Saturday, September 7, 2013

திருக்குறள் - பரிமேலழகர் உரை

திருக்குறள் - பரிமேலழகர் உரை 


இவற்றுள் வழக்கும் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தவாவதல்லது, ஒழுக்கம்போல மக்கள் உயிர்க்கு உறுதி பயத்தல் சிறப்பிலவாகலானும், அவைதாம் நூலானே அன்றி உணர்வு மிகுதியானும் தேய இயற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து, ஈண்டு தெய்வப்புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறம் என எடுத்துக் கொள்ளப்பட்டது.


     அதுதான் நால்வகை நிலைத்தாய், வருணந்தோறும் வேறுபாடு உடைமையின், சிறுபான்மை ஆகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து, எல்லார்க்கும் ஒத்தலின் பெரும்பான்மை ஆகிய பொது இயல்பு பற்றி, 'இல்லறம்' 'துறவறம்' என இருவகை நிலையால் கூறப்பட்டது.

-------------------------------
அறம் என்பது  ஒழுக்கம்,வழக்கு , தண்டனை என்ற மூன்று கூறுகளை கொண்டது என்று பார்த்தோம்.

இதில் வழக்கும், தண்டமும் உலகியல் வாழ்க்கைக்கு மட்டும் உதவும். ஒழுக்கமோ, இம்மைக்கும் மறுமைக்கும் உதவி செய்யும். உயிருக்கு உறுதி தரும் என்கிறார் பரிமேலழகர்.  மேலும் இந்த வழக்கும் தண்டமும்  படித்து தெரிந்து கொள்வதை விட உணர்ச்சி வசப் படுதலாலும் , உடம்பின் இயற்கையாலும் கூட அறிய முடியும்.  எடுத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் , ஒழுக்கம் என்பது என்ன என்று சொன்னால் அன்றித் தெரியாது.

எனவே வள்ளுவர் ஒழுக்கம் என்பதை மட்டும் அறம் என்று எடுத்துக் கொள்கிறார்.

அந்த ஒழுக்கமும் 4 வகை நிலைகளில் (பிரமச்சாரியம், இல்லறம், வானப்ரஸ்தம், துறவறம் ) வர்ணத்திற்கு வர்ணம் (பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் ) மாறுபடும் இயல்புடையது.  அப்படி மாறும் ஒழுக்கங்களை விட்டு விட்டு, எல்லோருக்கும் பொதுவான இல்லறம், துறவறம்  என்ற இரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு வள்ளுவர் திருக்குறளை  இயற்றினார்.

ஒரு வழக்கை எப்படி நடத்த வேண்டும், எந்த வழக்குக்கு எந்த மாதரி சாட்சியங்கள் வேண்டும், தடயங்கள் வேண்டும், அதற்கு எவ்வளவு தண்டனை தர வேண்டும் என்று   எழுதிக் கொண்டு போனால் அதற்கு ஒரு எல்லையே இருக்காது.

மேலும், இவை காலம் காலமாக மாறிக் கொண்டே வரும்.

எனவே அவற்றை வள்ளுவர் விட்டு விட்டார்.

 வழக்கையும்,தண்டத்தையும் அவர் விட்டதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

மனிதன் ஒழுக்கமாக இருந்து விட்டால் வழக்கும் தண்டனையும் தேவையே இருக்காது.

எனவே மனிதனை முதலில் ஒழுக்க நெறியில் செலுத்த வேண்டி அதை அறமாகக் கொண்டு  திருக்குறள் எழுதினர் என்று பரிமேல் அழகர்  கூறுகிறார்.


No comments:

Post a Comment