Monday, January 8, 2024

திருக்குறள் - துறவறம் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - துறவறம் - ஒரு முன்னோட்டம் 


நமக்கும் துறவறத்துக்கும் என்ன சம்பந்தம்?


நாம் என்ன துறவியாகப் போகிறோமா? அந்த எண்ணம் துளியும் நமக்கு இல்லை. பின் எதற்கு துறவறம் பற்றி நாம் படிக்க வேண்டும்?  துறவியாக போக விரும்புபவர்கள் படிக்கட்டுமே என்று நினைக்கத் தோன்றும். 


சற்று பொறுங்கள். 


ஏன் துறவறம் பற்றி படிக்க வேண்டும் என்று சொல்லுகிறேன். 


நாம் எல்லோருமே துறவிகள்தான். 


துறவு என்றால் என்ன? ஏதோ ஒன்றை துறப்பதுதானே ?


சிறு வயதில் பொம்மைகள் வைத்து விளையாடினோம். பின் அவற்றைத் துறந்தோம். 


பின் கோலி குண்டு, கிட்டிப் புள், பம்பரம், பட்டம் என்று விளையாடினோம். பின் அவற்றைத் துறந்தோம். 


பின் சைக்கிள், அதையும் துறந்தோம். 


இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒன்றை துறந்து கொண்டேதானே இருக்கிறோம். இல்லை, எதையுமே நான் துறக்க மாட்டேன் என்று இன்றும் சொப்பு சட்டி வைத்து விளையாடினால் எப்படி இருக்கும்?


ஏன் துறந்தோம்?  அறிவு வளர்ச்சி, மன வளர்ச்சி அடைவதால் துறந்தோம். எனவே துறவு என்பது மன, அறிவு வளர்ச்சியின் அடையாளம். 


இரண்டாவது, சில விடயங்களை நாம் நன்மை நோக்கி துறக்கிறோம். உதாரணமாக, வயதானால், இனிப்பை துறக்கிறோம். உடம்பு ஒத்துக் கொள்ளாது. சர்க்கரை வியாதி வரும். இனிப்பு கிட்ட கூட போகக் கூடாது என்று மருத்துவர் சொல்லி விடுகிறார். சரி, இனிமேல் காப்பியில் சர்கரை போடாமல் குடிப்போம் என்று சர்க்கரையை துறந்து விடுகிறோம் அல்லவா. அது நன்மை நோக்கி வந்த துறவு. 


துறவு ஆரோக்கியமான வாழ்வின் அடையாளம். 


சர்க்கரை என்பது ஒரு உதாரணம். பிள்ளைகள் மேல் உள்ள அதீத பாசம் மட்டுப் படும். இனி அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள் என்று விட்டு விலகத் தோன்றும். அதுவும் ஒரு துறவு தான். 


ஒரு துறையில் நாம் முன்னேற வேண்டும், சிறப்பாக வேண்டும் என்றால் என்ன செய்வோம். அந்தத் துறையில் பெயர் பெற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து, அதைப் போல் செய்ய முயற்சி செய்வோம் அல்லவா. வாழ்வை சிறப்பாக வாழ வேண்டும் என்றால் சிறப்பாக வாழ்பவர்கள், வாழ்ந்தவர்கள் யார் என்று பார்த்து அவர்களைப் போல வாழ முயற்சி செய்யலாம். அப்படி வாழ்ந்தவர்கள், வாழ்கிறவர்கள் துறவிகள். அவர்கள் வழிகாட்டிகள். 


எப்படியும் நாம் கொஞ்ச கொஞ்சமாக துறவில் ஈடுபடுகிறோம். அதையே சிறப்பாகச் செய்து விட்டால் என்ன?  


துறவு என்பது தனி வாழ்க்கை முறை அல்ல. துறவு என்பது இல்லறத்தின் தொடர்ச்சி. அவ்வளவுதான். 


வயதாக வயதாக நாம் விரும்புகிறோமோ இல்லையோ, துறவு என்பது தானே நம் மீது திணிக்கப்படும்.  உறவுகள் நம்மைத் துறக்கும், ஆரோக்கியம் நம்மைத் துறக்கும், செல்வம் ஒரு பொருட்டாகத் தெரியாது...வலிந்து திணிக்கப்படும் துறவை விட நாமே விரும்பி ஏற்றுக் கொள்ளும் துறவு சிறந்தது அல்லவா?  


துறவு என்றால் ஏதோ வாழ்வை உதறிவிட்டு ஓடிவிடுவது அல்ல. வாழ்வின் நீட்சி. அவ்வளவுதான். 


நான் சொல்வதை ஏற்க வேண்டும் என்று அல்ல. வள்ளுவர் என்ன சொல்கிறார் சிந்திப்போம். நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம். திறந்த மனத்துடன் இதை அணுகுவோம். 




 
















3 comments:

  1. சபாஷ். என் சிந்தனையின் எதிரொலி போல் உள்ளது... மிக்க நன்றி..

    ReplyDelete
  2. அருமை ....அருமை ....மிகஅருமை

    ReplyDelete
  3. மிக அருமையான தெளிவான விளக்கம். மிகவும் பிடித்த வரிகள்

    ReplyDelete