Saturday, September 14, 2013

குறுந்தொகை - ஆணின் நாணம்

குறுந்தொகை - ஆணின் நாணம் 




அமிழ்து பொதி செந்நா அஞ்சவந்த
வார்ந்துஇலங்கு வைஎயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே! பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ்வூரே! மறுகில்
நல்லோள் கணவன் இவன் எனப்
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே.

பெண்ணுக்கு நாணம் வரும். கேள்வி பட்டு இருக்கிறோம். ஆணின் நாணம் ?

குறுந்தொகை ஆணின் நாணத்தைப் பற்றி பேசுகிறது.

அவன் ஒரு இளைஞன்,  அந்த ஊரில் ஒரு அழகான பெண். அவள் மேல் அவனுக்கு ரொம்ப காதல். ஆனால், அவளோ இவன் காதலை ஏற்றுக் கொள்வதாக இல்லை. ரொம்பத்தான் ராங்கி பண்ணிக்  கொள்ளுகிறாள். இவனும் விடுவதாக இல்லை. எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று இருக்கிறான்.

அந்த காலத்தில் மடல் ஊறுதல் என்று ஒன்று உண்டு.

ஒரு பெண்ணை விரும்பும் ஆடவன், அவளை அடைவதற்கு அவளின் பெற்றோர் ஒத்துக் கொள்ளவில்லை  என்றால்,அந்த பெண்ணின் வீட்டுக்கு முன்னால், பனை ஓலையில் குதிரை மாதிரி பொம்மை செய்து, அதன் மேல் ஏறி உட்கர்ந்து கொள்வான்.

ஊரில் உள்ளோர் எல்லாம் அவனைப் பார்த்து சிரிப்பார்கள், சில பேர் பாவம் என்று நினைப்பார்கள். எப்படியோ, ஊர் எல்லாம் தெரிந்து விடும்.

அந்த பெண்ணை வேறு யார் மணப்பார்கள் ? கடைசியில் அவளை அவனுக்கே கட்டி கொடுத்து விடுவார்கள்.

இந்தப் பாடலில், தலைவன் தான் அப்படி செய்வேன் என்று சொல்லவில்லை. இருந்தாலும்  எப்படியாவது அவளை மணந்து  கொள்வேன்.

அப்படி நாங்கள் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக ஊருக்குள் செல்லும்போது , அப்போது இந்த ஊரில் உள்ளவர்கள் சொல்லுவார்கள்..."இவன் கொஞ்சம்  விளையாட்டு பிள்ளையாக இருந்தாலும், நல்ல பையன் ...இவள் ஒரு நல்லவனைத் தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் " என்று சொல்லுவார்கள். அப்படி சொல்வதை கேட்க்கும்போது எனக்கு   கொஞ்சம் வெட்கமாக இருக்கும் என்கிறான்.


துள்ளித் திரிந்த வாலிபப் பையன், காதலியை கை பிடிக்க என்ன வெல்லாம் செய்தான், இப்ப பாரு எவ்வளவு நல்ல பையனாக இருக்கிறான் என்று சொல்லுவார்கள். அதை கேட்கும் போது எனக்கு கொஞ்சம் நாணம் வரும் என்கிறான்.

பொருள்


அமிழ்து பொதி செந்நா = அவளுடைய நாக்கு இருக்கிறதே, அது அமிழ்தை பொதிந்து வைத்ததைப் போல இனிமையானது

அஞ்சவந்த = அஞ்சும்படி

வார்ந்து = வார்த்து வைத்ததைப் போன்ற

இலங்கு = விளங்கும் 

வைஎயிற்றுச் = கூர்மையான பற்கள்

சின்மொழி = சின்ன சின்ன மொழி பேசும் 

அரிவையைப் = இளம் பெண்ணை

பெறுகதில் அம்ம யானே! = எப்படியாவது பெறுவேன்

பெற்றாங்கு = பெற்ற பின்

அறிகதில் அம்ம, = நீ அறிவாய்

இவ்வூரே! = இந்த ஊரே

மறுகில் = தெருவில்

நல்லோள் கணவன் இவன் எனப் = நல்ல பெண்ணை மணந்த கணவன் இவன் என

பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே = பலபேர் சொல்லுவதை கேட்க்கும் போது  நான் கொஞ்சம்  நாணம் அடைவேன்


3 comments:

  1. This is new dimension explaining male shyness ...Ram

    ReplyDelete
  2. ஆண் நாணும் அருங்காட்சியை வரைந்தவர் யாரோ?

    ReplyDelete
  3. நல்லவளின் கணவன் என்றுதானே பொருள் ...விளக்கம் சற்று மாறியிருக்கிறது

    ReplyDelete