Monday, January 29, 2024

திருக்குறள் - தன்னுயிர் அஞ்சும் வினை

 திருக்குறள் - தன்னுயிர் அஞ்சும் வினை



தவறு ஏன் நிகழ்கிறது? அருள் இல்லாமையால்.


அது எப்படி ? அருளுக்கும், தவறுக்கும் என்ன சம்பந்தம்?


ஒருவன் தவறு செய்கிறான் என்றான் அதனால் யாருக்கோ பாதிப்பு இருக்கத்தானே செய்யும். 


திருட்டு, இலஞ்சம், கொலை, கொள்ளை, போன்ற எந்த குற்றம் செய்தாலும் அதனால் யாருக்கோ ஒரு பாதிப்பு இல்லாமல் இருக்காது. மற்ற உயிர்கள் மேல் எல்லாம் கருணை இருந்தால் எப்படி தவறு செய்ய முடியும். 


அன்பு கொண்ட ஒருவரை அடிக்க முடியுமா? அவர்கள் மேல் கடுமையான வார்த்தைகள் பேச முடியுமா? அவர்களிடம் இருந்து திருட முடியுமா? அவர்களை கொலை செய்ய முடியுமா?


அருள் இல்லாமைதான் அனைத்து குற்றங்களுக்கும் காரணம். 


அருள் இல்லாமை ஒரு காரணம் என்றால், அறிவீனம் இன்னொரு காரணம். 


தவறு செய்ய பயம் இல்லாத தன்மை. மாட்டிக் கொள்ள மாட்டோம் என்ற தைரியம். மாட்டினாலும் எப்படியாவது வெளியே வந்து விடலாம் என்ற நம்பிக்கை. யாருக்கும் தெரியாது என்ற நினைப்பு. 


யாருக்குத் தெரியாவிட்டாலும், மனதுக்குத் தெரியும். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் தண்டனை கிடைத்தே தீரும் என்ற பயம் இருந்தால் குற்றம் செய்யத் தோன்றுமா?  


அருள் இருந்தால் குற்றம் செய்ய முடியாது. குற்றம் செய்யாவிட்டால் தண்டனை வருமோ என்ற பயம் இருக்காது. 


எனவே பயம் இல்லாமல் வாழ வேண்டுமா? அருள் மனதில் நிரம்பி இருக்க வேண்டும். 


பாடல் 



மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப

தன்னுயிர் அஞ்சும் வினை


பொருள் 


மன்னுயிர் = நிலைத்து வாழும் உயிர்களை 


ஓம்பி = போற்றி 


அருளாள்வாற்கு = அவற்றின் மேல் அன்பு செய்பவர்களுக்கு 


இல்என்ப = இல்லை என்று அறிவுடையவர்கள் சொல்லுவார்கள் 


தன்னுயிர் = அவர்களுடைய உயிர் 


அஞ்சும் வினை = பயப்படும் செயல் 


மன்னுதல் என்றால் நிலைத்து இருத்தல். உடல் அழியும். உயிர் நிலைத்து நிற்கும். எனவே "மன்னுயிர்" என்றார். 


உயிர்கள் அருள் செய்பவர்கள் அவ்வுயிர்களுக்கு துன்பம் செய்ய மாட்டார்கள். எனவே அவர்களுக்கு துன்பமும் வராது. துன்பம் வந்து விடுமோ என்ற அச்சம் தேவை இல்லை. 


இதில் இருந்து என்ன தெரிகிறது. எப்போதெல்லாம் நமக்கு துன்பம் வருகிறதோ, அப்போதெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டும் மனதில் அருள் இல்லாமல் யாருக்கோ தீங்கு செய்து இருக்கிறோம் என்று. மேலும், இனிமேல் துன்பம் வேண்டாம் என்றால் இப்போது இருந்தே உயிர்கள் மேல் அன்பு செலுத்த தொடங்க வேண்டும். 


"தன்னுயிர் அஞ்சும் வினை " என்றார். தன் உடல் அஞ்சும் வினை என்று சொல்லவில்லை. காரணம், உடல் அழிந்து விடும். இப்போது தவறு செய்தால், இந்த உயிர் மறு பிறவி எடுத்து அங்கு வருந்தும். அப்போது தெரியாது...நமக்கு ஏன் இந்தத் துன்பம் வந்தது. என்றோ செய்த வினை, இப்போது வருகிறது. எனவே, இப்போது அருள் செய்து வாழ்ந்தால் இனி வரும் பிறவிகளிலும் துன்பம் வராது. மகிழ்ச்சியாக இருக்கலாம். 


அப்புறம் உங்க இஷ்டம்.. 


Friday, January 26, 2024

கம்ப இராமாயணம் - சூர்பனகை - மானுடவர்க்கு ஆற்றாது

கம்ப இராமாயணம் -  சூர்பனகை - மானுடவர்க்கு ஆற்றாது


இலக்குவனால் மூக்கும், காதும், முலையும் துண்டிக்கப்பட்ட சூர்பனகை தன் அண்ணனான இராவணனை நினைத்து அழுகிறாள் ....


"இராவணா, நீ வாயு பகவானையும், அக்னி பகவானையும், கொடுமையான எமனையும், ஆகாயத்தையும், நவ கிரகங்களையும், ஆட்டிப் படைத்தாய். ஆனால், இன்று இந்த இரண்டு மானிடர்களுக்கு பயந்து சிவன் கொடுத்த வாளினையும் மறந்து பயந்து நின்று விட்டாயா?"


பாடல் 


 'காற்றினையும், புனலினையும், கனலினையும்,

     கடுங் காலக்

கூற்றினையும், விண்ணினையும், கோளினையும்,

     பணி கொண்டற்கு

ஆற்றினை நீ; ஈண்டு, இருவர்

     மானுடவர்க்கு ஆற்றாது

மாற்றினையோ, உன் வலத்தை? சிவன்

     தடக்கை வாள் கொண்டாய்!


பொருள் 


காற்றினையும் = காற்றின் கடவுளையும் (வாயு பகவான்)  

புனலினையும் = நீரின் கடவுளையும் (வருண பகவானையும்) 

கனலினையும் = தீயின் கடவுளையும் )அக்னி பகவானையும்) 

கடுங் காலக் கூற்றினையும் = கடுமையான கூற்றுவனையும் 


விண்ணினையும் = விண்ணுலகையும் 


கோளினையும் = ஒன்பது கிரகங்களையும் 


பணி கொண்டற்கு = உனக்கு வேலை செய்யும் படி 


ஆற்றினை நீ = வழி செய்தாய் நீ 


ஈண்டு = இன்று 


இருவர் = இரண்டு 


மானுடவர்க்கு  = மனிதர்களுக்கு 


ஆற்றாது = அடக்க முடியாமல் 


மாற்றினையோ = மாற்றி வைத்து விட்டாயா? 


உன் வலத்தை?  = உன் பலத்தை 


சிவன் = சிவனின் 


தடக்கை வாள் கொண்டாய்! - பெருமை கொண்ட வாளினைக் கொண்டாய் 


அவ்வளவு வலிமை இருந்தது உன்னிடம். சிவன் மேல் பக்தி கொண்டவன். சிவனிடம் தவம் செய்து வாளினைப் பெற்றவன். அப்பேற்பட்ட நீ இந்த மானிடற்கு பயந்து விட்டாயா?



Thursday, January 25, 2024

திருக்குறள் - இன்னா உலகம்

 திருக்குறள் - இன்னா உலகம் 


நாம் வாழும் இந்த உலகில் இன்பமும் துன்பமும் விரவிக் கிடக்கின்றன. 


அப்படி அல்லாமல், இன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகமோ, அல்லது துன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகமோ இருக்க முடியுமா?


முடியும் என்று நம்பியது நம் இலக்கியங்கள். 


இன்பம் மட்டுமே உள்ள உலகத்திற்கு சொர்க்கம் என்று பெயர். 


துன்பம் மட்டுமே உள்ள உலகிற்கு நரகம் என்று பெயர். 


மற்றபடி இரம்பை , திலோத்தமை, எண்ணெய் கொப்பரை எல்லாம் கொஞ்சம் கற்பனையாக இருக்கலாம். 


எல்லோருக்கும் சொர்கத்திற்கு போக வேண்டும் என்று விருப்பம் இருக்கும். யாருக்குமே நரகத்துக்கு போக ஆசை இருக்காது. 


அதை எப்படி நிறைவேற்றுவது? நரகத்துக்குப் போகாமல் எப்படி தப்புவது?


வள்ளுவர் வழி சொல்கிறார்...


"உன் மனதில் அருள் சேர்ந்து இருக்குமானால், நீ நரகுக்கு போக மாட்டாய்"


என்று. 


பாடல் 



அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்


பொருள் 


அருள்சேர்ந்த = அருள் நிறைந்த 


நெஞ்சினார்க்கு = நெஞ்சம் உடையவர்களுக்கு 


இல்லை = ஒருபோதும் நிகழாது 


இருள்சேர்ந்த = எப்போதும் இருள் சூழ்ந்து இருக்கும் 


இன்னா உலகம் = இனிமை இல்லாத உலகிற்குள் 


புகல் = செல்லுதல் 


எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி வந்தால், நரகம் போக வேண்டி வராது என்கிறார். 


அருள் இல்லை என்றால், நரகில் ஒரு இடம் உறுதி. 


                                                                                    


Wednesday, January 24, 2024

கார் நாற்பது - இன்னே வருவர் நமர்

 கார் நாற்பது - இன்னே வருவர் நமர் 


பருவ நிலைகள் நம் மனதைப்  பாதிக்கின்றன. 


மழைக் காலம் 


அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருக்கிறது. வானம் எப்போதும் மேகம் சூழ்ந்து இருண்டு இருக்கிறது. மரங்களும் செடிகளும் துளிர் விட்டு, மழையில் குளித்து பளிச்சென்று இருக்கின்றன. சில மரங்களிலும், செடிகளிலும் புது மொட்டுகள் மலரலாமா வேண்டாமா என்று மெல்ல எட்டிப் பார்க்கின்றன. வண்டுகள் ரீங்காரம் இடுகின்றன. காற்றில் ஈர மணம். 


காதலனை பிரிந்து இருக்கிறாள். அவன் மட்டும் இப்போது கூட இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து ஏங்குகிறாள். 


தூரத்தில் மின்னல் வெட்டுகிறது. 


அந்த மின்னல் அவன் வர இருக்கிறான் என்ற செய்தியை சொல்லவதாக அவளுக்குப் படுகிறது. அவன் அனுப்பிய தூது என்று நினைக்கிறாள். 


பாடல் 



கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த

நெடுங்காடு நேர்சினை யீனக் கொடுங்குழாய்

இன்னே வருவர் நமரென் றெழில்வானம்

மின்னு மவர்தூ துரைத்து


பொருள் 


கடுங்கதிர் = கடுமையான வெப்பம் 

 

நல்கூரக் = நல்குரவு என்றால் வறுமை. கோடைக் காலம் வறுமை அடைந்தது என்றால், வெயில் குறைந்து விட்டது என்று அர்த்தம். கோடைக் காலம் போய் விட்டது. 


கார் = கார் காலம், அதாவது மழைக் காலம் 


செல்வ மெய்த = மேலும் மேலும் வலுப்பெற 


நெடுங்காடு = பெரிய காடு 


நேர் = நேர்த்தியான 


சினை யீனக் = சினை என்றால் உறுப்பு. இங்கே காட்டில் உள்ள மரம், செடி, கொடிகளின் உறுப்பான மலர்கள். மலர்கள் மொட்டு விட்டு பூக்கத் தொடங்கி விட்டன. 


கொடுங்குழாய் = வளைந்த காதணியை அணிந்தவளே 


இன்னே வருவர் = இப்போதே வருவார்  


 நமரென் றெழில்வானம் = நமர் + என்று + எழில் + வானம் = நம் துணைவர் இப்போதே வருவார் என்று அழகான வானம் 


மின்னு மவர்தூ துரைத்து = மின்னும் அவர் தூது உரைத்து = மின்னல் மூலம் அவர் சொல்லி அனுப்பிய தூதினை என்னிடம் சொல்லி 


இப்படி ஒரு நாற்பது பாட்டு இருக்கிறது. அத்தனையும் காதலை, பிரிவை, இயற்கையை ஒட்டிய வாழ்வை சித்தரிக்கும் பாடல்கள். 


Tuesday, January 23, 2024

திருக்குறள் - அருளுடைமை - அஃதே துணை

 திருக்குறள் - அருளுடைமை - அஃதே துணை

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_23.html


உலகில் எத்தனையோ சமயங்கள் இருக்கின்றன. அது தவிர வேறு பல மார்கங்களும் இருக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு நிற்கின்றன. எது சரி, எது தவறு என்று சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. 

என் சமயம்தான் பெரியது, என் கடவுள்தான் உயர்ந்தவர் என்று சண்டை போட்டுத் திரிகிறார்கள். 


அவர்கள் மேல் தவறு சொல்ல முடியாது. மதங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட கருத்துகளைச் சொன்னால், பாமர மனிதன் என்ன செய்வான்?


மதங்கள் எவ்வளவுதான் வேறுபட்டாலும், ஒரு விடயத்தில் அனைத்து மதங்களும் ஒன்று படுகின்றன. அது என்ன விடயம் என்றால் 


"உயிர்களிடத்து அன்பு செய்"


என்ற ஒரு கட்டளையில் எல்லா மதங்களும் ஒரு புள்ளியில் நிற்கின்றன. 


அன்பு, கருணை, அருள் என்ற விடயத்தில் எல்லா மார்கங்களும் ஒன்றாக நிற்கின்றன. 


நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, உயிர்களிடத்து அன்பு செய் என்று உங்கள் மதமும் போதிக்கும்.  அதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. 


பாடல் 

நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்

தேரினும் அஃதே துணை


பொருள் 


நல்லாற்றான் = நல்ல வழிகளில் 


நாடி = தேர்ந்து எடுத்து 


அருளாள்க = அருள் செய்க 


பல்லாற்றான் = பலவழிகளில் 


தேரினும் = ஆராய்ந்து பார்த்த பின்னும் 


அஃதே துணை = அதுதான் உயிருக்கு சிறந்த துணை 


இந்த குறளுக்கு பரிமேலழகர் செய்திருக்கும் நுட்பமான உரையை பார்ப்போம். அவர் மட்டும் இல்லை என்றால் நமக்கு இதெல்லாம் புரிந்தே இருக்காது. 


நல்லாற்றான் = நல்ல வழிகளில். 


அது என்ன நல்ல வழி? 


நல்ல வழி என்பதை இரு கூறாக பிரிக்கிறார் பரிமேலழகர்.


அளவையின் மூலம் அறிந்து கொள்வது. பொருத்தம் அறிந்து செய்வது என்று. 


அளவை என்றால் என்ன?


எது ஒன்றும் சரியா தவறா என்று எப்படி அரிவது? அளந்து பார்க்க வேண்டும். ஒரு அளவுகோல் வேண்டும் அல்லவா? அது போல் நாம் தேர்ந்து எடுத்த பாதை சரியா அல்லது தவறா என்று எப்படி அறிந்து கொள்வது?


அதற்கு மூன்றுவிதமான அளவைகள் இருக்கின்றன. அவற்றை பிரமாணங்கள் என்பார்கள்.  


காட்சி பிரமாணம் (காண்டலளவை )

அனுமானப் பிரமாணம்  (கருத்தலளைவை)

ஆகமப் பிரமாணம் என்று  (சப்தலளைவை - ஞானிகள், பெரியவர்கள் சொல்லக் கேட்பது) 


தானே கண்டு உணர்வது. அருள் உடைய பெரியவர்கள் எப்படி வாழ்கிறார்கள், அவர்கள் வாழ்வு சிறந்து இருக்கிறதா நேரடியாக பார்த்து அறிவது. 


அடுத்தது யூகித்து அறிவது. வள்ளலாரை நாம் பார்த்தது இல்லை. ஆனால் அவர் உயிர்கள் மேல் அருள் கொண்டு இருந்தார் என்று எப்படி அறிகிறோம்? அவரது பாடல்கள் மூலம் அவர் ஒரு  அருளாளர் என்று அனுமானிக்கிறோம். 


மூன்றாவது, பெரியவர்கள் சொல்லக் கேட்பது. ஞானிகள், தவ சீலர்கள் சொல்லக் கேட்பது. 


இந்த மூன்று வழிகளால் ஆராய்ந்து பின், அது பொருந்துமா, பொருந்தாதா என்று அறிந்து செய்வதைத்தான் "நல்லாற்றான்" என்கிறார். 


இப்படி ஆழமாக ஆராய்ந்த பின்னும், எல்லா மதங்களும் வேறு பல விடயங்களில் வேறு பட்டாலும், உயிர்கள் மேல் அன்பு செலுத்த வேண்டும் என்ற ஒரு கொள்கையில் எல்லோரும் ஒன்றாக நிற்கிறார்கள் 


சரி, அது என்ன "அஃதே துணை " என்றால் என்ன?


உயிர்கள் மேல் அன்பு செலுத்துவது இம்மைக்கும், மறுமைக்கு இன்பம் தருவதால், அதை துணை என்றார். 


அன்பு விரிந்து அருளாகட்டும் !



Sunday, January 21, 2024

தனிப்பாடல் - பலபட்டடைச் செக்கநாதப் புலவர்

 

தனிப்பாடல் - பலபட்டடைச் செக்கநாதப் புலவர்

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_21.html



தமிழில் பல புலவர்கள் பாடிய பாடல்கள், ஒரு தனிப்பட்ட நூலாக அல்லாமல் தனிப்பாடல் திரட்டாக இருக்கின்றன. மிகவும் சுவையான, எளிமையான பாடல்கள். 


அதில் பலபட்டடைச் செக்கநாதப் புலவர் என்பவர் என்பவர் பாடிய ஒரு அழகான பாடல். 


ஒரு பெரிய ஆளிடம் காரியம் ஆக வேண்டும் என்றால், அந்த வீட்டு அம்மாவைப் பிடித்து, "ஐயாகிட்ட நீங்க தான் எப்படியாவது எடுத்துச் சொல்லி, இதை நடத்திக் கொடுக்கணும்" என்று சிலர் வீட்டுத் தலைவி மூலம் காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பார்கள். 


அவ்வளவு ஏன், பையன் கொஞ்சம் பணம் வேண்டும் என்றால், அம்மாவிடம் சொல்லி,  "அப்பா கிட்ட சொல்லி எனக்கு பணம் வாங்கித்தா" என்று கேட்பது இல்லையா? 


அம்மாவுக்கு இளகிய மனது. அப்பாவுக்கு கொஞ்சம் கரடு முரடான மனது. 


சொக்கநாத புலவர் பார்வதியிடம் கூறுகிறார்....


"முத்துப் பந்தலின் கீழ் மென்மையான பஞ்சனை மேல் உன் அருகில் வந்து "எனக்கு ஒரு முத்தம் தா " என்று உன் கணவன் உன்னைக் கொஞ்சும் போது, நீ அவரிடம் என் குறைகளை மெல்ல மெல்ல எடுத்துச் சொல்லேன். சொன்னால் உன் வாய் முத்து உதிர்ந்து விடுமா ?"


பாடல் 

 


"ஆய்முத்துப் பந்தரின் மெல்லணை மீது,

     உன் அருகு இருந்து,

"நீ முத்தம் தா" என்று அவர் கொஞ்சும்

     வேளையில், நித்தம் நித்தம்

வேய்முத்தரோடு என் குறைகள் எல்லாம்

     மெல்ல மெல்லச் சொன்னால்,

வாய்முத்தம் சிந்திவிடுமோ?

     நெல்வேலி வடிவன்னையே."



பொருள் 

"ஆய்முத்துப்  = ஆராய்ந்து எடுக்கப்பட்ட முத்துக்கள் கோர்த்த 


பந்தரின் = பந்தலின் கீழ் 


மெல்லணை = மெல்லிய படுக்கை 


மீது  = மேல் 


உன் அருகு இருந்து = உனது அருகில் வந்து 


"நீ முத்தம் தா"  என்று = நீ முத்தம் தா  என்று 


 அவர் கொஞ்சும் = அவர் உன்னைக் கொஞ்சும் போது 


வேளையில் = அந்த வேளையில் 


நித்தம் நித்தம் = தினமும் 


வேய்முத்தரோடு = மூங்கில் முத்து போன்ற சிவனிடம் 


என் குறைகள் எல்லாம் = என்னுடைய குறைகள் எல்லாம் 


மெல்ல மெல்லச் சொன்னால் = மெல்ல மெல்ல சொன்னால் 


வாய்முத்தம் = உன் வாயில் உள்ள முத்தம் 


சிந்திவிடுமோ? = சிந்தி விடுமோ ?



     நெல்வேலி வடிவன்னையே."


Saturday, January 20, 2024

திருக்குறள் - அருளுடைமை - செல்வத்துள் செல்வம்

 திருக்குறள் - அருளுடைமை - செல்வத்துள் செல்வம் 


https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_20.html


திருக்குறள் என்ற நூலை மூன்று பெரும் பிரிவுகளாக வள்ளுவர் பிரிக்கிறார். 


அறம்

பொருள் 

இன்பம் 


என்று. இந்த மூன்றுக்கும் பால் என்று பெயர். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப் பால். 


அறத்துப் பாலை மூன்று  பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார்.  அந்தப் பிரிவுகளுக்கு இயல் என்று பெயர். 


பாயிர இயல், இல்லறவியல், துறவறவியல் என அப்பிரிவுகள் அழைக்கப்படும். 


நாம் பாயிரம், இல்லறம் பற்றி சிந்தித்து விட்டோம். 


இனி துறவுக்குள் நுழைகிறோம்.


துறவறம் என்பதை இரண்டாகப் பிரிக்கிறார்கள். விரதம், ஞானம் என்று. 


இதில், விரதத்தில் பலவிதமான விரதங்கள் உண்டு என்றாலும் அதில் சிறப்பான சிலவற்றை சொல்ல ஆரம்பிக்கிறார். 


அதில் முதலாவது அருளுடைமை. 


அருளுடைமை என்றால் என்ன?


நமக்கு தொடர்பு உள்ளவர்கள் மேல் நாம் காட்டும் கருணை, பரிவு அன்பு எனப்படும். என் மனைவி/கணவன், பிள்ளைகள், உடன் பிறந்தோர் இதில் அடங்குவர்.


தொடர்பு இல்லாதவர்கள் மேல் காட்டும் கருணை அருள் எனப்படும். என் பையனுக்கு ஒரு மிட்டாய் வாங்கித் தருகிறேன். அதை ருசித்து அவன் மகிழ்கிறான். அதைப் பார்த்து நான் மகிழ்கிறேன். அப்போது அந்தக் கடை வாசலில் ஒரு ஏழைப் பையன் ஏக்கத்தோடு என் மகன் மிட்டாய் சாப்பிடுவதை பார்க்கிறான். அந்த ஏழைப் பையன் மேல் பரிதாபம் கொண்டு அவனுக்கும் ஒரு மிட்டாய் வாங்கித்தந்தால் அது அருள். 


என் மகன் மேல் நான் செலுத்துவது அன்பு. 

அந்த ஏழைப் பையன் மேல் நான் செலுத்துவது அருள். 


அதில் முதல் குறள்

பாடல் 


அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள


பொருள் 


அருட்செல்வம் = அருளாகிய செல்வம் 


செல்வத்துள் செல்வம் = செல்வத்துள் எல்லாம் பெரிய செல்வம் 


பொருட்செல்வம் = பொருளாகிய செல்வம் 


பூரியார் கண்ணும் உள = இழிந்தவர் இடத்திலும் இருக்கும் 


மேலோட்டமாய் பார்த்தால் மிக எளிமையான, பெரிய ஆழ்ந்த அர்த்தம் இல்லாத குறள் போலத் தெரியும். 


வாருங்கள்,உள்ளே செல்வோம். 


பொருள் செல்வம் புரிகிறது. வீடு, மனை, நகை, கார், வங்கிக் கணக்குகள் என்று நாம் புரிந்து கொள்கிறோம். 


அது என்ன அருள் செல்வம்?  அருள் செய்யலாம். அது எப்படி செல்வமாக முடியும்?


செல்வம் என்றால் என்ன? ஏதோ ஒருவிதத்தில் நமக்கு இன்பம் தருவதைத்தானே நாம் செல்வம் என்போம். நம்மிடம் ஒரு கார் இருக்கிறது. எப்ப அதை எடுத்தாலும் ஏதாவது ஒரு கோளாறு. ஓடுவது கிடையாது, ரொம்ப சத்தம் வரும், பிரேக் பிடிக்காது என்று இருந்தால், அதை செல்வம் என்போமா? "இந்தச் சனியனை கட்டிக்கொண்டு ..." என்று சலிப்போம் அல்லவா?  செல்வம் என்றால் சுகம் தர வேண்டும். 


பொருள் செல்வத்தால் சுகம் வரும். ஆனால், சிக்கலும் வரும். பயம் வரும். சில சமயம் அது நம்மை விட்டுப் போய் விடலாம். 


ஆனால், அனைத்து உயிர்களையும் போற்றி, அவைகளுக்கு நன்மை தருவதால் வரும் இன்பம் இருக்கிறதே, சுகம் இருக்கிறதே, அது தான் அருளலால் வரும் செல்வம். அது இம்மைக்கு மட்டும் அல்ல, மறுமைக்கு நன்மை தருவது. வீடு பேற்றையும் தரும். எனவே, அருளை செல்வம் என்றார். 


சரி, அதை செல்வம் என்று ஏற்றுக் கொண்டாலும், மற்ற எல்லா செல்வத்தையும் விட, இதுதான் உயர்ந்த செல்வம் என்று எப்படி கூற முடியும்?


நம்மிடம் ஒரு விலை உயர்ந்த கார் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நினைத்து நாம் பெருமைப் படுகிறோம். தெருவில் நம் வண்டியைப் பார்த்து மற்றவர்கள் வியப்பதை கண்டு உள்ளுக்குள் மகிழ்கிறோம். வீடு, கார், நகை எல்லாம் அப்படித்தான்.


ஆனால், அதே போல் கார் நிறைய பேரிடம் இருந்தால் என்ன ஆகும். நாம் சாதாரண ஆளாகி விடுவோம். அதில் ஒரு பெருமையும் இல்லை. பணமும் பொருளும் யார் வேண்டுமானாலும் சேர்த்து விடலாம். திருடன், அயோக்கியன் இடம் கூட பெரும் செல்வம் இருக்க வாய்ப்பு உண்டு. 


இந்த அருளாகிய செல்வம் இருக்கிறதே, அது எல்லோரிடமும் இருக்காது. 


அருள் செல்வம் பெற முதலில் அறிவு வேண்டும். மன மாசுகள் நீங்க வேண்டும், அன்பு நிறைய வேண்டும், அருள் பெருக வேண்டும்.  எளிதான காரியம் அல்ல. ஒருவனிடம் அருள் செல்வம் இருக்கிறது என்றால், அது மற்றவர்களால் எளிதாக அடைய முடியாத செல்வம். எனவே அது உயர்ந்த செல்வம். 


அது மட்டும் அல்ல, எவ்வளவு பொருள் சேர்த்தாலும், நாம் இறந்த பின் அதில் ஒரு குன்றுமணியைக் கூட கொண்டு செல்ல முடியாது. எல்லாவற்றையும் விட்டு விட்டுத்தான் செல்ல முடியும். 


ஆனால், அருள் செல்வம் இருக்கிறதே, அது மறுமைக்கும் பயன் தரும். 


எனவே அது உயர்ந்த செல்வம். 


மேலும் சிந்திப்போம்.