Friday, April 22, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - தாங்க முடிந்தால் தாங்கு

நாலாயிர திவ்ய பிரபந்தம் -  தாங்க முடிந்தால் தாங்கு 


ஆழமாக காதலிப்பவர்களுக்கு, ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து இருக்க முடியாது. கொஞ்ச நேரம் பிரிவது என்றால் கூட பெரிய துன்பமாக இருக்கும். எப்பாட மீண்டும் பிரிந்த காதலரை பார்ப்போம், பேசுவோம் என்று இருக்கும். 


பிரிவின் தவிப்பு, காதலின் ஆழத்தைப் பொறுத்தது. 


இறைவன் மேல் ஆழ்ந்த அன்பு கொண்டு விட்டாலும் அப்படித்தான் என்கிறார் நம்மாழ்வார். 


அவர் தன் நெஞ்சைப் பார்த்துக் கூறுகிறார்...


"எப்படித்தான் அவனை விட்டு உன்னால் பிரிந்து இருக்க முடிகிறதோ. அவனைப் பார்க்காமல், அவன் திருவடியில் பூ தூவாமல், தலை தாழ்த்தி வணங்காமல், கை கூப்பித் தொழாமல் எப்படித்தான் நீ இருக்கிறாயோ என் நெஞ்சே. அவன் அவன் எங்கே என்று தேடாமல் உன்னால் இருக்க முடியும் என்றால் இரு. என்னால் முடியாது" 


என்கிறார். 


வசீகரமான பாசுரம். 


பாடல் 


வாழ்த்தி அவனடியைய்ப் பூப்பு னைந்து, நிந்தலையைத்

தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி,

எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே,

தங்கத்தா னாமேலும் தங்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_22.html



(Pl click the above link to continue reading)





வாழ்த்தி = வாயால் அவனை வாழ்த்தி 


அவனடியைய்ப் = அவன் திருவடிகளை 


பூப்பு னைந்து = பூக்களால் நிறைத்து 


நிந்தலையைத் = உன்னுடைய தலையை 


தாழ்த்தி = தாழ்த்தி 


இருகை = இரண்டு கைகளையும் 


கூப்பென்றால் கூப்பாது = கூப்பு என்றால் கூப்பாது 


பாழ்த்தவிதி, = பாழாய் போன விதி 


எங்குற்றாய் = எங்கு சென்றாய் 


என்றவனை  = என்று அவனை 


ஏத்தாதென் னெஞ்சமே, = போற்றாத என் நெஞ்சே 


தங்கத்தா னாம்  = தங்கத் தான் ஆம். தங்க முடியும் என்றால் 


மேலும் தங்கு. = மேலும் தாங்கிக் கொள் 


இதுவரை எப்படியோ இறைவனை தேடாமல் இங்கே தங்கி விட்டாய். இனிமேலும் அப்படியே தங்க முடியும் என்றால் நீ தங்கிக் கொள். என்னால் ஆகாது என்கிறார். 


பூ போட்டு, கை கூப்பி, தலை வணங்குவது என்ன பெரிய கடினமான செயலா? அது என்ன நெருப்புக்கு நடுவில் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்வது போல கடினமான செயலா? 


இல்லை. இருந்தும் செய்வது இல்லை. ஏன் என்று ஆழ்வார் யோசிக்கிறார். 


காரணம் கண்டு பிடித்துவிட்டார். 


எல்லாம் விதி. 


விதி நல்லதின் பக்கம் போகாமல் தீயதின் பக்கம் நம்மைத் தள்ளுகிறது. 


அதாவது போகட்டும். இறைவனைத் தொழவில்லை. 


இறைவன் நமக்கு எவ்வளவு நன்மைகள் செய்து இருக்கிறான். நம் மேல் எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறான். அப்படிப்பட்டவனை எங்கே எங்கே என்று தேட வேண்டாமா? அந்த ஆர்வம் கூடவா இல்லாமல் போய் விடும்? 


இப்படியே எத்தனை காலம் போவது? இறைவன் யார், அவன் எங்கே இருக்கிறான், எப்படி அவனை அடைவது என்ற ஒரு தேடல் கூட இல்லாமல் எப்படித்தான் இருக்க முடிகிறதோ என்று வியக்கிறார். ஆழ்வார். 


".இப்படியே இருக்கிறதுனா இருந்திட்டுப் போ ..." என்று மனதை கடிந்து கொள்கிறார். 


அருமையான பாசுரம். 


ஏறத்தாழ நாலாயிரம் பாசுரம்.  என்று அனைத்தையும் படித்து முடிப்பது? 


No comments:

Post a Comment