Wednesday, February 1, 2017

இராமாயணம் - பரதன் குகன் - என் புகழ்கின்றது ஏழை எயினனேன்

இராமாயணம் - பரதன் குகன் -  என் புகழ்கின்றது ஏழை எயினனேன்


கானகம் சென்ற இராமனை மீண்டும் அழைத்து வர பரதன் கங்கை அடைந்தான். முதலில் அவனை தவறாக நினைத்த குகன், பின் அவன் எண்ணம் அறிந்து, "ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ " என்று பரதனை போற்றுகிறேன்.

குகன்மேலும் தொடர்கிறான்

"வானில் பல நட்சத்திரங்கள், நிலா போன்ற ஒளி விடும் பொருள்கள்  இருக்கின்றன.ஆனாலும், சூரியன் அவற்றின் ஒளியை எல்லாம் மங்கச் செய்து தான் மட்டும் பிரகாசமாய் ஒளி விடுவது போல, பரதா , உன் புகழ் உன் முன்னவர்களின் புகழை எல்லாம் ஒளி மழுங்கச் செய்து விட்டது"

பாடல்

என் புகழ்கின்றது ஏழை
    எயினனேன்? இரவி என்பான்
தன் புகழ்க் கற்றை மற்றை
    ஒளிகளைத் தவிர்க்குமா போல, 
மன் புகழ் பெருமை நுங்கள்
    மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன் புகழ் ஆக்கிக் கொண்டாய்
    உயர் குணத்து உரவு தோளாய்!




பொருள் 

என் புகழ்கின்றது = என்ன சொல்லி புகழ்வேன்

ஏழை எயினனேன்? = ஏழை வேடன்

இரவி என்பான் = சூரியன் என்பவன்

தன் புகழ்க் கற்றை = தன் புகழ் கற்றை  (ஒளி கற்றை என்று கொள்க)

மற்றை = மற்ற நட்சத்திரம், நிலா போன்றவற்றின்

ஒளிகளைத் = ஒளிகளை

தவிர்க்குமா போல = மறைத்து விடுவதைப் போல

மன் புகழ் = நிலைத்து நிற்கும் புகழ்

பெருமை = பெருமை

நுங்கள் = உங்கள்

மரபினோர் = முன்னோர்கள்

புகழ்கள் எல்லாம் = அனைத்துப் புகழையும்

உன் புகழ் ஆக்கிக் கொண்டாய் = உன்னுடைய புகழாக ஆக்கிக் கொண்டாய்

உயர் குணத்து = உயர்ந்த குணத்து

உரவு தோளாய்! = வலிமையான தோள்களை கொண்டவனே

தன்னுடைய உயர்ந்த குணத்தால் மற்றவர்களின் புகழை எல்லாம் மழுங்கச் செய்து விட்டான் பரதன்.

அரசை வேண்டாம் என்றான். அது என்னவோ அவனுக்கு உரிய அரசு அல்லதான். அதை திருப்பிக் கொடுத்தது பெரிய உயரிய குணமா ?

வேறு ஏதாவது குணம் இருக்கிறதா ?

பாப்போம்.






2 comments:

  1. இதை எல்லாம் படிக்கப் படிக்க, பரதன்தான் இராமயணத்தில் மிக உயர்ந்தவன் என்றே தோன்றுகிறது. அற்புதம்!

    ReplyDelete
  2. அருமை அருமை அருமை

    ReplyDelete