Monday, January 29, 2024

திருக்குறள் - தன்னுயிர் அஞ்சும் வினை

 திருக்குறள் - தன்னுயிர் அஞ்சும் வினை



தவறு ஏன் நிகழ்கிறது? அருள் இல்லாமையால்.


அது எப்படி ? அருளுக்கும், தவறுக்கும் என்ன சம்பந்தம்?


ஒருவன் தவறு செய்கிறான் என்றான் அதனால் யாருக்கோ பாதிப்பு இருக்கத்தானே செய்யும். 


திருட்டு, இலஞ்சம், கொலை, கொள்ளை, போன்ற எந்த குற்றம் செய்தாலும் அதனால் யாருக்கோ ஒரு பாதிப்பு இல்லாமல் இருக்காது. மற்ற உயிர்கள் மேல் எல்லாம் கருணை இருந்தால் எப்படி தவறு செய்ய முடியும். 


அன்பு கொண்ட ஒருவரை அடிக்க முடியுமா? அவர்கள் மேல் கடுமையான வார்த்தைகள் பேச முடியுமா? அவர்களிடம் இருந்து திருட முடியுமா? அவர்களை கொலை செய்ய முடியுமா?


அருள் இல்லாமைதான் அனைத்து குற்றங்களுக்கும் காரணம். 


அருள் இல்லாமை ஒரு காரணம் என்றால், அறிவீனம் இன்னொரு காரணம். 


தவறு செய்ய பயம் இல்லாத தன்மை. மாட்டிக் கொள்ள மாட்டோம் என்ற தைரியம். மாட்டினாலும் எப்படியாவது வெளியே வந்து விடலாம் என்ற நம்பிக்கை. யாருக்கும் தெரியாது என்ற நினைப்பு. 


யாருக்குத் தெரியாவிட்டாலும், மனதுக்குத் தெரியும். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் தண்டனை கிடைத்தே தீரும் என்ற பயம் இருந்தால் குற்றம் செய்யத் தோன்றுமா?  


அருள் இருந்தால் குற்றம் செய்ய முடியாது. குற்றம் செய்யாவிட்டால் தண்டனை வருமோ என்ற பயம் இருக்காது. 


எனவே பயம் இல்லாமல் வாழ வேண்டுமா? அருள் மனதில் நிரம்பி இருக்க வேண்டும். 


பாடல் 



மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப

தன்னுயிர் அஞ்சும் வினை


பொருள் 


மன்னுயிர் = நிலைத்து வாழும் உயிர்களை 


ஓம்பி = போற்றி 


அருளாள்வாற்கு = அவற்றின் மேல் அன்பு செய்பவர்களுக்கு 


இல்என்ப = இல்லை என்று அறிவுடையவர்கள் சொல்லுவார்கள் 


தன்னுயிர் = அவர்களுடைய உயிர் 


அஞ்சும் வினை = பயப்படும் செயல் 


மன்னுதல் என்றால் நிலைத்து இருத்தல். உடல் அழியும். உயிர் நிலைத்து நிற்கும். எனவே "மன்னுயிர்" என்றார். 


உயிர்கள் அருள் செய்பவர்கள் அவ்வுயிர்களுக்கு துன்பம் செய்ய மாட்டார்கள். எனவே அவர்களுக்கு துன்பமும் வராது. துன்பம் வந்து விடுமோ என்ற அச்சம் தேவை இல்லை. 


இதில் இருந்து என்ன தெரிகிறது. எப்போதெல்லாம் நமக்கு துன்பம் வருகிறதோ, அப்போதெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டும் மனதில் அருள் இல்லாமல் யாருக்கோ தீங்கு செய்து இருக்கிறோம் என்று. மேலும், இனிமேல் துன்பம் வேண்டாம் என்றால் இப்போது இருந்தே உயிர்கள் மேல் அன்பு செலுத்த தொடங்க வேண்டும். 


"தன்னுயிர் அஞ்சும் வினை " என்றார். தன் உடல் அஞ்சும் வினை என்று சொல்லவில்லை. காரணம், உடல் அழிந்து விடும். இப்போது தவறு செய்தால், இந்த உயிர் மறு பிறவி எடுத்து அங்கு வருந்தும். அப்போது தெரியாது...நமக்கு ஏன் இந்தத் துன்பம் வந்தது. என்றோ செய்த வினை, இப்போது வருகிறது. எனவே, இப்போது அருள் செய்து வாழ்ந்தால் இனி வரும் பிறவிகளிலும் துன்பம் வராது. மகிழ்ச்சியாக இருக்கலாம். 


அப்புறம் உங்க இஷ்டம்.. 


1 comment:

  1. உண்மையான த த்துவம்.

    ReplyDelete