Showing posts with label Thiru Vaasgam. Show all posts
Showing posts with label Thiru Vaasgam. Show all posts

Sunday, December 20, 2020

திருவாசகம் - நான் யார் ?

திருவாசகம் - நான் யார் ?

நமக்கு ஊரில் உள்ள அனைவரையும் அறிந்து கொள்ள ஆசை. 

எந்த நடிகர்/நடிகை எந்தப் படத்தில் நடிக்கிறார்கள், அது எப்போது வெளி வருகிறது. 


நடிகர் இல்லாவிட்டால் அரசியல் தலைவர். இல்லை என்றால் ஆன்மீகத் தலைவர். அவர் எங்கே எப்போது உபன்யாசம் செய்யப் போகிறார். 

அதுவும் இல்லாவிட்டால் "என் மனைவியை புரிந்து கொள்ளவே முடியவில்லை", "அவருக்கு என்னதான் வேண்டும்", "வர வர இந்தக் காலத்துப் பிள்ளைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லை" ....

என்று மற்றவர்களை புரிந்து கொள்ளவே நாம் முயற்சி செய்கிறோம். அது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். 

நம்மை நாம் புரிந்து கொள்ள சிறிதும் முயற்சி செய்வது இல்லை. 


"என்னைப் பற்றி எனக்கு என்ன புரியாது. என்னைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும்" என்று நாம் நினைக்கிறோம். அது சரி அல்ல. நாம் நம்மை புரிந்து கொள்ள முயற்சி செய்வதே இல்லை. 


"நான் யார்" என்ற இரண்டு வார்த்தை தான் இரமண மகரிஷியின் உபதேசமாக இருந்தது. 

எப்போதாவது நாம் "நான் யார்" என்ற கேள்வியை கேட்டது உண்டா? 

நான் என்பது இந்த உடலா, நினைவா, உயிரா, உறவுகளின் கலவையா? கணவனா? மனைவியா? பிள்ளையா? அறிவாளியா? முட்டாளா? பணக்காரனா? ஏழையா?


நான் என்பது யார்? 


நமக்குள் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் பல விஷயங்களை திணித்து வைத்து இருக்கிரறார்கள். பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், நாம் பார்த்த சினிமாக்கள்,  படித்த புத்தகங்கள் என்று எல்லோரும் சேர்ந்து நம் மண்டைக்குள்   உட்கார்ந்து இருக்கிறார்கள். நான் என்பது தனி ஒருவன் இல்லை. பெரும் கும்பல் உள்ளே இருக்கிறது. 


இதில் உண்மையான நான் யார்?


நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா? நீங்கள் நம்பவில்லை, உங்களுக்கு சின்ன வயது முதல்  அப்படி நம்பும்படி சொல்லப் பட்டது. நீங்களும் அதை கடை பிடிக்கிறீர்கள். ஒரு நாத்திக குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இருந்தால், நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பீர்கள். நீங்கள் நம்புவது என்பது பெரிய விஷயம் இல்லை.  


சுத்த சைவம், ரொம்ப ஆச்சாரம், எல்லாமே கற்பித்தவை. நமது என்று சொந்தமாக  எதுவம் இல்லை.  சைவ வீட்டில் பிறந்ததால் நான் சைவமாக இருக்கிறேன். இதில் என் பெருமை என்ன? 


இந்த கும்பலை விரட்டி விட்டு யோசித்துப் பாருங்கள். நீங்கள் யார் என்று தெரியும். 


மாணிக்க வாசகர் தன்னைத்தானே கேட்கிறார்.  


"நான் யார்? என் உள்ளம் என்பது என்ன? என் அறிவு/ஞானம் என்பது என்ன? என்னை யார் அறிவார்" என்று. 


மாணிக்கவாசகருக்கு அந்த கேள்வி எழுந்து இருக்கிறது. 


பாடல் 


நானார்என் உள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார்

வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி

ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்

தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.


சீர் பிரித்த பின்


நான் யார் ? என் உள்ளம் யார் ? ஞானங்கள் யார் ? என்னை யார் அறிவார் ?

வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதி மயங்கி 

ஊனாரும் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் 

தேனார் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ 


என் ஞானங்கள் இல்லாமல் போனது.

இவை அனைத்தும் போன பின் என்னை யார் அறிவார் ? 

அந்த இறைவன் என்னை ஆட்கொள்ளவில்லை என்றால் இதுவெல்லாம் என்னவாகி இருக்கும் ?

ஆட் கொண்டபின் என்ன ஆயிற்று ?


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_20.html


click the above link to continue reading

நான் யார் ? = நான் யார்

என் உள்ளம் யார் ? = என் உள்ளம் யார்

ஞானங்கள் யார் ? = ஞானங்கள் யார் அல்லது எது 

என்னை யார் அறிவார் ? = என்னை யார் அறிவார் ?

வானோர் பிரான் = வானில் உள்ள பிரான்

என்னை ஆண்டிலனேல் = என்னைஆட் கொள்ளவில்லை என்றால்

மதி மயங்கி = மதி மயங்கி

ஊனாரும் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் = இறைச்சி இருந்த உடைந்த மண்டை ஓட்டில் பிச்சை எடுத்து உண்ணும் அம்பலத்தில் ஆடும் அவன்

தேனார் கமலமே = தேன் உள்ள தாமரை மலருக்கு

சென்று ஊதாய் கோத்தும்பீ = சென்று பாடுவாய் தும்பியே 


இறைவன் என்னை ஆட்கொள்ளமால் விட்டு விட்டால், நான் என்ன ஆகி இருப்பேன் என்று பதறுகிறார். 


தேடுங்கள். நீங்கள் யார் என்று அறிய முயற்சி செய்யுங்கள். 


Know Thyself என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். 


நம்மை அறிவதை விட்டு விட்டு, உலகில் உள்ள எல்லோரையும் அறிய நினைக்கிறோம்.  என்ன ஒரு அறிவீனம்.


Friday, September 4, 2020

திருவாசகம் - கையில் வாங்கவும் நீங்கி

திருவாசகம் - கையில் வாங்கவும் நீங்கி 


சிவ பெருமான் நேரில் வந்து, மாணிக்க வாசகருக்கு உபதேசம் தருகிறேன் என்றார்.

மாணிக்க வாசகருக்கு ஆயிரம் வேலை.  முதன் மந்திரி வேலையில் இருந்தார். எனவே, இறைவன் வந்ததையும், அருள் தர இருந்ததையும் தெரியாமல் கை நழுவ விட்டு விட்டார்.

பின் அதை நினைத்து நினைத்து புலம்பிய புலம்பலின் தொகுப்பு தான் திருவாசகம்.

உருகி உருகி பாடியிருக்கார்.

நீத்தல் விண்ணப்பம் என்ற அந்தாதியில் இருந்து ஒரு பாடல்


பாடல்

வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி, இப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய்? வெண் மதிக் கொழுந்து ஒன்று
ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோசமங்கைக்கு அரசே,
தெளிகின்ற பொன்னும், மின்னும், அன்ன தோற்றச் செழும் சுடரே.

பொருள்

( click the following link to continue reading )

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_4.html



வளர்கின்ற = எப்போதும் வளர்ந்து கொண்டு இருக்கின்ற

நின் கருணைக் கையில் = உன் கருணை நிறைந்த கைகளால்

வாங்கவும் = என்னை வாங்கி, அருள் தர நினைத்தாய். ஆனால் நானோ

நீங்கி = உன்னை விட்டு நீங்கி

இப்பால் = இந்த உலக வாழ்க்கையில்

மிளிர்கின்ற = கிடந்து வாழ்கின்ற

என்னை  = என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

வெண் மதிக் கொழுந்து ஒன்று = பிறை நிலவு ஒன்று

ஒளிர்கின்ற = ஒளி வீசும்

 நீள் முடி = நீண்ட சடை முடியை உடைய

உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே

தெளிகின்ற பொன்னும் = தெளிவான சிறந்த பொன் போலவும்

மின்னும் = மின்னல் போலவும்

அன்ன = போன்ற

தோற்றச் செழும் சுடரே. = தோன்றுகின்ற செழுமையான சுடரே

இதில் என்ன இருக்கிறது.  மாணிக்க வாசகருக்கு இறைவன் அருள் செய்த நினைத்தான்.  அவர் மறுத்து விட்டார். அதனால் புலம்புகிறார். அதனால் நமக்கு என்ன?

இதை நாம் ஏன் உட்கார்ந்து படிக்க வேண்டும். இதில் நமக்கு என்ன பயன்?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நாம் எவ்வளவு படிக்கிறோம்.   திருக்குறள், கம்ப இராமாயணம், ஆத்திச் சூடி,  கொன்றை வேந்தன்,  கீதை, மற்ற எத்தனையோ நல்ல நல்ல புத்தகங்கள் எல்லாம் படிக்கிறோம்.

படித்து விட்டு என்ன செய்கிறோம்?

செல் போனில் என்ன செய்தி வந்து இருக்கிறது,  என்ன ஜோக் வந்து இருக்கிறது என்று  பார்ப்போம் , இன்னைக்கு என்ன சமையல், அந்த fixed deposit  போடணும், அந்த பில் கட்டணும், அலுவலக வேலை, என்று நம்ம வேலையை பார்க்கப் போய் விடுகிறோம்.

ஒரு புத்தகம் நம் வாழ்க்கையை மாற்றக் கூடும். படித்துத் தள்ள வேண்டியது. ஒரு சதவீதம் கூட  அது நம்மை பாதிக்காமல் இருக்கும் படி பார்த்துக் கொள்வது.

மாணிக்க வாசகருக்கு இறைவன் அருள் செய்ய வந்தும், அவர் அதை கண்டு கொள்ளாமல்  குதிரை வாங்கப் போய்விட்டார்.

இத்தனை புத்தகங்களும் அருள் தர வரிசையில்  நின்று கொண்டு இருக்கின்றன.

எல்லாவற்றையும் எட்டி எட்டி பார்த்து விட்டு நாம் நம் குதிரைகளை பார்க்கப் போய் விடுகிறோம்.

மணி வாசகரை இறைவன் விடவில்லை. துரத்தி துரத்தி வந்து அருள் செய்தார்.

ஆனால், அதற்கு முன்னால் சிறைத் தண்டனை, சுடு மணலில் நிற்க வைத்தல் என்று  அத்தனை துன்பமும் பட்டார்.

தேவையா? 

முதலிலேயே கேட்டிருந்தால் இத்தனை துன்பம் வந்திருக்குமா?

அது இருக்கட்டும், ஏதோ மெசேஜ் வந்த மாதிரி இருக்கே, என்னனு பார்ப்போம்.



Thursday, July 16, 2020

திருவாசகம் - அஞ்சுமாறே

திருவாசகம் - அஞ்சுமாறே 


சமயப் பெரியவர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் கொண்ட மதமும் கடவுளும் தான் உயர்ந்தது, மற்றது எல்லாம் தாழ்ந்தது என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

உன் கடவுள் உயர்ந்தது என்று சொல்ல உனக்கு உரிமை இருக்கிறது. மற்றவன் கடவுளை தாழ்ந்தது என்று சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கிறது.

வைணவர்களை கேட்டால் பெருமாள் தான் உயர்வு மற்ற கடவுள் எல்லாம் தாழ்ந்தது என்பார்கள்.

சைவர்களை கேட்டால் சிவனுக்கு மிஞ்சிய கடவுள் ஒன்று இல்லை என்பார்கள்.

எல்லா மதத்திலும் இதே நிலை தான்.

இப்படி பெரியவர்கள் சொன்னதால், பின்னால் வந்தவர்கள் என் மதம், என கடவுள் என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

இது சரியா?

இறை தரிசனம் பெற்ற பெரியவர்கள், இப்படி சொல்லலாமா?  ஒன்றே கடவுள் என்று அவர்களுக்குத் தெரியாதா?

காரணம் இருக்கிறது.

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல பல வழிகள் இருக்கலாம். வழி கேட்பவனுக்கு ஒரு வழியைச் சொல்ல வேண்டும்.

"நீ இப்படிப் போகலாம், அப்படியும் போகலாம், இது அதைவிடச் சிறந்தது, ஆனால் அந்த நாலாவது வழி இருக்கே அதுல் இப்படி சில சௌகரியங்கள் இருக்கு "

என்று ஒரு பத்து வழி சொன்னால், கேட்டவன் குழம்பிப் போவான்.

சில பேர் எல்லா வழிகளையும் ஆராய்ந்து தனக்கு சௌகரியப் பட்ட  வழியை தேர்ந்து எடுப்பான்.   எல்லாராலும் முடியாது.

பத்து வழி சொன்னால், எதில் போவது என்று தெரியாமல் குழம்பி ஒரு வழியிலும் போக மாட்டான்.

எனவே தான், அடித்துச் சொன்னார்கள். இது தான், வேற வழியே கிடையாது. இதுல போனால் நீ போக வேண்டிய இடத்துக்கு போய் சேர்ந்து விடலாம்.

ஆனால், மக்களின் அறியாமை என்ன செய்வது. உன் வழி சரியா, என் வழி சரியா என்று சண்டை பிடித்துக் கொண்டு இருந்தார்கள். போகும் இடத்தை விட்டு விட்டு, எது நல்ல வழி என்று சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்கள். இருக்கிறார்கள்.

வழியா முக்கியம்? போய் சேரும் இடம் தானே முக்கியம்?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நமக்கு எதில் எல்லாமோ பயம் இருக்கிறது. இப்ப புதிதாய் இந்த வைரஸ். எப்ப நமக்கு வருமோ என்று பயமாக இருக்கிறது.

மணிவாசகர் எதற்கு பயப்பட்டார் தெரியுமா ?

"புற்றில் வாழும் பாம்புக்கு அஞ்ச மாட்டேன். ஒன்றும் தெரியாவிட்டாலும், எல்லாம் தெரிந்தது மாதிரி பேசும் பொய்யர்களின் பேச்சுக்கு பயப்பட மாட்டேன். சிவன் இருக்கும் போது மற்றும் ஒரு தெய்வம் என்று எண்ணி சிவனை அறியாமல் விடுபவர்களை கண்டால் எனக்கு பயமாக இருக்கிறது" என்கிறார்.

பாடல்


புற்றில்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும்அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்


புற்றில்வாள் = புற்றில் வாழும்

அரவும் = பாம்புக்கும்

அஞ்சேன் = அஞ்சேன்

 பொய்யர்தம்  = பொய் சொல்பவர்களின்

மெய்யும் = மெய் சொல்லுக்குச்

அஞ்சேன் = அஞ்சேன்

கற்றை = கற்றையாக இருக்கும்

வார் சடை = நீண்ட சடை முடியை கொண்ட

எம் அண்ணல் = எம் தலைவன்

கண்ணுதல் = நுதல் என்றால் நெற்றி. நெற்றியில் கண் கொண்ட அவர்

பாதம் நண்ணி = பாதத்தை பற்றி, நெருங்கி

மற்றும் ஓர் தெய்வந் தன்னை = மற்றும் ஒரு தெய்வம் தன்னை

உண்டென நினைந்து = உண்டு என்று நினைத்து

தெம் பெம்மாற் = எம் பெருமான்

கற்றிலா தவரைக் கண்டால் = அறியாதவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சு மாறே. = ஐயோ, நான் அச்சப் படுகிறேன்

ஒன்றைப் பிடித்தால், அதைப் பிடித்துக் கொண்டு போக வேண்டும்.

சிவன் என்றால் சிவன்.

திருமால் என்றால் திருமால்.

அலை பாயக் கூடாது.

இங்கு இருக்கும் போதே, ஒரு வேளை அந்தக் கடவுள் இன்னும் நல்லவரோ? வலிமையானவரோ என்று மனம் சிந்திக்கக் தொடங்கினால், ஒன்றும் நடக்காது.

அப்படி அங்கும் இங்கும் அலைபவர்களை கண்டால், எனக்கு பயமாக இருக்கிறது என்கிறார் மணிவாசகர்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_16.html

Friday, May 8, 2020

திருவாசகம் - வா என்ற வான் கருணை

திருவாசகம் - வா என்ற வான் கருணை 


மணிவாசகர் உயர் குடியில் பிறந்தவர். நன்கு படித்தவர்.பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தவர்.  தமிழில் புலமை பெற்றவர். ஊன் உருக,உயிர்  உருக பாடல்கள் பாடி இருக்கிறார்.

மாறாக,

கண்ணப்பன் வேடுவர் குலத்தில் பிறந்தவர். படிப்பறிவே இல்லாதவர்.  வேட்டை ஆடுவதும், உயிர் கொலை புரிவதும் தான் அவர் தொழில்.

மணிவாசகர் சொல்கிறார், "அந்த கண்ணப்பன் மாதிரி என்னால் அன்பு செய்ய முடியாமல் இருந்தும், என்னையும் நீ ஆண்டு கொண்டாயே, உன் கருணையை என்ன என்று சொல்வேன்" என்று உருகுகிறார்.

பாடல்

கண்ணப்பன் ஒப்பதோர்
    அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
    என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
    வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
    சென்றூதாய் கோத்தும்பீ 


பொருள்


கண்ணப்பன் = கண்ணப்பன்

ஒப்பதோர் = போல் ஒப்பு நோக்கக் கூடிய

அன்பின்மை  = அன்பு இன்மை. என்னிடம் அன்பு இல்லாமை

கண்டபின் = (இறைவா நீ) கண்டு கொண்ட பின்னும்

என்னப்பன் = என்னுடைய தந்தையான

என்னொப்பில் = என்னுடைய ஒப்பில்லாத ஒருவன்

என்னையும் = என்னையும்

ஆட் கொண்டருளி = ஆட்கொண்டு அருளி

வண்ணப் பணித்  = பணித்த வண்ணம்.

தென்னை = என்னை

வாவென்ற  = வா என்ற

வான் கருணைச் = வான் போல பரந்த கருணை

சுண்ணப்பொன் நீற்றற்கே = சுண்ணம் + பொன் + நீற்றற்கே. சுண்ணாம்பு போல வெண்மையான திரு நீற்றை அணிந்த பொன் போன்ற மேனி உடைய அவருக்கே

சென்றூதாய் கோத்தும்பீ  = சென்று ஊதுவாய் அரச தும்பியே


கடவுள் எங்கோ இருக்கிறார். எப்படியோ இருக்கிறார். நமக்கு ஒன்றும் தெரியாது.

அவருக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது என்று நாமே நினைத்துக் கொண்டு ஏதேதோ செய்கிறோம்.

அவருக்கு கொழுக்கட்டை பிடிக்கும்,  சுண்டல் பிடிக்கும்,  துளசி பிடிக்கும்,  வடை பிடிக்கும்,  பொங்கல் பிடிக்கும், தேங்காய், பழம் எல்லாம் பிடிக்கும் என்று  நாமே ஏதேதோ கற்பனை செய்து கொண்டு செய்கிறோம்.

நாம் வைக்கும் பொங்கலை வைத்துக் கொண்டு அவர் என்ன செய்யப் போகிறார்?

நாம், நமக்கு பிடித்ததை, அவருக்கும் பிடிக்கும் என்று நினைத்து படைக்கிறோம்.

கண்ணப்பன் அவருக்குப் பிடித்த மாமிசம், கறி போன்றவற்றை  இறைவனுக்கும் பிடிக்கும் என்று  படைத்தார்.

தவறு என்ன?  யாருக்குத் தெரியும் ஆண்டவனுக்கு என்ன பிடிக்கும் என்று? ஒருவேளை  கடவுள் non -வெஜிடேரியனாக இருந்தால்?

நாம் முகம் சுளிக்கிறோம்.

என்னது, சாமிக்கு போய் மாமிசம் படைப்பார்களா என்று?

கண்ணப்பனுக்கு முன்னால் , அந்தக் கோவிலில் தினம் பூஜை செய்யும் சிவ கோசரியார்   என்ற குருக்கள் ஆகம முறைப்படி பூஜை செய்து வந்தார்.

நீரால் அபிஷேகம் செய்வது, தூப தீபம் காட்டுவது, பொங்கல், பழம் போன்றவற்றை நைவேத்தியம் செய்வது என்று.

சிவன், அவருக்கு முக்தி கொடுக்கவில்லை. கண்ணப்பனுக்கு கொடுத்தார்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

கண்ணப்பன் செய்த பூஜையை கடவுள் ஏற்றுக் கொண்டார். காரணம், அவனிடம் இருந்த அன்பு.

அது போல, நான் செய்யும் பூஜையிலும் ஆயிரம் தவறு இருக்கலாம். அவற்றை மன்னித்து ஏற்று க்கொள்ள வேண்டும் என்றால், கண்ணப்பன் அளவு நானும்  அன்பு செய்ய வேண்டும். என் மனதில் அவ்வளவு அன்பு இல்லையே.  இருந்தும் என்னையும் ஒரு பக்தனாக ஏற்றுக் கொண்டு "வா" என்று அழைத்த   உன் கருணையை என்ன சொல்லுவேன் என்று உருகுகிறார்  மணிவாசகர்.

குலம் , பிறப்பு, படிப்பு, தொழில், அதிகாரம், செல்வாக்கு...எதுவும் இறைவனுக்கு பொருட்டு அல்ல.  அன்பு ஒன்றையே அவன் காண்கிறான்.

அன்பே சிவம்.

மத்தது எப்படி இருந்தாலும் பரவாயில்லை...அன்பு மட்டும் இருந்தால் போதும்.

அன்புதானே எல்லாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_8.html

Wednesday, November 13, 2019

திருவாசகம் - வாரா வழி அருளி

திருவாசகம் - வாரா வழி அருளி 


வழி என்றால் எங்கோ போவதற்கோ அல்லது எங்கிருந்தோ வருவதற்கோதான் இருக்க வேண்டும் அல்லவா.

இறைவன் "வாரா வழி"யை அருளுவானாம்.

அது என்ன வாரா வழி?

இறந்து, பின் இங்கு திரும்பவும் வாரா வழி.

இறைவன் இருக்கிறானா? அவனை எப்படி அடைவது என்று ஆதி நாள் தொட்டு மனிதன் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறான்.

மணிவாசகர் சொல்கிறார். "நீ போய் தேடினால் கிடைக்க மாட்டான். தேடுவதை முதலில் நிறுத்து" என்கிறார்.

எப்படித் தேடுவது? எதைத் தேடுகிறோம் என்று தெரிந்தால் அல்லவா அதைத் தேடி கண்டு பிடிக்க முடியும். இறைவன் எப்படி இருப்பான் என்று நமக்குத் தெரியாது. சினிமாவிலும், படத்திலும், சிலையிலும் இருப்பது போல இறைவன் இருப்பானா?

உலகத்தில் உள்ள எல்லோரும் தேடினார்கள். யாரும் அவனை காண முடியவில்லை.

ஆனால், "நமக்கு எளியன்" என்கிறார் மணிவாசகர். நமக்கு என்றால் அன்பர்களுக்கு.  அறிவு கொண்டு தேடாமல், அன்பு உள்ளம் கொண்டவர்களுக்கு  அவன் எளியன் என்கிறார்.

அவனே வந்து, என் உள்ளம் புகுந்து, வாரா வழி அருளி, என்னை பைத்தியமாகி, தீராத இன்பத்தைத் தந்தான் என்கிறார்.

அவர் அப்படி உருகி உருகி பாடிய பாடல், இதோ.

பாடல்


பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
ஆராலுங் காண்டற் கரியான் எமக்கெளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்.

பொருள்

பாரார் = பாரில் உள்ளவர்கள்

விசும்புள்ளார் = வானத்தில் உள்ளவர்கள்

பாதாளத் தார் = பாதாள உலகில் உள்ளவர்கள்

புறத்தார் = இவை அன்றி மற்ற உலகில் உள்ளவர்கள்

ஆராலுங் = யாராலும்

காண்டற் கரியான்  = காண்பதற்கு அரியவன்

எமக்கெளிய பேராளன் = எமக்கு எளிய பேராளன்

தென்னன் = தென்னாடுடையவன்

பெருந்துறையான் = திருப்பெருந்துறை என்ற இடத்தில் உறைபவன்

பிச்சேற்றி = பித்து ஏற்றி

வாரா வழியருளி  = மீண்டும் வந்து பிறக்காத வழியை அருளி

வந்தென்  = வந்து என்

உளம்புகுந்த = உள்ளத்தில் புகுந்த

ஆரா அமுதாய் = தீராத அமுதமாய்

அலைகடல்வாய் மீன்விசிறும் = அலைக்கடலில் வலை வீசி மீன் பிடிக்கும்  (திருவிளையாடல்)

பேராசை  வாரியனைப் = பெரிய அன்பு கொண்டவனை

பாடுதுங்காண் அம்மானாய். = அம்மானை சொல்லி பாடுவோம்


இறைவனை வெளியே  காண முடியாது.

"ஆராலுங் காண்டற் கரியான்"

ஏன், காண முடியாது?

வெளியே இருந்தால் அல்லவா காண்பதற்கு ? அவன் உள்ளே இருக்கிறான். எல்லோரும் வெளியே தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.


"வந்தென் உளம்புகுந்த"

அவன் வந்து உள்ளத்தில் புகுந்து கொள்கிறான்.

விளக்கிருக்க தீ தேடுவதை விட்டு விடவேண்டும்.

தேடல் நின்றால், தேடியது கிடைக்கும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_13.html

Tuesday, November 12, 2019

திருவாசகம் - அறைகூவி வீடருளும்

திருவாசகம் - அறைகூவி வீடருளும்


மருந்து கசக்கத்தான் செய்யும். கசப்பான மருந்தை உட்கொள்ள அதற்கு மேல் கொஞ்சம் இனிப்பை தடவி இருப்பார்கள். நாக்கில் பட்டவுடன் இனிப்பாக இருக்கும். அந்த இனிப்பு மருந்தை உட்கொள்ள கொடுத்த ஒரு உத்தி. மருந்தை உட்கொள்ள வேண்டுமே அல்லாது மாத்திரையின் மேல் உள்ள இனிப்பை மட்டும் நக்கி விட்டு, மாத்திரையை தூர எறிந்தால் அது எவ்வளவு அறிவுடைய செயலாகும்?

புராணங்களில் சில கதைகள் வரும். கதைகள் இனிப்பு போல. அதற்கு உள்ளே உள்ள அர்த்தத்தை கண்டு பிடிக்க வேண்டும்.

கதையோடு நின்று விடக் கூடாது.

சிவ பெருமானின் அடி முடி தேடி திருமாலும், பிரம்மாவும் சென்றார்கள் என்றும். அவர்களால் காண முடியாமல் திரும்பி வந்தார்கள் என்றும் ஒரு கதை உண்டு.

இந்த கதையை வைத்துக் கொண்டு, சிவன்தான் பெரியவர், மற்றவர்கள் சிறியவர்கள் என்று சிலர் பேசித் திரிகிறார்கள்.

கதை சொல்ல வந்த கருத்து என்ன?

திருமால், செல்வத்தின் கடவுளான இலக்குமியின் கணவன்.

ப்ரம்மா, அறிவின் கடவுளான சரஸ்வதியின் கணவன்.

இறைவனை அறிவாலும், செல்வத்தாலும் காண முடியாது என்பது கருத்து.

உண்டியலில் நிறைய பணம் போட்டால், கோவிலுக்கு நிலம் வழங்கினால்,  நிறைய   புத்தகங்கள் படித்துத் தெரிந்தால் இறைவனை அடைய முடியாது  என்று சொல்ல வந்த கதை அது.

யார் பெரியவர் , யார் சிறியவர் என்று சொல்ல வந்த கதை அல்ல.

வங்கி பெட்டகத்தில் சில பல கோடிகள் இருந்தால் இறைவனை அடைந்து விடலாம்  என்று நினைக்கக் கூடாது.

"ஏழை பங்காளனை பாடுதுங்காண் அம்மானாய் " என்பார் மணிவாசகர்.

"இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் " என்பது பிரபந்தம்.

பல பட்டங்கள் பெற்றால் இறைவனை  அறிந்து விடலாம் என்று நினைக்கக் கூடாது.


அது ஒரு புறம் இருக்கட்டும்.

பாடல்


செங்கண் நெடுமாலும் சென்றிடந்துங் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் அறைகூவி வீடருளும்
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணண் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.


பொருள்


செங்கண் = சிவந்த கண்களை உடைய

நெடுமாலும்= திருமாலும்

சென்றிடந்துங் = சென்று, தோண்டி

காண்பரிய = காண்பதற்கு அரிய

பொங்கு = மலரும்

மலர்ப்பாதம் = மலர் போன்ற பாதம்

பூதலத்தே = இந்த பூவுலகில்

போந்தருளி = போய் அருளி

எங்கள் = எங்கள்

பிறப்பறுத்திட் = பிறப்பு அறுத்து

என் தரமும் = என் தரமும்

ஆட்கொண்டு = ஆட்கொண்டு

தெங்கு= தென்னை மரங்கள்

திரள் = திரண்டு இருக்கும்

சோலைத் = சோலைகள் சூழ்ந்த

தென்னன் = தென்னன்

பெருந்துறையான் = பெருந்துறையான்

அங்கணண் = அழகிய கண்களை உடைய

அந்தணனாய் = அந்தணனாய்

அறைகூவி = கூப்பிட்டு

வீடருளும் = வீடு பேற்றை அருளும்

அங்கருணை = அந்த கருணையை

வார்கழலே = வீர திருவடிகளை

பாடுதுங்காண் = பாடுதுங்காண்

அம்மானாய். = அம்மானாய்

வீடு பேறு அடைவது என்பது கடினமான ஒன்றா ? அதை அடைய என்னென்னவோ செய்ய வேண்டும்  என்று சொல்கிறார்கள்.

ஆனால், மாணிக்க வாசகர் சொல்கிறார், இந்த கத்தரிக்காய், முருங்கை காய் விற்பது போல  இறைவன் "அறை கூவி" வீடு பேற்றை அருளுவானாம்.


"அறைகூவி வீடருளும்"

இந்த பேருந்து நிலையங்களில் பயணிகளை, ஊர் பேரைச் சொல்லி அழைப்பது போல,  "வீடு பேறு , வீடு பேறு போக விரும்புவர்கள் வாருங்கள் " என்று   இறைவன் கூவி கூவி அழைப்பானாம்.

நாம் தான் கேட்க மறுக்கிறோம்.

பேருந்து நிலையத்தில் எல்லா ஊருக்கும் போக வண்டிகள் இருக்கும். யாருக்கு எந்த ஊர் வேண்டுமோ, அதில் ஏறிப் போகலாம்.

வீடு பேறு அடையும் வண்டிக்கு நடத்துனர் இறைவன். கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்.  யார் போகிறார்கள் அங்கே. அப்புறம் போய் கொள்ளலாம் என்று  வேறு வேறு வண்டியில் ஏறி பணம், செல்வம், புகழ், அதிகாரம், பதவி என்ற ஊர்களுக்குப் போகும் வண்டியில்  பயணம் செய்து கொண்டு இருக்கிறோம்.

வண்டியை நிறுத்தி, சரியான வண்டியில் ஏறுங்கள்.

நம்மை எல்லாம் அந்த வண்டியில் ஏற்றுவானா?  ஏற்றுவான் என்கிறார்.

"எந்தரமும் ஆட்கொண்டு" 

என்னுடைய தகுதி அறிந்தும் என்னை ஆட்கொண்டான் என்கிறான்.

யாராலும் காண முடியாத அவன், நமக்காக இங்கு வந்து, அறை கூவி அழைத்துக் கொண்டிருக்கிறான்.

திரு அம்மானை என்ற பகுதியில் இது போல இனிமையான பாடல்கள் 20 இருக்கின்றன.

படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_12.html

Saturday, October 5, 2019

திருவாசகம் - இமைப்பொழுதும்

திருவாசகம் - இமைப்பொழுதும் 


திருவாசகத்தை மற்றவர்களும் எளிதில் புரிந்து கொண்டு, அவர்கள் திருவாசகத்தின் மேல் ஆர்வம் கொண்டு மேலும் படிக்க வழி கோல முன்பு திருவாசகம் பற்றி சில பிளாகுகள் எழுதி இருந்தேன்.

மீண்டும் மீண்டும் படிக்கும் போது, முன்பு எழுதியது எவ்வளவு ஒரு புரிதல் இல்லாமல் எழுதி இருக்கிறேன் என்று கூச்சம் வருகிறது. அவற்றை எல்லாம் நீக்கி விடலாமா என்றும் தோன்றுகிறது.

திருவாசகத்தின் ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு சொல்லும் அவ்வளவு பொருள் ஆழம் நிறைந்ததாக இருக்கிறது. வாசிக்க வாசிக்க அதன் எல்லைகள் விரிந்து கொண்டே போகிறது.

நீங்களே அதை படித்து நேரடியாக உணர்வதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

திருவாசகத்தில், முதலில் வருவது சிவபுராணம்.

அதில் முதல் பத்தி, கீழே உள்ள ஐந்து வரிகள்.


நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க


அதில் இரண்டாவது வரி

"இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க"

இமைப் பொழுது கூட என் மனதை விட்டு நீங்காதான் திருவடிகள் வாழ்க என்பது  நேரடிப் பொருள்.

இதில் என்ன பெரிய ஆழம் இருந்து விடப் போகிறது என்று தான் நினைத்தேன்.

அது எப்படி ஒரு இமைப் பொழுது கூட நீங்காமல் இருக்க முடியும்?  மற்ற வேலைகள்  இருக்காதா? சாப்பிடுவது, தூங்குவது, குளிப்பது, வேலைக்குப் போவது,  மனைவி/கணவன் உறவு, பிள்ளைகளோடு நேரம் செலவிட வேண்டும்....இது எல்லாம் இருக்கும் போது எப்படி இமைப் பொழுதும் என் நெஞ்சில்  நீங்காதான் என்று மணிவாசகர் சொல்ல முடியும்.

மணி வாசகருக்கே கூட இது சாத்தியமா? அவரும் மனிதர் தானே. அவருக்கும் பசி, தாகம், தூக்கம் என்பதெல்லாம் இருக்கும் தானே?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நீங்கள் கார் ஓட்டும் பழக்கம் உண்டா? கார் இல்லாவிட்டால், ஸ்கூட்டர், மிதிவண்டி  என்று ஏதாவது ஓட்டிய அனுபவம் இருக்கும் தானே?

முதலில் எந்த வண்டியை ஓட்ட ஆரம்பித்தாலும், மனம் , மூளை, உடல் அனைத்தும்  அந்த ஓட்டுகின்ற செயலிலேயே ஒரு புள்ளியில் நிற்கும். கவண் அங்கு இங்கு சிதறாது.

Accelerator ஐ  அமுக்க வேண்டும், steering ஐ சரியாக பிடிக்க வேண்டும், கிளட்ச் போட வேண்டும்,  கியர் ஐ மாற்ற வேண்டும், இண்டிகேட்டர் போட வேண்டும், ஹார்ன் அடிக்க வேண்டும், தேவையான சமயத்தில் பிரேக் போட வேண்டும்...இப்படி  அத்தனை வேலையும் செய்ய வேண்டி இருக்கிறது.

அதுவே நாளடைவில், நம்மை அறியாமலேயே இவற்றை நாம் செய்வோம்.

வண்டி ஓட்டிக் கொண்டே, செல் போனில் பேசுவோம், CD மாத்துவோம், நீர் குடிப்போம், பாட்டு நல்லா இல்லை என்றால் அடுத்த பாட்டுக்கு செல்லுவோம், கூட வரும் நபர்களோடு பேசிச் சிரிப்போம். இதற்கு இடையில் யாராவது  நெருங்கி வந்தால் ஹார்ன் அடிப்போம். சிக்னல் மாறினால் வண்டியை நிறுத்துவோம்.

எப்படி முடிகிறது.  ஒரு நொடி கூட வண்டியை செலுத்துகிறோம் என்று அறியாமலேயே  வண்டியை செலுத்துகிறோம்.

எந்த வண்டியையும் ஓட்டாதவர்கள் கூட  வேறு விடயத்தில் இது பற்றி சிந்திக்கலாம்.

சமையல் செய்து கொண்டே போனில் பேசுவார்கள் சிலர். டிவி பார்த்துக் கொண்டே  காய் நறுக்குவார்கள்.

எப்படி முடிகிறது?

முன்ன பின்ன பழக்கம் இல்லாதவர்கள் கையில் கொடுத்தால், டிவி பார்த்துக் கொண்டே கையை நறுக்கிக் கொள்வார்கள். இரத்தம் வரும்.

இது எப்படி சாத்தியமாகிறது?

பழக்கம்.

மீண்டும் மீண்டும் செய்தால் பழகி விடும். அப்புறம், நம்மை அறியாமலேயே நாம் அவற்றை  செய்ய முடியும்.

இறைவன் மேல் அன்பு, பக்தி, காதல் என்பதை பழக்கப் படுத்தி விட்டால், மற்ற  வேலைகள் செய்து கொண்டே இருந்தாலும், அந்த பக்தி பாட்டுக்கு  நடந்து கொண்டே இருக்கும்.

மனைவியுடன் இருக்கும் போதும், பிள்ளைகளோடு விளையாடும் போதும், சமையல் செய்யும் போதும், அலுவலகத்தில் வேலை செய்யும் போதும் பக்தி பாட்டுக்கு நடந்து கொண்டே இருக்கும்.

பேசிக் கொண்டே வண்டி ஓட்டுவது போல.

ஒளவையார் ஒரு படி மேலே போகிறார்....

கனவிலும் அந்த பழக்கம் தொடரும் என்கிறார். அது எந்தப் பாடல் என்று தேடி கண்டு பிடியுங்கள்.


"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க "

புரிகிறதா?

இப்படி ஒவ்வொரு வரிக்குப் பின்னாலும், வாழ்கை அனுபவத்தின் தொகுப்பு இருக்கும் என்றால், என்று நாம் இதை எல்லாம் அறிந்து கொள்வது?

மலைப்பாக இருக்கிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_5.html




Tuesday, September 17, 2019

திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - காய்சின ஆலம் உண்டாய்

திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - காய்சின ஆலம் உண்டாய் 


நமக்கு துன்பம் வரும் போது நாம் இறைவனை ஏசுகிறோம். "கடவுளே உனக்கு கண் இல்லையா,  நீ என்ன கல்லா ?"

ஏதாவது நல்லது நடந்தால் , "நான் பண்ணின பிரார்த்தனை வீண் போகவில்லை, நான் கும்பிட்ட சாமி நல்ல சாமிதான்" என்று  சாமிக்கு சான்றிதழ் வழங்குகிறோம்.

உங்கள் ஏச்சினாலும் , புகழ்ச்சியாலும் இறைவனுக்கு ஆகப் போவது ஒன்றும் இல்லம். நீங்கள் புகழ்ந்தால் அவன் உடனே எல்லோரிடமும் சென்று நீங்கள் புகழ்ந்ததை சொல்லி மகிழப் போவதும் இல்லை, நீங்க திட்டினால் அதற்காக அவன் மனம் வருத்தப் போவதும் இல்லை.

உங்களுக்கு பொழுது போகவில்லை. ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

மணிவாசகர் சொல்கிறார் "நான் ஏசினாலும், புகழ்ந்தாலும் அது என் பிழைதான். நீ அதை எல்லாம் பெரிது பண்ணாமல் என்னை காப்பாற்றி கடையேற்றுவாய் . அமுது வந்த போது, அதில் உனக்கும் ஒரு பங்கு வந்திருக்க வேண்டும். அதை விடுத்து, நீ விஷத்தை உண்டாய். உனக்கு அமுதும், விஷமும் ஒன்றுதான். எனவே, என் ஏச்சையும், புகழையும் ஒன்றாகக் கொண்டு, தேவர்களை காத்தது போல என்னையும் காப்பாத்து "

என்று குழைந்து  வேண்டுகிறார்.

பாடல்


ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக்கே குழைந்து
வேசறு வேனை விடுதிகண்டாய் செம்பவள வெற்பின்
தேகடை யாயென்னை ஆளுடையாய் சிற் றுயிர்க் கிரங்கிக்
காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே.


பொருள்


ஏசினும் = ஏசினாலும்

யானுன்னை = யான் உன்னை

யேத்தினும் = ஏத்தினும், புகழ்ந்தாலும்

என்பிழைக்கே = என் பிழையினால்

குழைந்து = மனம் வருந்தி

வேசறு வேனை = துன்பப் படுவேனை

விடுதிகண்டாய் = விடுதலை அடையச் செய்வாய்

செம்பவள  = சிவந்த பவளம்

வெற்பின் = மலையின்

தேகடை யா = போல தேகம் உடையவனே

யென்னை  = என்னை

ஆளுடையாய் = ஆளுகின்றவனே

சிற் றுயிர்க் கிரங்கிக் = சிறிய உயிர்களுக்கு இரங்கி, இரக்கப் பட்டு (சிறிய உயிர் = தேவர்கள்)

காய்சின = பொங்கி வந்த

ஆலமுண்டாய் = ஆலகால விஷம் உண்டாய்

அமுதுண்ணக் கடையவனே. = அமுது உண்ண உடமை உள்ளவனே

அமுது நஞ்சு எல்லாம் அவனுக்கு ஒன்றுதான். நாம் தான் கிடந்து அலட்டிக் கொள்கிறோம்....கோவிலுக்குப் போய் அவன் பெயரில் அர்ச்சனை செய்வதும்,  ஆராதனை செய்வதும், அபிஷேகம் செய்வதும், மொட்டை அடிப்பதும் என்று.  இதை எல்லாம் பற்றி அவன் கவலைப் படுவதே இல்லை.

அமுதம் எங்கே. உலகை அழிக்கும் விஷம் எங்கே. அதற்கு பதில் இதை உண்டவன், இதை எல்லாம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவா போகிறான்.

எதற்கு இந்த ஆட்டம் ?


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_17.html

Sunday, August 25, 2019

திருவாசகம் - புறம் புறம் திரிந்த செல்வமே

திருவாசகம் - புறம் புறம் திரிந்த செல்வமே 


தேவாரம், திருவாசகம், பிரபந்தம், குறள் , கம்ப இராமாயணம் போன்ற நூல்களை படிக்கும் போது அவ்வளவு இனிமையாக இருக்கிறது. அதன் கருத்தாழம் பிரமிக்க வைக்கிறது.

படித்ததை, இரசித்ததை பகிர்ந்து கொள்வோமே என்று நானும் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்.

சில சமயம் பயமாகக் கூட இருக்கிறது.

பாடல்களின் ஆழம், நினைக்க நினைக்க போய் கொண்டே இருக்கிறது. ஏதோ சிறு பிள்ளையின் கிறுக்கல்கள் போல நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

பாடல்களின் கருத்தாழம் காணும் போது, ஒரு நடுக்கம் வருகிறது.  நாம் பேசாமல் இருப்பதே நலம் என்று தோன்றுகிறது.

எவ்வளவோ யோசித்து, அனுபவித்து, நாலு வரியில் எழுதி வைத்துவிட்டுப் போய் விட்டார்கள். அவர்கள் என்ன நினைத்து எழுதினார்கள் என்று தெரிந்து கொள்ள, அந்த அளவு அறிவும், ஞானமும் வேண்டும் என்றே நினைக்கிறேன்.

"பால் நினைந்து ஊட்டும்" என்ற திருவாசகத்தில், அந்த முதல் வரியிலேயே நின்று போய் இருக்கிறேன். அடடா, என்ன ஒரு வரி. குழந்தைக்கு பசிக்குமே என்று அது அழுவதற்கு முன் "நினைந்து" ஊட்டும் கருணையை எண்ணி வியந்திருக்கிறேன்.

அதை எப்படி மணிவாசகர் உணர்ந்து எழுதினார் என்று உருகி இருக்கிறேன்.

பின்னால் ஒரு வரி வருகிறது.

"புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!"

என்று.


பாடல்

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!

விளக்கம்

சிவன் ஏன் புறம் புறம் என்று திரிந்து கொண்டிருக்கிறான்?  அவனுக்கு ஒரு வேலை இல்லையா ?

அவன் திரிய வேண்டிய காரணம் என்ன? அவன் நினைத்தால் அவனுக்கு வேண்டியது அவன் இருக்கும் இடத்துக்கு வந்து சேராதா ?

பின் ஏன் திரிய வேண்டும்?

அப்படி திரியும் சிவனை, மணிவாசகர் கொஞ்சுகிறார்.....

"செல்வமே, சிவ பெருமானே" என்று.

அப்படி திரிந்த சிவனை, மணிவாசகர் தொடர்ந்து சென்று சிக் என்று பிடித்துக் கொண்டாராம்.  "இனி மேல் எங்க போவாய்" என்று சிவனை கேட்கிறார்.

இதற்கு என்ன அர்த்தம்?

யோசித்துப் பார்க்கிறேன்.

உயிர்கள், இறைவனை தேடி அலைகின்றன. அவன் இங்கு இருப்பானா, அங்கு இருப்பானா  என்று அலைகின்றன.

அவன் இருக்கும் இடத்தை விட்டு விட்டு எங்கெங்கோ அலைகின்றன.

சிவன், அந்த உயிர்களின் பின்னால் போகிறனான். "நான் இங்கே இருக்கிறேன், இங்கே இருக்கிறேன், என்னை பிடித்துக் கொள் " என்று ஒவ்வொரு   உயிரின் பின்னும் அவன் அலைகின்றான் .

வீட்டில், சின்ன குழந்தை கண்ணா மூச்சி ஆடும். "நீ ஒளிஞ்சுக்கோ, நான் கண்டு பிடிக்கிறேன் " என்று பத்து வரை எண்ணி விட்டு, அப்பாவை தேடும்.

அங்கும் இங்கும் பிள்ளை தேடும்.

ஐயோ, பிள்ளை அங்கே போகிறானே. அது மேலே ஏறி, கீழே விழுந்து விட்டால்  என்ன செய்வது என்று அப்பா மறைந்து நின்றாலும் தவிப்பார். பிள்ளை எங்கெல்லாம் போகிறதோ,  அங்கெல்லாம் அவரும் பின்னாலேயே போவார். பிள்ளைக்குத் தெரியாமல்.  பிள்ளை விழுந்து விடும் என்று தெரிந்தால், ஓடி வந்து தாங்கிக் கொள்வார்.

அது போல, ஒவ்வொரு உயிரும் ஆண்டவனை தேடி அலைகின்றன.  ஆண்டவன்   உயிர்களைத் தேடி அழைக்கின்றான்.

பிள்ளை கலைத்துப் போகும் போது , அப்பா தன்னை வெளிக் காட்டுவார். பிள்ளை ஓடி வந்து அப்பாவின் காலை கட்டிக் கொள்ளும்.  "நீ அவுட்டு..இப்ப நீ என்னை  கண்டு பிடி" என்று சந்தோஷமாக விளையாட்டைத் தொடரும் அல்லவா.

அது போல, மணிவாசகரும், ஓடி வந்து இறைவனை கட்டிக் கொண்டார். "இனி உன்னை விடமாட்டேன்...இனி மேல் நீ என்னை விட்டு ஒளிந்து கொள்ள முடியாது".

"எங்கு எழுந்து அருள்வது இனியே ?"  என்று கூறுகிறார்.

இதுதான் அர்த்தம் என்று நான் நினைக்கிறேன்.

தவறாகவும் இருக்கலாம்.

தமிழ் பக்தி பாடல்கள் பற்றி பேச/எழுத ஒன்று தமிழ் அறிவு இருக்க வேண்டும், இல்லை பக்தியாவது இருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் எழுதினால்  இப்படித்தான் எதையாவது எழுத வேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன்.

பிழையிருப்பின் , பொறுக்க.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_57.html

Thursday, July 18, 2019

திருவாசகம் - பால் நினைந்து ஊட்டும்

திருவாசகம்  - பால் நினைந்து ஊட்டும்



சில நாட்களுக்கு முன்னால், "பால் நினைந்து ஊட்டும்" என்ற திருவாசக பாடல் பற்றி ஒரு பிளாக் எழுதி இருந்தேன்.

அதன் இணைப்பு கீழே.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_16.html

இதைப் படித்துவிட்டு ஒரு நண்பர் எழுதி இருந்தார், "இராம கிருஷ்ண பரமஹம்சராக இருந்தாலும் சரி அது யாராக இருந்தாலும் சரி, ஆண்களுக்கு மார்பில் பால் சுரக்க வழி இல்லை" என்று.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம் உண்டு.

ஆண்களுக்கு ஏன், பெண்களுக்கு இருப்பது போல் மார்பில் காம்புகள் இருக்கின்றன. அந்த கரிய இரண்டு, ஐம்பது பைசா நாணயம் போல, மார்புகள் ஏன் இருக்கின்றன என்று.

ஆண்கள், குழந்தைகளுக்கு பால் தரவில்லை என்றால், பின் மார்பகங்களுக்கு எதற்கு ?

நம்முடைய வளர்ச்சியில், ஒரு காலகட்டத்தில் ஆண் பெண் இருவரும் குழந்தைகளுக்கு பால் தந்திருக்க வேண்டும். நாளடைவில், ஆண்கள் வேட்டையாட வெளியே நிறைய  சுத்த வேண்டி இருந்ததால், அதன் தேவை சுருங்கி சுருங்கி  வெறும் தடயம் மட்டுமே இருக்கிறது இப்போது என்று
பரிணாம வளர்ச்சி சித்தாந்தம் கூறிய சார்லஸ் டார்வின் கூறுகிறார்.

https://en.wikipedia.org/wiki/Male_lactation



Darwin later considered the nearly perfect function of male nipples in contrast to greatly reduced structures such as the vesicula prostatica, speculating that both sexes may have nursed young in early mammalian ancestors, and subsequently mammals evolved to inactivate them in males at an early age


While male mammals could, in theory, improve offspring's survival rate through the additional nourishment provided by lactation, most have developed other strategies to increase the number of surviving offspring, such as mating with additional partners. 


ரொம்ப நாள் பட்டினி கிடந்த பின், உணவு உண்ண ஆரம்பித்தால், ஆண்களுக்கும் பால் சுரக்கும்  என்கிறது மேலே சொன்ன விக்கிபீடியா கட்டுரை.

Male lactation has also been seen during recovery from starvation. This may be because glands that produce hormones recover faster than the liver, which absorbs hormones, leading to high hormone levels.

சில குறிப்பிட சமயங்களில் ஆண்களுக்கும் பால் சுரக்கும். Stress அதிகமானால் பால் சுரக்குமாம். பக்தி பற்றி இந்த கட்டுரை ஒன்றும் சொல்லவில்லை. ஒரு வேளை ஆராய்ச்சி செய்திருந்தால் ஏதாவது தெரிந்திருக்குமோ என்னவோ. 


Male mammals of many species have been observed to lactate under unusual or pathogenic conditions such as extreme stress, castration and exposure to phytoestrogens, or pituitary tumors

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_14.html



Tuesday, July 16, 2019

திருவாசகம் - பால் நினைந்து ஊட்டும்

திருவாசகம்  - பால் நினைந்து ஊட்டும் 


பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, 
பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, 
உலப்பு இலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; 
எங்கு எழுந்தருளுவது, இனியே?

முன்பு எப்போதோ எழுதிய ப்ளாக் லிங்க் கீழே உள்ளது.


http://interestingtamilpoems.blogspot.com/2014/07/blog-post_9060.html

இப்போது எழுத நினைத்தது வேறு.

பால் நினைந்து ஊட்டும்.

குழந்தைக்கு பசிக்குமே என்று, குழந்தை அழு முன் அவளுக்கு பால் தரும் தாய் என்று ஒரு பொருள்.

பால் தர வேண்டுமே தர வேண்டுமே நினைப்பால் அவளுக்கு பால் சுரக்கிறது.

இன்றைய கால நெருக்கடியில் பெரும்பாலான பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் பால் தருவதற்கு போதிய காலம் விடுப்பு கிடைப்பதில்லை. அவளின் நினைப்பு எல்லாம், "இன்னும் இரண்டு அல்லது மூணு மாதத்தில்  வேலைக்குப் போக வேண்டும். விடுமுறை தீர்ந்து விடும். அதற்கு முன்பே பிள்ளைக்கு  புட்டி பாலை பழக்க படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் பின்னால்  பிள்ளை ரொம்ப சிரமப் படுவான்/ள்" என்று எண்ணம் எல்லாம்  புட்டி பாலின் மேலேயே இருக்கிறது.  எவ்வளவு சீக்கிரம் புட்டி பாலுக்கு மாற்ற முடியுமோ  அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது என்று நினைக்கிறாள்.

எங்கிருந்து பால் சுரக்கும்?

அது ஒருபுறம் இருக்க, சில பெண்கள், சிறுபான்மை பெண்கள், பால் கொடுத்தால்  அழகு கெட்டு விடும் என்று நினைக்கிறார்கள். அதனால், எப்படி கொடுப்பதை  குறைக்கலாம், எவ்வளவு சீக்கிரம் நிறுத்தலாம், என்றே எண்ணம்  ஓடுகிறது.

எங்கிருந்து பால் சுரக்கும்?

"பால் நினைந்து" என்றார் மணிவாசகர்.

புட்டியை நினைந்து என்றோ, அழகை நினைந்து என்றோ சொல்லவில்லை.

காலத்தின் கட்டாயம் தாய்மையின் இயற்கை உணர்வும் தடம் மாறிப் போய் கொண்டிருக்கிறது.

நான் சொல்ல வந்தது அது அல்ல.

பால் தர வேண்டும் என்று நினைத்தால் பால் சுரக்கும்.

இராம கிருஷ்ண பரமஹம்சர், கல்கத்தா காளியை நினைத்து உருகுவாராம். அப்போது அவருக்கு பால் சுரக்குமாம்.


மனதில் என்ன நினைக்கிறோமோ அது நடக்கும்.

நடந்தே தீரும்.

ஒன்று நடக்க வேண்டும் என்றால், அதை மனதில் தீவிரமாக நினைக்க வேண்டும்.

மனதில் நினைப்பது மாதிரி உடல் மாறும். உடல் என்றால் உடல் மட்டும் அல்ல, நம் அறிவும், ஆற்றலும், திறமையும் எல்லாம் மாறும்.

இலக்குவன்  கானகம் போக விடை கேட்டு நிற்கிறான். "இராமன் திரும்பி வந்தால்  அவனுடன் வா. இல்லையேல், அவனுக்கு முன் நீ முடி" என்று விடை கொடுத்து  அனுப்புகிறாள்.

அவள் தாய்மை பொங்கி வருகிறது. அந்த நிலையில் அவளுக்கு பால் சுரந்தது  என்கிறான் கம்பன்.


பின்னும் பகர்வாள், ‘மகனே!
    இவன் பின் செல்; தம்பி
என்னும்படி அன்று; அடியாரினில்
    ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின்
    வா; அது அன்றேல்
முன்னம் முடி; ‘ என்றனள்
    பால் முலை சோர நின்றாள்.


அத்தனை வயதில் பால் சுரக்க வாய்ப்பில்லை. இருந்தும், மனதில் பிறந்த  மகன் மேல் உள்ள காதலால் பால் சுரந்தது. 

நாம் எதை நினைக்கிறோமோ, அதை முடித்துக் கொடுக்கும் வன்மை நம் மனதுக்கு உண்டு. 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் 
திண்ணியர் ஆகப் பெறின் 

நினைத்தது, நினைத்தபடியே நடக்கும் என்று வள்ளுவர் உறுதி கூறுகிறார். 

வெள்ளத்து அணையது மலர் நீட்டம் மாந்தர் தம் 
உள்ளத்து அணையது உயர்வு 

என்பதும் அவர் வாக்கே. 

"நினைவு நல்லது வேண்டும் " என்பான் பாரதி. 

எவ்வளவு பெரிய ஆளாக வேண்டும் ? பணம், செல்வாக்கு, புகழ், முக்தி என்று என்று எது வேண்டுமோ....அதை கேளுங்கள். 

கேளுங்கள் கொடுக்கப்படும் என்றார் இயேசு பிரான். 

தெளிவாக கேளுங்கள். என்ன வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று கேளுங்கள். நம்பிக்கையோடு கேளுங்கள். 

"திண்ணியராகப் பெறின்" என்பதுதான் இங்கே முக்கியம். 

நம்பிக்கை. உறுதி. 

எதை நினைக்கிறோம், அது நடந்தே தீரும். 

"பால் நினைந்து" ஊட்டும்.

மணிவாசகரின் இரண்டு வார்த்தைக்குள் எவ்வளவு பெரிய பேருண்மை புதைந்து  கிடக்கிறது. 

திருவாசகம் முழுவதும் படித்தால்?.....

படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_16.html

Monday, July 8, 2019

திருவாசகம் - பொன்னூசல் ஆடாமோ

திருவாசகம் - பொன்னூசல் ஆடாமோ 


முன்பெல்லாம் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் தேவாரம், திருவாசகம் போன்ற உயர்ந்த பாடல்களை பாடுவார்கள். எப்போதும் கேட்காவிட்டாலும், இது போன்ற சமயங்களிலாவது கேட்கட்டுமே என்று இவை பாடப்பட்டது.

அது மட்டும் அல்ல, உயர்ந்த சிந்தனைகள், இனிய தமிழ், பக்தி இவை எல்லாம் எல்லோரையும் போய் சேர வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமும் காரணம்.

இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பாடுவதற்காகவே மணிவாசகர் பொன்னூஞ்சல், பொற் சுண்ணம் இடித்தல் என்று பல பாடல்கள் பாடி இருக்கிறார்.

அத்தனையும் தேன் சொட்டும் பாடல்கள்.

இப்போது இரண்டு மாற்றங்கள் வந்துவிட்டன.

ஒன்று, மங்கல விழாக்களில் பாடப்பட்ட தேவராம் , திருவாசகம் போன்றவை இப்போது அமங்கல நிகழ்ச்சிகளில் பாடப் படுகிறது. ஓதுவாரை கூட்டி வந்து , மரண சடங்குகளில் பாட வைக்கிறார்கள்.

இரண்டாவது, மங்கல விழாக்களில் கர்ண கடூரமாய் சினிமா பாடல்கள் காதை கிழிக்கின்றன. அர்த்தம் இல்லாத, பாலுணர்ச்சியை தூண்டும் பாடல்களை பாடி ஆண் பெண், முதியவர், குழந்தைகள் என்று பாரபட்சம் இல்லாமல் எல்லோரும் ஒன்றாக கேட்கிறறார்கள். யாருக்கும் ஒரு உறுத்தலும் இல்லை.

நீரும், நிலமும், காற்று மாசு படுவது போல மனங்களும் மாசு பட்டுக் கொண்டே இருக்கின்றன.  என்ன செய்வது. சூழ்நிலை அப்படி.

திருமண விழாக்களில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒரு ஊஞ்சலில் அமர வைத்து, லேசாக ஆட்டி விட்டு, பாடல் பாடுவார்கள்.

மணிவாசகரின் பொன்னூஞ்சல் பாடல் இதோ "ஆடு"கிறது.

பாடல்

மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.


பொருள்


மாதாடு பாகத்தன்  = பெண்ணை ஒரு பாகத்தில் கொண்டு ஆடுபவன்

உத்தர கோசமங்கைத் = திரு உத்திர கோசை என்ற திருத்தலத்தில் எழுந்து அருளி இருப்பவன்

தாதாடு = மகரந்தம் ஆடும்

கொன்றைச் = கொன்றை மலர் சூடிய

சடையான் = சடை முடியை உடையவன்

அடியாருள் = அடியவர்களுக்குள்ளே

கோதாட்டி = சீராட்டி

நாயேனை = நாய் போல கீழான என்னை

ஆட்கொண்டென் = ஆட்கொண்டு என்

தொல்பிறவித் = பழைய பிறவி

தீதோடா = தீது + ஓடா = தீது தொடர்ந்து ஓடி வந்து பற்றிக் கொள்ளாமல்

வண்ணந் = அப்படி

 திகழப் = நடக்க

பிறப்பறுப்பான் = இனி வரும் பிறவிகளை வராமல் அந்தத் தொடர்பை அறுப்பவன்

காதாடு  =காதில் ஆடும்

குண்டலங்கள் = குண்டலங்கள்

பாடிக்  = பாடி

கசிந்தன்பால் = கசிந்து அன்பால்

போதாடு  = போது என்றால் மலர். மலர் ஆடும்

பூண்முலையீர் = ஆபரணங்களை அணிந்த மார்பை உடைய பெண்களே

பொன்னூசல் ஆடாமோ. = பொன்னூசல் ஆடாமோ. ஆடுவோம்.



மாதாடு  = மாது ஆட
தாதாடு  = தாது (மகரந்தம்) ஆட
கோதாட்டி  = சீராட்டி
தீதோடா  = தீது ஓட
காதாடு  = காது ஆட
போதாடு  = போது (மலர்) ஆட

எத்தனை ஆட்டம்.

பக்தியை விடுங்கள்.   கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சையை விடுங்கள்.

தமிழ் எவ்வளவு இனிமையாக இருக்கிறது.

பக்தியும், இறை உணர்வும், தமிழும், வாழ்க்கை முறையும் ஒரு புள்ளியில் நிற்கும் அந்த   அதிசயம், எவ்வளவு இனிமையாக இருக்கிறது.

எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள்.

மாதாடு - ஆண் என்றும் பெண் என்றும் யாரும் கிடையாது. ஆணுக்குள் பெண் உண்டு. பெண்ணுக்குள் ஆணுண்டு. எல்லோருமே இரண்டும் கலந்த கலவைதான். ஆணுக்குள் உள்ள பெண்ணை அடக்கி வைக்கிறோம். பெண்ணுக்குள் உள்ள  ஆணையும் அடக்கி வைக்கிறோம்.

எது அடக்கப் பட்டதோ, அது வெளிவர காத்திருக்கும். நீருக்குள் பந்தை அமுக்கி வைத்து இருப்பது போல.  எப்படா கையை எடுப்போம் என்று இருக்கும். எடுத்தவுடன் துள்ளிக் கொண்டு வெளியில் வரும்.

ஒவ்வொரு ஆணும், தனக்குள் இருக்கும் பெண்ணை வெளியே தேடி அலைகிறான்.

ஒவ்வொரு பெண்ணும், தனக்குள் இருக்கும் ஆணை வெளியே தேடி அலைகிறாள்.

வெளியில் உள்ள எந்த ஆணும், எந்த பெண்ணும் உள்ளுக்குள் இருக்கும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ ஈடாகாது.

எது கிடைத்தாலும் திருப்தி இருக்காது.  தேடல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இது அல்ல நான் தேடிய பெண்/ஆண் என்று ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அலைந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

அர்த்த நாரீஸ்வரர் தத்துவம் அதுதான்.

மாதொரு பாகன் உணர்த்துவது அதைத்தான்.

திருவாசகம் ஒரு கடல்.

ஒரு வாழ்நாள் போதாது படித்து உணர.

மூல நூலை தேடிப் பிடித்து படித்துப் பாருங்கள்.

ஊன் உருகும். உயிர் உருகும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_57.html

Saturday, July 6, 2019

திருவாசகம் - நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து

திருவாசகம் - நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து 


தினமும் உடற் பயிற்சி செய்யணும்னு நினைக்கிறேன். எங்க முடியுது, ஏதாவது ஒரு தடங்கல்.

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமாவது படிக்கணும்னு நினைக்கிறேன், எங்க முடியுது...whatsapp செய்தி, டிவி, நண்பர்கள் தொலைபேசி என்று ஏதாவது வந்து குழப்பி விடுகிறது.

கணவன்/மனைவி/பிள்ளைகள் கூட நேரம் செலவழிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எங்க முடியுது. எனக்கு நேரம் இருக்கும் பொழுது அவர்களுக்கு நேரம் இல்லை. அவர்களுக்கு நேரம் இருக்கும் பொழுது எனக்கு இல்லை.

என்ன செய்தாலும் ஏதாவது குத்தம் குறை சொல்லிக் கொண்டே இருக்கும் கணவன்/மனைவி. எப்படித்தான் அன்பாக இருப்பது. அன்பாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன், முடிய மாட்டேன் என்கிறதே...

என்று இப்படி நமக்கு நாளும் பல சிக்கல்கள் வருகின்றன.

இவற்றை மீறி எப்படி நாம் நினைத்ததை செய்வது?

நமக்கு மட்டும் அல்ல, மணிவாசகருக்கும் இந்த சிக்கல் இருந்திருக்கிறது.

இறைவன் மேல் பக்தி செய்ய வேண்டும். கோவிலுக்குப் போக வேண்டும். திருப்பணி செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைத்தார். முடியவில்லை. ஏதோ ஒரு வேலை வந்து குழப்பிக் கொண்டே இருந்தது.

என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒரு வழியும் கண்டு பிடித்து விட்டார். கண்டு பிடித்தது மட்டும் அல்ல, அதை நமக்கும் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்.

அது என்ன வழி தெரியுமா ?

செய்ய முடியாவிட்டாலும், செய்வது போல நடி. நாளடைவில் அந்த நடிப்பே நிஜமாகி விடும்.

புரியவில்லையா?

படிக்க முடியவில்லையா ? ஒரு பிரச்சனையும் இல்லை. படிப்பது போல நடி. தினமும்  சும்மா இரண்டு மணி நேரம் படிப்பது போல பாவனை பண்ணு. புத்தகத்தை  திறந்து வைத்துக் கொண்டு சும்மா இரு. படம் பாரு.  ஒண்ணும் படிக்க வேண்டாம். இப்படி செய்து கொண்டிருந்தால், நாளடைவில் இந்தப் பழக்கம்  கொஞ்சம் கொஞ்சமாக தீவிர படிப்பில் கொண்டு போய் விட்டு விடும்.

மனைவி மேல் கோபமும், எரிச்சலும் வருகிறதா?  அவள் மேல் அன்பாக இருப்பது போல்  நடியுங்கள். அவள் செய்த சமையலை பாராட்டுங்கள். அவள் உடையை இரசியுங்கள். அவள் வீட்டாரைப் பற்றி புகழ்ந்து பேசுங்கள். உண்மையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பொய்யாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த நடிப்பு நாளடைவில் உண்மையாக மாறிவிடும்.

பிள்ளை சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறானா? அவன் நல்லவன் என்று நினைத்து அவனை நடத்துங்கள்.  அவனிடம் அன்பு செலுத்துங்கள். பொய்யாகவேணும் செய்யுங்கள். அந்த பொய், நாளடைவில் உண்மையாக மாறும்.

மணிவாசகர் என்ன செய்தார் தெரியுமா,

தானும் பக்தி செய்பவர் போல மற்ற அடியார்களுடன் சேர்ந்து கோவிலுக்கு அவர்கள் பின்னால் போய் விடுவாராம். அவர் மனதில் அப்போது பக்தி இல்லை. பக்திமான் போல் நடித்தேன் என்கிறார்.

நாடகம்தான் என்றாலும், நாடிவில் அது உண்மையான பக்தியாக மாறியது உலகறியும்.



பாடல் 


நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நானடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே.


பொருள்

நாடகத்தால் = நடிப்பால்

உன்னடியார் போல் = உன்னுடைய அடியவனைப் போல

நடித்து = நடித்து

நானடுவே = நான் நடுவே

வீடகத்தே = வீட்டின் அகத்தே - வானுலகத்தின் உள்ளே

புகுந்திடுவான் = புக வேண்டி

 மிகப்பெரிதும் = மிக வேகமாக

 விரைகின்றேன் = விரைந்து செல்கின்றேன்

ஆடகச்சீர் = உயர்ந்த தங்கத்தால் ஆன

மணிக்குன்றே = மணிகள் நிறைந்த குன்றே , மலையே

இடையறா = இடைவிடாத

அன்புனக்கென் = அன்பு  உனக்கு என்

ஊடகத்தே = உள்ளத்தில்

நின்றுருகத் = நின்று , அதனால் என் உள்ளம் உருக

தந்தருள் = தந்து அருள்வாய்

எம் உடையானே.= என்னை உடையவனே

இதைத்தான் இன்று மேல் நாட்டு உளவியல் அறிஞர்கள் (psychologists ) fake it till you make it என்று சொல்லுகிறார்கள். 

கீழே உள்ள இணைய தளத்தில் இது பற்றி ஒரு கட்டுரை இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் படித்துணர்க.

http://mentalfloss.com/article/74310/8-fake-it-til-you-make-it-strategies-backed-science


நம் மூளை இருக்கிறதே, அதுக்கு ஒண்ணே ஒண்ணுதான் தெரியும். எதைச் சொன்னாலும்  அது ஏற்றுக் கொள்ளும். 

முடியும் என்று சொன்னால் , ஆமாம் முடியும் என்று ஏற்றுக் கொண்டு அதற்கு தகுந்த மாதிரி  உங்களை தயார் படுத்தும். 

முடியாது என்று நினைத்தால் ஆமாம் முடியாது என்று ஏற்றுக் கொண்டு  எவ்வாறு செய்யாமல் இருப்பது என்று வழி காணும். 

ஆங்கிலத்தில் GIGO என்று சொல்லுவார்கள். அதாவது Garbage In Garbage Out. 

எதை நம்புகிறோமோ, அதுவே நடக்கும். 

அதனால்தான் படித்து  படித்து சொன்னார்கள், நல்லவர்களோடு சேர்ந்து இரு, கெட்டவர்களை கண்டால் ஓடி விடு என்று. 

நல்ல குணங்கள் உங்களிடம் இருப்பது போல நினைத்துக் கொண்டு அது படி  நடங்கள். உண்மையில் அது இல்லாவிட்டால், இருப்பது போல நடியுங்கள். நாளடைவில் அது உண்மையாகிவிடும்.

ஆச்சரியமாக இருக்கிறது இல்ல?  செய்து பாருங்கள். 

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_6.html

Saturday, October 20, 2018

திருவாசகம் - கலக்கம் தெளிவித்த

திருவாசகம் - கலக்கம் தெளிவித்த 



நம்முடைய குழப்பங்களுக்கு ஒரு அளவு இருக்கிறதா? முதலில் நமது சொத்து மற்றும் உடமைகள்.


எவ்வளவு சொத்து சேர்ப்பது? பெரிய வீடு,  அதில் ஒரு நீச்சல் குளம், நாலைந்து காரு, பத்து பதினைந்து வேலைகாரர்கள் என்று  ஒரு பட்டியல் நீளும். ஆசை ஒரு புறம். பயம் ஒரு புறம். நம்மை விட அதிகம் இருப்பவனைப் பார்த்து பொறாமை, நம்மை விட குறைவாக உள்ளவனைப் பார்த்து ஒரு பெருமை....இப்படி கொஞ்சம் குழப்பங்கள்.


மனைவி ... என் மனைவியை விட அவன் மனைவி அழகாக இருக்கிறாள், அவளுக்கு பாட வரும், வீட்டை எப்படி பார்த்துக் கொள்கிறாள்,  எனக்கும் ஒன்று வாய்த்து இருக்கிறதே என்று கவலைப் படாதவர் யார்?


பிள்ளைகள் ... என்ன படித்தாலும் , இன்னும் படிக்கவில்லையே என்ற ஆதங்கம். நன்றாகக் படித்தால் பார்க்க இன்னும் கொஞ்சம் அழகாக இருந்திருக்கலாம் என்று ஒரு எண்ணம். இப்படி கொஞ்சம் குழப்பம்.


குலம்...உயர் குலத்தில் பிறந்தால் பெருமை, ஆணவம். இல்லை என்றால் தாழ்வு மனப்பான்மை.


கல்வி ... வித்யா கர்வம், படித்ததால் வரும் கர்வம், இன்னும் படிக்க வேண்டும் என்ற ஆசை, அதனால் மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்ற எண்ணம்


பிறப்பு...இறப்பு ....இது பற்றிய குழப்பங்கள். இறப்புக்குப் பின் என்ன, பிறவியின் நோக்கம் என்ன, மறு பிறப்பு உண்டா ?


இந்த குழப்பங்களில் இருந்து எப்படி தெளிவு பெறுவது ?


தண்ணீர் கலங்கி இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஒன்றும் செய்யக் கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும். அதுவே தெளியும். வண்டல் எல்லாம் அடியில் சென்று தங்கி விடும். தெளிந்த நீர் மேலே நிற்கும்.


மாறாக, அது தெளிந்து விட்டதா, இல்லையா என்று ஓயாமல் அதில் கரண்டியை விட்டு கிண்டிக் கொண்டே இருந்தால் அது தெளியவே தெளியாது.


எதைப் படிப்பது, யாரைக் கேட்பது, எந்த கடவுளை கும்பிடுவது, எப்படி கும்பிடுவது, எந்தக் கோவில், என்ன பூஜை என்று அலை பாயக் கூடாது.


பொறுமை. அமைதி.


பதட்டம் கொள்ளாமல், அமைதியாக இருக்கப் பழகினால், சித்த சலனங்கள்
அடங்கும். தெளிவு பிறக்கும்.


மணிவாசகர் சொல்கிறார்.


பாடல்


வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 24


பொருள்


வைத்த நிதி = சேர்த்து வைத்த செல்வம்


பெண்டிர் = மனைவி


மக்கள் = மக்கள் , பிள்ளைகள்


குலங் = குலம்


கல்வியென்னும் = கல்வி என்று


பித்த உலகிற் = பித்துப் பிடித்த உலகில்


பிறப்போ டிறப்பென்னுஞ் = பிறப்போடு இறப்பு என்னும்


சித்த = சித்த


விகாரக் = மாற்றம்


கலக்கம் = கலக்கம்


தெளிவித்த = தெளிவு அடையும்படி செய்த


வித்தகத் தேவற்கே = உயர்ந்த தேவற்கே


சென்றூதாய் = சென்று நீ ஊதுவாய்


கோத்தும்பீ = கோ + தும்பி , உயர்ந்த வண்டே


மண்டையை போட்டு கிண்டாதீர்கள். மேலும் குழப்பம் தான் விளையும். தேடல் தொடர தொடர குழப்பம் அதிகரிக்கும்.


வரும்போது வரட்டும்.


மாலும் அயனும் தேடியே கிடைக்கவில்லை. நம்மாலா தேடிவிட முடியும்.  தேடினால்  கிடைக்காது என்பது அதன் பொருள்.


தேடுவது நிற்கும் போது உடலிலும் மனத்திலும் ஏறிய முறுக்கு குறையும். இரண்டும் லேசாகிப் போகும்.


தேடுதல் வியர்த்தம் என்று அறிந்த அன்று சித்தார்த்தன், புத்தன் ஆனான்.


மனதை தெளிய விடுங்கள். கலக்கங்கள் மறையும். அமைதி பிறக்கும்.


https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_20.html

Sunday, October 7, 2018

திருவாசகம் - விட்டிடுதி கண்டாய்

திருவாசகம் - விட்டிடுதி கண்டாய்


அது ஒரு அடர்த்த காடு. அதில் தனியாக நீங்கள் போய் கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று ஐந்து பெரிய கரிய மதம் கொண்ட யானைகள் உங்களை வளைத்து விடுகிறது. என்ன செய்வீர்கள்?

எதிர்த்து போராட முடியுமா? ஒரு யானையோடு போரிடுவதே முடியாத காரியம். ஒருவேளை ஒரு யானையை எப்படியாவது சமாளித்து விடலாம் அல்லது அதனிடம் இருந்து தப்பி ஓடி விடலாம் என்றால் இங்கே ஐந்து யானைகள். ஐந்தும் மதம் கொண்ட பெரிய யானைகள்.

சிக்கினால் சட்னி தான்.

நீங்கள் ஒண்ணும் காட்டுக்குப் போகப் போவது இல்லை. யானையும் வரப்போவது இல்லை. ஒரு வேளை அப்படி ஒன்று நடந்தால் என்ன செய்வீர்கள் என்று யோசியுங்கள்.

ஏன் என்றால்....

நீங்கள் அப்படி ஒரு சிக்கலில் நாளும் இருக்கிறீர்கள். யானை பக்கத்திலேயே இருக்கிறது. உங்களுக்குத் தெரியவில்லை. அவை உங்களை தூக்கிப் போட்டு பந்தாடிக் கொண்டிருக்கிறது. அது தெரியாமல் இருக்கிறீர்கள்.

மாணிக்கவாசகர் சொல்லுகிறார்.

"என்னுடைய ஐந்து புலன்களும் பெரிய கரிய யானைகள் போல என்ன மிரட்டுகின்றன...அவற்றிற்கு அஞ்சி நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்ப  எந்த யானை வந்து என்னை தூக்கிப் போட்டு மிதிக்குமோ தெரியாது...என்னை காப்பாற்று " என்று கதறுகிறார்.

ஆபத்து தெரிந்ததால் அலறுகிறார். நம்மக்குத் தெரியவில்லை....

பாடல்

அடற்கரி போல்ஐம் புலன்களுக் கஞ்சி அழிந்தஎன்னை
விடற்கரி யாய்விட் டிடுதிகண் டாய்விழுத் தொண்டர்க்கல்லால்
தொடற்கரி யாய்சுடர் மாமணி யேசுடு தீச்சுழலக்
கடற்கரி தாய்எழு நஞ்சமு தாக்கும் கறைக்கண்டனே.


பொருள்

அடற்கரி போல் = அடல் + கரி = மிக வலிமையான யானையைப் போல

ஐம் புலன்களுக் கஞ்சி = ஐந்து புலன்களுக்கு அஞ்சி

அழிந்த என்னை = நாளும் அழியும் என்னை

விடற்கரி யாய் = விட்டு விட முடியாதவனே

விட்டிடுதி கண் டாய் = என்னை விட்டு விடாதே

விழுத் தொண்டர்க்கல்லால் = விழுமிய தொண்டர்களுக்கு அல்லாமல்

தொடற்கரி யாய் = மற்றவர்கள் உன்னை நெருங்க முடியாது

சுடர் மாமணியே = சுடர் விடும் மணி போன்றவனே

சுடு தீச்சுழலக் = சுடுகின்ற தீ சுழல

கடற்கரி தாய் = கடல் + அரிதாய் = கடலில் அபூர்வமாக

எழு நஞ்சமு தாக்கும் = எழுந்த நஞ்சை அமுதாக்கியவனே

கறைக்கண்டனே = கண்டத்தில் (கழுத்தில்) கறை உள்ளவனே


இறைவன் விடுவதற்கு அறியதானவன். ஒரு முறை அவனை பிடித்து விட்டால், பின் அவனை விட முடியாது.

அப்படி அவனை கண்டு கொண்டவர்கள் வேறு எதுவும் வேண்டாம், உன்னை பார்த்துக் கொண்டு இங்கேயே இருந்து விடுகிறேன் என்று சொல்லுகிறார்கள்.

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

உன்னுடைய பச்சை மேனியும், பவளம் போல் சிவந்த வாயும், தாமரை போல் சிவந்த கண்ணும்...இவற்றை பார்த்துக் கொண்டு இங்கேயே இருந்து விடுகிறேன். அந்த சுவர்க்கம் எல்லாம் வேண்டாம் என்கிறார் ஆழ்வார்.


குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே.


என்பார் நாவுக்கரசர்.

குனித்த (வளைந்த) புருவம், கொவ்வை செவ்வாய், அதில் குமிழியிடும் சிறப்பும், குளிர்ந்த சடையும், சிவந்த மேனியில் பால் போன்ற திருவெண்ணீறும், இனிமையாக எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால், மீண்டும் மீண்டும் இங்கு மனிதராக பிறக்கும் வரமே வேண்டும் என்கிறார்.

மணி வாசகர் சொல்கிறார்,  இறைவா உன்னை விட முடியாது என்று.

நாளும் ஐந்து புலன்களுக்கு அஞ்சி வாழ்கிறேன். என்னை இந்த பயத்தில் இருந்து காப்பாற்று என்கிறார்.

அவரால் காப்பாற்ற முடியுமா ?

முடியும் என்றும் சொல்கிறார்.

தேவர்களும் அசுரர்களும் பாற் கடலை கடைந்த போது கொதிக்கும் கொடுமையான நஞ்சு வந்தது. அந்த நஞ்சையே அமுதமாக எண்ணி உண்டு அதனால் கழுத்தில் கரிய கறை கொண்டவனே, அவ்வளவு பெரிய ஆபத்தையே நீ எளிதாக சமாளித்து விட்டாய். என்ன காப்பதா பெரிய பிரமாதம் உனக்கு என்று ஆண்டவனுக்கு ஐஸ் வைக்கிறார்.

இறைவனை எப்படி அடைவது என்றும் இடையில் சொல்லுகிறார். புத்தகங்களை படித்து , ஆராய்ந்து, தர்க்கம் பண்ணி புத்தியால் அவனை அடைய முடியாது. மனித சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவன்.

சித்தமும் செல்லா சேயோன் காண்க

என்பார் மணிவாசகர். சித்தத்தால் அவனை அறிய முடியாது.


"விழுத் தொண்டர்க்கல்லால் தொடற்கரி யாய்" தொண்டு செய்வதன் மூலம், பக்தியின் மூலமே அவனை அடைய முடியும் என்கிறார்.

இறைவனைத் தவிர வேறு யாரும் நம்மை இந்த துன்பத்தில் இருந்து காப்பாற்ற முடியாது என்றும் சொல்லாமல் சொல்கிறார்.

நீத்தல் விண்ணப்பம் நூறு பாடலைகளை கொண்டது. மூல நூலை படித்துப் பாருங்கள். வேறு எதையும் படிக்கத் தோன்றாது.

http://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_7.html

Sunday, April 15, 2018

திருவாசகம் - போற்றி

திருவாசகம் - போற்றி 


பாடல்

ஈசனடிபோற்றி எந்தை அடி போற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

பொருள்

ஈசனடிபோற்றி = ஈசன் அடி போற்றி. ஈசனின் திருவடிகளுக்கு வாழ்த்து. ஈசன் என்ற சொல்லுக்கு தலைவன், குரு, இறைவன், அரசன், மூத்தவன் என்று பல பொருள்கள் உள்ளன. ஈசன் மனைவி ஈஸ்வரி.

எந்தை அடி போற்றி = என் தந்தையின் அடி போற்றி.

தேசன் அடிபோற்றி = தேசு என்றால் ஒளி. தேசன், ஒளி நிறைந்தவன். பொன்னைப் போல ஒளி நிறைந்தவன் என்பார் சுந்தரர்.

பொன்னார் மேனியனே புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

 செந்தழல் புரை திரு மேனியும் காட்டி  என்பார் மணிவாசகர்.


முந்திய முதல் நாடு இறுதியும் ஆனாய் ,
மூவரும் அறிகிலர் , யாவர் மற்றறிவார் ,
பண்டனை விரலியும் நீயும் நின் அடியார் ,
பழம் குடில் தொருன் எழுந்தருளிய பரனே ,
செந்தழல் புரை திரு மேனியும் காட்டி ,
அந்தணன் ஆவதும் கட்டி வந்து ஆண்டி ,
ஆரமுதே பள்ளி  எழுந்தருளாயே


சிவன் சேவடி போற்றி = சிவனின் சிறந்த அடிகள் போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி = நேயம் என்றால் அன்பு, கருணை, இரக்கம் என்று அர்த்தம். மலம் என்றால் குற்றம், தவறு. நி -மலன் என்றால் குற்றம் இல்லாதவன். கருணை நிறைந்த குற்றமற்றவன்.


மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி =  மாயமாகிய பிறப்பை அறுக்கும் மன்னன் அடி போற்றி. அது என்ன மாயம் ? பிறவி என்பது உண்மை தானே. பிறக்கிறோம், வாழ்கிறோம், இறக்கிறோம். இதில் இன்ன மாயம் இருக்கிறது?  நாம் தான் பிறக்கிறோம், இறக்கிறோம் , மீண்டும் பிறக்கிறோம் என்பது தெரியாமல் அது நிகழ்கிறது. எனவே மாயப் பிறப்பு. இந்த பிறவி இன்பமானது போலத் தெரியும். ஆனால், துன்பத்தின் இருப்பிடம் இது. அது தெரியாமல் இருப்பதுதான் மாயம்.


சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி = சிறந்த , திருப்பெருந்துறை என்ற இடத்தில் உறையும் (வாழும்) நம் தேவன் அடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி = தீராத இன்பம் அருளும் மலை போற்றி

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_15.html




Tuesday, April 10, 2018

திருவாசகம் - புறத்தார்க்குச் சேயோன்

திருவாசகம் - புறத்தார்க்குச் சேயோன்


புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க



"புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க"

புறம் என்றால் வெளியே

சேய்மை என்றால் தூரத்தில் என்று அர்த்தம். அண்மை என்றால் பக்கத்தில் என்று அர்த்தம்.

புறத்தில் உள்ளவர்களுக்கு தூரமானவன். அவனுடைய மலர் போன்ற பாதங்கள் வெல்க.

அது என்ன புறத்தில் உள்ளவர்களுக்கு தூரமானவன்?

இறைவன் எங்கிருக்கிறான் என்று மனிதன் தேடி அலைகிறான். காடு மேடெல்லாம் ஓடுகிறான். மலை ஏறுகிறான். புண்ணிய தலங்கள் தோறும் செல்கிறான். இங்கெல்லாம் இல்லை என்று கைலாயம், வைகுண்டம் என்று கற்பனை செய்து கொண்டு, இந்த வாழ்வில் அல்ல, இறந்த பின் அங்கே போய்ச் சேர்வேன் என்று நினைக்கிறான்.

ஆனால், இறைவவன் அவனுக்குள்ளேயே இருப்பதை அவன் அறிந்தானில்லை. உள்ளே இருக்கும் இறைவனை விட்டு விட்டு எங்கெங்கோ தொலை தூரத்திற்கு சென்று விடுகிறான்.

இறைவன் அவனை விட்டு விட்டு தூர போவதில்லை. மனிதன் இறைவனை விட்டு விட்டு எங்கெங்கோ போய் விடுகிறான். எனவே, உள்ளே இருக்கும் இறைவனை விட்டு விட்டு வெளியே வெகு தூரம் போய் விட்டவர்களுக்கு அவன் தூரத்தில் தான் இருப்பான்.

அது மட்டும் அல்ல,  இறைவன் அவனுக்குள் இருக்கிறான் என்று அறிந்தால், அதே இறைவன்  எல்லா உயிர்களுக்குள்ளும் இருப்பான் என்று அறிவான். தனக்குள் இறைவன் இருப்பதை அறியாதவன் மற்ற உயிர்களுக்குள்ளும் இறைவன்  உறைவதை அறிய மாட்டான்.

தனக்குள் இறைவனை கண்டவன் எங்கும் இறைவனைக் காண்பான். தனக்குள்  இறைவனை காணாதவன் எங்கும் காண மாட்டான். தனக்குள் இல்லாதது போல்  எதற்குள்ளும் இறைவன் இருக்க மாட்டான் என்று நினைப்பான். எனவே, இங்கு உள்ளதை எல்லாம் விட்டு விட்டு வைகுண்டம், கைலாயம், பரமபதம் என்று இறைவனைத் தள்ளி வைக்கிறான்.

இறைவன் தள்ளிப் போவதில்லை. மனிதன் இறைவனை தள்ளி வைக்கிறான்.

புறத்தார்க்கு சேயோன்.

அகத்தாற்கு அண்மையோன்.

"கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க"

இறைவனை எங்கும் காண்பவன் எல்லாவற்றையும் வணங்குவான். இந்த உலகமே  போற்றுதலுக்கும், வணக்கத்துக்கும் உரியதாக நினைப்பான். எல்லாமே இறைவன்தான் என்று அறிவான். எல்லாம் சிவமயம் என்பது புலப்படும். எதிரில் உள்ளவர்களை பார்த்தால் கரம் குவித்து வணங்குவான். அப்படி வணங்குவது ஏதோ பயத்தினாலோ அல்லது பணிவினாலோ அல்ல. எங்கும் நிறைந்த அந்த சக்தியை அறிந்ததனால். அந்த அறிவினால் பிறந்த ஆனந்தத்தால்.

அந்தத் தரிசனம் பெற்ற அபிராமி பட்டார் கூறுவார் "களி நின்ற வெள்ளம் கரை கண்டது இல்லை " என்று ஆனந்த வெள்ளத்தில் திளைக்கிறார்.


வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

விஸ்வரூபம் என்று சொல்கிறார்களே அது என்ன.

ஏதோ ஒருவர் விண்ணுக்கும் மண்ணுக்குமாக  ஒரு நொடியில் வளர்ந்து நிற்பது அல்ல.

இந்த உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் , அனைத்து உயிர்களுக்குள்ளும் உறையும் இறையை தரிசித்தவர் சொல்வதுதான் அந்த உருவம்.

அத்தனை உயிர்களும் ஒன்று சேர்ந்த ஒரு உருவம் ....எத்தனை கைகள், எத்தனை கால்கள், எத்தனை தலைகள், எத்தனை உருவம்...எல்லாம் சேர்ந்த ஒன்று தான் விஸ்வ ரூபம். அந்தத் தரிசனம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை. அறிவு வேண்டுமானால் அதை ஏற்றுக் கொள்ளும். அந்த அனுபவம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை.

நானும், நீங்களும், இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் ஒன்று தான் என்ற வேற்றுமை அற்ற தரிசனமே விஸ்வரூப தரிசனம்.

காக்கை குருவி எங்கள் ஜாதி, காடு மலை எங்கள் கூட்டம் என்று அனைத்தையும் ஒன்றாக கண்டான் பாரதி. அது விஸ்வ ரூப தரிசனம்.


நான் வேறு, நீ வேறு என்று இனம் பிரித்துச் சொல்லும் புத்தி உருகி, பெருகி தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரம் என்பார் அருணகிரி.

பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித்து இருக்கும் அமுது கண்டேன் செயல் மாண்டு அடங்கப்
புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றித்
தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரத்தே.

எல்லோரும் ஒன்றென்று உணரும் போது பிறக்கும் மகிழ்ச்சி. பேதங்கள், பிரிவினைகள் மறையும் போது பிறக்கும் ஆனந்தம்.

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க.

அருகில் உள்ளவர்களை கை கூப்பி வணங்கி விடலாம். அவர்களும் அதை பார்க்க முடியும்.

தள்ளி இருப்பவர்களை, இந்த உலகம் அனைத்தையும் எப்படி வணங்குவது.

கைகளை தலைக்கு மேலே உயர்த்தி எல்லோருக்கும் வணக்கம் என்று சொல்லலாம். அது எல்லோருக்கும் தெரியாது தான். இருந்தும் நம் மனதுக்குத் தெரியுமே. இந்த உலகம் முழுவதும் ஒரு சக்தியின் வெளிப்பாடு என்று.

அது யாராக இருந்தால் என்ன? எங்கிருந்தால் என்ன? என்ன நிறம், ஜாதி, குலமாக இருந்தால் என்ன. எல்லாம் ஒன்றுதான்.

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க.

அப்படி பட்ட ஞானம் பெற்றவர்களை மேலும் சிறப்படைய செய்யும் சீரோன் கழல்கள் வெல்க என்கிறார்.

இறை தரிசனத்தின் வெளிப்பாடு.

இது சரிதானா ? இல்லை வலிந்து பொருள் சொல்லும் உத்தியா என்று என்னை நானே கேட்டுப் பார்த்தேன்.

பொருள்களும் , சக்தியும் ஒன்றுதான். வேறு இல்லை என்று நவீன இயற்பியல் கூறுகிறது.

பொருளை சக்தியாக மாற்றலாம். சக்தியை பொருளாக மாற்றலாம். பொருள் என்று சொன்னால் எல்லா பொருளும் தான். நான், நீங்கள், இந்த கணிப்பொறி, கண்ணாடி, மேஜை,நாற்காலி, காக்கை, குருவி, மேகம், சூரியன், என்று அனைத்தும் சக்தியின் வெளிப்பாடு அல்லது மறு உருவம் என்கிறது நவீன இயற்பியல்.

E = M C^2 = M x C x C

என்பது ஐன்ஸ்டினின் மிக பிரபலமான கோட்பாடு.

E என்பது சக்தி, energy

M என்பது பொருள்

C என்பது ஒரு எண் (ஒளியின் வேகம்).

மாணிக்க வாசகருக்கு நவீன இயற்பியல் தெரியும் என்று சொல்ல வரவில்லை.

அனைத்தும் ஒரு சக்தியின் வடிவம் என்று அவர் சொல்கிறார். நவீன அறிவியலும் சொல்கிறது.

அந்த சக்தியை அவர் வழிபட்டார். நாம் அந்த சக்தியை பல விதங்களில் பயன் படுத்துகிறோம்.

அது ஒரு பார்வை, ஒரு perspective என்ற முறையில் சிந்தித்துப் பார்ப்போமே.

வலிந்து பொருள் சொல்லவில்லை. இப்படியும் இருக்கலாம் என்று சொல்ல வருகிறேன்.

அதில் ஒரு சுகம் இருக்கிறது. ஒரு ஆனந்தம் இருக்கிறது.

பிரிவினை குறையும் போது மகிழ்ச்சி வருகிறது தானே.

காதலியோடு, மனைவியோடு அன்பு மேலிடும் போது , அவள் வேறு தான் வேறு என்ற பேதம் மறைந்து, இரண்டும் ஒன்றாகும் போது மகிழ்ச்சி வருகிறதா இல்லையா. ஆனால், அது சிறிது நேரம் இருந்து விட்டுப் போய் விடும்.

பிள்ளைகள் கட்டி அணைக்கும் போது உயிர் உருகுகிறதா இல்லையா ?

பேரப்  பிள்ளைகள் மேலே வந்து விழும் போது, ஈருயிர் ஓருயிராகிறதா இல்லையா? அப்போது எவ்வளவு சந்தோஷம் பிறக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பின் உடன் பிறப்புகளை பார்க்கும் போது, அவரக்ளை கட்டி அணைத்துக் கொள்ளும் போது ஒன்றிப் போகிறோமா இல்லையா? அதில் ஒரு ஆனந்தம் பிறக்கிறதா இல்லையா ?

இந்த உலகமே நம் துணை, பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் என்று தோன்றினால் எவ்வளவு இன்பம் பிறக்கும்.

அந்த இன்பம் மறையவே மறையாது. எங்கெங்கு பார்த்தாலும் என் துணை, என் உடன் பிறப்பு, என் பிள்ளைகள், என் பேரப் பிள்ளைகள் என்றால் அந்த ஆனந்தத்துக்கு  அளவு ஏது.

அதுவே பேரின்பம்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/04/blog-post_10.html

Monday, April 9, 2018

திருவாசகம் - வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க

திருவாசகம் - வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க

பாடல்

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க

"வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க"


அது என்ன வேகம் கெடுத்தல்? எதன் வேகத்தை கெடுத்தார் ?

எது வேகாமாகச் செல்கிறதோ, அதன் வேகத்தை குறைக்க வேண்டும். அவ்வளவுதான்.

எது மிக வேகமாகச் செல்லும் ?

அனுமனின் வேகத்திற்கு ஒரு உதாரணம் தேடினார் கம்பர். மின்னல் போல் வேகம் என்று சொல்லலாமா  என்று யோசித்தார். அதுதான் எல்லோரும் சொல்கிறார்களே. அதை விட வேகமான ஒன்றை உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.

மனம் தான் மிகுந்த வேகத்தோடு செல்வது. நினைத்த மாத்திரத்தில் சந்திரனுக்கு சென்று விடலாம். ஒரு நொடி கூட ஆகாது. அந்த மனதின் வேகத்தை விட வேகமாகச் சென்றான் என்பார் கம்பர்.

"தன் மனதின் முன் செல்வான் " என்பது கம்பர் வாக்கு.

முந்துஅரம்பையர் முதலினர், முழுமதி முகத்துச்
சிந்துரம் பயில்வாச்சியர், பலரையும் தெரிந்து,
மந்திரம்பலகடந்து, தன்மனத்தின்முன் செல்வான்
இந்திரன் சிறைஇருந்த வாயிலின் கடை எதிர்ந்தான்.

நமது மனம்தான். மனோ வேகம் என்று சொல்லுவார்கள். இங்கே இருந்து கொண்டே வைகுண்டம் என்று சொன்னால் போதும் வைகுண்டம் போய்  விடும். பாற்கடல், ஆதி சேஷன், பெருமாள், இலக்குமி என்று அங்கே போய் சேர்ந்து விடும்.

கைலாயம் என்று சொன்னால் போதும். உடனே மனம் அங்கே போய் விடும். குளிர்ந்த  மலை உச்சி, சிவன், பார்வதி, காளை வாகனம் என்று.

எந்நேரமும் ஒரு இடத்தில் நிற்காது. இங்கிருக்கும் போது அங்கே ஓடும். அங்கே இருக்கும் போது இங்கே தாவும். அங்கே பிள்ளை என்ன செய்கிறானோ என்று பிள்ளை இருக்கும் இடத்துக்குப் போகும். அங்கே அவர்  என்ன செய்கிறாரோ என்று கணவன் இருக்கும் இடம் ஓடும். அவ இப்ப என்ன செய்து கொண்டு இருப்பாள் என்று காதலி இருக்கும் இடம்  நாடும். "அந்தக் காலத்தில் " என்று பின்னோக்கி ஓடும். எனக்கு மட்டும் அது கிடைத்தால் என்று எதிர் காலம் நோக்கி ஓடும்.

ஒரு நாள் அமைதியாகி இருந்து கவனித்துப் பாருங்கள். உங்கள் மனம் என்ன ஓட்டம் ஓடுகிறது என்று தெரியும். இடம் விட்டு இடம் மட்டும் அல்ல, காலம் விட்டு காலமும் ஓடும். கற்பனையான இடங்களுக்குப் போகும்.

அதை கொஞ்சம் வேகத்தை நிறுத்தி, ஒரு நிலையில் வைக்க முடியுமா ?

மிக மிக கடினம்.

அருணகிரிநாதர் , முருகன் அருள் கிடைக்க வில்லை என்று கோவில் கோபுரத்தில் ஏறி  கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். குதித்தும் விட்டார். பாதி வழியில், முருகன் கையில் ஏந்திக்  கொண்டான். அருணகிரிக்கு இரண்டே இரண்டு வார்த்தைகள் தான் உபதேசம் செய்தான் முருகன். "சும்மா இரு". உடல் சும்மா இருந்து விடும். மனம் சும்மா இருக்குமா ?

மனதை கட்டுப் படுத்த நினைத்தால் அது இன்னும் கொஞ்சம் வேகம் கொண்டு ஓடும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நமது அன்றாட வாழ்க்கையைப் பார்ப்போம். எவ்வளவு பரபரப்பு. ஓட்டம். படபடப்பு.

மனைவியோடு அன்பாக இருந்து பேச நேரம் இல்லை.

பிள்ளைகளை கொஞ்ச நேரம் இல்லை.

மழையில் நனைய, நல்ல கவிதை வாசிக்க, புல் தரையின் இதம் உணர, மென்மையான இசை கேட்க, உணவை இரசித்து உண்ண , கணவன் தலை கோத , மனைவியின் விரல் பற்றி நடக்க .....எதற்காவது நேரம் இருக்கிறதா ?

ஒரே ஓட்டம் தான்.

வாழ்க்கையே புரியாத போது, இறை எங்கே புரியப் போகிறது?

ஓடும் மனதின் வேகத்தைக் குறைத்து, அதை அலை பாய விடாமல் நிறுத்தி என்னை ஆண்டு கொண்ட தலைவன் அடி வாழ்க.

இதைத்தான் பதஞ்சலியும் தன் யோக சாத்திரத்தில் கூறுவார்

"சித்த விருத்தி நிரோதம்" என்று. யோக சூத்தரத்தின் முதல் சூத்திரம் அது.  ஓடும் மனதை நிலை நிறுத்த வேண்டும்.

அடுத்த வரிக்குப் போவோமா ?

"பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க"

வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் தெரியும். சில சமயம் அவசரத்தில் ஈரத் தலையோடு முடியை அவசரமாக முடிந்து கொண்டு போவார்கள். மறு நாள் பார்த்தால், ஒரே சிக்காக இருக்கும். "ஈரத்தோட தலையை முடிந்தால் இப்படித் தான் பிசுக்குப் பிடித்து சிக்கலாக இருக்கும் " என்று அம்மாவிடம் பாட்டு வாங்குவார்கள். அந்த ஈரப் பிசுக்குத் தான் "பிஞ்சு" என்று ஆனது.

சிவன் தலையில் எந்நேரமும் நீர். கங்கை. அதோடு கூட முடி போட்டால் சிக்கல் ஆகி பிசுக்கு பிடிக்காமல் என்ன செய்யும் ?

எனவே "பிஞ்சகன்"

பிறப்பறுக்கும் பிஞ்சகன்.

மரணம் இல்லாமல் வாழ வழி இருக்கிறது. அதற்கு ஒரே வழி பிறக்காமல் இருப்பதுதான். பிறந்தது எல்லாம் இறந்தே தீரும். இறக்காமல் இருக்க வேண்டும் என்றால், பிறக்காமல் இருக்க வேண்டும்.

"பிரபு அறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்" என்பார் அபிராமி பட்டர்.

பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே

என்பது அபிராமி அந்தாதி.

நாம் மறுபடி மறுபடி பிறப்பதால் நமக்கு மட்டுமா துன்பம் ? நம்மை பெறுவதற்கு ஒரு தாய் வேண்டும். அவளுக்கு எவ்வளவு துன்பம்? பிரசவ வேதனை என்றால் சாதாரணமா?  நோய் என்றால் , அடி  கிடி பட்டு விட்டால்  உடம்பில்  ஏதோ ஓரிரண்டு இடத்தில் தான் வலிக்கும். பிள்ளை பெறுவது என்றால் உடம்பு அத்தனையும் வலிக்கும். "அங்கமெல்லாம் நொந்து பெற்றாள் " என்பார் பட்டினத்தார்.  அது அம்மாவுக்கு உண்டான வலி. இந்த பிரம்மன் இருக்கிறானே, நாம் ஒவ்வொரு முறை பிறக்கும் போதும் நமக்கு தலை எழுத்தை எழுத வேண்டும். அவனுக்கு கை வலிக்காதா? எத்தனை தடவைதான் எழுதுவான்?

"இன்னும் ஓர் கருப்பையிலே வாராமல் கா " என்று வேண்டுகிறார் பட்டினத்தடிகள்.


மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை
கருப்பையிலே வாராமற் கா’

இந்த பிறவிப் பிணியில்  இருந்து விடுதலை தருபவன் ஈசன்.

பிறப்பறுக்கும் பிஞ்சகன் தன் பெய் கழல்கள் வெல்க


மேலும் சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_9.html

Monday, February 12, 2018

திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - ஐவாய் அரவம்

திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - ஐவாய் அரவம் 


நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆசைகள் நம்மிடம் இருந்து எழுகின்றன. அவற்றை நாம் அடக்க வேண்டும். ஆசையை தவிர்க்க வேண்டும் என்று.

உண்மையில் அப்படியா நடக்கிறது ? நாம் பாட்டுக்கு சிவனேனு ஒரு ஓரத்தில் இருப்போம்.

டிவி இல் நல்ல கார் ஒன்றின் விளம்பரம் போகும். அடடா நமக்கு அந்த மாதிரி ஒரு கார் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கிறோம். ஆசை எங்கிருந்து வந்தது ? டீ வி யில் இருந்து நமக்குள் வந்தது.

அந்த பொண்ணு கட்டி இருக்கிற புடவை மாதிரி, அந்த நகை மாதிரி, அந்த மாதிரி வீடு, அந்த மாதிரி உடல் அமைப்பு, என்று வெளி உலகம் நமக்குள் ஆசையை தூண்டுகின்றது. நம்மால் அவற்றை கட்டுப் படுத்த முடியுமா ? ஒவ்வொரு புலன்கள் வழியாகவும் , பாம்பு , அதன் புற்றினுள் நுழைவது மாதிரி சத்தம் இல்லாமல் நுழைந்து விடுகின்றன. நுழைந்த பாம்பு சும்மா இருக்குமா ? கடித்து விஷம் தலைக்கு ஏறி துன்பம் தரும் அல்லவா அது போல துன்பப் படுகிறேன் என்கிறார் மணிவாசகர். ஒரு தலை பாம்பு அல்ல, ஐந்து தலை பாம்பாம். ஐந்து புலன்கள் வழியாகவும் உள்ளே நுழைந்து விடுகின்றன என்கிறார்.

அந்த ஐந்து தலை நாகத்திடம் இருந்து என்னை காப்பாற்று. கை விட்டு விடாதே என்று கதறுகிறார். எனக்கு உன்னை வழிபாடு செய்யக் கூடத் தெரியாது என்கிறார்

பாடல்



பரம்பர னேநின் பழஅடி யாரொடும்
    என்படிறு
விரும்பர னேவிட் டிடுதிகண் டாய்மென்
    முயற்கறையின்
அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவிஐ
    வாயரவம்
பொரும்பெ ருமான்வினை யேன்மனம் அஞ்சிப்
    பொதும்புறவே 

பொருள்


பரம்பரனே = பரம் என்றால் உயர்ந்த. பரம பதம். பரம்பரை. பரம் + பரம்பரனே. எல்லாவற்றிற்கு உயர்ந்தவனே

நின் = உன்னுடைய

பழஅடி யாரொடும் = பழைய அடியாரோடு கூட

என்படிறு = படிறு என்றால் குற்றம். என் குறையுள்ள, குற்றம் உள்ள பக்தியையும்

விரும்பும் = விரும்பி ஏற்றுக் கொள்ளும்

அரனே = பாம்பை அணிந்தவனே

விட் டிடுதிகண் டாய் = விட்டு விடாதே

முயற்கறையின் = முயலின் மேல் உள்ள கறை போல

அரும்பு = அரும்பு போன்ற பிறை நிலவையும்அ

அர  =  அரவம்

நேர்வைத் தணிந்தாய் = சமமாக பாவித்து அணிந்தாய்

 பிறவி = பிறவியில்

ஐவாயரவம் = ஐந்து வாயுள்ள அரவம்

பொரும்  - என்னோடு சண்டை செய்யும்

பெருமான் = பெருமானே

என் = என்னுடைய

மனம் = மனம்

அஞ்சி = அச்சம் கொண்டு

பொதும்புறவே = புகலிடம் தேடி அலைகிறதே


ஆசை, ஐந்து தலை நாகம் போல படம் எடுத்து வந்து ஆடுகிறது. பயமாக இருக்கிறது என்கிறார்.


உன்னை வேண்டினால் நீ ஏற்றுக் கொள்வாய். ஆனால், எனக்கோ எப்படி பக்தி செய்வது என்றே தெரியவில்லை.

இருந்தும், உன் பழைய அடியார்களின் பக்தியை நீ எப்படி ஏற்றுக் கொள்வாயோ அப்படியே என் பக்தியையும் ஏற்றுக் கொள் என்கிறார்.

நிலவில் கறை இருக்கும். பார்த்து இருப்பீர்கள். அது எப்படி இருக்கிறதாம் ? வெள்ளை வெளேர் என்று இருக்கும் முயலின் உடலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக  சில அழுக்குகள் இருக்குமே அது போல இருக்கிறதாம்.


என்ன சொல்ல வருகிறார்.

கறை உள்ள சந்திரனை உன் தலை மேல் வைத்துக் கொண்டிருக்கிறாய். குறைகளை மன்னித்து  ஏற்றுக் கொள்வது உன் இயல்பு. என் குறையையும் மன்னித்து ஏற்றுக் கொள் என்று சொல்கிறார்.


ஆசை , பாம்பைப் போல வருகிறது. எனக்கு பயமாக இருக்கிறது.. ஆனால், நீதான்  பாம்பை கழுத்தில் சுத்தி வைத்திருக்கிறாயே. உனக்கு என்ன பயம். இந்த ஆசை என்ற பாம்பிடம் இருந்து என்னை காப்பாற்று என்கிறார்.

ஆசை வரும் போது பயப்பட வேண்டும்.

இது நம்மை பின்னாளில் என்னவெல்லாம் சிக்கலில் இழுத்து விடப் போகிறதோ என்று பதற வேண்டும்.

வீடு வேண்டும் என்று ஆசைப் பட்டால், எவ்வளவு துன்பங்களை சகிக்க வேண்டி இருக்கும் ?


ஆசையால் அழியாதவர் யார் இருக்கிறார்கள். ஆசை மனதில் எழும் போது , ஐந்து தலை நாகம் படம் எடுப்பதாக உணர்ந்தால் அந்த ஆசையை எப்படி கையாள வேண்டும் என்று நாம் அறிவோம்.

மணிவாசகம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_12.html