Thursday, June 24, 2021

பெரிய புராணம் - உலகம் உய்ய

 பெரிய புராணம் - உலகம் உய்ய 


சோழ நாட்டின் அரசன் அநபாய சோழன் என்பவன். அவன் ஒரு காலகட்டத்தில் பல சிற்றின்ப நூல்களை படித்து பொழுதை போக்கிக் கொண்டிருந்தான். அவனிடம் மந்திரியாக இருந்தவர் சேக்கிழார். 


மன்னன் இப்படி சிற்றின்ப நூல்களைப் படித்துக் கொண்டிருந்தால், அவனுக்கு கீழே உள்ள அதிகாரிகளும் அந்த மாதிரி நூல்களையே படிப்பார்கள். அவர்களைப் பார்த்து குடி மக்களும் அதே மாதிரி நூல்களைப் படிப்பார்கள். நாடே நலிந்து போகும் என்று நினைத்து, சேக்கிழார் பெருமான் அரசனிடம் அந்த மாதிரி நூல்களைப் படிக்க வேண்டாம் என்றார். 


அதற்கு அரசன், "சரி இந்த மாதிரி நூல்களைப் படிக்கவில்லை...வேறு எந்த மாதிரி நூல்களைப் படிக்கட்டும்" என்று கெட்டான். 


சேக்கிழார் :  அடியார்கள் பற்றிய செய்திகளை படியுங்கள் 


அரசன்: அடியார்கள் பற்றிய நூல் இருக்கிறதா ?


சே: நூலாக இல்லை, அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள், கதைகள் என்று இருக்கிறது 


அ: அப்படியானால் நீரே அவற்றை தொகுத்து ஒரு நூலாக செய்து தாருங்கள் படிக்கிறேன் 


சே: முதலைமைச்சர் பதவியும் பார்த்துக் கொண்டு, நூல் எழுதுவது என்பது நடவாத காரியம். நேரம் இருக்காது


அ: அப்படியா, பரவாயில்லை, நீங்கள் முதலைமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்த நூலை எழுதுங்கள் என்றான். 


சேக்கிழாரும் அவ்வாறே செய்தார். 


இது ஒரு ஒரு அநபாயனுக்கு, அவர் முதலைமைச்சர் எழுதிய நூல் என்று கொள்ளக் கூடாது. 


எல்லா காலகட்டத்திலும், தலைவர்கள் வழி தவறுவார்கள். தெரிந்தோ, தெரியாமலோ. அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்று குடி மக்களும் அறம் தவறுவார்கள். என்றென்றுக்கும் வழி காட்ட இந்த நூலைச் செய்தேன் என்கிறார். 


உலகம் உய்ய இந்த திருத் தொண்டர்களின் வரலாற்றை பாடுகிறேன் என்கிறார். 


தொண்டர்களின் வரலாற்றைப் படித்தால் உலகம் உய்யுமா என்று கேட்டால் அதற்கு இரண்டு விடை இருக்கிறது. 


ஒன்று, சேக்கிழார் போன்ற ஆழுந்து அகன்ற நுண்ணிய அறிவு உடையவர்கள் சொல்வது தவறாக இருக்காது என்று நம்பலாம். 


இல்லை. அதெல்லாம் நம்ப முடியாது. அது யாராக இருந்தால் என்ன, இதைப் படித்தால் என்ன பலன் என்று தெரிய வேண்டும் என்று கேட்டால், கொஞ்சம் படித்துப் பாருங்கள். உங்களுக்குள் ஒரு மாற்றம் வந்தால் மேலே படியுங்கள். இல்லை என்றால் விட்டு விடலாம். 


கொஞ்சம் படியுங்கள். புரியும். 


பாடல் 


உலக முய்யவுஞ் சைவநின் றோங்கவும்  

அலகில் சீர்நம்பி யாரூரர் பாடிய

நிலவு தொண்டர்தங் கூட்டம் நிறைந்துறை

குலவு தண்புன னாட்டணி கூறுவாம்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_24.html


(please click the above link to continue reading)



உலக முய்யவுஞ் = உலகம் உய்யவும். உய்தல், தவறுகளில் இருந்து தப்பி, நிலைத்து வாழ்தல் 


சைவநின் றோங்கவும் = சைவ நெறி நின்று ஓங்கவும் 


அலகில் சீர் = அளவற்ற சிறப்புகள் நிறைந்த 


நம்பி யாரூரர் பாடிய = நம்பி ஆரூரர் பாடிய 


நிலவு = நிலைத்து இருக்கும் 


தொண்டர்தங் = தொண்டர்களின் 


கூட்டம் நிறைந்துறை = கூட்டம் நிறைந்து, வாழும் 


குலவு = விளங்கும் 


தண்புன னாட்டணி கூறுவாம். = தண் + புனல் + நாட்டு + அணி + கூறுவாம் 


குளிர்ந்த நீரை உடைய நாட்டின் (சோழ நாட்டின்) சிறப்பைக் கூறுவோம். 




No comments:

Post a Comment