Saturday, December 21, 2013

இராமாயணம் - மண்டோதரியின் புலம்பல் - 2

இராமாயணம் - மண்டோதரியின் புலம்பல்  - 2



இந்திரசித்து இறந்து விட்டான். இலக்குவன் அவன் தலையை கொண்டு சென்று விட்டான். இராவண யுத்த களத்திற்கு வந்து தலையில்லாத மகனின் உடலை நாட்டுக்கு கொண்டு செல்கிறான்.

செய்தி கேட்டு மண்டோதரி ஓடி வருகிறாள்.

கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியாத பாடல் ஒன்று கம்பனிடம் இருந்து வருகிறது.

மண்டோதரி கதறிக் கொண்டு ஓடி வருகிறாள். வருகின்ற அவசரத்தில் அவள் கூந்தல் அவிழ்ந்து விழுகிறது. கரிய நீண்ட கூந்தல் அவள் பாதத்தை தொடும் அளவிற்கு கீழே விழுந்து  கிடக்கிறது. துக்கம் தாளாமல் அவள் கைகளால் தன் மார்பின் மேல் அடித்துக் கொண்டு வருகிறாள். அப்படி அடித்ததால் திண்மையான முலைகளின் மேல் அடித்ததால் அவள் கைகள் சிவந்து போயின. அவள் மார்புகள் பெரியதாய் இருந்தன. அவள் இடையோ சிறுத்து இருந்தது.

பாடல்

கருங் குழல் கற்றைப் பாரம் கால் தொட, கமலப் பூவால்
குரும்பையைப் புடைக்கின்றாள்போல் கைகளால் முலைமேல் கொட்டி, அருங் கலச் சும்மை தாங்க, 'அகல் அல்குல் அன்றி, சற்றே
மருங்குலும் உண்டு உண்டு' என்ன, - மயன் மகள் - மறுகி வந்தாள்.

பொருள்


கருங் குழல் = கரிய  குழல்

கற்றைப் = அடர்த்தியான

பாரம் = பாரம் கொண்ட

கால் தொட = காலைத் தொட (அவ்வளவு நீளம்)

கமலப் பூவால் = சிவந்த கைகளால்

குரும்பையைப் = தேங்காய் முளை விடும் போது உள்ள நிலைக்கு குரும்பு என்று பெயர்

புடைக்கின்றாள்போல் = அடிப்பதைப் போல

கைகளால் முலைமேல் கொட்டி = கைகளால் முலையின் மேல் அடித்து

 அருங் கலச் சும்மை தாங்க = அருமையான அணிகலன்களைத் தாங்க

 'அகல் அல்குல் அன்றி = அகன்ற அல்குல் மட்டும் அல்ல ,

சற்றே  மருங்குலும் உண்டு உண்டு' என்ன = சிறிய இடையும் உண்டு

மயன் மகள்  = மயனின் மகள்

மறுகி வந்தாள் = மனம் கலங்கி வந்தாள்


இறந்து கிடக்கும் மகனைக் காண கதறிக் கொண்டு வரும் ஒரு தாயை வர்ணிக்கும்  இடமா இது ? கம்பன் இப்படிச் செய்யலாமா ?

அவலச் சுவை இருக்க வேண்டிய இடத்தில் சிருங்காரச் சுவை வரலாமா ?

இது பிழை இல்லையா ?

======================================================================

இந்திரசித்து ஏன் இறந்தான் ?

இராவணன் சீதையின் மேல் கொண்ட காதலால் விளைந்த சண்டையில் இறந்தான்.

இராவணன் ஏன் சீதையின் மேல் காதல் கொண்டான் ?

மண்டோதரி அழகாய் இருந்திருந்தால் ஒரு வேளை இராவணன் சீதையின் மேல்  காதல் கொண்டிருக்க மாட்டானோ என்று சந்தேகம் எழலாம்.

இல்லை.

மண்டோதரி பேரழகி.

கரு கரு என்ற கூந்தல். பாதம்  நீண்ட கூந்தல்.

இல்லை என்று சொல்லும்படி உள்ள இடுப்பு.

அழாகான உடல் அமைப்பு.

அவள் கைகள் சிவந்து  இருக்கின்றன.

ஏன் ?

அவள் மார்பில் அடித்துக் கொண்டு அழுததால்.

அவள் மார்புகள் அவ்வளவு இளமையாய் உறுதியாய் இருக்கிறது. அதில் அடித்துக் கொண்டு அழுததால் அவள் கைகள் சிவந்து போய் விட்டன.

அவள் அழகுக்கு ஒரு குறைவும் இல்லை.

ஒரு பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும், ஒரு சோகமான நிலையில் அவளைப் பார்க்கும் போது "ஐயோ பாவம்" என்று தான் தோன்றும்.

அந்த நிலையிலும் அவளின் அழகு தெரிய வேண்டும் என்றால் அவளின் அழகு   மிக பிரமிபுட்டுவதாக இருந்திருக்க வேண்டும்.

இறந்து கிடக்கும் மகனைக் காண வரும்போதும் கம்பனுக்கு அவளின் அழகு தான்  தெரிகிறது.

இராவணின் காதலுக்கு , மண்டோதரி அழகில்லாமல் இருந்ததல்ல காரணம்.

விதி என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல ?



Sunday, December 15, 2013

இராமாயணம் - மண்டோதரியின் புலம்பல்

இராமாயணம் - மண்டோதரியின் புலம்பல் 


இந்திரசித்து இறந்து விட்டான். இலக்குவன் அவன் தலையை கொண்டு சென்று விட்டான். இராவண யுத்த களத்திற்கு வந்து தலையில்லாத மகனின் உடலை நாட்டுக்கு கொண்டு செல்கிறான்.

செய்தி கேட்டு மண்டோதரி ஓடி வருகிறாள்.

கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியாத பாடல் ஒன்று கம்பனிடம் இருந்து வருகிறது.

மண்டோதரி கதறிக் கொண்டு ஓடி வருகிறாள். வருகின்ற அவசரத்தில் அவள் கூந்தல் அவிழ்ந்து விழுகிறது. கரிய நீண்ட கூந்தல் அவள் பாதத்தை தொடும் அளவிற்கு கீழே விழுந்து  கிடக்கிறது. துக்கம் தாளாமல் அவள் கைகளால் தன் மார்பின் மேல் அடித்துக் கொண்டு வருகிறாள். அப்படி அடித்ததால் திண்மையான முலைகளின் மேல் அடித்ததால் அவள் கைகள் சிவந்து போயின. அவள் மார்புகள் பெரியதாய் இருந்தன. அவள் இடையோ சிறுத்து இருந்தது.

பாடல்

கருங் குழல் கற்றைப் பாரம் கால் தொட, கமலப் பூவால்
குரும்பையைப் புடைக்கின்றாள்போல் கைகளால் முலைமேல் கொட்டி, அருங் கலச் சும்மை தாங்க, 'அகல் அல்குல் அன்றி, சற்றே 
மருங்குலும் உண்டு உண்டு' என்ன, - மயன் மகள் - மறுகி வந்தாள்.

பொருள்


கருங் குழல் = கரிய  குழல்

கற்றைப் = அடர்த்தியான

பாரம் = பாரம் கொண்ட

கால் தொட = காலைத் தொட (அவ்வளவு நீளம்)

கமலப் பூவால் = சிவந்த கைகளால்

குரும்பையைப் = தேங்காய் முளை விடும் போது உள்ள நிலைக்கு குரும்பு என்று பெயர்

புடைக்கின்றாள்போல் = அடிப்பதைப் போல

கைகளால் முலைமேல் கொட்டி = கைகளால் முலையின் மேல் அடித்து

 அருங் கலச் சும்மை தாங்க = அருமையான அணிகலன்களைத் தாங்க 

 'அகல் அல்குல் அன்றி = அகன்ற அல்குல் மட்டும் அல்ல ,

சற்றே  மருங்குலும் உண்டு உண்டு' என்ன = சிறிய இடையும் உண்டு

மயன் மகள்  = மயனின் மகள்

மறுகி வந்தாள் = மனம் கலங்கி வந்தாள்


இறந்து கிடக்கும் மகனைக் காண கதறிக் கொண்டு வரும் ஒரு தாயை வர்ணிக்கும்  இடமா இது ? கம்பன் இப்படிச் செய்யலாமா ?

அவலச் சுவை இருக்க வேண்டிய இடத்தில் சிருங்காரச் சுவை வரலாமா ? 

இது பிழை இல்லையா ?

என்ன காரணம் என்று அடுத்த ப்ளாகில் சிந்திப்போம் 


நன்னெறி - அழும் கண்

நன்னெறி - அழும் கண் 


உடம்பில் எந்த உறுப்புக்கு வலி வந்தாலும் கண் அழும். அது போல எந்த உயிருக்கு துன்பம் வந்தாலும் பெரியவர்கள் அது தனக்கே வந்த துன்பம் போல நினைத்து வருந்துவார்கள்.

வள்ளுவர் சொன்ன மாதிரி,

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தன் நோய் போல் போற்றாக் கடை

பாடல்

பெரியவர் தம்நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம்
எரியின் இழுது ஆவர் என்க - தெரி இழாய்
மண்டு பிணியால் வருந்தும் பிற உறுப்பைக்
கண்டு கலுழுமே கண்.

பொருள்

பெரியவர் = கற்றறிந்த பெரியவர்கள்

தம்நோய் போல் = தனக்கு வந்த நோய் போல

பிறர் நோய் = பிறரின் நோயை

கண்டு உள்ளம் =  கண்டு உள்ளம்

எரியின் இழுது ஆவர் என்க = நெருப்பில் இட்ட வெண்ணை போல உருகுவர்.

 தெரி இழாய் = தேர்ந்து எடுக்கப் பட்ட அணிகலன்களை அணிந்த பெண்ணே

மண்டு பிணியால் =  அதிகாமான நோயால்

வருந்தும் பிற உறுப்பைக் = வருந்தும் மற்ற உறுப்புகளை

கண்டு = கண்டு

கலுழுமே கண் = கலங்கும் கண்




Saturday, December 14, 2013

வில்லி பாரதம் - விஸ்வரூபம்

வில்லி பாரதம் - விஸ்வரூபம் 


கர்ணன் தன்னுடைய எல்லா புண்ணியங்களையும் தாரை வார்த்து கொடுத்த பின், கர்ணனுக்கு கண்ணன் விஸ்வ ரூப தரிசனம் தருகிறான்.

அந்த இடத்தில் சில அற்புதமான பாடல்கள்.

கர்ணன் வணங்கியவுடன் அவன் கண்கள் களிக்கும்படி, நீர் கொண்ட கரிய மேகம் வெட்கிப் போகும்படி கரிய நிறம் கொண்ட அவன் ஐந்து ஆயுதங்களை கைகளில் ஏந்தி, அன்று முதலை வாய் பட்ட கஜேந்திரன் என்ற யானைக்கு எப்படி காட்சி கொடுத்தானோ, அப்படியே தொண்டிர்நான் தோற்றமும் முடிவும் இல்லாத அவன்

பாடல்

போற்றியகன்னன்கண்டுகண்களிப்பப்புணரிமொண்டெழுந்தகார்
                                         முகிலை,
மாற்றியவடிவும்பஞ்சவாயுதமும் வயங்குகைத்தலங்களுமாகிக்
கூற்றுறழ்கராவின்வாயினின்றழைத்த குஞ்சரராசன்முனன்று,
தோற்றியபடியேதோற்றினான்முடிவுந்தோற்றமுமிலாத
                                   பைந்துளவோன்.

பொருள்

போற்றிய = வணங்கிய

கன்னன் = கர்ணன். இரண்டு சுளி ன் போட்டால் அது கர்ணனைக்  குறிக்கும்.மூன்று சுளி ண் என்றால் அது கிருஷ்ணனை குறிக்கும்

கண்டு = கண்டு

கண் களிப்பப் = கண்கள் மகிழும் படி

புணரி = கடலில்

மொண்டெழுந்த = மொண்டு எழுந்த = முகர்ந்து எழுந்த

 கார்  முகிலை = கரிய மேகத்தை

மாற்றிய = விஞ்சிய

வடிவும் = அழகும்

பஞ்சவாயுதமும் = பஞ்ச + ஆயுதமும்

வயங்கு கைத் தலங்களுமாகிக் = விளங்குகின்ற கைத் தளங்களும் ஆகி

கூற்றுறழ்கராவின் = கூற்று + உழல் + கராவின் = கூற்றுவனை போல வந்த முதலையின்

வாயினின்றழைத்த = வாயினால் அழைத்த

 குஞ்சரராசன் = யானைகளின் அரசன் (கஜேந்திரன் )

முனன்று = முன் அன்று

தோற்றிய படியே தோற்றினான் = அன்று தோன்றியபடியே தோன்றினான்

முடிவுந் தோற்றமு மிலாத = முடிவும் தோற்றமும் இல்லாத

பைந்துளவோன் = துளசி மாலையை அணிந்தவன்

யானை அழைத்த போது வந்தவன் என்றால் என்ன அர்த்தம் ? அதில் என்ன சிறப்பு ?

இறைவன் என்பவனே மனிதர்களின் கற்பனையில் தோன்றிய ஒன்று என்று சொல்பவர்கள் உண்டு.

மனிதர்கள் இந்த மண்ணில் தோன்றும் முன், மனித மொழிகள் தோன்றும் முன், விலங்குகள் மட்டுமே இந்த பூமியில் அலைந்து கொண்டிருந்தன.

அப்போது ஒரு யானை துன்பத்தில் அலறியபோது அதை காத்தவன் என்றால் இறைவன் மனித கற்பனையில் உதித்தவன் அல்ல என்பது கருத்து.

மனிதர்கள் தோன்றும் முன்பே இறைவன் இருந்தான், அவன் உயிர்களின் துயர் துடைத்தான் என்பது கதையின் பொருள்.



Wednesday, December 11, 2013

வில்லி பாரதம் - செய் புண்ணியம்

வில்லி பாரதம் - செய் புண்ணியம் 


போரில் அர்ஜுனனின் அம்பால் தாக்கப்பட்டு அயர்ந்து கிடக்கிறான் கர்ணன். அப்போது வேதியர் உருவில் வந்த கண்ணன் , "நீ செய்த புண்ணியம் அனைத்தையும் எனக்கு தானமாகத் தா " என்று கேட்டான்.

கர்ணனும் மகிழ்ந்து கொடுக்கிறான்.

"வேதியரே, என் உயிர் தன் நிலையில் இருந்து கலங்கி நிற்கிறது. அது என் உடலின் உள்ளே இருகிறதா , வெளியே இருகிறதா என்று தெரியவில்லை. நான் வேண்டுவோருக்கு வேண்டிய பொருளை கொடுக்கும் காலத்தில் நீர் வரவில்லை. நான் இது வரை செய்த புண்ணியங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் உமக்குத் தானமாகத் தருகிறேன். நீ அந்த பிரமனை போன்ற உயர்ந்தவன்..உமக்கு இதை தருவதை விட வேறு புண்ணியம் எதுவும் இல்லை "

பாடல்

ஆவியோநிலையிற்கலங்கியதியாக்கையகத்ததோபுறத்துதோ
                                      வறியேன்,
பாவியேன்வேண்டும்பொருளெலாயக்கும்பக்குவந்தன்னில்வந்
                                    திலையால்.
ஓவிலாதியான்செய்புண்ணியமனைத்துமுதவினேன்கொள்க
                                    நீயுனக்குப்.
பூவில்வாழயனுநிகரலனென்றாற்புண்ணியமிதனினும்
                                     பெரிதோ.


சீர் பிரித்த பின்


ஆவியோ நிலையில் கலங்கியது அது ஆக்கையின் அகத்தோ புறத்ததோ அறியேன் 

பாவியேன் வேண்டும் பொருள் எல்லாம் பயக்கும் பக்குவம் தன்னில் வந்தில்லையால் 

ஒவிலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்க நீ உனக்கு 

பூவில் வாழும் அயனும் நிகரில்லை என்றால் புண்ணியம் இதனினும் பெரிதோ  


பொருள்

ஆவியோ = என் உயிரோ

நிலையில் கலங்கியது = தான் இருக்கும் நிலையில் கலங்கியது

அது = அது, அந்த உயிர்

ஆக்கையின் = உடலின்

அகத்தோ = உள்ளேயோ

புறத்ததோ =வெளியேயோ

அறியேன் = அறியேன்.

வாலி இருந்து கிடக்கிறான். தாரை அவன் மேல் விழுந்து புலம்புகிறாள்.

மத்துறு தயிர் என வந்து சென்று இடை 
தத்துறும் உயிரென புலன்கள் தள்ளுரும் 
பித்து நின் பிரிவில் பிறந்த வேதனை  
எத்தனை உள அவை இன்னும் ஈட்டவோ 

மத்தின் இடையில் அகப்பட்ட தயிர் வந்து வந்து செல்வது போல உயிர் என் உடலுக்குள் வந்து வந்து வெளியே போகிறது என்றாள் .



பாவியேன் = பாவியாகிய  நான்

வேண்டும் பொருள் = யார் என்ன பொருள் வேண்டினாலும்

எல்லாம் பயக்கும் = அவற்றை தரும்

பக்குவம் = நிலையில் இருந்த

 தன்னில் வந்தில்லையால் = அந்த நாட்களில் நீ வர வில்லை. 

ஒவிலாது = முடிவில்லாது, கொஞ்சம் கூட மிச்சமில்லாமல்

யான் = நான்

செய் புண்ணியம் = செய் புண்ணியம். செய் புண்ணியம் என்பது வினைத் தொகை. செய்த புண்ணியம், செய்கின்ற புண்ணியம், செய்யப் போகும் புண்ணியம். கர்ணனை சாக விடாமல் அவன் செய்த புண்ணியங்கள் அவனை காத்து வந்தன. தர்மம்  தலை காக்கும் என்பார் போல. அப்படி அவன் செய்த புண்ணியங்களை எல்லாம் தானமாகத் தந்து விட்டால், அப்படி தானம் தந்ததும் ஒரு புண்ணியம்  தானே,அது ஏன் அவனை காக்கவில்லை என்று ஒரு கேள்வி எழும் அல்லவா.  வில்லிபுத்துரார் தமிழ் விளையாடுகிறது . செய் புண்ணியம் என்ற ஒரு   வார்த்தையை போடுகிறார். 

அனைத்தும் உதவினேன் = எல்லாவற்றையும் தந்து விட்டேன். தனக்கென்று கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டு மீதியை தரவில்லை. எல்லாவற்றையும் கொடுத்து விட்டான்.

கொள்க நீ = நீ ஏற்றுக் கொள்

உனக்கு பூவில் வாழும் அயனும் நிகரில்லை  = பூவில் வாழும் அந்த பிரமனும் உனக்கு நிகர் இல்லை.

என்றால் புண்ணியம் இதனினும் பெரிதோ  = உனக்கு தானம் தருவதை விட பெரிய புண்ணியம் இல்லை.


தன்னிடம், தான் செய்த அனைத்து புண்ணியங்களையும் தானமாகப் பெற்ற வேதியன் மேல் அவனுக்கு  கோபம் இல்லை. வேதியனை அவன் தாழ்வாக  நினைக்க வில்லை.

"நீ பிரமனை விட உயர்ந்தவன் " என்று அவனை புகழ்கிறான்.

பிறர்க்கு உதவும் அந்த குணம்...அதில் ஒரு சிறு துளியாவது நமக்குள் வரட்டும்.




Tuesday, December 10, 2013

திருக்குறள் - வினையும் மனமும்

திருக்குறள் - வினையும் மனமும் 


அவன் நல்ல பள்ளிக் கூடத்தில் படித்தான், அதனால் நிறைய மார்க்கு வாங்கினான்.

அவனுக்கு நல்ல வாத்தியார்  கிடைத்தார்,எனக்கும் அந்த மாதிரி கிடைத்தால், நானும் தான் நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருப்பேன்.

அவனுக்கு நல்ல பெண்டாட்டி கிடைத்தாள் , எனக்கும் ஒண்ணு வந்து வாய்த்ததே....

அவனுக்கு அவங்க அப்பா நாலு காசு சேர்த்து வச்சிட்டு போனாரு, அவன் அதை வச்சு முன்னுக்கு வந்துட்டான்... எங்க அப்பா எனக்கு என்னத்த வச்சிட்டு போனாரு...

இப்படி தான் வாழ்வில் முன்னேறாததற்கு எதை எல்லாமோ காரணம் சொல்லுவார்கள்.

மனிதனின் வெற்றிக்கு முதல் காரணம் அவனின்  உறுதியான மனமே...

எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்க வேண்டும் என்ற உறுதியான மனமே வெற்றிக்குக் காரணம்.

அப்பா, அம்மா, சொத்து, பள்ளிக் கூடம், வாத்தியார், மனைவி, அதிர்ஷ்டம் என்று  இவைஎல்லாம் அதற்க்குப் பின்னால் தான்.

இவையும் தேவை தான். ஆனால், மன உறுதி இல்லா விட்டால், இவை இருந்தும் பயன் இல்லை. மன உறுதி இருந்து விட்டால் , இவை இல்லாவிட்டாலும் மேலே வந்து விடலாம்.


பாடல்

வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.

பொருள்


வினைத்திட்பம்  என்ப = வினையை செய்து முடிக்கும் திண்மை என்பது

ஒருவன் = ஒருவனின்

மனத்திட்பம் = மன உறுதியை பொறுத்து அமைவது

மற்றைய எல்லாம் பிற = மற்ற விஷயங்கள் எல்லாம் , அதற்க்கு அடுத்தது தான்.

பிற என்றால் "secondary " என்று கொள்ளலாம்.

காரியத்தை செய்து முடிக்க முதலில் வேண்டியது - மன உறுதி.

மனதில் உறுதி வேண்டும் என்றான் பாரதி.

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா என்பதும் அவன் வாக்கே.



Monday, December 9, 2013

வில்லி பாரதம் - கர்ணன் கேட்ட வரம்

வில்லி பாரதம் - கர்ணன் கேட்ட வரம் 


போர்க்களத்தில், அர்ஜுனனின் அம்பு பட்டு, இரத்தம் பெருக்கெடுக்க, தளர்ந்து கீழே விழுந்து விடுகிறான் கர்ணன்.

அப்போது, அங்கே வேதியர் வடிவில் வந்த கண்ணன் எனக்கு நீ  ஏதாவது தர்மம் தரவேண்டும் என்று கேட்கிறான்.

அப்போது, கர்ணன் அந்த வேதியரிடம் ஒரு வரம் கேட்கிறான்.

"நான் இதுவரை என்னிடம் வேண்டும் என்று கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லமால் வழங்கி இருக்கிறேன். இன்று, இந்த யுத்த களத்தில், நீங்கள் ஏதாவது கேட்டு நான் தர முடியாத நிலையை உண்டாக்கி விடாதீர்கள்...என்னால் என்ன தரமுடியுமோ அதையே தயவு செய்து கேளுங்கள் " என்று தன்னிடம் தானம் வேண்டி வந்த வேதியரிடம் கர்ணன்  வேண்டினான்.

அதை கேட்ட அந்த வேதியனும், "நீ சேர்த்து வைத்திருந்த புண்ணியம் அத்தனையும் தருக " என்று கேட்டான்.

பாடல்

என்று கொண்டு, அந்த அந்தணன் உரைப்ப, இரு செவிக்கு அமுது 
                                எனக் கேட்டு, 
வென்றி கொள் விசயன் விசய வெங் கணையால் மெய் தளர்ந்து 
                                இரதமேல் விழுவோன், 
'நன்று!' என நகைத்து, 'தரத் தகு பொருள் நீ நவில்க!' என, 
                                நான் மறையவனும், 
'ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக!' என்றலும், 
                                உளம் மகிழ்ந்தான்.

பொருள்


என்று கொண்டு = என்று கொண்டு

அந்த அந்தணன் உரைப்ப = அந்த வேதியன் சொன்னதும்

இரு செவிக்கு அமுது எனக் கேட்டு = இரண்டு காதிலும் அமுதம் பாய்ந்தது போல உணர்ந்து

வென்றி கொள் = வெற்றி பெறும் 

 விசயன் = அர்ஜுனனின்

விசய வெங் கணையால் = பலமான அம்புகளால்

மெய் தளர்ந்து = உடல் தளர்ந்து

இரதமேல் விழுவோன் = இரதத்தின் மேல் விழுகின்ற கர்ணன்
,
'நன்று!' என நகைத்து = நன்று என மகிழ்ந்து

 'தரத் தகு பொருள் நீ நவில்க!' என = என்னால் தரக் கூடிய பொருளை நீ கேள் என்றான்

நான் மறையவனும் = அந்த வேதியனும்

'ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக!' என்றலும் = நீ சேர்த்து வைத்த புண்ணியம் அத்தனையும் தருக என்ற கேட்டான் ; அதைக் கேட்டதும்

உளம் மகிழ்ந்தான்.= கர்ணன் உள்ளம் மகிழ்ந்தான்

வாழ் நாள் எல்லாம் சேர்த்து வைத்த புண்ணியம் அத்தனையும் போய் விடும். இனி புண்ணியம்  செய்யவும் வழி இல்லை. இருந்த போதும், அவன் மனம் மகிழ்ந்தது.

என்ன ஒரு மனம் அவனுக்கு...



Sunday, December 8, 2013

திருக்குறள் - நினைப்புதான் பொழப்ப கெடுக்கும்

திருக்குறள் - நினைப்புதான் பொழப்ப கெடுக்கும் 


சில பேருக்கு எதையாவது கேட்டால் , பார்த்தால் உடனே அதை செய்ய வேண்டும் என்று தோன்றும்.

மற்றவன் சட்டம் படித்தால், தானும் படிக்க வேண்டும் என்று நினைப்பது.

மற்றவன் கராத்தே படித்தால் , தானும் அதை படிக்க வேண்டும் என்று நினைப்பது.

உலகில் யார் யார் என்ன என்ன செய்கிறார்களோ அதை எல்லாம் தானும் செய்ய நினைப்பது மதியீனம்.

நம்மால் என்ன செய்ய முடியும், நமக்கு என்ன வலிமை இருக்கிறது, என்றெல்லாம் யோசிப்பது கிடையாது.

அப்படி, தன் வலிமை என்ன என்று அறியாமல், ஆழம் தெரியாமல் காலை விட்டு எடுத்த காரியத்தை முடிக்காமல் பாதியில் விட்டு நட்டப் பட்டவர்கள் பலர்.

பாடல்


உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி
யிடைக்கண் முரிந்தார் பலர்.


சீர் பிரித்த பின்

உடைத் தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி 
இடைக் கண் முரிந்தார் பலர்.

பொருள் 

உடைத் தம் வலி = தம்முடைய வலிமையை

அறியார் = அறியாமல்

ஊக்கத்தின் = ஆர்வத்தால்

ஊக்கி = முனைந்து

இடைக் கண்  = பாதியில்

முரிந்தார் பலர் = தொடங்கிய காரியத்தை கை விட்டவர்கள் பலர்

வெறும் ஆர்வம் மட்டும் போதாது. செய்து முடிக்கும் வலிமை வேண்டும்.

அது என்ன வலிமை ?

வலிமை பற்றி பின்னொரு குறளில் தனியாக சொல்கிறார்  வள்ளுவர். அதை இன்னொரு ப்ளாகில்  பார்ப்போம்.

இரண்டாவது, வள்ளுவர் அப்படி காரியம் செய்யத் தொடங்கியவர்கள் எல்லோரும் தோல்வி அடைவார்கள் என்று சொல்லவில்லை. அப்படி தோற்றவர்கள் "பலர்"  என்கிறார். ஆர்வத்தை மட்டுமே கொண்டு சிலர் வெற்றி அடைந்திருக்கலாம்... ஆனால் பெரும்பாலும் அது தோல்வியில் தான் முடியும். 




Saturday, December 7, 2013

நன்னெறி - சொல்லும், சொல்பவரும்

நன்னெறி - சொல்லும், சொல்பவரும் 


பிள்ளைகளுக்கு பெற்றோரும் பெரியவர்களும் சொல்லும் அறிவுரைகள் மற்றும் நல்ல செய்திகள் பிடிக்காது. "இந்த வயசானவங்க எப்ப பார்த்தாலும் இப்படித்தான் எதையவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள்" என்று அலுத்துக் கொள்வார்கள்.

ஆசிரியரோ, பெற்றோரோ சொல்லும் கடினமான சொற்கள் அவர்களுக்குப் பிடிக்காது. அதே சமயம் உடன் படிக்கும் மாணவர்கள் "சினிமாவுக்குப் போகலாம், தம் அடிக்கலாம்" என்று சொன்னால் ஆஹா இவன் அல்லவோ என் நலம் விரும்பி என்று அவன் பின்னே செல்வார்கள்.

பிள்ளைகள் மட்டும் அல்ல, நாமும் அப்படித்தான்.

நம் நலம் விரும்புவர்கள் சொல்லும் வன் சொற்கள் பிடிக்காது. மற்றவர்களின் இனிய சொற்கள் பிடிக்கும்.

அப்படி இருக்கக் கூடாது.

சிவ பெருமானை , அர்ஜுனன் வில்லை எறிந்து  தாக்கினான். அது சிவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. மன்மதன் மலர் அம்பை சிவன் மேல் எறிந்தான். அதை கண்டு பொறுக்காமல், சிவன் அவனை நெற்றிக் கண்ணால் எரித்து விட்டார். 


பாடல்

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க - ஈசற்கு 
நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஓண்கருப்பு
வில்லோன் மலரோ விருப்பு. 

பொருள்

மாசற்ற = குற்றம் அற்ற
நெஞ்சுடையார் = மனம் உள்ளவர்கள்
வன்சொலினிது = வன் சொல் இனிது = அவர்கள் சொல்லும் சொற்கள் கடினமாய் இருந்தாலும் நல்லது

ஏனையவர் = மற்றவர்கள்
பேசுற்ற = சொல்லிய
இன்சொல் = இனிமையான சொல்
பிறிதென்க = இனிமாயில் இல்லாதவை என்று உணர்க

ஈசற்கு = சிவனுக்கு
நல்லோன் = நல்லவனான
எறி சிலையோ = எறிந்த வில்லா ?
நன்னுதால் = அழகிய நெற்றியை கொண்ட பெண்ணே
ஓண்கருப்பு = உயர்ந்த கரும்பு
வில்லோன் = மன்மதன்
மலரோ விருப்பு = மலரா விரும்புதல் தரக் கூடியது ?


Friday, December 6, 2013

இராமாயணம் - இன் உரை நல்கு நாவால்

இராமாயணம் - இன் உரை நல்கு நாவால் 


சுக்ரீவனுக்கு அரசை அளித்த பின், இராமன் அவனுக்கு சில அறிவுரைகள் கூறுகிரான்.

குரங்குக்கு கூறிய அறிவுரை என்றாலும் நமக்கும் அது பொருந்தும் தானே.

இந்த உலகம் ஒன்றை பலவாக எண்ணி பொருள் கொள்ளும். புகை இருந்தால் அங்கே நெருப்பு இருக்கும் என்று யூகிக்கும். மற்றவர்களுக்குத் தெரியாது என்று எண்ணி தவறைச் செய்யாதே. உன்னை சுற்றி பகைவர்கள் இருப்பார்கள். அவர்களாலும் சில பயன்கள் விளையும். யார் மேலும் கோபத்தை காட்டாதே. எப்போதும் சிரித்த முகத்துடன் இரு. மனதில் அன்பு இல்லாவிட்டாலும், பகைவர்களிடமும் இனிய சொற்களை நாவால் கூறு.



பாடல்


''புகை உடைத்து என்னின், உண்டுபொங்கு
      அனல் அங்கு'' என்று உன்னும்
மிகை உடைத்து உலகம்;
     நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே;
பகையுடைச் சிந்தையார்க்கும், பயன்
      உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி, இன்

      உரை நல்கு, நாவால்.


பொருள்

'புகை உடைத்து என்னின் = புகை இருந்தால்
உண்டு = இருக்கும்

பொங்கு அனல் அங்கு = கொதிக்கும் நெருப்பு அங்கு

என்று உன்னும் என்று நினைக்கும்

மிகை உடைத்து உலகம் = அறிவை உடையது இந்த உலகம். அதாவது கண்ணால் காண்பது மட்டும் அல்ல, அனுமானமாக யூகித்து அறியும் அறிவும் உண்டு. "மிகை" என்றால் அதிகமான. காண்பதற்கு மேலும் உள்ள அறிவு. புகை என்றால் புகை மட்டும் அல்ல. அங்கு நெருப்பும் இருக்கும் என்று உணரும் அறிவு மிகை அறிவு.

நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே = நூலோர் சொன்ன வினயங்களும் வேண்டும்.  வினையும் என்றால் சூழ்ச்சி. அரசர்க்கு கொஞ்சம் சூழ்ச்சியும் வேண்டும். அனுபவ அறிவோடு, புத்தக அறிவும் சேர வேண்டும்.


பகையுடைச் சிந்தையார்க்கும் = உன் மேல் பகை உணர்வு கொண்டவர்களுக்கும்

 பயன் உறு பண்பின் = அவர்களால் பெற்ற பயன்களுக்கு ஏற்ப

தீரா நகையுடை = எப்போதும் சிரிப்பை கொண்ட

முகத்தை ஆகி = முகத்துடன்

இன் உரை நல்கு, நாவால் = நாக்கால் நல்ல சொற்களை கூறு.

மனதில் இல்லாவிட்டாலும், வாயால் சொல்லு.

சொல்லுவது அறத்தின் நாயகன்.

நம் மேல் பகை உணர்வு கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களாலும் சில பயனிருக்கும்.  

எல்லோருக்கும் சிரித்த முகத்துடன் இனிய சொற்களை கூறு.


Tuesday, December 3, 2013

நன்னெறி - கதிர் வரவால் பொங்கும் கடல்

நன்னெறி - கதிர் வரவால் பொங்கும் கடல் 


கடுமையாக பேசி காரியம் சாதிக்க முடியாது. கோபப் பட்டு, கடுமையான சொற்களை கூறி , மிரட்டி காரியம்  சாதிக்க முடியாது.

சூரியன் மிகப் பெரியதுதான், மிகுந்த சக்தி வாய்ந்ததுதான் ஆனால் கடல் சூரியனின் கதிருக்கு பொங்காது. குளிர்ந்த கதிரை வீசும் நிலவின் கதிருக்கு கடல் பொங்கும்.

மக்கள் இனிய சொல்லுக்கு தலை சாய்ப்பார்கள்.....


பாடல்

இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய் 
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் தண்ணென்
கதிர்வரவால் பொங்குங் கடல். 

பொருள் 

இன்சொலா லன்றி = இன் சொல்லால் அன்றி
இருநீர் வியனுலகம் = இரண்டு நீரைக் கொண்ட இந்த பெரிய உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே = வன்மையான சொற்களால் என்றும் மகிழாது
பொன்செய் = பொன்னால் செய்யப்பட்ட
அதிர்வளையாய் = அதிரும் வளையலை அணிந்த பெண்ணே
பொங்காது  அழல் கதிரால் = அனல் வீசும் கதிரால் பொங்காது
தண்ணென் = குளிர்ந்த
கதிர்வரவால் = கதிர்களை வீசும் நிலவின் வரவால்
பொங்குங் கடல் = பொங்கும் கடல்

இனிய சொற்களை பேசிப் பழகுங்கள். உலகம் உங்கள் சொல்லுக்கு தலை ஆட்டும்.

(மூணாபில் படித்த பாடல்...ஞாபகம் இருக்கிறதா ?...:))


Sunday, December 1, 2013

இராமாயணம் - காமம் இல்லை எனின்

இராமாயணம் - காமம் இல்லை எனின் 


துன்பம் என்ற சொல்லே இல்லாமல் போய் விடும் எப்போது என்றால் பெண்கள் மேல் கொள்ளும் காமம் என்ற ஒன்று இல்லாவிட்டால். அந்த காமம் இல்லாவிட்டால் நரகமும் இல்லை.

அப்படி என்றால் உலகில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் காமமே காரணம். இந்த உலகில் மட்டும் அல்ல, இறந்த பின் நரகம் செல்வதற்கும் காமமே காரணம்.

தூம கேது என்பது ஒரு வால் நட்சத்திரம். அது தோன்றும் போதெல்லாம் பூமியில் பெரிய அழிவு தோன்றியிருக்கிறது. அது போல மங்கையர் மேல் காமம் கொள்ளும் போதெலாம் பேரழிவு தோன்றுகிறது.

பாடல்

தூமகேது புவிக்கு எனத் தோன்றிய
வாம மேகலை மங்கையரால் வரும்
காமம் இல்லை எனின், கடுங் கேடு எனும்
நாமம் இல்லை; நரகமும் இல்லையே.’

பொருள்


நன்னெறி - வாழ்க்கை என்னும் அதிசயம்

நன்னெறி - வாழ்க்கை என்னும் அதிசயம் 


வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஒரு மிகப் பெரிய அதிசயம்.

வெளியில் விட்ட மூச்சு மீண்டும் உள்ளே வருமா ? உள்ளே வரும் என்று என்ன உத்தரவாதம்.

போன நொடி துடித்த இதயம் அடுத்த நொடி அடிக்குமா ? அடிக்க வேண்டும் என்ற என்ன கட்டாயம் ?

யாரைக் கேட்டு இது எல்லாம் நடக்கிறது ? நாம் சொல்லித்தான் நடக்கிறது என்றால் கடைசியில் விட்ட மூச்சை ஏன் மீண்டும் இழுக்க முடியவில்லை ?

ஒவ்வொரு வினாடியும் இந்த உடலில் உயிர் உலவுவது மிகப் பெரிய அதிசயம்.

இந்த உடலை விட்டு உயிர்  போவது ஒன்றும் பெரிய அதிசயம் இல்லை.

ஒன்பது வாயில்கள் இந்த உடலில். ஒன்றுக்கும் பூட்டு கிடையாது. இந்த ஓட்டை பலூனில் காற்று நிற்பது அதிசயமா , காற்று இறங்கிப் போவது அதிசயமா ?

பாடல்

வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில் 
பொருந்துதல் தானே புதுமை - தீருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு.



Saturday, November 30, 2013

இராமாயணம் - புலன் அடக்கத்தை விட அன்பு சிறந்தது

இராமாயணம் - புலன் அடக்கத்தை விட அன்பு சிறந்தது 


அன்று தொட்டு இன்று வரை ஆசையே துன்பத்திற்கு காரணம், புலன் அடக்கம் அவசியம் என்று எல்லா நூல்களும் போதித்து வருகின்றன.

இராமயணம் இந்த அடிப்படை உண்மையை கேள்வி கேட்கிறது.

புலன்களை நம்  எதிரிகள் என்று நினைத்து அவற்றோடு சண்டை போட்டு, அவற்றை அடக்கி, அவற்றை தூய்மை படுத்துகிறேன் என்று அவற்றை போட்டு கொல்வது ஏன் ? அன்றும், இன்றும் , என்றும் மூன்று உலகத்திலும் அன்பே சிறந்தது. புலன் அடக்கத்தை விட அன்பு செலுத்துவதே சிறந்தது என்று இராமனுக்கு வசிட்டர்  கூறுகிறார்.


பாடல்

‘என்பு தோல் உடையார்க்கும், இலார்க்கும், தம் 
வன் பகைப் புலன் மாசு அற மாய்ப்பது என்?
முன்பு பின்பு இன்றி, மூ உலகத்தினும்,
அன்பின் நல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ?


வில்லிபாரதம் - எடுக்கவோ கோக்கவோ ?

வில்லிபாரதம் - எடுக்கவோ கோக்கவோ ?


குந்தி போருக்கு முன் கர்ணனை சந்திக்கிறாள். கர்ணனின் தாய் தான் தான் என்று சொல்கிறாள். கர்ணனை பாண்டவர்களோடு சேரும்படி சொல்கிறாள். கர்ணன் மறுக்கிறான். அவன் ஏன் பாண்டவர்களோடு சேர மாட்டேன்  என்பதற்கு பல காரணங்கள் சொல்கிறான். அதில் ஒன்று

" அம்மா,ஒரு முறை நானும் துரியோதனன் மனைவி பானுமதியும் சொக்கட்டான் ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு பின் துரியோதனன் வந்தான். எனக்கு பின்னால் வந்ததால் நான் அவனை கவனிக்க வில்லை. ஆனால், வாயிலை பார்த்து அமர்ந்து இருந்த பானுமதி தன் கணவன் வருவதை கண்டு எழுந்தாள் . அவள் ஆட்டத்தில் தோற்பதை தவிர்க்கத் தான் எழுந்திருக்கிறாள் என்று எண்ணி அவளை பிடித்து உட்கார வைக்க முனைந்தேன். அப்போது அவள் இடுப்பில் அணிந்திருந்த மேகலை என்ற ஆபரணம் அறுந்து அதில் உள்ள மணிகள் சிதறி ஓடின. அங்கு வந்த துரியோதனன் அந்த முத்துக்களை எடுக்கவோ கோர்க்கவோ என்று  கேட்டான்.அப்படி என் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த துரியோதனனுக்காக போர் செய்வது என் செஞ்சோற்று கடன், தர்மம் , புகழ் தரும் செயல் "  என்றான்.

பாடல்

மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு
அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ?
கோக்கவே?'" என்றான்;
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச்
சென்று, செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,

தருமமும்!'


பொருள்

மடந்தை = துரியோதனின் மனைவி பானுமதி

பொன்-திரு மேகலை மணி = இடையில் கட்டியிருந்த மேகலை என்ற பொன் ஆபரணத்தில் உள்ள மணிகள்

உகவே = உதிர்ந்து விழ

மாசு அறத் திகழும் ஏகாந்த இடம்தனில் = மிகமிக அற்புதமான வரி. அவர்கள் (கர்ணனும், பானு மதியும் ) தனியாக  இருந்தார்கள். ஆனால் அந்த இடம் குற்றமோ தவறோ நிகழாத தனிமையான இடம். மாசு என்றால் குற்றம். குற்றம் அற்ற தனிமியான இடம்.


புரிந்தே நான் அயர்ந்து இருப்ப = நான் விளையாட்டு மும்முரத்தில் அயர்ந்து இருக்க

 "எடுக்கவோ? கோக்கவே?'" என்றான் = அப்படி உதிர்ந்த முத்துகளை எடுக்கவோ கோர்கவோ என்றான்

திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் = உறுதியான வேலை கொண்ட இராசராசனான துரியோதனுக்கு

 செருமுனைச் சென்று = போர்க்களம் சென்று

செஞ்சோற்றுக் கடன் கழிப்பதுவே = உண்ட சோற்றுக்கு கடன் கழிப்பதுவே

எனக்கு இனிப் = எனக்கு

புகழும், கருமமும், தருமமும்!'= புகழும் கருமமும் தருமமும் ஆகும்.

எடுப்பது சரி. எதற்கு கோர்க்க வேண்டும் ?

முத்தில் நூலை கோர்ப்பது என்றால் கை நடுங்காமல் இருக்க வேண்டும்.

கை எப்போது நடுங்கும் ? பயத்தில் உதறும். கோபத்தில், ஆத்திரத்தில் நடுங்கும்.

துரியோதனுக்கு பயமும் இல்லை, கோபமோ ஆத்திரமோ இல்லை. நிதானமாக இருக்கிறான் என்று காட்டவே "கோர்க்கவோ" என்றான்.

மேலும்,

கர்ணனுக்கோ பானுமதிக்கோ கொஞ்சம் பதற்றம் இருக்கலாம்....துரியோதனன் தங்களை தவறாக நினைத்து விடுவானோ என்று. அவர்களால் கோர்க்க முடியாது என்பது மறைமுக கருத்து.

நீங்கள் விளையாடுங்கள், நான் கோர்த்து தருகிறேன் என்ற இடத்தில் துரியோதனன் தன் மனைவி மேல் வைத்த நம்பிக்கையும், தன் நண்பன் மேல் வைத்த  நம்பிக்கையும் ஒளிர் விடுகிறது.

ஒரே ஒரு வாக்கியம். எவ்வளவு அர்த்தம்.

அப்படி பேசப் படிக்க வேண்டும்.

இப்படி சிறந்த பல பாடல்களை கொண்டது வில்லி பாரதம்.


நேரம் இருப்பின் மூல நூலை படித்துப்  பாருங்கள்.

இராமாயணம் - போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது

இராமாயணம் - போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது


இராமாயணத்தில் அறிவுரைகள், அறவுரைகள் நிறைய உண்டு.

வாழ்க்கைக்கு வேண்டிய தத்துவங்களை இராமாயணம் நமக்குச் சொல்லித் தருகிறது. காலம் கடந்து நிற்கும் அந்த தத்துவங்களில் சிலவற்றை நாம் வரும் ப்ளாகுகளில் சிந்திக்கலாம்.

பொதுவாக புகழ் வேண்டும் என்றால் நாம் என்ன நினைப்போம் ? வெற்றி பெற்றால் புகழ் கிடைக்கும்.

நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் யாரோ தோற்க வேண்டும்.

தோற்பவன் எளிதில் தோற்பானா ? சண்டையிடுவான்.

சண்டை என்றால் வில், வாள், கத்தி, கேடயம் என்று இல்லை. வாதங்கள், தர்க்கங்கள் என்று எத்தனையோ குட்டி குட்டி யுத்தங்கள். சின்ன சின்ன போர்கள். எல்லா தர்க்கத்திலும் வெற்றி பெற வேண்டும் என்று  நினைக்கிறோம். வாதங்களில் வென்று நண்பர்களின் நடப்பை , கணவன்/மனைவியின்  அன்பை இழக்கிறோம்.

இப்படி சின்ன சின்ன போர்களில் நிறைய எதிரிகளை சம்பாதித்துக் கொள்கிறோம்.

இராமனுக்கு முடி சூடுவதற்கு முன் வசிட்டர் சில புத்தி மதிகளை  கூறுகிறார்.

"யாரோடும் பகை கொள்ளாதே. அப்படி இருந்தால் போர் மறைந்து போகும் , ஆனால் உன் புகழ் மறையாது.  போர் இல்லை என்றால் உன் படைக்கு சேதம் இல்லை. அது அழியாது. அழியாத பெரிய படையை கண்டு மற்றவர்கள் உன் மீது போர் செய்ய மாட்டார்கள். அப்படி அன்பால் பகைவர்களை வென்ற பின் அவர்களை அழிக்கும் எண்ணம் தோன்றாது .."

பாடல்

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்குல் செல்லாது; அது தந்தபின்,
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ? 


பொருள்

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்குல் செல்லாது; அது தந்தபின்,
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ?

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் = யாரோடும் பகை இல்லை என்ற பின்

போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது = போர் இல்லாது போகும்; ஆனால் புகழ் இல்லாது போகாது

தன் தார் ஒடுங்குல் செல்லாது = (உன்) படை அழியாது

அது தந்தபின் = அது நடந்த பின்

வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ? = பகைவர்களை வேரோடு அழிக்க வேண்டும் என்ற நினைப்பு வருமோ ? வராது.

இராமாயணம் அன்பை போதிக்கிறது. சண்டை வேண்டாம் என்கிறது. போர் இல்லாமலே  புகழ் வரும் என்கிறது. பகைவனையும் அன்பால் வெல்லலாம் என்கிறது. 

நம்முடைய போர்களை எண்ணிப் பார்ப்போம். 


Thursday, November 28, 2013

வில்லிபாரதம் - வேண்டிய தருதி நீ

வில்லிபாரதம் - வேண்டிய தருதி நீ 


பாரதப் போரில் கர்ணன் அடி பட்டு தளர்ந்து தேரில் இருந்து விழுந்து கிடக்கிறான். அர்ஜுனன் அவன் மேல் அம்பை விட நினைக்கும் வேளையில் கண்ணன் அவனைத் தடுத்து நிறுத்தி விட்டு, தேரை விட்டு  இறங்கி, ஒரு வேதியர் வடிவில் கர்ணனை அடைகிறான்

கர்ணன்: (ஐயா தாங்கள் யார் ?)

வேதியன்: நான் மேரு மலையில் தவம் புரிபவன்

கர்ணன்: (நல்லது, இந்த போர் களத்தில் என்ன செய்கிறீர்கள்)

வேதியன்: என்னை வறுமை வாட்டுகிறது

கர்ணன்: அதற்காக இந்த யுத்த களத்தில் என்ன செய்கிறீர்கள்

வேதியன்: கர்ணா , நீ வறுமையில் வாடுபவர்களுக்கு வேண்டியதைத் தருவாய் என்று கேள்வி பட்டேன். எனவே உன்னை காண வந்தேன்.

பாடல்

தாண்டியதரங்கக்கருங்கடலுடுத்த தரணியிற்றளர்ந்தவர்தமக்கு,
வேண்டியதருதிநீயெனக்கேட்டேன்மேருவினிடைத்தவம்பூண்டேன்,
ஈண்டியவறுமைப்பெருந்துயருழந்தேனியைந்ததொன்றிக்கணத்
                                        தளிப்பாய்,
தூண்டியகவனத்துரகதத்தடந்தேர்ச்சுடர்தரத்தோன்றியதோன்றால்,

சீர் பிரித்த பின்

தாண்டிய தரங்கக் கருங் கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர் தமக்கு 
வேண்டிய தருதி நீ எனக் கேட்டேன் மேருவில் இடை தவம் பூண்டேன் 
ஈண்டிய வறுமை பெரும் துயர் உழந்தேன் இயைந்த ஒன்றை கணத்தில் அளிப்பாய் 
தூண்டிய கவனத் துரக தடம் தேர் சுடர் தரத் தோன்றிய தோன்றால் 

பொருள்

தாண்டிய = தாண்டி தாண்டி வந்து கரையில் மோதுகின்ற

தரங்கக் = அலை பாயும்

கருங் கடல் = கரிய கடலை

உடுத்த = உடையாக உடுத்திய

தரணியில் = இந்த உலகில்

தளர்ந்தவர் தமக்கு = தளர்ந்தவர்களுக்கு

வேண்டிய = வேண்டியதை

தருதி நீ = நீ தருவாய்

எனக் கேட்டேன் = என கேள்வி பட்டேன்

மேருவில் = இமய மலையில்

இடை தவம் பூண்டேன் = தவம்  கொண்டிருக்கிறேன்

ஈண்டிய = வந்து தங்கிய

வறுமை = வறுமை

பெரும் துயர் உழந்தேன் = பெரிய துன்பத்தில் கிடந்து உழல்கிறேன்

இயைந்த ஒன்றை = எனக்கு ஏற்ற ஒன்றை

கணத்தில் அளிப்பாய்  = இப்போதே தருவாய்

தூண்டிய = தூண்டப் பட்ட

கவனத் துரக = கதியில் செல்லும் குதிரைகளை கொண்ட

தடம் தேர் = பெரிய தேர்

சுடர் தரத் = சூரிய ஒளியில்

தோன்றிய தோன்றால் = தோன்றிய தோன்றலால்

அப்படி தனக்கு பொருள் வேண்டும் என்று கேட்ட வேதியனிடம் கர்ணன் ஒன்று  கேட்டான்.

அது என்ன என்று அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.









Wednesday, November 27, 2013

இராமாயணம் - மேனி காண மூளும் ஆசையால்

இராமாயணம் - மேனி காண மூளும் ஆசையால்


சீதையை காணும் ஆசை இராவணனின் மனதில் தீ போல கொளுந்து விட்டு  எரிகிறது.

அவள் உடலை காணும் ஆசை என்கிறான்  கம்பன்.

ஒரு இடத்தில் நில்லாமல், நல் வழி செல்லாமல் தாவி தாவி செல்லும் மனதை உடைய இராவணன்,  தீது என்று எண்ணாமல், சீதையை, சிறிது நேரம் கூட மறக்க  முடியாமல்,மா வடு, நெய்தல் பூ, வேல் போன்ற, சிவந்த கண்களை கொண்ட சீதையின் மேனியை காண மூளும் ஆசையால் அவன் ஆவி ரொம்ப நொந்து வருந்தினான்.

பாடல்

தாவியாது, தீது எனாது,
     தையலாளை மெய் உறப்
பாவியாத போது இலாத பாவி-
     மாழை, பானல், வேல்,
காவி, ஆன கண்ணி மேனி
     காண மூளும் ஆசையால்,
ஆவி சால நொந்து நொந்து, -
     அழுங்குவானும் ஆயினான்.


பொருள்

தாவியாது = தாவி தாவி செல்லும் மனது. ஒன்றில் இருக்கும் போது இன்னொன்றை நினைத்து தாவும் மனது.

தீது எனாது = தீது என்று எண்ணாமல்

தையலாளை = பெண்ணை (சீதையை)

மெய் உறப் பாவியாத போது = மனதில் நினைக்காமல் இருக்க முடியாமல்

இலாத பாவி = இருக்க முடியாத பாவி


மாழை = மாவடு

 பானல் = நெய்தல் மலர்

வேல் = கூர்மையான வேல் போன்ற

காவி = சிவந்த

ஆன கண்ணி = கண்களை கொண்ட சீதையின்

மேனி காண மூளும் ஆசையால் = உடலை காணும் ஆசையால்

ஆவி சால நொந்து நொந்து = ஆவி ரொம்ப நொந்து

அழுங்குவானும் ஆயினான் = வருந்துவானும் ஆயினான்

சீதையின் கண் = மாவடு போன்ற தோற்றம், நெய்தல் மலர் போல மணம் , மென்மை , வேல் போன்ற கூர்மை, சிவந்த நிறம்....

கண்ணே இவ்வளவு அழகு என்றால் .....?

Tuesday, November 26, 2013

வில்லிபாரதம் - உணர்வில் ஒன்று படுக

வில்லிபாரதம் -  உணர்வில் ஒன்று படுக 


பாரதத்தில் மிக முக்கியமான, ரொம்பவும்  அறிந்திராத ஒரு இடம்.

துரோணன் போர்க்களத்தில்  இருக்கிறான். அவனை வெல்வது யாராலும் முடியாது. போர் நடந்து கொண்டே  இருக்கிறது.

அப்போது ஒரு நாள் ....

மரிசீ, அகத்தியர் போன்ற ஏழு முனிவர்கள் துரோணரிடம் வந்து "நீ என்ன  கொண்டிருக்கிறாய்? இது நீ செய்யும் வேலை அல்ல. இதை எல்லாம் விடு. விண்ணுலகு சேர வேண்டாமா, உன் மனதில் உள்ள குழப்பத்தை விடுத்து , உணர்வில் ஒன்று படு " என்று உரிமையோடு சொன்னார்கள்.

அவர்கள் சொன்னவுடன் துரோணனுக்கு உண்மை விளங்கிற்று. அவனுக்கு போரில் உள்ள முனைப்பு குறைந்தது. துரோணன் உயிர் துறக்கும் காலம் வந்தது என்று உணர்ந்த கண்ணன் , துரோணனை கொல்ல தர்மனுக்கு ஒரு வழி சொல்லித் தந்தான்.

பாடல்


தொடு கணை வில்லும் வாளும் துரகமும் களிறும் தேரும் 
விடுக; வெஞ் சினமும் வேண்டா; விண்ணுலகு எய்தல் வேண்டும்; 
கடுக, நின் இதயம்தன்னில் கலக்கம் அற்று, உணர்வின் ஒன்று 
படுக!' என்று, உரிமை தோன்றப் பகர்ந்தனர், பவம் இலாதார். 

பொருள்

தொடு கணை வில்லும் = அம்பை தொடுக்கின்ற வில்லும்

வாளும் = வாளும்

துரகமும் = குதிரையும்

களிறும் = யானையும்

தேரும் = தேரும்

விடுக = விட்டு விடு

வெஞ் சினமும் வேண்டா = கொடிய சினமும் வேண்டாம்

விண்ணுலகு எய்தல் வேண்டும் = விண்ணுலகை அடைய வேண்டும்

கடுக = விரைவாக

 நின் இதயம்தன்னில் = உன் இதயத்தில்

கலக்கம் அற்று = கலக்கத்தை அற்று

உணர்வின் ஒன்று படுக!'= உணர்வில் ஒன்று படுக

என்று, உரிமை தோன்றப் பகர்ந்தனர் = உரிமையோடு கூறினார்கள்

பவம் இலாதார் = பிறப்பு இல்லாதவர்கள் (அந்த முனிவர்கள்).

இது துரோணனுக்கு மட்டும் சொல்லப் பட்டது அல்ல.

உங்களுக்கும் எனக்கும் சொல்லப்பட்டது.

நாம் செய்யாத யுத்தமா ? நாளும் நாளும் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.

எதற்கு இந்த போராட்டம் ? எதை அடைய ?

அரசை துரியோதனன் அடைந்தால் என்ன ? தர்மன் அடைந்தால் என்ன ? துரோணனுக்கு அதில் என்ன ஆகப் போகிறது ?

துரோணனின் நோக்கம் என்ன ? விண்ணுலகு அடைவது ? அதற்க்கு இந்த யுத்தம் உதவுமா ?

நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் உங்கள் நோக்கம் நிறைவேற உதவுமா என்று பாருங்கள்.

தேவை இல்லாத யுத்தங்களில் ஈடு படாதீர்கள்.

Monday, November 25, 2013

வில்லிபாரதம் - முன் நின்ற நெடுமாலே

வில்லிபாரதம் - முன் நின்ற நெடுமாலே 


துரியோதனனிடம் தூது போவதற்கு முன்னால் பாண்டவர்கள் ஒவ்வொருவரிடமும் கண்ணன் அவர்களின் எண்ணத்தை கேட்டு அறிகிறான்.

கடைசியில் பாஞ்சாலியிடம் வருகிறான்.....

"கண்ணா, இரணியன் தன் மகனான பிரகலாதனை வெகுண்டு தூணை போது அதில் இருந்து வெளிப்பட்டு பிரகலாதனை காத்தாய், வாய் பேச முடியாத யானை "ஆதி மூலமே " என்று அழைத்த போது வந்து காத்தவனே " என் மேல் கருணை இல்லையா என்று கேட்கிறாள் ...

பாடல்

சாலக் கனகன் தனி மைந்தனை முனிந்த 
காலத்து, அவன் அறைந்த கல்-தூணிடை வந்தாய்! 
மூலப் பேர் இட்டு அழைத்த மும் மத மால் யானைக்கு 
நீலக் கிரிபோல் முன் நின்ற நெடுமாலே!

பொருள்

சாலக் = சிறந்த

கனகன் = பொன்னிறமான நிறம் கொண்ட இரணியன்

தனி மைந்தனை முனிந்த = தனித்துவமான மகனான பிரகலாதனை கோபித்த போது


காலத்து = அந்த நேரத்தில்

 அவன் அறைந்த கல்-தூணிடை வந்தாய்! = அவன் அறைந்த கல் தூணில் இருந்து வெளி வந்தாய்

மூலப் பேர் இட்டு அழைத்த மும் மத மால் யானைக்கு = ஆதி மூலமே என்று யானை உன்னை அழைத்த போது

நீலக் கிரிபோல் முன் நின்ற நெடுமாலே! = நீல மலை போல் முன் நின்ற நெடுமாலே


அவளுக்கு கண்ணன் என்ன சொன்னான் தெரியுமா ?

Sunday, November 24, 2013

வில்லிபாரதம் - உங்கள் ஊரை தீ வைத்து கொளுத்தி விடுவேன்

வில்லிபாரதம் - உங்கள் ஊரை தீ வைத்து கொளுத்தி விடுவேன் 



பாண்டவர்கள் சார்பாக கண்ணன் தூது வந்து, விதுரன் அரண்மனையில் தங்கி இருக்கிறான்.

மறு நாள் துரியோதனனை அரசவையில்  காணவேண்டும்.

அவன் வருவதற்கு முன்னால் துரியோதனன் ஆலோசனை செய்கிறான்.

அவனுக்கு சகுனி துர்போதனை செய்கிறான்.

"நாளை கண்ணன் வந்தால் அவனுக்கு மரியாதை செய்யாதே...." என்று அவனை தூண்டி விடுகிறான்.

துரியோதனன் மனதில் சினம் ஏறுகிறது.

தன்  சபையில் உள்ள மன்னர்களை எல்லாம் பார்த்து கூறுகிறான்....

"நாளைக்கு அந்த இடை சாதியில் பிறந்த கண்ணன் இந்த சபைக்கு வரும் போது , யாராவது எழுந்து அவனை வணங்கி அவனுக்கு மரியாதை செய்தால் உங்கள் ஊரை தீ வைத்து கொளுத்தி விடுவேன் "

என்று மிரட்டுகிறான்.

பாடல்

காவன்மன்னவர்முகங்கடோறுமிருகண்பரப்பியமர்கருதுவோ
ரேவலின்கண்வருதூதனாமிடையனின்றுநம்மவையிலெய்தினால்
ஓவலின்றியெதிர் சென்று கண்டுதொழுதுறவுகூரிலினியுங்களூர்
தீவலஞ்செயவடர்ப்பனென்று நனிசீறினான் முறைமைமாறினான்.


படிக்கவே கடினமாக இருக்கிறதா ? கொஞ்சம் சீர் பிரிக்கலாம்

காவல் மன்னவர் முகங்கள் தோறும் இரு கண் பரப்பி அமர் கருதுவோர் 
ஏவலின் கண் வரும் தூதனாம் இடையன் இன்று நம் அவையில் ஏய்தினால் 
ஓவலின்றி எதிர் சென்று கண்டு தொழுது உறவு கூறில் இனி உங்களூர் 
தீ வலம் செய்ய அடர்பேன் என்று நனி சீறினான் முறைமை மாறினான் 

அப்பாட...ஒரு வழியா சீர் பிரிச்சாச்சு...இனிமேல் அர்த்தம் புரிவது எளிது...

காவல் மன்னவர் = நாட்டையும், மக்களையும் காவல் செய்யும் மன்னவர்கள்

முகங்கள் தோறும் = ஒவ்வொருவர் முகத்தையும் தனித் தனியாக நோக்கி

இரு கண் பரப்பி = தன் இரண்டு கண்களாலும் உற்று நோக்கி

அமர் கருதுவோர்  = சண்டை விரும்பும்  (பாண்டவர்களின்)

ஏவலின் கண் வரும் = ஏவலில் வரும்

தூதனாம் = தூதனாம்

இடையன் = இடை சாதியில் தோன்றிய கண்ணன்

இன்று நம் அவையில் ஏய்தினால் = இன்று நம் அவைக்கு வந்தால்

ஓவலின்றி = ஒழிதல் இன்றி

எதிர் சென்று கண்டு = எதிரில் சென்று

தொழுது = வணங்கி

உறவு கூறில் = உறவு கூறி, நலம் விசாரித்தால்

இனி = இனி

உங்களூர் = உங்கள் ஊரை

தீ வலம் செய்ய அடர்பேன் = தீ வைத்து கொளுத்தி விடுவேன்

என்று  = என்று

நனி = மிகவும்

சீறினான் = கோபப் பட்டான்

முறைமை மாறினான்  = வழி தவறியவன்


அற்புதத் திருவந்தாதி - அறிவானும் அறிவிப்பானும்


அற்புதத் திருவந்தாதி - அறிவானும் அறிவிப்பானும் 

கீதை சொல்கிறது - எல்லாவற்றிலும் தன்னை காண்பானும், தன்னை எல்லாவற்றிலும் காண்பானும் உயர்ந்த யோகி என்று. 

இந்த உலகம் நம்மால் உருவாக்கப் பட்டது. "பன்னிய  உலகினில் பயின்ற பாவத்தை நன்னின்று அறுப்பது நமச்சிவாயவே " என்பார் நாவுக்கரசர். 

இது பன்னிய உலகம். 

 அறிவதும், அறியப் படுவதும் , அறிகின்ற அறிவும் எல்லாம் தானே என்கிறார் காரைக்கால் அம்மையார். 

பாடல் 

அறிவானுந் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்.

பொருள் 

அறிவானுந் தானே = அறிபவனும் தானே 
அறிவிப்பான் தானே = அறிவை  தருகின்றவனும் தானே 
அறிவாய் அறிகின்றான் தானே = அந்த அறிவாய் தன்னை அறிபவனும் தானே 

 அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே = அறிந்து கொள்ளும் மெய் பொருளும் தானே 

 விரிசுடர் பார் ஆகாயம் அப்பொருளுந் தானே அவன் = ஞாயிறு, ஆகாயம், என்று எல்லா பொருள்களும் அவன். 

அறியும் பொருள் 
அறிபவன் 
அறியும் அறிவு 
அறிவு 

எல்லாம் ஒன்றே. ஒன்றில் இருந்து ஒன்று வேறல்ல. 

இது ஒரு பார்வைக் கோணம் (point of view ). அது எப்படி என்று யோசித்துப் பார்ப்போமே. 




இராமாயணம் - ஆவி வேக

இராமாயணம் - ஆவி வேக 


சீதையின் நினைவாகவே இருக்கிறான் இராவணன்.  அவன் படுக்கையில் தூவி இருந்த மலர்கள் எல்லாம் அவன் உடல் சூட்டில் கருகுகின்றன.

அவன் அட்ட திக்கு யானைகளை வென்ற தோள் வலிமை கொண்டவன். காதல் அவனை வலிமை குன்றச் செய்கிறது. உடம்பு தேய்கிறது. தேய்கிறது என்றால் மெலிந்து போகிறான். உள்ளம் நைந்து போகிறது. ஆவி வேகிறது.

காதல் சூட்டில் இரத்தம் கொதிக்கிறது. அந்த சூட்டில் ஆவி வேகிறது.

அவன் தான் என்ன செய்வான் , பாவம்.

பாடல்

நூக்கல் ஆகலாத காதல் நூறு 
     நூறு கோடி ஆய்ப் 
பூக்க, வாச வாடை வீசு சீத நீர் 
     பொதிந்த மென் 
சேக்கை வீ கரிந்து, திக்கயங்கள் 
     எட்டும் வென்ற தோள், 
ஆக்கை, தேய, உள்ளம் நைய, 
     ஆவி வேவது ஆயினான்.


பொருள்

நூக்கல் ஆகலாத காதல் = தவிர்க்க முடியாத காதல்

நூறு நூறு கோடி ஆய்ப் பூக்க = ஆயிரம் தாமரை மொட்டுக்கள். காதல் நூறு நூறு கோடியாக உள்ளத்தில் பூத்தது.


வாச = வாசனை பொருந்திய

வாடை = குளிர்ந்த காற்று

வீசு = வீசும்போது

சீத நீர் = குளிர்ந்த நீர்

பொதிந்த மென் சேக்கை  வீ =  வாசனையும் குளிர்ச்சியும் பொதிந்து வைத்த படுக்கை

கரிந்து = அவன் உடல் சூட்டால் கரிந்து

திக்கயங்கள் = திக்கு யானைகளை (திக்கு = திசை; கயம் = யானை)

எட்டும் வென்ற தோள் = எட்டு திசைகளில் உள்ள யானைகளை வென்ற தோள்கள்

ஆக்கை = அவற்றை கொண்ட உடல்

தேய = மெலிய

உள்ளம் நைய = உள்ளம் நைய

ஆவி வேவது ஆயினான் = ஆவி வேவது ஆயினான்.

காமம் சுடுகிறது.

அப்பேற்பட்ட இராவணனை உருக்கி போடுகிறது இந்த காதல் அல்லது காமம்.

நாமெல்லாம் எந்த மூலை.

மோகத்தின் சூட்டை தாங்க முடியாமல் "மோகத்தை கொன்று விடு இல்லால் என் மூச்சை  நிறுத்தி விடு " என்றார் பாரதியார்




Saturday, November 23, 2013

திருக்கோயில் திருவெண்பா

திருக்கோயில் திருவெண்பா 


இந்த திருக் கோவில் திரு வெண்பாவை அருளிச் செய்தது ஐயடிகள் காடவர்கோன் நாயனார் என்பவர்.

மூப்பு வருமுன், இறைவனை நினை என்று ஒவ்வொரு கோவிலாகக் கூறுகிறார்.  அந்த கோவிலில் உள்ள , அந்த பெயர் உள்ள இறைவனை போய் வணங்கு என்று பெரிய பட்டியலைத்  தருகிறார்.

வாழ்வின் நிலையாமையை மிக மிக ஆழமாக, மனதில் தைக்கும்படி சொல்லும்படி பாடல்கள்.


பாடல்

தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை.

பொருள்

தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது = உயிர் இருக்கிறதா என்ற தொட்டு தடவி பார்த்து, நாடித் துடிப்பை காணாமல்....


பெட்டப் பிணமென்று பேரிட்டுக் = இதுவரை இருந்த பெயரை நீக்கி, பிணம் என்று பெயரிட்டு

 கட்டி எடுங்களத்தா என்னாமுன் = சுடுகாட்டுக்கு கட்டி எடுத்துக் கொண்டு போங்கள் என்று மற்றவர்கள் சொல்லும் முன்னே 

ஏழைமட நெஞ்சே = வரிய என் நெஞ்சே


நெடுங்களத்தான் பாதம் நினை = நெடுங்களுத்தூர் என்ற ஊரில் உள்ள சிவனின் பாதத்தை நினை



வில்லிபாரதம் - இறைவன் எங்கு வருவான்

வில்லிபாரதம் - இறைவன் எங்கு வருவான் 


பாண்டவர்களுக்காக , கண்ணன் துரியோதனிடம் தூது போகிறான். அஸ்தினாபபுரம் வந்து விட்டான்.

எங்கு தங்குவது ?

துரியோதனன் மாளிகை இருக்கிறது, பீஷ்மர், துரோணர், சகுனி, துச்சாதனன் இவர்கள் மாளிகை எல்லாம் இருக்கிறது.

கண்ணன் எங்கு தங்குவான் ?

செல்வமும், படை பலமும், புகழும், நிறைந்த துரியோதனன் அரண்மனையிலா ?

வயதில் மூத்தவர், பிரமச்சரிய விரதம் பூண்ட பீஷ்மர் அரண்மனையிலா ?

கல்வி கேள்விகளிலும் , வில் வாள் வித்தையிலும் சிறந்த துரோணர் அரண்மனையிலா ?

இல்லை.

இங்கு எங்கும் தங்கவில்லை.

இவை எதுவும் இல்லாத நீதிமான், அற வழியில் நிற்கும் விதுரன் அரண்மனையில் தங்கினான்.

விதுரனே சொல்கிறான்....

"கண்ணா, நீ பாற்கடலில் தங்குவாய், ஆதிசேஷனை பாயாகக் கொண்டு தூங்குவாய், ஆல் இலையில் துயில்வாய், வேதங்களில் நீ இருப்பாய், நீ இங்கு வருவதற்கு என் குடிசை என்ன மாதவம் செய்ததோ "

பாடல்

'முன்னமே துயின்றருளிய முது பயோததியோ! 
பன்னகாதிபப் பாயலோ! பச்சை ஆல் இலையோ! 
சொன்ன நால் வகைச் சுருதியோ! கருதி நீ எய்தற்கு 
என்ன மா தவம் செய்தது, இச் சிறு குடில்!' என்றான்.

பொருள்

'முன்னமே = முன்பே

 துயின்றருளிய = துயின்று அருளிய

முது பயோததியோ! = பழமையான பாற்கடலோ

பன்னகாதிபப் பாயலோ!  = பன்னக அதிபன் பாயாலோ. பாம்புகளுக்கு அரசனான ஆதி சேஷன் என்ற பாயோ ?

பச்சை ஆல் இலையோ! = பச்சை ஆல் இலையோ ?

சொன்ன நால் வகைச் சுருதியோ! = நான்கு வேதங்களோ

கருதி நீ எய்தற்கு  = நீ வந்து இருப்பதற்கு

என்ன மா தவம் செய்தது, இச் சிறு குடில்!' என்றான் = என்ன மாதவம் செய்தது என் இந்த சிறு குடில்


இறைவனை தேடி நீங்கள் போக வேண்டாம். அவன் உங்களை தேடி வருவான். 

எப்போது என்று இந்த பாடல் சொல்கிறது. 


Friday, November 22, 2013

வில்லி பாரதம் - நாடு இரந்தோம்

வில்லி பாரதம் - நாடு இரந்தோம் 


வல் என்றால் சூதாட்டம்.

வல்லினால் இழந்த நாட்டை வில்லினால் பெறுவதை விட ஒரு சொல்லினால் பெறுவது நல்லது என்று எண்ணி, கண்ணன் , பாண்டவர்கள் சார்பாக தூது போக தயாராகிறான்.

போகும் முன் பாண்டவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்கள் எண்ணத்தை கேட்கிறான்.

கண்ணன்: நகுலா நீ என்ன சொல்கிறாய் ?

நகுலன்: கண்ணா, நாங்கள் எவ்வளவோ அவமானப் பட்டு விட்டோம். பட்டதெல்லாம் போதும். இப்ப நீ போய் நாடு கேட்டு அவன் தராவிட்டால் "நாடு பிச்சை கேட்டவர்கள் " என்ற அவப் பெயரும் வந்து சேரும்.

கண்ணன்: அதனால் ?

நகுலன்: நாடு பிச்சை கேட்பதை விட , சண்டை போட்டு நாட்டை வெல்லலாம்.

பாடல்

கேவலந்தீர் வலியபகை கிடக்கமுதற் கிளர்மழைக்குக்
                               கிரியொன்றேந்து, 
கோவலன் போயுரைத்தாலுங் குருநாடுமரசுமவன்
                             கொடுக்கமாட்டான், 
நாவலம்பூதலத்தரசர் நாடிரந்தோமென நம்மை நகையாவண்ணங், 
காவலன்றன் படைவலியுமெனது தடம்புயவலியுங் காணலாமே.


சீர் பிரித்த பின்


கேவலம் தீர் வலிய பகை கிடக்க முதல் கிளர் மழைக்கு கிரி ஒன்றை ஏந்திய 
கோவலன் போய் உரைத்தாலும் குரு நாடும் அரசும் அவன் கொடுக்க மாட்டான் 
நாவலம் பூதலத்து அரசர் நாடு இரந்தோம் என நம்மை நகையா வண்ணம் 
காவலன் தன் படை வலியும் எனது தடம் புய வலியும் காணலாமே 

பொருள்

கேவலம் தீர் = சிறுமை தீர. பெரிய என்று பொருள்

வலிய பகை கிடக்க = வலிமையான பகை கிடக்க

முதல் கிளர் மழைக்கு = முன்பு ஆயர்பாடியில் கிளர்ந்து எழுந்த மழைக்கு

கிரி ஒன்றை ஏந்திய  = கோவர்த்தன கிரியை குடை போல ஏந்திய

கோவலன் போய் உரைத்தாலும் = கோவலனான கண்ணன் போய் சொன்னாலும்

குரு நாடும் அரசும் அவன் கொடுக்க மாட்டான் = நாட்டையும், அதை ஆளும் அரச உரிமையும் அவன் (துரியோதனன்) கொடுக்க மாட்டான்


நாவலம் பூதலத்து = இந்த பூமியில் உள்ள

அரசர் = அரசர்கள் எல்லோரும்

நாடு இரந்தோம் = நாட்டை பிச்சையாக கேட்டோம்

என நம்மை நகையா வண்ணம்  = என்று நம்மை பார்த்து சிரிக்காமல் இருக்க

காவலன் தன் படை வலியும் = நாட்டுக் காவலன் ஆன துரியோதனின் படை வலியும்

எனது தடம் புய வலியும் காணலாமே  = என் தோள்களின் வலிமையையும் கானாலாமே



கோவில் திருவெண்பா - ஐயாறு வாயாறு

கோவில் திருவெண்பா - ஐயாறு வாயாறு


மூப்பு.

மனிதனை மாற்றி  போடும் காலத்தின்  கணக்கு.எல்லாம் என்னால் முடியும், என்னால் முடியாதது என்ன என்று இறுமார்த்திருக்கும் மனிதனை பார்த்து சிரிக்கும் காலத்தின் சிரிப்பு மூப்பு....

நரை வந்து, இருமி, உடல் வளைந்து, தோல் சுருங்கி, பல் விழுந்து, கண் பார்வை மங்கி....

மனிதனின் ஆணவம் வடியும் இடம்....

மனிதனின் ஆற்றலை வரையறுக்கும் இடம் ...முதுமை.


குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.


குந்தி நடந்து = நாலு அடி தொடர்ந்து நடக்க முடியாது. மூச்சு வாங்கும். கொஞ்சம்  தரையில் அமர்ந்து (குந்தி) பின் நடந்து , பின் அமர்ந்து...

குனிந்தொருகை கோலூன்றி = நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையும் போய்  உடல் வழிந்து, ஒரு கை கோலைப் பற்றி


நொந்திருமி = நொந்து, இருமி....நெஞ்சு வலிக்கும் இருமி இருமி

ஏங்கி = மூச்சு விடக் கூட கஷ்டப் பட்டு ....

நுரைத்தேறி = நுரை ஏறி


வந்துந்தி = வந்து உந்தி. உந்துதல் என்றால் தள்ளுதல். எது உந்தி வரும் ?


ஐயாறு = "ஐ" என்றால் வாந்தி. அல்லது எச்சில் 

வாயாறு = வாயில் இருந்து ஆறாகப்

பாயாமுன் = பாயும்முன்

நெஞ்சமே

ஐயாறு =  ஐயாறு என்றால் திருவையாறு . அந்த ஊரில் உள்ள சிவனை அல்லது அந்த ஊரின் பெயரையே

வாயால் அழை.= வாயால் அழை

வாயில் வாந்தி வரும், எச்சில் ஒழுகும்...அப்போது நாக்கு குழறும்...சொல்ல வேண்டும்  என்று நினைத்தால் கூட வார்த்தை வராது....


ஐயாரா  என்று அழைத்து வையுங்கள்...ஐயாறு வாயாறு பாயும்முன்


Wednesday, November 20, 2013

வில்லிபாரதம் - ஐந்தாவது வேதம்

வில்லிபாரதம் - ஐந்தாவது வேதம் 


இதிகாசங்கள், வேதம் முதலிய மறை நூல்களில் உள்ளவற்றை விரித்து கூற வந்த நூல்கள்.

 சிறிதாக,கண்ணுக்குப் தெரியாதவற்றை பார்க்க உதவும் பூதக் கண்ணாடி (lens ) போல வேதங்களில் உள்ளவற்றை நாம் புரிந்து கொள்ள கதை வடிவில் எடுத்துத் தருவது புராணங்களும் இதிகாசங்களும்.

சத்யமேவ ஜெயதே என்ற ஒரு வரியை விரித்துச் சொன்னது அரிச்சந்திர புராணம். 

எல்லோரும் சகோதரர்களை போல ஒன்றாக அன்போடு வாழ  வேண்டும் என்று கூற வந்தது இராமாயணமும் மகாபாரதமும்.

இராமாயணம் அன்பின் பெருமையை நேரடியாக சொன்னது.

பாரதம் அன்பின்மையால் வரும் தீமைகளை எடுத்துச் சொன்னது. எனவே பாரதத்தை எதிர் மறை காப்பியம் என்று சொல்வாரும் உண்டு.

மகா பாரதத்தை ஐந்தாவது வேதம் என்று சொல்லுவார்கள். அந்த அளவுக்கு வாழ்க்கைக்கு வேண்டிய உணமைகளை, கடமைகளை சொல்லித் தருவது பாரதம்.

பாரதத்தில் உள்ள பாடல்கள் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

பலா பழம் சற்று கடினமானதுதான். அதற்காக அதன் சுவையான சுளைகளை விட்டு விட முடியுமா ?

முள் இருக்கும். கை எல்லாம் பிசு பிசு என்று ஒட்டும். ஆனால் பலா சுளை கிடைத்து விட்டால்  மத்தது எல்லாம் மறந்து விடும்.

சுளைகளை எடுத்து தருகிறேன். சுவைத்துப் பாருங்கள்.....:)

மகா பாரதத்தை பிள்ளையாரே மேரு மலையில் தன்னுடைய தந்தத்தை வைத்து எழுதினார் என்று ஒரு கதை உண்டு.

என்ன அர்த்தம் ?

கல்லின் மேல் எழுத்துக்கு நேர் என்று அவ்வை சொன்னது போல் என்று வரை இமய மலை இருக்குமோ அன்று வரை பாரதக் கதையும் இருக்கும்.

எழுதியது ஞானக் கடவுளான பிள்ளையார் என்று கூறுவது அது ஒரு மிக உயர்ந்த ஞான நூல் என்று அறிவுறுத்துவதர்க்காக.

வில்லி பாரதத்தின் சிறப்பு பாயிரம்....

நீடாழி யுலகத்து மறைநாலொ டைந்தென்று நிலைநிற்கவே
வாடாத தவவாய்மை முனிராசன் மாபார தஞ்சொன்னநாள்
ஏடாக வடமேரு வெற்பாக வங்கூரெ  ழுத்தாணிதன்
கோடாக வெழுதும்பி ரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.

என்ன முள் குத்துகிறதா ? 

சீர் பிரிக்கலாம்  

நீடாழி உலகத்து  மறை நாலோடு ஐந்து என்று நிலை நிற்கவே 
வாடாத தவ வாய்மை முனி ராசன் மாபாரதம் சொன்ன நாள்
ஏடாக வட மேரு வெற்பாக வங் கூர் எழுத்தாணி தன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்து அன்பு கூர்வாம் அரோ.


பொருள்


நீடாழி = ஆழி என்றால் கடல். ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள. நீடாழி , நீண்ட கடலால் சூழப் பட்ட 

உலகத்து = உலகில்

மறை = வேதங்கள்

நாலோடு = நான்கோடு

ஐந்து = ஐந்தாவது வேதம்

என்று = என்று

நிலை நிற்கவே  = நிலைத்து நிற்கவே

வாடாத = தளராத

தவ = தவத்தையும்

வாய்மை = வாய்மையும்

முனி ராசன் = வியாசன்

மாபாரதம் = மா பாரதம்

சொன்ன நாள் = சொன்னபோது


ஏடாக = அதை எழுதும் ஏடாக

வட மேரு வெற்பாக = வடக்கில் உள்ள மேரு மலையும்

வங் = வன்மையான

கூர் எழுத்தாணி = கூர்மையான எழுத்தாணி 

தன் = தன்னுடைய

கோடாக = தந்தத்தை

எழுதும் = கொண்டு எழுதும்

பிரானைப் = பிரான் என்றால் பிரியாதவன். பக்தர்களை விட்டு என்றும் பிரியாதவன்

பணிந்து = பணிந்து

அன்பு கூர்வாம் = அன்பு செலுத்துவோம். பயம் இல்லை, பக்தி இல்லை ...இறைவன் மேல் அன்பு செலுத்துவோம்

அரோ = அசைச் சொல் 

Tuesday, November 19, 2013

பிரபந்தம் - முகத்தன கண்கள்

பிரபந்தம் - முகத்தன கண்கள் 



வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில் விசித்திரப்பட வீதிவாய்த்
தெள்ளிநாங்களி ழைத்தகோல மழித்தியாகிலும் உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால் உரோடமொன்று மிலோங்கண்டாய்
கள்ளமாதவா கேசவாஉன் முகத்தனகண்க ளல்லவே

அந்த பெண்கள் வாசலில் மணலில் வீடு கட்டி, அழக்காக கோலம் போட்டிருக்கிறார்கள். கண்ணன் வந்து அதை பார்க்கும் சாக்கில் அந்த வீட்டையும் கோலத்தையும் அழித்துவிட்டுப் போகிறான்.

அந்த பெண்களுக்கு அப்ப கூட கண்ணன் மேல் கோபம் வர வில்லை. அவனை பார்த்து உள்ளம் உருகுகிறது. காரணம் அந்த கண்ணனின் கண்கள்.

பாடலை கொஞ்சம் சீர் பிரிப்போம்.

வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திர படம் வீதிவாய் 
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி ஆகிலும் உந்தன் மேல் 
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோதம் ஒன்றும் இல்லோம் கண்டாய் 
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே 



பொருள்

வெள்ளை நுண் மணல் கொண்டு = வெண்மையான நுண்மையான மணலை கொண்டு

சிற்றில் = சின்ன இல் = சிறிய வீடு

விசித்திர படம் = வியக்கும் படம் , இங்கு கோலம் என்று கொள்ளலாம்

 வீதிவாய்  = வாசலில்


தெள்ளி = தெளித்து

நாங்கள் இழைத்த கோலம் = நாங்கள் வரைந்த கோலம்

அழித்தி ஆகிலும் = அழித்தாய் என்றாலும்

உந்தன் மேல் = உன் மேல்

உள்ளம் ஓடி உருகல் அல்லால் = உள்ளம் உருகி ஓடுதல் அல்லால்

உரோதம் = விரோதம்

 ஒன்றும் இல்லோம் கண்டாய் = ஒன்றும் இல்லை

கள்ள மாதவா = கள்ளத்தனம் கொண்ட மாதவா

கேசவா = கேசவா

உன் முகத்தன கண்கள் அல்லவே = உன் முகத்தில் உள்ளவை கண்கள் அல்லவே.


கோலத்தையும் வீட்டையும் அழித்ததற்காக வருத்தப் படவில்லை என்கிறாள் ஆண்டாள்.

இதற்கு ஒரு பாடலா ?

நாம் இறைவனிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கிறோம்.

கேட்டது எல்லாம் கிடைப்பது இல்லை.

மாறாக சில சமயம் துன்பம் வந்து சேர்வதும் உண்டு.

பண நஷ்டம், மனக்  கஷ்டம், உடல் நலக் குறைவு, எதிர்பார்த்தது நடக்காமல் போவது இப்படி ஏதோ வகையில் துன்பம் வந்து சேருகிறது.

அப்போது இறைவன் மேல் நமக்கு அன்பா வரும் ? கோபம் வரும் ... அவனை திட்டி தீர்ப்போம் ...

ஆண்டாள் சொல்கிறாள் ...கண்ணா நீ எனக்கு துன்பம் தந்தாலும் உன் மேல் கோபம் இல்லை....என் உள்ளம் உருகுகிறது என்கிறாள்.

பக்தி...காதல்....துன்பத்திலும் இன்பத்தை பார்க்கும்.



Sunday, November 17, 2013

இராமாயணம் - விதியினை நகுவன

இராமாயணம் - விதியினை நகுவன




விதியினை நகுவன, அயில் விழி; பிடியின்
கதியினை நகுவன, அவர் நடை; கமலப்
பொதியினை நகுவன, புணர் முலை; கலை வாழ்
மதியினை நகுவன, வனிதையர் வதனம்.

நாட்டின் சிறப்பை, வளத்தை சொல்ல வந்த கம்பன் மேற்கண்டவாறு கூறுகிறான்.

அந்த ஊரில் பெண்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா ? (ஜொள்ளு விட தயாராகலாம்)


விதியினை நகுவன, அயில் விழி

அவர்களின் விழிகள் விதியை பார்த்து சிரிக்கும். விதி என்றால் அதை செய்யும் பிரமன். பிரமனும் மயங்குவான் அவர்கள் விழிகளை பார்த்து. "நானா இப்படி ஒரு அழகான விழிகளை படைத்தேன்" என்று பிரமனும் பிரமிப்பான். அந்த விழிகள் பிரமனை பார்த்து சிரிக்குமாம்.  அயில்  என்றால் கூர்மையான என்று பொருள்.

அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்ன
விழித்துப்  கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.

என்பது கந்தரலங்காரம். அயில் வேலன் = கூர்மையான வேலை உள்ளவன் (=முருகன்)


பிடியின் கதியினை நகுவன, அவர் நடை

அந்த பெண்களின் நடை பெண் யானையின் நடையை பார்த்து சிரிக்கும். பெண் யானையின் நடை மெதுவாக இருக்கும். அழகாக இருக்கும். ".ஹ்ம்ம்...இதெல்லாம்  ஒரு நடையா .." என்று அந்த பெண்களின் நடை யானைகளின் நடையை பார்த்து சிரிக்கும்.


கமலப் பொதியினை நகுவன, புணர் முலை

அந்த பெண்களின் மார்புகள் தாமரை மொக்குகளை பார்த்து சிரிக்கும். தாமரை மலரும், கூம்பும்....ஆனால் அந்த பெண்களின் மார்புகள் அப்படி அல்ல..."உன்னை போய்  என் மார்புகளுக்கு உவமையாகச் சொல்கிறார்களே" என்று அந்த பெண்களின்  மார்புகள் தாமரை மொட்டுகளை பார்த்து நகைக்குமாம். "புணர் முலை" என்பதை உங்கள் கற்பனைக்கு விடுகிறேன்.


கலை வாழ் மதியினை நகுவன, வனிதையர் வதனம்

வானில் உள்ள நிலவை பழிக்கும் அவர்கள்  முகம். ஏன்? நிலவு வளரும் தேயும், அதில் கறை உண்டு...களங்கம் இல்லாத இந்த பெண்களின் முகம் நிலவை பார்த்து  சிரிக்கும். "நீ எனக்கு உவமையா " என்று.

Saturday, November 16, 2013

நல் வழி - எங்கே தேடுவது ?

நல் வழி - எங்கே தேடுவது ?



நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே-நின்றநிலை
தானதாந் தத்துவமாஞ் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.

உண்மையை,  இறைவனை,மெய் பொருளை, ஆத்மாவை எங்கே தேடுவது ?

மக்கள் எங்கெல்லாமோ தேடித் தேடி அலைகிறார்கள்...கோவிலில், சாமியார் மடங்களில், காட்டில், குகையில், புத்தகங்களில் என்று எல்லா இடங்களிலும் தேடித் அலைகிறார்கள்.

அவர்கள் தேடிக் கொண்டிருக்கட்டும்....

காட்டில் மரம் சுள்ளி எல்லாம் வெட்டப் போவார்கள்.  ,வெட்டிய பின் அதை எப்படி கட்டுவார்கள் தெரியுமா ? அதற்கென்று தனியாக ஒரு கயறு தேடி போக மாட்டார்கள். அவர்கள் வெட்டி எடுத்த மர பட்டை அல்லது நீண்ட புல் இவற்றை எடுத்து கயறு போல திரித்து கட்டுவார்கள்.

அது போல நீங்கள் தேடிக் கொண்டிருப்பது உங்களிடமே இருக்கிறது.




நன்றென்றும் = நல்லதும்

தீதென்றும் = தீதும்

நானென்றும் = நான் என்பதும்

தானென்றும் = தான் என்பதும்

அன்றென்றும் = அன்று என்பதும் 

ஆமென்றும் = உள்ளது என்பதும் 

ஆகாதே = ஆகாதே

நின்ற நிலை = இருந்த நிலை

தானதாந் தத்துவமாஞ் = தான் அது ஆம் தத்துவமாம் 

சம்பறுத்தார் = சம்பு அறுத்தார் = சம்பு என்பது ஒரு வகை புல்

யாக்கைக்குப் = கட்டுவதற்கு. யாக்குதல் என்றால்  கட்டுதல். யாக்கை என்றால் உடல். எலும்பு, தோல், இவற்றால் கட்டப் பட்டதால் அது யாக்கை எனப் பட்டது. எழுத்து, சீர், தளை இவற்றால் கட்டப் படும்

போனவா தேடும் பொருள் = போனவர்கள் தேடும் பொருள்



Friday, November 15, 2013

இராமாயணம் - மழைச் சாரல் வாழ்கை

இராமாயணம் -  மழைச் சாரல் வாழ்கை 



‘விண்ணு நீர் மொக்குகளின் விளியும் யாக்கையை
எண்ணி, நீ அழுங்குதல் இழுதைப்பாலதால்;
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை; போய்
மண்ணு நீர் உகுத்தி, நீ மலர்க்கையால்’ என்றான்.

தசரதன் இறந்த செய்தி கேட்டு அயர்ந்து நின்ற இராமனை தேற்றிக் கூறுகிறான் வசிட்டன்.

வானிலிருந்து விழும் மழைத் துளிகள் எத்தனை இருக்கும். இதுவரை விழுந்த துளிகளின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்.

ஒரு மழைத் துளி வரும்போதே தெரியும் அது தரையில் மோதி சிதறி தெறிக்கப் போகிறது என்று.

கீழிறங்கி வரும் போது அழகாக இருக்கும் ...அது வானவில்லை உண்டாக்கும்....ஆனால் வரும்போதே தெரியும் அதன் வாழ்க்கை முடியப் போகிறது என்று.

மழை நீர் கீழே விழுந்து சிதறி விட்டதே என்று யாராவது வருந்துவார்களா ?

அப்படி வருந்தினால் அது எவ்வளவு நகைப்புக்கு உரியதாய் இருக்கும்.


இராமா !, நீ இதற்காக (தசரதன் ) இறந்ததற்காக அழுவது உன் பெருமைக்கு இழுக்கு . அழுவதை விட்டு விட்டு அவனுக்கு உரிய நீர் கடனை செய்.

பொருள்

விண்ணு நீர்   = விண்ணில் இருந்து வரும் நீர் துளிகள்

மொக்குகளின் = அரும்புகள் போல இருக்கும்

விளியும் யாக்கையை = அழியும் உடலை

எண்ணி = நினைத்து

நீ =  நீ

அழுங்குதல்= வருந்துதல்

இழுதைப்பாலதால் = இழுக்கு ஆகும்

கண்ணின் நீர் = கண்ணீர் 

உகுத்தலின் = விடுவதால்

கண்டது இல்லை = கண்ட பயன் ஒன்றும் இல்லை.

போய் = நீ போய்

மண்ணு நீர் உகுத்தி = நீர்க் கடனை செய்

நீ மலர்க்கையால் = உன்னுடைய மலர் போன்ற கையால்

என்றான் = என்றான் வசிட்டன்

சாமாறே விரைகின்றேன் என்பார் மணி வாசகர். இறப்பதற்காக விரைவாக போய் கொண்டிருக்கிறேன்.



Wednesday, November 13, 2013

வில்லி பாரதம் - அவனிடம் ஏன் போக வேண்டும் ?

வில்லி பாரதம் - அவனிடம் ஏன் போக வேண்டும் ?


பாண்டவர்களை அஸ்தினா புரத்தில் தான் கட்டிய மண்டபத்தை காண வரும்படி ஓலை அனுப்புகிறான் துரியோதனன்.

அந்த ஓலையை திருதராஷ்டிரனை கொண்டு கையெழுத்து இட வைக்கிறான்.

அந்த ஓலையை விதுரனிடம் கொடுத்து அனுப்புகிறான்.

ஓலையை பெற்ற தருமன், தம்பிகளிடம் கேட்கிறான் "போகலாமா , வேண்டாமா " என்று.

அர்ஜுனன் போக வேண்டாம் என்று கூறுகிறான் ....


பாடல்

தேற லார்தமைத் தேறலுந்தேறினர்த் தேறலா மையுமென்றும் 
மாற லாருடன் மலைதலு மாறுடன்மருவிவாழ் தலுமுன்னே 
ஆற லாதன வரசருக் கென்றுகொண்டரசநீ தியிற்சொன்னார் 
கூற லாதன சொல்வதென் செல்வதென்கொடியவ னருகென்றான்.

சீர் பிரிக்காமல் புரியாது....:)

தேறலார் தம்மை தேறலும் தேறினார் தேறலாமையும் என்றும் 
மாறலார் உடன் மலத்தலும் மாறுடன் மருவி வாழ்தலும் முன்னே 
ஆறு அலாதன அரசர்க்கு என்று கொண்ட அரச நீதியில் சொன்னார் 
கூறலாதன சொல்வதென் செல்வதென் கொடியவன் அருகு என்றான் 

நம்பாதவர்களோடு நட்பு கொள்ளக் கூடாது
நட்பு கொண்டவர்களை நம்பாமல் இருக்கக் கூடாது
நண்பர்களோடு சண்டை போடக் கூடாது
பகைவர்களோடு நட்பு பாராட்டக் கூடாது
இவை அரசர்களுக்கு என்று சொல்லப் பட்ட வழி
இதை விட்டு அவனிடம் போவது என்ன ?


பொருள்

தேறலார் = நம் நம்பிக்கையில் தேராதவர்கள்

தம்மை = அவர்களை

தேறலும் = ஏற்றுக் கொள்ளுதலும்

தேறினார் = ஏற்றுக் கொண்டவர்களை (நண்பராக)

தேறலாமையும் = நம்பாமல் இருப்பதும்

என்றும் = எப்போதும்

மாறலார் உடன் = மாறாமல் ஒன்றாக நம்முடன் இருப்பவர்களிடம்

மலத்தலும் = சண்டை இடுதலும்


மாறுடன் = மாறு பட்டவர்களுடன் (பகைவர்களுடன் )

மருவி வாழ்தலும் = ஒன்றாக வாழ்தலும்

முன்னே  = முன்பே

ஆறு அலாதன = ஆறு என்றால் வழி. வழி அல்லாதன

அரசர்க்கு என்று கொண்ட = அரசர்களுக்கு என்று

அரச நீதியில் சொன்னார்  = அரச நீதியில் சொன்னார்

கூறலாதன சொல்வதென் = அதில் கூறாதவற்றை நீ (தருமனே) ஏன் சொல்கிறாய். அறம் இல்லாததை ஏன் கூறுகிறாய்

செல்வதென் = செல்வது என் ? ஏன் போக வேண்டும் ?

கொடியவன் அருகு என்றான் = கொடியவனான துரியோதனன் அருகில் என்றான்

கொடியவர்கள் கிட்ட கூட போகக் கூடாது.



இராமாயணம் - எது வரை விளக்கு எரியும் ?

இராமாயணம் -  எது வரை விளக்கு எரியும் ?




புண்ணிய நறு நெயில்,
    பொரு இல் காலம் ஆம்
திண்ணிய திரியினில்,
    விதி என் தீயினில்,
எண்ணிய விளக்கு அவை
    இரண்டும் எஞ்சினால்,
அண்ணலே! அவிவதற்கு
    ஐயம் யாவதோ? ‘‘

விளக்கு எதுவரை எரியும் ? திரியும் எண்ணையும் உள்ள வரை எரியும்...அதற்குப் பின் அணைந்து போகும். இதில் என்ன சந்தேகம் ?

நம் வாழ்க்கை என்று தீபம் நாம் செய்த புண்ணியம் என்ற எண்ணெய் , காலம் என்ற திரி இருக்கும் வரை ஒளி வீசிக் கொண்டிருக்கும்.

செய்த புண்ணியம் எல்லாம் நாம் அனுபவிக்க உதவுவது காலம் என்ற திரி.

புண்ணியத்தின் பலன் முடியும் போது வாழ்கை முடிந்து போகும்.

எண்ணையும், திரியும் தீர்ந்த விளக்கின் தீபம் போல....

பொருள்


புண்ணிய நறு நெயில் = புண்ணியம் என்ற நல்ல நெய்யும்

பொரு இல் = ஒப்பற்ற

காலம் ஆம் = காலம் என்ற

திண்ணிய திரியினில் = திடமான திரியில்

விதி என் தீயினில் = விதி என்ற தீயில் , தீபம்

எண்ணிய விளக்கு = உண்டான விளக்கு

அவை  இரண்டும் எஞ்சினால் = அவை இரண்டும் தீர்ந்து போனால்

அண்ணலே! = அண்ணலே 

அவிவதற்கு = அணைந்து போவதற்கு

ஐயம் யாவதோ? = சந்தேகம் ஏதும் உண்டோ ? (கிடையாது)

பாவம் செய்தால் அதை அனுபவிக்க வாழ்கை கிடையாதா ?

புண்ணியம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். நீண்ட நாள் வாழ வேண்டும் என்றால்  புண்ணியம் செய்யுங்கள்.

தசரதன் இறந்த செய்தி கேட்டு தளர்ந்த இராமனுக்கு ஆறுதலாக வசிட்டன் கூறியது.





Tuesday, November 12, 2013

வில்லி பாரதம் - தமிழ் மகள் வாழ்த்து

வில்லி பாரதம் - தமிழ் மகள் வாழ்த்து 




பொருப்பிலேபிறந்துதென்னன்புகழிலேகிடந்துசங்கத்து
இருப்பிலேயிருந்துவைகையேட்டிலேதவழ்ந்தபேதை
நெருப்பிலேநின்றுகற்றோர்நினைவிலேநடந்தோரேன
மருப்பிலேபயின்றபாவைமருங்கிலேவளருகின்றாள்.

தமிழை தாயாகத்தான் எல்லோரும் சொல்லி வந்திருக்கிறார்கள்.

வில்லிபுத்துரார் தமிழை மகளாக, சின்ன பெண்ணாக பார்கிறார்.

தமிழ் தாய் என்கிறோம்.

கன்னித் தமிழ் என்கிறோம்.

வில்லியார் தமிழை மகளாகப் பார்க்கிறார்.

பொருப்பிலே பிறந்து = பொருப்பு என்றால் மலை. பொதிகை மலையில் அகத்தியனிடம் இருந்து பிறந்து

தென்னன் புகழிலே கிடந்து = பாண்டிய மன்னர்களின் புகழிலிலே தங்கி இருந்து

சங்கத்து இருப்பிலே இருந்து = மூன்று சங்கத்திலும் நிலையாக இருந்து 

வைகை யேட்டிலேதவழ்ந்த = புனல் வாதம் செய்த போது, தமிழ் பாடல்களை ஏட்டில் எழுதி வைகை வெள்ளத்தில் விட்டார்கள். அது கரையேறி வந்தது.

பேதை = சின்னப் பெண்

நெருப்பிலே நின்று = அனல் வாதம் செய்யும் போது, ஏட்டினை தீயில் இடுவார்கள். நல்ல தமிழ் பாடல்களை கொண்ட ஏடுகள் தீயில் கருகாமல் இருக்கும். அப்படி வளர்ந்த தமிழ். 

கற்றோர் நினைவிலே நடந்தோரேன = கற்றவர்கள் நல்ல தமிழ் பாடல்களை நினைவில் வைத்து இருப்பார்கள். அவர்கள் நினைவிலே நடந்து வருவாள்.


மருப்பிலேபயின்றபாவைமருங்கிலேவளருகின்றாள் = திருமால் பன்றியாக உருவம் எடுத்து உலகை தன் கொம்பில் தூக்கி காத்த போது (மருப்பு = கொம்பு ), அதனுடன் சேர்ந்து பிறந்து வளர்ந்த தமிழ். (மருங்கு = உடன் )





இராமாயணம் - நீ இரங்கல் வேண்டுமோ ?

இராமாயணம் - நீ இரங்கல் வேண்டுமோ ?


‘கண் முதல் காட்சிய, கரை இல் நீளத்த,
உள் முதல் பொருட்டு எலாம் ஊற்றம் ஆவன,
மண் முதல் பூதங்கள் மாயும் என்றபோது,
எண்முதல் உயிர்க்கு நீ இரங்கள் வேண்டுமோ?

கண் முதலிய புலன்கள் காணும் கண்டு உணரும் எண்ணற்ற பொருள்களுக்கு மூலமான பஞ்ச பூதங்களும் அழியும் என்ற போது, இந்த உயிர்கள் இறந்ததற்கு நீ வருத்தப் படலாமா?

என்று தசரதன் இறந்த செய்தி கேட்டு வருந்தும் இராமனுக்கு வசிட்டன் ஆறுதல் கூறுகிறான்.

கண் முதல் காட்சிய = கண்கள் முதலிய புலன்கள் கண்டு உணரும் 

கரை இல் நீளத்த = எல்லை அற்ற எண்ணிக்கை கொண்ட பொருள்களின்

உள் முதல் = மூலமான

பொருட்டு எலாம் ஊற்றம் ஆவன = அவைகள் எல்லாவற்றுக்கும் ஊற்று போல ஆதாரனமான

மண் முதல் பூதங்கள் = மண், தீ, நீர், வானம் போன்ற பூதங்கள்

மாயும் என்றபோது = அழியும் என்ற போது

எண் முதல் உயிர்க்கு = இவற்றை விட எளிய உயிர்களுக்கு

நீ இரங்கல்  வேண்டுமோ? = நீ வருத்தப் பட வேண்டுமா ? வேண்டாம்.


இந்த உலகில் தோன்றிய எல்லாம் அழியும். பொருள்கள் மட்டும் அல்ல, அந்த பொருகளின் மூலமான பஞ்ச பூதங்களும் அழியும் தன்மை கொண்டது. அப்படி இருக்கும் போது , இந்த உடல் அழிவதைப் பற்றி நீ வருத்தப் படலாமா


நாம் தங்கம் பார்த்து இருக்கிறோம். தங்கத்தில் இருந்து மோதிரம், வளையல் போன்ற ஆபரணங்கள் உருவாவதைப் பாத்து இருக்கிறோம்.  ஒரு வளையலை அழித்து  இன்னொரு வளையல் செய்கிறோம். அழிவது வளையல்தான். தங்கம் அல்ல. தங்கம் அப்படியே இருக்கிறது. 

கம்பர் சொல்கிறார் ...வளையல் மட்டும் அல்ல, தங்கமும் அழியும். 

மோதிரம் அழியும். 

அது உருவாக காரணமாக இருந்த தங்கமும் அழியும்.

அப்படி என்றால், அதை அணிந்தவன் அழியாமல் எப்போதும் இருப்பான் என்று நினைக்க முடியுமா  ?


Monday, November 11, 2013

இராமாயணம் - காலம் என்று ஒரு வலை

இராமாயணம் - காலம் என்று  ஒரு வலை 




“சீலமும் தருமமும் சிதைவு இல் செய்கையாய்!
சூலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய
மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும்
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ? “

நல்ல ஒழுக்கமும், தர்மமும் சிதைவு இல்லாமல் செயல்களை செய்பவனே (இராமனே) சிவனுக்கும், திருமாலுக்கும், பிரம தேவனுக்கும் உதவி செய்த மூலப் பொருளே ஆயினும் காலம் என்ற வலையை கடக்க முடியாது.

தசரதன் இறந்த செய்தி கேட்டு கலங்கிய இராமனுக்கு வசிட்டன் ஆறுதல் கூறுகிறான்.

காலம் என்ற ஒன்றை யாராலும் கடக்க முடியாது. இறக்கும் காலம் வந்தால் அது நிகழ்ந்தே  தீரும்.அதை அந்த கடவுளாலும்  முடியாது. அப்படியென்றால் சாதரண மனிதர்கள் எம்மாத்திரம்.

பொருள்


“சீலமும் = நல் ஒழுக்கமும்

 தருமமும் = அறமும்

 சிதைவு இல் செய்கையாய் = சிதைவு இல்லாத செய்கை கொண்டவனே

சூலமும் = சூலத்தை கொண்ட சிவனும்

திகிரியும் = சக்கரத்தை கொண்ட மாலும்

சொல்லும் = வேதத்தை கொண்ட பிரமனும்

தாங்கிய  = அப்படி அந்த மூவரையும் தாங்கிய

மூலம் = மூலப் பொருளான அந்த பரம் பொருள்

வந்து உதவிய = வந்து உதவிய  

மூவர்க்கு ஆயினும் = அந்த மூவர்கள் ஆயினும்

காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ? = காலம் என்ற வலையை கடக்க முடியுமா ? முடியாது.

மூவர்க்கும் மேலான ஒரு பரம் பொருள் பற்றி கம்பர் இங்கு கூறுகிறார்.

அது பற்றி பின்னொரு நாள் பார்ப்போம்.



Sunday, November 10, 2013

இராமாயணம் - யமனின் கருணை

இராமாயணம் - யமனின் கருணை 




‘ “உண்மை இல் பிறவிகள்,
     உலப்பு இல் கோடிகள்,
தண்மையில் வெம்மையில்
     தழுவின” எனும்
வண்மையை நோக்கிய,
     அரிய கூற்றின்பால்,
கண்மையும் உளது எனக் 
     கருதல் ஆகுமோ?

உண்மை இல்லாத பிறவிகள் கோடிக் கணக்கில் உண்டு. அவை ஒன்றை ஒன்று தழுவி நின்றன. இந்த கூற்றுவன் இருக்கிறானே அவனிடம் கருணையை எதிர்பார்க்கலாமா

என்று தசதரன் இறந்த துக்கத்தில் இருக்கும் இராமனுக்கு வசிட்டன் ஆறுதல்  கூறுகிறான்.

உண்மை இல் பிறவிகள் = உண்மை இல்லாத பிறவிகள். இந்த பிறவிகள் இன்று இருக்கும் நாளை  இருக்காது. மின்னேர் வாழ்க்கை என்று சொல்லும்  பிரபந்தம். நீர் கோல வாழ்வை என்பார் கம்பர் பிறிதோர் இடத்தில். இந்த பிறவிகளை உண்மையானவை என்று கொள்ள முடியாது. உண்மை  சாஸ்வதமானது.பொய் இன்றிருக்கும் நாளை இருக்காது.


உலப்பு இல் கோடிகள் = உலப்பு என்றால் முடிவு,  இறுதி.கணக்கில் அடங்கா கோடி கோடி இந்த உண்மை இல்லாத பிறவிகள்.

உலபில்லா ஆனந்த மாய தேனினை சொரிந்து 
புறம் புறம் எனத்  திரிந்த செல்வனே சிவனே 
யான் உனை தொடர்ந்து சிக்கென பிடித்தேன் 

என்பார் மணி  வாசகர்.



தண்மையில் வெம்மையில் தழுவின = தண்மை என்றால் குளிர்ச்சி. வெம்மை என்றால் சூடு. இந்த உயிரனங்கள் ஒன்றை ஒன்று அன்போடும் , போட்டி போட்டு ஒன்றை ஒன்று சண்டை இட்டும் சார்ந்து நிற்கின்றன


எனும் = என்னும்

வண்மையை நோக்கிய = வல்லமை கொண்ட

அரிய = சிறந்த

கூற்றின்பால் = யமனிடம். கூற்றுவன் என்பவன் உயிரையும் உடலையும் கூறு படுத்துபவன்


கண்மையும் = கண்மை என்றால் ஏதோ கண்ணுக்கு போடும் மை  அல்ல. கண்மை என்றால் கருணை.

உளது எனக் கருதல் ஆகுமோ? = யமனிடம் கருணை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா ? முடியாது

யமன் கருணை  இல்லாதவன்...நாள் கிழமை பார்க்க  மாட்டான், அன்பின் ஆழம் அறிய மாட்டான், பிரிவின் துயரம் அறியான், கண்ணீரின் சோகம் அறியாதவன் ....அவனிடம் கருணையை எதிர் பார்க்க முடியாது ....

பிரபந்தம் - பேசுவதால் ஆவதென்ன ?

பிரபந்தம் - பேசுவதால் ஆவதென்ன ?


புத்தர் வாழ்வில் நடந்ததாக சொல்லப் படும் ஒரு  சம்பவம்.

ஞானம் பெற்ற பின் புத்தர் மிக மிக அமைதியாக  இருந்தார். அவரை பார்த்தவர்கள் எல்லோருக்கும் தெரிகிறது - எவர் ஏதோ அறிந்திருக்கிறார் என்று. அவர் கண்ணில் தெரியும் ஒளி, அவரின் நிலை அவற்றை கண்ட மக்கள் அவரிடம் கேட்டார்கள் ...

"நீங்கள் ஏதோ ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது ...அதை என்ன என்று எங்களுக்குச் சொல்லக் கூடாதா "

புத்தர் சிரித்துக் கொண்டே சொன்னார் "முதலில் அதை சொல்வது  கடினம்.அப்படியே சொன்னாலும் நீங்கள் அதை  மாட்டீர்கள். நான் சொல்வதை அல்ல நீங்கள் கேட்பது. நீங்கள் உங்களுக்கு வேண்டியவற்றைதான் கேட்பீர்கள்...எனவே பேசாமல் இருபதே நலம் என்று நினைக்கிறேன் "

பின் மிகவும்  அவரை பேச வைத்தார்கள்.

ஞானிகள் எல்லோரும் அப்படித்தான் நினைக்கிறார்கள்.

"சும்மா இரு" என்று முருகன் உபதேசம் செய்ததாக அருணகிரி சொல்கிறார்.

"பேசுவதால் பயனிலை" என்கிறார் பாரதியார் .

Sitting silently
Doing nothing
Grass grows by itself

என்கிறது ஜென் பாடல்.

இங்கே தொண்டரடிப் பொடி ஆழ்வார் சொல்கிறார்


"பெரியவர்கள் சொன்னதை சொல்லிக் கொண்டிருப்பதை தவிர நாம் ஒன்றும் புதிதாக உணர இயலாது. ஆசை அற்றவர்கள் அன்றி மற்றவர்கள்  அவனை அறிய முடியாது. குற்றமற்றவர்கள் மனதில் இருப்பவனை வணங்கி இருப்பதை விட்டு விட்டு பேசிக் கொண்டிருப்பதால் என்ன பயன் "

பாடல்


பேசிற்றே பேச லல்லால் பெருமையொன் றுணர லாகாது
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானு மல்லன்
மாசற்றார் மனத்து ளானை வணங்கிநா மிருப்ப தல்லால்
பேசத்தா னாவ துண்டோ பேதைநெஞ் சேநீ சொல்லாய்

சீர் பிரித்த பின்

பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஒன்று உணரல் ஆகாது
ஆசு அற்றார் தங்களுக்கு அல்லால் அறியலாவானும் அல்லன்
மாசு அற்றார் மனத்து உள்ளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தால் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்


பொருள் 

பேசிற்றே பேசல் அல்லால் = பேசியதையே பேசுவதைத் தவிர

பெருமை ஒன்று உணரல் ஆகாது  = (அவன்) பெருமை ஒன்றையும் நம்மால் உணர முடியாது

ஆசு அற்றார் தங்களுக்கு அல்லால் = ஆசு என்பதற்கு விரைவு என்று ஒரு பொருள் உண்டு. ஆனால் ஆசை என்பது சரியாக இருக்கும். ஆசை அற்றவர்களுக்கு இல்லாமல்

அறியலாவானும் அல்லன் = அவன் அறிய முடியாதவன்

மாசு அற்றார் மனத்து உள்ளானை = குற்றம் அற்ற உள்ளத்தில் இருப்பவனை

வணங்கி நாம் இருப்பது அல்லால்  = வணங்கி நாம் இருப்பதைத் தவிர

பேசத்தால் ஆவது உண்டோ = பேசுவதால் ஆவது உண்டோ ?

 பேதை நெஞ்சே நீ சொல்லாய் = பேதை நெஞ்சே நீ சொல்




Saturday, November 9, 2013

தேவாரம் - கழுதை சுமந்த குங்குமம்

தேவாரம் - கழுதை சுமந்த குங்குமம் 


கழுதை அழுக்கு மூட்டையை சுமந்தாலும் குங்கும பூ மூட்டையை சுமந்தாலும் அதற்கு ஒரு வித்தியாசமும்  தெரியாது.

ஏதோ பொதி சுமந்து போகிறோம் என்று தான் அதற்குத்  தோன்றும்.

அல்லது குங்கும பொதியை சுமந்ததால் அந்த கழுதைக்கு பெரிய பேரும் புகழும் கிடைக்கவா  போகிறது.

அது போல காரண காரியம் தெரியாமல் மக்கள் பல பேர் பல இறை காரியங்களை செய்து  கொண்டிருகிறார்கள்.

கற்பூரம்  காட்டுவது,மணி அடிப்பது, மத சின்னங்களை அணிந்து கொள்வது, தூக்கம்  முழிப்பது, சாப்பிடாமல் இருப்பது என்று எண்ணற்ற காரியங்களை செய்து  கொண்டிருக்கிறார்கள். ஏன்  செய்கிறாய் என்று கேட்டால் தெரியாது....எல்லோரும் செய்கிறார்கள் நானும் செய்கிறேன் என்று  .பதில் வரும். அர்த்தம் தெரியாமல் பாடல்களையும் மந்திரங்களையும் சொல்லிக் கொண்டிருப்பவர்களை பார்க்கலாம்....

கழுதை சுமந்த குங்குமம்...

உள்ளன்போடு உருகி அவனை நினையாமல் இந்த சடங்குளினால் என்ன பயன் என்கிறார் சுந்தரர் ....

பாடல் 

கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்
கைப்பர் பாழ்புக மற்றது போலப்
பழுது நானுழன் றுள்தடு மாறிப்
படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்
அழுது நீயிருந் தென்செய்தி மனனே
அங்க ணாஅர னேயென மாட்டா
இழுதை யேனுக்கொர் உய்வகை யருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே


பொருள் 

கழுதை = கழுதை 

குங்குமம் = குங்குமம் 

தான் சுமந்து எய்தால் = அது சுமந்து சென்றால் 

நகைப்பர் = நகைப்பார்கள் 

பாழ் புக மற்றது போலப் = ஒரு பலனும்  அதற்கு இல்லாதது போல 

பழுது = தவறி 

 நான் = நான் 

உழன்று = தவித்து  

உள் தடுமாறிப் = உள்ளம் தடுமாறி 

படு = பெரிய 

சுழித் தலைப் பட்டனன் = சுழலில் அகப்பட்டுக் கொண்டேன் 

எந்தாய் = என் தந்தையே 

அழுது = அழுது 

நீ = நீ 

இருந்து என் செய்தி மன்னனே = இருந்து என்ன செய்யப் போகிறாய் மனமே
 
அங்கணா அரனே என  மாட்டாய் = அங்கணா அரனே என்று  மாட்டாய் 

இழுதை = இழுக்கு 

எனக்கு = எனக்கு 

ஓர் = ஒரு 

உய்வகை = உய்யும் , வாழும் வகை 

அருளாய் = அருள் செய்வாய் 

இடை மருதுறை = இடை மருது என்ற ஊரில் உறையும் 

எந்தை பிரானே = என்னை என்றும் பிரியாதவனே 


பூஜை புனஸ்காரங்களில் புண்ணியம்  இல்லை.

அழுதால் உன்னைப் பெறலாமே என்பார் மாணிக்க வாசகர். அது போல உள்ளன்போடு  உருகினால் வாழும் வழி கிடைக்கும் என்கிறார் சுந்தரர் 



திருக்குறள் - வையத்தின் வானம்

திருக்குறள் - வையத்தின் வானம் 



ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

ஐயத்தை நீங்கி தெளிந்தவர்களுக்கு இந்த வையமும் வானமும் அருகில் இருக்கும்.


ஐயத்தின் = ஐயத்தில் இருந்து

நீங்கித் = நீங்கி

தெளிந்தார்க்கு = தெளிவு பெற்றவர்களுக்கு

வையத்தின் = உலகின்

வானம் = வானமும்

நணிய = அருகில்

உடைத்து = இருக்கும், கிடைக்கும்


இது திருக்குறள். 

நாம் எதையும் அறிந்து கொள்ள முயலும் போது மூன்று நிலைகள் நிகழும். 

ஐயம், திரிபு, தெளிவு. 

ஐயம் திரிபற கற்றல்   என்று சொல்லுவார்கள்.

ஐயம் என்றால் இதுவோ அதுவோ என்ற சந்தேகம் 

திரிபு என்றால் ஒன்றை மற்றொன்றாக நினைப்பது. சந்தேகம் இல்லை, மாற்றி , தவறாக கொள்வது. 

இரவில் வழியில் நெளிவாக ஒன்று கிடக்கிறது 

பாம்பா , கயிறா என்று சந்தேகம் கொள்வது ஐயம். 

பாம்பை கயிறு என்றோ, கயிறை பாம்பு என்றோ மாற்றி உறுதியாக எண்ணுவது திரிபு. தவறுதான் இருந்தாலும்  அறிவு  அப்படி ஒரு முடிவை எடுக்கிறது. 


ஐயம் நீங்கி தெளிவு பெற்றவர்கள் அதாவது ஐயமும், திரிபும் நீங்கியவர்கள் இந்த உலகத்தில் இருக்கும்போதே வீடு பேறு என்று சொல்லும் அந்த மறு உலகத்தையும் அருகில் காண்பார்கள். 

பரிமேல் அழகர் உரை 

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு - ஐயத்தினின்று நீங்கி உணர்ந்தார்க்கு; வையத்தின் வானம் நணிய துடைத்து - எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து. 

(ஐயமாவது, பலதலையாய உணர்வு. அஃதாவது மறுபிறப்பும் இருவினைப் பயனும், கடவுளும் உளவோ இலவோ என ஒன்றின் துணிவு பிறவாது நிற்றல், பேய்த்தேரோ புனலோ? கயிறோ அரவோ? எனத்துணியாது நிற்பதும் அது. ஒருவாற்றான் பிறர் மதம்களைந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பு ஆகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோகமுதிர்ச்சி உடையார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வார் ஆகலின், அவரை ஐயத்தின் நீங்கித் தெளிந்தார் என்றும் அவர்க்குஅவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியல்உணர்வு தூர்ந்துவரும் ஆகலின், அதனைப் பயன் மேலிட்டு 'வையத்தன்வானம் நணியதுடைத்து' என்றும் கூறினார். கூறவே ஐயஉணர்வும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.)








இராமாயணம் - இறத்தலும் பிறத்தலும்

இராமாயணம் - இறத்தலும் பிறத்தலும் 


நாம் அன்பு கொண்டவர்களின் மரணம் மிகப் பெரிய துக்கம். நம் மரணம் துக்கம் அல்ல பயம்.

நிலையாமை பற்றி எவ்வளவுதான் தெரிந்து இருந்தாலும் நம் நெருங்கியவர்களின் மரணம் உலுக்கித்தான் போடுகிறது.

தசரதன் இறந்து போனான் என்ற செய்தியை கேட்டவுடன் இராமன் மயங்கி விழுந்தான். அரசு போனதற்கு கலங்கவில்லை. காடு போ என்று சொன்னபோதும் கலக்கம் இல்லை. ஆனால் , தந்தை இறந்தான் என்ற செய்தி கேட்ட போது இராமனுக்கு துக்கம் தாளவில்லை.

பாசம் அந்த பரமனையும் விடவில்லை.

கலங்கிய இராமனுக்கு வசிட்டன் வாழ்வின் நிலையாமை பற்றி கூறுகிறான்.

நம் வாழ்விலும் பிரிவுகள் நிகழலாம். அந்த துக்கத்தை தாங்கிக் கொள்ள நம்மை தயார் படுத்திக் கொள்ள இந்த மாதிரி ஞானிகளின் வாசகங்கள் உதவலாம்.

மிக மிக ஆழமான, சிந்திக்க வேண்டிய பாடல்கள்...அதில் ஒன்று


பாடல்

துறத்தலும் நல் அறத்
     துறையும் அல்லது
புறத்து ஒரு துணை இலை,
     பொருந்தும் மன்னுயிர்க்கு;
“இறத்தலும் பிறத்தலும்
     இயற்கை” என்பதை
மறத்தியோ, மறைகளின்

     வரம்பு கண்ட நீ?

பொருள்

"துறவறமும் இல்லறமும் அல்லது உயிர்களுக்கு வேறு வழி இல்லை. இறப்பும் பிறப்பும்  இயற்கை என்பதை எல்லாம் அறிந்த நீ எப்படி மறந்தாய் "

மேலோட்டமாய் பார்த்தால் இவ்வளவுதான்  அர்த்தம்.

கொஞ்சம் ஆழமாக சிந்திப்போம்.

நாம் வாழ்கையை ஒரே கோணத்தில் சிந்திக்கிறோம்.

பிறப்பு , வளர்தல், மூப்பு, பின் இறப்பு....இந்த கோணத்தில் நாம்  பார்க்கிறோம். இறப்போடு  எல்லாம் முடிந்து விடுகிறது.

வசிட்டர் கொஞ்சம் வேறு விதமாக சொல்கிறார்.

"இறத்தலும் பிறத்தலும் இயற்கை " முதலில் இறப்பு, பின் பிறப்பு இதுதான் இயற்கை  என்கிறார்.

தசரதன் இறந்து போனான். "இதை முடிவு என்று நினைக்காதே , இறந்தது பிறக்கும் " என்று இராமனுக்கு அறிவுறுத்துகிறான்.

பிறந்தது இறக்கும் என்பது கண்  கூடு.

இறந்தது பிறக்குமா  என்பது தெரியாது. சந்தேகம்  இருக்கிறது அதில்.

பிறத்தலும் இறத்தலும் இயற்கை என்று சொல்லி இருக்கலாம். சொல்லவில்லை.

வாழ்கை ஒரு முடிவற்ற நதிபோல் ஓடிக் கொண்டிருக்கிறது.

அதே போல் , இல்லறம் , அது முடிந்து துறவறம். அது தான் நாம் அறிந்த முறை.

வசிட்டன் அதையும் மாற்றிப் போடுகிறான்.

"துறத்தலும் நல் அறத் துறையும் அல்லது" முதலில் துறவறம் சொல்லி அப்புறம் நல்  அறம் அதாவது இல் அறம் (இல்லறம்) பற்றி கூறுகிறான்.

இது வசிட்டன் சொன்னான் என்றால் ஏதோ தனக்கு ஆறுதல் சொல்வதற்காக அப்படி சொல்கிறான் என்று   இராமன் நினைக்கலாம். நாமும் அப்படித்தான் நினைப்போம்.

எனவே வசிட்டன் சொல்கிறான் "மறத்தியோ, மறைகளின் வரம்பு கண்ட நீ"


மறைகள் (வேதம் முதலியவை ) அப்படித்தான் சொல்கின்றன. நீ அதைப் படித்து இருகிறாய். மறந்து விட்டாயா என்று அவனுக்கு ஞாபகப் படுத்துகிறான்.

இராமன் ஏதோ மறைகளை கடமைக்கு படித்தவன் அல்லன். அவற்றின் எல்லைகளை   கண்டவன்.அவற்றின் முடிவை  அறிந்தவன். அவை சொல்வதின்  அர்த்தம் முழுதும் அறிந்தவன்.

தசரதன் இறந்தான் என்று வருந்தாதே, தசரதன் மீண்டும் பிறந்தான் என்று எண்ணிக் கொள். துக்கம் எங்கே வரும் ?

இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே    
யொழுக்க முடையார்வாய்ச் சொல்


வாழ்வில் இழுக்கம் வரும்போது உயர்ந்தவர்களின் சொற்கள் வழுக்கும் நிலத்தில் ஊன்று கோல் போல உதவும் என்பது வள்ளுவம்.

வசிட்டனின் வார்த்தைகளை இன்னும் எடுத்துச் சொல்வேன்