Showing posts with label நாலாயிர திவ்ய பிரபந்தம். Show all posts
Showing posts with label நாலாயிர திவ்ய பிரபந்தம். Show all posts

Friday, April 29, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கோயின்மை செய்வது தக்கதே?

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - கோயின்மை செய்வது தக்கதே?


இறைவனிடம் எல்லாம் இருக்கிறது. நாம் கேட்டவற்றை அவன் தருவான். நம்மிடம் இருந்து அவனுக்கு வேண்டியது ஒன்றும் இல்லை. நம்மை காப்பது அவன் கடமை. நம்மை என்றால் நம் உயிரை, பொருளை, சந்தோஷத்தை எல்லாம் சேர்த்ததுதான். 


அப்படி என்று நான் நினைத்துக் கொண்டு இருந்த போது, என் மகள் விடயத்தில் ஒரு தலைவனுக்கு பொருத்தமில்லாத ஒரு காரியத்தை நீ செய்யலாமா என்று நம்மாழ்வார் கேட்கிறார். .


அப்படி என்ன திருமால் செய்து விட்டார்?


பாடல் 


தொண்டெல்லாம் நின்னடி யேதொழு துய்யுமா

கண்டு,தான் கணபுரம் கைதொழப் போயினாள்

வண்டுலாம் கோதையென் பேதை மணிநிறம்

கொண்டுதான், கோயின்மை செய்வது தக்கதே?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_29.html



(pl click the above link to continue reading)



தொண்டெல்லாம்  = தொண்டர்கள் எல்லோரும் 


நின்னடி யேதொழு து  = உன் திருவடிகளையே தொழுது 


உய்யுமா கண்டு = உயிவதைக் கண்டு, ஈடேறுவதைக் கண்டு 


தான் = அவள் 


கணபுரம் = திருக்கண்ணபுரம் 


கைதொழப் போயினாள் = (சென்று அல்லது நோக்கி) கைதொழப் போனாள் 


வண்டுலாம் = வண்டு உலவும் கூந்தலைக் கொண்ட 


கோதையென் பேதை = சூதுவாது அறியாத பேதைப் பெண்ணான என் கோதை (மகள்) 



மணிநிறம் = அழகிய மணி போல் ஒளி விடும் நிறத்தை 


கொண்டுதான் = நீ கொண்டு போய்விட்டாய் 


கோயின்மை = கோ + இன்மை = கோ என்றால் அரசன், தலைவன் 


செய்வது தக்கதே? = செய்வதுசரிதானா?


எல்லா பக்தர்களும் உன்னை வழிபட்டு நன்மை அடைகிறார்கள். அதைப் பார்த்து என் மகளும் உன்னை வழிபட்டாள். நீ என்னடா என்றால் அவளுக்கு வரம் தருவதை விட்டுவிட்டு அவள் மேனியின் நிறத்தை எடுத்துக் கொண்டாய். ஒரு தலைவன் செய்யும் செயலா இது ?


அதாவது, அவனையே நினைத்து உண்ணாமல், ,உறங்காமல் மெலிந்து, மேனி நிறம் குன்றிப் போய் விட்டதாம். திருமால் அருள் செய்யாததால் வந்த வினை என்கிறார். 


அருள் செய்யாவிட்டால் கூடப் பரவாயில்லை, இருக்கிறதையும் எடுத்துக் கொண்டு போவது சரியா என்று வினவுகிறார். .


பிரபந்தம் என்பது மிக மிக நெருக்கமான இறை அனுபவம். 


இறைவனுடன் சண்டை பிடிப்பது, கேள்வி கேட்பது, உருகுவது, அழுவது, கூத்தாடுவது என்று உணர்ச்சிகளின் மொத்த வெளிப்பாடு. 


ஆழமான அன்பின் அனுபவம் இருந்தால் அன்றி இவை புரியா. 




Friday, April 22, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - தாங்க முடிந்தால் தாங்கு

நாலாயிர திவ்ய பிரபந்தம் -  தாங்க முடிந்தால் தாங்கு 


ஆழமாக காதலிப்பவர்களுக்கு, ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து இருக்க முடியாது. கொஞ்ச நேரம் பிரிவது என்றால் கூட பெரிய துன்பமாக இருக்கும். எப்பாட மீண்டும் பிரிந்த காதலரை பார்ப்போம், பேசுவோம் என்று இருக்கும். 


பிரிவின் தவிப்பு, காதலின் ஆழத்தைப் பொறுத்தது. 


இறைவன் மேல் ஆழ்ந்த அன்பு கொண்டு விட்டாலும் அப்படித்தான் என்கிறார் நம்மாழ்வார். 


அவர் தன் நெஞ்சைப் பார்த்துக் கூறுகிறார்...


"எப்படித்தான் அவனை விட்டு உன்னால் பிரிந்து இருக்க முடிகிறதோ. அவனைப் பார்க்காமல், அவன் திருவடியில் பூ தூவாமல், தலை தாழ்த்தி வணங்காமல், கை கூப்பித் தொழாமல் எப்படித்தான் நீ இருக்கிறாயோ என் நெஞ்சே. அவன் அவன் எங்கே என்று தேடாமல் உன்னால் இருக்க முடியும் என்றால் இரு. என்னால் முடியாது" 


என்கிறார். 


வசீகரமான பாசுரம். 


பாடல் 


வாழ்த்தி அவனடியைய்ப் பூப்பு னைந்து, நிந்தலையைத்

தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி,

எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே,

தங்கத்தா னாமேலும் தங்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_22.html



(Pl click the above link to continue reading)





வாழ்த்தி = வாயால் அவனை வாழ்த்தி 


அவனடியைய்ப் = அவன் திருவடிகளை 


பூப்பு னைந்து = பூக்களால் நிறைத்து 


நிந்தலையைத் = உன்னுடைய தலையை 


தாழ்த்தி = தாழ்த்தி 


இருகை = இரண்டு கைகளையும் 


கூப்பென்றால் கூப்பாது = கூப்பு என்றால் கூப்பாது 


பாழ்த்தவிதி, = பாழாய் போன விதி 


எங்குற்றாய் = எங்கு சென்றாய் 


என்றவனை  = என்று அவனை 


ஏத்தாதென் னெஞ்சமே, = போற்றாத என் நெஞ்சே 


தங்கத்தா னாம்  = தங்கத் தான் ஆம். தங்க முடியும் என்றால் 


மேலும் தங்கு. = மேலும் தாங்கிக் கொள் 


இதுவரை எப்படியோ இறைவனை தேடாமல் இங்கே தங்கி விட்டாய். இனிமேலும் அப்படியே தங்க முடியும் என்றால் நீ தங்கிக் கொள். என்னால் ஆகாது என்கிறார். 


பூ போட்டு, கை கூப்பி, தலை வணங்குவது என்ன பெரிய கடினமான செயலா? அது என்ன நெருப்புக்கு நடுவில் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்வது போல கடினமான செயலா? 


இல்லை. இருந்தும் செய்வது இல்லை. ஏன் என்று ஆழ்வார் யோசிக்கிறார். 


காரணம் கண்டு பிடித்துவிட்டார். 


எல்லாம் விதி. 


விதி நல்லதின் பக்கம் போகாமல் தீயதின் பக்கம் நம்மைத் தள்ளுகிறது. 


அதாவது போகட்டும். இறைவனைத் தொழவில்லை. 


இறைவன் நமக்கு எவ்வளவு நன்மைகள் செய்து இருக்கிறான். நம் மேல் எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறான். அப்படிப்பட்டவனை எங்கே எங்கே என்று தேட வேண்டாமா? அந்த ஆர்வம் கூடவா இல்லாமல் போய் விடும்? 


இப்படியே எத்தனை காலம் போவது? இறைவன் யார், அவன் எங்கே இருக்கிறான், எப்படி அவனை அடைவது என்ற ஒரு தேடல் கூட இல்லாமல் எப்படித்தான் இருக்க முடிகிறதோ என்று வியக்கிறார். ஆழ்வார். 


".இப்படியே இருக்கிறதுனா இருந்திட்டுப் போ ..." என்று மனதை கடிந்து கொள்கிறார். 


அருமையான பாசுரம். 


ஏறத்தாழ நாலாயிரம் பாசுரம்.  என்று அனைத்தையும் படித்து முடிப்பது? 


Thursday, April 21, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அம்மானை ஏத்தாது

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அம்மானை ஏத்தாது 


கீழே உள்ள பாசுரத்தின் முதல் பாகத்தை நேற்று சிந்தித்தோம். அதன் link இந்த ப்ளாகின் இறுதியில் உள்ளது. ஒருவேளை படிக்க விருப்பம் இருந்தால் அதையும் படிக்கலாம். 


நம்மாழ்வார் சொல்கிறார், "எது சரி தவறு என்று தெரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாததால் பொன் மான் பின் போன அம்மானைத் தொழாமல் இதுவரை என் வாழ்நாளை எல்லாம் வீணே கழித்து விட்டேன் என்று வருந்துகிறார். 




 பாடல் 


தெரிந்துணர்வு ஒன்று இன்மையால் தீவினையேன் வாளா

இருந்தொழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்துருவின்

அம் மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி அங்கை

அம்மானை ஏத்தாது அயர்த்து    (2665)



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_21.html



(Please click the above link to continue reading)



தெரிந்துணர்வு  = தெரிந்து + உணர்வு = எது நல்லது, எது கெட்டது என்று அறியும் உணர்வு 



ஒன்று இன்மையால் = அந்த உணர்வு இல்லாததால் 



தீவினையேன் = தீய வினைகள் பல செய்த நான் 




வாளா இருந்தொழிந்தேன் = ஒன்றும் செய்யாமல் வெறுமனே காலத்தை கழித்து விட்டேன் 



 கீழ் நாள்கள் எல்லாம்  = இது வரை இருந்த நாட்கள் எல்லாம் 



கரந்துருவின் = உருவத்தை மறைத்து 



அம் மானை =அந்த பொன் மானை 



அந்நான்று = அந்த நாளில் 



 பின் தொடர்ந்த = பின் தொடர்ந்து சென்ற 



 ஆழி அங்கை = மோதிரம் அணிந்த கைகளை உடைய 



அம்மானை = அம்மானை 



ஏத்தாது = போற்றாது 



அயர்த்து = சோம்பிக் கிடந்து    (2665)




இதற்கு வைணவ உரை ஆசிரியர்கள் எழுதி இருக்கும் உரை அற்புதமானது. 



"ஆழி அங்கை" - மோதிரம் உள்ள கை. ஆழி என்பது சக்கரம். ஆனால் இதுவோ இராமாவதாரம் பற்றியது. அடுத்த வரியில் பொன் மான் பின் போன அம்மான் என்கிறார். இங்கே எங்கே சக்ராயுதம் வந்தது? எனவே அது மோதிரத்தைத் தான் குறிக்கும் என்று வியாக்கியானம் செய்கிறார்கள். 


சரி, பொன் மான் பின் போவது என்றால் அது இராமன் காட்டுக்குப் போன பின் நிகழ்ந்த ஒன்று. அவன் தான் எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் தானே மர உரி உடுத்து கானகம் வந்தான். மோதிரம் எங்கிருந்து வந்தது ? திருமணம் ஆன புதிது. ஒரு மகிழ்ச்சி. இராமன் கொஞ்சம் எடை கூடி இருப்பான். அதனால் அவன் கையில் உள்ள மோதிரத்தை கழட்ட முடியாமல் போய் இருக்கும். எனவே, மோதிரத்தோடு கானகம் வந்திருப்பான் என்று உரை செய்கிறார்கள். 


எவ்வளவு ஆழமாக அனுபவித்து இருக்கிறார்கள். 


பின்னாளில் அனுமனிடம் மோதிரத்தை கொடுத்து அனுப்புகிறான். அப்ப மட்டும் எப்படி மோதிரம் கழட்ட முடிந்தது என்றால், காட்டில் சரியான உணவு இல்லை. அது மட்டுமல்லாமல் சீதையை பிரிந்த துயரம் வேறு. இராமன் இளைத்துப் போனான். எனவே மோதிரம் எளிதாக கழன்று வந்தது என்கிறார்கள். 


ஒரு சொல்லுக்குப் பின்னால் இவ்வளவு கதை. 



அடுத்து, 



"கரந்துருவின் அம் மானை". கரந்து என்றால் மறைந்து. தன் உண்மையான உருவத்தை மறைத்துக் கொண்டு பொன் மான் வடிவில் வந்த மாரீசன் பின் போன என்று அர்த்தம். 



இராமனுக்குத் தெரியாதா அது பொய் மான் என்று. பின் ஏன் போனான்?  



கணவன் மனைவி உறவின் அழகை, இரகசியத்தை இங்கே சொல்கிறார்கள். 



சீதை கேட்கிறாள். "இல்லை அது பொய் மான். பொன் மான் எங்காவது உண்டா...பேசாமல் இரு" என்று சொல்லி இருக்கலாம். சொன்னால் அவள் முகம் வாடிவிடும். மனைவியின் முகம் வாடக் கூடாது என்று இராமன் பொன்மான் பின் போனானாம். என்னை நம்பி, இந்தக் காட்டுக்குள் வந்து இருக்கிறாள். அவளுக்காக, தவறாகவே இருந்தாலும், அதை செய்து அவளை சந்தோஷப் படுத்த வேண்டும் என்று இராமன் நினைத்தானாம். 




சில சமயம் பெண்கள் இப்படித்தான் காரண காரியம் இல்லாமல் எதையாவது கேட்பார்கள். அவர்களோடு வாதம் பண்ணி புண்ணியம் இல்லை. கேட்டது கிடைக்கவில்லை என்றால் பெரிய துக்கம் அவர்களுக்கு. கேட்டது கிடைக்கவில்லையே என்ற துக்கம் இல்லை.   நான் கேட்டு வாங்கித் தரவில்லையே, எனக்கு அவ்வளவுதானா மரியாதை, என் மேல் அவ்வளவுதானா அன்பு, என்ற தன்னிரக்கம், சுய பச்சாதாபம். 


தான் கேட்டு கணவன் வாங்கிக் கொடுத்து விட்டால் பெரிய சந்தோஷம். கேட்டது கிடைத்ததே என்று அல்ல. என் கணவன் எனக்காக, நான் கேட்டதை வாங்கித் தந்தான் என்ற அன்பின் அனுபவம், பெருமிதம், மனதுக்குள் ஒரு சந்தோஷம். 



அது பெண்மை. 



இராமனுக்கு அது தெரிந்து இருக்கிறது.  மனைவி கேட்கிறாள்.  அந்த மானை பிடித்துத் தந்துவிட வேண்டியதுதான் என்று கிளம்பி விட்டான். பின்னாளில் சீதை அதை நினைத்து வருந்தினாள். அது வேறு விடயம். 




அது மட்டும் அல்ல, இதில் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்கள். 



இறைவன் நாம் என்ன கேட்டாலும் ஓடிப் போய் நமக்காக அவற்றை கொண்டு வந்து தருவானாம். பக்தர்கள் முகம் வாடுவதைக் காண சகிக்க மாட்டானாம். நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்ன கேட்பது என்று. சீதை மாதிரி பொன் மான் கேட்டால் பின் வருந்த வேண்டி வரும். 




நாமும் கேட்கிறோமே....பணம், வீடு, வாசல், பதவி, வேலை, வரன், பரிட்சையில் தேர்வு அடைய வேண்டும், என்று என்னவெல்லாமோ கேட்கிறோம். 



அவனுக்குத் தெரியாதா, நமக்கு என்ன வேண்டும் என்று?



மணிவாசகர் சொல்லுவார், 



"வேண்டத் தக்கது அறிவோய் நீ"



எது நான் கேட்கத் தகுந்ததோ அது உனக்குத் தெரியும். .



"வேண்ட முழுதும் தருவோய் நீ"



எது கேட்டாலும் முழுசா அப்படியே தருவ. 




"வேண்டும் பரிசு என்று ஒன்று உண்டெங்கில் அதுவும் உந்தன் விருப்பன்றே"



எனக்கு ஏதாவது தரவேண்டும் என்று நினைத்தால், உனக்கு எது விருப்பமோ, அதைக் கொடு.  எனக்கு என்ன தெரியும் எனக்கு எது நல்லது, கெட்டது என்று. நீ பார்த்து செய் என்கிறார்.




நாம் பேருந்துக்காக காத்து இருக்கிறோம். ஒரு பிச்சைக் காரன் நம்மிடம் வந்து, "ஐயா, ஒரு அஞ்சு பைசா பத்து பைசா தர்மம் பண்ணுங்க" என்கிறான். நாமும் அவன் கேட்டதுக்கு மேலேயே போட்டு ஒரு ரூபாய் கொடுக்கிறோம்.




மாறாக, "ஐயா ரொம்ப பசிக்குது, சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு" என்று சொன்னால்,, நாம் ஒரு பத்து ரூபாயோ அல்லது அதற்கு மேலேயோ கொடுத்து இருப்போம். 




நம்ம நிலைக்கு நாம் பத்து ரூபாய் கொடுக்கலாம். அல்லது ஐம்பது ரூபாய் கொடுக்கலாம். 




இறைவனிடம் எவ்வளவு இருக்கிறது. அவன் கொடுப்பதாய் இருந்தால் எவ்வளவு கொடுப்பான்?



ஔவையார் அதியமானிடம் சென்று மருந்து குழைத்து சாப்பிட பால் வேண்டும். ஒரு ஆடு இருந்தால் நல்லா இருக்கும் என்று அவனிடம் ஆடு கேட்டாளாம். ஔவையாருக்கு அவ்வளவுதான் கேட்கத் தோன்றியது. அவன் அரசன். ஒரு ஆட்டை கொடுத்தால் அவன் பெருமை என்ன ஆவது? எனவே, பொன்னால் செய்த ஆடு ஒன்றைக் கொடுத்தானாம். அவன் பெருமைக்கு அப்படித்தான் கொடுக்க முடியும். 




இறைவன் கொடுப்பதாய் இருந்தால் எவ்வளவு கொடுப்பான். அவனிடம் கேட்காமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம். 




ஒரு வரியை வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் உள்ளே போகிறார்கள் என்று. 





அப்படி அனுபவித்து படிக்க வேண்டும். 




























-------------------------------------    பாகம் 1  ---------------------------------------------------------



இதன் முதல் பகுதியை கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம் 




https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_20.html


Wednesday, April 20, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அம்மானை ஏத்தாது

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - அம்மானை ஏத்தாது 


உங்களுக்கு இறை நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அதை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு, இலக்கிய அனுபவத்திற்காக பிரபந்தம் படியுங்கள். அவ்வளவு இனிமை. அவ்வளவு சுகம். 


whatsapp, youtube போன்றவற்றில் வரும் எதையெதையோ படிக்க நேரம் இருக்கும் போது, இது போன்ற உயர்ந்த நூல்கள் படிக்க கொஞ்சம் நேரம் இருக்காதா என்ன?


பக்தி எப்படி வரும்?  முதலில் கோவிலுக்கு வரவழைக்க வேண்டும். அப்புறம் தரிசனம், அப்புறம் பக்தி எல்லாம் வரும். 


பொங்கல், சுண்டல் தருகிறேன் என்றால் ஆர்வமாக வருவார்கள். நான் அப்படி போய் இருக்கிறேன். ஒரு கை அளவுதான் பொங்கல் தருவார்கள். என்ன ஒரு சுவை. என்ன ஒரு சந்தோஷம். ஏதோ பெரிய சாம்ராஜ்யத்தை வென்றுவிட்ட மாதிரி ஒரு பெருமிதம். 


நாளும் அந்த நேரத்துக்குப் போய் விடுவேன். நேரம் கழித்துப் போனால் ஒரு வேளை கிடைக்காதோ என்றோ என்று பயந்து கொஞ்சம் முன்னாடியே போய் விடுவது. போய் என்ன செய்வது? அங்குள்ள பூஜை, மற்றும் சடங்குகளை பார்ப்பது. என்னதான் செய்கிறார்கள் என்று ஒரு ஆர்வம். அப்புறம் பொங்கல், சுண்டல் எல்லாம் கிடைக்கும். 


சாபிட்டுவிட்டு வெளியே வரும் போது, அங்கே ஒருவர் இராமாயணம் உபன்யாசம் செய்து கொண்டு இருப்பார். என்னதான் சொல்கிறார் என்று கேட்போமே என்று சிறிது நேரம் இருந்து கேட்பேன். அட, இது நல்லா இருக்கே என்று முழுவதும் கேட்பேன். சரி, நாளைக்கும் வர வேண்டும் என்ற எண்ணம் வரும். இப்படி முழு இராமாயணத்தையும் கேட்டு இருக்கிறேன். பொங்கல் மேல் இருந்த ஆர்வம் போய், இராமாயணத்தில் ஆர்வம் வந்தது. 


அப்படியே கோவிலை சுற்றி வரும் போது, அங்கே சுவர்களில் பாசுரங்கள் எழுதி வைத்து இருப்பார்கள். வாசிக்கும் போது அதில் ஒரு வசீகரம் இருக்கும். எப்படி மொழி வளைந்து கொடுக்கிறது என்று. பல சொற்களுக்கு அர்த்தம் தெரியாது. இன்று உள்ளது போல் google எல்லாம் கிடையாது. சொல் மனதுக்குள் சுற்றிக் கொண்டே இருக்கும். 


ஏதாவது நூலகத்தில் சென்று, அகாரதியில் பார்த்தால் அர்த்தம் தெரியும். பல சமயம் ஒரு சொல்லுக்கு பல அர்த்தம் இருக்கும். எது பொருந்தும் என்று சிந்திப்பேன். ஏன் இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒர்ர் சொல்லுக்கு அர்த்தம் போட்டு இருக்கிறார்கள் என்ற சிந்தனை வரும். இன்னும் தேடல் பெரிதாகும். சில சமயம் ஒரு சொல்லின் பொருளுக்கு மேற் கோள் காட்டி இன்னொரு பாடல் வரியை தந்து இருப்பார்கள். அது என்ன பாடல் என்று தேடிப் போவேன். 


இப்படி பொங்கலில் ஆரம்பித்து, உபன்யாசம், சுவற்றில் உள்ள பாசுரம், அகராதி என்று தேடல் விரிந்து கொண்டே போனது. 


பொங்கல் மாதிரி, இலக்கியங்களும். முதலில் சொல் சுவை, அணி, யாப்பு எல்லாம் இனிமையாக இருக்கும். அப்படியே நம் கை பிடித்து கொண்டு செல்லும். தேடிக் கொண்டு போக வேண்டியது நம் பொறுப்பு. 


பொங்கலை மட்டும் வாங்கி உண்டு விட்டு, அங்குள்ள தூணில் துடைத்து விட்டு போய் விடலாம். நட்டம் யாருக்கு? 


சரி அது புறம் இருக்கட்டும். 


இங்கே நம்மாழ்வார் பாசுரம் ஒன்று. முதலில் அர்த்தம் பார்ப்போம்.  பின் அதன் பின் உள்ள இலக்கிய சுவையைப் பார்ப்போம். எப்படி எல்லாம் அனுபவித்து இரசித்து இருக்கிறார்கள் என்று தெரியும். 


பாடல் என்னவோ எளிமையானது தான். 


"பெருமானே, உன்னை வணங்காமல் இது வரை என் வாழ்நாள் எல்லாம் வீணடித்து விட்டேன். எல்லாம் என் தீவினை. வேறு என்ன சொல்ல" என்று வருந்துகிறார். 


பாடல் 


தெரிந்துணர்வு ஒன்று இன்மையால் தீவினையேன் வாளா

இருந்தொழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்துருவின்

அம் மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி அங்கை

அம்மானை ஏத்தாது அயர்த்து    (2665)


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_20.html


(Please click the above link to continue reading)



தெரிந்துணர்வு  = தெரிந்து + உணர்வு = எது நல்லது, எது கெட்டது என்று அறியும் உணர்வு 


ஒன்று இன்மையால் = அந்த உணர்வு இல்லாததால் 


தீவினையேன் = தீய வினைகள் பல செய்த நான் 


வாளா இருந்தொழிந்தேன் = ஒன்றும் செய்யாமல் வெறுமனே காலத்தை கழித்து விட்டேன் 


 கீழ் நாள்கள் எல்லாம்  = இது வரை இருந்த நாட்கள் எல்லாம் 


கரந்துருவின் = உருவத்தை மறைத்து 


அம் மானை =அந்த பொன் மானை 


அந்நான்று = அந்த நாளில் 


 பின் தொடர்ந்த = பின் தொடர்ந்து சென்ற 


 ஆழி அங்கை = மோதிரம் அணிந்த கைகளை உடைய 


அம்மானை = அம்மானை 


ஏத்தாது = போற்றாது 


அயர்த்து = சோம்பிக் கிடந்து    (2665)


அவ்வளவுதானே?  


இதற்குப் பின்னால் பல வைணவ உரை ஆசிரியர்கள் எழுதிய உரையைப் பார்த்தால், கண்ணில் கண்ணீர் வரும். அவ்வளவு அழகு, அவ்வளவு அன்யோன்யம், அவ்வளவு கரிசனம். 


என்ன சொல்ல. இலக்கியத்தை அனுபவிப்பதும் ஒரு கலை. 


இன்று blog நீண்டு விட்டதால், ,அந்த இலக்கிய அனுபவத்தை நாளை சிந்திப்போம்.




Wednesday, April 13, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நமது இடர் கெடவே

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - நமது இடர் கெடவே 


ஆழ்வார்கள் பெருமாளை அனுபவிப்பது மாதிரி இன்னொரு சமயத்தில் இருக்குமா என்று தெரியவில்லை. 


இந்த salesman என்று சொல்லுவார்களே, அவர்களுக்கு வேலை கடை கடையாக தினம் சென்று யாருக்கு என்ன பொருள் வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று கேட்டு அந்தப் பொருள்களை விற்பது. தினம் தினம் இதுதான் வேலை. 


ஆழ்வார் சொல்கிறார், பெருமாளும் ஒரு salesman மாதிரித்தான். இந்த உலகம் எல்லாம் உய்ய, பெருமாள் அலைந்து கொண்டே இருப்பாராம். யாருக்கு, எங்கு, என்ன உதவி வேணுமோ, அதை அங்கு போய்ச் செய்வாராம். "உழல்வான்" என்றே ஆழ்வார் குறிப்பிடுகிறார். அலைந்து கொண்டே இருப்பானாம். .


இப்படி அனைத்து உலகிலும் உயிர்களை காப்பாற்றுவதால், பிரம்மா, சிவன் மற்றைய தேவர்கள் எல்லோரும் பெருமாளிடம் வந்து "உன்னைத் தவிர எங்களுக்கு வேறு புகலிடம் இல்லை" என்று சொல்லிக் கொண்டே இருப்பார்களாம். 


அப்படிப்பட்ட பெருமாள் இருக்கும் திருமோகூர் என்ற திருத் தலத்துக்கு நாமும் செல்வோம். எதுக்கு அங்க போகணும் என்றால், நமது எல்லா இடர்களும் தொலைய என்கிறார். 


பாடல் 




அன்றி யாமொரு புகலிடம் இலம் என்றென் றலற்றி

நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட

வென்றிம் மூவுல களித்துழல் வான்திரு மோகூர்

நன்று நாமினி நணுகுதும் நமதிடர் கெடவே. (3893)



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_13.html


(pl click the above link to continue reading)



அன்றி = உன்னைத் தவிர 


யாமொரு = எங்களுக்கு ஒரு 


புகலிடம் இலம் = புகலிடம் இல்லை 


என்றென் றலற்றி = என்றெல்லாம் சொல்லிக் கொண்டு 


நின்று = நின்று 


நான்முகன் = பிரமன் 


அரனொடு = சிவனோடு 


தேவர்கள் நாட = தேவர்கள் நாடி வரும் 


வென்றி = வெற்றி கொண்டு 


இம் மூவுல களித்து  = இந்த மூன்று உலகங்களை காத்து 


உழல் வான் = அலைவான் (இதே வேலையா திரிவான்) 


திரு மோகூர் = திருமோகூர் என்ற திருத்தலம் 


நன்று= நல்லது 


நாமினி நணுகுதும் = இனிமேல் நாம் அங்கு போவோம் 


நமதிடர் கெடவே. = நமது இடர் கெடவே , நமது துன்பங்கள் தொலையவே 



நீங்களும் போயிட்டு வாங்க. இந்தா தான இருக்கு. 





Saturday, April 2, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அடி நிழல் தடமன்றி யாமே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அடி நிழல் தடமன்றி யாமே 


தமிழ் இலக்கியத்திலே அந்தாதி என்று ஒரு வகை உண்டு. முதல் பாடலின் இறுதிச் சீர், அடுத்த பாடலின் முதல்சீராக வரும். 


அந்தம், ஆதியாகி வரும் அந்தாதி. 


திருமோகூரில் பாடிய பத்துப் பாடல்களும் அந்தாதியாக அமைந்தவை. .


முதல் பாடல் 'இலம் கதியே' என்று முடிந்தது. அது கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. 


அடுத்த பாடல் 'இலம் கதியே' என்று தொடங்குகிறது. 


முதல் பாடலை மனப்பாடம் செய்து விட்டால் போதும். ஒன்றில் இருந்து அடுத்ததாக எல்லா பாடல்களும் நினைவில் வந்து விடும். 


'எங்களுக்கு வேறு கதி இல்லை. இன்று மட்டும் அல்ல, என்றுமே வேறு கதி இல்லை. எதை விட்டால் வேறு கதி இல்லை? ஆழ்வார் ஒரு நீண்ட அடை மொழியோடு அதைக் கூறுகிறார். 


பொய்கை (நீர் நிலை)யைத் தவிர வேறு கதி இல்லை. 

நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 


நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 


மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 


துளசி மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

குளிர்ந்த துளசி மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

இங்கு குளிர்ந்த துளசி மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 


எப்போதுமே இங்கு குளிர்ந்த துளசி மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

இப்போது மட்டும் அல்ல எப்போதுமே இங்கு குளிர்ந்த துளசி மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 


வேறு கதி இல்லை இப்போது மட்டும் அல்ல எப்போதுமே இங்கு குளிர்ந்த துளசி மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 


பாடல் 

 

இலங்கதி மற்றொன் றெம்மைக்கும் ஈன்தண் துழாயின்


அலங்கலங் கண்ணி ஆயிரம் பேருடை அம்மான்


நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்திரு மோகூர்


நலங்க ழலவன் அடிநிழல் தடமன்றி யாமே. (3892) 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_12.html


(pl click the above link to continue reading)



இலங்கதி = இல்லை கதி. கதி இல்லை 


மற்றொன் றெம்மைக்கும் = மற்றொன்று எப்போதும் 


ஈன் = இங்கே, ,இந்த 


தண் துழாயின் = குளிர்ந்த துளசியினால் ஆன 



அலங்கல் = மாலை 


அம் கண்ணி  = அவனைத் தவிர 


ஆயிரம் பேருடை அம்மான் = ஆயிரம் திரு நாமங்களை உடைய  அம்மான் 



நலங்கொள் =நல்லவற்றைக் கொள்ளும் 


நான்மறை = நான்கு வேதங்கள் 


வாணர்கள் = வானவர்கள் 



வாழ்திரு மோகூர் = வாழ்கின்ற திருமோகூர் 



நலங்க ழலவன் = பெருமாளுக்கு ஆழ்வார் சூட்டிய புதுப் பெயர். நலங்கழலவன். கழல் என்றால் திருவடி. ஆண்கள் காலில் அணியும் ஆபரணம் கழல். (பெண்கள் அணிவது கொலுசு). நன்மை தரும் திருவடி 


அடிநிழல் = திருவடியின் நிழல் 


தடமன்றி = பொய்கை அன்றி 


யாமே. = எமக்கு 



நலம் தரும் பொய்கை போன்ற திருவடி. 


குளம் இருக்கிறது. அதில் குளிர்ந்த நீர் இருக்கிறது. இனிய மலர்களின் வாசம் வருகிறது அதில் இருந்து. பார்க்க அழகாக இருக்கிறது. இந்த இன்பத்தை எல்லாம் அது யாருக்குத் தரும்?


எல்லோர்க்கும் தரும். 


படித்தவன், படிக்காதவன், பணக்காரன், ஏழை, நல்லவவ்ன், கெட்டவன் என்றெல்லாம் பார்க்காது. யார் வேண்டுமானாலும் அதில் உள்ள நீரை முகர்ந்து பருகலாம். யார் தாகத்தையும் தீர்க்கும். 


அது போல் இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். யார் வந்தாலும், அவர்களுக்கு அருள் செய்வான். 


அப்படி ஒரு திருவடி இருக்கும் போது வேறு என்ன வேண்டும். இதுவே போதும் என்கிறார் ஆழ்வார். 


---------- முதல் பாசுரம் கீழே உள்ளது -------------------------------------------------------------



தாள தாமரைத் தடமணி வயல் திருமோகூர்


நாளும் மேவிநன் கமர்ந்துநின் றசுரரைத் தகர்க்கும்


தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்


காள மேகத்தை யன் றிமற் றொன்றிலம் கதியே. (3891)




பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_31.html


Thursday, March 31, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மற்று ஒன்றிலம் கதியே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மற்று ஒன்றிலம் கதியே 


ஒரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் விடாமல் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்கள். சண்டை என்பது இன்று நேற்று அல்ல, அந்தக் காலத்திலும் இதே தான். 


இரண்டு பக்கமும் ஆட்கள் இறந்து கொண்டே இருக்கிறார்கள். சண்டை என்றால் இழப்பு இருக்கத்தானே செய்யும். 


சண்டையும் போட வேண்டும், ஆளும் இறக்கக் கூடாது...அதுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். அமுதம் உண்டால் இறப்பு வராது என்று அறிந்து கொண்டார்கள். அமுதம் பாற்கடலை கடைந்தால் வரும். 


பாற்கடலை எப்படி கடைவது? எந்த மத்தில், எந்த கயிறைக் கொண்டு அதை கடைய முடியும்?


முடிவாக மேரு மலையை மத்தாக, வாசுகி என்ற பெரிய பாம்பை கயிறாக கொண்டு கடைவது என்று முடிவு செய்தார்கள். 


மலையை தலைகீழாக நட்டு ஆகி விட்டது. பாம்பை சுத்தியாச்சு. யார் வால் பக்கம், யார் தலைப் பக்கம் என்ற சர்ச்சை வந்தது. எப்படியோ பேசி சமாளித்து, அசுரர்களை தலைப் பக்கம் பிடிக்க சொல்லி விட்டார்கள் தேவர்கள். 


கடைந்தார்கள். வாசுகி என்ற பாம்புக்கு உடல் எல்லாம் வலி. வலி பொறுக்க முடியாமல், அது விஷத்தை கக்கியது. வாசுகியின் விஷம் என்றால் சும்மாவா? 


யாராலும் தாங்க முடியவில்லை. எல்லோரும் சிவனிடம் ஓடினார்கள். அவர் அதை எடுத்து விழுங்கினார். அம்பாள் அதை அவருடைய தொண்டைக் குழியில் நிறுத்தி விட்டாள். 


அமுதம் வந்தது. யாருக்கு எவ்வளவு என்ற சண்டை ஆரம்பம் ஆனது. 


அப்போது திருமால் மோகினி வடிவம் கொண்டு வந்து, ஆடிப் பாடி அந்த அமுதத்தை எல்லாம் தேவர்களுக்கே கொடுத்து விட்டார். 


அது புராணக் கதை. எல்லோருக்கும் தெரிந்த கதை. 


அப்படி அமுதம் கொடுத்த இடம் மதுரைக்கு அருகில் உள்ள திருமோகூர் என்ற இடம். 


திரு மோகனி ஊரு, திரு மோகன ஊர், திரு மொமொகனுர் , திருமோகூர் என்று ஆகி மருவி விட்டது. 


சின்ன கிராமம். மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் இருக்கிறது. 


இந்தத் தலத்துக்கு நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்து இருக்கிறார். 


பத்துப் பாடல்கள். 


அத்தனையும் தேன். கற்கண்டு. 


பாடலை அனுபவிக்க வேண்டும் என்றால் நீங்கள் காலத்தில் பின்நோக்கிப் போக வேண்டும். 


அது ஒரு சின்ன கிராமம். அந்தக் காலம். மின்சாரம், பெட்ரோல், தொழிற்சாலை இல்லாத காலம். எங்கும் இயற்கை. வயல்கள், குளம், குட்டை, ஆறு, நீர் நிலைகள். எங்கும் பச்சை பசேல் என்று இருக்கும் கிராமம். 


அங்குள்ள நீர் நிலைகளில் தாமரை மலர்கள் பூத்து நிறைந்து இருக்கின்றன. ஊரைச் சுற்றி பசுமையான வயல்கள். குளிர்ச்சி. அந்த வயல்களைச் சூழ்ந்து குளங்கள். அதில் சிவந்த தாமரை மலர்கள். 


பச்சை வயல். நடு நடுவே சிலு சிலுவென்ற நீர். சுற்றி சிவந்த தாமரை நிறைந்த குளங்கள். 


கற்பனையில் பார்க்க வேண்டும். 


ஊருக்குள் நுழைந்து பெருமாளை சேவிக்கிறார் நம்மாழ்வார். 


நான்கு தோள்கள், சுருள் சுருளாக முடி, தாமரை போன்ற கண்கள், அழகான உதடுகள்...


கண்ணீர் மல்குகிறது. இதை விட வேறு என்ன வேண்டும் என்று உருகுகிறார். 


பாடல் 


தாள தாமரைத் தடமணி வயல் திருமோகூர்

நாளும் மேவிநன் கமர்ந்துநின் றசுரரைத் தகர்க்கும்

தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்

காள மேகத்தை யன் றிமற் றொன்றிலம் கதியே. (3891)


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_31.html


(Pl click the above link to continue reading)



தாள = தாள் என்றால் நார், தண்டு. தண்டு உள்ள 


தாமரைத் = தாமரை மலர்கள் 


தடமணி = அந்த தாமரை மலர்களை அணிகலனாக அணிந்த 


வயல் = வயல்கள் நிறைந்த 


 திருமோகூர் = திருமோகூர் 


நாளும் மேவி  = தினம் தோறும் சென்று 


நன் கமர்ந்து  = நன்கு அமர்ந்து 


நின் ற = நின்ற 


அசுரரைத் தகர்க்கும் = அசுரர்களை வதைக்கும் 


தோளும் நான்குடைச் = நான்கு தோள்கள் உடைய 


 சுரிகுழல் = சுருட்டை முடி 


கமலக்கண் = தாமரை போன்ற கண்கள் 


 கனிவாய் = சிவந்த அதரம் 


காள மேகத்தை யன் றி  = அந்தக் கோவிலில் உள்ள காளமேகப் பெருமாளைத் தவிர 


மற் றொன்றிலம் = வேறு ஒன்றும் இல்லை 


கதியே. = வழியே 


இந்தா இருக்கு மதுரை. ஒரு எட்டு எடுத்து வைத்தால் போய் வரலாம். இப்ப தான் கொரோனா எல்லாம் இல்லையே. போய்டு வாங்க. 


இன்னும் ஒன்பது பாசுரங்கள் இருக்கின்றன. 



Saturday, March 12, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஒக்கலையில் கொண்டு

 நாலாயிர திவ்ய பிரபந்தம் -  ஒக்கலையில் கொண்டு 


குழந்தையை கொஞ்சுவது போல ஒரு சுகம் உலகில் இல்லை. 


குழந்தையை தோளில் போட்டு தூங்க வைப்பது, அதோடு விளையாடுவது, அது நம் விரல் பிடித்து நடப்பது எல்லாம் அவ்வளவு சுகம். 


மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு


என்பார் வள்ளுவர். குழந்தைகள் நம்மை கட்டி அணைப்பது நம் உடலுக்கு இன்பம். அவர்கள் சொல்லும் மழலையைக் கேட்பது செவிக்கு இன்பம் என்கிறார். 


பெண்களுக்கு ஒரு படி மேலே. குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொள்வார்கள். அவர்கள் இடுப்பு குழந்தை அமர வசதியாக இருக்கும். அந்தக் காலத்தில் பெண்களின் இடுப்பு ஒடுங்கி இருந்தது. 


"உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு" என்று ஔவையார் சொன்னால், "ஆகா, பெண்கள் பட்டினி கிடக்க வேண்டுமா? நீங்கள் எங்களை பார்த்து இரசிக்க நாங்கள் பட்டினி கிடந்து துன்பப் பட வேண்டுமா? நாங்களும் நல்லா சாப்பிடுவோம்" என்று பெண் விடுதலை பேசி, இடுப்பு என்பதே இல்லாமல் தூண் போல ஆகும் ஒரு தலைமுறை வந்து கொண்டு இருக்கிறது.


அது ஒரு புறம் இருக்கட்டும். 


கண்ணன் தெருவில் விளையாடுகிறான். அவன் மேல் அங்குள்ள பெண்களுக்கு அவ்வளவு அன்பு, ஆசை. போவோர் வருவோர் எல்லாம் அவனை தூக்கி தங்கள் இடுப்பில் வைத்துக் கொண்டு "வா, நம்ம வீட்டுக்குப் போகலாம்"  என்று தூக்கிக் கொண்டு போய் விடுவார்களாம். 


அங்கு கொண்டு போய், அவனோடு ஆசை தீர விளையாடுவார்களாம். 


வீட்டுல உள்ள பெண் பிள்ளைகள் அவனோடு விளையாடுவார்கள். கொஞ்சுவார்கள். மற்றவர்களுக்கு அவன் செய்வதைப் பார்த்து அப்படி ஒரு சந்தோஷம். 


அந்தக் காட்சியை மனதில் கண்டு, பெரியாழ்வார், கண்ணனை நோக்கி, "கண்ணா, நீ நல்லா ஆடு" என்று நேரில் பார்த்து கூறுவதைப் போலக் கூறுகிறார். 



பாடல் 



உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி

உன்னொடு தங்கள் கருத்தாயின செய்துவரும்*

கன்னியரும் மகிழக் கண்டவர் கண்குளிரக்

கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி*

மன்னுகுறுங் குடியாய்! வெள்ளறையாய்! மதிள்சூழ்

சோலைமலைக் கரசே! கண்ண புரத்தமுதே!*

என்னவலம் களைவாய்! ஆடுக செங்கீரை

ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_12.html


(Pl click the above link to continue reading)



உன்னையும்  = உன்னை (கண்ணனை) 


ஒக்கலையில் கொண்டு = இடுப்பில் தூக்கிக் கொண்டு 


தமில்மருவி = தம் + இல் + மருவி = தங்களது இல்லத்துக்கு தூக்கிச் சென்று 


உன்னொடு = உன்னோடு (கண்ணனோடு) 


தங்கள் கருத்தாயின செய்துவரும் = தங்கள் மனதில் என்னவெல்லாம் தோன்றியதோ அப்படி எல்லாம் விளையாடி 


கன்னியரும் மகிழக் = பெண்கள் அவனைக் கொஞ்சி, அவன் கூட விளையாடி மகிழ 


கண்டவர் கண்குளிரக் = அதைப் பார்பவர்கள் மனம் குளிர 

 

கற்றவர் = படித்தவர்கள் 


தெற்றிவரப் பெற்ற = அருள் கொண்டு நோக்கப் பெற்ற 


 எனக்குஅருளி = எனக்கு (பெரியாழ்வார்) அருள் செய்து 


மன்னுகுறுங் குடியாய்! = நிலைத்து நிற்கும் புகழுடைய திருக்குறுங்குடி என்ற தலத்தில் உறைபவனே 


வெள்ளறையாய்!  = திரு வெள்ளறை என்ற தலத்தில் இருப்பவனே 


மதிள்சூழ் = கோட்டை மதிள் சூழ்ந்த 


சோலைமலைக் கரசே! = திருமாலிருஞ்சோலைக்கு அரசனே 


கண்ண புரத்தமுதே! = கண்ணபுரத்தில் இருக்கும் அமுதம் போன்றவனே 


என்னவலம்  = என் அவலம் (துன்பம்) 


களைவாய்! = நீக்குவாய் 


ஆடுக செங்கீரை = ஆடுக 


ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே. = ஏழு உலகம் உடையவனே ஆடுக, ஆடுகவே 


(செங்கீரை என்பது ஒரு குழந்தைப் பருவம்) 


பெரியாழ்வார் கற்பனையில் காண்கிறார். கண்ணன் தெருவில் விளையாடினால் அங்கு என்னவெல்லாம் நிகழ்ந்து இருக்கும் என்று. 


அவர் கற்பனையில் கண்டது மட்டும் அல்ல, அதை நம் கண் முன்னே கொண்டு வந்தும் நிறுத்தி விடுகிறார். 


ஏதோ நாமும் கண்ணனை நம் வீட்டுக்கு கொண்டு வந்து அவன் கூட விளையாடுவது போல இருக்கிறது. 


அவ்வளவு அன்யோன்யம். 


பிரபந்தம் படிக்க ஒரு மனம் வேண்டும். 




Monday, February 21, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கட்டமே காதல்

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - கட்டமே காதல் 


காதல் இன்பமானதா? துன்பம் நிறைந்ததா? 


காதல் செய்தவர்களுக்குதன் தெரியும் அதன் கஷ்டம்.  காதலை சொல்வது கடினம். சொன்னால் ஏற்றுக் கொள்ளப் படுமோ, நிராகரிக்கப் படுமோ என்ற பயம், கவலை. ஏற்றுக் கொள்ளப் பட்டாலும், தினம் தினம் பார்க்காவிட்டால் கவலை. தினம் தினம் பேச முடியாவிட்டால் கவலை. யாராவது ஒருவர் வெளியூர் சென்றுவிட்டால் திரும்பி வரும் வரை கவலை. மற்றவருக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் கவலை. 


இதில் பெரிய கவலை என்ன என்றால், மற்றவர் கோபித்துக் கொண்டு பேசாமல் இருந்து விட்டால், பார்க்க வராமல் இருந்து விட்டால்...அது போல் பெரிய கவலை இல்லை. 


நான் சொல்லவில்லை. ஆழ்வார் சொல்கிறார். 


ஆழ்வார் தன்னை ஒரு பெருமாள் மேல் காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் தாயக நினைத்துக் கொண்டு, அந்த பெண் பிள்ளை படும் பாட்டை சொல்கிறார். 


"பெருமாளே, என் மகள் உன் மேல் காதல் கொண்டு விட்டாள். நீயோ அவளை பார்க்க வர மாட்டேன் என்கிறாய். அவளும் கிடந்து புலம்புகிறாள். இந்த காதல் மிகக் கடினமானது என்று சொல்லி மயங்கி விழுகிறாள். உன் பேரை அடிக்கடி சொல்லிக் கொண்டு இருக்கிறாள். நீ வராவிட்டாலும், ,நீ வந்து விட்டதாகவே நினைத்து  மயங்கும். இவள் மேல் உனக்கு இரக்கம் இல்லையா? இவளை நீ என்ன செய்ய உத்தேசித்து இருக்கிறாய்?"


என்று கேட்கிறார். 


பாடல் 


இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;

             எழுந்துலாய் மயங்குங்கை கூப்பும்;

        ‘கட்டமே காதல்’ என்றுமூர்ச் சிக்கும்;

             ‘கடல்வண்ணா! கடியைகாண்’ என்னும்;

        ‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்

             ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;

        சிட்டனே! செழுநீர்த் திருவரங் கத்தாய்!

             இவள்திறத் தென்சிந்தத் தாயே?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_21.html


(Please click the above link to continue reading)




இட்டகால் = கால் இட்ட இடத்தில் அசைவில்லாமல் இருக்கும். 


இட்ட கையளாய் = கைகள் இருக்கும் இடத்தில் அசைவு இல்லாமல் இருக்கும் 


இருக்கும்; = இருக்கும் 


எழுந்துலாய்  = எழுந்து உலாவி 


மயங்குங்  = மயங்குவாள் 


கை கூப்பும்; = கைகளை கூப்புவாள் 


‘கட்டமே காதல்’ = இந்தக் காதல் ரொம்ப கஷ்டம் 


என்று மூர்ச் சிக்கும்; = என்று பெருமூச்சு விடுவாள் 


‘கடல்வண்ணா! = கடல் போன்ற வண்ணம் உடையவனே 


கடியைகாண்’ என்னும் = இந்தக் கடுமையை, கொடுமையை பார் என்று பிதற்றுவாள் 


‘வட்டவாய் நேமி  = வட்டமான சக்கரத்தை 


வலங்கையா!’ என்னும் = வலக் கையில் கொண்டவனே என்று சொல்லும் 


‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்; = வந்து விட்டாய் என்று மயங்குவாள் 


சிட்டனே! = சிஷ்டனே 


செழுநீர்த் திருவரங் கத்தாய்! = செழுமையான நீரைக் கொண்ட திருவரங்கத்தில்  உறைபவனே 


இவள்திறத் தென்சிந்தத் தாயே? = இவளைப் பற்றி நீ என்ன நினைத்து வைத்து இருக்கிறாய் உன் மனத்தில் 


சிட்டனே என்பதற்கு சீடர்களுக்கு, பக்தர்களுக்கு அருள் புரிபவனே, நீ இப்படி அருள் புரியாமல் இருக்கலாமா என்று பொருள் சொல்கிறார்கள். 


ஒரு பெண்ணின் காதல் அவஸ்த்தையை எவ்வளவு துல்லியமாக படம் பிடிக்கிறார். 


அவனைப் பற்றி யோசித்துக் கொண்டே இருப்பது, போட்டது போட்டபடி இருப்பது, அவன் பேரைச் சொல்லி மகிழ்வது, செல் போனில் டிங் என்று சத்தம் வந்தால் ஒரு வேளை அவன் கிட்ட இருந்து ஏதாவது செய்தி வந்திருக்குமோ என்று ஆவலோடு பார்ப்பது, ஒரு வேளை நம்மை பிடிக்கவில்லையோ, மறந்து விட்டானோ, நம்மை வேண்டாம் என்று நினைத்து விட்டானோ என்று கவலைப் படுவது....எல்லாம் சொல்கிறார். 


பக்தி என்பது காதலின் அடுத்த படி தான் போலும். 


ஆதலினால் காதல் செய்வீர் என்று பாரதி சொன்னது போல், காதல் செய்வீர். 


சிற்றின்பமே புரியவில்லை என்றால் பேரின்பம் எப்படி புரியப் போகிறது?


Wednesday, December 1, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எண்ணாத பொழுது

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - எண்ணாத பொழுது 


நாம் யாரையெல்லாம் அடிக்கடி நினைக்கிறோம்?


கணவன்/மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உடன் பிறப்பு, சில பல நண்பர்கள் என்று ஒரு கூட்டம் வைத்து இருக்கிறோம்.


அது போக 


பள்ளியில், கல்லூரியில், அலுவலகக்தில், உடன் வேலை செய்பவர்கள், அரசாங்க அதிகாரிகள் என்று கொஞ்சம் பேரை நினைக்கிறோம். 


மேலும் 


தொலைக்காட்சி, செய்தித்தாள் என்று எடுத்தால் அரசியல் தலைவர்கள்,  விளையாட்டு வீரர்கள், கொலை கொள்ளை செய்த நபர்கள் என்று பலரை நினைவில் கொண்டு வருகிறது. 


நல்லவர்களை நினைக்கிறோமா? 


நல்லவர்கள் என்றால் யார்?


படித்தவர்கள், நாலு பேருக்கு நல்லது செய்பவர்கள், சுய நலம் இல்லாதவர்கள் என்று கொஞ்ச பேரையாவது நினைக்கிறோமா?


திருமங்கை ஆழ்வார் சொல்கிறார், "இறைவனை நினைக்காதவர்களை பற்றி நினைக்காமல் இருப்பதே சுகம்" என்று. 


இறைவன் நமக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறான். அந்த நன்றியை மறந்து அவனை நினைக்காதவர்களை நான் ஏன் நினைக்க வேண்டும். அப்படி நன்றி மறந்தவர்களை நினைக்காமல் இருப்பதே இனிமையான அனுபவம் என்கிறார். 


பாடல் 


மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம்


உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட,


கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடி, அவனை உள்ளத்து


எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே.




பொருள் 





(Please click the above link to continue reading)


மண்ணாடும் = பூ உலகும் 


விண்ணாடும் = வானுலகமும் 


வானவரும் = தேவர்களும் 


தானவரும் = அசுரர்களும் 


மற்றுமெல்லாம் = மற்றும் உள்ள அனைத்தும் 


உண்ணாத பெருவெள்ளம் = அடங்காத பெரு வெள்ளம் (பிரளயம்) 


உண்ணாமல் = அவர்களை எல்லாம் உண்டு விடாமல் 


தான் விழுங்கி = தானே விழுங்கி, வயிற்றில் வைத்து இருந்து 


உய்யக் கொண்ட, = பின் உமிழ்ந்து அவை பிழைத்து இருக்கும் படி செய்த 


கண்ணாளன் = கண்ணாளன் (என்ன ஒரு அழகான சொல்) 


கண்ணமங்கை நகராளன் = திருக் கண்ணபுரம் என்ற தலத்தில் இருப்பவன் 


கழல் சூடி = திருவடிகளைப் போற்றி 


அவனை உள்ளத்து = அவனை தங்கள் உள்ளத்தில் 


எண்ணாத மானிடத்தை  = நினைக்காத மனிதர்களை 


எண்ணாத போதெல்லாம் = நான் நினைக்காமல் இருக்கும் பொழுது எல்லாம் 


இனியவாறே. = இனிய பொழுதே 


யோசித்துப் பாருங்கள். 


நமக்கு மனதுக்கு பிடித்தவர்களை நினைக்கும் போது நமக்கு ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது அல்லவா? 


சில பேரை நினைத்தாலே ஒரு கோபமும், எரிச்சலும், வெறுப்பும் வருகிறது அல்லவா?


இறைவனை நினைக்கும் அடியார்களை விடுத்து மற்றவர்களை நினைக்காமல் இருப்பதே சுகமான அனுபவம் என்கிறார். 


என்ன ஒரு அழகான சிந்தனை. 


கண்டவர்களையும் ஏன் நினைக்க வேண்டும்? 


Thursday, November 18, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மனக்கவலை தீர்ப்பார் வரவு

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - மனக்கவலை தீர்ப்பார் வரவு 


உடம்புக்கு ஒரு வலி என்றால் மருத்துவரைப் போய் பார்க்கிறோம். மருந்து தருகிறார். குணமாகிறது. 


மனதில் வரும் வலியை, கவலையை எப்படி போக்குவது? மனோ தத்துவ நிபுணர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கண்டு பிடிப்பதற்கே பல காலம் ஆகும். கண்டு பிடித்தாலும் எல்லா மனக் கவலைக்கும் மருந்து இருக்கிறதா? 


ஏதோ ஒரு பெரிய தோல்வி, நெருங்கியவர் இறந்து போனார், இப்படி பல கவலைகள் இருக்கின்றன. அவற்றுக்கு எல்லாம் எங்கே மருந்து இருக்கிறது. 


நம்மாழ்வார் சொல்கிறார்...இறைவன் ஒருவன் தான் எல்லா மன கவலைக்கும் மருந்து. 


இறைவன் திருவடியை சேராதவர்களுக்கு மனக் கவலையை மாற்ற முடியாது என்கிறார் வள்ளுவர். 


தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.


சரி, இறைவனை எப்படி அடைவது? அவன் எப்படி இருப்பான், எங்கே இருப்பான், ஒன்றும் தெரியாது. விலாசம் இருந்தால் தேடிக் கண்டு பிடிக்கலாம். விலாசமே இல்லாவிட்டால் எப்படி கண்டு பிடிப்பது? 


சரி, விலாசம் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். வழி தெரியுமா? தெரியாது. 


சரி, விலாசமும் இருக்கிறது. வழியும் தெரியும். இறைவன் இருக்கும் இடத்துக்கு போயும் சேர்ந்தாகி விட்டது. இறைவனை நம் அறிவால் புரிந்து கொள்ள முடியுமா? அவன் அறிவுக்கு எட்டிய உயரம், நிறம், கனம், ஆண்/பெண் பாகுபாடு என்ற எல்லைக்குள் இருப்பானா? நம் சிற்றறிவுக்குள் அவனை எப்படி அடக்குவது? 


நம்மாழ்வார் சொல்கிறார், நம்மால் தேடி கண்டு பிடிக்க முடியாது. ஆனால், அவன் நினைத்தால் நம் உள்ளத்துக்குள் வர முடியும். 


தேடுபவர்களுக்கு கிடைக்க மாட்டான். தேடாதார் நெஞ்சில் தானே வந்து அமர்ந்து கொள்வான் என்கிறார். 


அப்படி அவன் வந்து விட்டால், மனதில் கவலையே இருக்காது என்கிறார். 


பாடல் 



மருங்கோத மோதும் மணிநா கணையார்,


மருங்கே வரவரிய ரேலும்,-ஒருங் கே


எமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால்,


மனக்கவலை தீர்ப்பார் வரவு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_62.html


(click the above link to continue reading)



மருங்கோத மோதும்  = மருங்கு + ஓதம் + மோதும் = கரையில் அலை வந்து மோதும். பாற்கடலில் அலை வந்து மோதும் 


மணிநா கணையார், = மாணிக்கத்தை உடைய படத்தைக் கொண்ட ஆதி சேஷன் மேல் பள்ளி கொள்ளும் 


மருங்கே வரவரிய ரேலும் = மருங்கே வர அரியர் எலும் = அருகில் யாராலும் வர முடியாத 


ஒருங் கே = சிறந்த தனித் தன்மையுடன் 


எமக்கவரைக் = எமக்கு அவரை 


காணலா மெப்போது = காணலாம் எப்போதும் 


முள்ளால், = உள்ளதால் 


மனக்கவலை தீர்ப்பார் வரவு. = மனக் கவலை தீர்ப்பார் வரவு 


வீடு கட்டும் போது, இரண்டு செங்கலை ஒட்ட வைக்க நடுவில் சிமென்ட் கலவையை வைப்போம் அல்லவா? 


அது போல செய்யுளை செய்யும் போது இரண்டு சீர்களை (சொற்களை) ஒட்டி வைக்க வேற்றுமை உருபுகள் என்று உண்டு. 


மூன்றாம் வேற்றுமை உருபு "ஆல்" என்ற சொல். 


இந்த வேற்றுமை உருபுகள் சில சமயம் வெளிப்பட்டு நிற்கும். சில சமயம் மறைந்து நிற்கும். அப்படி மறைந்து நிற்பதற்கு "தொக்கி நிற்றல்" என்று பெயர். 


இங்கே, 


"மனக்கவலை தீர்ப்பார் வரவு"


என்று இருக்கிறது. 


ஒருவாறு அர்த்தம் புரிந்தாலும், எங்கோ இடிக்கிறது அல்லவா?


இங்கே, "ஆல்" என்ற மூன்றாம் வேற்றுமை உருபு தொக்கி நிற்கிறது. 


எப்படி?


"வரவால் மனக் கவலை தீர்ப்பார்"


என்று இருக்க வேண்டும். 


வரவால் என்பதில் உள்ள "ஆல்" தொக்கி நிற்கிறது. 


அதை வெளிப்படுத்தினால் அர்த்தம் சரியாக விளங்கும். 


அவர் வந்தால் மனக் கவலை எல்லாம் தீர்ந்து விடும். 


இலக்கணம் தெரிந்து கொண்டால் இலக்கியம் இன்னும் சுவைக்கும். 


முழு இலக்கணத்தையும் படிப்பது என்பது வாழ் நாள் வேலை. வேண்டிய அளவு அங்கங்கே தெரிந்து கொண்டு போவோம். 






Sunday, October 3, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்டு இன்பக் கலவி எய்தி

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்டு இன்பக் கலவி எய்தி 


இறைவன் எல்லாம் வல்லவன். அவனுக்கு எல்லாம் தெரியும் என்றாலும், அவன் மேல் பக்தி, பக்தி என்று கூட சொல்லமுடியாது, ஒரு காதல், கொள்ளும் பக்தர்கள், அவனுக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்று பதறுவது, வைணவ இலக்கியத்தில் நாம் காணும் காட்சி. 



கணவன் பட்டாளத்தில் பெரிய வேலையில் இருப்பார். அவர் போகும் போது முன்னால் நாலு வண்டி, பின்னால் நாலு வண்டி பாதுகாப்புக்கு போகும். அவர் கண் அசைத்தால் பெரிய படையே நகரும். இருந்தும் அவர் வெளியே போய்விட்டு வரும் வரை, மனைவிக்கு கவலையாகத்தான் இருக்கும். அவருக்கு ஒண்ணும் ஆகி விடக் கூடாதே என்று. 


அது அன்பின் அடையாளம் . காதலின் வெளிப்பாடு. 


அதே அன்பை, அன்யோன்யத்தை, காதலை பிரபந்தத்தில் பல இடத்தில் காணலாம். இப்படி கூட அன்பு இருக்குமா என்று வியக்க வைக்கும் நம்மை. 


குலசேகர ஆழ்வார் நினைக்கிறார், 


"பெருமாளுக்கு ஏதாவது தீங்கு வந்து விடுமோ? எதற்கும் ஒரு முறை போய் பார்த்து விட்டு வந்து விடுவோம். ஹ்ம்ம்...அவர் கையில் கூரிய அம்புகள் இருக்கிறது, அதை செலுத்தும் பெரிய சாரங்கம் என்ற வில் இருக்கிறது.  அது போதுமா? அம்பு ஒரு தூரத்துக்குத் தான் போகும். அதற்கு அப்பால் ஏதாவது துன்பம் , தீங்கு வந்து விட்டால்? ...கையில சக்கரம் இருக்கு. அது எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகும். இது இரண்டும் போதுமா? அது போக கதையும் இருக்கு, அதுக்கும் மேல ஒரு வாளும் இருக்கு. ரொம்ப தூரம் போக வேண்டும் என்றால் அதுக்கு கருடன் இருக்கு. இது எல்லாம் என் பெருமாளை காப்பாற்றும். அவருக்கு ஒரு துன்பமும் வராது. அப்பாட, நிம்மதி" என்று நிம்மதி பெருமூச்சு விட்ட பின், சுற்றி வர பார்க்கிறார். 


அவர் இருக்கும் இடம் திருவரங்கம். எங்கு பார்த்தாலும் சோலை. வயல். பச்சை பசேல் என்று இருக்கிறது. நீர் வளம் நிரம்பி இருக்கிறது. வயக்காட்டில் உள்ள நீரில், மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. பெருமாள் அரவணையில் பள்ளி கொண்டிருக்கிறார். பார்க்க பார்க்க அவருக்கு ஆனந்தம் தாளவில்லை. அப்படியே ஓடிப் போய் கட்டி பிடித்துக் கொள்ள மாட்டோமா என்று மனம் காதலில் மிதக்கிறது. 


எனக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா என்று கிடைக்குமோ என்று ஏங்குகிறார். 


பாடல் 




கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம் கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள்


காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக் கடும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப


சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்


மாலோனைக் கண்டின்பக் கலவி யெய்தி வல்வினையே னென்றுகொலோ வாழும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post.html


(Please click the above link to continue reading)




கோலார்ந்த = கூரிய அம்புகள் உள்ள 


நெடுஞ்சார்ங்கம் = பெரிய சாரங்கம் என்ற வில் 


கூனற் சங்கம் = வளைந்த சங்கு 


கொலையாழி = சக்கரம் 


கொடுந்தண்டு = தண்டாயுதம் 


கொற்ற வொள்வாள் = வெல்லும் வாள் 


காலார்ந்த = காற்றில் 


கதிக்கருட னென்னும்  = வேகமாகச் செல்லும் கருடன் என்ற 


வென்றிக் கடும்பறவை = வெற்றி பெறும் சிறந்த பறவை 


யிவையனைத்தும் = இவை அனைத்தும் 


புறஞ்சூழ் காப்ப = சுற்றி இருந்து காவல் செய்ய 



சேலார்ந்த = மீன்கள் நிறைந்த 


நெடுங்கழனி = பெரிய கழனி 


சோலை = சோலைகள் 


சூழ்ந்த = சூழ்ந்த 


திருவரங்க தரவணையில் = திருவரங்கத்தில், பாம்பு அணையில் 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும் 


மாலோனைக் = திருமாலை 


கண்டின்பக் கலவி யெய்தி = கண்டு இன்பக் கலவி எய்தி 


வல்வினையே னென்றுகொலோ = வலிய வினையை உடைய நான் என்றோ 


வாழும் நாளே = வாழும் நாளே 





Friday, September 24, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கெடும் இடர்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கெடும் இடர் 


இறை உணர்வு என்பது ஒரு எளிமையான உணர்வு. அதை மிக மிக சிக்கலான ஒன்றாக ஆக்கிவிட்டோம். வேதம், புராணம், இதிகாசம், அவதாரம், உபநிடதம், சுருதி, ஸ்மிரிதி, பூஜை, ஆசாரம், நியமம், என்று பல விதங்களில் சிக்கலாக்கி விட்டோம். 



பத்தாக் குறைக்கு குழப்பும் தத்துவங்கள்...அத்வைதம், துவைதம், விசிட்டாத்வைதம், பரமாத்மா, ஜீவாத்மா, இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்று ஏகப்பட்ட சிக்கல்கள். 



இதை எல்லாம் படித்து, தெளிவதற்குள் நம் ஆயுள் முடிந்து விடும். ஒன்றைப் படித்தால் அதில் இருந்து ஆயிரம் சந்தேகம் வரும். என்று தெளிவு வர?



பக்தி செய்பவர்களுக்கு இந்தக் குழப்பம் எல்லாம் இல்லை. 



இறைவனை மிக மிக எளிதாக அவர்கள் நினைக்கிறார்கள். 


அவன் நின்றான், உட்கார்ந்தான், படுத்தான், நடந்தான் என்று சொன்னாலே நம் இடர், துன்பம் எல்லாம் போய் விடும் என்கிறார் பொய்கையாழ்வார். 



பாடல்  


வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத


பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், - நான்கிடத்தும்


நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,


என்றால் கெடுமாம் இடர்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_24.html


(Please click the above link to continue reading)



வேங்கடமும்  = திரு வேங்கடம் (திருப்பதி) 


விண்ணகரும் = விண்ணில் உள்ள நகர், வைகுண்டம் 


வெஃகாவும், = திரு வெஃகாவும்


 அஃகாத = மாறாத 


பூங்கிடங்கில் = பூக்கள் நிறைந்த 


நீள் கோவல் = உயர்ந்த திருக் கோவலூர் 


பொன்னகரும் = என்ற பொன் போன்ற நகரமும் 


நான்கிடத்தும் = நான்கு இடத்திலும் 


நின்றா னிருந்தான் = நின்றான், (உட்கார்ந்து)  இருந்தான் 


 கிடந்தான் = (படுத்து) கிடந்தான் 


நடந்தானே = நடந்தான் 

 

என்றால் கெடுமாம் இடர். = என்று சொன்னால் நம் துன்பங்கள் எல்லாம் போய் விடும் 


துன்பம் போக வேண்டும் என்று யார் தான் விரும்ப மாட்டார்கள்? 


அதற்கு என்ன செய்ய வேண்டும்?


பக்கம் பக்கமா பாராயணம் பண்ணி, ஒப்பிக்க வேண்டுமா? விரதம் இருக்க வேண்டுமா? ஆசாரம், அனுஷ்ட்டானம் எல்லாம் பண்ண வேண்டுமா?


ஒன்றும் வேண்டாம்...


நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் 


என்று சொன்னால் போதும். 


கடவுள் என்றால் ஏதோ சூப்பர் man மாதிரி ஏதாவது வித்தை காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று அல்ல. 


சும்மா நம்மை மாதிரி, நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்றாலும் அவன் கடவுள்தான். 


அவ்வளவு ஒரு எளிமை. 


மனதில் பக்தி வேண்டும். அன்பு வேண்டும். 


மற்றவை எல்லாம் ஆடம்பரம். 

Thursday, September 16, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருமொழி - நாத் தழும்பு ஏறி

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருமொழி - நாத்  தழும்பு ஏறி 


தொடர்ந்து ஒரு வேலையை செய்து கொண்டு இருந்தால், செய்யும் உறுப்பு காய்த்துப் போகும். 


சிலருக்கு பேனா பிடித்து எழுதி எழுதி விரல் காய்த்துப் போகும். 


சிலருக்கு வண்டியில் ஸ்டீரிங் வீலை பிடித்து பிடித்து கை காய்த்துப் போகும். 


குலசேகர ஆழ்வார் சொல்கிறார், கடவுள் நாமத்தைப் நாக்கு தழும்பு  ஏற பாடி, கை கொண்டு மலர் தூவும் நாள் எந்நாளோ என்று உருகுகிறார். 


நாக்கில் தழுப்பு ஏறுவது என்றால் எவ்வளவு தரம் ஒரே நாமத்தை திருப்பி திருப்பி சொல்ல வேண்டி இருக்கும். 


அது பக்தி. 


ஏதோ அவசரத்தில், வாயில் முணு முணு என்று சொல்லிவிட்டுப் போவதா பக்தி. 


இதெல்லாம்  பக்தியின் வேறு தளம். இப்படி நினைக்கக் கூட நம்மால் முடியாது. 


பாடல் 


மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை வண்ணணைஎன் கண்ணணைவன் குன்ற மேந்தி


ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்


பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்


கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள் கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_16.html


(Please click the above link to continue reading)


மாவினைவாய் = குதிரை வடிவில் வந்த ஒரு அரக்கனின் வாயை 


பிளந்துகந்த = பிளந்து + உகந்த = பிளந்து மகிழ்ந்த 


மாலை = திருமாலை 


வேலை வண்ணணை = வேலை என்றால் கடல். கடல் வண்ணனை 


என் கண்ணணை = என் கண்ணனை 


வன் = பெரிய, கடினமான 


குன்ற மேந்தி = மலையை கையில் ஏந்தி 


ஆவினை = பசுக் கூட்டங்களை 


யன் றுயக்கொண்ட = அன்று உய்யக் கொண்ட = அன்று காப்பாற்றிய 


ஆய ரேற்றை = ஆயர்களின் தலைவனை 


அமரர்கள்தந் = தேவர்களின் 


தலைவனை = தலைவனை 


அந் தமிழி னின்பப் = அந்த தமிழ் இன்பப்


பாவினை = பாடலை 


அவ் வடமொழியைப் = அந்த வட மொழியை 


பற்றற் றார்கள் = பற்று இல்லாதவர்கள் 


பயிலரங்கத் தரவணையில் = இருக்கும், திருவரகத்தில் பாம்பணையில் 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும் 



கோவினை = தலைவனை 


நா வுறவழுத்தி = நாக்கு தழும்பு ஏற பாடி 


என்றன் = என்னுடைய 


கைகள் = கைகள் 


கொய்ம்மலர்தூய் = கொய்த மலரை தூவி 


என்றுகொலோ  = எப்போதோ 


கூப்பும் நாளே = கூப்பும் நாள் ?


இறை அனுபவம் எப்படி இருக்கும் என்று கேட்டால், ஒரு இனிமையான தமிழ் பாடலை கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் என்கிறார். 


தமிழின் இனிமை, வட மொழியின் இனிமை எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் என்கிறார். 


பாட்டின் இனிமை என்பது உணர்வு சார்ந்தது. அது இன்னது என்று சுட்டிக் காட்ட முடியாது. 


இசையின் இன்பத்தைப் போல. 


சிலருக்கு இசையை கேட்கும் காது வாய்த்து இருக்கும். அவர்களுக்கு இசையின் இன்பம் புரியும். இசை தெரியாதவர்களுக்கு சொன்னாலும் புரியாது. 


பல பாட்டுப் போட்டியில் நடுவர்கள் "..அங்கங்கே கொஞ்சம் சுருதி விலகி இருந்தது" என்று சொல்லுவார்கள். நமக்கு எங்கே சுருதி விலகியது என்றே தெரியாது. எல்லாம் சரியாக இருப்பது போலவே தெரியும். (பெரும்பாலானவர்களுக்கு).  அந்த சுருதியை அறியும் செவி வாய்க்கவில்லை. 


அது போல, பக்தி இன்பம் என்கிறார். 


எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை. 






Thursday, September 9, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் திருமொழி 2 - அடியார் கூட்டு

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் திருமொழி 2 - அடியார் கூட்டு 


நம்மை அறியாமலேயே நாம் நமக்கு செய்து கொள்ளும் நன்மையும் தீமையும் நம்மை சுற்றி உள்ளவர்களை  தேர்ந்து எடுப்பதுதான். 


நம்மை அறியாமலேயே நம்மை சுற்றி உள்ளவர்களின் குணம், அறிவு, பழக்க வழக்கங்கள் நம்மை பிடித்துக் கொள்ளும்.. 


படிக்கிற கூட்டத்தோடு இருந்தால், என்ன படிக்கலாம், அதில் என்ன சொல்லி இருக்கிறது, இதில் எப்படி சொல்லி இருக்கிறது என்றே எண்ணம் போகும்.


இசை அறிந்தவர்கள் கூட்டத்தில் இருந்தால் பாடல்களின் நயம், இசையின் நுணுக்கம் எல்லாம் தெரிய வரும்.


பக்தி வர வேண்டும் என்றால்?


எந்தக் கூட்டத்தோடு சேர வேண்டும்?  அடியவர்கள் கூட்டத்தில் சேர்ந்தால் பக்தி, இறை உணர்வு, ஆன்ம முன்னேற்றம் எல்லாம் வரும். 


குலசேகராழ்வார் சொல்கிறார் 


"பண்புகளில் சிறந்த திருமாலை, நான்முகன் தன்னுடைய நான்கு நாவினாலும், நான்கு முகத்தில் உள்ள எட்டு கண்களோடும் தொழுது, போற்றி நிற்கின்றான். திருமாலின் நாபிக் கமலம் தோன்ற, திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாளை, மலர்கள் இட்டு பக்தி செய்யும் அடிவர்களோடு என்று சேர்ந்து இருப்பேன்"


என்று. 


பாடல் 


எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும் எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு


எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும் தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற செம்பொன்


அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்


அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங் கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/2.html


(Please click the above link to continue reading)


எம்மாண்பின் அயன் = மாண்புமிகு பிரமன் 


நான்கு நாவி னாலும் = நான்கு நாவினாலும் 


எடுத்தேத்தி = போற்றிப் பாடி 


ஈரிரண்டு  = இரண்டு இரண்டு , நான்கு 


முகமுங் கொண்டு = முகத்தில் 


எம்மாடு மெழிற்  = அனைத்துப் பக்கங்களிலும் 


கண்க ளெட்டி னோடும் = க் கண்கள் எட்டினோடும் 


தொழுதேத்தி = தொழுது போற்றி 


யினிதிறைஞ்ச = இனிமையாக வேண்ட 


நின்ற = நின்ற 


செம்பொன் = சிவந்த பொன்னைப் போன்ற 


அம்மான்றன் = அம்மான் தன் 


மலர்க்கமலக் = தாமரை மலர் போன்ற 


கொப்பூழ் தோன்ற = நாபிக் கமலம் தோன்ற 


அணியரங்கத் தரவணையில் = பாம்பை (ஆதி சேஷன் ) படுக்கையாகக் கொண்டு 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொண்டுள்ள 


அம்மான்றன் =அம்மான் தன்


அடியிணைக்கீழ் = திருவடிகழுக்கு கீழே 


அலர்கள்  = மலர்கள் 


இட்டு = தூவி 


அங்கு = அங்கே 


அடியவரோ டென்று = அடியவரோடு என்று 


கொலோ = அசை நிலை 


அணுகும் நாளே = சேரும் நாளே 


நம்ம whatsapp contact லிஸ்டில் பார்த்தால் தெரியும் எத்தனை பேர் உண்மையான ஆன்மீக தாகம் கொண்டவர்கள் என்று. 


நாம் எத்தனை whatsapp குழுவில் உறுப்பினராக இருக்கிறோம் என்று பார்த்தால் தெரியும், நாம் யாருடைய தொடர்பில் இருக்கிறோம் என்று. 


யாருடன் பழகுகிறோமோ, அவர்கள் குணம் தானே நமக்கும் வரும். 


தெரிந்தெடுத்து பழகுங்கள். நல்லதே நடக்கட்டும். 


Thursday, September 2, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் திருமொழி - அலைக் கையால் அடி வருட

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் திருமொழி - அலைக் கையால் அடி வருட 


பெருமாள் திருமொழி என்பது குலசேகர ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட்ட 105 பாடல்களின் தொகுப்பு. 


பக்தி இரசம் சொட்டும் தேனினும் இனிய பாசுரங்கள். 


பெரிய தத்துவங்கள் கிடையாது. வாழ்க்கை நெறி முறை, அறம், நீதி என்றெல்லாம் உபதேசம் கிடையாது. அவருக்கும் பெருமாளுக்கும் இடையில் உள்ள தாகத்தை சொல்லும் பாசுரங்கள். 


சரி, அது, அவர் மேல் கொண்ட காதல் பாடல். அதை அறிந்து நாம் என்ன செய்ய என்று கேட்டால் என்ன சொல்லுவது? எத்தனையோ திரைப்பட பாடல்களை கேட்கிறோம். ஏதோ ஒரு கதாநாயகனும் கதாநாயகியும் தங்கள் காதலை வெளிப்படுத்தும் பாடல்கள். அதை கேட்டு நமக்கு என்ன ஆகப் போகிறது என்று நம் கேட்காமல் இருப்பது இல்லை அல்லவா?


அந்த உணர்சிகள் நம் மனதில் எங்கோ வருடுகிறது. நம் மனத்திலும் அந்த காதலை விதைக்கிறது. அந்த அன்பு என்ற இன்பத்தை தூண்டுகிறது அல்லவா? அது போல


இது போன்ற பக்திப் பாடல்களை கேட்கும் போதோ, வாசிக்கும் போதோ "அடடா, எவ்வளவு ஆழமான காதல், பக்தி " என்று நாம் இரசிக்கும் போது நம்மை அறியாமலேயே அந்த பக்தி நம் மனதில் ஒட்டிக் கொண்டு விடுகிறது. 


நமக்குள்ளும் அந்த ஆர்வத்தை தூண்டுகிறது. 


இங்கே, முதல் பாசுரத்தில்,  திருவரங்கத்தில் உள்ள பெருமாளை நோக்கிப் பாடுகிறார். 


பாசுரத்தை படிக்கும் போது அது சொல்வதை கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டும். 


வாருங்கள், அவர் காட்டும் அந்த அற்புத காட்சியை காணலாம். 


ஒரு இருண்ட அறை. கரு கும்னு இருக்கும் அறை. அந்த அறையில் ஒரு பெரிய பாம்பு. பல தலைகள் உள்ள பாம்பு. அந்த தலைகள் நெளிகின்றன. கூர்ந்து பார்த்தால் தெரிகிறது அந்தப் பாம்பின் மேல் யாரோ படுத்து இருக்கிறார்கள். படுத்து இருப்பது மட்டும் அல்ல, தூங்கவும் செய்கிறார். 


அந்த பாம்பு தலையை நம் பக்கம் திருப்புகிறது. அதன் ஒவ்வொரு தலையிலும் ஒரு நவரத்தின மணி இருக்கிறது. அருகில் உள்ள விளக்கில் இருந்து ஒளி பட்டு அந்த மணிகள் ஜ்வலிகின்றன. அந்த ஒளியில் இருட்டு எங்கோ போய் விட்டது. 


ஒரே வெளிச்சம். சற்று உற்று பார்க்கிறோம். 


அந்த உருவத்தின் காலடியில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஆற்றின் அலைகள் அந்த உருவத்தின் காலை வருடிக் கொண்டு போகிறது. 


இப்போது கண்ணை மூடிக் கொள்ளுங்கள். அந்த காட்சியை மனதில் ஓட விடுங்கள். 


குலசேகர ஆழ்வார் இந்தக் காட்சியை பார்த்து அதில் இலயித்து விட்டார்.அந்த இடத்தை விட்டு போக மனம் இல்லை. 


போய் விட்டால், இந்தக் காட்சியை இனி எப்போது காண்பேனோ என்று தவிக்கிறார். 


பாடல் 


இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த


அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி


திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்


கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_45.html


(Please click the above link to continue reading)


இருளிரியச் = இருளை விரட்டி அடிக்கும் 


சுடர்மணிகள் =  சுடர் விடும் நவ இரத்தின மணிகள் 


இமைக்கும் =  அசையும் 


நெற்றி = நெற்றி. நெற்றியில் உள்ள நவ ஒளி விடும் நவரத்தினங்கள் 


இனத்துத்தி = துத்தி என்றால் புள்ளிகள். சிறந்த புள்ளிகளை உடைய 


அணி = அழகான 


பணமா யிரங்க ளார்ந்த = படங்கள் (பாம்பின் படம்) ஆயிரம் விளங்கும் 


அரவரசப் = பாம்புகளின் அரசன் 


பெருஞ்சோதி = பெரிய ஜோதி 


யனந்த னென்னும் = அனந்த ஆழ்வான் 


அணிவிளங்கு = அழகாக விளங்கும் 


உயர் = உயர்ந்த 


வெள்ளை = வெண்மையான 


அணையை = படுக்கையில் 


மேவி = படுத்து 


திருவரங்கப்  = திருவரங்கம் என்ற 


பெருநகருள் = பெரிய நகரில் 


தெண்ணீர்ப் = தெளிந்த நீர் 


பொன்னி = காவிரி ஆறு 


திரைக்கையா லடிவருடப் = அலை என்ற கையால் அடி வருட 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும் 


கருமணியைக் = கரிய மணியை 


கோமளத்தைக்  = கோமளத்தை 


கண்டு கொண்டு = கண்டு 


என் = என்னுடைய 


கண்ணிணைகள் = கண் இணைகள், இரண்டு கண்களும் 


என்று கொலோ = என்றோ? 


களிக்கும் நாளே = இன்புறும் நாளே 



அதான் பார்த்தாச்சே, அப்புறம் என்ன , "என்று கொலோ களிக்கும் நாளே" என்றால், இப்போது பார்த்து அனுபவித்து ஆகிவிட்டது.  மீண்டும் எப்போது இதை கண்டு களிக்கப் போகிறேன் என்று ஏங்குகிறார். 


அன்புடையவர்களை பிரியும் போது, "ஐயோ திருப்பி எப்போ பார்ப்போமோ" என்று மனம் ஏங்கும் அல்லவா....அது போல. 


கருமணியை, கோமளத்தை என்று கொஞ்சுகிறார். 


பக்தி புரிந்தால், பாசுரமும் புரியும். 

Sunday, June 6, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மறப்பனோ இனி யான்?

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - மறப்பனோ இனி யான்?


ஞானம் எப்படி வரும் ? 


நாம் நிறைய தெரிந்து வைத்து இருக்கிறோம். 


யாரிடம் இருந்து? 


தெரியாதவர்களிடம் இருந்து நாம் தெரிந்து வைத்து இருக்கிறோம். 


நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது நம்மைச் சுற்றி இருக்கும் வயதானவர்கள் சொல்வதை எல்லாம் உண்மை என்று கேட்டு, அப்படியே நம்பி நம் தலையில் ஏற்றிக் கொண்டு இருக்கிறோம். அந்தச் சின்ன வயதில் பெரியவர்கள் பொய் சொல்வார்கள் என்று நமக்குத் தோன்ற வாய்ப்பில்லை. அவர்களும் பொய் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்களுக்குத் தெரிந்ததை, அவர்கள் நம்பியதை நமக்கு உண்மை என்று சொல்லி தந்தார்கள். நாமும் அவற்றை உண்மை என்றே ஏற்றுக் கொண்டு விட்டோம். 



பின்னாளில், புது புது ஞானங்கள் வரும். ஆனால், நாம் நம்பியதை நம்மால் விட முடியாது. இத்தனை நாள் இது உண்மை என்று என்னவெல்லாமோ செய்து விட்டோம். இப்போது அது உண்மை இல்லை என்றால் கொஞ்சம் கோமாளி மாதிரி இருக்கும். எனவே, அதை விடாமல் பற்றிக் கொண்டு இருக்கிறோம். 



புது ஞானங்கள் வர விடுவதே இல்லை. ஐந்து வயதில் கற்றதுதான் ஞானம். அதற்குப் பிறகு எது புதிதாக வந்தாலும், அவற்றை தவறு என்று ஒதுக்கி விட்டு, நாம் ஐந்து வயதில் கற்றதை மட்டும் உண்மையான ஞானம் என்று பிடித்துக் கொள்கிறோம். 



பழசை மறந்தால் அல்லவா, புதிய சிந்தனைகள், ஞானங்கள் உள்ளே வரும்?



சொல்வது நம்மாழ்வார். 



"எனக்கு மறதியும் இல்லை. ஞானமும் இல்லை. ஒரு வேளை நான் மறந்து போவேனோ என்று அஞ்சி அந்த செந்தாமரைக் கண்ணன் எனக்குள்ளேயே வந்து இருந்து கொண்டான். இனிமேல் அவனை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்" என்கிறார். 


பாடல் 


மறப்பும் ஞானமும் நானொன்றும் உணர்ந்திலன்,

மறக்குமென்று செந்தாமரைக் கண்ணொடு,

மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை,

மறப்பனோ இனி யான் என் மணியையே?


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_6.html


(please click the above link to continue reading)



மறப்பும் = மறப்பதையும் 


ஞானமும்  = ஞானத்தையும் 


நானொன்றும் உணர்ந்திலன், = நான் ஒன்றும் உணர மாட்டேன் 


மறக்குமென்று = நான் மறந்து விடுவேன் என்று 


செந்தாமரைக் கண்ணொடு, = செந்தாமரைக் கண்ணன் 


மறப்பற = மறக்காமல் 


என்னுள்ளே = எனக்குள்ளே 


மன்னினான் = நிரந்தரமாக குடியேறி விட்டான் 


தன்னை = அப்படிப்பட்ட அவனை 


மறப்பனோ இனி யான் = இனி நான் மறப்பேனா? மாட்டேன் 


என் மணியையே? = என் கண் மணியை 



இங்கே மறப்பும், ஞானமும் என்று ஒன்றுக்கு ஒன்று எதிர் போல குறிப்பிடுகிறார். 


எனக்கு மறதி இல்லை. அதனால் ஞானம் இல்லை. மறப்பு உணர்ந்திலன் எனவஞானமும் உணர்ந்திலன். 


நமக்கு ஒவ்வொரு நாளும் எவ்வளவோ வேலை. சம்பாதிக்க வேண்டும், சாப்பிட வேண்டும், பொழுது போக்கு அம்சங்கள், அரட்டை, டிவி என்று ஆயிரம் வேலை இருக்கிறது. இதில் இறைவனை நாம் மறந்து போய் விடுகிறோம். 



நமக்குத் தான் ஒரு வேலை செய்தால் மற்றது எல்லாம் மறந்து போகும். இறைவனுக்கு அப்படியா?  



இவனை இப்படியே விட்டால் நம்மை மறந்து விடுவான் என்று, அவனே வந்து நம் மனதுக்குள் நம்மை கேட்காமலேயே குடி புகுந்து விடுகிறான். 



"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" 



என்பார் மணிவாசகர். 



அவர் நினைக்கவில்லை. இறைவனே வந்து அவர் மனதில் நீங்காமல் வந்து இருந்து கொண்டான். 



அவர் நினைப்பதாக இருந்தால் என்ன சொல்லி இருப்பார் ?



"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நான் மறவாதான் தாள் வாழ்க'



என்றல்லவா சொல்லி இருப்பார்.  அவர் நினைக்கவில்லை. அவன் வந்து இருந்து கொண்டு ஒரு இமைப் பொழுதும் வெளியே போக மாட்டேன் என்கிறார். 



நம் உள்ளத்தை, நம்மை கேட்காமலேயே அவன் எடுத்துக் கொள்கிறான். 



"என் உள்ளம் கவர் கள்வன்". 


திருட்டுப் பயல், களவாணிப் பயல் என்கிறார் திருஞான சம்பந்தர். 


கேட்டால் நாம் கொடுப்போமா? ஐயோ, டிவி பாக்கணும், whatsapp பாக்கணும், அதுக்கே நேரம் இல்லை. இருக்கிற ஒரு மனதை உன்னிடம் கொடுத்துவிட்டு நான் என்ன செய்வது என்று தரமாட்டோம். அதனால், அவனே நம் அனுமதி இல்லாமல் திருடிக் கொள்கிறான். 


பக்தி உலகம் ஒரு தனி உலகம். 


அதை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள தனி மன நிலை வேண்டும். 


பெற்றவர்கள் பாக்கியசாலிகள். 



Thursday, May 6, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - தீதில் நன்னெறி

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - தீதில் நன்னெறி 


உலகமே மின் அணு இயலால் சூழப் பட்டு இருக்கிறது. நம்மை அறியாமலேயே இந்த மின் வலை நம்மை சுற்றி பின்னப் பட்டு இருக்கிறது. 


நல்லாரோடு சேர வேண்டும், தீயவர்களை காண்பதும் தீது, தீயவர்களோடு பழகுவதும் தீது, அவர்களைப் பற்றி சிந்திப்பது கூட தீது என்று சொல்லப் பட்டது. 


இப்போதெல்லாம் நாம் தீயவர்களைத் தேடிப் போக வேண்டாம். அவர்கள் நம் வீட்டுக்குள், நாம் அழையாமலேயே வந்து விடுகிறார்கள். தீயவற்றை நம் மனதில், நம் மூளையில் விதைத்து விட்டுச் செல்கிறார்கள். 


டிவி. எங்கோ நடக்கும் தீய செயல்கள் எல்லாம் நம் வீட்டில் கொண்டு வந்து கொட்டுகிறது. விலாவாரியாக, நொடிக்கு நொடி அந்த தீய செயல்களை நம் வீட்டில் அரங்கேற்றிக் காட்டுகிறது. எங்கோ வெடித்த வெடி, நம் வீட்டு ஹாலில் நடக்கிறது. எங்கோ நடந்த கொலை, நம் கண் முன் அரங்கேறுகிறது.  அத்தனை குப்பைகளையும் வாரிக் கொண்டு வந்து நம் வீட்டில் கொட்டி விட்டுப் போகிறது. நம்மை அறியாமலேயே அவற்றை நாம் உள் வாங்குகிறோம்.


whatsapp. எத்தனையோ குழுக்களில் நாம் உறுப்பினராக இருப்போம். அறிவிலிகள், எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள், அறிவியல் கண்ணோட்டம் இல்லாதவர்கள், மூட நம்பிக்கை மலிந்தவர்கள், மற்றவர்கள் மேல் பொறாமையும், வெறுப்பும் கொண்டவர்கள் இருப்பார்கள். அவர்கள் நாளும் தங்கள் எண்ணங்களை இந்த குழுக்களில் பகிர்ந்து கொண்டே இருப்பார்கள். அவற்றை படித்து படித்து நம் மனத்திலும் அந்த களங்கத்தின் சுவடுகள் படியத் தொடங்கும். 


கணணி (computer), மடிக் கணணி (laptop) இவற்றின் மூலம் நம்மிடம் வந்து சேரும் வக்கிரங்கள் கணக்கில் அடங்காதவை. 


தீயவர்களின் எண்ணங்கள், நாம் கேட்காமலேயே வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது நம் வீட்டில், நம் உள்ளங் கையில், நம் மடியில். சுவாசிக்கும் காற்று தூய்மையாக இல்லாவிட்டால், நாம் அந்த நச்சுக் காற்றை சுவாசிப்போம். நாம் விருபுகிறோமோ இல்லையோ, அந்த நசுக் காற்று நம் உடலை பாதிக்கும். அது போல இந்த நஞ்சுகள் நம் மனதை பாதிக்கும். 


இவர்களை விட்டு விலகி நிற்கிறேன். உன் பற்றே பற்று என்கிறார் ஆண்டவனிடம் குலசேகர ஆழ்வார். 


பாடல் 


தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்

நீதி யாரொடும் கூடுவ தில்லையான்

ஆதி ஆய னரங்கன்அந் தாமரைப்

பேதை மாமண வாளன்றன் பித்தனே


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_6.html


(please click the above link to continue reading)



தீதில் = தீமை இல்லாத 


நன்னெறி = நல்ல வழிகளில் 


நிற்க அல்லாது = நிற்க முடியாமல் 


செய் நீதி யாரொடும் = நல்ல வழியில் நிற்க முடியாமல் தீய வழியில் செல்கின்ற அவர்களோடு 


கூடுவ தில்லையான் = சேர்வது இல்லை யான் 


ஆதி = முதல், தொடக்கம்  


ஆய = ஆன 


அரங்கன் = திருவரங்கன் 

அந் தாமரைப் = தாமரை மலரில் வசிக்கும் 


பேதை = பெண் (திருமகள்) 


மாமண வாளன்றன் = பெரிய, சிறந்த மணவாளன் (திருமால்) 


பித்தனே = அவனுக்கு நான் பித்தனே. அவன் மேல் பைத்தியமாக இருக்கிறேன் 


தீயவற்றை விட்டால்தான் நல்லவற்றைப் பற்ற முடியும். 


நாளும் தீமைகளோடு பழகி, அதில் ஒரு ஆர்வமும், உருசியும் வந்து விடுகிறது. பின், அது தீமை என்று கூட நமக்குத் தெரிவதில்லை. 


தேவையல்லாத குழுக்களில் இருந்து விலகுங்கள்.


தேவை இல்லாத குப்பைகளை டிவியில் பார்க்காதீர்கள். 


கணனியில் நல்லவற்றை பாருங்கள். கேளுங்கள்.


தீயவை விலக, நல்லவை தானே வந்து சேரும். 


வாழ்த்துக்கள். 


Friday, April 23, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - சேறு செய் தொண்டர் சேவடி

நாலாயிர திவ்ய பிரபந்தம்  - சேறு செய் தொண்டர் சேவடி


பக்தி உலகம்.  அது ஒரு தனி உலகம்.  


இப்படி இருக்குமா? இப்படி கூட நடக்க முடியுமா? இது சாத்தியம் தானா? எப்படி அவர்களால் இப்படி உருக முடிகிறது என்று நம்மை வியக்க வைக்கும் உலகம். 


திருவரங்கத்தில் உள்ள பெருமாளின் அவதார லீலைகளை அவனுடைய பக்தர்கள் நினைத்துப் பார்க்கிறார்கள். அவர்களுடைய கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொன்னி ஆறு போல பாய்கிறது. அது நிலத்தில் விழுந்து, கோயில் முற்றத்தை எல்லாம் ஈரமாக்குகிறது. அப்புறம் வேறு சில பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் நிலையம் அதே தான். ஈரமான நிலத்தில் இன்னும் நீர் ஓடி அது சேறாகிறது. பின் கொஞ்சம் காய்கிறது. முழுவதும் காய்வதற்குள் அடுத்த குழு வருகிறது. நிலம் மீண்டும் சேறாகிறது. 


குலசேகர ஆழ்வார் சொல்கிறார், அந்த சேற்றை அள்ளி என் தலையில் ஒரு அணிகலனைப் போல அணிந்து கொள்வேன் என்கிறார். 


பாடல் 


ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் கீண்டதும்முன்னி ராமனாய்

மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே

ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட ரங்கன்கோயில் திருமுற்றம்

சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ் சேறெஞ்சென்னிக் கணிவனே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_23.html


(Please click the above link to continue reading)


ஏறடர்த்ததும் = ஏறுகளை சண்டையிட்டு அடக்கியதும் 


ஏனமாய் = பன்றியாய் 


நிலம் கீண்டதும் = நிலத்தைக் பிளந்ததும் 


முன்னி ராமனாய் = முன்பு இராமனாய் 


மாறடர்த்ததும்  = அரக்கர்களுடன் போர் செய்ததும் 


மண்ணளந்ததும் = வாமனனாய் உலகை அளந்ததும் 


சொல்லிப்  = சொல்லி 


பாடி = பாடி 


வண் = பெருமை உடைய 


பொன்னிப் = பொன்னி 


பே ராறு = பெரிய ஆறு 


போல் வரும் = போல வரும் 


கண்ணநீர்  =கண்களில் இருந்து சொரியும் நீர் 


கொண்ட  = கொண்ட 


ரங்கன் கோயில் திருமுற்றம் = திருவரங்க நாதர் கோவில் முற்றம் 


சேறு செய் = சேறாகும் படி செய்த 


தொண்டர் = தொண்டர்களின் 


சேவடிச் = சிவந்த அடிகளின் 


செழுஞ் சேறெஞ்சென்னிக்  கணிவனே = செழுமையான சேற்றை என் தலையில் அணிந்து கொள்வேனே 



அந்தக் காட்சியை மனக் கண்ணின் முன்னால் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் பாட்டின் அர்த்தத்தை உணர முடியும். 



Thursday, April 22, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வேட்கை என்னாவதே ?

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - வேட்கை என்னாவதே ?


திருவரங்கத்துக்குப் போகணும், திருப்பதிக்குப் போகணும், காசிக்குப் போகணும் என்று எங்கும் நிறைந்த இறைவனை ஏதோ ஒரு இடத்தில் சென்றுதான் தரிசிக்க வேண்டும் என்று சிலர் நினைக்கல்லாம். 


எங்கேயும் போக வேண்டியது இல்லை. இருந்த இடத்திலேயே, அவனை மனதில் நினைத்து வழிபட்டால் போதும் என்கிறார் குலசேகர ஆழ்வார். 


"விரிந்த இதழ்களை உடைய மலரில் வாசம் செய்யும் ததிருமகளின் தோள்களை அணைத்துக் கொண்டதும், அம்பால் ஏழு மரா மரங்களை துளைத்ததும், ஆடு மாடு மேய்த்ததும் , இவற்றையெல்லாம் நினைத்து, ஆடிப் பாடி, "அரங்கா" என்று அழைக்கும் தொண்டர்களின் பாதத்தில் இருந்து பறக்கும் பாதத் துளிகள் மேலே படும் பாக்கியம் பெற்றால், கங்கை சென்று நீராட வேண்டும் என்ற எண்ணம் என்னாவது?"


பாடல் 


தோடுலாமலர் மங்கைதோளிணை தோய்ந்ததும்சுடர் வாளியால்

நீடுமாமரம் செற்றதும்நிரை மேய்த்துமிவை யேநினைந்து

ஆடிப்பாடி அரங்கவோஎன்ற ழைக்கும்தொண்ட ரடிப்பொடி

ஆடனாம்பெறில் கங்கைநீர்குடைந் தாடும்வேட்கையென் னாவதே


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_11.html

(click the above link to continue reading)



தோடுலாமலர் = இதழ் விரிந்த மலர்கள் 


மங்கை = அதில் வாசம் செய்யும் திருமகளின் 


தோளிணை = தோள்களை 


தோய்ந்ததும் = அணைத்துக் கொண்டதும் 


சுடர் வாளியால் = ஒளி வீசும் அம்புகளால் 


நீடுமாமரம் = பெரிய மரா மரங்களை 


செற்றதும் = துளைத்ததுவும் 


நிரை மேய்த்தும் = பசுக்களை மேய்த்ததும் 


இவையே நினைந்து = இவற்றை மட்டுமே நினைத்து 


ஆடிப்பாடி = ஆடிப் பாடி 


அரங்கவோ = அரங்காவோ 


என்ற ழைக்கும் = என்று அழைக்கும் 


தொண்ட ரடிப்பொடி = தொண்டர்களின் பாதம் பட்டு தெறிக்கும் தூசு 


ஆடனாம்பெறில் = அதில் ஆடப் பெற்றால் 


கங்கை நீர் = கங்கை ஆற்றிலே 


குடைந் தாடும் = குதித்து விளையாடும் 


வேட்கை = ஆசை 


யென் னாவதே = என்னாகும் ?


அடியவர்களின் பாதத் துளிகள் கங்கை ஆற்றை விட புனிதமானது என்பது பொருள்.


எங்கேயும் போகத் தேவையில்லை. அவனை மனதால் நினைத்தால் போதும் என்பதும் பெற்றாம். 


ஆச்சரியமான விஷயம் என்ன என்றால், கவிதை நடை. 


"அப்படி எல்லாம் இருந்தால், அந்த கங்கை போற எண்ணம் என்னாகும்?" என்று நம்மை பார்த்து நேரில் கேட்பது போன்ற ஒரு நடை, பாவனை. 


"இதெல்லாம் இருக்கும் போது, அங்க எதுக்கு போக நினைக்கிற" என்று நம்மைப் பார்த்து கேட்பது போன்ற நடை சற்று வித்தியாசமானது. 


திருமகள் மேல் காதல் 

மரம் துளைத்த வீரம் 

பசுக்களுக்கும் இரங்கும் கருணை 


வேறென்ன வேண்டும்?


நான் மீண்டும் மீண்டும் சொல்வது போல, நாலாயிர திவ்ய பிரபந்தம் படிப்பது என்பது ஒரு அனுபவம்.  உங்களுக்கும், அந்த பாசுரத்துக்கும் உள்ள நேரடித் தொடர்புதான் அந்த அனுபவம். 


வார்த்தைகள், இலக்கணம், போன்றவற்றை விட்டு விட்டு நேரடியான அனுபவம் இருந்தால், அதன் சுகமே தனி. 


அதை என்னென்று சொல்லி விளங்க வைப்பது ?