Friday, April 5, 2019

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பகல் கண்டேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பகல் கண்டேன் 


கடவுள் இருக்கிறா இல்லையா என்ற சர்ச்சை இருந்து கொண்டே இருக்கிறது. அது முடிவதாகத் தெரியவில்லை.

ஆனால், கடவுளை கண்டேன் என்று பல பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் பொய்யா சொல்லுவார்கள்? அவர்களுக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அதனால் அவர்களுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது? கொஞ்சம் மரியாதை கிடைக்கலாம். கொஞ்சம் பேர் அவர்களை குருவாக அல்லது மகானாக ஏற்றுக் கொண்டு கொண்டாடலாம். அவ்வளவுதானே. அதற்காக பொய் சொல்லுவார்களா?

சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.

அது இருக்கட்டும் ஒரு பக்கம்.

மேல் கோட்டை என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கே செல்வ நாராயண பெருமாள் கோவில் இருக்கிறது. அங்குள்ள அந்த பெருமாள் சிலை எப்படி வந்தது தெரியுமா ?

ஒரு நாள் இராமானுஜர் அந்த மேல் கோட்டையில் உலவிக் கொண்டு இருந்தார். அவர் காலத்தில் அது ஒரு பெரிய காடாக இருந்திருக்கும். அங்கே ஒரு துளசிச் செடி இருந்தது. என்னடா இது, இந்த காட்டில் ஒரு துளசி செடியா என்று அந்த நீக்கி பார்த்தபோது, அங்கே ஒரு விக்ரகம் இருந்தது. அருகிலேயே ஒரு குளமும் இருந்தது.  புஷ்காரனி என்று அதற்குப் பெயர்.

அந்த இடத்திலேயே கோவில் கட்டினார். அது தான் மேல்கோட்டை கோவில்.

கதை அல்ல முக்கியம்.

அந்த விக்ரஹம் கண்ட போது, இராமானுஜர் பெரும் குரல் எடுத்து ஆனந்தத்தில் ஒரு பாசுரம் பாடினாராம். பூதத்தாழ்வார் சேவை சாதித்த பாசுரம். இராமனுஜருக்காகவே, இந்த சூழ்நிலைக்காகவே எழுதப்பட்ட பாசுரம் போல இருக்கிறது.

பாடல்


பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே- மிகக் கண்டேன்
ஊன் திகமும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு


பொருள்

பகல் கண்டேன் = பகல் கண்டேன்

நாரணனைக் கண்டேன் = நாராயணனைக் கண்டேன்

கனவில் மிகக் கண்டேன் = கனவில் மிகவும் பார்த்தேன்

மீண்டவனை  = மீண்டும் அவனை

மெய்யே- = உண்மையாகவே

மிகக் கண்டேன் = மிகவும் பார்த்தேன்

ஊன் திகமும் = உடலோடு

நேமி  = சக்ராயுதம்

ஒளி திகழும் = ஒளி விளங்கும்

சேவடியான் = சிவந்த திருவடிகளை உடைய

வான் திகழும் = வானில் வாழும்

சோதி வடிவு = சோதி வடிவு

சரி. இதில் என்ன இருக்கிறது? சாதாரணமான பாடல் தானே.

சாதாரண பாசுரமா ?

சிந்திப்போம்.

"பகல் கண்டேன்"....பகலை காண்பது என்பது என்ன பெரிய விஷயமா. கண்ணைத் திறந்தால் தெரிந்து விட்டுப் போகிறது. எல்லோரும் தான் பகலை பார்க்கிறோம், அதுவும் ஒவ்வொரு நாளும். இதை போய் வேலை மெனக்கிட்டு சொல்லுவானானேன் ?

இது நாம் நினைக்கும் இரவு பகல் அல்ல.

அஞ்ஞான இருளில் இருந்து வெளிப்பட்டு பகலை கண்டேன் என்கிறார். நாம், அறியாமை என்ற இருளில் மூழ்கிக் கிடக்கிறோம். ஏன் ஒரு காரியத்தை செய்கிறோம், அதற்கு காரணம் என்ன, நம் செயல்களுக்கு, எண்ணங்களுக்கு காரணம் என்ன   என்று அறியாமல் ஏதோ இயந்திரம் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அறிவை, அறியாமை என்ற இருள் மூடி மறைத்து இருக்கிறது. அறியாமை நீங்கினால், பகல் தெரியும். வீட்டுக்குள், எல்லா கதவையும், ஜன்னலையும் மூடிக் கொண்டு படுத்து இருந்தால் வெளியே உள்ள பகல் தெரியுமா ?

திருப்பாவையும், திருப்பள்ளி எழுச்சியும் இறைவனை எழுப்ப அல்ல. அறியாமை என்ற இருளில் உறங்கிக் கிடக்கும் நம்மை எழுப்பி பகலை காண வைக்கும் முயற்சிகள்.

"நாரணனை கண்டேன்"...இராமானுஜர் "பகல் கண்டேன்" என்று சொன்னவுடன் அருகில் இருந்தவர்கள் விழித்திருப்பார்கள். என்ன இது, இது பகல் தானே. இவர் என்ன பகல் கண்டேன் என்று  சொல்கிறாரே என்று குழம்பி இருப்பார்கள். அவர்களை பார்த்து சொல்கிறார், பகல் என்றால் இந்த வெளிச்சம் அல்ல, "நான் நாரணனை கண்டேன்" என்று விளக்குகிறார்.

இந்த நாரணன், நாராயணன் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?

பல அர்த்தம் சொல்கிறார்கள் விரிவுரையாளர்கள்.

நார என்றால் ஆத்மா. அயனம் என்றால் பாதை. (உத்தராயணம், தட்சிணாயனம், இராமாயணம்). ஆன்மாக்கள் சென்றடையும் பாதை என்று ஒரு பொருள்.

நாரம் என்றால் தண்ணீர் என்று ஒரு பொருள் உண்டு. தண்ணீரில் இருப்பவன், துயில்பவன் என்று இன்னொரு பொருள்.

"கனவில் மிகக் கண்டேன்"...கடவுளை பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டு இருப்பர்வகளுக்கு அது தானே கனவில் வரும். நமக்கு கனவில் என்னென்னமோ வருகிறது. இராமானுஜர் சொல்கிறார், "நிறைய தடவை கனவில் பார்த்து இருக்கிறேன்" என்று.  பக்கத்தில் உள்ளவர்கள் நினைத்து இருப்பார்கள். "சரி, கனவு தானே...கனவில் நாங்க கூட என்னனென்னவோ பார்க்கிறோம்" என்று.


"மீண்டவனை மெய்யே- மிகக் கண்டேன்"...அது மட்டும் அல்ல, மீண்டும் அவனை உண்மையிலேயே நேரில் கண்டேன் என்கிறார். சரி, எப்ப பார்த்தாலும் கனவு கண்டு கொண்டே இருந்தால் பாக்கிறது எல்லாமே அப்படித்தான் தெரியும் என்று அருகில் உள்ளவர்கள் நினைத்து இருக்கலாம். அவர் சொல்கிறார், "ஒரு முறை அல்ல. பல முறை பார்த்தேன். ....மெய்யே மிகக் கண்டேன்" என்கிறார்.

"ஊன் திகமும் "...கண்டேன் கண்டேன் என்கிறீரே, எதை கண்டீர் என்று கேட்டு இருப்பார்கள். விளக்குகிறார் இராமானுஜர்.  உடலோடு கண்டேன் என்கிறார். உருவமாகக் கண்டேன். ஊன் திகழும்.

"நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு"

சக்கராயுதம் ஒளி வீச, சிவந்த திருவடிகளோடு, வானில் திகழும் அந்த ஜோதி வடிவை கண்டேன் என்கிறார்.


மேல் கோட்டை போனால், அந்த செல்வ நாராயணரை பார்த்து விட்டு வாருங்கள். பெங்களூருக்கு மைசூருக்கும் நடுவில் இருக்கிறது. மைசூருக்கு 50 கிமி தொலைவில் இருக்கிறது. 


2 comments:

  1. இந்த பூதத்தாழவாரின் பாசுரத்தில் வரும் பகல் என்கிற வார்த்தைக்கு உங்களுடைய விளக்கம் மிக பொருத்தமாய் உள்ளது.அறியாமை என்ற இருளிலிருந்து விடுபடும் நிலையை பகல் என குறிப்பிடுவது தான் சரி.அது எளிதில் எல்லோராலும் அடைய முடியுமா? என்னால் அந்த மாதிரியான பகலை காணமுடியுமா? அதற்கும் பூர்வ ஜென்ம புண்ணியங்களின் துணை வேண்டுமே.
    ரொம்ப ரசித்து படித்தேன்.நன்றி.

    ReplyDelete
  2. இப்படி ஒரு கோவில் இருப்பது தெரியாமல் போய்விட்டது. இதுபோல இன்னும் எத்தனை கோவில்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றனவோ!

    ReplyDelete