Tuesday, September 30, 2014

வில்லி பாரதம் - தித்திக்கும் பக்தி

வில்லி பாரதம் - தித்திக்கும் பக்தி 


கௌரவர்கள் சபையில் பாஞ்சாலி நிற்கிறாள். துச்சாதனன் அவளின் துகிலைப் பற்றி இழுக்கிறான். பஞ்ச பாண்டவர்களும் ஒன்றும் செய்ய முடியாமல் நிற்கிறார்கள்.

அவளின் மன நிலை எப்படி இருக்கும் ?

பயம்.  அவமானம். படபடப்பு. கோபம். சுய பச்சாதாபம் என்று எல்லாம் இருக்கும் அல்லவா ?

அவள் கடைசியில் வேறு ஒன்றும் கூறாமல் "கோவிந்தா கோவிந்தா" என்று அழைத்தாள் .

இது வரை நமக்குத்  தெரியும்.

நமக்குத் தெரியாத ஒன்றை வில்லிபுத்துரார்  சொல்லுகிறார்.


அவள் அப்படி கூறியவுடன், அவள் உடல் குளிர்ந்ததாம். நாவில் இதுவரை ஊறாத அமிழ்து ஊறியதாம். உடல் புளங்காகிதம் அடைந்து, உள்ளம் உருகினாளாம்.

இருக்கும் இடமோ கௌரவர் சபை. அவளின் சேலையின் ஒரு முனை துச்சாதனன் கையில்.

அவள் உடலோ குளிர்ந்தது, நாவில் அமுதம் ஊறியது, உள்ளம்  உருகியது என்கிறார்   வில்லியார்.

பாடல்

ஆறாகி யிருதடங்க ணஞ்சனவெம்புனல்சோர வளகஞ் சோர 
வேறான துகிறகைந்த கைசோரமெய்சோர வேறோர் சொல்லுங் 
கூறாமற் கோவிந்தா கோவிந்தாவென்றரற்றிக் குளிர்ந்து நாவில் 
ஊறாத வமிழ்தூற வுடல்புளகித்துள்ளமெலா முருகி னாளே.

சீர் பிரித்தபின்

ஆறாகி இரு தடங் கண் அஞ்சன வெம்புனல் சோர அளகம் சோர 
வேறான துகில் தகிந்த  கை சோர மெய் சோர வேறு ஒரு சொல்லும்  
கூறாமல்  கோவிந்தா கோவிந்தா என்று அரற்றி குளிர்ந்து நாவில் 
ஊறாத  அமிழ்து  ஊற உடல் புளகித்து உள்ளம் எல்லாம் உருகினாளே 


பொருள்

ஆறாகி = ஆறு போல ஓடி

இரு = இரண்டு

தடங் கண் = பெரிய கண்கள்

அஞ்சன = மை

வெம்புனல் = கொதிக்கின்ற நீர் (கண்ணீர்)

சோர = வழிய

அளகம் = தலை முடி

சோர = அவிழ்ந்து விழ

வேறான = உடலில் இருந்து வேறு பட்ட

துகில் = சேலை

தகிந்த = காப்பாற்ற முயன்ற

கை சோர = கை தளர்ந்து போக

மெய் சோர = உடல் சோர்ந்து போக

வேறு ஒரு சொல்லும் = வேறு ஒரு சொல்லையும்

கூறாமல் = சொல்லாமல்

கோவிந்தா கோவிந்தா என்று = கோவிந்தா கோவிந்தா என்று

அரற்றி = கூறி

குளிர்ந்து = உடல் குளிர்ந்து

நாவில் = நாவில்

ஊறாத  அமிழ்து  ஊற = இது வரை ஊறாத அமிழ்து ஊற

உடல் புளகித்து = உடல் புளகித்து

உள்ளம் எல்லாம் உருகினாளே = உள்ளம் எல்லாம் உருகினாளே

இறைவன் பேரைச் சொன்னால் தித்திக்குமா ?


முருகன் பெயரை நினைத்தாலே கரும்பும் புளித்து  செந்தேனும் கசந்தது என்பார் அருணகிரி நாதர்

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பி னான்மெல்ல மெல்லவுள்ள
அரும்புந் தனிப்பர மானந்தத் தித்தித் தறிந்தவன்றே
கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே.

தித்தித்து அறிந்த அன்றே கரும்பும் புளித்து செந்தேனும் அரக்கைத்ததுவே என்கிறார்.

திருவெம்பாவையில் மாணிக்க வாசகர் , "அத்தன், ஆனந்தன், அமுதன் என்று அள்ளூறி" அள்ளூறி என்றால் வாயில் அமுது ஊறி.

முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென் 
 அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித் 
 தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் 
 பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர் 
 புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ 
 எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ 
 சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை 
 இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.

என்று கூறுவார்.  

இராமா உன் நாமம் என்ன ருசியாக இருக்கிறது என்கிறார் தியாகப் பிரம்மம்.


ஓ இராமா நீ நாம ஏமி ருசிரா ? எந்த ருசிரா என்று இராம நாமத்தை ருசிக்கிறார் தியாகராஜா ஸ்வாமிகள்.

 ஓ ராம நீநாம ஏமி ருசிரா
ஸ்ரீராம நீநாம எந்த ருசிரா || 
மதரஸமுலகண்டே ததிக்ருதமுலகண்டே
அதிரஸமகு நாமமேமி ருசிரா || 
நவரஸ பரமான்ன நவனீதமுலகண்டே
நதிகமௌனிநாம மேமி ருசிரா || 
த்ராக்ஷஃபலமுகன்ன இக்ஷுரஸமுகன்ன
பக்ஷிவாஹன நாமமேமி ருசிரா || 
அஞ்ஜநாதனய ஹ்ருத்கஞ்ஜதலமுனந்து
ரஞ்ஜில்லு நீநாமமேமி ருசிரா || 
ஸதாஷிவுடு மதி ஸதா பஜிஞ்சேதி
ஸதானந்தமகு நாமமேமி ருசிரா || 
ஸாரமுலேனி ஸம்ஸாரமுனகு ஸம்
தாரகமகு நாமமேமி ருசிரா || 
ஷரணன்ன ஜனமுல ஸரகுன ரக்ஷிஞ்சு
பிருது கல்கின நாமமேமி ருசிரா || 
கரிராஜ ப்ரஹல்லாத தரணீஜ விபீஷணுல
காசின நீநாமமேமி ருசிரா || 
கதலீ கர்ஜூர ஃபலரஸமுலகதிகமு
பதித பாவன நீ நாமமேமி ருசிரா || 
தும்புரு நாரதுலு டம்பு மீரக கா
நம்பு ஜேஸேதி நாமமேமி ருசிரா || 
ராம பத்ராசல தாம ராம தாஸுனி
ப்ரேமனொலின நாமமேமவி ருசிரா

 பக்தி இருந்தால் இறைவன் நாமத்தைச் சொல்லும் போது  இனிக்கும்.






1 comment:

  1. என்னைக் கேட்டால், கீழ்க்காணும் இரண்டு வரிகள் தூள் என்பேன்:

    "ஆறாகி இரு தடங் கண் அஞ்சன வெம்புனல் சோர அளகம் சோர
    வேறான துகில் தகிந்த கை சோர மெய் சோர..."

    என்ன ஒரு துன்பம், எவ்வளவு நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது!

    ReplyDelete