Tuesday, November 12, 2013

வில்லி பாரதம் - தமிழ் மகள் வாழ்த்து

வில்லி பாரதம் - தமிழ் மகள் வாழ்த்து 




பொருப்பிலேபிறந்துதென்னன்புகழிலேகிடந்துசங்கத்து
இருப்பிலேயிருந்துவைகையேட்டிலேதவழ்ந்தபேதை
நெருப்பிலேநின்றுகற்றோர்நினைவிலேநடந்தோரேன
மருப்பிலேபயின்றபாவைமருங்கிலேவளருகின்றாள்.

தமிழை தாயாகத்தான் எல்லோரும் சொல்லி வந்திருக்கிறார்கள்.

வில்லிபுத்துரார் தமிழை மகளாக, சின்ன பெண்ணாக பார்கிறார்.

தமிழ் தாய் என்கிறோம்.

கன்னித் தமிழ் என்கிறோம்.

வில்லியார் தமிழை மகளாகப் பார்க்கிறார்.

பொருப்பிலே பிறந்து = பொருப்பு என்றால் மலை. பொதிகை மலையில் அகத்தியனிடம் இருந்து பிறந்து

தென்னன் புகழிலே கிடந்து = பாண்டிய மன்னர்களின் புகழிலிலே தங்கி இருந்து

சங்கத்து இருப்பிலே இருந்து = மூன்று சங்கத்திலும் நிலையாக இருந்து 

வைகை யேட்டிலேதவழ்ந்த = புனல் வாதம் செய்த போது, தமிழ் பாடல்களை ஏட்டில் எழுதி வைகை வெள்ளத்தில் விட்டார்கள். அது கரையேறி வந்தது.

பேதை = சின்னப் பெண்

நெருப்பிலே நின்று = அனல் வாதம் செய்யும் போது, ஏட்டினை தீயில் இடுவார்கள். நல்ல தமிழ் பாடல்களை கொண்ட ஏடுகள் தீயில் கருகாமல் இருக்கும். அப்படி வளர்ந்த தமிழ். 

கற்றோர் நினைவிலே நடந்தோரேன = கற்றவர்கள் நல்ல தமிழ் பாடல்களை நினைவில் வைத்து இருப்பார்கள். அவர்கள் நினைவிலே நடந்து வருவாள்.


மருப்பிலேபயின்றபாவைமருங்கிலேவளருகின்றாள் = திருமால் பன்றியாக உருவம் எடுத்து உலகை தன் கொம்பில் தூக்கி காத்த போது (மருப்பு = கொம்பு ), அதனுடன் சேர்ந்து பிறந்து வளர்ந்த தமிழ். (மருங்கு = உடன் )





இராமாயணம் - நீ இரங்கல் வேண்டுமோ ?

இராமாயணம் - நீ இரங்கல் வேண்டுமோ ?


‘கண் முதல் காட்சிய, கரை இல் நீளத்த,
உள் முதல் பொருட்டு எலாம் ஊற்றம் ஆவன,
மண் முதல் பூதங்கள் மாயும் என்றபோது,
எண்முதல் உயிர்க்கு நீ இரங்கள் வேண்டுமோ?

கண் முதலிய புலன்கள் காணும் கண்டு உணரும் எண்ணற்ற பொருள்களுக்கு மூலமான பஞ்ச பூதங்களும் அழியும் என்ற போது, இந்த உயிர்கள் இறந்ததற்கு நீ வருத்தப் படலாமா?

என்று தசரதன் இறந்த செய்தி கேட்டு வருந்தும் இராமனுக்கு வசிட்டன் ஆறுதல் கூறுகிறான்.

கண் முதல் காட்சிய = கண்கள் முதலிய புலன்கள் கண்டு உணரும் 

கரை இல் நீளத்த = எல்லை அற்ற எண்ணிக்கை கொண்ட பொருள்களின்

உள் முதல் = மூலமான

பொருட்டு எலாம் ஊற்றம் ஆவன = அவைகள் எல்லாவற்றுக்கும் ஊற்று போல ஆதாரனமான

மண் முதல் பூதங்கள் = மண், தீ, நீர், வானம் போன்ற பூதங்கள்

மாயும் என்றபோது = அழியும் என்ற போது

எண் முதல் உயிர்க்கு = இவற்றை விட எளிய உயிர்களுக்கு

நீ இரங்கல்  வேண்டுமோ? = நீ வருத்தப் பட வேண்டுமா ? வேண்டாம்.


இந்த உலகில் தோன்றிய எல்லாம் அழியும். பொருள்கள் மட்டும் அல்ல, அந்த பொருகளின் மூலமான பஞ்ச பூதங்களும் அழியும் தன்மை கொண்டது. அப்படி இருக்கும் போது , இந்த உடல் அழிவதைப் பற்றி நீ வருத்தப் படலாமா


நாம் தங்கம் பார்த்து இருக்கிறோம். தங்கத்தில் இருந்து மோதிரம், வளையல் போன்ற ஆபரணங்கள் உருவாவதைப் பாத்து இருக்கிறோம்.  ஒரு வளையலை அழித்து  இன்னொரு வளையல் செய்கிறோம். அழிவது வளையல்தான். தங்கம் அல்ல. தங்கம் அப்படியே இருக்கிறது. 

கம்பர் சொல்கிறார் ...வளையல் மட்டும் அல்ல, தங்கமும் அழியும். 

மோதிரம் அழியும். 

அது உருவாக காரணமாக இருந்த தங்கமும் அழியும்.

அப்படி என்றால், அதை அணிந்தவன் அழியாமல் எப்போதும் இருப்பான் என்று நினைக்க முடியுமா  ?


Monday, November 11, 2013

இராமாயணம் - காலம் என்று ஒரு வலை

இராமாயணம் - காலம் என்று  ஒரு வலை 




“சீலமும் தருமமும் சிதைவு இல் செய்கையாய்!
சூலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய
மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும்
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ? “

நல்ல ஒழுக்கமும், தர்மமும் சிதைவு இல்லாமல் செயல்களை செய்பவனே (இராமனே) சிவனுக்கும், திருமாலுக்கும், பிரம தேவனுக்கும் உதவி செய்த மூலப் பொருளே ஆயினும் காலம் என்ற வலையை கடக்க முடியாது.

தசரதன் இறந்த செய்தி கேட்டு கலங்கிய இராமனுக்கு வசிட்டன் ஆறுதல் கூறுகிறான்.

காலம் என்ற ஒன்றை யாராலும் கடக்க முடியாது. இறக்கும் காலம் வந்தால் அது நிகழ்ந்தே  தீரும்.அதை அந்த கடவுளாலும்  முடியாது. அப்படியென்றால் சாதரண மனிதர்கள் எம்மாத்திரம்.

பொருள்


“சீலமும் = நல் ஒழுக்கமும்

 தருமமும் = அறமும்

 சிதைவு இல் செய்கையாய் = சிதைவு இல்லாத செய்கை கொண்டவனே

சூலமும் = சூலத்தை கொண்ட சிவனும்

திகிரியும் = சக்கரத்தை கொண்ட மாலும்

சொல்லும் = வேதத்தை கொண்ட பிரமனும்

தாங்கிய  = அப்படி அந்த மூவரையும் தாங்கிய

மூலம் = மூலப் பொருளான அந்த பரம் பொருள்

வந்து உதவிய = வந்து உதவிய  

மூவர்க்கு ஆயினும் = அந்த மூவர்கள் ஆயினும்

காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ? = காலம் என்ற வலையை கடக்க முடியுமா ? முடியாது.

மூவர்க்கும் மேலான ஒரு பரம் பொருள் பற்றி கம்பர் இங்கு கூறுகிறார்.

அது பற்றி பின்னொரு நாள் பார்ப்போம்.



Sunday, November 10, 2013

இராமாயணம் - யமனின் கருணை

இராமாயணம் - யமனின் கருணை 




‘ “உண்மை இல் பிறவிகள்,
     உலப்பு இல் கோடிகள்,
தண்மையில் வெம்மையில்
     தழுவின” எனும்
வண்மையை நோக்கிய,
     அரிய கூற்றின்பால்,
கண்மையும் உளது எனக் 
     கருதல் ஆகுமோ?

உண்மை இல்லாத பிறவிகள் கோடிக் கணக்கில் உண்டு. அவை ஒன்றை ஒன்று தழுவி நின்றன. இந்த கூற்றுவன் இருக்கிறானே அவனிடம் கருணையை எதிர்பார்க்கலாமா

என்று தசதரன் இறந்த துக்கத்தில் இருக்கும் இராமனுக்கு வசிட்டன் ஆறுதல்  கூறுகிறான்.

உண்மை இல் பிறவிகள் = உண்மை இல்லாத பிறவிகள். இந்த பிறவிகள் இன்று இருக்கும் நாளை  இருக்காது. மின்னேர் வாழ்க்கை என்று சொல்லும்  பிரபந்தம். நீர் கோல வாழ்வை என்பார் கம்பர் பிறிதோர் இடத்தில். இந்த பிறவிகளை உண்மையானவை என்று கொள்ள முடியாது. உண்மை  சாஸ்வதமானது.பொய் இன்றிருக்கும் நாளை இருக்காது.


உலப்பு இல் கோடிகள் = உலப்பு என்றால் முடிவு,  இறுதி.கணக்கில் அடங்கா கோடி கோடி இந்த உண்மை இல்லாத பிறவிகள்.

உலபில்லா ஆனந்த மாய தேனினை சொரிந்து 
புறம் புறம் எனத்  திரிந்த செல்வனே சிவனே 
யான் உனை தொடர்ந்து சிக்கென பிடித்தேன் 

என்பார் மணி  வாசகர்.



தண்மையில் வெம்மையில் தழுவின = தண்மை என்றால் குளிர்ச்சி. வெம்மை என்றால் சூடு. இந்த உயிரனங்கள் ஒன்றை ஒன்று அன்போடும் , போட்டி போட்டு ஒன்றை ஒன்று சண்டை இட்டும் சார்ந்து நிற்கின்றன


எனும் = என்னும்

வண்மையை நோக்கிய = வல்லமை கொண்ட

அரிய = சிறந்த

கூற்றின்பால் = யமனிடம். கூற்றுவன் என்பவன் உயிரையும் உடலையும் கூறு படுத்துபவன்


கண்மையும் = கண்மை என்றால் ஏதோ கண்ணுக்கு போடும் மை  அல்ல. கண்மை என்றால் கருணை.

உளது எனக் கருதல் ஆகுமோ? = யமனிடம் கருணை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா ? முடியாது

யமன் கருணை  இல்லாதவன்...நாள் கிழமை பார்க்க  மாட்டான், அன்பின் ஆழம் அறிய மாட்டான், பிரிவின் துயரம் அறியான், கண்ணீரின் சோகம் அறியாதவன் ....அவனிடம் கருணையை எதிர் பார்க்க முடியாது ....

பிரபந்தம் - பேசுவதால் ஆவதென்ன ?

பிரபந்தம் - பேசுவதால் ஆவதென்ன ?


புத்தர் வாழ்வில் நடந்ததாக சொல்லப் படும் ஒரு  சம்பவம்.

ஞானம் பெற்ற பின் புத்தர் மிக மிக அமைதியாக  இருந்தார். அவரை பார்த்தவர்கள் எல்லோருக்கும் தெரிகிறது - எவர் ஏதோ அறிந்திருக்கிறார் என்று. அவர் கண்ணில் தெரியும் ஒளி, அவரின் நிலை அவற்றை கண்ட மக்கள் அவரிடம் கேட்டார்கள் ...

"நீங்கள் ஏதோ ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது ...அதை என்ன என்று எங்களுக்குச் சொல்லக் கூடாதா "

புத்தர் சிரித்துக் கொண்டே சொன்னார் "முதலில் அதை சொல்வது  கடினம்.அப்படியே சொன்னாலும் நீங்கள் அதை  மாட்டீர்கள். நான் சொல்வதை அல்ல நீங்கள் கேட்பது. நீங்கள் உங்களுக்கு வேண்டியவற்றைதான் கேட்பீர்கள்...எனவே பேசாமல் இருபதே நலம் என்று நினைக்கிறேன் "

பின் மிகவும்  அவரை பேச வைத்தார்கள்.

ஞானிகள் எல்லோரும் அப்படித்தான் நினைக்கிறார்கள்.

"சும்மா இரு" என்று முருகன் உபதேசம் செய்ததாக அருணகிரி சொல்கிறார்.

"பேசுவதால் பயனிலை" என்கிறார் பாரதியார் .

Sitting silently
Doing nothing
Grass grows by itself

என்கிறது ஜென் பாடல்.

இங்கே தொண்டரடிப் பொடி ஆழ்வார் சொல்கிறார்


"பெரியவர்கள் சொன்னதை சொல்லிக் கொண்டிருப்பதை தவிர நாம் ஒன்றும் புதிதாக உணர இயலாது. ஆசை அற்றவர்கள் அன்றி மற்றவர்கள்  அவனை அறிய முடியாது. குற்றமற்றவர்கள் மனதில் இருப்பவனை வணங்கி இருப்பதை விட்டு விட்டு பேசிக் கொண்டிருப்பதால் என்ன பயன் "

பாடல்


பேசிற்றே பேச லல்லால் பெருமையொன் றுணர லாகாது
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானு மல்லன்
மாசற்றார் மனத்து ளானை வணங்கிநா மிருப்ப தல்லால்
பேசத்தா னாவ துண்டோ பேதைநெஞ் சேநீ சொல்லாய்

சீர் பிரித்த பின்

பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஒன்று உணரல் ஆகாது
ஆசு அற்றார் தங்களுக்கு அல்லால் அறியலாவானும் அல்லன்
மாசு அற்றார் மனத்து உள்ளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தால் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்


பொருள் 

பேசிற்றே பேசல் அல்லால் = பேசியதையே பேசுவதைத் தவிர

பெருமை ஒன்று உணரல் ஆகாது  = (அவன்) பெருமை ஒன்றையும் நம்மால் உணர முடியாது

ஆசு அற்றார் தங்களுக்கு அல்லால் = ஆசு என்பதற்கு விரைவு என்று ஒரு பொருள் உண்டு. ஆனால் ஆசை என்பது சரியாக இருக்கும். ஆசை அற்றவர்களுக்கு இல்லாமல்

அறியலாவானும் அல்லன் = அவன் அறிய முடியாதவன்

மாசு அற்றார் மனத்து உள்ளானை = குற்றம் அற்ற உள்ளத்தில் இருப்பவனை

வணங்கி நாம் இருப்பது அல்லால்  = வணங்கி நாம் இருப்பதைத் தவிர

பேசத்தால் ஆவது உண்டோ = பேசுவதால் ஆவது உண்டோ ?

 பேதை நெஞ்சே நீ சொல்லாய் = பேதை நெஞ்சே நீ சொல்




Saturday, November 9, 2013

தேவாரம் - கழுதை சுமந்த குங்குமம்

தேவாரம் - கழுதை சுமந்த குங்குமம் 


கழுதை அழுக்கு மூட்டையை சுமந்தாலும் குங்கும பூ மூட்டையை சுமந்தாலும் அதற்கு ஒரு வித்தியாசமும்  தெரியாது.

ஏதோ பொதி சுமந்து போகிறோம் என்று தான் அதற்குத்  தோன்றும்.

அல்லது குங்கும பொதியை சுமந்ததால் அந்த கழுதைக்கு பெரிய பேரும் புகழும் கிடைக்கவா  போகிறது.

அது போல காரண காரியம் தெரியாமல் மக்கள் பல பேர் பல இறை காரியங்களை செய்து  கொண்டிருகிறார்கள்.

கற்பூரம்  காட்டுவது,மணி அடிப்பது, மத சின்னங்களை அணிந்து கொள்வது, தூக்கம்  முழிப்பது, சாப்பிடாமல் இருப்பது என்று எண்ணற்ற காரியங்களை செய்து  கொண்டிருக்கிறார்கள். ஏன்  செய்கிறாய் என்று கேட்டால் தெரியாது....எல்லோரும் செய்கிறார்கள் நானும் செய்கிறேன் என்று  .பதில் வரும். அர்த்தம் தெரியாமல் பாடல்களையும் மந்திரங்களையும் சொல்லிக் கொண்டிருப்பவர்களை பார்க்கலாம்....

கழுதை சுமந்த குங்குமம்...

உள்ளன்போடு உருகி அவனை நினையாமல் இந்த சடங்குளினால் என்ன பயன் என்கிறார் சுந்தரர் ....

பாடல் 

கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்
கைப்பர் பாழ்புக மற்றது போலப்
பழுது நானுழன் றுள்தடு மாறிப்
படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்
அழுது நீயிருந் தென்செய்தி மனனே
அங்க ணாஅர னேயென மாட்டா
இழுதை யேனுக்கொர் உய்வகை யருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே


பொருள் 

கழுதை = கழுதை 

குங்குமம் = குங்குமம் 

தான் சுமந்து எய்தால் = அது சுமந்து சென்றால் 

நகைப்பர் = நகைப்பார்கள் 

பாழ் புக மற்றது போலப் = ஒரு பலனும்  அதற்கு இல்லாதது போல 

பழுது = தவறி 

 நான் = நான் 

உழன்று = தவித்து  

உள் தடுமாறிப் = உள்ளம் தடுமாறி 

படு = பெரிய 

சுழித் தலைப் பட்டனன் = சுழலில் அகப்பட்டுக் கொண்டேன் 

எந்தாய் = என் தந்தையே 

அழுது = அழுது 

நீ = நீ 

இருந்து என் செய்தி மன்னனே = இருந்து என்ன செய்யப் போகிறாய் மனமே
 
அங்கணா அரனே என  மாட்டாய் = அங்கணா அரனே என்று  மாட்டாய் 

இழுதை = இழுக்கு 

எனக்கு = எனக்கு 

ஓர் = ஒரு 

உய்வகை = உய்யும் , வாழும் வகை 

அருளாய் = அருள் செய்வாய் 

இடை மருதுறை = இடை மருது என்ற ஊரில் உறையும் 

எந்தை பிரானே = என்னை என்றும் பிரியாதவனே 


பூஜை புனஸ்காரங்களில் புண்ணியம்  இல்லை.

அழுதால் உன்னைப் பெறலாமே என்பார் மாணிக்க வாசகர். அது போல உள்ளன்போடு  உருகினால் வாழும் வழி கிடைக்கும் என்கிறார் சுந்தரர் 



திருக்குறள் - வையத்தின் வானம்

திருக்குறள் - வையத்தின் வானம் 



ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

ஐயத்தை நீங்கி தெளிந்தவர்களுக்கு இந்த வையமும் வானமும் அருகில் இருக்கும்.


ஐயத்தின் = ஐயத்தில் இருந்து

நீங்கித் = நீங்கி

தெளிந்தார்க்கு = தெளிவு பெற்றவர்களுக்கு

வையத்தின் = உலகின்

வானம் = வானமும்

நணிய = அருகில்

உடைத்து = இருக்கும், கிடைக்கும்


இது திருக்குறள். 

நாம் எதையும் அறிந்து கொள்ள முயலும் போது மூன்று நிலைகள் நிகழும். 

ஐயம், திரிபு, தெளிவு. 

ஐயம் திரிபற கற்றல்   என்று சொல்லுவார்கள்.

ஐயம் என்றால் இதுவோ அதுவோ என்ற சந்தேகம் 

திரிபு என்றால் ஒன்றை மற்றொன்றாக நினைப்பது. சந்தேகம் இல்லை, மாற்றி , தவறாக கொள்வது. 

இரவில் வழியில் நெளிவாக ஒன்று கிடக்கிறது 

பாம்பா , கயிறா என்று சந்தேகம் கொள்வது ஐயம். 

பாம்பை கயிறு என்றோ, கயிறை பாம்பு என்றோ மாற்றி உறுதியாக எண்ணுவது திரிபு. தவறுதான் இருந்தாலும்  அறிவு  அப்படி ஒரு முடிவை எடுக்கிறது. 


ஐயம் நீங்கி தெளிவு பெற்றவர்கள் அதாவது ஐயமும், திரிபும் நீங்கியவர்கள் இந்த உலகத்தில் இருக்கும்போதே வீடு பேறு என்று சொல்லும் அந்த மறு உலகத்தையும் அருகில் காண்பார்கள். 

பரிமேல் அழகர் உரை 

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு - ஐயத்தினின்று நீங்கி உணர்ந்தார்க்கு; வையத்தின் வானம் நணிய துடைத்து - எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து. 

(ஐயமாவது, பலதலையாய உணர்வு. அஃதாவது மறுபிறப்பும் இருவினைப் பயனும், கடவுளும் உளவோ இலவோ என ஒன்றின் துணிவு பிறவாது நிற்றல், பேய்த்தேரோ புனலோ? கயிறோ அரவோ? எனத்துணியாது நிற்பதும் அது. ஒருவாற்றான் பிறர் மதம்களைந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பு ஆகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோகமுதிர்ச்சி உடையார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வார் ஆகலின், அவரை ஐயத்தின் நீங்கித் தெளிந்தார் என்றும் அவர்க்குஅவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியல்உணர்வு தூர்ந்துவரும் ஆகலின், அதனைப் பயன் மேலிட்டு 'வையத்தன்வானம் நணியதுடைத்து' என்றும் கூறினார். கூறவே ஐயஉணர்வும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.)








இராமாயணம் - இறத்தலும் பிறத்தலும்

இராமாயணம் - இறத்தலும் பிறத்தலும் 


நாம் அன்பு கொண்டவர்களின் மரணம் மிகப் பெரிய துக்கம். நம் மரணம் துக்கம் அல்ல பயம்.

நிலையாமை பற்றி எவ்வளவுதான் தெரிந்து இருந்தாலும் நம் நெருங்கியவர்களின் மரணம் உலுக்கித்தான் போடுகிறது.

தசரதன் இறந்து போனான் என்ற செய்தியை கேட்டவுடன் இராமன் மயங்கி விழுந்தான். அரசு போனதற்கு கலங்கவில்லை. காடு போ என்று சொன்னபோதும் கலக்கம் இல்லை. ஆனால் , தந்தை இறந்தான் என்ற செய்தி கேட்ட போது இராமனுக்கு துக்கம் தாளவில்லை.

பாசம் அந்த பரமனையும் விடவில்லை.

கலங்கிய இராமனுக்கு வசிட்டன் வாழ்வின் நிலையாமை பற்றி கூறுகிறான்.

நம் வாழ்விலும் பிரிவுகள் நிகழலாம். அந்த துக்கத்தை தாங்கிக் கொள்ள நம்மை தயார் படுத்திக் கொள்ள இந்த மாதிரி ஞானிகளின் வாசகங்கள் உதவலாம்.

மிக மிக ஆழமான, சிந்திக்க வேண்டிய பாடல்கள்...அதில் ஒன்று


பாடல்

துறத்தலும் நல் அறத்
     துறையும் அல்லது
புறத்து ஒரு துணை இலை,
     பொருந்தும் மன்னுயிர்க்கு;
“இறத்தலும் பிறத்தலும்
     இயற்கை” என்பதை
மறத்தியோ, மறைகளின்

     வரம்பு கண்ட நீ?

பொருள்

"துறவறமும் இல்லறமும் அல்லது உயிர்களுக்கு வேறு வழி இல்லை. இறப்பும் பிறப்பும்  இயற்கை என்பதை எல்லாம் அறிந்த நீ எப்படி மறந்தாய் "

மேலோட்டமாய் பார்த்தால் இவ்வளவுதான்  அர்த்தம்.

கொஞ்சம் ஆழமாக சிந்திப்போம்.

நாம் வாழ்கையை ஒரே கோணத்தில் சிந்திக்கிறோம்.

பிறப்பு , வளர்தல், மூப்பு, பின் இறப்பு....இந்த கோணத்தில் நாம்  பார்க்கிறோம். இறப்போடு  எல்லாம் முடிந்து விடுகிறது.

வசிட்டர் கொஞ்சம் வேறு விதமாக சொல்கிறார்.

"இறத்தலும் பிறத்தலும் இயற்கை " முதலில் இறப்பு, பின் பிறப்பு இதுதான் இயற்கை  என்கிறார்.

தசரதன் இறந்து போனான். "இதை முடிவு என்று நினைக்காதே , இறந்தது பிறக்கும் " என்று இராமனுக்கு அறிவுறுத்துகிறான்.

பிறந்தது இறக்கும் என்பது கண்  கூடு.

இறந்தது பிறக்குமா  என்பது தெரியாது. சந்தேகம்  இருக்கிறது அதில்.

பிறத்தலும் இறத்தலும் இயற்கை என்று சொல்லி இருக்கலாம். சொல்லவில்லை.

வாழ்கை ஒரு முடிவற்ற நதிபோல் ஓடிக் கொண்டிருக்கிறது.

அதே போல் , இல்லறம் , அது முடிந்து துறவறம். அது தான் நாம் அறிந்த முறை.

வசிட்டன் அதையும் மாற்றிப் போடுகிறான்.

"துறத்தலும் நல் அறத் துறையும் அல்லது" முதலில் துறவறம் சொல்லி அப்புறம் நல்  அறம் அதாவது இல் அறம் (இல்லறம்) பற்றி கூறுகிறான்.

இது வசிட்டன் சொன்னான் என்றால் ஏதோ தனக்கு ஆறுதல் சொல்வதற்காக அப்படி சொல்கிறான் என்று   இராமன் நினைக்கலாம். நாமும் அப்படித்தான் நினைப்போம்.

எனவே வசிட்டன் சொல்கிறான் "மறத்தியோ, மறைகளின் வரம்பு கண்ட நீ"


மறைகள் (வேதம் முதலியவை ) அப்படித்தான் சொல்கின்றன. நீ அதைப் படித்து இருகிறாய். மறந்து விட்டாயா என்று அவனுக்கு ஞாபகப் படுத்துகிறான்.

இராமன் ஏதோ மறைகளை கடமைக்கு படித்தவன் அல்லன். அவற்றின் எல்லைகளை   கண்டவன்.அவற்றின் முடிவை  அறிந்தவன். அவை சொல்வதின்  அர்த்தம் முழுதும் அறிந்தவன்.

தசரதன் இறந்தான் என்று வருந்தாதே, தசரதன் மீண்டும் பிறந்தான் என்று எண்ணிக் கொள். துக்கம் எங்கே வரும் ?

இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே    
யொழுக்க முடையார்வாய்ச் சொல்


வாழ்வில் இழுக்கம் வரும்போது உயர்ந்தவர்களின் சொற்கள் வழுக்கும் நிலத்தில் ஊன்று கோல் போல உதவும் என்பது வள்ளுவம்.

வசிட்டனின் வார்த்தைகளை இன்னும் எடுத்துச் சொல்வேன்


Friday, November 8, 2013

திருக்கோயில் திருவெண்பா - மருந்து வேண்டாம்

திருக்கோயில் திருவெண்பா - மருந்து வேண்டாம் 



கிழம் இப்படித்தான் படுத்துது என்று மகளோ மருமகளோ அலுத்துக் கொள்வது அவர் காதில் விழாமல் இல்லை.

அவர் காதில் விழுவது பற்றி அவர்களும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

இன்னும் எத்தனை நாள் என்று தாத்தாவும் மோட்டுவளையை பார்த்துக் கொண்டிருக்கிறார்...கண்ணோரம் ஈரம்...

பக்கத்து மேஜையில் மருந்துகள் குமிந்து கிடக்கின்றன.....சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது என்று தாத்தா தலையை திருப்பிக் கொள்கிறார்

பாடல்


உய்யும் மருந்திதனை உண்மின் எனஉற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் - பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.

சீர் பிரித்த பின்

உய்யும் மருந்தினை உண்மின் என உற்றார்
கையைப் பிடித்து எதிரே காட்டிய கால் - பைய
எழுந்து இருமி யான் வேண்டேன் என்னா முன் நெஞ்சே
செழுந் திரு மயானமே சேர்


பொருள் வேண்டுமா என்ன ?


Thursday, November 7, 2013

மங்கையராகப் பிறப்பதற்கே - கவிமணி பாடல்

மங்கையராகப் பிறப்பதற்கே - கவிமணி பாடல் 




 மங்கையா ராகப் பிறப்பதற்கே - நல்ல
     மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ - இந்தப்
     பாரில் அறங்கள் வளரும், அம்மா!


முதல் இரண்டு வரி எல்லோருக்கும் தெரியும்....

அடுத்த இரண்டு வரி மிக மிக இனிமையான வரிகள் ....

பெண்கள் கை பார்த்துதான் இந்த உலகில் அறங்கள்  வளர்கின்றன.பெண் இல்லாவிட்டால் அறம் எங்கே வளரப் போகிறது ? அவள் பால் நினைத்து ஊட்டும் தாய். 


பெண்மையின் சிறப்பை கவி மணி மிக அழகாகப் பாடி  இருக்கிறார்.படித்து இன்புறுங்கள்.


741 அல்லும் பகலும் உழைப்பவர் ஆர்? - உள்ளத்து
     அன்பு ததும்பி யெழுபவர் ஆர்?
கல்லும் கனியக் கசிந்துருகித் - தெய்வ
     கற்பனை வேண்டித் தொழுவர் ஆர்?

742 ஊக்கம் உடைந்தழும் ஏழைகளைக் காணில்
     உள்ளம் உருகித் துடிப்பவர் ஆர்?
காக்கவே நோயாளி யண்டையிலே - இரு
     கண்ணிமை கொட்டா திருப்பவர் ஆர்?

743 சிந்திய கண்ணீர் துடைப்பவர் ஆர்? - பயம்
     சிந்தை யகன்றிடச் செய்பவர் ஆர்?
முந்து கவலை பறந்திடவே - ஒரு
     முத்தம் அளிக்க வருபவர் ஆர்?

உள்ளந் தளர்வுறும் நேரத்திலே - உயிர்
     ஊட்டும் உரைகள் உரைப்பவர் ஆர்?
அள்ளியெடுத்து மடியிருத்தி - மக்கள்
     அன்பைப் பெருக்கி வளர்பவர் ஆர்?

745 நீதி நெறிநில்லா வம்பருமே - நல்ல
     நேர்வழி வந்திடச் செய்பவர் ஆர்?
ஓதிய மானம் இழந்தவரை - உயர்
     உத்தமர் ஆக்க முயல்பவர் ஆர்?

746 ஆவி பிரியும்அவ் வேளையில் - பக்கத்து
     அன்போ டகலா திருப்பவர் ஆர்?
பாவி யமனும் வருந்திடாமல் - ஈசன்
     பாதம் நினைந்திடச் செய்பவர் ஆர்?

747 ஏங்கிப் புருஷனைத் தேடியழும் - அந்த
     ஏழைக் கிதஞ்சொல்லி வாழ்பவர் ஆர்?
தாங்கிய தந்தை யிழந்தவரைத் - தினம்
     சந்தோஷ மூட்டி வளரப்பவர் ஆர்?

748 சின்னஞ் சிறிய வயதினிலே - ஈசன்
     சேவடிக் கன்பெழச் செய்பவர் ஆர்?
உன்னம் இளமைப் பருவமெலாம் - களிப்பு
     உள்ளம் பெருகிடச் செய்பவர் ஆர்?

749 மண்ணக வாழ்வினை விட்டெழுந்து - மனம்
     மாசிலா மாணிக்க மாயொளிர்ந்து
விண்ணக வாழ்வை விரும்பிடவே - நிதம்
     வேண்டிய போதனை செய்பவர் ஆர்?

750 அன்பினுக் காகவே வாழ்பவர் ஆர்? - அன்பின்
     ஆவியும் போக்கத் துணிபவர் ஆர்?
இன்ப உரைகள் தருபவர் ஆர்? - வீட்டை
     இன்னகை யாலொளி செய்பவர் ஆர்?

751 இப்பெரு நற்கரு மக்களெல்லாம் - உமக்கு
     ஈசன் அளித்த உரிமைகளாம்
மெய்ப்பணி வேறும் உலகில் உண்டோ? - இன்னும்
     வேண்டிப் பெரும்வரம் ஒன்றுளதோ?

Tuesday, November 5, 2013

கந்தர் அநுபூதி - இன்னும் ஒருவற்கு இசைவிப்பதுவோ?

கந்தர் அநுபூதி - இன்னும் ஒருவற்கு இசைவிப்பதுவோ?


மனைவியுடனோ, காதலியிடமோ பத்து பேர் முன்னிலையில் இருந்து பேசினால் இனிமை இருக்குமா ? தனிமையில் அவளோடு பேசினால் இனிமை இருக்குமா ? 

தனிமையில் பேசுவதில் தான்  சுகம்.

மனைவி மற்றும் காதலிக்கே அப்படி என்றால் இறைவனுக்கு எப்படி ?

இலட்சம் பேருக்கு நடுவில், கோவிலில், கும்பலுக்கு , கோஷத்துக்கு நடுவில் இறைவனோடு ஒன்ற முடியுமா ?

தனிமையில் இருந்து சிந்திக்க வேண்டும். அப்போதுதான் அது என்ன என்று தெரிய வரும். நண்பர்களிடம் விவாதித்து அறிய முடியாது. 

இறை அனுபவம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். 

பாடல் 

தன்னந் தனிநின் றதுதா னறிய
இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே

சீர் பிரித்த பின் 

தன்னந் தனி நின்று  அது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.

பொருள் 

தன்னந் தனி நின்று = தனியாக நின்று, தனியாக இருந்து 

அது = அதனை 

தான் அறிய = தான் அறிந்து கொள்ள, அறிந்து கொண்டதை  

இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ? = மற்றவர்களிடம் சொல்லித் தெரிய வைக்க முடியுமா 

மின்னும் கதிர் வேல் = மின்னல் ஒளி வீசும் 

விகிர்தா =  உருவம் மாறுபவன்  

நினைவார் = நினைப்பவர்கள் 

கின்னம் = இன்னல்கள் 

களையும் = களையும் 

க்ருபை = அன்பு 

சூழ் சுடரே = சூழும் சுடரே 




Monday, November 4, 2013

கந்தர் அநுபூதி - அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ ?

கந்தர் அநுபூதி -  அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ ?


எல்லாவற்றையும் அறிவால் அறிந்து  கொள்ள முடியுமா ? எல்லாம் தர்க்கத்தில் அடங்குமா ? அறிவால் அறிய முடியாதது என்று ஒன்று இருக்குமா ? அப்படி ஒன்று இருக்கும் என்பதை அறிவு அறியுமா ?

அதை அறிந்து கொள்ள முடியும் என்றால் அப்படி அறிவது எது ? அறிவா ?

வெறும் அறிவை மட்டும் கொண்டு அறியமுடியாது அது. அவன் அருள் இன்றி அவனை அறிய முடியாது என்கிறார்  அருணகிரி நாதர்.

பாடல்

முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே. 13

சீர் பிரித்த பின்

முருகன், தனிவேல் முனி, நம் குரு .. என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,

இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.


பொருள்

முருகன் = முருகன்

தனிவேல் முனி = தனித்துவமான வேலைக் கொண்ட முனிவன்

நம் குரு = அவன் நமது குரு. நமக்குத் சொல்லித் தரும் யாருமே குரு தான். என்னை கேட்டால் google  ம், விக்கி பீடியாவும் நமக்கு குருதான். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்பார் அருணகிரி. குருவாய் வந்து ஆண்டு கொண்டார் மணிவாசகரை.

என்று = என்று


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ = அருளின் மூலமே அறிந்து கொள்ள முடியும். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர்

மிகச் சிறிய பொருள்களை சாதாரண கண்ணால் காண முடியாது. நுண்ணோக்கி (microscope ) வேண்டும். தூரத்தில் உள்ள பொருள்களை அறிய தொலை நோக்கி வேண்டும். அவனை அறிய அவன் அருள் வேண்டும். அததை அறிய அதற்குரிய உபகரணங்கள் வேண்டும்.


உரு அன்று = அது உருவம் உள்ளது அன்று. அப்படி என்றால் படங்களும், சிலைகளும் காண்பிப்பது அவன் உருவை அன்று. அவனுக்கு உருவம் இல்லை.

அரு அன்று = உருவம் இல்லாதது அருவம். அது அருவமும் அன்று.

உளது அன்று = உள்ளது அன்று

இலது அன்று = இல்லாததும் அன்று



இருள் அன்று, ஒளி அன்று = இருளும் அன்று, ஒளியும் அன்று

என நின்றதுவே = என நின்றது.

அது என்ன உரு அன்று, அரு அன்று, ஒளி அன்று, இருள் அன்று ...ஒரே குழப்பமாக  இருக்கறதே...

ஒரு குழப்பமும் இல்லை...ரொம்ப எளிதானது....

நம் உடலில் இடம் வலம் என்று இரண்டு பகுதிகள் இருக்கிறது அல்லவா ? அதில் குழப்பம் இல்லையே .

வலது எங்கே முடிகிறது ? இடது எங்கே ஆரம்பிக்கிறது ?

கை எங்கே முடிகிறது , விரல் எங்கே ஆரம்பிக்கிறது ?

நம்மால் சொல்ல முடியாது.

பகல் எந்த நொடியில் முடிந்து இரவு எந்த நொடியில் ஆரம்பிக்கிறது ?

சொல்ல முடியாது.

ஏன் சொல்ல முடியாது ?

வாழ்வில் நாம் காணும் பிரிவுகள் எல்லாம் பிரிவுகளே அல்ல. முழுமையான ஒன்றின் தொடர்ச்சிதான். நம் வசதிக்கு நாம் ஒன்றிற்கு வலது என்றும் மற்றதற்கு  இடது என்றும் பெயர் இட்டிருக்கிறோம். உடல் ஒன்று தான்.

நீங்கள் வலதும் இல்லை, இடதும் இல்லை. முன்னும் இல்லை பின்னும் இல்லை. நீங்கள் ஒன்றுதான்.

அருவமும், உருவமும் ஏதோ ஒன்றின் இரண்டு  முனைகள்.ஒரு முனை அருவம். ஒரு முனை உருவம்.

இரண்டும் இல்லை. இரண்டும் தான்.

உருவமும், அருவமும் ஏதோ ஒன்றின் வெளிப்பாடு.

அது வரை புரிகிறது.

அதற்கு மேல் புரிய அவன் அருள் வேண்டும் என்கிறார் அருணகிரி....


என்ன செய்யலாம் ?




பெரிய புராணம் - இறைவனைக் காண எத்தனை காலம் ஆகும்

பெரிய புராணம்  - இறைவனைக் காண எத்தனை காலம் ஆகும் 


இறைவன் இருக்கிறானா இல்லையா என்று வாதித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு புறம் இருக்கட்டும்.

இறைவன் இருக்கிறான் என்று வைத்துக் கொண்டால் அவனை காண எத்தனை ஆகும் ?

ஒரு பிறவி ? பல பிறவி ?

அவனைக் காண என்ன என்ன செய்ய வேண்டும் ?

ஞானம் வளர்க்க வேண்டும் ? தான தருமங்கள் செய்ய வேண்டும் ? பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டும் ? தவம் செய்ய வேண்டும் ?


அவ்வளவு எல்லாம் வேண்டாம்...

ஆறே நாள்...தொடங்கிய ஆறே நாளில் இறைவனை கண்டார் கண்ணப்ப நாயனார்.

பெரிய ஞானி இல்லை. தானமும் தவமும் செய்யவில்லை. படிப்பறிவு கிடையாது.

புலால் உண்பார்.

உயர் குலப் பிறப்பு கிடையாது.

நாவுகரசருக்கும், மணிவாசகருக்கும் நாள் ஆனது.

கண்ணப்ப நாயனார் ஆறே நாளில் இறைவனை அடைந்தார்.

அவர் இறைவனை அடைந்தார் என்பதை விட இறைவன் அவரை வந்து அடைந்தார்.

கண்ணப்ப நாயனார் வாழ்க்கையைப் பற்றி தெய்வப் புலவர் சேக்கிழார் சொல்கிறார். அதில் இருந்து சில பாடல்கள்.

கண்ணப்ப நாயனாரின் பெட்ரோர் பற்றிய பாடல்

பாடல்


பெற்றியால் தவமுன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால்
 குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலை நின்றுள்ளான் 
 வில் தொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான்

 மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள்

பொருள் உரை

தவம் முற்பிறப்பில் செய்தவனாயினும் (கண்ணப்ப நாயனாரின் தந்தை நாகன்), இந்தப் பிறவியின் சார்பால் குற்றம் செய்வதையே குணமாகக் கொண்டு வாழ்ந்தான். சிங்கம் போல கோபம் உள்ளவன். விற் தொழிலில் வல்லவன். அவன் மனைவி தத்தை என்பவள்.

பொருள்


பெற்றியால் = தன்மையால்

தவமுன் செய்தான் ஆயினும் = முற் பிறப்பில் தவம் செய்தவனாயினும். ஏன் முற்பிறப்பில் தவம் செய்தான் என்று கூறுகிறார் ? இந்தப் பிறவியில் ஒன்றும் செய்ய வில்லை என்று தெரிகிறது. ஆனால், கண்ணப்ப நாயனார் போன்ற சிறந்த மகனை பெற்று எடுத்ததால் அவன் முற்பிறப்பில் தவம் செய்திருக்க வேண்டும் என்று கொள்கிறார் சேக்கிழார்.

பேற்றைத் தவம் சற்றும் செய்யாத என்னை, பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா  என்பார் அருணகிரி


பிறப்பின் சார்பால் = (வேடுவர் குலத்தில் வந்து பிறந்த ) பிறப்பின் சார்பால்


குற்றமே குணமா வாழ்வான் = குற்றங்கள் செய்வதையே குணமாகக் கொண்டு வாழ்வான். உயிர் கொலை புரிவது குற்றம்.

கொடுமையே தலை நின்றுள்ளான் = கொடுமை செய்வதில் சிறந்து விளங்கினான்

வில் தொழில் விறலின் மிக்கான் = வில் தொழில் சிறந்து வெற்றி பெற்று நின்றான்

வெஞ்சின = வெம்மையான சினம் கொண்ட 

மடங்கல் = சிங்கம்

போல்வான் = போன்றவன்


மற்றவன் = அவனுடைய

குறிச்சி = குறிஞ்சி

வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள் = வாழ்க்கை மனைவியும் தத்தை என்று சொல்பவள்.





Saturday, November 2, 2013

பெரிய புராணம் - நா அடங்கா முன்னம்

பெரிய புராணம்  - நா அடங்கா முன்னம் 



தாத்தா படுக்கையில் படுத்திருக்கிறார்.  ரொம்ப முடியவில்லை. தாகமாக இருக்கிறது. பசிக்கிறது. வயதாகி விட்டது என்பதற்காக பசியும் தாகமும் போயா விடுகிறது.

கொஞ்சம் கஞ்சி கொடு, தவிக்கிறது கொஞ்சம் தண்ணி தா என்று கேட்க்க நினைக்கிறார்...நாக்கு நடுங்குகிறது. பேச்சு வரவில்லை. எப்படி சொல்லி, என்ன கேட்பார். கேட்டால் கிடைக்கும். கேட்க முடியவில்லை.

பேசிய நாக்குதான்...இன்று பேச்சு வரவில்லை....

அப்படி ஒரு நாள் வருவதற்கு முன், அவன் பெயரை சொல்லிக் கொண்டிரு. பின்னாளில் சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்தால் தண்ணி கேட்க்கக் கூட நாக்கு உதவாமல் போகலாம்...அவன் பெயரை எங்கே சொல்வது....

 அப்போதைக்கு இப்போதே சொல்லி வையுங்கள்

பாடல்

கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்றுநடுநடுத்து நாவடங்கா முன்னம் - பொடியடுத்தபாழ்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.

பொருள்

கடுவடுத்த நீர்கொடுவா = கடுக்காய் என்று ஒரு காய் உண்டு. அதை தண்ணீரில் போட்டு வைப்பார்கள். அதற்க்கு சில மருத்துவ குணங்கள் உண்டு. அந்தத் தண்ணீரை கொண்டு வா

 காடி தா = காடி என்றால் புளித்த கஞ்சி. அதை கொண்டு வா 

என்று = என்று

நடுநடுத்து நாவடங்கா முன்னம் = சொல்லுவதற்குள், நாக்கு நடுங்கி சொல்ல முடியாமல் போவதற்கு முன்


பொடியடுத்த = பொடி என்றால் சாம்பல். சாம்பல் நிறைந்த

பாழ் கோட்டஞ் = பாழடைந்த கோட்டை (இடு காடு )

சேரா முன் = சேர்வதற்கு முன்னால்

பன் மாடத் = பல மாடங்கள் கொண்ட

 தென் குடந்தைக் = குடந்தைக்கு தென் புறம் உள்ள

கீழ்க்கோட்டஞ் = கீழ் கோட்டம் என்ற ஊரில் உள்ள அவன் பெயரை 

செப்பிக் கிட = சொல்லிக் கொண்டிரு

என்னடா இவன், நாளும் கிழமையுமாய் இந்த மாதிரி பாடலை எழுதுகிறானே என்று நினைப்பவர்களுக்கு ....

பயத்தில் பெரிய பயம் மரண பயம்.

அந்த பயத்தை வென்று விட்டால் வாழ்வில் வேறு எந்த பயமும் வராது.

பயப்படும் விஷயத்தை கண்டு ஓடினால் பயம் மேலும் அதிகம் ஆகும்.

இந்த நன் நாளில், எல்லா பயன்களும் உங்களை விட்டு ஓட, இந்த பாடல் அடிகோலட்டும்

"நாமங்கள் நவின்றேலோர் எம்பாவாய்"



நல்வழி - உரைத்தாலும் தோன்றாது உணர்வு

நல்வழி - உரைத்தாலும் தோன்றாது உணர்வு


பூக்காமலே காய்க்கும் மரங்கள் உண்டு. அது போல சொல்லாமலேயே புரிந்து கொள்ளும் மனிதர்களும் இருக்கிறார்கள். சில சமயம் நல்ல விதையை விதைத்தாலும், விதைத்த இடம் பழுதாக இருந்தால் செடி முளைக்காது. அது போல முட்டால்களிடமும்,  தீயவர்களிடமும் நல்லததை சொன்னாலும் அவர்களுக்கு மண்டையில் ஏறாது. அவர்கள் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள்...நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று.


பாடல்

பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே-தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலுந் தோன்றா துணர்வு.


பொருள்


இராமாயணம் - நோக்கியதும் கண்டதும்

இராமாயணம் - நோக்கியதும் கண்டதும் 


இராமனும் சீதையும் கானகதில் போய் கொண்டிருக்கிறார்கள். நாட்டுப் பிரச்னை இல்லை, வீட்டுப் பிரச்சனை இல்லை. அவனும் அவளும் மட்டும். துணைக்கு இலக்குவன்.

அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்று கம்பன் காட்டுகிறான்.

அன்புள்ளவர்கள் அருகில் இருந்தால் கானகம் கூட சொர்க்கம் தான்.

அவர்கள் செல்லும் வழியில் ஒரு பெரிய ஏரி. அந்த ஏரியில் நிறைய தாமரை மலர்கள் பூத்து இருக்கின்றன. அந்த ஏரியில் சக்கர வாகம் என்ற பறவைகள் தங்களுடைய வளைந்த கழுத்துகளை வளைத்து கண் மூடி உறங்கிக் கொண்டிருகின்றன. அதன் அந்த வளைந்த உருவத்தை பார்க்கும் போது இராமனுக்கு சீதையின் மார்புகளை பார்க்கும் எண்ணம் வருகிறது. அங்கிருந்த பெரிய குன்றுகளை பார்க்கும் போது சீதைக்கு இராமனின் உயர்ந்த தோள்கள் நினைவுக்கு வருகிறது. அந்த தோள்களின் மேல் தன் கண்ணை வைத்தாள் ....

தலைவனும் தலைவியும், தனிமையில் ஒருவரை ஒருவர் கண்டு இரசித்து இன்புற்றதை கம்பன் எவ்வளவு அழகாகச் சொல்கிறான்....


பாடல்



நாளம்கொள் நளினப் பள்ளி, 
     நயனங்கள் அமைய, நேமி 
வாளங்கள் உறைவ கண்டு, 
     மங்கைதன் கொங்கை நோக்கும், 
நீளம்கொள் நிலையோன்; மற்றை 
     நேரிழை, நெடியநம்பி 
தோளின்கண் நயனம் வைத்தாள், 

     சுடர்மணித் தடங்கள் கண்டாள்.

பொருள்



நாளம் கொள் = நாளம் என்றால் தண்டு. நீண்ட தண்டினை கொண்ட 

நளினப் = மென்மையான

பள்ளி = படுக்கை. தாமரை மலர்களால் ஆன படுக்கை.


நயனங்கள் = கண்கள்

அமைய = அமைதி உற ...அதாவது தூங்க

நேமி வாளங்கள் = சக்ர வாகம் என்ற ஒரு வகை நீர் பறவை

உறைவ கண்டு = இருப்பதைக் கண்டு

மங்கைதன் கொங்கை நோக்கும்  = சீதையின் மார்பை நோக்கினான் இராமன்

நீளம் கொள் நிலையோன் = நீண்ட வில்லை கொண்ட இராமன்

மற்றை நேரிழை = அப்போது சீதை

நெடிய நம்பி = உயர்ந்த இராமனின்

தோளின் கண் நயனம் வைத்தாள் = தன் பார்வையை அவன் மேல் வைத்தாள்

சுடர்மணித் = ஒளி வீசும்

தடங்கள்  = குன்றுகளை

கண்டாள் = பார்த்தாள் 


Friday, November 1, 2013

கந்தர் அலங்காரம் - புளித்த தேன்

கந்தர் அலங்காரம் - புளித்த தேன் 




பெரும் பைம் புனத்தினுள், சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை, மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள,
அரும்பும் தனி பரமானந்தம்! தித்தித்தது அறிந்தவன்றோ!
கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து, அற கைத்ததுவே!

சில சமயம் அல்வா,  குலோப் ஜாமூன் போன்ற இனிப்புகளை சாப்பிட்டபின் காப்பி குடித்தால் அது இனிப்பாக இருக்காது. காப்பியில் சர்க்கரை இருந்தாலும் அதற்கு முன் சாப்பிட்ட அதிக இனிப்பான பலகாரத்தால் காப்பி சுவை  குன்றுகிறது.

முருகன் அருள் பெற்ற பின், அருணகிரிக்கு இந்த உலகில் எல்லாமே சுவை குறைந்து விட்ட மாதிரி தெரிகிறது.

அதிக பட்ச இனிப்பு உள்ள தேனும் கரும்பும் அவருக்கு கசக்கிறது. அப்படி என்றால் முருகன் அருள் அவ்வளவு சுவை.


பொருள்

பெரும் = பெரிய

பைம் = பசுமையான

புனத்தினுள் = திணை புனத்தில்

சிற்றேனல் = ஏனல் என்றால் கம்பு. கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்கள் இவற்றை

காக்கின்ற = காவல் காக்கின்ற

பேதை = வெகுளிப் பென்னாணன வள்ளியின்

கொங்கை = மார்புகளை

விரும்பும் = விரும்பும்

குமரனை = குமாரனானான முருகனை

மெய் அன்பினால் = மெய் அன்பினால்

மெல்ல மெல்ல உள்ள = மெல்ல மெல்ல நினைக்க

அரும்பும் = ஒரு பூ அரும்பு மெல்ல மெல்ல அரும்புவதைப் போல, மலர்வதைப் போல

தனி = தனிச் சிறப்பான

பரமானந்தம்! = பரமானந்தம்

தித்தித்தது = தித்தித்தது

அறிந்தவன்றோ! = அறிந்த அன்றே

கரும்பும் துவர்த்து = கரும்பு துவர்த்து

செந்தேனும் புளித்து = சுவையான தேன் புளித்து

அற கைத்ததுவே = ரொம்ப கசந்து போனது

உலகத்தில் உள்ள பொருள்கள் மேல் , அனுபவங்களின் மேல் இன்பமும், சுவையும் இருந்தால்  இறை அருளின் சுவை இன்னும் அறியப் படவில்லை என்று அர்த்தம்.

இறை அனுபவம் வந்து விட்டால் இந்த உலகின் சுவைகள் ஒன்றும் பெரிதாகத் தெரியாது.

பற்றறுப்பது ஒன்றும் பெரிய காரியம் இல்லை - பற்றற்றான் பற்றினை பற்றி விட்டால்.

பெரிய ஒன்று கிடைத்த பின் மற்றவை எல்லாம் சிறிதாகப் போய் விடும்.

சிந்திப்போம்


Thursday, October 31, 2013

இராமாயணம் - நீ என் பிழைதனை ?

இராமாயணம் - நீ என் பிழைதனை ?


பிள்ளைகள் அம்மாவிடம் வந்து அப்பா திட்டினார், அப்பா அடித்தார் என்று குற்றச் சாட்டு கூறினால் பெரும்பாலான அம்மாக்கள் என்ன ஏது என்று கேட்காமல் அப்பாவை திட்டத் தொடங்கி  விடுவார்கள்.

அப்பா என்று இல்லை, பிள்ளை யாரைப் பற்றி குற்றம் சொல்லிக் கொண்டு வந்தாலும், உடனே அவன் யார் பேரில் குற்றம் சொல்கிறானோ அவனை வைய வேண்டியது.

என்னை காடு போ என்று அரசன் சொன்னான் என்று இராமன் சொன்னவுடன் கோசலை வருந்தினாள்.

ஆனால் உடனே இராமனிடம் கேட்டாள் "உன் மேல் அன்பு கொண்ட அரசன் உன்னை கானகம் போகச் சொல்லும் அளவிற்கு நீ என்ன தவறு செய்தாய் " என்று.

இராமன் தவறு செய்திருக்க மாட்டான் என்று அவளுக்குத் தெரியும். இருந்தாலும், அவள் கேட்கிறாள்.

உணர்ச்சி வசப் படக் கூடாது. வருத்தம் ஒரு புறம் இருந்தாலும் "நீ என்ன செய்தாய் " என்று கேட்கிறாள்.

கோசலையின் வருத்தம் பற்றி கம்பன் கூறுகிறான்

ஏழை ஒருவன் கொஞ்சம் பொன் பெற்று பின் அதை இழந்தால் எப்படி வருந்துவானோ அப்படி வருந்தினாள் என்று கூறுவான்.

பிள்ளை இல்லாமல் பல காலம் இருந்து பெற்ற பிள்ளை, இப்போது இழக்கப் போகிறாள்.

வேண்டுமானால் இப்படி வைத்துக் கொள்ளுங்கள்....ஏழைக்கு லாட்டரியில் பாத்து கோடி  பரிசு விழுந்தது. தன்  வறுமை எல்லாம் போய் விட்டது. இனி வாழ்வில் வசந்தம் தான் என்று இருந்தவனுக்கு , பரிசுச் சீட்டு தொலைந்து போனால் எப்படி இருக்கும்  ? அப்படி வருந்தினாள் கோசலை.


பாடல்

‘அன்பு இழைத்த மனத்து அரசற்கு நீ
என் பிழைத்தனை? ‘என்று நின்று ஏங்குமால்;
முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர்
பொன் பிழைக்கப் பொதிந்தனர் போலவே.


பொருள் 

Tuesday, October 29, 2013

கம்ப இராமாயணம் - வாசகம் என்னும் அனல்

கம்ப இராமாயணம் - வாசகம் என்னும் அனல்


அரசன் என்னை கானகம் போகச் சொன்னான் என்று இராமன் சொன்ன அந்த வாசகம் தீ போல் கோசலையின் காதில் நுழைந்தது. தீயை தொட வேண்டும் என்று அல்ல..அருகில் சென்றாலே  சுடும்.அது போல அந்த வாசகம் அவள் காதைத் தொடவில்லை...அதற்கு முன்பே சுட்டது என்றான் கம்பன்.


பாடல்

ஆங்கு, அவ் வாசகம் என்னும் அனல், குழை
தூங்கு தன் செவியில் தொடராமுனம்,
ஏங்கினாள்; இளைத்தாள்; திகைத்தாள்; மனம்
வீங்கினாள்; விம்மினாள்; விழுந்தாள் அரோ.


பொருள்


Monday, October 28, 2013

இராமாயணம் - ஈண்டு உரைத்த பணி

இராமாயணம் - ஈண்டு உரைத்த பணி


என்னை நல்ல நெறியில் செலுத்த சக்கரவர்த்தி சொன்ன பணி ஒன்று உண்டு என்று இராமன் கோசலையிடம் கூறினான்.

மெல்ல மெல்ல தான் கானகம் போக வேண்டும் என்ற செய்தியை சொல்ல வருகிறான்.

"பெரிய கானகத்தில் உள்ள பெரிய தவம் செய்யும் முனிவர்களோடு பதினாலு வருடம் இருந்துவிட்டு வர வேண்டும்" என்று கூறினார் என்று கூறினான்.

பாடல்

"ஈண்டு உரைத்த பணி என்னை?" என்றவட்கு,
'"ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ், அகல் கானிடை
மாண்ட மாதவத் தோருடன் வைகிப்பின்,
மீண்டு நீ வரல் வேண்டும்" என்றான்' என்றான். 

பொருள்

"ஈண்டு உரைத்த பணி என்னை?" என்றவட்கு = இன்று உரைத்த வேலை என்ன என்று கேட்ட கோசலையிடம்

ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ் = பதினாலு வருடம்

அகல் கானிடை = அகன்ற கானகத்தில், விலகி நிற்கும் கானகத்தில்

மாண்ட = மாண்புள்ள 

மாதவத் தோருடன் = மா தவம் செய்தோருடன்

வைகிப் பின் = உடன் இருந்து பின்

மீண்டு நீ வரல் வேண்டும்" என்றான்' என்றான். = மீண்டும் நீ வர வேண்டும் என்று கூறினான் என்றான்.

முனிவர்களை சென்று பார்த்து விட்டு வரும்படி சொன்னான் என்று மிக மிக   எளிதாக  சொல்கிறான்.

பிரச்சனைகளை நாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இராமன் பாடம் நடத்துகிறான்.

கைகேயி சொன்னது

"தாழிரும் சடைகள் தாங்கி, தாங்கரும் தவம் மேற்கொண்டு, பூழி வெங் கானம் நணுகி, புண்ணிய துறைகள் ஆடி" என்று.

இராமன் சொல்கிறான். முனிவர்களை பார்த்துவிட்டு வரும்படி அரசன் சொன்னான் என்கிறான்.

துன்பங்களை துச்சமாக எண்ணிப் பாருங்கள். அவை பெரிதாக இருக்காது.

சின்ன விஷயத்தை கூட பெரிதாக பெரிதாக ஊதி பெரிதாக்கி கவலைப்  படுபவர்களும்  இருகிறார்கள். அவர்கள் வாழ்கையை நரகமாக்கி கொள்பவர்கள்.

காலா, என் காலருகில் வாடா என்று பாரதி சொன்னது  போல...

மரணப் பிரமாதம் நமக்கு இல்லை என்றார் அருணகிரி

துன்பங்களை நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கிறது அதன் வேகம்....


இராமனிடம் இருந்து படிப்போம். .



திருவாசகம் - கண்டேன் கண்டேன்

திருவாசகம் - கண்டேன் கண்டேன்

இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற சர்ச்சை ஒரு பக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. காணதவர்கள் , இறைவன் இல்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இறைவனை கண்டவர்கள் , கண்டேன் கண்டேன் என்று சொல்கிறார்கள்.

மாணிக்க வாசகர் தான் இறைனை கண்டதாக வாக்கு மூலம் தருகிறார் - கண்ட பத்து என்ற பத்து பாடல்களில்.

நமக்கு வரும் மூன்று பெரிய துன்பங்கள் எவை ?

பிணி, மூப்பு, சாக்காடு - இந்த மூன்றிலும் இருந்து யாரும் தப்ப முடியாது. மூப்பு வந்தே தீரும். சாக்காடும் வந்தே தீரும். இடையில் பிணி வரும் போகும்.

இந்த மூன்றையும் தவிர மனிதனுக்கு துன்பம் தருவது - ஆசை அல்லது பற்று.

உறவுகள் மேல் , பொருள்கள் மேல், அனுபவங்கள் மேல் கொள்ளும் பற்று.

மாணிக்க வாசகர் சொல்கிறார், இந்த நான்கையும் மாற்றி தனக்கு காட்சி தந்ததாகச் சொல்கிறார்.

பாடல்



பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும்
உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம் பலம்மன்னி
மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே.

பொருள்


Sunday, October 27, 2013

குறுந்தொகை - காமர் மாந்தி

குறுந்தொகை - காமர் மாந்தி 


இது நடந்ததா, நடக்குமா இல்லை வெறும் கற்பனையா என்று தெரியாது. இருந்தாலும் மனதைத் தொடும் பாடல்.

தோழி சொல்கிறாள் தலைவனிடம்

கரிய தலையை கொண்ட ஆண்  குரங்கு இறந்த  பின்,அதன் ஜோடி பெண் குரங்கு அதன் குட்டிகளை தன் உறவினர்களிடம் கொடுத்து விட்டு மலையின் உச்சிக்கு சென்று அங்கிருந்து குதித்து உயிரை  மாய்த்துக் கொள்ளும் மலைகளை கொண்ட நாட்டைச் சேர்ந்தவனே, இனிமேல் இரவு நேரத்தில் தலைவியை காண வராதே...இரவில், மலை பாங்கான வழியில் உனக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று எங்களுக்கு வருத்தமாய் இருக்கிறது.....

பாடல்

கருங்கண் தாக்கலை பெரும் பிறிது உற்றனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.

பொருள்

கருங்கண் = கரிய கண்கள் 

தா(க்) = தாவும்

கலை =  ஆண் குரங்கு

பெரும் பிறிது = பெரிய பிரிவு , அதாவது மரணம்

உற்றனக் = அடைந்ததை

கைம்மை = விதவையான

உய்யாக் = வாழும் வழி தெரியாத, வாழ விருப்பம் இல்லாத

காமர் மந்தி = காதல் கொண்ட பெண் குரங்கு

கல்லா = வயதாகத

வன் பறழ் = சுட்டித் தனம் நிறைந்த குட்டியை

கிளை முதல் சேர்த்தி = உறவினர்களிடம் சேர்த்துவிட்டு

ஓங்கு = உயர்ந்த

வரை = மலை

அடுக்கத்துப் பாய்ந்து = பள்ளத்தில் பாய்ந்து

உயிர் செகுக்கும் = உயிரை விடும்

சாரல் நாட = அந்த மாதிரி உள்ள நாட்டைச் சேர்ந்தவனே

நடுநாள் = நடு இரவில்

வாரல் = நீ வராதே 

வாழியோ = நீ வாழ்க 

வருந்துதும் யாமே. = நாங்கள் வருந்துவோம்

குரங்குக்கு அவ்வளவு காதல், அவ்வளவு பொறுப்பு....அப்படி என்றால் அந்த ஊர் மக்களைப் பற்றி  என்ன சொல்லுவது....




இராமாயணம் - நாயகன் ஏவியது

இராமாயணம் - நாயகன் ஏவியது 


அரசை பரதனுக்கு கொடுத்து நீயும் உன் தம்பியும் ஒன்றாக நீண்ட நாள் வாழுங்கள் என்று கோசலை சொல்லி விட்டாள் .

அடுத்ததாக , தசரதன் கானகம் போகச் சொன்னான் என்று சொல்ல வேண்டும்.

அதை எப்படி சொல்கிறான் என்று பாப்போம்.

அதற்க்கு முன்னால்,  நீங்கள் இராமன் இடத்தில் இருந்தால் இந்த செய்தியை எப்படி சொல்லி இருப்பீர்கள் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

"அந்தக் கிழவன், அந்த சிங்காரி கைகேயி பேச்சை கேட்டு என்னை காடு போ என்று சொல்கிறான் " என்று கூட நாம் சொல்லலாம்.

அரசு போனது மட்டும் அல்ல, காடும் போக வேண்டும் என்றால் எப்படி இருக்கும் ?

அரசை பரதனுக்கு கொடு என்று கோசலை சொன்னவுடன் இராமன் மகிழ்ந்தான் என்கிறான்  கம்பன். எங்கே தாய் அரசை பரதனுக்கு தருவதற்கு தடை சொல்லி விடுவாளோ என்று நினைத்திருக்கலாம், அல்லது இந்த செய்தியை கேட்டு கோசலை வருந்துவாளோ என்று நினைத்திருக்கலாம்....அப்படி இல்லாமல் கோசலை அரசை பரதனுக்கு கொடு என்று சொன்னவுடன் அதைக் கேட்டு மகிழ்ந்து "சக்கரவர்த்தி, என்னை நல்ல வழியில் செலுத்துவதற்கு இன்னும் ஒன்று சொன்னான் " என்று அடுத்த வரத்தை பற்றி சொல்ல ஆரம்பிக்கிறான்.

பாடல்

தாய் உரைத்த சொல் கேட்டுத் தழைக்கின்ற
தூய சிந்தை அத் தோம் இல் குணத்தினான்,
‘நாயகன், எனை நல் நெறி உய்ப்பதற்கு
ஏயது உண்டு, ஒர் பணி’ என்று இயம்பினான்.


பொருள்


தேவாரம் - கொடுமைபல செய்தன நான்அறியேன்

தேவாரம் - கொடுமைபல செய்தன நான்அறியேன்


நமக்கு துன்பம் வரும்போது எனக்கு ஏன் இந்த துன்பம் வந்தது என்று நாம் வருந்துகிறோம். நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், எனக்கு ஏன் இந்த துன்பம், இந்த வருத்தம் வந்தது என்று கவலைப் படுகிறோம்.


ஒரு செயலை செய்தால் அதற்கு ஒரு விளைவு இருக்கும். அந்த விளைவு நாம் எதிர் பார்த்ததாய் இருக்கலாம் அல்லது வேறு மாதிரி கூட அமையலாம். ஆனால் வினைக்கு விளைவு என்று ஒன்று உண்டு.

அதையே மாற்றி சிந்தித்தால் ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு வினை இருக்க வேண்டும்.

இன்று ஒரு துன்பம் நமக்கு இருக்கிறது என்றால் அதற்கு நாம் ஏதோ செய்திருக்க வேண்டும்.  அதன் விளைவு தான் இந்தத் துன்பம் என்று அறிய வேண்டும்.

நமக்கு நினைவு தெரிந்து நாம் யாருக்கும் எந்த கெடுதலும் செய்திருக்க மாட்டோம். அல்லது நாம் செய்தது சரியா தவறா என்று கூட நமக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.

துன்பம் என்று வந்து விட்டால் மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டு திரியக் கூடாது. நாம் செய்த வல் வினை என்று இருக்க வேண்டும்.

நாவுக்கரசருக்கு பொறுக்க முடியாத வயிற்று வலி வந்தது. என்னனவோ செய்து பார்த்தார் .....வலி குறைவதாய் இல்லை.

இறைவனிடம் முறையிடுகிறார்.

இந்த வலி வந்ததற்கு காரணம் நான் ஏதோ கொடுமை செய்திருக்க வேண்டும். என்ன கொடுமை என்று எனக்குத் தெரியவில்லை. நான் எப்போதும் உன் திருவடிகளையே வணங்கி வந்திருக்கிறேன். அப்படி இருக்க எனக்கு ஏன் இந்த பொறுக்க முடியாத வலி ? இந்த வலியை நீக்கி என்னை காக்க வேண்டும்

பாடல்

கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.


பொருள்


கூற்றாயின வாறு = கூற்று ஆயினவாறு. கூற்றுவன் என்றால் எமன். உயிரையும் உடலையும் கூறு செய்வதால் அவன் கூற்றுவன். எனக்கு வந்த இந்த நோய் எமனைப் போல என்னை வருத்துகிறது. வலி உயிர் போகிறது.

விலக்ககிலீர் = விலக்கி அகற்றி அருளவில்லை

கொடுமைபல செய்தன = நான் பல கொடுமைகளை செய்திருக்கலாம்

நான்அறியேன் = அவை என்ன கொடுமைகள் என்று நான் அறிய மாட்டேன்

ஏற்றாய் = எருதின் மேல் அமர்ந்தவனே

அடிக்கே = உன் திருவடிகளுக்கே

இரவும் பகலும் = இரவும் பகலும்

பிரியாது = இடை விடாமல்

வணங்குவன் எப்பொழுதும் = எப்போதும் வணங்குவேன்

தோற்றாது என் வயிற்றின் = என் வயிற்றில் தோன்றிய

அகம்படியே = உள்ளும் புறமும்

குடரோடு = குடலோடு

துடக்கி = துடக்கி என்றால் தீட்டு. பெண்களுக்கு மாதவிடாய் வரும்போது அதை தீட்டு என்று சொல்லுவார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்கு வற்றில் ஒரு வலி வரும். துடக்கி என்றால் அந்த சமயத்தில் வரும் வலி போல என்று கொள்ளலாம். ஒரு ஆணால் அறிந்து கொள்ள முடியாத வலி அது. நாவுக்கரசர் சொல்கிறார்.

முடக்கியிட = என்னை முடக்கிப் போட

ஆற்றேன்  அடி யேன் = என்னால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை

அதிகைக் = திரு வதிகை என்ற ஊரில்

கெடில = கெடில நதிக் கரையில்  உள்ள

வீரட்டா னத்துறை = எட்டு வீரட்டானத் துறைகளில் ஒன்றான அந்த ஊரில் உறையும் 
 
அம்மானே = அம்மானே

Saturday, October 26, 2013

இராமாயணம் - நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து

இராமாயணம் - நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து

பரதன் உன்னை விட மூன்று மடங்கு நல்லவன் , அவனுக்கு அரசாட்சியை கொடு என்று கோசலை கூறியதை முந்தைய ப்ளாகில்  பார்த்தோம்.

மேலும் கோசலை சொல்கிறாள்

இராமா, மன்னன் இட்ட கட்டளை எதுவாயினும், அது நீதி அல்ல என்று நீ எண்ணக் கூடாது. அதை அப்படியே  ஏற்று செய்வது உனக்கு அறம்.. இந்த அரசை உன் தம்பிக்கு நீ கொடுத்து அவனுடன் ஒற்றுமையாக பல்லாண்டு வாழ்க " என்று வாழ்த்துகிறாள்.


பாடல்

என்று, பின்னரும், ‘ மன்னவன் ஏவியது
அன்று எனாமை, மகனே! உனக்கு அறன்;
நன்று, நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து,
ஒன்றி வாழுதி, ஊழி பல’ என்றாள்.


பொருள்

என்று, பின்னரும் = மேலும் சொல்லுவாள்

மன்னவன் ஏவியது = அரசன் இட்ட கட்டளை

அன்று எனாமை =   நீதியின் பாற்பட்டது என்று எண்ணாமல்

மகனே!  = இராமா

உனக்கு அறன் = அரசன்  அப்படியே செய்வது உனக்கு அறன்

நன்று =  நல்லது

நும்பிக்கு =  உன் தம்பிக்கு

நானிலம் நீ கொடுத்து = இந்த அரசை நீ கொடுத்து

ஒன்றி வாழுதி, ஊழி பல’ என்றாள் =  ஊழிக்  ஒன்றாக வாழுங்கள் என்று வாழ்த்தினாள்


 அப்பா  சொன்னது என்று  நினைக்காதே. அரசன் இட்ட கட்டளை என்று .எடுத்துக் கொள் இராமா என்று கூறுகிறாள்.

அப்பா சொன்னார் என்று எடுத்துக் கொண்டால் "போப்பா , உனக்கு வேறு வேலை இல்லை " என்று அதை உதாசீன படுத்த எண்ணியிருக்கலாம்.

அது மட்டும் அல்ல , அதை செய்வது அரச கட்டளை என்பதால் மட்டும் அல்ல , அதை செய்வது உனக்கு அறன் , கடமை என்று கூறுகிறாள்.

தசரதன் இந்த அரசை பரதனுக்கு கொடுத்தான் என்று கொள்ளாதே.

நீ இந்த அரசை அவனிடம் கொடு என்று கூறுகிறாள் கோசலை.

"நீ இதை நல்கு " என்கிறாள்.

சரி அரசை கொடுத்துவிட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போட்டுக் கொண்டு இருக்காதீர்கள். ஒன்றாக ஒற்றுமையாக ஆண்டு பல வாழுங்கள் என்று வாழ்த்துகிறாள்.

என்ன ஒரு நிதானம். என்ன ஒரு தெளிவு.

அடுத்து இராமன் மெல்ல அடுத்த ஒரு சேதி சொல்லப் போகிறான்...தான் காடு போக வேண்டிய வரத்தை சொல்லப் போகிறான்.

எப்படி சொல்கிறான் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.





Friday, October 25, 2013

இராமாயணம் - நின்னும் நல்லன்

இராமாயணம் - நின்னும் நல்லன் 


நெடு முடி புனைவதற்கு இடையூறு உண்டோ  கேட்ட கோசலையிடம் இராமன் சொன்னான் , நெடு முடி புனைய தடை ஒன்றும் இல்லை. எனக்கு பதில் உன் அன்பு மகன் , பங்கமில் குணத்து என் தம்பி பரதனே துங்க மா முடி சூட்டுகின்றான் என்றான்.

போன ப்ளாகில் சொன்ன மறந்து போனது பரதன் முடி சூட்டுகிறான் என்று இராமன்  சொல்லவில்லை.பரத'னே' முடி சூட்டுகிறான் என்றான். ஏகாரம் உயர்வு சிறப்பு. அவன் மட்டும் தான் முடி சூட்டுகின்றான்.

சரி, இராமன் சொல்லி விட்டான்.

கோசலை அதற்கு என்ன மறு மொழி சொன்னாள் ?

நம் வீட்டில் வந்து "என்னை வேலையை விட்டு போகச் சொல்லி விட்டார்கள்" என்று ஒரு மகனோ, கணவனோ தாயிடமோ, மனைவியிடமோ சொன்னால் என்ன நடக்கும் ?

அவர்களும் கவலைப் பட்டு, அவனையும் கவலைப் படுத்தி, பயப்பட்டு, மற்றவர்களை திட்டி சூழ்நிலையை இன்னும் மோசமாக்கி விடுவார்கள்.

ஒருவர் நம்மிடம் ஒரு துக்க செய்தியை சொல்கிறார் என்றால் அவரை மேலும் பயப் படுத்தக் கூடாது.  காயப் படுத்தக் கூடாது.

அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று அந்த துக்க செய்தியின் தாக்கத்தை குறைக்க முயல வேண்டும்.

கோசலை சொல்கிறாள் ...."முறை என்று ஒன்று உண்டு. அதைத் தவிர்த்துப் பார்த்தால், பரதன் உன்னை விட மூன்று மடங்கு உயர்ந்தவன் , நின்னும் நல்லவன், எந்த குறையும் இல்லாதவன் " என்று கூறினாள் ...

அப்படி கூறியது யார் ? நான்கு சகோதரர்களுக்கும்  அன்பைச் செலுத்தி அவர்களுக்குள் உள்ள வேற்றுமையை மாற்றிய கோசலை என்றான் கம்பன்.

பாடல்

‘முறைமை அன்று என்பது ஒன்று
     உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்;
     நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்’ எனக்
     கூறினள் - நால்வர்க்கும்
மறு இல் அன்பினில்,
     வேற்றுமை மாற்றினாள்.

பொருள்


இராமாயணம் - பங்கம் இல் குணத்து எம்பி

இராமாயணம் - பங்கம் இல் குணத்து எம்பி


கோசலை இராமனிடம் கேட்டாள் - நெடு முடி புனைவதற்கு இடையூறு உண்டோ - என்று.

இராமன் நினைக்கிறான்....என்ன இருந்தாலும் கோசலை  ஒரு பெண், அதிலும் வயதானவள்...தன் மகனுக்கு முடி சூட்டு விழா இல்லை என்றால் வருந்துவாள். உணர்ச்சி வசப் படுவாள். எனவே, அவளிடம்  கொஞ்சம் மெதுவாக நிதானமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று இராமன் நினைக்கிறான்.

எப்போதும் ஒரு துன்பமான செய்தியை சொல்வது என்றால் , யாரிடம் சொல்கிறோம், அவர்கள் மன நிலை எப்படி இருக்கும் என்று  அறிந்து,ரொம்பவும் அதை பெரிது படுத்தாமல் சிந்தித்து சொல்ல வேண்டும்.

யோசித்துப் பாருங்கள், நாமாக இருந்தால் எப்படி சொல்லி இருப்போம் இந்த செய்தியை...

அழுது, ஆர்பாட்டம் பண்ணி, நாமும் கவலைப் பட்டு, கோசலையும் கவலைப் பட வைத்து, பிரச்சனையை இன்னும் பெரிதாக்கி இருப்போம்.

இராமன் எப்படி சொல்கிறான் என்று பாருங்கள்....


பாடல்

மங்கை அம்மொழி கூறலும், மானவன்
செங்கை கூப்பி , 'நின் காதல் திரு மகன்,
பங்கம் இல் குணத்து எம்பி, பரதனே,

துங்க மா முடி சூடுகின்றான்' என்றான்

பொருள்

மங்கை அம்மொழி கூறலும் = கோசலை அப்படி கேட்டவுடன்

மானவன் = பெருமை நிறை இராமன்

செங்கை கூப்பி  = தன் சிவந்த கைகளை கூப்பி

'நின் காதல் திரு மகன், = உன்னுடைய அன்பிற்குரிய திரு மகன்

பங்கம் இல் = குறை இல்லாத

குணத்து எம்பி = குணங்களை கொண்ட

பரதனே = பரதனே


துங்க மா முடி சூடுகின்றான் என்றான் = தூய்மையான முடியை சூட்டுகின்றான் என்றான்


உன் மகனுக்கு முடி என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பரதனும் உன் மகன் தானே. அவனுக்கு முடி என்கிறான்.

கோசலை புரிந்து கொண்டிருப்பாள். இராமனுக்கு இதில் வருத்தம் இல்லை என்று. ஒரு வேளை  இராமன், "கைகேயின் மகன் பரதனுக்கு முடி"  என்று சொல்லி இருந்தால் கோசலை வருந்தி இருப்பாள். கோசலையை   வருந்த விடக் கூடாது  என்று மிக மிக பக்குவமாக  சொல்கிறான்.

பரதன் யார் - பங்க மில் குணத்தவன் - குறை ஒன்றும் இல்லாத குணம் உள்ளவன்.

எம்பி - என் தம்பி.

நின் காதல் திருமகன் - உன் அன்பிற்குரிய திருமகன்

எனவே, அரசாங்க காரியமான முடி சூட்டுதல் நிற்கவில்லை. அது நடக்கும். எனக்கு பதில் பரதன் முடி சூட்டுகிறான் என்றான்.

எவ்வளவு பெரிய சிக்கலான, கடினமான ஒரு விஷயத்தை எவ்வளவு பக்குவமாக எடுத்தச் சொல்கிறான் என்று பாருங்கள்.

இப்படி பேசி பழக வேண்டும்.

நாமும் பயப் பட்டு, மற்றவர்களையும் பயப் படுத்தும்படி பேசக் கூடாது.

அடுத்து கோசலையின்  முறை. அவள் எப்படி பதில் சொல்கிறாள் என்று பார்போம்.





Thursday, October 24, 2013

தேவாரம் - சொல்லும் நா நமச்சிவாயவே

தேவாரம் - சொல்லும் நா நமச்சிவாயவே 


பழக்க வழக்கம் என்றொரு சொற்றொடர் உண்டு. பழக்க வழக்கம்  என்றால் என்ன ?

ஒன்றை பழக்கப் படுத்தி விட்டால் அது வழக்கமாகி விடும்.

நல்ல விஷயங்களைப் நம் உடலுக்கு பழகப் படுத்தி விட்டால் பின் எப்போதும் அதை  மறக்காது.

இறுதிக் காலத்தில் அறிவு குழம்பும், நினைவு தப்பும், புலன்கள் தடுமாறும்...எப்போதும் நல்லதையே செய்து பழக்கப் படுத்திவிட்டால் புலன்கள் அப்போதும் நல்லதையே செய்யும் ...

சுந்தரர் சொல்கிறார், "என் மனம் மறக்கினும், என் நினைவு உன்னை மறக்கினும் ..என் நாக்கு நமச்சிவாய  என்று சொல்லிக் கொண்டே இருக்கும்".

சொல்லும் நா நமச்சிவாயவே

பாடல்

மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.

சீர் பிரித்த பின்

மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன் 
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உன்னை  நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

பொருள்

மற்றுப் = மற்ற

பற்று = பற்றுதல்கள்

எனக்கு இன்றி = எனக்கு இல்லாமல்

நின் திரு பாதமே = உன் திருவடிகளையே

மனம் பாவித்தேன் = மனதில் நினைத்தேன்

பெற்றலும் பிறந்தேன் = பெற்றதால் பிறந்தேன்

இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்  = இனி பிறவாத தன்மை
அடைந்தேன்

கற்றவர் = கற்றவர்கள்

தொழுது  = வணங்கி

ஏத்தும்  = போற்றும்

சீர்க் கறையூரிற் = கறையூரில்

பாண்டிக் கொடுமுடி = பாண்டிக் கொடு முடி என்ற ஊரில்

நற்றவா = நல்ல தவத்தின் பலனே

உன்னை  நான் மறக்கினும் = உன்னை நான் மறந்தாலும்

சொல்லும் நா நமச்சிவாயவே = என் நாக்கு சொல்லும் நமச்சிவாயா என்று

"நமச்சிவாயவே" என்று சுந்தரரின் நாக்கு சொல்லும்.

நம் நாக்கு என்ன சொல்லுமோ , யாருக்குத் தெரியும் ....




Wednesday, October 23, 2013

குறுந்தொகை - யாயும் ஞாயும்

குறுந்தொகை - யாயும் ஞாயும் 


தலைவியும் தலைவனும் ஒருவரை ஒருவர் சந்தித்து காதல் வயப் படுகிறார்கள். அவர்கள் உள்ளம் ஒன்றோடு ஒன்று கலக்கிறது.

என்ன ஆச்சரியம் !

கலந்தது அவர்கள், ஆனால் அவளின் தாய்க்கும் அவனின் தாய்க்கும் உறவு ஏற்பட்டது. அவர்கள் உறவினர்கள் ஆகி விட்டார்கள். அவனின் தந்தைக்கும் அவளின் தந்தைக்கும் உறவு ஏற்பட்டது. அவர்களும் உறவினர்கள் ஆகி விட்டார்கள். நிலத்தோடு கலந்த நீர் நிலந்தின் தன்மையை பெறுவதைப் போல அவளின் மனம் அவனோடு இரண்டற கலந்து விட்டது.

குறுந்தொகையில் உள்ள ஆச்சரியமான எளிமையான பாடல்

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

பொருள்


யாயும் ஞாயும் யார் ஆகியரோ? = என் தாயும் உன் தாயும் யார் ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? = என் தந்தையும் உன் தந்தையும் எந்த விதத்தில் உறவினர்கள்

யானும் நீயும் எவ்வழி அறிதும்? = நீயும் நானும் எந்த வழியில் உறவினர்கள் ?

செம்புலப் பெயல் நீர் போல = சிவந்த நிலத்தில் விழுந்த நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. = அன்பு கொண்ட நெஞ்சங்கள் ஒன்றோடு ஒன்று கலந்தனவே

கம்ப இராமாயணம் - இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு - 2

கம்ப இராமாயணம் -  இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு


கோசலை அரண்மனையின் மேலிருந்து பார்க்கிறாள். தூரத்தில் இராமன் வருகிறான். இந்நேரம் முடி சூட்டி இருக்க வேண்டும். தலையில் கிரீடம் இல்லை. இன்னும் கொஞ்சம் கிட்டத்தில் வருகிறான். அவன் முடி புனித நீரால் நனையவில்லை என்பது தெரிகிறது. இராமன் இன்னும் கொஞ்சம் கிட்ட வருகிறான். வந்தவன் கோசலையை வணங்குகிறான். அப்படியே அன்பால் குழைந்து வாழ்த்துகிறாள். பின் கேட்கிறாள் முடி புனைவதற்கு ஏதேனும் தடை உண்டோ என்று கேட்டாள்.

பாடல் 

புனைந்திலன் மௌலி; குஞ்சி மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல்?' என்னும் ஐயத்தால் நளினம் பாதம்
வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி
'நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?' என்றாள்


பொருள் 



புனைந்திலன் மௌலி = மணி மகுடம் சூடவில்லை 
குஞ்சி = தலை முடி 
மஞ்சனப் புனித நீரால் = மஞ்சள் நிறம் கொண்ட புனித நீரால் 

நனைந்திலன்; = நனையவில்லை 
என்கொல்?' = என்ன ஆகி இருக்கும் 
என்னும் ஐயத்தால் = என்ற சந்தேகத்த்தால் 
நளினம் பாதம் = அவளுடைய நளினமான பாதத்ததை 
வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும் = பொன்னாலான கழலை அணிந்த இராமன் வணங்கைய போது 
குழைந்து வாழ்த்தி = மனம் நெகிழ்ந்து வாழ்த்தி 
'நினைந்தது என்? = நினைத்தது என்ன 
இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?' என்றாள் = மணிமுடி சூட இடையூறு உண்டோ என்று கேட்டாள் 

இதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா ?

கோசலை "இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?" என்று கேட்டாள்.

"நீ" நெடு முடி புனைவதற்கு இடையூறு உண்டோ என்று கேட்கவில்லை. 

முடி சூட்டுவது என்பது ஒரு அரசாங்கம் சம்பந்தப் பட்ட விஷயம். இராமன் முடி சூட்டினானா இல்லையா என்பதல்ல கேள்வி. முடி சூட்டுதல் என்ற முறை நடந்ததா , அதில் ஏதேனும் தடை வந்ததா என்று கேட்கிறாள். 

முடி சூட்டு விழா தடை பட்டால் அரசாங்க  காரியம் தடை பட்டு விட்டதாக  அர்த்தம். 

எவ்வளவு நாசூக்காக கேட்கிறாள். 

தாய் மகன் உறவை தள்ளி வைத்து விட்டு கேட்கிராள் ..


அதற்கு இராமன் சொன்ன பதில் இன்னும் சுவாரசியாமானது 


Tuesday, October 22, 2013

கம்ப இராமாயணம் - இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு

கம்ப இராமாயணம் -  இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு


கோசலை அரண்மனையின் மேலிருந்து பார்க்கிறாள். தூரத்தில் இராமன் வருகிறான். இந்நேரம் முடி சூட்டி இருக்க வேண்டும். தலையில் கிரீடம் இல்லை. இன்னும் கொஞ்சம் கிட்டத்தில் வருகிறான். அவன் முடி புனித நீரால் நனையவில்லை என்பது தெரிகிறது. இராமன் இன்னும் கொஞ்சம் கிட்ட வருகிறான். வந்தவன் கோசலையை வணங்குகிறான். அப்படியே அன்பால் குழைந்து வாழ்த்துகிறாள். பின் கேட்கிறாள் முடி புனைவதற்கு ஏதேனும் தடை உண்டோ என்று கேட்டாள்.

பாடல் 

புனைந்திலன் மௌலி; குஞ்சி மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல்?' என்னும் ஐயத்தால் நளினம் பாதம்
வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி
'நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?' என்றாள்


பொருள் 

புனைந்திலன் மௌலி = மணி மகுடம் சூடவில்லை 
குஞ்சி = தலை முடி 
மஞ்சனப் புனித நீரால் = மஞ்சள் நிறம் கொண்ட புனித நீரால் 

நனைந்திலன்; = நனையவில்லை 
என்கொல்?' = என்ன ஆகி இருக்கும் 
என்னும் ஐயத்தால் = என்ற சந்தேகத்த்தால் 
நளினம் பாதம் = அவளுடைய நளினமான பாதத்ததை 
வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும் = பொன்னாலான கழலை அணிந்த இராமன் வணங்கைய போது 
குழைந்து வாழ்த்தி = மனம் நெகிழ்ந்து வாழ்த்தி 
'நினைந்தது என்? = நினைத்தது என்ன 
இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?' என்றாள் = மணிமுடி சூட இடையூறு உண்டோ என்று கேட்டாள் 

இதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா ?


திருக்குறள் - வாயால் சொலல்

திருக்குறள் - வாயால் சொலல் 


எப்பவாவது யாரையாவது திட்டி இருக்கிறீர்களா ? எப்போதாவது பொய் சொல்லி இருக்கிறீர்களா ? பிறர் மனம் வருந்தும்படி பேசி இருக்கிறீர்களா ?

அவை எல்லாம் ஒழுக்கக் குறைவான செயலகள். 

ஒழுக்கம் உடையவர்கள் மறந்து கூட தீய சொற்களை வாயால் சொல்ல மாட்டார்கள். 

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய 
வழுக்கியும் வாயால் சொலல்.

பொருள்


ஒழுக்க முடையவர்க்கு = ஒழுக்கம் உள்ளவர்களுக்கு 
ஒல்லாவே  = முடியாதே 
தீய  = தீய சொற்கள் 
வழுக்கியும் வாயால் சொலல் = தவறிக் கூட வாயால் சொல்லுதல் 

ஒழுக்கம் உடையவர்கள் நினைத்த்தால் கூட முடியாது தவறகா பேசுவது. வழுக்குதல் என்றால் தெரியாமல் , தன் கட்டுப் பாடு இல்லாமல் நடப்பது. அப்படி கூட நடக்காதாம். 

 

Sunday, October 20, 2013

திருக்குறள் - நல்லதும் தீயதும்

திருக்குறள் - நல்லதும் தீயதும் 


திருக்குறளில் சில குறள்கள் "அட" என்று ஆச்சரியப் பட வைக்கும். அப்படிப் பட்ட குறள் ஒன்று. 

செல்வம் செய்வதற்கு நல்லவையெல்லாம் தீயவை ஆகும் ; தீயவை எல்லாம் நல்லவை ஆகும் என்கிறார் வள்ளுவர். 

அதாவது, தீமை செய்யாமல் செல்வம் சேர்க்க முடியாது என்கிறார். அது மட்டும் அல்ல, நல்ல வழியில் செல்வம் சேர்க்க நினைத்தால், அது கூட தீயதாக போய் முடியும் என்கிறார். 

நல்லவை யெல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

பொருள்

நல்லவை யெல்லாஅம் தீயவாம் = நல்லவை எல்லாம் தீயதாய் முடியும் 

தீயவும் = தீமைகளும் 

நல்லவாம் = நல்லாதாகும் 

செல்வம் செயற்கு = செல்வம் செய்வதற்கு 

நல்லதே செய்து, நேர்மையான வழியில் சென்று செல்வம் சேர்க்க நினைத்தாலும் அது தீயதாய் போய் விடும். 

தீமை செய்தாலும், அது நல்லதாக முடியும் செல்வம் சேர்க்கும் போது.

மிக மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய குறள். 

இராமாயணம் - வாழ்க்கைப் பாடம் - ஒரு முன்னோட்டம்

இராமாயணம் - வாழ்க்கைப் பாடம் - ஒரு முன்னோட்டம் 


இராமாயணம் போன்ற காப்பியங்களை படிக்கும் போது , கதை, அதன் போக்கு, கதை சொல்லும் பாங்கு, பாத்திர படைப்பு என்று இரசிக்கும் போது, அவற்றில் இருந்து சில பாடங்களும் கற்றுக் கொள்ளலாம். 

காப்பியங்கள் சம்பவங்களை சற்று மிகைப் படுத்தி கூறினாலும், அது நம் மனதில் படியா வைக்க கையாளும் ஒரு யுக்தி என்று கொள்ள வேண்டும். 

நமக்கு ஒரு சிக்கல் வந்தால், இந்த சூழ்நிலையில் இராமன் இருந்தால் என்ன செய்திருப்பான், சீதை இருந்திருந்தால் எனன் செய்திருப்பாள் என்று சிந்திக்கும்போது அந்த சிந்தனைகள் நமக்கு வழி காட்டியாக அமையலாம். 

வீட்டில், சில சமயம் சிக்கல்கள் வரலாம். வரும். 

அந்த மாதிரி சமயங்களில் குடும்பத்தில் உள்ளவர்கள் சிக்கலில் உள்ளவர்களை திட்டுவதோ, பயப் படுத்துவதோ கூடாது. அது அந்த சிக்கல்களை மேலும் அதிகப் படுத்திவிடும். 

சில வீடுகளில் , பிரசாய் என்று வந்து விட்டால் , அதை விவாதிக்கிறேன் பேர்வழி என்று கணவனும் மனைவியும் மேலும் சண்டை போட்டு அந்த பிரச்சனையோடு கணவன் மனைவி பிரச்சனையும் சேர்த்த்து விடுவார்கள். 

பிரச்சனையை எப்படி அணுகுவது, எப்படி விவாதிப்பது, எப்படி தீர்வு காண்பது என்று கம்பன் நமக்கு பாடம் எடுக்கிறான். 

இராமன், முடி புனைவது மாறிப் போகிறது. காட்டிற்கு போக வேண்டும். 

இது பிரச்னை. 

இதில் மிகவும் பாதிக்கப்பட போபவர்கள் யார் யார் ?

கோசலை (தாய்), சீதை (மனைவி), இலக்குவன் (தம்பி)...

இயவர்களிடம் இராமன் இந்த பிர்ச்சனையை எப்படி எடுத்துச் சொல்லி சமாளிக்கிறான் என்று பார்ப்போம். 

அதற்கு முன்னால் சற்று யோசித்துப் பாருங்கள் 

கோசலை வருந்துவாள், தயரதனிடம் அவள் சண்டை பிடிக்கலாம்....

சீதை இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லலாம்....

இலக்குவன் சண்டை போடலாம். 

கதை எப்படி போனது என்று நமக்குத் தெரியும்....கதை வேறு மாதிரியும் போய் இருக்கலாம்...அப்படி போகாமல் இராமன் எப்படி மாற்றினான் என்று பார்ப்போம். 

அதற்கு அவனுக்கு மற்றவர்கள் எப்படி துணை செய்தார்கள், அல்லது அவனுக்கு தடையாக இருந்தார்கள்...என்றெல்லாம் நாம் பார்க்கப் போகிறோம்...