Tuesday, April 2, 2019

கம்ப இராமாயணம் - நாணலன் மீமிசை நடக்கின்றான்

கம்ப இராமாயணம் - நாணலன் மீமிசை நடக்கின்றான்


நல்லவர்கள் உடலில் இருந்து ஒளி வீசுமாம்.

இது என்ன புது கதையாக இருக்கிறது. உடலில் இருந்து எப்படி ஒளி வீசும் என்று கேட்கலாம்.

அந்தக் காலத்தில் பிரதீபன் என்று ஒரு மஹா ராஜா இருந்தார். அவர் உடலில் இருந்து தீப ஒளி வீசுமாம்.

இராமன் கானகம் செல்கிறான். மேலே சட்டை இல்லை. வெயில் கொளுத்துகிறது.

கம்பன் பதறுகிறான். ஐயோ, இராமன் மேல் வெயில் படுகிறதே. அவனுக்கு சுடுமே என்று கம்பன் பதறுகிறான்.


"வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,"

சூரியனின் ஒளி, தன்னுடைய மேனியின் ஒளியில் மங்கும்படி இராமன் நடந்து சென்றானாம்.



வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
     இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் 
     அழியா அழகு உடையான்.


எங்கே சூர்ப்பனகை பார்க்கிறாள்.

"இந்த சூரியனுக்கு கண்ணு இல்லையா என்ன? இராமனின் உடலில் இருந்து வெளி வரும் ஒளியைப் பார்த்து விட்டால், அவன் நாணத்தில் எங்காவது சென்று மறைந்து கொள்ளுவான். இது வரை பார்க்கவில்லை போலும்...எனவே தான் வெட்கம் இல்லாமல் இப்படி சுத்தித் திரிகிறான் "

என்கிறாள்


பாடல்


வாள் நிலா முறுவலான் வயங்கு சோதியைக் 
காணலனே கொலோ கதிரின் நாயகன் 
சேண் எலாம் புல் ஒளி செலுத்திச் சிந்தையின் 
நாணலன் மீமிசை நடக்கின்றான் 'என்றாள் .

பொருள்

வாள் நிலா = ஒளி வீசும் நிலா

முறுவலான் = (அது போன்ற ) புன்னகை உடைய

வயங்கு சோதியைக் = ஒளி வழங்கும் இராமனை

காணலனே கொலோ = பார்க்கவில்லையோ

கதிரின் நாயகன்  = அந்தக் கதிரின் நாயகன் (சூரியன்)

சேண் = தூர இடங்களுக்கு

எலாம் = எல்லாம்

புல் ஒளி செலுத்திச் =  சிறிய  ஒளியை செலுத்தி

சிந்தையின் = உள்ளத்தில்

நாணலன் = வெட்கமில்லாதவன்

மீமிசை நடக்கின்றான் ' = உலகெலாம் சுத்தித் திரிகிறான்

என்றாள் . = என்றாள் சூர்ப்பனகை

சேண் என்றால் தூரம். தொலை தூரம் 


சேண் விளங்கு அவிர் ஒளி என்பார் நக்கீரர் திருமுருகாற்றுப் படையில்.



உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு 
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு 
ஒவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி. 




" சேண்விளங்கு இயற்கை வாள்மதி " இதுவும் திருமுருகாற்றுப்படை தான்.


 சேண்விளங்கு இயற்கை வாள்மதி கவைஇ
 அகலா மீனின் அவிர்வன இமைப்ப
 தாஇல் கொள்கைத் தம்தொழில் முடிமார்
 மனன்நேர்பு எழுதரு வாள் நிறமுகனே ..." - - - - 


ஒரு பெண்ணுக்கு, ஒரு ஆணின் மேல் இத்தனை இலயிப்பு.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_2.html


2 comments:

  1. கம்பர் சூர்ப்பனகையின் காதல் அல்லது காம உச்சத்தை காண்பிக்க கவிகளுக்கே உரித்தான மிகைப்படுத்தும் உத்தியை உபயோக்ககிறாரோ என தோன்றுகிறது!!

    ReplyDelete
  2. சூர்ப்பனகையின் காம வெறி!

    ReplyDelete