Wednesday, October 5, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 7

      

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 7 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நிரந்தரமானவை, தோற்றமும், முடிவும் இல்லாதவை, இதில் பதியும், பசுவும் உயிர் பொருள்கள், அறிவு உள்ளவை, பாசம் என்பது உயிர் அற்றது, அறிவும் அற்றது என்று பார்த்தோம். 


ஆணவத்தின் காரணமாக பசு, பதியைப் பற்றாமல் பாசத்தில் அகப்பட்டுக் கொள்கிறது என்றும், அந்த அஞ்ஞான இருளில் அது தவித்து வெளி வர நினைக்கும், அந்த எண்ணமும், முயற்சியும்தான் மூல கன்மம் என்று வழங்கப் படுகிறது என்றும் சிந்தித்தோம். 


அப்படி வெளிவர நினைத்து தவிக்கும் உயிர்களுக்கு இரங்கி இறைவன் தன் நிலையில் இருந்து கீழிறங்கி வரும் முதல் ஐந்து நிலைகளான சிவ தத்துவத்தைப் பார்த்தோம். அவையாவன 


1. நாதம் , 2. விந்து .  3. சதாக்கியம்,  4. ஈஸ்வரம்,  5. சுத்த வித்தை.


அதை அடுத்து, இறைவன் உயிர்களை செயப்பட ஆயதம் செய்வான்.  அவை முறையே 

6. காலம்,  7. நியதி, 8. கலை, 9. வித்தை , 10. இராகம்/அராகம் , 11. மாயை 12 . புருடன் 


(இதில் மாயை என்ற தத்துவம் விடுபட்டு போய் விட்டது. மன்னிக்க.).


முதல் 5 தத்துவங்கள் சிவ தத்துவங்கள் என்றும் அடுத்த 7  தத்துவங்கள் வித்யா தத்துவங்கள் என்றும்  அழைக்கப்படுகின்றன. 


 13  சித்தம்; 14 அகங்காரம் ; 15. புத்தி;  16  மனம் 


இந்த சித்தம், அகங்காரம், புத்தி, மனம் என்ற நான்கு கரணங்களும் அந்தக் கரணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

எனவே, 16  தத்துவங்கள் பார்த்து விட்டோம். 


இறைவன் இறங்கி வந்தாகிவிட்டது, உயிர்கள் செயல்பட தயார், அவை செயல்பட அந்தக் கரணங்கள் வந்து விட்டன. 


இன்னும் 2௦ தத்துவங்கள் பாக்கி இருக்கின்றன. 


உயிர்கள் செயல்பட தணு  - கரண - புவன - போகங்கள் வேண்டும் என்று பார்த்தோம். அதன் விரிவை இங்கே காண இருக்கிறோம்.



உயிர்கள் செயல் பட புவனம், அதாவது இடம் வேண்டும். இடம் என்றால் சூழ்நிலை. வெறும் தரை மட்டும் போதாது. 


எனவே இறைவன் ஐந்து பூதங்களைப் படைக்கிறான். அவை மாபூதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 


17. ஆகாயம்;  18. தீ;   19. நீர்  20. காற்று;  21 நிலம் 


என்று ஐந்து தத்துவங்களாகப் பிரிகின்றன. 


இந்த பூதங்கள இருந்தாலும், இந்தப் பூதங்களை உணரும் புலன்கள் வேண்டும் அல்லவா?


இந்த ஐந்து பூதங்களையும் அறிந்து கொள்ள ஐந்து புலன்களைத் படைக்கிறான் இறைவன். அவை ஞான இந்திரியங்கள் (ஞானேந்திரியம்) என்று அழைக்கப் படுகின்றன. 


22. மெய்   23  வாய்   24 மூக்கு   25 செவி   26 கண்   


ஐந்து பூதங்கள் ஒரு புறம்; ஐந்து புலன்கள் ஒரு புறம். இந்த இரண்டையும் எப்படி இணைப்பது? எது இணைக்கும்? 


அதற்கு அடுத்த பத்து தத்துவங்கள் வருகின்றன 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html

(pl click the above link to continue reading)



27. சுவை  28. ஒளி  29 ஊறு  30 ஓசை  31 நாற்றம் 


என்ற இந்த ஐந்தும் தன்மாத்திரைகள் என்று அழைக்கப் படுகின்றன.  


இவை இருந்தால் மட்டும் போதாது, உடல் இருக்கிறது, அதில் அவயங்கள் இருக்கின்றன, அந்த அவயங்கள் (புலன்கள்) அறியும் அறிவு இருக்கிறது. இருந்தாலும் உயிர்கள் இயங்க முடியாது. 


வாய் இருக்கிறது. நீர் இருக்கிறது. அந்த நீர் எப்படி வாய்க்குள் போகும்? நீர் இங்கே வர வேண்டும் அல்லது உடம்பு அங்கே போக வேண்டும்.  நீர் வராது. உடம்புதான் போக வேண்டும். எப்படி போகும்? அது நடந்து போக வேண்டும்.  போனால் மட்டும் போதுமா? தண்ணீருக்கு அருகில் சென்றால் போதுமா? அதை எடுத்து வாயில் ஊற்ற வேண்டாமா?  சரி, ஊற்றினால் போதுமா? முதலில் ஊற்றிய நீர் வெளியேற வேண்டாமா? ஊற்றிக் கொண்டே இருக்க முடியுமா?


இந்த சிக்கலை விடுவிப்பது அடுத்து வரும் ஐந்து கன்மேந்திரியங்கள் 


அவை:


32 - கை, பற்றுதல், பாணி 


33 - கால், பதித்தல், பாதம் 


 34. பிறப்பு உறுப்புகள் - உபத்தம் 


35.  நாக்கு - பேசுதல் - பலுக்கல் - வாக்கு 


36. கழிவை வெளியேற்றும் உறுப்புகள் - கழித்தல், பாயு 


பாணி, பாதம், உபத்தம்,, வாக்கு, பாயு  என்பன. 


இனி, இவை ஒன்றோடு ஒன்று எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்று பார்ப்போம். 


உதாரணமாக 


பஞ்ச மாபூதங்களில் உள்ள - நீர் 


ஞானேந்திரியத்தில் - வாய் 


தன்மாதிரையில் - சுவை 


இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை. 


சுவை அறிய வேண்டும் என்றால் நீர் வேண்டும். எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும், வாயில் உமிழ் நீர் இல்லாவிட்டால் சுவை தெரியாது. 


நாலைந்து நாள் காய்ச்சலில் கிடந்து, நாக்கெல்லாம் உலர்ந்து போய் கிடக்கும் ஒருவனிடம் ஒரு இலட்டை கொடுத்துப் பாருங்கள்.  "வேண்டாம், வாயெல்லாம் கசக்குது" என்பான்.   ஏன், வாயில் நீர் இல்லை. உலர்ந்து போய் விட்டது. 


சுவை அறிய வேண்டும் என்றுதான் இறைவன் நாவை எந்நேரமும் ஈரமாக வைத்து இருக்கிறான். வாயில் போட்டது கரைய வேண்டும். 


அது போல, 


நிலம் - மூக்கு - நாற்றம் (மணம், வாசம்). 


ஐந்து பூதங்களில் நிலத்தைத் தவிர மற்றதற்கு வாசம் கிடையாது.  மண்ணுக்குத் தான் வாசம் உண்டு. மண் வாசனை என்று சொல்கிறோம் அல்லவா?


ஆகாயம் - செவி - ஓசை 


ஓசை வர வேண்டும் என்றால் வெளி வேண்டும்.பொருள்கள் அசைய வேண்டும். அதிர வேண்டும். பொருள்கள் அசையும் போது காற்று அசைந்து, அது காதில் வந்து மோதும் போது ஓசையாகக் கேட்கிறது. 


தீ - கண் - ஒளி 


கண் காண வேண்டும் என்றால் வெளிச்சம் வேண்டும். இருட்டுக்குள் ஒன்றும் தெரியாது. ஒளி என்றால் வெப்பம். தீ.  எந்த விளக்கைப் போட்டாலும் அது சூடு ஏறும். 


காற்று - மெய் - ஊறு (தொடு உணர்ச்சி). 


காற்று இருந்தால்தான் தோலில் தொடு உணர்ச்சி இருக்கும். 


சிவ தத்துவம் ஐந்து  (5)

வித்யா தத்துவம் ஆறு  (6, 5+6 = 11)

அந்தக் கரணங்கள் ஐந்து (5, 11+5 = 16)

பூதங்கள் ஐந்து  (5, 16 + 5 = 21)

தன்மாத்திரை ஐந்து  (5, 21 + 5 = 26)

ஞானேந்திரியங்கள் ஐந்து  (5, 26 + 5 = 31)

கன்மேந்திரியங்கள் ஐந்து (5, 31 + 5 = 36).


ஆக மொத்தம் 36 தத்துவங்கள். இது சைவ சமயத்தின் அடிப்படை. 


இந்த 36 தத்துவங்களும் இரண்டு விதமான மாயையில் இருந்து தோன்றுகின்றன. 


சுத்த மாயை, அசுத்த மாயை என்று இரண்டு பிரிவுகள். அதை முன்னமேயே பார்த்தோம் (குன்றி மணி,  வெளி ).


இந்த இரண்டு மாயைகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 


இனி, கந்தர் அனுபூதிக்குள் செல்வோம். 






[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html



]




Monday, October 3, 2022

திருக்குறள் - நாணுபவர்

  

 திருக்குறள் -  நாணுபவர்


மக்கள் ஏன் தவறு செய்யாமால் இருக்கிறார்கள்?


முதலில், தவறு செய்தால் சட்டம் தண்டிக்கும் என்ற பயம்.  காவலர்கள் பிடித்துச் சென்று விடுவார்கள். சிறையில் போடுவார்கள்.தண்டனை கிடைக்கும் என்ற பயம்.  இது மிக அடிப்படையான ஒன்று. சட்டத்துக்கு பயந்து தவறு செய்யாமல் இருப்பது. 


இரண்டாவது, நியாயம் தர்மத்துக்கு கட்டுப்பட்டவர்கள் தவறு செய்ய மாட்டார்கள்.  இது தர்மம் அல்ல, அறம் அல்ல. சரி அல்ல என்று நினைத்து தவறான ஒன்றைச் செய்யாமல் இருப்பது. பல சமயங்களில் சட்டம் ஒன்றும் சொல்லாது. ஒரு செயலை தண்டிக்க சட்டப் பிரிவு இருக்காது. சட்டத்தில் உள்ள ஓட்டைகள் என்பார்கள். Loophole. அப்படி வழி இருந்தும், தவறு செய்யாமல் இருப்பது.  பழி பாவத்துக்கு அஞ்சி,தெய்வத்துக்கு பயந்து செய்யாமல் இருப்பது.  இது ஒரு படி மேலே.  


உதாரணமாக மாமிசம் உண்பது. மாமிசம் உண்டால் சட்டம் தண்டிக்காது.  இருந்தும், உயிர் கொலை பாவம் என்று எண்ணி மாமிசம் சாப்பிடாமல் இருப்பது. இதிலும் ஒரு படி மேலே போய் பால் , தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றைக் கூட சிலர் சாப்பிடமாட்டார்கள்.  கன்றுக் குட்டிக்கு உள்ள பாலை நாம் எடுத்துக் கொண்டால், கன்று என்ன செய்யும் என்று நினைத்து அவற்றை ஒதுக்கி விடுவார்கள். 


இதில் கூட பாவம்,  புண்ணியம். சுவர்க்கம் நரகம் என்ற ஆசை, பயம் எல்லாம் உண்டு. 


இதற்கு மேலே ஒரு படி போய் வள்ளுவர் இன்னொரு பாதையைக் காட்டுகிறார். 


தவறு செய்ய நாணுவது.  வெட்கப் படுவது. 


சட்டம், நீதி, நேர்மை, பழி, பாவம், புண்ணியம் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். 


சிலருக்கு, அறம் அல்லாத செயல்களை செய்ய வெட்கம் வருமாம். 


மனைவியை கட்டி அணைப்பது, முத்தம் கொடுப்பது ஒன்றும் சட்ட விரோதம் அல்ல. அதில் பாவம் ஒன்றும் இல்லை. சாத்திரங்களும், தர்மங்களும் அனுமதிக்கிறது. இருந்தும்,  பொது இடத்தில் யாராவது மனைவியை கட்டி அணைத்து முத்தம் தருவார்களா? மாட்டார்கள். ஏன்? நாணம், வெட்கம். 


செய்ய அனுமதித்தாலும், செய்வது குற்றம் அல்ல என்றாலும், செய்ய முடியாது.  


"தனக்கு ஒரு பலன் கிடைக்கிறது என்று எண்ணி, பழி தரும் செயல்களை செய்ய மாட்டார்கள், நடு நிலைமையில் இருந்து விலக நாணம் கொண்டவர்கள்" 


பாடல் 


படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


(Please click the above link to continue reading)


படுபயன் = பெரிய பயன், நன்மை 


வெஃகிப் = ஆசைப் பட்டு 


பழிப்படுவ = பழிதரும் செயல்களை 


செய்யார் = செய்ய மாட்டார்கள் 


நடுவன்மை = நடுவு + அன்மை = நடுவு நிலையில் இருந்து  விலகி இருப்பதற்கு 


நாணு பவர் = நாணம் கொள்பவர்கள் 


தொலைக் காட்சியில் பார்க்கிறோம். பெரிய பதவியில் உள்ளவர்களை கைது செய்து அழைத்துக் கொண்டு செல்லும் போது, சிரித்துக் கொண்டே கை அசைக்கிறார்கள். கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல். 


சாதாரண திருடன் கூட முகத்தை மறைத்துக் கொள்கிறான், துணியால் முகத்தை மூடிக் கொள்கிறான், காமிராவை கையால் மறைக்கிறான், தலை குனிந்து முகம் காட்ட மறுக்கிறான். 


"நான் எப்படி இதைச் செய்வேன்...என்னால் முடியவே முடியாது" என்ற நாணம் வர வேண்டும். 


நாணம் தரும் செயலைச் செய்யும் போது உடல் கூசும், கூனி குறுகிவிடும். 


மாவலி சக்ரவர்த்தியிடம் ஏமாற்றி மூன்று அடி நிலம் யாசகம் கேட்க வந்த போது உலகளந்த பெருமாள் கூட கூனி குறுகி மூன்றடி உள்ள வாமனனாக வந்தார் என்று சொல்லுவார்கள். 


நடுவன்மை அஞ்சுபவர்/வேண்டாதவர்/பழிப்பவர் என்று சொல்லி இருக்கலாம். 


"நாணுபவர்" என்று சொல்கிறார். 


நாணம் என்ற உணர்ச்சி கொஞ்சம் தேய்ந்து போய்க் கொண்டிருக்கிறது. எதெல்லாம் ஒரு காலத்தில் மறைவாக செய்யக் கூட நாணம் கொண்டார்களோ, அவற்றை எல்லாம் பொது வெளியில் கூச்சம் இல்லாமல் செய்கிறார்கள். கால ஓட்டத்தின் மாற்றங்கள். 


இருந்தும் அந்த உணர்ச்சி முற்றும் மறைந்து விடவில்லை. 


பழிச் செயல் செய்ய நாணம் அடைவது என்பது ஒரு புதிய சிந்தனை. 


சிந்திப்போம். 


[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html

]


Thursday, September 29, 2022

திருவாசகம் - திரு அம்மானை - பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1

        

திருவாசகம் - திரு அம்மானை  -   பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1 



திருவாசகத்தில் உள்ள அத்தனை பாடல்களும் உள்ளத்தை உருக்குபவைதான் என்றாலும், சில பாடல்கள் ஒரு முறை படித்தவுடனேயே நாக்கில் ஒட்டிக் கொண்டு சொல்லும் போதெல்லாம் ஏதோ செய்யும். 



அப்படிப்பட்ட பாடல்களில் இன்று நாம் காண இருக்கும் பாடலும் ஒன்று. 


பாடலுக்கு முன்னுரை சொல்வதைவிட நேரடியாக பாடலையே வாசித்து விடலாம். 


பாடல் 



பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,
கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை
மண் சுமந்த கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண்; அம்மானாய்!



பண்கள் அமைந்த பாடல்களால் தன்னை துதிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டும் பரிசுகளை தந்து அருள் செய்பவன். பெண்ணை பாகமாகக் கொண்டவன். பெரியவன். திருபெருந்துறையில் உறைபவன். வானாளாவிய புகழ் கொண்டவன். நெற்றிக் கண் உடையவன். மதுரையில் மண் சுமந்து, பாண்டிய மன்னனால் அடிபட்டு உடம்பில் புண் கொண்டவன். பொன் போன்ற நிறத்தை உடையவன். 


இப்படி எல்லாம் பொருள் சொன்னால் அது திருவாசகத்துக்கு செய்யும் தீமை ஆகும். 


எப்படிச் சொல்வது? எப்படிச் சொல்வது?


பாண்டிய மன்னன் பொருள் கொடுத்து குதிரை வாங்கி வரும்படி மாணிக்கவாசகரிடம் சொன்னான். அவரோ, குதிரை வாங்காமால் அந்தப் பணத்தில் கோயில் கட்டிவிட்டார். சினம் கொண்ட பாண்டியன் அவரை சிறையில் போட்டு விட்டான்.  பின் சிவனே குதிரை கொண்டு வந்து கொடுத்தார். பாண்டியன் மணிவாசகரை விடுவித்தான். ஆனால், சிவன் கொண்டு வந்த குதிரைகள் எல்லாம் நரிகளாகி ஓடிவிட்டன. இதனால் கோபம் கொண்ட பாண்டியன், மணிவாசகரை மீண்டும் பிடித்து வந்து வைகை ஆற்றில், சுடு மணலில் நிற்க வைத்தான். சிவன் வைகையில் வெள்ளம் வரச் செய்தார். வெள்ளம் கரையை உடைத்து கொண்டு ஊருக்குள் வந்து விடும் போல் இருந்தது. வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்பி கரையை உறுதிச் செய்ய பாண்டியன் உத்தரவு போட்டான். 

மதுரையில் வந்தி என்ற பிட்டு விக்கும் கிழவிக்கு யாரும் இல்லை. அவளாலும் வேலை செய்ய முடியாது. சிவன், கூலி ஆள் போல் வந்து, வந்தியிடம் "உனக்கு பதில் நான் போகிறேன், கூலிக்கு பதில் உதிர்ந்த புட்டுகளை தா" என்று வாங்கிக் கொண்டு சென்றார். போன ஆள் வேலை செய்யாமால் தூங்கிக் கொண்டு இருக்கவே, அது கண்டு பாண்டியன் வந்திருக்கும் கூலித் தொழிலாளி சிவன் என்று அறியாமல் அவர் முதுகில் பிரம்பால் அடித்தான். 


அதுவரை கதை. 


எல்லோரும் அறிந்தது. 



அது ஒரு புறம் இருக்கட்டும். 



(pl click the above link to continue reading)



சில சமயம் வீட்டில் சின்னப் பிள்ளை தவழ்ந்து தவழ்ந்து சென்று அருகில் உள்ள அடுப்பில் கை வைக்க போய் விடும், அல்லது fan ஐ இழுத்து விடப் போகும்....அதைக் கண்டு பதறிப் போய் தாய் ஓடி வந்து பிள்ளையை சட்டென்று இழுத்து "ஒரு இடத்துல இருக்க மாட்டியா" என்று பதற்றத்தில் ஒரு அடி போட்டு விடுவாள். அவளுக்கு ஆதங்கம். பிள்ளை ஆபத்தில் மாட்டிவிடுவானே என்ற பயம். 


கொஞ்ச நேரம் கழித்து பதற்றம் எல்லாம் தணிந்த பின், பிள்ளை அது பாட்டுக்கு தூங்கும். அம்மா அருகில் சென்று பார்ப்பாள். முதுகில் அவள் கை பட்டு அடித்தஇடம் சிவந்து இருக்கும். அவளுக்குத் தாங்காது. அதை மெல்ல தடவிக் கொடுப்பாள்.பெரிய அடி ஒன்றும் இல்லை. பிள்ளை அதை மறந்து தூங்கிக் கொண்டு இருக்கும்.



ஆனால், அவள் மனம் தாங்காது. 


பிள்ளைக்கு ஒரு சின்ன துன்பம் என்றாலும் அவளால் பொறுக்க முடியாது. 


அவ்வளவு அன்பு. பாசம். காதல். 


சிவன் முதுகில் பாண்டியன் ஒரு அடிதான் அடித்தான். அதில் ஒன்றும் பெரிதாக புண் வந்திருக்காது. இருந்தும் மணி வாசகருக்கு தாங்கவில்லை. 



"புண் சுமந்த பொன் மேனி"


என்று  உருகுகிறார். 





இதன் தொடர்ச்சியை நாளைய பதிவில் காண்போம் 











(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:பா

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை



)


நாலாயிர திவ்ய பிரபந்தம் - மெலிந்த பொழுது

     

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   மெலிந்த பொழுது 


இந்த வெற்றிப் பாசுரங்களில் நம்மாழ்வார் மிகப் பிரமாண்டமான நிகழ்வுகளை பற்றி கூறுகிறார். பாற்கடலை கடைந்தது, குருக்ஷேத்திர போர்,ஊழிக் காலம் என்று நம் கற்பனைக்கு எட்டாத மிகப் பிரமாண்டமான விடயங்களை கூறிக் கொண்டு வருகிறார். 


அடுத்தது,



அந்தி நேரம். இரத்தத்தை அள்ளி விசிறி அடித்த மாதிரி வானம் சிவந்து இருக்கிறது. தூரத்தில் ஒரு மலை. அந்த மலை மேல் ஒரு பெரிய சிங்கம் அமர்ந்து இருக்கிறது. மலை உச்சியில் உள்ள சிங்கம் கீழே தெளிவாகத் தெரிவது என்றால் அது எவ்வளவு பெரிய சிங்கமாக இருக்க வேண்டும். அது அமர்ந்து இருப்பதைப் பார்த்தால் ஏதோ அது அந்த மலையை அடக்கி அதன் மேல் அமர்ந்து இருப்பது போல இருக்கிறது. ஒரு கம்பீரம், ஒரு வசீகரம். 



பாடல் 



போழ்து மெலிந்தபுன் செக்கரில்,வான்திசை

சூழு மெழுந்துதி ரப்புன லா,மலை

கீழ்து பிளந்தசிங் கமொத்த தால்,அப்பன்

ஆழ்துய ர் செய்தசு ரரைக்கொல்லு மாறே.


பொருள் 




(pl click the above link to continue reading)




போழ்து = பொழுது 


மெலிந்த = மெலிந்து, உக்கிரம் குறைந்து, மாலை வேளை 


புன் = குறைந்த, அதாவது ஒளி குறைந்த 


செக்கரில் = சிவந்த 


வான்திசை = வானத்தின் திசைகள்


சூழு = சூழ 


மெழுந்து = எழுந்து 

உதிரப்புனலால் = இரத்த ஆறு ஓடியது போல 


மலை கீழ்து  = மலையை கீழே கொண்டு  


பிளந்த = அதை பிளந்த 


சிங்கம் = சிங்கம் 


ஒத்த தால் = போல் ஒத்து இருந்து 


அப்பன் = திருமால் 


ஆழ் = நீண்ட பெரிய 


துயர் செய்த  = துன்பங்களை செய்த 


அசுரரைக்கொல்லு மாறே. = அசுரர்களை கொல்வதைப் போல் 




நரசிம்ம அவதாரம் கொண்டு , இரணியனை மாலை வேளையில், படியில், மடியில் கிடத்தி, அவன் உடலைப் பிளந்து, இரத்தம் பீறிட்டு எழ அமர்ந்து இருந்த கோலம் நினைவுக்கு வருகிறது நம்மாழ்வாருக்கு. 


மாலையில், சிவந்த வானத்தின் அடியில், மலை மேல் அமர்ந்து இருக்கும் சிங்கம் போல இருந்தது அந்தக் காட்சி என்கிறார். 


இரணியன் எவ்வளவு பெரிய பலம் கொண்டவன். பிரகலாதனுக்கு எவ்வளவோ துன்பங்கள் தந்தான். பிர்கலாதான் தானே போராடி இரணியனை வெல்ல முடியாது. அதற்காக அவன் சோர்ந்து விடவில்லை. திருமாலை நம்பினான். 



அவ்வளவு பலம் பொருந்திய, இரணியனை தன் வெறும் கையால் கொன்றார். 


அதைப் பார்க்கும் போது நம் துன்பம் எல்லாம் பெரிய துன்பமா? நம் துன்பங்களை துடைக்க அவனுக்கு ஒரு நொடி கூட ஆகாது என்பது அவர் கருத்து. துயர் துடைத்து வெற்றிகளைத் தருவான் என்கிறார். 






(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்

)


Tuesday, September 27, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 6

     

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 6


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நிரந்தரமானவை, தோற்றமும், முடிவும் இல்லாதவை, இதில் பதியும், பசுவும் உயிர் பொருள்கள், அறிவு உள்ளவை, பாசம் என்பது உயிர் அற்றது, அறிவும் அற்றது என்று பார்த்தோம். 


ஆணவத்தின் காரணமாக பசு, பதியைப் பற்றாமல் பாசத்தில் அகப்பட்டுக் கொள்கிறது என்றும், அந்த அஞ்ஞான இருளில் அது தவித்து வெளி வர நினைக்கும், அந்த எண்ணமும், முயற்சியும்தான் மூல கன்மம் என்று வழங்கப் படுகிறது என்றும் சிந்தித்தோம். 


அப்படி வெளிவர நினைத்து தவிக்கும் உயிர்களுக்கு இரங்கி இறைவன் தன் நிலையில் இருந்து கீழிறங்கி வரும் முதல் ஐந்து நிலைகளான சிவ தத்துவத்தைப் பார்த்தோம். அவையாவன 


1. நாதம் , 2. விந்து .  3. சதாக்கியம்,  4. ஈஸ்வரம்,  5. சுத்த வித்தை.


அதை அடுத்து, இறைவன் உயிர்களை செயப்பட ஆயதம் செய்வான்.  அவை முறையே 6. காலம்,  7. நியதி, 8. கலை, 9. வித்தை , 10. இராகம்/அராகம் , 11. புருடன் 


என்றும் சிந்தித்தோம் 


36 தத்துவங்களில் 11 தத்துவம் பற்றி சிந்தித்தோம்.இனி மீதி உள்ள 25 தத்துவங்களை பற்றிச் சிந்திப்போம். 


முதல் 5 தத்துவங்கள் சிவ தத்துவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.  இது இறைவன் உயிரை செயல்படுத்த தயாராகும் நிலை. 


அடுத்த 6 தத்துவங்கள் உயிர்கள் செயல்பட உண்டான தத்துவங்கள். இவை வித்யா தத்துவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 


இறைவன் தயார், உயிர்கள் தயார். 


இனி இந்த உயிர்கள் செயல்பட வேண்டும். 


எங்கே, எப்படி செயல்படும் என்பதைப் பற்றி விளக்குபவை  மீதி உள்ள 24 தத்துவங்களும். 



https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html

(pl click the above link to continue reading)





உயிர்கள் செயல்பட ஒரு உடல் வேண்டும். உயிர் சூக்கும பொருள். அது நேரடியாக இயங்க முடியாது. மின்சாரம் சக்திதான். அது இயங்க பல்பு, டிவி, grinder, mixie என்ற கருவிகள் வேண்டி இருக்கிறது அல்லவா?  அது போல உயிர்கள் இயங்க இறைவன் நான்கு விடயங்களை படைக்கிறான்.  


அவை 


தனு, கரண, புவன,  போகம் என்று அழைக்கப்படுகின்றன. இவை தத்துவங்கள் அல்ல. 


தனு என்றால் உடம்பு. 

வெறும் உடம்பு செயல் பட முடியாது. அது செயல்பட அவயங்கள் வேண்டும். கை, கால் போன்ற கருவிகள் இருந்தால்தான் அது செயல்பட முடியும்.  அந்தக் கருவிகளுக்கு கரணங்கள் என்று பெயர். 


உடம்பு இருக்கிறது, கருவிகள் (கரணங்கள்) இருக்கின்றன. உடம்பு எங்கே இயங்கும்? அது இயங்க ஒரு இடம் வேண்டும். அதற்கு புவனம் என்று பெயர். 


சரி, உடம்பு இயங்க வேண்டும் என்றால் இடம் மட்டும் போதாது. அனுபவம் வேண்டும்.  உடம்பு இருக்கிறது, வயிறு இருக்கிறது, கை இருக்கிறது, சாப்பாடு இருக்கிறது. சாப்பிட முடியுமா?  பசி வேண்டாமா? பசிக்காமல் சாப்பிட முடியுமா? பசியும் இருக்கிறது. உணவில் ஒரே உப்பு, அல்லது அதீத காரம். சாப்பிட முடியுமா? உணவில் சுவை இருக்க வேண்டும். அந்த பசி, சுவை போன்றவைதான் அனுபவங்கள். அவற்றை போகங்கள் என்கிறார்கள். 


தனு, கரண, புவன, போகம் என்பது இதைத்தான். இவை தத்துவங்கள் அல்ல.இவற்றிற்கு உள்ளே இருக்கின்றன தத்துவங்கள். 


ஏ அப்பா, எவ்வளவு ஆழமாகப் போகிறது என்று நீங்கள் வியக்கலாம். சிந்தித்து இருக்கிறார்கள்.  


தத்துவங்களுக்கு போவதற்கு முன்னால் ஒரு சிறு குறிப்பு. 


நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். உங்கள் பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள்? உங்கள் உடன் பிறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள். ஏன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறீர்கள்? நேற்றுவரை கூடவே இருந்த பிள்ளை இன்று எங்கோ கடல் கடந்து போய் விட்டது. ஏன்?


அது அதற்கு விதித்த புவனம். இது உங்களுக்கு விதித்த புவனம். 


இந்த வேறுபாடுகளை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். 


இனி தத்துவத்துக்குள் செல்வோம். 


உடல் செயல்பட உடலை ஏதாவது ஒன்று தூண்ட வேண்டும். போய் சாப்பிடு, அலுப்பாக இருக்கிறது போய் தூங்கு, சினிமாவுக்குப் போ, வேலைக்குப் போ என்று உடம்பை தூண்ட வேண்டும். 


முதலில் எண்ணம் வர வேண்டும். அது பின் உடல் மூலமாக செயலாக்கப்படும். இந்த எண்ணங்கள் பிறக்கும் இடத்துக்கு சித்தம் என்று பெயர். சித்தத்தில் இருந்துதான் எல்லாம் தொடங்குகிறது. 


 12 சித்தம். இது பன்னிரண்டாவது தத்துவம். 


சித்தம் ஓடி ஓடி களைத்துப் போகும்.அதை களைப்படையாமல் இருக்கச் செய்வது அகங்காரம் என்ற அடுத்த தத்துவம். 


13 அகங்காரம். நான் என்ற உணர்வு,எனது என்ற உணர்வு இருப்தால்தான் செயல்கள் இடை விடாமல் இருக்கின்றன. என் மனைவி, என் பிள்ளை, என் வீடு, என் வேலை என்ற எண்ணம் வரும் போதுதான் அதை காப்பாற்ற வேண்டும், அவற்றை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கிறது. இல்லை என்றால் யார் அல்லது எது எக்கேடு கெட்டுப் போனால் எனக்கு என்ன என்று இருந்து விடலாம் அல்லவா?


இந்த அகங்காரம் மூன்று விதமாக பிரிகிறது.  


இராஜசம், தாமசம், சாத்வீகம் என்று. 


அவற்றை விளக்காமல் மேலே போவோம் 


இந்த சாத்வீக அகங்காரத்தில் இருந்து புத்தி, மனம் என்ற அடுத்த இரண்டு தத்துவங்கள் பிரக்கின்ன்றன. 


14. புத்தி 


15  மனம் 


இந்த சித்தம், அகங்காரம், புத்தி, மனம் என்ற நான்கு கரணங்களும் அந்தக் கரணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 


நமக்கு உள்ளே நிகழும் அனுபவம் ஏதோ மூளையில் நிகழ்வதாக நாம் நினைக்கிறோம்.  நம் சமய கோட்பாடுகள் அது நான்கு நிலைகளில் நிகழ்வதாகக் கூறுகிறது. 


சித்தம், அகங்காரம், புத்தி, மனம் என்று ஒவ்வௌன்றுகும் ஒரு செயல்பாடு உண்டு, இவை ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவவை. அவற்றை விளக்க புகுந்தால் இன்னும் விரியும்.  மிக ஆழமான தத்துவங்கள் என்று புரிந்து கொள்வோம். ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் தேடலைத் தொடரலாம். 




உள்ளே இருப்பவை. உடம்பை பிரித்துப் பார்த்தாலும் தெரியாது. 


எனவே, 15 தத்துவங்கள் பார்த்து விட்டோம். 


மேலும் 21 இருக்கின்றன. 


அவற்றை அடுத்த பதிவில் சிந்திப்போம். 


[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html




]




Sunday, September 25, 2022

திருக்குறள் - வெஃகாமை - நடுவின்றி நன்பொருள் வெஃகின்

 

 திருக்குறள் - வெஃகாமை - நடுவின்றி நன்பொருள் வெஃகின்


ஒருவன் பொருளை அவன் அறியாமல் எடுத்துக் கொள்ள "நினைத்தால்" என்ன ஆகும்? எடுத்தால் அல்ல, எடுக்க நினைத்தால் என்ன ஆகும் என்று வள்ளுவர் சொல்கிறார். 


"அறம் இன்றி இன்னொருவன் பொருளை எடுத்தால், எடுத்தவனின் குடி கெடுவது மாத்திரம் அல்ல அவனுக்கும் பல குற்றங்கள் வந்து சேரும்" 


பாடல் 


நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


(Please click the above link to continue reading)



நடுவின்றி = நடுநிலைமை இல்லாமல் 


நன்பொருள் = நல்ல பொருளை 


வெஃகின் = எடுத்துக் கொள்ளக் கருதினால் 


குடிபொன்றிக் = குடியை கெடச் செய்து 


குற்றமும் = குற்றத்தையும் 


ஆங்கே தரும் = ஆங்கே தரும் 


"நன் பொருளை வெஃகின்" என்று போட்டு இருக்கலாம். ஆனால் "நடுவு இன்றி நன் பொருளை வெஃகின்" என்று சொல்லி இருக்கிறார். 


வெஃகுதல் = விரும்புதல், தீய வழியில் கொள்ள நினைத்தல். 


ஒருவனிடம் ஒரு நல்ல கார் இருக்கிறது. அது போல நமக்கும் ஒன்று வேண்டும் என்று நினைப்பது குற்றம் அல்ல. நல்ல பொருளை விரும்புவதே குற்றம் அல்ல. நடுவு இன்றி, நல்ல பொருளை விரும்புவது குற்றம். 


சரி, தவறு ; ஞாயம், அநியாயம், தர்மம், அதர்மம் பார்த்து நடு நிலையில் நில்லாமல் தவறான ஒன்றின் பால் சார்ந்து அதை விரும்புவது தவறு என்கிறார். 


""பொருளை விரும்பின்"  என்று ஏன் சொன்னார்?


"நன் பொருளை" என்று ஏன் சொன்னார்? வெறுமனே "பொருளை" என்று சொல்லி இருக்கலாமே? பொருள் நல்லது செய்யும். இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை செய்யும். எனவே நன் பொருள் என்றார். இல்லறத்தில் இருப்பவனுக்கு பொருள் அவசியம். 


இரண்டுவிதமான சிக்கல்கள் வரும் என்கிறார். .


ஒன்று, குடி பொன்றும். 


மற்றது, குற்றமும் ஆங்கே தரும். 


குடியை கெடச் செய்து என்று உரை செய்வார் பரிமேலழகர். .ஒருவன் மற்றவன் பொருளை தவறான வழியில் அடைய நினைத்தால் அது அவனை மட்டும் கெடச் செய்யாது. அவன் குடியையே நாசம் செய்யும். 


தவறாக நினைப்பவன், அதை ஒரு நாள் செய்யவும் செய்வான். அப்படிச் செய்தால் உலகம் அவனை மட்டும் அல்ல, அவன் குடும்பத்தையே தூற்றும். 


குற்றமும் ஆங்கே தரும் என்றார். ஆங்கே என்றால் அங்கேயே, உடனேயே தரும். கொஞ்ச நாள் எல்லாம் ஆகாது. உடனுக்கு உடனேயே தரும். 


குற்றமும் என்பதில் உள்ள உம்மை முற்றும்மை. அதாவது அதற்கு மேல் வேறு எதுவும் இல்லை. எல்லா தீயவரையும் தரும் என்பது பொருள். 


ஒரு விரலில் மோதிரம் போட்டேன், இரண்டு விரலில் போட்டேன் என்று சொல்லிக் கொண்டே போகலாம். பத்து விரலிலும் போட்டேன் என்றால் மொத்தம் அவ்வளவுதான். பதினோராவது விரல் இல்லை என்று பொருள். 


குற்றமும் தரும் என்றால், எல்லாம் தந்தாச்சு, இனி இதற்கு மேல் ஒன்றும் இல்லை என்று அர்த்தம். 


முதல் குறளிலேயே பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார் வள்ளுவர். 


மேலும் சிந்திப்போம். 


[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html

]


Friday, September 23, 2022

திருவாசகம் - திரு அம்மானை - தாயான தத்துவனை

       

திருவாசகம் - திரு அம்மானை  -   தாயான தத்துவனை


திருவாசகத்தில் உள்ள பாடல்களை படித்தால் மிக எளிமையாக இருக்கும். பெரிய சொற் சிக்கல்கள் இருக்காது. சரி, இவ்வளவுதானே. இதில் என்ன பெரிதாக இருக்கிறது என்று எண்ணி மேலே போய் விடுவோம். போய் இருக்கிறேன். 


பின்னாளில் அப்படிப்பட்ட பாடல்களுக்கு மிக ஆழமான, விரிவான அர்த்தங்களை கேட்டு வியந்தது மட்டும் அல்ல, இப்படி எத்தனை பாடல்களை நுனிப் புல் மேய்ந்து விட்டு வந்தேனோ என்ற கவலையும் பட்டிருக்கிறேன். 



சரி, எனக்குத் தெரிந்தது அவ்வளவு, இந்த உரை ஆசிரியருக்கு தெரிந்தது இவ்வளவு. இதுக்கு மேலேயும் பொருள் இருக்கலாம் அல்லவா என்றும் தோன்றும். எதுதான் மணிவாசகர் நினைத்த பொருள் என்ற ஏக்கம் வரும். 



திருவாசகத்துக்குப் பொருளை மணிவாசகரிடமே கேட்டார்கள். இறைவன் திருவடியைக் காட்டி,"இதுதான் பொருள்" என்று கூறி அதில் ஐக்கியமாகி விட்டார் என்பார்கள். 



எனவே, எத்தனை உரை படித்தாலும், அது எதுவும் முழுமையானது அல்ல. உங்கள் தேடல்தான், அனுபவம்தான் உண்மையான பொருளை உணர்த்த முடியும். 



அடுத்த பாடல் 


"எப்போதும் மனதில் நினைப்பவர்கள் உள்ளத்தில் இருப்பவனை, நினனையாதவர்களுக்கு எட்டாமல் இருப்பவனை, திருபெருந்துறையில் உறைபவனை, வேதங்களால் போற்றப் படுபவனை, பெண்ணை பாதியாகக் கொண்டவனை, நாய் போன்ற நம்மையும் ஆட்கொண்ட நாயகனை, தாய் போன்றவனை, உலகை எல்லாம் தானாக இருந்து, அவற்றை ஆள்பவனை, அம்மானைப் பாட்டில் பாடுவோம்"

என்கிறார். 

இது என்ன பெரிய விடயமா. எப்போதும் உள்ளதுதானே என்று நினைப்போம். 


பாடல் 


ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயான தத்துவனைத் தானே உலகேழும்
ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய் 


பொருள்  




(pl click the above link to continue reading)


ஓயாதே = ஓயாமல், இடை விடாமல், அலுப்பு இல்லாமல் 


உள்குவார் = உள்ளத்தில் நினைப்பார் 


உள்ளிருக்கும் = உள்ளுக்குள் 


உள்ளானைச் = இருப்பவனை 


சேயானைச் = தூரத்தில் இருப்பவனை 


சேவகனைத்  = சேவகம் செய்பவனை 


தென்னன் = தென்னாடு உடையவனை 


பெருந்துறையின் = திருபெருந்துறையில் 


மேயானை = உறைபவனை 


வேதியனை = வேதங்களால் போற்றப்படுபவனை 


மாதிருக்கும் பாதியனை = பெண்ணை பாதியாகக் கொண்டவனை 


நாயான நந்தம்மை = நாய்போன்ற நம்மை எல்லாம் 


ஆட்கொண்ட நாயகனைத் = ஆட்கொண்ட நாயகனை 


தாயான தத்துவனைத் = தாய் போன்றவனை 


தானே உலகேழும் = அவனே உலகம் எழும் 


ஆயானை = ஆனவனை 

ஆள்வானைப் = ஆட்சி செய்பவனை 


பாடுதுங்காண் அம்மானாய்  = அம்மானையில் பாடுவோம் 



கொஞ்சம் உள்ளே போவோம். 


"ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்" - உள்குதல் என்றால் நினைத்தல், மனதில் நிறுத்துதல் என்று பொருள் சொல்லலாம். மனத்து அழிதல் என்று பொருள் சொல்கிறார்கள். அதாவது, அந்த ஒன்றைத் தவிர வேறு எதையும் மனம் நினைக்காது. அப்படி இருந்தால், அது எதை நினைக்கிறதோ, அதாகவே ஆகிவிடுகிறது. "ஓயாமல்" என்றால் விடாமல். அப்படி விடாமல் நினைப்பவர்களுக்கு அவன் "உள்ளவன்", அதாவது வெளிப்பட்டு தெரிவான். அப்படி நினைக்காதவர்களுக்கு தெரிய மாட்டான் என்பது குறிப்பு.  


அதைத்தான் அடுத்த சொல்லில் கூறுகிறார்.


"சேயானை" - தூரத்தில் இருப்பவன். கண்ணுக்குத் தெரிய மாட்டான். ஓயாமல் உள்ளத்தில் நினையாதவர்களுகுத் தெரியமாட்டான். தெரியமாட்டான் என்றால் இல்லாதவன் என்று பொருள் இல்லை. தூரத்தில் இருப்பான். புளுட்டோ போன்ற கோள்கள் நம் கண்ணுக்குத் தெரிவது இல்லை. அதற்காக அது இல்லை என்று சொல்ல முடியாது. 



இந்த உலகை யார் படைத்தார்கள் என்று கேட்டால் "இறைவன் படைத்தான்" என்று சொல்லிவிடுவார்கள். அப்படி என்றால் இந்த உலகம் வேறு, இறைவன் வேறா என்ற கேள்வி வரும். உலகம் என்பது இறைவனுக்கு வெளியே உள்ள ஒன்று என்று ஆகி விடுமே? 


மணிவாசகர் சொல்கிறார் 


"தானே உலகேழும் ஆயானை"


இந்த உலகம் முழுவதும் அவனே தான். தானே உலகமாய் ஆனான். அவன் வேறு, உலகம் வேறு அல்ல.  இரண்டும் ஒன்று தான். 


சரி, அவனே உலகம் ஆனான் என்றால் அதை நடத்துவது யார்? 


"ஆள்வானை"


தானே உலகங்கள் அனைத்தும் ஆகி, அவற்றை வழி நடத்துகிறான். 



"சேவகனை". இறைவன் எப்படி சேவகன் ஆவான் ? அவன் தான் உலகம் அனைத்தையும் ஆள்பவனாயிற்றே. 


இருந்தாலும், தன் அடியவர்களுக்காக அவன் குதிரை ஓட்டும் சேவகனாக, பிட்டுக்கு மண் சுமக்கும் கூலித் தொழிலாளியாக, வந்து சேவகம் செய்திருக்கிறான். எனவே "சேவகனை".  ஒரு தாய் தன் பிள்ளைக்கு ஆயிரம் சேவை செய்கிறாள். அதற்காக அவள் வேலைக்காரியா? இல்லை, அவள் செய்வது அன்பின் காரணமாக. 

அதை அடுத்த வரியில் சொல்கிறார் 


"தாயான தத்துவனை".  பேசாமல் தாயானவனை என்று சொல்லி இருக்கலாமே?  தாய் பிள்ளை மேல் அளவு கடந்த பாசம் வைத்து இருப்பாள். இருந்தும் அவளுக்கு பல பிள்ளைகள் இருந்தாலோ, அல்லது வயதாகி விட்டாலோ,அல்லது பிள்ளை வேறு இடத்துக்குப் போய் விட்டாலோ அவளால் பிள்ளைக்கு உதவி செய்ய முடியாது. இருந்தும்அவள் மனம் எல்லாம் பில்லையிடம்தான் இருக்கும். உடலால் இல்லாவிட்டாலும், உள்ளாதால் இருந்து கொண்டே இருப்பாள். அவன் அன்பு கண்ணுக்குத் தெரியாமல் கசிந்து கொண்டேதான் இருக்கும். எனவே தான் "தாயான தத்துவனை" என்றார்.தத்துவம் கண்ணுக்குத் தெரியாது. ஆனால், அது செயல் பட்டுக் கொண்டே இருக்கும். 


ஒரு ஆண், பெண் இல்லாமல் முழுமை பெறுவது இல்லை.  முழுமை பெறாத ஒருவரால் இறைவனை அடைய முடியாது. தானே ஒரு அரைகுறை. எப்படி முழுமுதலான இறைவனை அடைவது?  


"மாதிருக்கும் பாதியானை".  அவனே பெண் பாதி இல்லாமல் முழுமை அடைய மாட்டான் என்றால் நாம் எம்மாதிரம். 



என் சிற்றறிவுக்கு எட்டியவரை, பெண் என்றால் ஏதோ மனைவி, காதலி என்று  ஒரு உருவம் அல்ல.  பெண் தன்மை. அன்பு, அருள், கருணை, பாசம், இரக்கம் போன்ற குணங்கள். அந்தக் குணங்கள் இல்லாதவரை  இறை அனுபவம் கிட்டாது. 


 பிள்ளை படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, அழகாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி தாயின் அன்பு ஒரு போதும் குறையாது. அது போல இறைவனும், நம் தகுதி பார்த்து ஆட்கொள்வதில்லை. 


"நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்" 


நாம் யாராக இருந்தாலும், நம்மை ஆட்கொள்வான். 


படிக்க படிக்க அதன் எளிமையும், அழகும், மனதை அப்படியே கரைத்து விடும். 



பாடலை இன்னும் ஒரு முறை படித்துப் பாருங்கள். அவ்வளவு இனிமை. 




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html



)