Thursday, January 25, 2024

திருக்குறள் - இன்னா உலகம்

 திருக்குறள் - இன்னா உலகம் 


நாம் வாழும் இந்த உலகில் இன்பமும் துன்பமும் விரவிக் கிடக்கின்றன. 


அப்படி அல்லாமல், இன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகமோ, அல்லது துன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகமோ இருக்க முடியுமா?


முடியும் என்று நம்பியது நம் இலக்கியங்கள். 


இன்பம் மட்டுமே உள்ள உலகத்திற்கு சொர்க்கம் என்று பெயர். 


துன்பம் மட்டுமே உள்ள உலகிற்கு நரகம் என்று பெயர். 


மற்றபடி இரம்பை , திலோத்தமை, எண்ணெய் கொப்பரை எல்லாம் கொஞ்சம் கற்பனையாக இருக்கலாம். 


எல்லோருக்கும் சொர்கத்திற்கு போக வேண்டும் என்று விருப்பம் இருக்கும். யாருக்குமே நரகத்துக்கு போக ஆசை இருக்காது. 


அதை எப்படி நிறைவேற்றுவது? நரகத்துக்குப் போகாமல் எப்படி தப்புவது?


வள்ளுவர் வழி சொல்கிறார்...


"உன் மனதில் அருள் சேர்ந்து இருக்குமானால், நீ நரகுக்கு போக மாட்டாய்"


என்று. 


பாடல் 



அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்


பொருள் 


அருள்சேர்ந்த = அருள் நிறைந்த 


நெஞ்சினார்க்கு = நெஞ்சம் உடையவர்களுக்கு 


இல்லை = ஒருபோதும் நிகழாது 


இருள்சேர்ந்த = எப்போதும் இருள் சூழ்ந்து இருக்கும் 


இன்னா உலகம் = இனிமை இல்லாத உலகிற்குள் 


புகல் = செல்லுதல் 


எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி வந்தால், நரகம் போக வேண்டி வராது என்கிறார். 


அருள் இல்லை என்றால், நரகில் ஒரு இடம் உறுதி. 


                                                                                    


No comments:

Post a Comment