Monday, April 1, 2019

கம்ப இராமாயணம் - அடித்தலம் தீண்டலின்

கம்ப இராமாயணம் - அடித்தலம் தீண்டலின் 


மனப் பயிற்சி பற்றி முன்பு ஒரு முறை சிந்தித்தோம். உடற் பயிற்சி செய்து உடலை உறுதி செய்வது போல, மனப் பயிற்சி செய்து மனதை உறுதி செய்ய வேண்டும்.

மனிதன் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்? மனம் வேலை செய்பவன் என்று அர்த்தம். மனம் வேலை செய்யாவிட்டால் அவன் மனிதனே அல்ல.

ஆறு மாதக் குழந்தையை நாம் "அது தூங்கிருச்சு, அதுக்கு பசிச்சிருச்சு போல " என்று சொல்லுகிறோம்.

ஏன் ?

குழந்தை உயர்திணை தானே? பின் ஏன் குழந்தையை ஆடு மாடு போல அது, இது என்கிறோம் ?

ஏன் என்றால் குழந்தைக்கு மனம் இன்னும் வேலை செய்யத் தொடங்கவில்லை.

மனம் வேலை செய்தால் தான் மனிதன்.

அந்தக் குழந்தையே ஒரு இரண்டு வயதான பின், "அவன் வெளியே எங்காவது விளையாட போயிருப்பான்" என்று சொல்லுவோம்.

அதுவாக இருந்தது அவனாக மாறிவிட்டது. காரணம் மனம் வேலை செய்யத் தொடங்கிவிட்டது.

மனம் எந்த அளவுக்கு வேலை செய்கிறதோ அந்த அளவுக்கு உயர்வு வரும்.

வெள்ளத்து அணையது மலர் நீட்டம் மாந்தர்த்தம்
உள்ளத்து அணையது உயர்வு

என்பார் வள்ளுவப் பெருந்தகை

வாழ்வில் உயர வேண்டுமா? மனம், உயர வேண்டும்.

மனம் உயர வேண்டும் என்றால், மனதிற்கு பயிற்சி வேண்டும். அந்தப் பயிற்சி தான் இலக்கியங்கள்.

சரி, அது ஒரு புறம் இருக்கட்டும்.

புல் பார்த்து இருக்கிறீர்களா? தெருவோரம், பூங்காவில் என்று எல்லா இடத்திலும் முளைத்து இருக்கும். அந்த புல்லை பற்றி உங்களால் என்ன கற்பனை பண்ண முடியும்?

அது ஒரு பயிற்சி. முயன்று பாருங்கள்.

புல்லிடம் என்ன பெரிய சிறப்பு இருக்கிறது? உயரம், வலிமை, அழகு, சுவையான காய் அல்லது பழம், அழகான மலர் என்று ஏதாவது இருக்கிறதா? ஒன்றும் இல்லை.  பின் எதை வைத்து அதை சிறப்பாக எண்ணுவது?

கம்பன் சிந்திக்கிறான்.

காதலன் கை பட்டால், காதலிக்கு உடல் சிலிர்க்கும். புல்லரிக்கும். உடலில் உள்ள முடி எல்லாம் சிலிர்த்து எழுந்து நிற்கும் அல்லவா.

அது போல

இந்த பூமகள் என்ற பெண்ணுக்கு இராமன் அடி தீண்டியவுடன் உடல் சிலிர்த்ததாம். அவள் உடலில் உள்ள உரோமங்கள் எல்லாம் சிலிர்த்து எழுந்து நின்றதாம். அந்த உரோமங்கள் தான் இந்த புற்கள் என்கிறார்.

பாடல்


'உடுத்த நீர் ஆடையள் , உருவச் செவ்வியள் , 
பிடித்தரு நடையினள் பெண்மை நன்று ! இவன் 
அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம் மயிர் 
பொடித்தன போலும் இப் புல் 'என்று உன்னுவாள்


உடுத்த நீர் ஆடையள் = See through dress. கடலை ஆடையாக உடுத்திக் கொண்டுள்ள இந்த பூமகள்.

உருவச் செவ்வியள் = அழகிய உருவம் கொண்டவள்

பிடித் தரு நடையினள் = பெண் யானை போன்ற நடையினை கொண்டவள்

பெண்மை நன்று; = பெண்மைக்கு உண்டான குணங்கள் எல்லாம் நன்றாக
கொண்டவள்

இவன் = இராமன்

அடித்தலம் = திருவடி

தீண்டலின் = தீண்டப் பெற்றதால்

அவனிக்கு = இந்த பூமிக்கு

அம்மயிர் = அந்த மயிர்

பொடித்தன போலும், = சிலிர்த்தன போலும்

இப்புல்என்று = இந்த புற்கள் எல்லாம் என்று

உன்னுவாள் = எண்ணுவாள்


அழகிய பெண். பெண்ணுக்கு உரிய குணங்கள் எல்லாம் நிரம்பப் பெற்றவள். கடல் என்ற  ஆடை உடுத்தவள்.

கற்பனை செய்து பாருங்கள்.

காற்றில் பெண்ணின் ஆடை சலசலப்பது போல, கடலின் அலைகள். பூமகளின் ஆடை காற்றில் அலைவது போல இருக்கிறது.

ஆண் கை பட்டால் எல்லா பெண்களுக்குமா உடல் சிலிர்க்கும்?  பெண்மை குணம்  நிரம்பி இருக்க வேண்டும். அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு என்ற குணங்கள்  இருக்க வேண்டும். இந்த பூமகளுக்கு இவை எல்லாம் நிரம்பி இருக்கிறது. எனவே, அவள் உடல் சிலிர்த்தது.

கற்பனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அறிவு செல்ல முடியாத இடங்களுக்கு கற்பனை உங்களை இட்டுச் செல்லும்.

அறிவினால் இறைவனை அடைய முடியாது என்பது நம் முன்னவர்களின் கணிப்பு.

"சித்தமும் செல்லா சேச்சியான் காண்க "

என்பார் மணிவாசகர் (திருவாசகம்). அங்கே சித்தம் செல்லாது.

" உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்" 

என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார். (பெரிய புராணம்)

அவனை அறிந்து கொண்டு ஓத முடியாது.

பின், எப்படித்தான் இறைவனை கண்டு கொள்வது என்றால், மனம் விரிய வேண்டும். அறிவு செல்லாத இடங்களுக்கு அது செல்லும்.


அறிவு மெல்லமாகத்தான் செல்லும். கற்பனை உங்களை கண நேரத்தில் எங்கும் கொண்டு  சேர்க்கும்.

அறிவினால் முன்னோக்கித்தான் போக முடியும்.

கற்பனை உங்களை மூன்று காலத்துக்கும் கொண்டு செல்லும். இராமனும் சூர்பனகையும் இருந்த காலம் எது என்று நமக்குத் தெரியாது. இருந்தாலும், இந்தப் பாடல்கள் உங்களை அங்கு கொண்டு செல்லும்.

உங்கள் மனதை விரிவாக்க வேண்டுமா?

கம்ப இராமாயணம் போன்ற இலக்கியங்களைப் படியுங்கள். மனம் விரியும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post.html


1 comment:

  1. என்ன ஒரு கற்பனை!
    நன்றி.

    ReplyDelete