண்ட கை தலத்து என்  = கேசி என்ற அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அவனை அழித்தாய்

மைந்தா என்றும் = மைந்தனே என்றும் கூறும்

சொல்லெடுத்துத் = சொல் எடுத்துக் கொடுத்து

தங்கிளியைச் = தன்னுடைய கிளியை

சொல்லே என்று = சொல் என்று கூறும்

துணைமுலைமேல் = துணையான இரு முலைகள் மேல்

துளிசோரச் = விழி நீர் வடிய

சோர்க்கின் றாளே = சோர்ந்து போகின்றாளே , என் மகள்.


அவளுக்கு அவன் மேல் காதல். அவனைப் பற்றி யாராவது உயர்வாகச் சொன்னால், அவளுக்கு மகிழ்ச்சி. அதற்காக எல்லோரிடமும் போய் கேட்கவா  முடியும்.

அவன் நினைவு அவளை வாட்டுகிறது.

அந்தப் பெண்ணின் தாய்க்குத் தெரிகிறது.  தன் மகள் காதல் வசப் பட்டு இருக்கிறாள் என்று  தெரிகிறது. மகளைப் பார்த்து, தாயும் உருகுகிறாள்.

மகளுக்கும், தாயிடம் சென்று நேரே சொல்ல வெட்கம். தயக்கம்.

தன்னுடைய கிளியை எடுத்து மார்பின் மேல் வைத்துக் கொண்டு, அவன் பெயரை சொல்லுகிறாள். அந்த கிளியும் திரும்பிச் சொல்லுகிறது. அவள் சிலிர்த்துப் போகிறாள்.

ஆயர் பாடியில், இந்திரனின் ஏவலால் வருணன் கல் மழை பொழிந்தான். அங்கே இருந்த மலையை கையில் எடுத்து குடை போல பிடித்து அந்த மக்களை கண்ணன் காப்பாற்றினான்.

அவன் தூக்கியது மலையை. அவளுக்கு அது சாதாரண கல் போலத் தெரிகிறது.

அவன் திறமைக்கு முன்னால், இது எல்லாம் சாதாரணம் என்பது போல.


"கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய்" என்கிறாள்

யாராலும் தூக்கக் கூட முடியாத வில். சீதையின் மெல்லிய தோள்களை சேர விரும்பி, அவ்வளவு பெரிய வில்லை எடுத்து அதை முறித்தான்.


"வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய்"

பெண் மென்மையானவள் தான். ஆனால், அந்த மென்மை தான், ஆணுக்கு அவ்வளவு பலத்தைத் தருகிறது.

பாலில் ஒரு துளி தயிரை விட்டு உறைய விடுவார்கள். அதற்கு தோய்தல் என்று பெயர். பாலும் தயிரும் ஒன்று சேர்ந்து முழுவதும் தயாராகி விடும்.

சீதையின் தோள்களோடு இராமன் தோய்ந்தான் என்கிறாள். பிரியாமல் இருந்து , இருவரும் இரண்டற கலந்தார்கள்.

இவள் அவன் பெயரை சொல்லிக் கொண்டே இருக்கிறாள். அதைக் கேட்ட கிளியும் அதையே சொல்கிறது.

இது போன்ற பாடல்களை சொல்லி விளக்க முடியாது.

அந்த உணர்ச்சிகளை அப்படியே உள் வாங்கினால், அந்தப் பாடலை உணரலாம்.

மீண்டும் ஒரு முறை பாசுரத்தைப் படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/01/108.html

Wednesday, January 16, 2019

திருப்பாவை - பேச்சு அரவம் கேட்டிலையோ?

திருப்பாவை - பேச்சு அரவம் கேட்டிலையோ?





பாடல்

கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.


பொருள்

கீசுகீசு = கீச் கீச்

என்று = என்று

எங்கும் = எல்லா இடத்திலும்

ஆனைச்சாத் தன்  = ஆனை சாத்தன் என்பது ஒரு வகை பறவை. காகம், புறா மாதிரி

கலந்து = தங்களுக்குள் கலந்து

பேசின = பேசிக் கொண்ட

பேச்சரவம் = பேச்சு சத்தம்

கேட்டிலையோ = நீ கேட்கவில்லையா ?

பேய்ப் பெண்ணே = பேய் போன்ற குணம் கொண்ட பெண்ணே

காசும் பிறப்பும் = காசு பிறப்பு போன்ற ஆபரணங்கள்  (பெண்கள் அணியும் ஆபரணம்)

கலகலப்பக் = கல கல என்று

கைபேர்த்து = கை அசைத்து

வாச நறும்குழல் = வாசம் வீசும் கூந்தலைக் கொண்ட

ஆய்ச்சியர் = ஆயர் பாடி பெண்கள்

மத்தினால் = மத்தினால்

ஓசை படுத்த = ஓசை உண்டாக்கும்

தயிரரவம் = தயிர் கடையும் சப்த்தம்

கேட்டிலையோ = கேட்கவில்லையா ?

நாயகப் பெண்பிள்ளாய் = முக்கியமான பெண் பிள்ளையே

நாரா யணன்மூர்த்தி = நாராயண மூர்த்தி

கேசவனைப் = கேசவனைப்

பாடவும் = பாடுவதையும்

நீ கேட்டே கிடத்தியோ = நீ கேட்டுக் கொண்டே படுத்துக் கிடக்கிறாயா ?

தேச முடையாய் = தேமல் உடையவளே

திறவேலோர் எம்பாவாய் = திறப்பாய் என் பாவையே

இது என்ன பாட்டு ? இதுக்கு எதுக்கு பெரிய உரை , வியாக்கியானம் எல்லாம்?

பறவைகள் கூட்டில் கத்துகின்றன. பெண்கள் தயிர் கடைகிறார்கள். பக்த கோடிகள் இறைவன் பெயரை உச்சரிக்கிறார்கள். இந்த சத்தத்தை எல்லாம் கேட்டுக் கொண்டு தூங்குகிறாயா? எழுந்து வா.

இதுதான் பாடல். இதில் என்ன இருக்கிறது தெரிந்து கொள்ள? இதை தெரிந்து நமக்கு  என்ன பயன் ?

ஒன்றும் இல்லாமலா இத்தனை நாள் இந்தப் பாசுரங்கள் நிலைத்து நின்றிருக்கும் ?

நமது சிக்கல் என்ன என்றால் நம்மிடம் நிறைய சாவிகள் இருக்கின்றன. ஆனால், அந்தச் சாவிகள் எந்தப் பூட்டைத் திறக்கும் என்று நமக்குத் தெரியாது. சாவிகளை தூக்கிக் கொண்டு திரிகிறோம்.

இது போல ஆயிரம் பாடல்கள், ஆயிரம் வழி முறைகள் இருக்கின்றன. ஏன் செய்கிறோம்  என்று அறியாமலேயே செய்து கொண்டிருக்கிறோம்.

சரி, பாசுரத்துக்கு வருவோம்.

நம்மைச் சுற்றி பல நல்ல விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. நல்லது மட்டும் அல்ல, அல்லாததும் நடக்கிறது. நாம் பலவற்றை கேட்பதே இல்லை. அப்படியே கேட்டாலும், நல்லதை விட்டு விட்டு அல்லாதவற்றை கேட்கிறோம். நல்லதை கேட்டாலும், புரிவது இல்லை. புரிந்தாலும், "இதெல்லாம்  நடை முறைக்கு சாத்தியம் இல்லை ..கேக்க நல்லா இருக்கும் , ஆனால் வாழ்க்கைக்கு ஒத்து வருமா என்று தெரியாது " என்று தள்ளி வைத்து விட்டு நம் வேலையை பார்க்கப் போய் விடுகிறோம்.

முதலில் தூக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும். நம்மைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்று அறிய வேண்டும். சூழ்நிலையை அறிந்தால் அல்லவா நம்மை அறிய முடியும்.

பறவைகள் கத்துகின்றன. தயிர் கடையும் சத்தம் கேட்கிறது. நகைகள் ஒன்றோடு ஒன்று உரசும் சப்த்தம் கேட்கிறது.

இதெல்லாம் தேவை இல்லாத சத்தங்கள். டிவி செய்திகள் போல. எங்கோ யாரோ யார் கூடவோ ஏதோ செய்தார்கள் என்றால் அதை ஏன் நேரம் செலவழித்து கேட்க வேண்டும். அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள்  உட்கார்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள். விடாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

இது ஒரு வகை சத்தங்கள்.

இன்னொரு புறம், வாட்ஸாப்ப், youtube , instagram , facebook என்று இடைவிடாத சத்தங்கள். அதையும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். இந்த சத்தங்களினால்  ஏதாவது ஒரு பலன் உண்டா என்றால் ஒன்றும் இல்லை.

அவற்றையும் தாண்டி, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நல்ல விஷயங்கள் நடக்கின்றன.

இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை தரும் செய்திகள் இருக்கின்றன. அவற்றை கேட்க வேண்டும்.

ஆண்டாள் கையாளும் சொற்களைப் பாருங்கள்:

- பறவைகள் பேசும் பேச்சு - அரவம் (ஓசை)
- தயிர் கடையும் ஓசை - தயிரரவம்
- கேசவனை பாடவும் - கேசவனை பற்றி சொல்லும் போது அது அரவம் இல்லை, பாடல்.

இவற்றை எல்லாம் கேட்காமல் படுத்து உறங்குகிறாயே "பேய் பெண்ணே" என்கிறாள்.

பேயின் குணம், பிடித்தால் விடாது. பேய் பிடித்தவர்கள் என்று சொல்லுவதை கேட்டு இருப்பீர்கள்.

சிலர் தான் கொண்டதே சரி என்று இருப்பார்கள். அது பேய் குணம். ஆராய வேண்டும். அறிந்து கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்தது மட்டும்தான் சரி என்று நினைப்பது பேய் குணம்.

மூட நம்பிக்கைகளை விட்டு வெளியே வா, என் பாவாய் என்று அழைக்கிறாள்  ஆண்டாள்.

தேவை இல்லாததை கேட்பதை நிறுத்த வேண்டும். நம் வாழ்க்கை நல்ல சொற்களினால், இசையால், உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்தும் பேச்சுக்களால்  நிறையட்டும்.

தேவை இல்லாத குப்பைகளை மண்டைக்குள் போட்டு திணிப்பானேன்?

முதலில், மண்டைக்குள் இருக்கும் குப்பைகளை அள்ளி வெளியே போடுங்கள்.

இனி குப்பை சேர்ப்பதில்லை என்று முடிவு செய்யுங்கள்.

நல்லதை மட்டுமே சேர்ப்பது என்று முடிவு செய்யுங்கள்.

வாழ்வு சிறக்கும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/01/blog-post.html