Wednesday, June 22, 2022

கம்ப இராமாயணம் - இராம அவதாரம் - 4 - கொடுமை தீர்ப்பேன்

  

கம்ப  இராமாயணம் - இராம அவதாரம்  - 4 - கொடுமை தீர்ப்பேன் 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_25.html

)

 இனித் தொடர்வோம். 


தன் குல குருவான வசிட்டரிடம் சென்று தயரதன் "எனக்கு பின் இந்த மக்களைக் காக்க ஒரு வாரிசு இல்லையே" என்று கூறியவுடன் வசிட்டன் தன் ஞானக் கண்ணால் நோக்குகிறான். 


அவருடைய கண்ணுக்கு பாற்கடல் தெரிகிறது. என்றோ நடந்த ஒரு நிகழ்ச்சி இப்போது தெரிகிறது. 


"பாற்கடல் மேல் திருமால் ஆதி சேஷன் என்ற பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கிறார். அப்போது தேவர்கள் எல்லோரும் வந்து அரக்கர்கள் பற்றி முறையிடுகிறார்கள். அரக்கர்களின் கொடுமையை நான் தீர்ப்பேன் என்று திருமால் அவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறார்"


அந்தக் காட்சி அவர் கண் முன் தோன்றுகிறது. 


பாடல்  


அலைகடல் நடுவண் ஓர்     அனந்தன் மீமிசை

மலை என விழி துயில்   வளரும் மா முகில்,

‘கொலை தொழில் அரக்கர் தம்  கொடுமை தீர்ப்பென்‘ என்று,

உலைவு உறும் அமரருக்கு   உரைத்த வாய்மையை.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4_22.html


(pl click the above link to continue reading)


அலைகடல் = அலை வீசும் கடல் (இங்கே பாற்கடல்) 


நடுவண்  = நடுவில் 


ஓர் = ஒரு 


அனந்தன் = அனந்தாழ்வான் என்று சொல்லப்படும் ஆதிசேடன் என்ற பாம்பின் 


 மீமிசை = மேலே 


மலை என = கரிய மலை போல 


விழி துயில்  வளரும் = கண்கள் தூங்கும் 


 மா முகில், = பெரிய மழை மேகத்தைப் போல 


‘கொலை தொழில் = கொலையை தங்கள் தொழிலாகக் கொண்ட 


அரக்கர் தம் = அரக்கர்களின் 


கொடுமை தீர்ப்பென்‘ என்று, = கொடுமைகளை தீர்ப்பேன் என்று 


உலைவு உறும் அமரருக்கு = அமைதி இன்றி அலையும் தேவர்களுக்கு 


உரைத்த வாய்மையை. = கொடுத்த வாக்கை 


தயரதன் கேட்டது ஒரு வாரிசை. வசிட்டர் கண்டதோ பாற்கடலில் நடந்த ஒரு நிகழ்வை. 


இரண்டுக்கும் என்ன சம்பந்தம்? 


அங்குதான் கதை ஆரம்பமாகிறது. 


இராமாயணத்தின் முதல் முடிச்சு அங்கே இருந்து தொடங்குகிறது. 





Tuesday, June 21, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 6 - பகை, அச்சம், பழி, பாவம்

 

  

திருக்குறள் - பிறனில் விழையாமை - 6 - பகை, அச்சம், பழி, பாவம் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html


குறள் 144 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html


குறள் 145 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_19.html


)


போக்குவரத்து விதியை மீறி விடுகிறோம். காவல்காரர் பிடித்துக் கொள்கிறார். உடனடியாக ஒரு தண்டத் தொகை (spot fine) கட்டச் சொல்கிறார். கட்டுகிறோம். அது அதோடு முடிந்து விடும். 


சட்டத்தை மீறினால், ஏதோ ஒரு தண்டனை, தண்டனை முடிந்தால், அந்தக் குற்றம் பற்றி மீண்டும் பேசக் கூடாது. குற்றத்துக்கும், தண்டனைக்கும் சரியாப் போச்சு.


ஆனால், அறம் மீறினால் அப்படி அல்ல. 


என்ன செய்தாலும் அது போகாது. வாழ்நாள் பூராவும் தண்டனை அனுபவிக்க வேண்டும். அது மட்டும் அல்ல, அடுத்த பிறவிக்கும் அது தொடரும். அது மட்டும் அல்ல, ஒருவன் செய்த அறம் மீறிய செயலுக்கு அவன் சந்ததி முழுவதும் தண்டனை அனுபவிக்க வேண்டும். 


எந்த அறம் மீறிய செயலுக்கும் அதுதான் நியதி. 


அதிலும் பிறன் மனை நோக்கிய தவறுக்கு கேட்கவே வேண்டாம். 


பாடல் 


பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்இறப்பான் கண்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6_21.html


(pl click the above link to continue reading)



பகை = பகை 


பாவம் = பாவம் 


அச்சம் = அச்சம், பயம் 


பழி = பழி 


யென நான்கும் = என்ற நான்கும் 


இகவாவாம் = நீங்காதாம் 


இல்இறப்பான் கண் = மற்றவன் மனைவியை விரும்பியவன் இடம் 



ஒரு தவறு செய்தால், நான்கு தண்டனை என்கிறார் வள்ளுவர். 


பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கு தண்டனை. 


நாம் பொதுவாக "பழி பாவம்" என்பதை ஒரு சொல் போல பயன் படுத்துகிறோம். 


பழி என்பது இந்தப் பிறவியில் வருவது. 


பாவம் என்பது அடுத்து அடுத்து வரும் பிறவிகளிலும் தொடர்வது. 


பகை - யார் வீட்டு பெண்ணையாவது முறை தவறி ஒருவன் அடைய நினைத்தால், அந்த வீடு மட்டும் அல்ல, அவன் வாழும் சமுதாயமும் அவனுக்கு பகையாகப் போகும். அவனை நம்பி யார் வீட்டுக்குள் அனுமதிப்பார்கள்? ஒரு பகைவனை பார்ப்பது போலத் தான் பார்ப்பார்கள். எங்கே சிரித்தால், அதையே சாக்காக வைத்துக் கொண்டு நம் வீட்டுக்கு வந்து விடுவானோ என்று எண்ணி, முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விடுவார்கள். ஒரு பகைவனை பார்ப்பது போல. 


பாவம் - இனி வரும் பிறவிகளிலும் அந்த குற்றத்தின் தண்டனை தொடரும் என்கிறார். 


அச்சம் - எப்படியோ, ஏதோ ஒரு சந்தர்பத்தில் மாற்றான் மனைவியை ஒருவன் தவறாக அடைந்து விடுகிறான் என்றே வைத்துக் கொள்வோம். அவன் ஆயுள் முழுவதும் பயந்து கொண்டே இருக்க வேண்டும். எப்போது, அது வெளிப்படுமோ, யார் வெளிப்படுத்துவார்களோ, அது தெரியவந்தால் மனைவி, பிள்ளைகள் , பேரப் பிள்ளைகள், மருமகன், மருமகள், எல்லாம் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று எண்ணி எண்ணியே சாக வேண்டும். அவன் இறுதிக் காலம் வரை அந்த அச்சம் போகாது. 


பழி - வாழும் காலத்திலும், பழி சுமந்துதான் திரிய வேண்டும். ஒரு காலத்திலும் அந்த பழியை துடைக்க முடியாது. எவ்வளவு நல்ல காரியம் செய்தாலும், ,புண்ணியம் செய்தாலும், அந்தப் பழி போகவே போகாது. 


இந்தப் பிறவியில் பழி, அச்சம், பகை வந்து சேரும். 


அடுத்த பிறவிக்கு பாவம் வந்து சேரும். 


எனவே, இம்மைக்கும், மறுமைக்கும் இது கேடு விளைவிக்கும் என்கிறார் வள்ளுவர். 


சந்தர்பம் அமைந்தால், ஒரு நொடியில் தவறு நிகழ வாய்ப்பு இருப்பதால், வள்ளுவர் இதை மிகக் கடுமையாக கண்டிக்கிறார். 


குடும்பங்களுக்குள் குழப்பம் வரக் கூடாது, தனி மனித ஒழுக்கம் கெடக் கூடாது, சமுதாயம் சீரழிந்து விடக் கூடாது என்ற அக்கறையோடு வள்ளுவர் அருளிச் செய்து இருக்கிறார். 






Monday, June 20, 2022

வில்லி பாரதம் - இராஜ சூய யாகம் - பாகம் 1 - முதற் பூசை

 வில்லி பாரதம் - இராஜ சூய யாகம் - பாகம் 1 - முதற் பூசை


கம்ப இராமாயணம் அளவுக்கு வில்லி பாரதம் நம் மக்களிடை பெரிதாகப் போய்ச் சேரவில்லை. 


இராமயணத்தை விட கதை அமைப்பில், திருப்பங்களில், மனித மனச் சிக்கல்களில் பாரதம் சுவாரசியமானது என்றாலும், அது இராமாயணம் அளவுக்கு பிரபலமாகவில்லை என்பதும் உண்மைதான். 


அதற்கு பெரியவர்கள் ஒரு காரணம் சொல்லுவார்கள். 


அறம் என்றால் வேதம் முதலான உயர் நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலும் என்பார்கள். 


இராமாயணம் அறத்தை நேர் முறையில் சொல்லத் தலைப்பட்டது. 


பாரதம் எதைச் செய்யக் கூடாது என்று சொல்லத் தலைப்பட்டது. 


இருந்தும், நேர்மறையான காப்பியத்துக்கு கிடைத்த பிரபலம் மறைமுகமாக கூறிய பாரதத்துக்கு கிடைக்கவில்லை என்பது யதார்த்தம். 


இருந்தும், வில்லி பாரதத்தில் பல சுவையான இடங்கள், அழகான கவிதைகள் இருக்கின்றன. 


அதில் சிலவற்றைப் பார்ப்போம். 


தர்மன் அசுவமேத யாகம் செய்து முடித்துவிட்டான். யாகம் முடித்த பின், யாருக்கு முதல் மரியாதை தருவது என்று தர்மன், பீஷமரை கேட்கிறான். 


யாரை எங்கே வைப்பது என்பதில் நம்மவர்கள் மிகுந்த முக்கியத்துவம் தந்து இருக்கிறார்கள். 


எதையும் ஒரு வரிசைப்படி செய்வது என்பது நம்மவர்கள் கலாசாரம். 


வீட்டில் ஒரு விழா, நிகழ்ச்சி என்றால் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு முதலில் மரியாதை செய்ய வேண்டும். மரியாதை என்பதெல்லாம் குறைந்து கொண்டே வரும் இந்தக் காலத்தில் அதைப் பற்றி பேசுவது கூட சரி இல்லையோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. 


பொய் சொல்லி, ஊரை ஏமாற்றி, களவு எடுத்து, பணம் சேர்பவனுக்கு மாலை, மரியாதை என்று ஆகிவிட்ட காலத்தில் மரியாதை பற்றி என்ன சொல்லுவது?


இருந்தும், எப்படி இருந்த கலாசாரம் என்றாவது தெரிந்து கொள்ளலாமே?


பீஷ்மரையும், அங்கு இருந்த முனிவர்களையும், பெரியவர்களையும் நோக்கிக் கேட்கிறான் "யாருக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும், கூறுங்கள்" என்று. 


பாடல் 



'பரிதியும் மதியும் வன்னியும் முதலாம் பல் வகைக்

                                குலத்தும் உற்பவித்த

சுரபதி குழாத்தில் யாவரே பெறுவார், நவிலும் முற்பூசை,

                                மற்று'' என்ன,

கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன், கங்கையின்

                                திருமகன், தெய்வச்

சுருதி மா மகம் செய் புனிதனை நோக்கி, தொல்

                                முனிவரையும் நோக்கி,


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_20.html



(pl click the above link to continue reading)


பரிதியும் = சூரியனும் 

மதியும் = சந்திரனும் 

வன்னியும் = அக்கினியும் 


முதலாம் = முதலிய 


பல் வகைக் = பல வகை 


குலத்தும் = குலத்தில் (பலவிதமான அரச குலத்தில்) 


உற்பவித்த = தோன்றிய 


சுரபதி குழாத்தில் =  அரசர் குலத்தில் 


 யாவரே பெறுவார் = யார் பெறத் தகுதியானவர் 


நவிலும் = சொல்லுங்கள் 


முற்பூசை = முதல் மரியாதை 


மற்று'' என்ன, = என்று 


கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன் = அட்ட வசுக்களில் ஒருவரும் 


கங்கையின்  திருமகன் = கங்கையின் மைந்தனுமான 


தெய்வச் = தெய்வத் தன்மை பொருந்திய 


சுருதி  = வேதம், வேதங்களில் கூறிய மாதிரி 


மா மகம் = பெரிய யாகத்தை 


செய் புனிதனை நோக்கி = செய்து தந்த புனிதனை நோக்கி  (வியாசர்) 


தொல் முனிவரையும் நோக்கி, = வயதில் மூத்த முனிவர்களையும் பார்த்து 


பீஷ்மன், வியாசர், மற்றும் உள்ள முனிவர்களை நோக்கி தர்மன் கேட்கிறான் "யாருக்கு நான் முதல் மரியாதை செய்ய வேண்டும் "  என்று 


இங்கே ஒரு கணம் நிறுத்துவோம். 


இராஜசூய யாகம் நடந்து முடிந்துவிட்டது. 


அத்தனை அரசர்களும் இருக்கிறார்கள். துரியோதனனும் இருக்கிறான். யாருக்கு முதல் மரியாதை செய்தாலும், மற்றவர்களுக்கு கோபம் வரும். 


யாகம் முடிந்தவுடன் சண்டை ஆரம்பித்து விடும். 


ஒரு சிக்கலான இடம். செய்தாலும் தப்பு, செய்யாவிட்டாலும் தப்பு என்ற ஒரு இடம். 


ஒரு படபடப்பு,  பதைபதைப்பு நம்மை பற்றிக் கொள்கிறது அல்லவா?  


ஒரு எதிர்பார்ப்பு, என்ன நடக்கப் போகிறதோ என்று ஒரு திகில், ஒரு சுவாரசியம் வருகிறதா இல்லையா?


அடுத்து என்ன ஆயிற்று என்று பார்ப்போம். 





Sunday, June 19, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 5 - விளியாது நிற்கும் பழி

  

திருக்குறள் - பிறனில் விழையாமை - 5 - விளியாது நிற்கும் பழி


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html


குறள் 144 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html


)

எவனோருவனும் ஏன் தவறு செய்கிறான்? 


தவறு செய்வது தவறு என்று தெரியும். இருந்தும் ஏன் செய்கிறான்?


காரணம், அது எளிது என்று நினைக்கிறான். தவறு செய்வது எளிது, சுலபம் என்று நினைப்பதால் தவறுகளைச் செய்கிறான். ஒழுக்கமாக, நேர்மையாக் நடப்பது கடினம் என்று நினைக்கிறான். குறுக்கு வழியில் செல்வது எளிது என்று நினைக்கிறான். 


அது தவறு என்கிறார் வள்ளுவர். 


"நீ எளிது என்று நினைத்து இப்போது தவறு செய்து விடலாம். ஆனால், அது எந்தக் காலத்திலும் அழியாத இழிவைத் தரும்"


என்கிறார். 


அதாவது, தவறான வழியில் இன்பம் வரலாம். இல்லை என்று சொல்லுவதற்கு இல்லை. ஆனால், அந்த இன்பம் மறைந்து விடும். ஆனால், அதன் மூலம் வரும் பழி இருக்கிறதே, அது ஒரு காலத்திலும் அழியாது. 


சிறிது கால இன்பத்துக்காக நிரந்தர பழியை யாராவது சுமப்பார்களா? என்று கேட்கிறார். 



பாடல் 


எளிதென இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்

விளியாது நிற்கும் பழி


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_19.html


(pl click the above link to continue reading)


எளிதென = எளிமையானது, சுலபமானது என்று எண்ணி 


இல்இறப்பான் = மற்றவன் இல்லம் சென்று அவன் மனைவியிடம் தவறான வழியில் நடந்து கொள்பவன் 


எய்தும் = அடைவான் 


எஞ் ஞான்றும் = எல்லாக் காலத்திலும் 


விளியாது = முடிவு இல்லாத 


நிற்கும் பழி = நிலைத்து நிற்கும் பழி 


நன்கு படித்தவன் தவறு செய்ய மாட்டான்.  அதிகம் படிக்காதவனும், பழி பாவத்துக்கு அஞ்சி தவறு செய்ய மாட்டான். இந்த அரைகுறையாக படித்தவன் இருக்கிறானே, அவன் தவறு செய்வதற்கு வாய்ப்பு அதிகம். 


"எனக்குப் பிடித்து இருக்கிறது. அவளுக்கும் பிடித்து இருக்கிறது. இரண்டு பேர் மனம் ஒத்து போய்விட்டால், இடையில் கணவன் என்ன, கத்திரிக்காய் என்ன..." என்று வாதம் செய்வான். 


அவனைப் போன்றவர்களுக்கு அவன் வழியிலேயே போய் புத்தி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார் வள்ளுவர். 


"நீ சொல்வதும் சரிதான். தவறான வழி என்றால் இன்பம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், நினைத்துப் பார்...இந்த சிறிய இன்பத்தால் உனக்கும், அவளின் குடும்பத்துக்கும் எப்படி ஒரு தீராத பழியை நீ கொண்டு வரப் போகிறாய் என்று" என்று எச்சரிக்கிறார். 


இப்படி ஒரு பாட்டன் கிடைக்க நாம் எல்லாம் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். 


பூஜை அறையில், வள்ளுவர் படத்தையும் வைக்க வேண்டும். 









Saturday, June 18, 2022

தேவாரம் - பிறவா நாளே

தேவாரம் - பிறவா நாளே  


காலையில் எழுந்தவுடன் "இன்னிக்கு அந்த வேலையை செய்து முடிக்கணும்" அப்படின்னு நினைகிறீங்க. அதுக்கு முன்னாடி வேற என்னென்னவோ வேலைகள் வந்து சேர்கிறது. அதையெல்லாம் செஞ்சு முடிச்சிட்டு நீங்க நினைச்ச வேலையை எடுக்கலாம்னு நினைக்கும் போது, ரொம்பவும் சோர்வாக உணர்கிறீர்கள். சரி கொஞ்ச நேரம் ஓய்வு எடுப்போம் என்று நினைகிறீர்கள்.


அப்படியே youtube, whatsapp என்று பார்கிறீர்கள். நேரம் போய் விடுகிறது. கடைசியில் "சே, நாள் பூராவும் வீணா பொழுது போயிருச்சு...ஒண்ணும் உருப்படியா செய்யல" என்று அலுத்துக் கொள்வீர்கள் அல்லவா?


அதே போல், முழு வாழ்நாளையும் நினைத்துப் பாருங்கள். எதுக்காக வந்தோம், என்ன செய்து கொண்டு இருக்கிறோம், முடியும் போது நம் மன நிலை எப்படி இருக்கும்? உருப்படியா ஏதாவது செய்தோம் என்று மன நிறைவு இருக்குமா, அல்லது வெட்டி வேலை நிறைய செய்து பொழுதை எல்லாம் வீணடித்து விட்டோம் என்று நினைப்போமா?


திருநாவுக்கரசர் சொல்கிறார்,


"இறைவனை நினையாத நாள் எல்லாம் பிறவா நாளே" 

என்று.


பிறந்தும் ஒரு பலனும் இல்லை என்றால், பிறந்து என்ன பிறக்காமல் இருந்து என்ன ? எல்லாம் ஒன்று தானே? 


காலையில் எழுந்து காப்பி குடித்து, செய்தி வாசித்து, வேலைக்குப் போய், சமைத்து, சாப்பிட்டு, தூங்கி, தொலைக் காட்சி பார்த்து ....இப்படி ஒவ்வொரு நாளும் போய்க் கொண்டிருந்தால் அந்த நாட்களால் என்ன பலன்?


பாடல் 


அரியானை அந்தணர்தம் சிந்தை யானை

        அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்

தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்

        திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்

கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்

        கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற

பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

        பேசாத நாளெல்லாம் பிறவா நாளே


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_18.html


(pl click the above link to continue reading)


அரியானை = அறிவாலும், பொருளாலும் அடைய அரிதானவனை 


அந்தணர்தம் சிந்தை யானை = அந்தணர்களின் சிந்தனயில் என்றும் இருப்பவனை 


அருமறையின் = உயர்ந்த மறைகளின் 


அகத்தானை = உட்பொருளாக அமைந்தவனை 


அணுவை  = அணுவை 


யார்க்கும் = ஒருவருக்கும் 


தெரியாத தத்துவனைத் = தெரியாமல் வைத்த உண்மை வடிவானனவை 


தேனைப் = தேன் போன்றவனை 


பாலைத் = பால் போன்றவனை 


திகழொளியைத் = ஒளி போருந்தியவனை 


தேவர்கள்தங் கோனை  = தேவர்களின் தலைவனை 


மற்றைக் கரியானை  = கரிய நிறம் கொண்ட திருமால் 


நான்முகனைக் = நான்கு முகம் கொண்ட பிரமன் 


கனலைக் = தீயை 


காற்றைக் = காற்றை 


கனைகடலைக் = ஒலி உடைய கடலை 


குலவரையைக் = பெரிய மலையை 


கலந்து நின்ற =இவை எல்லாவற்றிலும் கலந்து நின்ற 


பெரியானைப்  = பெரியவனை 


பெரும்பற்றப் புலியூ ரானைப் = புலியூர் என்ற ஊரில் இருப்பவனை 


பேசாத நாளெல்லாம் பிறவா நாளே = பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே 


அப்படி எல்லாம் கணக்கு போட்டால் நம் வயது எவ்வளவு இருக்கும் ? ஐந்து அல்லது பத்து நாள் தான் இருக்கும். 


எவ்வளவோ நாட்கள் வீணாகப் போகின்றன. 


அந்தக் கவலை எப்போதும் இருக்க வேண்டும். 


ஒவ்வொரு நாளும் சிறப்பாக கழிய வேண்டும். 




Friday, June 17, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 4 - எனைத்துணையர் ஆயினும் என்னாம்

 

திருக்குறள் - பிறனில் விழையாமை - 4 - எனைத்துணையர் ஆயினும் என்னாம் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html



)


சமுதாயத்தில் ஒரு நல்ல பெயர் எடுப்பது மிகக் கடினம். பல ஆண்டுகள் உழைக்க வேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும். கல்வி, அறிவு, வேலை, பதவி, மற்றவர்களுக்கு உதவுவது என்று பல செய்து ஒரு நற்பெயரை சம்பாதிக்க வேண்டும். 


ஆனால், அத்தனை உழைப்பு ஒரு நொடியில் வீணாகிவிடும். 


எப்போது என்றால், தன் நிலை மறந்து மற்றவன் வீட்டில் அவன் மனைவியை அடையும் நோக்கத்தில் சென்றால். 


அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அதனால் ஒரு  பயனும் இல்லை ,  எல்லாம் வீணாகிப் போய்விடும் என்கிறார் வள்ளுவர்.


பாடல் 


எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்

தேரான் பிறனில் புகல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html


(pl click the above link to continue reading)



எனைத்துணையர் = எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் 


 ஆயினும் = ஆனாலும் 


என்னாம்  = என்ன பலன் 


தினைத்துணையும் = ஒரு நொடியளவும் 


தேரான் = சிந்திக்காமல் 


பிறனில் புகல் = மற்றவன் வீட்டில் புகுந்தவன் 


வள்ளுவர் ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்ந்து, தெரிந்து எடுத்துப் கையாள்கிறார். 


"எனைத்துணையர் ஆயினும் என்னாம்". ஒருவன் எவ்வளவு உயர்ந்தவனாக இருந்தாலும் என்ன என்று கேட்கிறார். அவன் பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம், செல்வம், படிப்பு எது ஒன்றாலும் பயன் இல்லை. எல்லாம் செல்லாக் காசாகிவிடும் என்கிறார். 


எல்லோருக்கும் தெரியும் இது. இருந்தும் காமம் கண்ணை மறைக்கும். 


இராவணன் தவறினான். 


இந்திரன் தவறினான். தேவர்களுக்கு எல்லாம் அதிபதி, கௌதமர் வந்துவிட்டார் என்று அறிந்து பூனை வடிவம் கொண்டு தப்பி ஓடினான். தேவ இராசா ஒரு சிறு விலங்காகிப் போனான். அவன் செய்த தவம், புகழ், சக்தி, ஒன்றும் அவனுக்கு கை கொடுக்கவில்லை. 


விஸ்வாமித்திரன் செய்த அத்தனை தவத்தையும் ஒரு நொடியில் இழந்தான். 


எவ்வளவு பெரிய ஆளையும் ஒரு நொடியில் புரட்டிப் போட்டு விடும் காமம். 


பெரிய ஆட்கள் கதியே இது என்றால், சிறியவர்கள் கதி என்ன ஆகும். பெரிய பெரிய கப்பலே மூழ்கும் என்றால், சிறு படகு எம்மாத்திரம். 


அடுத்தது, பிறனில் விழைந்தான் என்று கூட வள்ளுவர் சொல்லாவில்லை. 


"தேரான் பிறனில் புகல்" : எது சரி, எது தவறு என்று தெரியாமல் ஒருவன் வீட்டுக்குள் செல்பவன் என்கிறான். அப்படி ஒரு அறிவு இல்லாதவன் மற்றவன் இல்லத்துக்கு செல்வதே குற்றம் என்கிறார்.   


மற்றவன் இருப்பான். அவன் மனைவி இருப்பாள். நான் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். தவறு எதுவும் செய்து விடக் கூடாது. என் பார்வையோ, சொல்லோ, செயலோ தவறு இழைத்து விடக் கூடாது என்று அறிந்து, தெளிந்து செல்ல வேண்டும் என்கிறார். அந்த தெளிவு இல்லாவிட்டால் போகாதே என்கிறார். 


இன்னொரு நுணுக்கத்தை பரிமேலழகர் எடுத்துக் காட்டுகிறார். 


"எனைத்துணையர்" , "தேரான்" 


என்று இரண்டு சொற்கள் இருக்கின்றன. 


முதலில் பன்மையில் ஆரம்பிக்கிறார். 


"எனைத்துணையன்" என்று போட்டு இருக்கலாம். துணையர் என்று மரியாதை காரணமாக பன்மையில் ஆரம்பிக்கிறார். 


அறிவு இல்லாமல் செல்பவனுக்கு என்ன மரியாதை வேண்டி இருக்கிறது என்று "தேரான்" என்று ஒரு ஒருமையில் குறிப்பிடுகிறார். தேரார் என்று வந்திருக்க வேண்டும். அவனுக்கு என்ன மரியாதை என்று ஒருமையில் அழைக்கிறார் என்று பரிமேலழகர் குறிப்பிடுகிறார். 


(பரிமேல் அழகர் அப்படிச் சொல்லவில்லை. "ஒருமை பன்மை மயக்கம் மரியாதை நிமித்தம் மயங்கிற்று" என்பார். நான் சற்று விளக்கினேன்).


மற்றவர்கள் வீட்டுக்குச் செல்வதனால, மிகவும் ஆராய்ந்து, நேரம், ,காலம், எல்லாம் அறிந்து எதற்காகச் செல்கிறோம், என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்று அறிந்து,தெளிந்து செல்ல வேண்டும் என்கிறார். 


எவ்வளவு சிந்தித்து இருக்கிறார்கள். 




Wednesday, June 15, 2022

நான்மணிக்கடிகை - 6 - அறிவார் யார்?

 நான்மணிக்கடிகை -  6 - அறிவார் யார்? 


நான்மணிக்கடிகை என்ற நூல், வாழ்க்கையின் அனுபவத்தை, சாரத்தை வடித்துத் தரும் நூல். தங்கள் அனுபவத்தில் கண்டதை, நமக்கு உதவும் பொருட்டு எழுதி அருளிய நூல். 


தவறுகள் செய்து, அடிபட்டு, அனுபவங்களை சேகரித்து நாம் அந்தத் தவறுகளை செய்யாமல் இருக்கவும், அந்தத் துன்பங்களை அடையாமல் இருக்கவும், நம் மீது கருணை கொண்டு எழுதித் தந்த நூல். 


வீட்டில், பிள்ளையிடம் அம்மா சொல்லுவாளே "மழையில நனையதடா, காய்ச்சல் வரும்" என்று. அந்த அன்போடு, கரிசனத்தோடு கூறும் நூல். அம்மா ஒன்றும் மருத்துவர் கிடையாது. அவள் அனுபவம் சொல்கிறது மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும் என்று. 


அது போல உலக இயல்பை கவனித்து, யாதார்த்தை முழுவதும் உள்வாங்கி, இந்த உலகம் இப்படித் தான் இருக்கிறது. இது தான் இந்த உலகின் வரைபடம். இதை வைத்துக் கொண்டு நீ விரும்பிய இடத்தை அடையலாம் என்று நமக்கு ஒரு வழிகாட்டும் ஓரூர் நூல். 


ஏறக்குறைய நூறு பாடல்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு அனுபவத் தெளிவு. 


அதில் சில பாடல்களை பகிர்ந்து கொள்ள ஆசை.


நாம் சிலபேரை அவர்கள் தோற்றம், அவர்கள் பொருளாதார நிலை, அவர்கள் உடுத்தும் உடை, பேசும் பேச்சு, அவர்கள் நிறம், அவர்கள் பிறந்த குலம் இவற்றை வைத்து எடை போடுவோம். 


அது சரியல்ல. 


ஒருவரை சரியாக எடை போடவேண்டும் என்றால் அவரோடு பழகி, அவரின் அறிவு, குணம், ஒழுக்க, செயல் இவற்றை அறிந்து பின் முடிவு செய்ய வேண்டும். 


இந்த குடியில் பிறந்தவன் உயர்ந்தவன், இந்த குடியில் பிறந்தவன் உயர்ந்தவனாக இருக்க முடியாது என்று முடிவு செய்யக் கூடாது. எதையும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் என்கிறது நான்மணிக்கடிகை. 


பாடல் 


கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று

ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள்

பல் விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார்,

நல் ஆள் பிறக்கும் குடி?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6_15.html


(Pl click the above link to continue reading)




கள்ளி = கள்ளி மரத்தின் 


வயிற்று இன்  = உள்ளே 


அகில் பிறக்கும் = அகில் என்ற வாசனைப் பொருள் தோன்றும் 


மான் வயிற்று = மானின் வயிற்றில் 


ஒள் அரிதாரம் பிறக்கும்  = முகத்தில் பூசும் ஒளி பொருந்திய அரிதாரம் பிறக்கும் 


பெருங் கடலுள் = குடிக்க முடியாத, ,உப்பு நிறைந்த கடலின் இடையே 


பல் விலைய முத்தம் பிறக்கும் = விலை மதிக்க முடியாத பல வித முத்துக்கள் பிறக்கும் 


அறிவார் யார், = யாருக்குத் தெரியும் ?


நல் ஆள் பிறக்கும் குடி? = நல்ல மனிதர்கள் பிறக்கும் இடம் 


நல்ல மனிதர்கள் எங்கும் தோன்றலாம். இங்குதான் தோன்ற வேண்டும், இங்கு தோன்ற முடியாது என்று நினைக்கக் கூடாது. நல்லது எங்கும் இருக்கலாம். ஒரு திறந்த மனத்தோடு உலகை அணுகினால் எல்லோரும் நட்பாவார்கள், பகை என்பது இருக்காது. யாரையும் உதாசீனம் செய்யும் எண்ணம் வராது, யாரையும் தவறாக நல்லவர்கள் என்று எடை போட்டு ஏமாற மாட்டோம். 


மிக எளிய, நடை முறையில் உள்ள உதாரணங்கள் மூலம், உயர்ந்த அனுபவத்தை சொல்லும் பாடல்.