Monday, May 26, 2014

நள வெண்பா - கன்னி மனக்கோயில் கைக்கொள்ள

நள வெண்பா - கன்னி மனக்கோயில் கைக்கொள்ள


அன்னப் பறவை வந்து நள மகாராஜாவிடம் தமயந்தியின் அழகைப் பற்றி சொல்லத் தொடங்கியது. அந்த சொல் அவனின் காதில் சென்று விழுவதற்குள் தமயந்தி அவன் மனம் என்ற கோவிலில் சென்று அதை கைப் பற்றிக் கொண்டாள் . அந்த நேரத்தில், நளன் "அவள் யாருடைய பெண் " என்று அன்னத்திடம் கேட்டான்.  அதே சமயம் மன்மதன் தன் கரும்பு வில்லை வளைத்து நளன் மேல் மலர் அம்புகளைத் செலுத்தத் தொடங்கினான். நளனும் அதனால் உடலும் உள்ளமும் பதைத்தான்.

பாடல்

அன்னம் மொழிந்த மொழிபுகா முன்புக்குக்
கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச் - சொன்னமயில்
ஆர்மடந்தை என்றான் அனங்கன் சிலைவளைப்ப
பார்மடந்தை கோமான் பதைத்து.

பொருள்

அன்னம் = அன்னப் பறவை

மொழிந்த = சொன்ன

மொழிபுகா முன்புக்குக் = சொல் அவன் காதில் நுழைவதற்கு முன்

கன்னி = கன்னியாகிய தமயந்தி

மனக்கோயில் = நளனின்  மனமாகிய கோவிலை

கைக்கொள்ளச் = கைப்பற்றிக் கொள்ள

சொன்னமயில் = "நீ சொன்ன அந்த மயில்"

ஆர்மடந்தை = யார் பெற்ற பெண்

என்றான் = என்று நளன்  கேட்டான்

அனங்கன் = மன்மதன்

சிலைவளைப்ப = வில்லை வளைக்க (சிலை = வில்)

பார்மடந்தை = பூலோகத்தின்

கோமான் = அரசன்

பதைத்து = உடல் பதைத்துக் கேட்டான்

இவளுக்க சும்மா இருக்கிறது இல்ல. மனசுக்குள்ள ஏறி உக்காந்துகிட்டு படுத்தறது. பதறாம என்ன செய்யும் ?


1 comment: