Showing posts with label அபிராமி அந்தாதி. Show all posts
Showing posts with label அபிராமி அந்தாதி. Show all posts

Wednesday, March 9, 2016

அபிராமி அந்தாதி - கட்டி குடுத்தாச்சு

 அபிராமி அந்தாதி - கட்டி குடுத்தாச்சு 


பாடல்

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன் 
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த 
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம், 
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே

பொருள்

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை = குயில் போல இருப்பாள் கடம்பா அடவியில் (அடவி என்றால் காடு)


கோல வியன்  = அழகிய

மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை = மயில் போல இருப்பாள் இமய மலையில்

வந்து உதித்த  = வந்து உதித்த

வெயிலாய் இருக்கும் விசும்பில் = மலையின் மேல் வெயில் போல இருப்பாள்

கமலத்தின்மீது அன்னமாம் = தாமரை மலரின் மேல் தோன்றும் அன்னப் பறவை போல இருப்பாள்

கயிலாயருக்கு = கயிலை மலையில் இருக்கும் சிவனுக்கு

அன்று இமவான் அளித்த கனங்குழையே = அன்று ஒரு நாள் இமவான் அளித்த

பாடல் இவ்வளவுதான். 

இதில் என்ன இருக்கிறது ? 

மயில் போல, குயில் போல, அன்னம் போல , வெயில் போல, அன்னம் போல இருக்கிறாள்  அபிராமி என்று கூறுகிறார். இதில் புதுமையான விஷயம் ஒன்று இல்லை என்றே தோன்றும்.

பொறுங்கள். 

மிக மிக ஆழமான, நுண்ணியமான செய்தியை கூறுகிறார் பட்டர்.

நாம் பேசும் போது , அந்த சப்தம் நமக்கும் அருகில் இருப்பவர்களுக்கும் கேட்கிறது  அல்லவா ?

நாம் மனதுக்குள் பேச முடியும் அல்லவா ? மாணவர்களை மனதுக்குள் படியுங்கள் என்று சொன்னால் அவர்கள் படிப்பார்கள். ஒவ்வொரு எழுத்தாய் , ஒவ்வொரு வார்த்தையாய் வாசிப்பார்கள்.  அந்த வார்த்தைகளின் சப்தம் அவர்களுக்கு கேட்க்கும் , அருகில் இருப்பவர்களுக்கு கேட்க்காது. 
இன்னும் ஒரு படி உள்ளே போகலாம்.  அக்ஷரம் இல்லாமல் வார்த்தைகள் இல்லாமல்  சொல்ல வேண்டியதை நினைக்க முடியும். ஒலி வடிவம் இல்லை ஆனால்  அந்த வார்த்தைகள் தரும் அர்த்தம் மொத்தமும் உள்ளே ஓடும். 

அதற்கும் முந்தைய நிலை இருக்கிறது. அந்த நிலையில் சப்தம் தோன்றும்.  சொல்பவருக்கே கூட  தெரியாது. 

இதை  சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்ற நாலு விதமான நிலை என்று சொல்லுவார்கள். 

சூக்குமை...சூட்சுமமானது. நமக்கும் மற்றவர்களுக்கும் தெரியாது. மூலாதாரத்தில்  இது தோன்றும். 

அடுத்த நிலை பைசந்தி, வார்த்தை முழுதுமாக உருவாவிட்டாலும் அது தோன்றுவது  தெரியும். நாபிக் கமலத்தில் இருக்கும் இது. 

அடுத்த நிலை மத்திமை - தொண்டையில் இருப்பது. மூச்சுக் காற்றுடன் சேர்ந்து ஒலி வடிவம் இருக்கும். நமக்கு கேட்கும். மற்றவர்களுக்கு கேட்காது. ஆரூடம் சொல்பவர்கள் இந்த ஒலியை கேட்க்கும் சக்தி படைத்தவர்கள். நாம் வாய் விட்டு சொல்லாமலே மனதுக்குள் ஒலிக்கும் அந்த ஒலியை அவர்களால் கேட்க முடியும். நாம் நம்மைப் பற்றி நினைப்பதை, கேட்க நினைப்பதை அவர்கள் நம்மிடம் இருந்தே கேட்டுக் கொள்ளவார்கள். நாம் நினைப்போம், இது எப்படி  அவர்களுக்குத் தெரிந்தது , நாம் சொல்லவே இல்லையே என்று.  
மந்திரங்களை இந்த இடத்தில் சொல்ல முடியும். அதற்கு அசபா மந்திரம் என்று பெயர். 

இதைத்தான் ஔவையார் 

குண்டலியதனிற் கூடிய அசபை , விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி’

என்பார் 

வைகரி - இறுதியாக வெளிப்படுவது. நமக்கும் மற்றவர்களுக்கும் கேட்கும். 

சூக்குமையில் இருக்கும் போது , வாக்கு ஒளி வடிவில் இருக்கும்.    மேலே எழுந்து வரும் போது அது ஒலி வடிவம் பெறும்.


குயிலாய் இருக்கும் = குயில் கூவுவது கேட்கும். இது வெளிப்பட்ட சப்தம். குயில் இருக்கும் இடம் தெரியாது. ஒளி வடிவம் இல்லை.


மயிலாய் இருக்கும் = மயில் பார்பதற்கு உகந்தது.  அழகாய் இருக்கும். ஒளி வடிவமானது.


வந்து உதித்த = உதித்தல் என்றால், இருப்பது வெளிப்படுவது. சூரியன் உதிப்பான். சூரியன் தோன்றினான் என்று சொல்லக் கூடாது.

வெயிலாய் இருக்கும் = மயில் சற்று மயக்கமான உருவைத் தரும். நீளமும், பசுமையும், இடை இடை வெளியும் விட்டு, அசையும் போது அதன் அழகு தெரியும், ஆனால் முழுவதும் தெரியாது. ;ஆனால், வெயில் தெளிவாகத் தெரியும்.

கமலத்தின்மீது அன்னமாம் = ஞான முக்தி அடைந்தவர்களை அன்னம் என்று குறிப்பிடுவார்கள். அன்னத்திற்கு வட மொழியில் ஹம்சம் என்று பெயர்.

இராம கிருஷ்ண பரம ஹம்சர்.

ஞானம் என்பது உண்மையையும் , உண்மை அல்லாததையும் கண்டு தெளிவது. எனவே ஞானிகளை ஹம்சர் என்று குறிப்பிடுவார்கள்.

இந்த உண்மைகளை அறியும் போது ஞானம் பிறக்கும் என்று பட்டர் கூறுகிறார்.


இந்த மயில் , குயில் எல்லாம் உண்மையா ? வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

வானத்தில் மயில் ஆடக் கண்டேன் 
மயில் குயில் ஆச்சுதடி குதம்பாய், மயில் குயில் ஆச்சுதடி  


என்பார் குதம்பைச் சித்தர்.

அபிராமி அந்தாதி ஒரு ஞானப் பெட்டகம்.

ஆழ்ந்து படிக்க வேண்டும்.


For other entries: http://interestingtamilpoems.blogspot.com/2016/03/blog-post_9.html

Wednesday, October 7, 2015

அபிராமி அந்தாதி - சாதித்தவர்கள் என்ன செய்தார்கள் ?

அபிராமி அந்தாதி - சாதித்தவர்கள் என்ன செய்தார்கள் ?


வாழ்வில் பெரிய சாதனைகளை செய்ய என்ன செய்ய வேண்டும் ? வாழ்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?

ஆண்டாண்டு காலமாய் இதைப்  பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது ?

கடின உழைப்பு, அதிர்ஷ்டம், சூழ்நிலை, தொலை நோக்கு பார்வை, மனிதர்களை வழி நடத்தும் தலைமை குணம், என்று எத்தனையோ சொல்கிறார்கள்.

ஆனால், இவை இல்லாதவர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். படிக்காமல், கல்லூரிக்கு கூட போகாத பெரிய பெரிய பணக்காரர்கள் உண்டு. அவர்களிடம் கை கட்டி வேலை செய்யும் பெரிய படிப்பு படித்தவர்கள் உண்டு.

அப்படி என்றால் சாதனையாளர்களிடம் பொதுவாக காணப் படுவது எது ? எல்லா சாதனையாளர்களும் செய்யும் ஒன்று என்ன ?

அபிராமி பட்டர் சொல்கிறார் - அப்படி சாதித்த பெரியவர்கள் எல்லோரும் அபிராமியை போற்றினார்கள்.

சாதித்தவர்கள் என்றால் ஏதோ கொஞ்சம் பணம் சேர்த்தவர்கள், சண்டை பிடித்து நாடுகளை பிடித்தவர்கள் அல்ல. அதுக்கும் மேலே, அதுக்கும் மேலே....

பட்டியல் தருகிறார் பட்டர் ...

பாடல்

ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தம் கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடை கந்தன் கணபதி காமன் முதல்

சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே


பொருள்

ஆதித்தன் = சூரியன்

அம்புலி = சந்திரன்

அங்கி = அக்கினி கடவுள்

குபேரன் = செல்வத்தின் அதிபதியான குபேரன்

அமரர் தம் கோன் = தேவர்களின் தலைவனான இந்திரன்

போதிற் பிரமன் = மலரில் இருக்கும் பிரமன் (போது = மலர்)

புராரி = முப்புரங்களை எரித்த சிவன்

முராரி = திருமால்

பொதியமுனி = அகத்தியர்

காதிப் பொருபடை கந்தன் = பெரிய படைகளை கொண்ட கந்தன்

கணபதி = கணங்களுக்கு அதிபதியான கணபதி

காமன் = அழகில் சிறந்த மன்மதன்

முதல் = அவர்களில் இருந்து


சாதித்த புண்ணியர் = இன்று வரை உள்ள சாதனை செய்த புண்ணியம் செய்தவர்கள்

எண்ணிலர் = கணக்கில் அடங்காதவர்கள்

போற்றுவர் தையலையே = போற்றுவார்கள் அபிராமியையே

செல்வம் வேண்டுமா ? செல்வத்தின் அதிபதியான குபேரன் அபிராமியை போற்றுகிறான்.

பதவி வேண்டுமா ? தேவ லோகத்தின் தலைவனான இந்திரன் அவளைப் போற்றுகிறான்.

வீரம் வேண்டுமா ? சிறந்த சேனாதிபதியான முருகன் அவளைப் போற்றுகிறான்.

அறிவு விடுமா ? அகத்தியர் அவளைப் போற்றுகிறார். 

அழகு வேண்டுமா ? அழகிற் சிறந்த மன்மதன் அவளைப் போற்றுகிறான் 

உலகை வழி காட்டும் ஒளியாக இருக்க வேண்டுமா ? சூரியன் அவளைப் போற்றுகிறான். 

மக்கள் மேல் கருணை செலுத்த வேண்டுமா ? குளிர்ந்த சந்திரன் அவளைப் போற்றுகிறான்.

அவர்கள் எல்லாம் அவளைப் போற்றி அந்த நிலையை அடைந்தனர். 

எல்லா பெண்ணுக்குள்ளும் அபிராமியின் ஒரு பகுதி உண்டு. 

பூத்தவளே , புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே என்பார் பட்டர்.

உலகில் உயிர்களை கொண்டு வந்து அவற்றை காக்கும் எந்த பெண்ணும் அபிராமியின் அம்சம்தான். 

பெண்ணைப் போற்றுங்கள். பெருமை வரும்.

அபிராமி....அபிராமி...அபிராமி....

நான் எப்போதும் சொல்வது போல, அபிராமி அந்தாதி படித்து, அருஞ்சொற் பொருள் புரிந்து அறிந்து கொள்வது அல்ல.

அதையும் தாண்டி, பட்டரின் மனம் உணர்ந்து பாடல்களை உணர வேண்டும். 



Thursday, September 10, 2015

அபிராமி அந்தாதி - பூத்தவளே

அபிராமி அந்தாதி - பூத்தவளே 



பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே


எந்த வீட்டுக்கும், காலையில் போய் பார்த்தால் தெரியும்...ஒரு பெரிய யுத்தமே நடந்து கொண்டிருக்கும். ...

குழந்தைகளை எழுப்புவதும், அவர்களை குளித்து பள்ளிக்குச் செல்ல தயார் பண்ணுவதும், சிற்றுண்டி தயார்  பண்ணுவதும்,  மதிய உணவு தயார் செய்ய  வேண்டும், இதற்கிடையில் தொலை காட்சியில்  ஏதாவது ஓடிக் கொண்டிருக்கும், தொலை பேசி வரும்...இப்படி பெரிய களேபரமாய் இருக்கும்.

ஒரு வீட்டில்,இரண்டு அல்லது மூணு பேரை தயார் செய்து அனுப்புவது என்றாலே இவ்வளவு சத்தம், களேபரம்....இந்த உலகையே படைப்பது என்றால் எவ்வளவு சிக்கலான காரியம் ?

இந்த உலகத்தை ஒரு மலர் மலர்வது போல மிக மென்மையாக அபிராமி படைத்தாளாம்.

பூத்தவளே புவனம் பதினான்கையும்

அனைத்து உலகங்களையும் ஒரு மலர் மலர்வது போல் படித்தாள்.

சரி, படைத்தாகி விட்டது. அத்தனை உயிர்களையும் காக்க வேண்டும் அல்லவா. எப்படி மென்மையாக படைத்தாளோ, அதே போல் அனைத்து உயிர்களையும் காக்கின்றாள்.

பூத்த வண்ணம் காத்தவளே. 

நமக்கு வாழ்வில் துன்பம் வரும். வேண்டியது கிடைக்காது. கிடைத்தது கை விட்டுப் போகும்.  நட்டம் வரும். இழப்பு வரும். கிடைக்க வேண்டியது கிடைக்காமல் துன்பப் படுவோம்.

வீட்டில் விசேஷம் என்றால் அம்மா பல பலகாரங்கள் செய்வாள். குழந்தை அது வேண்டும் , இது வேண்டும் என்று கேட்கும்.  தாய் பார்த்துக் கொண்டே இருப்பாள். அளவுக்கு மேலே போனால், பலகாரங்களை எடுத்து உள்ளே வைத்து விடுவாள். "காலியா போச்சு, நாளைக்குத் தருகிறேன் " என்று மறைத்து வைத்து விடுவாள். குழந்தை அழும். அம்மாவுக்குத் தெரியும், அழுதாலும் தர மாட்டாள். குழந்தையின் மேல் உள்ள அன்பால், அதுக்கு ஒரு தீங்கு வந்து விடக் கூடாதே என்று நினைத்து அந்த ருசியான பலகாரங்களை மறைத்து  வைப்பாள்.

அபிராமியும் அப்படித்தான். நமக்குத் தராமல் சிலவற்றை மறைத்து வைக்கிறாள் என்றால் ஏதோ காரணம் இருக்கும்.

"பின் கரந்தவளே" (கரத்தல் = மறைத்து வைத்தல்)

பெண் பல வடிவம் எடுக்கிறாள். அது தாயக இருந்தாலும், தாரமாக இருந்தாலும், சகோதரியாக இருந்தாலும், மகளாக இருந்தாலும் ஒரே பெண் பல வடிவம் எடுக்கிறாள்.

மகள் சின்னப் பெண்ணாக இருப்பாள்., அப்பாவுக்கோ , அம்மாவுக்கோ உடல் நிலை சரி என்றால், திடீரென்று வளர்ந்து பெரிய பெண் போல அவள் வீட்டை நிர்வகிக்க தொடங்கி விடுவாள். அவளே சமையல் செய்வாள். காப்பி போடுவாள். "பாரேன், இந்த பிள்ளைய " என்று பெற்றவர்களே வியப்பார்கள்.

நமக்கு உடல் நிலை சரி என்றால் , மனைவியே தாயாக மாறி பணிவிடை செய்வாள்.

பாட்டியாகவே இருக்கட்டும், பேரன் ஒரு சேலை வாங்கித் தந்தால் , பதினாறு வயது பெண் போல வெட்கப் படுவாள்.

அவளுக்கு வயது இல்லை. எல்லாமாக அவள் இருக்கிறாள்.

பட்டர் பார்க்கிறார்...இந்த அபிராமிக்கு எத்தனை வயது இருக்கும் ? ஒரு சமயம் பார்த்தால் சின்ன பொண்ணு மாதிரி இருக்கா....இன்னொரு சமயம் பார்த்தால் பெரிய பெண் போல இருக்கிறாள்...

"கறை கண்டனுக்கு மூத்தவளே". கண்டத்திலே கறை உள்ளவன் சிவன். அவனை விட மூத்தவள் போல இருக்கிறாள்.

"என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே " திருமாலுக்கு இளையவள் போலவும் இருக்கிறாள்.

 இவளை விட்டால் வேறு யார் நமக்கு ?

பாட்டை இன்னொரு தரம் படியுங்கள் ...


பூத்தவளே,

புவனம் பதினான்கையும்

பூத்தவண்ணம் காத்தவளே

பின் கரந்தவளே

கறைகண்டனுக்கு மூத்தவளே

என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே

மாத்தவளே

உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே


(இதற்கு உரை எழுதிய பெரியவர்கள் பெரிய ஆராய்ச்சி எல்லாம் பண்ணி இருக்கிறார்கள். புவனம் எழா ? அல்லது பதினான்கா ? 

சிவனுக்கு மூத்தவள், திருமாலுக்கு இளையவள் என்றால் சிவன் திருமாலை விட  இளையவனா மூத்தவனா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.  
இது எனக்குத் தோன்றியது. அனைத்தயும் படித்துப் பாருங்கள். பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள் )


Sunday, May 31, 2015

அபிராமி அந்தாதி - கல்லாமை கற்ற கயவர்

அபிராமி அந்தாதி - கல்லாமை கற்ற கயவர்


நாம் ஒன்றைச் செய்ய முடிவு செய்யும்போது, அது அல்லாத மற்றவற்றை செய்வதில்லை என்ற முடிவையும் எடுக்கிறோம்.

அடுத்த ஒரு மணி நேரம் டிவி பார்ப்பது என்று முடிவு செய்து விட்டால், அடுத்த ஒரு மணி நேரம் படிப்பது இல்லை, உடற் பயிற்சி செய்வது இல்லை, என்று எத்தனையோ விஷயங்களை செய்வது இல்லை என்பதும் முடிவு செய்யப் படுகிறது அல்லவா.

அதே போல், நாம் ஒன்றை படிக்கிறோம் என்று முடிவு செய்து விட்டால், அந்த ஒன்றைத் தவிர மற்றவை எல்லாம் படிப்பது இல்லை என்றும் முடிவு செய்கிறோம்.

எஞ்சினீரிங் படிப்பது என்றால் மருத்துவம் படிப்பது அல்ல, சட்டம் படிப்பது இல்லை, வணிகம் படிப்பது இல்லை என்று முடிவு செய்கிறோம்.

உலகில் ஒன்றைப் படிப்பது என்றால், ஒரு கோடி விஷயத்தை படிக்காமல் விடுவோம்.

கற்பது என்பது கல்லாமையும் அடங்கியது.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

வாழ்வில் மிக மிக கொடுமையானது எது என்றால் வறுமை.

 கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை

என்பார் ஔவையார். வறுமையின் கொடுமை அதை அனுபவித்தர்களுக்குத்தான் தெரியும்.

அந்த வறுமையை போக்க அபிராமியின் பாதங்களைப் பற்றுங்கள் என்று அழைக்கிறார் அபிராமி பட்டர்.

பாடல்

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே

பொருள்

இல்லாமை சொல்லி = என்னிடம் இல்லை என்று  சொல்லி

ஒருவர் தம்பால் சென்று = மற்றவர்களிடம் சென்று

இழிவுபட்டு = கேவலப் பட்டு

நில்லாமை = நிற்காமல் இருப்பதை

 நினைகுவிரேல் = நீங்கள் நினைத்தால்

நித்தம் = தினமும்

நீடு தவம் = நீண்ட தவம்

கல்லாமை = கல்லாமல் இருப்பது

கற்ற கயவர் தம்பால் = அதைக் கற்ற கயவர்களிடம்

ஒரு காலத்தும் = எப்போதும்

செல்லாமை வைத்த = செல்லாமல் காக்கும்

திரிபுரை = அபிராமியின்

பாதங்கள் சேர்மின்களே = பாதங்களை அடையுங்கள்.

இல்லாமை என்று கூறும்போது, அது செல்வம் இல்லாமை மட்டும் இல்லை, கல்வி, ஆரோகியம், அதிகாரம், புகழ், மதிப்பு, என்று எந்த ஒரு இல்லாமையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அவள் பாதங்களைப் பற்றுங்கள், இல்லை என்று சொல்லி நீங்கள் இன்னொருவரிடம்  செல்ல வேண்டியது இருக்காது. எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.

அது என்ன "கல்லாமை கற்ற கயவர்"

நாம் ஏதோ படித்து விட்டோம் என்று இறுமாப்பு கொள்கிறோம். நாம் படிக்காததையும், படித்தையும் வைத்துப் பார்த்தால் தெரியும் நாம் படித்தது எவ்வளவு, படிக்காமல் விட்டது எவ்வளவு என்று.

நாம், கல்லாமையைக் கற்று இருக்கிறோம்.

அறியாமையை அறிந்து இருக்கிறோம்.

மேலும், நம் கல்வி நம்மை எங்கே இட்டுச் செல்கிறது ?  

"நித்தம் நீடு தவம் கல்லாமை கற்ற கயவர் தம்பால்"

நீண்ட தவத்தை கற்காத  கயவர் தம்பால். எதையெதையோ கற்கிறோம். நீண்ட தவத்தை கற்க வேண்டும் என்கிறார் பட்டர்.

 


Wednesday, May 27, 2015

அபிராமி அந்தாதி - என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்

அபிராமி அந்தாதி - என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்



ஒரு பெண்ணை காதலிப்பவன் அவனுடைய காதலியை காணாமல் எப்படி தவிப்பான்.

காலையில் எழுந்தவுடன், அவள் இந்நேரம் எழுந்திருப்பாளா , பல் விளக்கி இருப்பாளா,  குளித்து, கல்லூரிக்குப் போக தயாராகி இருப்பாளா, இப்போது மதியம் உணவு  உண்டிருப்பாளா , இப்ப வீட்டுக்கு வந்திருப்பாள், இப்ப படித்துக் கொண்டிருப்பாள், இப்ப படுக்கப் போய் இருப்பாள், இப்ப தூங்கி இருப்பாள் என்று எந்நேரமும் அவள் நினைவாகவே இருப்பான் அல்லவா ?

பட்டரும் அதே போல அபிராமியின் நினைவாகவே இருக்கிறார்...எந்நேரமும் அவள் நினைவுதான் அவருக்கு.

நிற்கும் போதும்,
படுத்து இருக்கும் போதும்,
ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து செல்லும் போதும்

அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறார்.

"நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை"

இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று மணிவாசகர் சொன்ன மாதிரி சதா சர்வ காலமும் அவள் நினைப்பே.

 அன்பு, காதல் , பக்தி எல்லாம் படித்து விளங்காது. அது ஒரு அனுபவம். அனுபவம் இருந்தால் புரியும். இல்லை என்றால் அது என்னவென்றே விளங்காது.

பக்தியை புத்தகத்தில் தேடக் கூடாது.

"எழுதா மறையின் ஒன்றும் அரும் பொருளே"  என்கிறார் பட்டர்.

எழுதாத வேதம் அவள் பாதங்கள். சொல்லி விளங்க வைக்க முடியாது. ஒருவர் பெற்ற அனுபவத்தை எழுத்தில் இறக்கி வைக்க முடியாது.

நினைக்க நினைக்க அவர் மனத்தில் ஆனந்தம் பொங்குகிறது.

பாடல்

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!

பொருள்


நின்றும் = நிற்கும் போதும்

இருந்தும்  = உட்கார்ந்து இருக்கும் போதும்

கிடந்தும் = படுத்து கிடக்கும் போதும்

நடந்தும் = நடக்கும் போதும்


நினைப்பதுன்னை = நான் நினைப்பது உன்னைத்தான்

என்றும் வணங்குவது = நான் எப்போதும் வணங்குவது

உன்மலர்த்தாள்!  = உன் மலர் போன்ற திருவடிகளைத்தான்

எழுதா மறையின் = எழுதாத வேதத்தின்

ஒன்றும் அரும் பொருளே! = ஒன்றான அரிய பொருளே . "போற்றி என் வாழ் முதலாகிய பொருளே" என்பார் மணிவாசகர்.

அருளே!  = அருள் வடிவானவளே

உமையே! = தூய்மையானவளே

இமயத்து அன்றும் பிறந்தவளே!  = பர்வத இராஜனுக்கு மகளாக பிறந்தவளே

அழியாமுத்தி ஆனந்தமே! = அழியாத முக்தியும் ஆனந்தமும் ஆனவளே

சொல்லித் தெரியாது காமம்.
சொன்னாலும் தெரியாது காதல்.
பக்தியும் அப்படித்தான் 

உணர்ந்து பாருங்கள்.


Saturday, February 1, 2014

அபிராமி அந்தாதி - பொய்யும் மெய்யும்

அபிராமி அந்தாதி - பொய்யும் மெய்யும் 


பையனுக்கு அம்மா பெண் பார்த்து விட்டு வந்திருக்கிறாள். பையனுக்கு ஒரே ஆர்வம். தனக்கு பார்த்திருக்கும் பெண் எப்படி இருக்கிறாள் என்று அறிந்து கொள்ள.

பொண்ணு எப்படிமா இருக்கா ?

ம்ம்ம்...நல்லாத்தான் மூக்கும் முழியுமா அழகா இருக்கா....

என்ன நிறம்மா ?

ம்ம்ம்...நல்ல சிவப்புன்னு சொல்ல முடியாது...அதுக்குனு கருப்பும் இல்ல. ஒரு மாதிரி மாநிறமா இருக்கா...

உயரமா, குட்டையா ?

சராசரியா இருப்பா....

சரிம்மா...பாக்க யாரு மாதிரி இருப்பா ?

நம்ம வீட்டுல யாரு மாதிரியும் இல்லடா...அவ ஒரு புது மாதிரியா இருக்கா....

ஒரு சாதாரண பெண்ணை பற்றி சொல்ல்வது என்றாலே இவ்வளவு குழப்பம். ஒன்றும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

அபிராமியைப் பற்றி சொல்வதாக இருந்தால் ?

அவளைப் பற்றி எது சொன்னாலும் அது ஒரு முழுமையான வர்ணனையாக இருக்காது. பாதி உண்மை. மீதி பாதி உண்மை இல்லாதது. அவளை முழுமையாக சொல்லி முடியாது.

திணறுகிறார் பட்டர். என்ன சொல்லி விளக்கினாலும் அவளை முழுமையாக சொல்ல முடியவில்லையே என்று தவிக்கிறார்.

பாடல்

ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே


பொருள்

ஐயன் அளந்த படி =  ஐயன் ஆகிய சிவன் அளந்து தந்த படி 

இரு நாழி கொண்டு = இரண்டு நாழி உணவைக் கொண்டு

அண்டம் எல்லாம் = இந்த உலகம் எல்லாம்

உய்ய = வாழும்படி

அறம் செயும் = தர்மத்தைச் செய்யும்

உன்னையும் போற்றி = உன்னையும் போற்றி

ஒருவர் தம் பால் = மற்றவர்களிடம் சென்று

செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு = தமிழால் செய்த பாடல்களைக் கொண்டு

சென்று = அவர்களிடம் சென்று 

பொய்யும் = உண்மை அல்லாதவற்றையும்

மெய்யும் = உண்மையையும்

இயம்ப வைத்தாய் = சொல்ல வைத்தாய்

இதுவோ உந்தன் மெய்யருளே = இதுவா உந்தன் உண்மையான அருள் ?

எப்படி நான் உன்னைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல முடியும் ? என்ன சொன்னாலும் சரியாக வர மாட்டேன் என்கிறதே என்கிறார் பட்டர்.



Sunday, December 29, 2013

அபிராமி அந்தாதி - நலம் கொண்ட நாயகி

அபிராமி அந்தாதி - நலம் கொண்ட நாயகி 



இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே 

பெண்.

அவளன்றி ஏது இந்த உலகம். அவளன்றி அன்பு ஏது, இனிமை ஏது, சுகம் ஏது ?

பெண்மை இயற்கைலேயே  அழகானது.

அவர்களின் குரல் அதை மிக சுகமானது. இனிமையானது.

அழகோடு அறிவும் சேர்ந்து விட்டால்  அதற்கு இணை ஏது ?

ஆண் இயற்கையிலேயே கொஞ்சம் முரடு. கரடு முரடான குரல். சண்டை பிடிக்கும் சுபாவம். வலிமையான உடல்.

பட்டர் அபிராமியை பார்க்கிறார்.

என்ன ஒரு பேரழகு. அவள் உடல் அழகை பார்த்து வியக்கிறார். அதற்கு மேல் அவளின் இனிய குரல். இனிமை என்றால் பனி போல சில்லென்று இருக்கும் இனிமை.

அவளின் அறிவோ - வேதங்களின் முடிவான அறிவு. கரை கண்ட அறிவு.

இத்தனையும் ஒன்றாக சேர்ந்த அவளை பார்க்கிறார்.

அவளுடைய கழுத்தில் ஒரு முத்து மாலை இருக்கிறது. அந்த மாலை அவளின் மார்பில் கிடந்து புரள்கிறது. அவளுடைய மார்புகள் இளமையானவை. வலிமையானவை. அவள் மூச்சு விடும் போது அவை நெருங்கி வருகின்றன. அந்த முத்து மாலை அவளின் மார்புகளுக்கு இடையே அகப்பட்டு இருக்கிறது. பின் இளகுகிறது.

சிவனின் வலிமையான மார்பை தாங்கும் மார்புகள் அவளுடையவை.

பட்டர்  உருகுகிறார்.

இடங் கொண்டு = நல்ல இடத்தில் இருந்து கொண்டு

விம்மி = விம்மி

இணை கொண்டு = இணையான இரண்டு மார்புகளின் இடையே 

இறுகி = அவை ஒன்று சேரும்போது இறுகி

இளகி = பின் அவை விலகும்போது இளகி

முத்து வடங் = முத்து மாலை

கொண்ட கொங்கை = கொண்ட மார்புகள்

மலை கொண்டு = மலை போன்ற

இறைவர் = சிவனின்

வலிய நெஞ்சை = வலிமையான நெஞ்சை

நடங் கொண்ட = உன் விருப்பப் படி நடனம் ஆட வைக்கும் 

கொள்கை நலம் = நல்ல எண்ணங்கள்

கொண்ட நாயகி = கொண்ட நாயகி

நல் அரவின் = நல்ல பாம்பின்

படம் கொண்ட = பாம்பின் படத்தை போன்ற

அல்குல் = அல்குல்

பனி மொழி = பனி போன்ற மொழி

வேதப் பரிபுரையே = வேதங்களை கால் சிலம்பாக கொண்டவளே அல்லது வேதங்களின் முடிவே

அவளின் அங்க அழகுகள் = மார்பு, அல்குல்
அவளின் குரல் இனிமை = பனி மொழி
அவளின் குணம் = நலம் கொண்ட கொள்கை
அவளின் அறிவு = வேதப் பரிபுரை

அபிராமி.


Monday, September 30, 2013

அபிராமி அந்தாதி - செஞ்சேவகன் மெய்யடைய

அபிராமி அந்தாதி - செஞ்சேவகன் மெய்யடைய

யார் பெரியவர் ? 

சிவனா ? அபிராமியா ?

முப்புரங்களை எரிக்க தங்கத்தால் ஆன மேரு மலையை வில்லாகக் கொண்டு சண்டை போட்டு வென்றவரா அல்லது அப்பேர்பட்ட சிவனின் உடலில் பாதியை தன்னுடைய மார்பகத்தால் வென்ற அபிராமியா ?


தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.

பொருள்

தங்கச் சிலை கொண்டு = தங்கத்தால் ஆன மேரு மலையை வில்லாகக் கொண்டு 
தானவர் முப்புரம் சாய்த்து = அசுரர்களின் முப்புரங்களை சாய்த்து 

மத = மதம் கொண்ட 

வெங் கண் = சிவந்த கண்களை கொண்ட 
கரி = யானையின் 
உரி = தோலை உரித்து 
போர்த்த = மேலே போர்த்திக் கொண்ட 
செஞ்சேவகன் = சிவந்த மேனியை கொண்ட சேவகன் 
மெய்யடையக் = உடலில் பாதியை அடைய 

கொங்கைக் குரும்பைக் = குரும்பை போன்ற   கொங்களை 
குறியிட்ட நாயகி = குறியாகக் கொண்ட நாயகி 
கோகனகச் = பெரிய தங்கம் போன்ற 

செங் கைக் கரும்பும் = சிவந்த கையில் கரும்பும் 
மலரும் = மலரும் 
எப்போதும் என் சிந்தையதே. = எப்போதும் என் சிந்தையுள்ளே 

ஆண், வெளியே எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் , பெண்ணின் அழகின் முன்னால் அவன் தோற்றுத் தான் ஆக வேண்டும்.

அது பெண்ணுக்கு கிடைக்கும் மரியாதை 
ஆணுக்கு கிடைக்கும் கம்பீரம் 

மேருவை வில்லாக வளைத்த சிவனின் கதி அது என்றால், நாம் எல்லாம் எம்மாத்திரம் ...



 

Monday, September 9, 2013

அபிராமி அந்தாதி - கற்ற கயவர்

அபிராமி அந்தாதி - கற்ற கயவர் 


அபிராமி அந்தாதியில் சில பல பாடல்கள், அந்த அந்தாதிப் பாடல்களை படிப்பதால் வரும் பலன்களையும், அபிராமியை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பற்றி கூறுகிறது.

அப்படி, அபிராமியை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளை கூறும் ஒரு பாடல்.

வாழ்க்கையில் அதிக பட்ச நேரம் அலுவலகத்தில், வேலை பார்ப்பதில் சென்று விடுகிறது. வேலை பார்பதும், சம்பாதிப்பதும், இல்லாதை இட்டு நிரப்புவதிலும் வாழ்க்கை மொத்தமும் போய் விடுகிறது. எல்லோருக்கும் இல்லாவிட்டாலும் பொதுவாக பெரும்பாலோனருக்கு அப்படித்தான் நடக்கிறது.


பாடல்

இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு 
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம் 
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும் 
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.



இல்லாமை சொல்லி = இல்லை என்று சொல்லி,

ஒருவர் தம்பால் சென்று = மற்றவர்களிடம் சென்று

இழிவுபட்டு = இழிவு பட்டு

நில்லாமை = நிற்காமல் இருக்க வேண்டும் என்று

நெஞ்சில் நினைகுவிரேல் = நெஞ்சில் நினைத்தால் 

நித்தம் நீடு தவம் = தினமும் நீண்ட தவம்

கல்லாமை = கல்லாத மடையர்கள்

கற்ற கயவர் = கற்ற கயவர்கள். கல்லாத கயவர்கள் என்று சொல்லவில்லை, கற்ற கயவர்கள் என்று சொல்கிறார்.  படித்தவன் தான் எல்லா அயோக்கியத்தனமும் செய்வான்

தம்பால் = அவர்களிடம்

ஒரு காலத்திலும் செல்லாமை = ஒரு போதும் செல்ல வேண்டியது இல்லாமல்

வைத்த = நம்மை அந்த இடத்தில் வைத்த

திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. = மூன்று உலகங்களுக்கும் தலைவியான அபிராமியின் பாதங்களைச்  சேருங்கள்

யாரிடமும் போய் கைகட்டி நிற்க வேண்டாம் - எனக்கு நிறைய சம்பளம் கொடு, எனக்கு பதவி உயர்வு கொடு என்று கேட்டு கஷ்டப்பட வேண்டாம்.

பணத்தையும் தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று சொல்கிறார் பட்டர்.




Sunday, August 25, 2013

அபிராமி அந்தாதி - வல்லி , நீ செய்த வல்லபமே

அபிராமி அந்தாதி - வல்லி , நீ செய்த வல்லபமே 




ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம் 
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம் 
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின் 
மகனும் உண்டாயது அன்றோ?--வல்லி. நீ செய்த வல்லபமே.

சூர பத்மனை அழிக்க ஒரு பிள்ளை  வேண்டும்.அதை  சிவன்தான் உருவாக்க வேண்டும். சிவனோ தவத்தில்  இருக்கிறான். அந்த தவத்தை கலைக்க வேண்டும்.

என்ன  செய்வது என்று யோசித்த தேவர்கள், சிவனின் தவத்தை கலைக்க  காமனை அனுப்பினார்கள்.

காமனும்  சென்றான்.சிவன் நெற்றிக் கண்ணால்  வந்தான்.

சிவன் காமத்தை  கடந்தவன்.

பிள்ளை வேண்டும் என்றால் காமம் வேண்டும். என்ன செய்வது. ?

அபிராமி, சிவனுக்கு முருகனை படைக்கும் வல்லமையை தந்தாள் என்று பட்டர்  நாசூக்காக  சொல்கிறார்.

அகிலமும், வானும்,பூமியும் அறிய காமனை எரித்த சிவனுக்கு முருகனை உருவாக்கும்  சக்தி தந்த உன் வல்லமையே வல்லமை என்று அபிராமியை துதிக்கிறார்.

அவளும் காமத்தை ஆட்சி  செய்யும் காமாட்சி தான்...



பொருள்


ககனமும் = அண்ட சராசரங்களும்

வானும் = வானமும்

புவனமும் = இந்த பூமியும்

காண = காணும்படி

விற் காமன் = வில் பிடித்த மன்மதனின்

அங்கம் = அங்கங்களை

தகனம் முன் செய்த = முன்பு தகனம் செய்த

தவம் பெருமாற்கு = தவம்  கொண்டிருந்த பெருமானான சிவனுக்கு

தடக்கையும் =  தடக் கைகளும்

செம் முகனும் = செம்மையான முகங்களும்

முந்நான்கு = பன்னிரண்டு (தடக் கைகள் )

இருமூன்று = ஆறு (முகங்கள்)

எனத் தோன்றிய = என்று தொன்றிய

மூதறிவின் = முதிர்ந்த அறிவின்

மகனும் உண்டாயது அன்றோ? = பிள்ளை உண்டானது உண்டானது அன்றோ

வல்லி = வல்லி , கள்ளி

நீ செய்த வல்லபமே = உன்னுடைய திறமையான காரியமே

காமத்தை வென்ற காமேஸ்வரனுக்கும் அன்பை சுரக்க வைத்து, பிள்ளை உருவாக  வழி செய்தாள் என்றால் என்னே அவள் அன்பின் எல்லை.

நான் எப்போதும் சொல்வது போல, அபிராமி அந்தாதியை ஒவ்வொரு வார்த்தையாக  படிக்கக் கூடாது....அதை முழுமையாக உணர வேண்டும்.     பட்டரின் மனதில் இருந்து அதைப் படிக்க வேண்டும்



Friday, August 16, 2013

அபிராமி அந்தாதி - அவளை வணங்கினால் கிடைக்காதது

தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் தாயர் இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை மால் வரையும்
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே

அபிராமியை வணங்கினால் எல்லாம் கிடைக்கும் ஆனால் இரண்டு விஷயம்  .கிடைக்காமல் போகும். அபிராமியை வணங்காதவர்களுக்கு கிடைக்கும், ஆனால் அவளை வணங்குபவர்களுக்கு கிடைக்காது.

அவை என்ன ?

ஒன்று, மறு பிறவி

இரண்டு, இன்னொரு தாயார்

மீண்டும் பிற்பதாய் இருந்தால் தானே இன்னொரு தாய் வேண்டும். மறு பிறவியே இல்லை என்றால் எதற்கு இன்னொரு தாய் ?

இந்த இரண்டும் அபிராமியின் பக்தர்களுக்கு கிடைக்காது. மத்தது எல்லாம் கிடைக்கும்.

எல்லாம் கிடைக்கும் என்றால், என்ன எல்லாம் கிடைக்கும் ?

ரொம்ப ஒண்ணும் இல்லை - கற்பக மரத்தின் நிழலில் தங்கும் நிலை கிடைக்கும். கற்பக மரம்  நினைப்பதை எல்லாம் தரும். எனவே, கற்பக மரத்தின் நிழலில் தங்குவது என்றால் நினைப்பது எல்லாம்   நடக்கும்.

 சரி,அந்த கற்பக மரத்தின் நிழலில் எவ்வளவு நாள் தங்குவது ? ஏதோ கொஞ்ச  காலம்  தங்கி பின் அங்கிருந்து போய் விட வேண்டுமா ?

கற்பக மரம் வானுலகில்  இருக்கிறது.அங்கு போன பின், மீண்டும் பிறவியே கிடையாது . நிரந்தரமாய் அங்கேயே இருக்க வேண்டியதுதான். மறு பிறவியும் கிடையாது, இன்னொரு தாயாரும் கிடையாது.

யாருக்குக் கிடைக்கும் ?

 அபிராமிக்கு பூஜை பண்ணுபவர்களுக்கா ? அவளை போற்றி பாடுபவர்களுக்கா ?

இல்லை.

பின் ?

கூந்தலில் நிறைய பூக்களை சூடியிருக்கும் அபிராமியின் அழகை மனதில் நினைத்துப் பார்பவர்களுக்கு, அது எல்லாம் கிடைக்கும். சும்மா, அந்த வடிவழகை நினைத்துக் கொண்டே இருந்தால் போதும்....

பொருள்


Friday, July 19, 2013

அபிராமி அந்தாதி - ஏதம் இலாளை

அபிராமி அந்தாதி - ஏதம் இலாளை 



அபிராமி யார் ?

தாயா ? தாரமா ? காதலியா ? அக்காவா ? தோழியா ? தேவதையா ? மகளா ?  எல்லாமும் கலந்த ஒரு பெண் வடிவா ?  

பெண்ணின் அத்தனை அம்சங்களும் நிறைந்தவள் அவள். 

கோமள வல்லி  -  மென்மையானவள். அவள் கை, அவள் மடி அவ்வளவு மேன்மை. அவள் பார்வை மனதை  போகும் தென்றல். அவள் பாதம்...பஞ்சை விட மென்மை 

அவள் மிகவும் குளிர்ந்தவள் - அவள் இருக்கும் கோவில் அல்லியும் தாமரையும் நிறைந்த குளங்கள் சூழ்ந்தது. அவ கிட்ட போனாலே ஒரு மலரின் மணம் மனதை நிறைக்கும்.

அவள் கணவனோடு இரண்டற கலந்தவள் - யாமள வல்லி 

அவளை பார்த்துக் கொண்டே இருக்கலாம் - கள்ளம் இல்லா முகம். ஒரு குறை இல்லா அழகு. பார்த்தாலே மனம் எல்லாம் நிறைந்து போகும். ஏதம் (குற்றம்) இல்லாதவள் 


அவளை விட்டு பிரியவே மனம் வராது. வீட்டுக் போன பின் அவள் நினைவு வந்ததாள்  என்ன செய்வது ? அவளை பார்க்க வேண்டும் போல இருந்தாள் என்ன செய்வது ? அவளுடைய போட்டோ அல்லது படம் ஏதாவது வரைந்து எடுத்துச் செல்லாலம் என்றால் எழுத்தில் கொண்டு வரமுடியாத அழகி அவள். அவளை பார்க்க வேண்டும் என்றால் நேரில் தான் போய் பார்க்க வேண்டும். அவ்வளவு அழகு. 

மயில் போன்ற சாயல் உடையவள். ஒரு சிலிர்ப்பு, ஒரு நளினம்...கண் கொள்ளா காட்சி...

பட்டருக்கு அவளை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்....

நமக்கு வாழ்க்கையில் எவ்வளவு வேலை இருக்கிறது. வீடு, வாசல், மனைவி, மக்கள், வேலை, சுற்றம், டிவி சீரியல், வார மாத பத்திரிகைகள், அரட்டை, பல்வேறு விழாக்கள் ....என்ற ஆயிரம் வேலை இருக்கிறது. 

இதற்கு நடுவில் அபிராமியை நினைக்க எங்கே நேரம் இருக்கிறது. 

பட்டர் நம் மேல் அத்தீத வாஞ்சையுடன், " உங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வணங்கினால் போதும்...அபிராமி ஓடோடி வந்து உங்களுக்கு உதவி செய்வாள்....உங்களை ஏழு உலகுக்கும் அதிபதி ஆக்கி விடுவாள் " என்கிறார். 

பாடல் 

கோமளவல்லியை அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை தம்மால்
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே

பொருள் 

Tuesday, July 9, 2013

அபிராமி அந்தாதி - அடியாரை தொழும் அவர்க்கு

அபிராமி அந்தாதி - அடியாரை தொழும் அவர்க்கு



 மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன் 
புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை 
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு, 
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே.

பட்டருக்கும் அபிராமிக்கும் உள்ள உணர்வு, உறவு புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அது பக்தியா ? காதலா ? அன்பா ? சிநேகமா ? இது எல்லாவற்றையும் கடந்து வார்த்தையில் வராத ஒரு உறவா ?

அபிராமியை பார்க்கும் போதெல்லாம் அவளின் அழகு அவரை கொள்ளை கொள்கிறது. உடனே அவளுடைய கணவனின் நினைப்பும் வருகிறது. அவளின் அழகை வர்ணித்த கையோடு சிவனைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறார்.

ஏன் ?

மெல்லிய நுண்மையான இடையை உடையவளே;  மின்னலைப் போன்றவளே; சடை முடியை விரித்துப் போட்டுக் கொண்டிருக்கும் சிவன் அணைக்கும் மென்மையான மார்புகளை உடையவளே ; பொன் போன்றவளே; உன்னை மறைகள் சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழும் அடியார்களுக்கு  மேள தாளத்துடன் ஐராவதம் என்ற வெள்ளை யானை மேல் செல்லும்  வரம் கிடைக்கும்.


பொருள்

மெல்லிய நுண் இடை = மெலிந்த சிறிய இடை

மின் அனையாளை  = மின்னலைப் போன்றவளை

விரிசடையோன் = சடையை விரித்துப் போட்டுக் கொண்டிருக்கும் சிவன் 

புல்லிய மென் முலைப் = அணைத்த மென்மையான மார்புகளை உடையவளை

பொன் அனையாளை = பொன் போன்ற நிறம் உடையவளை

புகழ்ந்து = அவளைப் புகழ்ந்து

மறை சொல்லியவண்ணம் = மறை நூல்கள் சொல்லிய வண்ணம்

தொழும் அடியாரைத் = தொழுகின்ற அடியவர்களை

 தொழுமவர்க்கு, = தொழுகின்றவர்களுக்கு

பல்லியம் ஆர்த்து எழ = பல வித வாத்தியங்கள் ஒலி எழுப்ப

வெண் பகடு ஊறும் பதம் தருமே = வெண்மையான யானை (ஐராவதம்) மேல் செல்லும் பதவி தருமே



Sunday, June 16, 2013

அபிராமி அந்தாதி - என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே

அபிராமி அந்தாதி - என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே 



பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

பெண், வானவில் போன்றவள்.

மனைவியே சில சமயம் தாயாகவும்,மகளாகவும், சகோதரியாகவும், தோழியாகவும் பரிணமிக்கிறாள்.

உயிர் தரும் தாயாக, கொஞ்சும் நேரம் மனைவியாக, முரண்டு பிடிக்கும் நேரம் மகளாக, சோதனை நேரத்தில் தோள் கொடுக்கும் போது தோழியாக....அத்தனையுமாக இருக்கிறாள் அவள். 

நீங்கள் அவளை எப்படி பார்கிரீர்களோ, அவள் அப்படி இருக்கிறாள். 

அபிராமியை பார்க்கிறார் பட்டார்.

இந்த உலகை எல்லாம் படைத்த தாயாகத்  தெரிகிறாள்.

படைத்தால் மட்டும் போதுமா ? படைத்த வண்ணமே அவள் எல்லா உயிர்களையும் காக்கிறாள்.

பின் அவற்றை மறைத்து வைக்கிறாள். அவற்றை அழிக்கிறாள் என்றோ கொன்றாள் என்றோ சொல்லவில்லை. சில உயிர்களை மற்ற உயிர்களிடம் இருந்து  மறைத்து வைக்கிறாள். 

கறை கண்டனுக்கு - நஞ்சை உண்டதால் கருத்த கண்டத்தை உள்ள சிவனுக்கு மூத்தவளே.

அவனுக்கு இளையவளே.

பெரும்  செய்தவளே. உன்னை விடுத்து வேறு தெய்வங்களை ஏன் வணங்குவேன் ? 

பொருள் 

Friday, June 7, 2013

அபிராமி அந்தாதி - சிந்துர வண்ணப் பெண்ணே

அபிராமி அந்தாதி - சிந்துர வண்ணப் பெண்ணே 


என் தலையில் இருப்பது எப்போதும் உன் பொன் போன்ற திருவடிகளே.

என் சிந்தனையில் எப்போதும் நிலைத்து இருப்பது உன் திரு மந்திரமே

சிவந்த பெண்ணே

உன்னுடைய அடியார்களுடன் கூடி முறையாக நான் பண்ணியது உன்னுடைய பரம ஆகம பக்தியே.

பாடல்


சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே 
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.- 
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே 
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.

பொருள்


Tuesday, May 14, 2013

அபிராமி அந்தாதி -உந்தன் விழியின் கடை உண்டு


அபிராமி அந்தாதி -உந்தன் விழியின் கடை உண்டு 


உடம்பு சரி இல்லை. அதை குணமாக்க மருந்து சொல்ல மருத்துவர் உண்டு. கடையில் மருந்து உண்டு. மருத்துவரையும் பார்க்காமால், மருந்தும் வாங்காமல் சும்மா வீட்டில் உட்கார்ந்திருந்தால் நோய் குணமாகுமா ? நோய் குணமாகாவிட்டால் யார் காரணம் ?


பாடல்



ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால் 
மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின் 
மூளுகைக்கு, என் குறை, நின் குறையே அன்று,-முப்புரங்கள். 
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே.

பொருள்


Friday, May 10, 2013

அபிராமி அந்தாதி - பனிமுறுவல்

அபிராமி அந்தாதி - பனிமுறுவல் 



அபிராமியின் அழகு சொல்லி முடியாது.

பவள கொடியில், சிவந்த பழம் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி அவளின் இதழ்கள்.

அவள் புன்னகை பனி போல் சில் என்று இருக்கும். கசிந்து உருகும். உருக்கும்
அந்த இதழ்களில் புன்னகை தவழும் .

இந்த கொடி போன்ற உடல், அதில் சிவந்த இதழ், அந்த இதழில் தவழும் புன்னகை....இவற்றோடு இன்னும் கொஞ்சம் ....

உடுக்கு போல சின்ன இடை....அந்த இடையின் மேல், அந்த இடுப்பை வளைக்கும் பாரம் இரண்டு மார்பகங்கள்....

இவை எல்லாம் கொண்டு சங்கரனிடம் கலவி என்ற போருக்குப் போனாள் ...சங்கரன் துவண்டு விட்டான் பாவம்....இத்தனை அழகை அவனால் எப்படி தாங்க முடியும்...மன்மதனை கண்ணால் எரித்தவனும் எங்கள் அபிராமியின் கண்களின்  முன் மண்டியிட வேண்டியதுதான்....

பாடல்

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்--
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.

பொருள்


Wednesday, May 8, 2013

அபிராமி அந்தாதி - முன் செய்த புண்ணியம்

அபிராமி அந்தாதி - முன் செய்த புண்ணியம்


பக்தி செய்வது எளிதான காரியம் என்று நினைகிறீர்களா?

ரொம்பவும் கடினமான காரியம்.

நாளை முதல் பக்தி செய்யப் போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் மட்டும் போதாது.

நாளை முதல் படிக்கப் போகிறேன், நாளை முதல் உடற் பயிற்சி செய்யப் போகிறேன், நாளை முதல் இசை கற்றுக் கொள்ளப் போகிறேன் என்று நீங்கள் என்ன வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம், அதில் வெற்றியும் பெறலாம்.

பக்தி, தவம் இவை எல்லாம் உங்கள் பிரயத்னம் மட்டும் அல்ல.

குருவருளும் திருவருளும் இல்லாமல் முடியாது.

முன்பு செய்த தவமும் வேண்டும்.

நான் சொல்லவில்லை. வள்ளுவர் சொல்கிறார்


தவமும் தவமுடையார்க் காகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.


முன்பு தவம் செய்தவர்களுக்கே தவம் கை வரும். மற்றவர்கள் அதை செய்ய நினைப்பது அவமே என்கிறார்.

மாணிக்க வாசகர் என்ன சொல்கிறார் தெரியுமா - அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - என்பார்

இறைவன் திருவடியை வணங்க வேண்டும் என்றால், அவன் அருள் வேண்டும். அவன் அருள் இல்லாவிட்டால் பக்தியும் வராது.

பேற்றை தவம் சற்றும் இல்லாத என்னை என்பார் அருணகிரிநாதர்.

தவம் நாம் செய்வது. பேறு முன்பு செய்த பாவ புண்ணியம். பூர்விக சொத்து.
முன்பு புண்ணியம் செய்திருந்தால், இப்ப தவம் செய்ய, பக்தி செய்ய முடியும்.

....தானமும் தவமும் செய்தல் அரிது ... என்பாள் ஔவை பாட்டி. தவம் செய்வது, பக்தி செய்வது எளிதான காரியம் அல்ல.



பாடல்:


கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.



பொருள்


Friday, May 3, 2013

அபிராமி அந்தாதி - புனிதரும் நீயும்


அபிராமி அந்தாதி - புனிதரும் நீயும்



அன்பு வயப்பட்டவர்கள் அறிவார்கள் ஈருடல் ஓருயிர் என்றால் என்ன. அன்பு இணைக்கும் பாலம். அன்பு கரைக்கும் இரசவாதம். ஒன்றில் ஒன்று கரைவது அன்பு. நீரையும் எண்ணெயையும் ஒன்றாக ஊற்றி வைத்தாலும் அது ஒன்றோடு ஒன்று பொருந்தாது. தனித் தனியாக நிற்கும்.

இரண்டு பொருளை நாம் சரியாகப் பொறுத்த வில்லை என்றால் அது கட கட என்று ஆடிக் கொண்டிருக்கும். சத்தம் போட்டுக் கொண்டு இருக்கும். சில சமயம் கழண்டு கூட விழுந்து விடும்.


ஒன்றோடு ஒன்று சரியாக பொருந்தி விட்டால் இரண்டும் சேர்ந்து ஒன்றாக செயல் படும்.



மனித மனம் ஒரு நிலையில் நில்லாதது. அங்கும் இங்கும் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். அரை நிமிடம் கூட அதனால் ஒரு நிலையில் நிற்க முடியாது.



சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத
சட கசட மூட மட்டி 


என்று கூறுவார் அருணகிரிநாதர்

என்னதான் முயற்சி செய்தாலும் சிறை படா நீர் போல் என்று மாணிக்க வாசகர் சொன்னது போல் மனம் நீர் போல் கசிந்து போய் கொண்டே இருக்கிறது.

ஒரு இடத்தில் பொருந்தி நிற்காது.

இறைவனோடு நாம் எப்படி பொருந்தி இருப்பது ? ஒன்று நாம் இறைவனை அடைய வேண்டும். அல்லது இறைவன் நம்மை வந்து அடைய வேண்டும்.

நாம் இறைவனை அடைவது என்பது நடவாத காரியம். அவன் யார், எங்கே இருக்கிறான், எப்படி இருக்கிறான் என்று நமக்குத் தெரியாது.

நாம் யார், எங்கே இருக்கிறோம்,, எப்படி இருக்கிறோம் என்று அவனுக்குத் தெரியும்.

எது எளிது ?

நாம் அவனைத் தேடித் போவதா ? அவன் நம்மை தேடி வருவதா ?

இறைவன் நம்மை வந்து அடைவது எளிது.


பட்டர் கூறுகிறார்...நான் உன்னை வந்து அடைவது என்பது நடவாத காரியம். பேசாமல் நீ வந்து  என் மனதில் இரு என்று அபிராமியிடம்  கூறுகிறார்.

அதுவும் தனியா வராத, வரும்போது உன் கணவனையும் அழைத்துக் கொண்டுவா. இல்லை என்றால், திரும்பியும் உன் கணவனை பார்க்க போய் விடுவாய். நீங்க இரண்டு பெரும் ஒன்றாக வந்து என் மனதில் இருங்கள். அப்பத்தான் திரும்பி எங்கேயும் போக மாட்டீங்க. 

மனிதர்களும், தேவர்களும், மாயா முனிவர்களும் அவர்கள் வேறு, அபிராமி வேறு என்று நினைத்து அவளை அவர்கள் வணங்குகிறார்கள்.

பட்டர் அறிவார். அவர் வேறு அவள் வேறு அல்ல.

பாடல்



மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

பொருள்


Monday, April 29, 2013

அபிராமி அந்தாதி - அழியா முத்தி ஆனந்தமே


அபிராமி அந்தாதி - அழியா முத்தி ஆனந்தமே 


உண்மை எது ? உண்மை என்பதை வரையறத்து கூற முடியுமா ? அப்படி கூற முடிந்தால் நேரடியாக சொல்லிவிடலாமே. எதற்கு இத்தனை வேதம், உபநிடதம், புராணம், இதிகாசம் எல்லாம் ? இத்தனை இருந்தும் இன்னும் உண்மை எது என்று அறிந்தபாடில்லை. 

உண்மை என்பது வார்த்தைகளுக்குள் அடங்காத ஒன்று. எத்தனை ஆயிரம் புத்தகங்கள் படித்தாலும் அதை அறிந்து கொள்ள முடியாது. வார்த்தையாலோ, எழுத்திலோ அதை கூற முடியாது. 

இனிப்பு என்ற சுவையை எழுதிக் காட்ட முடியாது.

மனைவியின் கண்ணோரம் கசியும் காதலை வார்த்தைக்குள் அடக்க முடியாது. 

பக்தியும், இறை உணர்வும் அப்படித்தான்...

அவள், "எழுதா மறையின் அரும் பொருள்". மறை என்றால் வேதம். எழுதா மறை என்றால் எழுதப் படாத மறை பொருள் அவள். அவள் வார்த்தைகளில் சிக்க மாட்டாள். யாரோ கண்டு உங்களிடம் சொல்ல முடியாது. நீங்களே தான் அவளை நேரடியாக அறிய வேண்டும்.

அவளை அறிந்து கொண்டால், உணர்ந்து கொண்டால்....எல்லாம் அவளாகத் தெரியும்.....நிற்பதும், இருப்பதும், கிடப்பதும், நடப்பதும் எல்லாம் அவளாகத் தெரியும். 

இன்னொரு பொருள், நிற்கும் போதும், இருக்கும்போதும் படுத்து கிடக்கும்போதும், நடக்கும்போதும், அவள் நினைவாகவே இருக்கும். 

எபோதும் வணங்குவது அவளுடைய மலர் போன்ற திருவடிகளை. எதை வணங்கினால் என்ன, எல்லாம் அவள்தானே. 

நமக்கு வாழ்க்கையில் கிடக்கும் இன்பங்கள் எல்லாம் அழியக் கூடிய இன்பங்கள். ஒரு சமயம் இன்பமாய் இருக்கும். சிறிது நேரம் இருக்கும். நாள் ஆக நாள் ஆக அதில் உள்ள இன்பம் குறையும். மனம் சலிப்புறும். உடல் சலிப்புறும். பின் அதுவே கூட துன்பமாய் மாறும் 

அபிராமி அப்படி அல்ல.

அவள் அழியாத ஆனந்தம் தருபவள். 

உமா என்றால் ஒளி  என்று பொருள். ஒளி  அநாதியானது. என்று பிறந்தவள் என்று அறிய முடியாத அன்று பிறந்தவள் அவள்.. 

பாடல் 

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, 
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின் 
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து 
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

பொருள்