Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Thursday, October 26, 2023

திருக்குறள் - பணத்தை எங்கே முதலீடு செய்வது ?

 திருக்குறள் - பணத்தை எங்கே முதலீடு செய்வது ?


சேமித்த பணத்தை எங்கே முதலீடு செய்வது? 


வங்கிக் கணக்கில் போடலாம், பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம், நகை, நட்டு வாங்கிப் போடலாம், நிலத்தில் போடலாம், அல்லது நல்ல வீடு வாங்கலாம்....இப்படி பல வழிகளில் முதலீடு செய்யலாம். 


ஆனால் இதெல்லாம் சிறந்த முதலீடு அல்ல என்கிறார் வள்ளுவர். 


பின் எதுதான் நல்ல முதலீடு என்று பார்ப்பதற்கு முன்னால், சற்று யோசிப்போம். ஈகை என்ற அதிகாரத்துக்கும் முதலீடுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?  ஒரு வேளை பொருட்பாலில் வர வேண்டியது மாறி இங்கு வந்து விட்டதோ என்ற சந்தேகம் வரலாம். 


வள்ளுவர் சொல்கிறார், 


"மிகுந்த பசி உள்ளவன் வயிற்றிக்கு உணவு இடுவதுதான் ஆகச் சிறந்த முதலீடு"


என்று. 


சேமித்த பணத்தை உணவாக மாற்றி, பசி உள்ளவனுக்கு அதை கொடுப்பதுதான் சரியான முதலீடு 


பாடல் 


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_26.html



(pl click the above link to continue reading)


அற்றார் = பொருள் அற்றவர், உணவு அற்றவர் 


அழிபசி = அழிக்கின்ற பசியை 


தீர்த்தல் = தீர்ப்பது 


அஃதொருவன் = அது ஒருவன் 


பெற்றான் = பெற்ற 


பொருள்வைப் புழி = பொருள் + வைப்புழி = பொருளை சேமித்து வைக்கும் இடம் 


அழிபசி = அழிக்கின்ற பசி. பசி பலவற்றை அழித்து விடும். கல்வி, புகழ், மானம், காமம், என்ற பலவற்றை அழித்து விடும். பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள். 


அப்படிப்பட்ட பசியை தீர்க்க உதவும் பொருள் தான் சிறந்த வழியில் சேமிக்கப்பட்ட பொருள் என்கிறார். 


அதிலும், பரிமேலழகர் சில நுண்மையான விடயங்களைச் சொல்கிறார்.


"அறன் நோக்கி அழி பசி தீர்த்தல்" என்பார். கொடுப்பது அறம் என்று நினைத்து கொடுக்க வேண்டும். பதிலுக்கு ஏதாவது கிடைக்கும் என்று நினைத்து கொடுக்கக் கூடாது. 


அதெல்லாம் சரி, அப்படி செலவழித்த பணம், செல்வில்தானே சேரும். எப்படி, அது சேமிப்பாக மாறும்?  வள்ளுவர் சொன்னா கேட்டுக்க வேண்டியதுதானா?


இல்லை, அதற்கு காரணம் இருக்கிறது என்று பரிமேலழகர் விளக்கம் செய்கிறார். 


சேமிப்பு என்றால் பிற்காலத்தில் வட்டியோடு முதலும் பத்திரமாக திரும்பி வர வேண்டும் அல்லவா?  


பசித்தவனுக்கு செலவழித்த பணம் புண்ணியமாக மாறி, ஒன்றுக்கு பல மடங்கு செய்தவனுக்கே திரும்பி வரும் என்கிறார். 


எப்படி நம்புவது?  


வள்ளுவர் போன்ற அறிஞர்கள் உலகை நன்கு உற்று கவனித்து அங்கு நடப்பவற்றை நமக்குச் சொல்கிறார்கள். 


ஒன்று ஏற்றுக் கொள்ளலாம். அல்லது, சோதனை செய்து பார்க்கலாம். 


எனது குறுகிய அனுபவத்தில் இது உண்மை நான் பல முறை உணர்ந்து இருக்கிறேன். 


நீங்களும் சோதனை செய்து பாருங்கள். 




Tuesday, October 24, 2023

திருக்குறள் - எது பெரிது?

 திருக்குறள் - எது பெரிது?


உலகில் பெரிய செயல், சிறப்பான செயல் எது என்று கேட்டால் நாம் என்ன சொல்லுவோம்?


படிப்பது, செல்வம் சேர்ப்பது, பெரிய பதவிகளைப் பெறுவது, புகழ் பெறுவது என்றெல்லாம் சொல்லுவோம். 


தவம் செய்து, ஞானம் பெற்று, இறைவனை அடைவது இதில் எல்லாம் பெரியது என்று கூட சொல்லலாம். 


ஆனால், வள்ளுவர் இதுக்கு எல்லாம் மேலான ஒன்று இருக்கிறது என்கிறார்.


எவ்வளவு தவம் செய்து, என்ன வரங்களைப் பெற்றாலும், அதுக்கு எல்லாம் மேலான ஒன்று இருக்கிறது.


அது என்ன என்றால், பசித்தவனின் பசியைப் போக்கும் செயல் என்கிறார். 


பாடல் 


ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_24.html


(please click the above link to continue reading)


ஆற்றுவார் = செய்யகூடியவற்றுள் 


ஆற்றல் = பெரிய ஆற்றல் 


பசியாற்றல் = பசியை பொறுத்துக் கொள்வது. அதாவது, தவம் செய்வது 


அப்பசியை = அந்தப் பசியை 


மாற்றுவார் = போக்குபவர்களின் 


ஆற்றலின் பின் = ஆற்றலுக்கு அடுத்து பின்னே வருவது அந்த மேலே சொன்ன பசியைப் பொறுத்து கொண்டு தவம் செய்வது. 


என்னதான் முள்ளு முனையில், தீக்கு நடுவில், பசி தாகம் மறந்து தவம் செய்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றாலும், அது மற்றவர் பசியைத் தீர்பவரின் ஆற்றலுக்கு முன் பெரிய விடயம் ஒன்றும் இல்லை. பசி தீர்பவரின் ஆற்றலுகுப் பின் தான் அந்த தவ வலிமை எல்லாம் என்கிறார். 


சரி, அப்படின்னு வள்ளுவர் சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா. அதுக்கு ஒரு காரணம் சொல்ல வேண்டாமா?


பரிமேலழகர் சொல்கிறார் 


தவம் செய்பவர்கள், தங்கள் பசியையும் போக்கிக் கொள்ள முடியவில்லை, மற்றவர் பசியையும் போக்குவது இல்லை. 


மாறாக, இல்லறத்தில் இருந்து தானும் நன்றாக உண்டு பசியாறி, பசிக்கிறது என்று வந்தவனின் பசியையும் போக்குகிறானே அந்த இல்லறத்தான் அவன் தவம் செய்தவனை விட உயர்ந்தவன் என்கிறார். 


தானும் பசி இல்லாமல், மற்றவர் பசியையும் போக்குபவன் தன் பசியையும் தீர்க்காமல், மற்றவர் பசியையும் போக்காதவனை விட உயர்ந்தவன் தானே?


இதில் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக பார்த்தால் மேலும் சில விடயங்கள் புலப்படும். 


முதலாவது, துறவறத்தை விட இல்லறம் சிறந்தது என்று இங்கு கூறுகிறார். 


இரண்டாவது, கஷ்டப்பட்டு தவம் செய்வதை விட, வீட்டில் இருந்து கொண்டே அதைவிட பெரிய பலன்களைப் பெறலாம்.


மூன்றாவது, நாம் எப்போதும் நினைப்போம். கடினமான செயல் உயர்ந்தது என்றும் எளிதாகச் செய்யும் செயல்கள் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது அல்ல என்றும். இங்கே வள்ளுவர் அதை மறுக்கிறார். வீட்டில், மனைவி மக்களோடு இருந்து, விருந்து உண்டு, பசி என்று வந்தவனுக்கு அவன் பசியாற உணவு கொடு. அது எல்லாவற்றையும் விட சிறந்தது என்கிறார். எதுக்கு வேலை மெனக்கெட்டு காட்டில் போய் தவம் செய்து கொண்டு கஷ்டப்பட வேண்டும்?


நான்காவது, பசித்தவனுக்கு பணம் கொடு என்று சொல்லவில்லை. அவன் பசியை மாற்று என்கிறார். உணவு கொடு. அவன் பசி மாறினால் அதுவே சிறந்த புண்ணியம் என்கிறார். 


நமக்கெல்லாம் பசி என்றால் என்ன என்று தெரியாது. சில சமயம் சாப்பிடுவதற்கு எதாவது கொஞ்சம் நேரம் ஆகலாம். பசி இருக்கும். அதெல்லாம் ஒரு பசி இல்லை. வீட்டில் வேண்டும் அளவுக்கு உணவு இருக்கிறது. குளிர் சாதன பெட்டியைத் திறந்தால் மூணு நாளைக்கு வேண்டிய உணவு இருக்கும்.  அதெல்லாம் ஒரு பசி இல்லை. இல்லையா, on-line ல் ஆர்டர் பண்ணி சாப்பிடலாம். இல்லை என்றால் வண்டியை எடுத்துக் கொண்டு போய், அருகில் உள்ள உணவு விடுதியில் உண்டுவிட்டு வரலாம். ஒரு கவலையும் இல்லை. அதெல்லாம் பசியில் சேர்ந்தது அல்ல. 




பசி இருக்கும். உணவு இருக்காது. எப்போது கிடைக்கும் என்றும் தெரியாது. அதுதான் பசி. அந்தப் பசியை மாற்றுவது இருக்கிறதே, அதுதான் பெரிய செயல் என்கிறார். 


இந்தக் குறளின் முழு அத்தமும் புரிய வேண்டும் என்றால், இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்தால் தெரியும். 



 


Saturday, October 21, 2023

திருக்குறள் - ஈகை - இரக்கப்படுவது தவறு

 திருக்குறள் - ஈகை - இரக்கப்படுவது தவறு 


என்னது, இரக்கப்படுவது தவறா? 


ஒருவன் வறுமையில் வாடுகிறான் என்றால் அவனைப் பார்த்து இரக்கபடுவது எப்படி தவறாகும். அப்படி இரக்கப்படாவிட்டால் அவனுக்கு எப்படி உதவி செய்யவேண்டும் என்று தோன்றும்?


ஆனால் வள்ளுவர் சொல்கிறார் இரக்கப்படுவது தவறு என்று. 


இது என்ன புதுக் கதையாக இருக்கிறது?


பாடல் 


இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்

இன்முகம் காணும் அளவு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_21.html


(pl click the above link to continue reading)


இன்னாது = இனியது என்பதன் எதிர்பதம் இன்னாது. அதாவது, நல்லது அல்ல, கெட்டது 


இரக்கப் படுதல் = ஒருவர் மேல் இரக்கம் கொள்வது 


இரந்தவர் = நம்மிடம் உதவி என்று கேட்டு வந்தவர் 


இன்முகம் காணும் அளவு = இனிய முகத்தை காணும் வரை 


யோசித்துப் பாருங்கள். 


வீட்டில் வேலை பார்க்கும் பெண், தன்னுடைய மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப் பட்டு இருக்கிறது, ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று நம்மிடம் கேட்கிறாள். வேலை செய்யும் பெண் நல்லவள். அவளுடைய மகளையும் நாம் பார்த்து இருக்கிறோம். நல்ல பெண். பாவமாக இருக்கிறது. பணம் இல்லை என்றால் திருமணம் நடக்காது. அந்தப் பெண்ணின் வலி நமக்குத் தெரிகிறது. 


சரி, இந்தா என்று ஒரு பத்து உரூபாய் கொடுக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். 


அந்தப் பெண்ணின் வலி தீர்ந்து விடுமா? பிரச்சனை தீர்ந்து விடுமா? வேண்டாம் என்று சொல்ல மாட்டாள். ஆனால், அவள் முகத்தில், அவள் வலியில், ஒரு மாற்றமும் இருக்காது. அவளைப் பார்க்கும் போது நமக்கு என்ன தோன்றும்? அப்பாட, ஒருவழியாக அந்த பெண்ணின் பிரச்சனையை தீர்த்து  விட்டோம் என்று ஒரு நிம்மதி வருமா?  


வராது. 


அவள் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு ஒரு சங்கடம் வரும். 


வள்ளுவர் சொல்கிறார், நம்மிடம் உதவி என்று ஒருவன் கேட்டு வந்தால், அவன் முகம் மாறி, சிரித்த முகமாக மாறும் வரை உதவி செய்ய வேண்டும். 


அது வரை, இரக்கப் படுகிறேன் என்று சொல்லுவது நமக்குத் துன்பம் தரும் ஒன்றுதான். 


மேலே சொன்ன உதாரணத்தில், அந்த வேலைக்கார பெண்ணிடம், "இந்தா இதை கல்யாண செலவுக்கு வைத்துக் கொள்" என்று ஒரு பத்தாயிரம் கொடுத்தால் , அவள் முகம் மலரும் தானே. "ரொம்ப நன்றிமா/நன்றி ஐயா" என்று கண்ணீர் மல்க சொல்லிவிட்டுப் போவாள். 


அப்படி அவள் முகம் மலர்ந்து, இனிமையானதாக மாறும்வரை, இரக்கப் படுவது நமக்கும் துன்பம் தருவதுதான் என்கிறார். 


இதெல்லாம் கேக்க நல்லா இருக்கு. இரசிக்கலாம். நடைமுறையில் சாத்தியமா என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்ல ஆசை. 


நல்ல விதை என்றாலும், போடுகின்ற இடத்தில் எல்லாம் விளைவது இல்லை. நல்ல நிலத்தில் விழுந்தால், அது முளைத்து பலன் தரும். 


திருக்குறள் ஒரு நல்ல விதை. அது எந்த மனத்தில், எந்த நிலத்தில் விழுகிறது என்பதைப் பொறுத்து அது எப்படி வளரும் என்பது. 


அது முடியாது, இது சாத்தியம் இல்லை, இது நடைமுறைக்கு ஒத்து வராது என்று படிப்பதை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால்,  ஒன்றும் விளையாத உவர் நிலமாகப் போய் விடும் மனம். 


மனதை பண் படுத்தி வைப்போம், விதை விழுந்தால் முளைக்கும். மனதை கட்டாந்தரையாக மாற்றி வைத்து இருந்தால் ஒரு விதையும் முளைக்காது. 




Thursday, October 19, 2023

திருக்குறள் - எவ்வம் உரையாமை

திருக்குறள் - எவ்வம் உரையாமை 


மற்றவர்களுக்கு உதவி செய்வது நல்லது. 


இது எல்லா நாட்டினரும், மதத்தினரும் ஏற்றுக் கொண்டுள்ள ஒரு நடைமுறை உண்மை. 


ஆனால், தமிழர்கள் அதை அறமாக கொண்டிருந்தார்கள். ஈகை செய்வது ஏதோ ஒரு வாய்ப்பு (option) அல்ல. செய்தே ஆக வேண்டும், அது இல்லறம் என்று வகுத்தார்கள். 


சரி, ஈகை செய் என்றால் எவ்வளவு செய்வது? 


சில மதங்களில் ஒரு குறிப்பிட்ட பங்கை கொடு என்று குறிப்பிடப்படுகிறது. 


வள்ளுவர் உச்சம் தொடுகிறார். இப்படி கூட ஒருவன் சிந்திக்க முடியுமா என்று வியக்கும் அளவுக்கு  அதைச் சொல்கிறார். 


பாடல்  


இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலன்உடையான் கண்ணே உள


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_19.html


(pl click the above link to continue reading)


இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலன்உடையான் கண்ணே உள


பொருள் 


இலன்என்னும்  = இல்லை என்று சொல்லும் 


எவ்வம் = துன்பம் 


உரையாமை = சொல்லாமல் இருத்தல் 


ஈதல் = கொடுத்தல் 


குலன்உடையான் = நல்ல குடியில் பிறந்தவன் 


கண்ணே உள = இடத்தில் மட்டும் தான் இருக்கும். 


நல்ல குடும்பத்தில் பிறந்தவன் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பான் என்கிறது குறள்.


இதில் என்ன பெரிய அர்த்தம் இருக்கிறது? இதுக்கு எதுக்கு அவ்வளவு build  up என்று நீங்கள் நினைக்கலாம். 


பரிமேலழகர் உரையைப் பார்ப்போம். 


"இலன் என்று" 


சில பேர், பிச்சைக்காரன் பிச்சை கேட்டால், சில்லறை "இல்லை", பொ போ போ என்று விரட்டி விடுவார்கள். பிச்சைக்காரன் தன்னிடம் இல்லை என்று கேட்டால், இவனும் தன்னிடம் இல்லை என்கிறான். இதில் யார் பெரிய பிச்சைகாரன்? 


இல்லை என்று ஒருவன் வந்தால், அவனிடம், என்னிடமும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்க வேண்டும். 


இரண்டாவது, 


ஒருவன் நம்மிடம் வந்து இல்லை என்று அவன் சொல்லுவதற்கு முன்னே கொடுக்க வேண்டும்.  தெருவில் பிச்சைக்காரன் நிற்கிறான். பார்த்தாலே தெரிகிறது அவன் சரியாக சாப்பிட்டு பல நாள் ஆகியிருக்கும் என்று. அவன் நம்மிடம் வந்து "எனக்கு சாப்பிட காசு "இல்லை" ஏதாவது பிச்சை போடுங்கள்" என்று சொல்லுவதற்கு முன் கொடுத்துவிட வேண்டுமாம். 


வீட்டில் வேலை பார்க்கும் பெண், அவளுடைய மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்த செய்தியை சொல்கிறாள். அவளுக்கு கட்டாயம் பணம் தேவைப்படும் என்று அறிந்து, அவள் கேட்கும் முன்னே கொடுக்க வேண்டும். உதவி செய்கிறேன் பேர்வழி என்று "சரி இந்தா பத்து உரூபாய், இதை வைத்து கல்யாணத்தை சிறப்பாக நடத்து" என்று சொல்வது சரியா? அதற்கும் பதில் சொல்கிறார் வள்ளுவர், மூன்றாவது அர்த்தம் என்ன என்று பாருங்கள். 


உதவி கேட்பது என்பது மிகவும் வருத்தமான செயல். அதை செய்ய விடக் கூடாது.  உலகளந்த பெருமாள் கூட மூன்றடி நிலம் யாசகம் கேட்க்க வந்த போது கூனி குறுகி, குள்ள வாமன அவதராமாக வந்தார். 


ஈகை என்ற தத்துவத்தை கொஞ்சம் நாம் விரிவுபடுத்தினால், நண்பர் வீட்டில் யாருக்கோ உடம்பு சரி இல்லை. மருத்துவ மனையில் அனுமதித்து இருக்கிறார்கள். அவர் கூப்பிட்டு கேட்க வேண்டும் என்று அல்ல, நாமே போய் நிற்க வேண்டும். நான் பார்த்துக் கொள்கிறேன், நீ போய் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள் என்று முன்னே போய் நிற்க வேண்டும். இது ஈகை இல்லைதான் என்றாலும், சற்று விரித்து சிந்தித்தால் தப்பு இல்லையே. 



மூன்றாவது, 


பசி என்று ஒருவன் வந்து யாசகம் கேட்கிறான். அவனுக்கு ஒரு ஒரு உரூபாய் தானம் கொடுப்பது. அதை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்ய முடியும்? ஒரு காப்பி கூட குடிக்க முடியாது.  அவன் மேலும் பத்து பேரிடம் சென்று "எனக்கு பசிக்கு காசு இல்லை, உதவி செய்யுங்கள் " என்று கேட்க வேண்டும். நம்மிடம் ஒருவன் உதவி என்று வந்து கேட்டால் அவன் மற்றொருவரிடம் சென்று "இல்லை" , மேலும் உதவி வேண்டும் என்று கேட்க்கக் கூடாது. அப்படி உதவி செய்ய வேண்டும் .


உதாரணமாக, பசி என்று ஒருவன் வந்தால், அவன் வயிறார உணவு இட வேண்டும். நன்றாக சாப்பிட்டுவிட்டால் பின் ஏன் இன்னொருவரிடம் சென்று உணவு இல்லை என்று சொல்லப் போகிறான். சில மணி நேரம் கழித்து மீண்டும் பசிக்கும், அப்போது சொல்வான். அது வேறு விடயம். முடிந்தால் அவன்  யாரிடமும் எப்போதும் இல்லை என்று சொல்லாத வண்ணம் உதவி செய்யலாம். 


மூன்று விடயங்கள் சொல்கிறார்: 


முதலாவது, ஒருவன் இல்லை என்று சொல்லும் முன் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் .


இரண்டாவது, இல்லை என்று வந்தவனிடம் என்னிடமும் இல்லை என்று சொல்லாமல் உதவி செய்ய வேண்டும். 


மூன்றாவது, நம்மிடம் இல்லை என்று வந்தவன், வேறு யாரிடமும் அந்தச் சொல்லை சொல்லா வண்ணம் உதவி செய்ய வேண்டும். 


இதை எல்லாம் சொல்லிவிட்டு, வள்ளுவர் ஒரு குறிப்பும் வைக்கிறார். 


இப்படி யார் செய்வார்கள் என்றால், நல்ல குடியில் பிறந்த ஒருவனால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும் என்கிறார். 


அப்படிச் செய்யாவிட்டால் நாம் எந்த குடியில் பிறந்தவர்கள் என்று நாமே முடிவு செய்து கொள்ளலாம். 


எல்லோருக்கும், தங்கள் குலம், குடி, குடும்பம் உயர்ந்தது என்று சொல்லிக் கொள்ளத் தானே ஆசை இருக்கும். அப்படியானால், இதைச் செய் இல்லை என்றால் நீ மட்டும் அல்ல உன் குலமே கீழான குலம். அப்புறம் உன் இஷ்டம் என்று விட்டு விடுகிறார் வள்ளுவர். 


இப்போது சொல்லுங்கள். வியப்பாக இல்லை? எவ்வளவு ஆழமாக , அழகாக, இத்தனை சுருக்கமாக சொல்லி இருக்கிறார் என்று....


    


Tuesday, October 17, 2023

திருக்குறள் - ஈகை - கொடுக்கல் வாங்கல்

 திருக்குறள் - ஈகை - கொடுக்கல் வாங்கல் 


ஈகை, அதாவது மற்றவர்களுக்கு கொடுப்பது, நல்லது. 


சரி. ஏற்றுக் கொள்ளலாம். 


வாங்குவது நல்லதா? ஒருவர் நமக்கு ஏதோ ஒன்றைத் தருகிறார் என்றால், அதை வாங்கிக் கொள்வது நல்லதா? ஈகை என்றால் கொடுப்பதும், வாங்குவதும் இருக்கும் தானே. வாங்க யாரும் இல்லை என்றால் எப்படி ஈகை ஒன்று இருக்க முடியும்?


என்ன ஒரு சிக்கல். 


வள்ளுவர் சொல்கிறார், 


"வாங்குவது நல்லது என்று யாரவது சொன்னாலும், அதை வாங்காமல் இருப்பது நல்லது. கொடுப்பது தீமை என்று யாராவது சொன்னாலும், கொடுக்காமல் இருக்கக் கூடாது" 


பாடல்  


நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்

இல்லெனினும் ஈதலே நன்று


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_17.html

(pl click the above link to continue reading)



நல்லாறு = ஆறு என்றால் வழி. நல் + ஆறு = நல்ல வழி 


எனினும் = என்றாலும் 


கொளல்தீது = மற்றவர் கொடுத்து அதைப் பெற்றுக் கொள்வது தீது 


மேல்உலகம் = சொர்கமே 


இல்லெனினும் = இல்லை என்றாலும் 


ஈதலே நன்று = கொடுப்பதே சிறந்தது 


எனினும் என்ற சொல்லுக்கு "என்று சொல்பவர்கள் இருந்தாலும்" என்று பொருள் கொள்கிறார் பரிமேலழகர். 


வாங்குவது நல்லது, கொடுப்பது தீது என்று யாராவது சொன்னாலும், அதை நம்பக் கூடாது. வாங்குவது தீது, கொடுப்பது நல்லது என்கிறார். 


"எனினும்" என்பதில், யாரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள், ஒருவேளை "சொன்னாலும்" என்று பொருள் கொள்ள வேண்டும். 


சில மதங்களில், அல்லது சில மத உட் பிரிவுகளில் பிச்சை பெற்று வாழ்வது சிறந்தது என்று ஒரு சமய கோட்பாடாகவே சொல்லப் படுகிறது. இந்த குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்கள் யாசகம் பெற்றுத்தான் வாழ வேண்டும் என்று விதி செய்கிறது. 


வள்ளுவர் அதை மறுக்கிறார். நல்லது என்று சமயம் கூறினாலும், அதனால் சொர்க்கம் கிடைக்கும் என்று கூறினாலும், "கொள்வது தீது" என்கிறார். 


உழைக்காமல், பிறர் கையை எதிர்பார்த்து வாழ்வது ஏற்புடையது அல்ல என்பது அவர் கருத்து. 


மேலும், 


எதற்காக ஈகை செய்ய வேண்டும்? அப்படிச் செய்வது புண்ணியம், அப்படி புண்ணியம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்று நினைத்து செய்தால் அது ஈகையா? ஒன்றை எதிர்பார்த்து செய்வது ஈகை அல்ல. வியாபாரம். 


"மேல்உலகம் இல்லெனினும் ஈதலே நன்று". சொர்க்கம் இல்லை என்றால், ஈகை செய்யக் கூடாதா? ஈகை செய்வதை நிறுத்தி விடவேண்டுமா?


இல்லை, ஈகை செய்வது சமுதாயக் கடமை. அதற்கு ஒரு பலன் இல்லை என்றாலும் செய்யத்தான் வேண்டும் என்பது வள்ளுவர் கருத்து. 


பிற்காலத்தில் அறிவியல் வளரலாம். சொர்க்கம் என்பதெல்லாம் ஒன்று இல்லை என்று நிரூபணம் செய்யப் படலாம். அப்போது என்ன செய்வது? சொர்க்கம் இல்லை என்றால் ஈகை நின்று விடுமே. 


அதை யோசித்து வள்ளுவர் சொல்கிறார், "மேல் உலகம் இல்லை என்றாலும் ஈதல் செய்வது நல்லது" என்று. 


எனவே, யார் என்ன சொன்னாலும், எது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், ஏற்பது இகழ்ச்சி, ஈகை செய்வது கடமை. 


 



Saturday, October 14, 2023

திருக்குறள் - வறியார்க்கு ஈவதே ஈகை

 திருக்குறள் - வறியார்க்கு ஈவதே ஈகை 


ஈகை என்றால் என்ன என்று ஒரு வரைவிலக்கணம் (definition) தருகிறார் முதலில். 


நம் வீட்டில் ஒரு பண்டிகை என்றால் சில பல பலகாரங்கள் செய்வோம். அண்டை அயல் வீடுகளுக்கும் கொடுப்போம். 


அது ஈகையா?


நாம் இன்று கொடுத்தால் அவர்கள் அடுத்த முறை அவர்கல் வீட்டில் ஒரு விசேடம் வரும் போது நமக்கு பலகாரங்கள் அனுப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 


அப்படி எல்லாம் இல்லை. அதுக்காக ஒன்றும் நான் தருவது இல்லை என்று வாதம் செய்யலாம். ஒவ்வொரு வருடமும் நீங்கள் பலகாரம் அனுப்புகிறீர்கள். அடுத்த வீட்டுக்காரர் பெற்றுக் கொள்கிறார். ஒரு முறை கூட பதிலுக்கு செய்வது இல்லை என்றால் எத்தனை காலம் அனுப்புவீர்கள்? 


அது போல் நம்மை விட பெரிய ஆள்களுக்கு விருந்து கொடுப்பது, அவர்கள் வீட்டு கல்யாணத்துக்கு போய் முறை செய்வது எல்லாம் அவர்களால் பின்னால் நமக்கு ஒரு காரியம் சாதித்துக் கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பில். 


இன்றெல்லாம் திருமண வீடுகளில் மொய் எழுதுகிறார்கள்.  எதற்கு? பின்னால் திருப்பிச் செய்ய வேண்டும். பொருளாகக் கொடுத்தாலும் அதை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். இன்னார், இத்தனை பவுனில் நகை அன்பளிப்பாக அளித்தார் என்று. பின்னால் செய்ய வேண்டுமே. 


இதெல்லாம் ஈகை இல்லை.


பின் எதுதான் ஈகை?


ஒன்றும் இல்லாத வறியவர்களுக்கு ஒரு பலனும் எதிர்பார்க்காமல் ஒன்று கொடுப்பதுதான் ஈகை. 


பாடல் 



வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்

குறிஎதிர்ப்பை நீரது உடைத்து.


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_14.html


(please click the above link to continue reading)


வறியார்க்கொன்று = வறியவர்களுக்கு ஒன்று 


ஈவதே = கொடுப்பதே 


ஈகை = ஈகை 


மற்று எல்லாம் = மற்றவை எல்லாம் 


குறிஎதிர்ப்பை = பிரதி பலனை எதிர்பார்த்து செய்யும் 


நீரது உடைத்து. = தன்மை கொண்டது. 


தெருவில் ஒரு பிச்சைகாரன் போகிறான். அவனுக்கு ஒரு பத்து உரூபாய் தருகிறோம். அது ஈகை. காரணம், அவன் பதிலுக்கு நமக்கு ஏதாவது செய்வான் என்ற நம்பிக்கையில் தந்தது அல்ல என்பதால். 


இரண்டு விடயங்கள் சொல்கிறார். 


ஒன்று, வறியவனுக்கு கொடுக்க வேண்டும். உள்ளூர் அரசியல் பெரும் புள்ளிக்கு விருந்து கொடுத்தால் அது ஈகை அல்ல. 


இரண்டாவது, எதிர்பார்ப்பு இல்லாமல் கொடுக்க வேண்டும்.  வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு ஒரு பழைய ஆடையை கொடுக்கலாம். அது ஈகை அல்ல. காரணம், நாம் அவளுக்கு இதைச் செய்தால் அவள் நம்மிடம் விசுவாசமாக இருப்பாள், வேலையை விட்டு போய் விட மாட்டாள் என்ற நம்பிக்கையில் கொடுப்பது. 


கொஞ்சம் இலக்கணம் படிக்கலாமா?


"நீரது" என்றால் என்ன?  பொதுவாக நீர்மை என்றால் தன்மை. இயற்கை குணம்.  சரி, புரிகிறது. அது என்ன நீர் + அது?


பகுபத உறுப்பிலக்கணம் என்று ஒன்று இருக்கிறது. ஒரு சொல்லை பகுத்து, அதாவது பிரித்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்வது. 


ஒரு சொல் மூன்று பகுதிகளைக் கொண்டது. 


பகுதி + இடைநிலை + விகுதி 


பகுதி என்பது முதலில் வருவது. விகுதி எனபது கடைசியில் வருவது. இடைநிலை என்பது நடுவில் வருவது. 


ஒரு வினைச்சொல்லில் (verb), பகுதி என்பது வினையைக் குறிக்கும், விகுதி என்பது யார் செய்தார்கள் என்பதைக் குறிக்கும். இடை நிலை என்பது காலத்தை குறிக்கும். அதாவது அது எப்போது நடந்தது என்று சொல்லும். 


ஒரே சொல்லில் மூன்றும் வரும். 


உதாரணமாக:


வந்தான் என்ற சொல்


வா + த் + த் + ஆன் 


என்று பிரியும். 


வா என்ற பகுதி வருகின்ற செயலைக் குறிக்கும். 


இரண்டாவது வரும் த் என்பது சந்தி, அது ந் என திரிந்தது விகாரம். அது என்ன என்று இன்னொரு நாள் பார்ப்போம். 


அடுத்து வரும் த் காலம் காட்டும் இடை நிலை. அது இறந்த காலத்தைக் குறிக்கும். 


இறுதியில் வரும் ஆன் என்பது ஆண்பால், படர்கை, வினை முற்று விகுதி.


இங்கே, நீரது என்பது நீர்+ அது என்று பிரியும். 


நீர் என்றால் நீர்மை. அது என்ற விகுதி, தனியாக ஒரு பொருளைத் தராமல் பகுதியின் பொருளையே தந்தது என்கிறார் பரிமேலழகர். 


  " 'நீரது' என்புழி, 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி."


அதாவது, நீரது என்றால் (என்புழி) அது என்பது பகுதியான நீர்மையையே மீண்டும் குறிக்கும் விகுதி. 


இது தேவையா?...:)


வேலை மெனக்கெட்டு ஒரு வார்த்தைக்கு இவ்வளவு விளக்கம். இலக்கணத்துக்கு அவ்வளவு முக்கியத்வம் கொடுத்து இருக்கிறார்கள். 



Thursday, October 12, 2023

திருக்குறள் - ஈகை - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - ஈகை - ஒரு முன்னோட்டம் 


தனி மனிதனுக்கு செய்யும் உதவி ஈகை எனப்படும். ஊருக்காக செய்யும் உதவி ஒப்புரவு எனப்படும். 


கேள்வி என்ன என்றால் ஒப்புரவு உயர்ந்ததா, ஈகை உயர்ந்ததா? 


ஒரு தனி மனிதனுக்கு செய்வதை விட ஊருக்கே செய்வது தானே உயர்ந்தது என்று நாம் நினைப்போம். ஆனால் வள்ளுவர் அப்படி நினைக்கவில்லை. 


ஊருக்காக செய்யும் எந்த உதவிக்கும், ஒரு விளம்பரம் கிடைக்கும். ஒரு பேருந்து நிலையம், ஒரு தண்ணீர் பந்தல், இலவச மருத்துவமனை என்று எது செய்தாலும் ஒரு புகழ் கிடைக்கும். அந்த உதவிக்கு பலன் கிடைக்கும். 


நாம் ஒன்று செய்தோம். பதிலுக்கு நமக்கு ஒன்று கிடைத்தது என்றால் அது வியாபாரம். இலாபம் நட்டம் அப்புறம். கொடுத்ததற்கு பலன் கிடைத்தது அல்லவா?


மாறாக, ஒரு பிச்சைகாரனுக்கு ஒரு பத்து உரூபாய் பிச்சை போடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். நம் பெயர் கூட அவனுக்குத் தெரியாது. அந்த உதவியால் நமக்கு ஒரு பலனும் இல்லை. இப்படி பலன் எதிர்பாராமல் செய்யும் உதவி பலன் பெறும் உதவியை விட உயர்ந்தது அல்லவா?


எனவே, ஈகை என்ற அதிகாரத்தை ஒப்புரவு என்ற அதிகாரந்த்தின் பின் வைக்கிறார். 


சரி, ஈகை என்றால் என்ன என்று தெரிந்து விட்டது. 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_12.html


(please click the above link to continue reading)


ஈகை பற்றி ஒரு கட்டுரை எழுது என்றால் நாம் எப்படி எழுதுவோம்?


யோசித்துப் பார்ப்போம். 


வள்ளுவர் எப்படி எழுத்கிறார் என்று பாருங்கள். 


முதலில், ஈகை என்றால் என்ன, அதன் இலக்கணம் என்ன, பொருள் என்ன என்று வரையறை செய்கிறார். முதல் குறளில் இதை சொல்லி விடுகிறார். 


அடுத்த ஆறு குறள்களில் ஈகையின் சிறப்பு பற்றி கூறுகிறார். 


ஆறு ஒண்ணும் ஏழு குறள் ஆகி விட்டது. இன்னும் மூன்று குறள்கள் இருக்கின்றன. 


அடுத்த மூன்று குறள்களில் ஈயாமையின் குற்றம் பற்றி கூறுகிறார். ஈயாமல் என்ன ஆகும், யார் அப்படி இருப்பார்கள் என்று விளக்குகிறார். 


மிக மிக அருமையான ஆழமான அர்த்தம் கொண்ட அதிகாரம். 


ஒவ்வொன்றாக சிந்திப்போம். 


 



Tuesday, October 10, 2023

திருக்குறள் - விற்றும் கொளல் வேண்டும்.

 திருக்குறள் - விற்றும் கொளல் வேண்டும். 


ஒப்புரவு என்றால் ஊருக்கு நல்லது செய்வது. தனி மனிதனுக்கு அல்ல, ஊருக்கு. 


சரி, ஊருக்கு நல்லது செய்கிறேன் என்று இறங்கினால், நம்மிடம் உள்ள செல்வம் எல்லாம் சீக்கிரம் கரைந்து போய் விடாதா? அப்புறம் நமக்கு யார் உதவி செய்வார்கள்? இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி வரும். 


இந்த மாதிரி சந்தேகம் வரும் போது நாம் இரண்டு விதத்தில் அதைப் போக்கிக் கொள்ளலாம். 


முதலாவது, இதுவரை அப்படி நாட்டுக்கு நல்லதுசெய்து ஏழையாகி துன்பப் பட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று ஆராயலாம். நாட்டுக்கு நல்லது செய்து நொடித்துப் போனவர் யார்?


எனக்குத் தெரிந்து கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் நாட்டுக்காக தன் செல்வம் அனைத்தையும் கொடுத்து, சிறையில் கிடந்து துன்பப்பட்டார். அவர் அப்படி செய்யாமல் இருந்திருந்தால், சொத்தோடு சுகமாக வாழ்ந்து இருக்கலாம். 


பணம் போனது என்னவோ உண்மைதான். அவர் வாங்கிய கப்பலும் போனது. வியாபாரம் நொடித்துப் போனது. இனிய வாழ்நாளை சிறையில் கழித்தார். 


என்ன ஆயிற்று?  


இந்தத் தமிழனம் உள்ள வரை, அவர் புகழ் நிலைத்து நிற்கும் அல்லவா?  ஒரு வேளை அவர் இது ஒன்றையும் செய்யாமல் இருந்து இருந்தால் அப்படி ஒரு ஆள் இருந்தார் என்றே தெரியாமல் போய் இருக்கும். 


இன்னொருவர், தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர். தன் சொந்த செலவில் ஊர் ஊராக சுற்றி அலைந்து, படாத பாடு பட்டு பழைய தமிழ் ஓலைச் சுவடிகளை கண்டு பிடித்து அச்சில் ஏற்றினார். அவர் அப்படி ஊருக்கு நல்லது செய்யாமல் இருந்திருந்தால், எவ்வளவு நாம் இழந்து இருப்போம். 


தேடினால் இன்னும் பலர் கிடைக்கலாம். ஊருக்கு நல்லது செய்து வருந்தியவர் யாரும் இல்லை 


இன்னொரு வகை, இதையெல்லாம் ஆராய்ந்து ஒருவர் சொன்னால், அதை ஏற்றுக் கொள்ளலாம்.. 


வள்ளுவர் சொல்கிறார், 


"ஒப்புரவு செய்வதானால் வறுமை வரும் என்று யாராவது சொன்னால், அந்த வறுமையை தன்னைக் விற்றாவது பெற வேண்டும்"


என்று. 


பாடல் 


ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்கது உடைத்து


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_10.html


(please click the above link to continue reading)

ஒப்புரவி னால் = ஒப்புரவு செய்வதானால் 


வரும் = வருவது 


கேடெனின்= கேடு என்றால் 


அஃதொருவன் = அந்தக் கேட்டினை ஒருவன் 


விற்றுக்கோள் = விலைக்கு வாங்கிக் கொள்ளும் 


தக்கது உடைத்து = தகுதி உடையது 


இந்த குறளுக்கு பரிமேலழகர் மிக நுணுக்கமாக உரை செய்து இருக்கிறார். அது என்ன என்று பார்ப்போம். 


"ஒப்புரவி னால்வரும் கேடெனின் " = ஒப்புரவு செய்வதனால் கேடு வரும் என்று கூறினால். "கூறினால்" என்றால் யார் கூறினார் என்ற கேள்வி வரும் அல்லவா. அப்படி ஒரு வேளை யாரவாது கூறினால் என்று பொருள் சொல்கிறார். 


அதாவது, யாரும் சொல்ல மாட்டர்கள். ஆனால், சில வம்பு செய்பவர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒரு வேளை கேட்கலாம். அப்படி யாராவது கூறினால்....


"விற்றுக்கோள் தக்கது உடைத்து": அந்த கேட்டினை விற்றாவது பெற்றுக் கொள்ளும் தகுதி உடைத்து.. அவன் தான் ஒப்புரவு செய்து, எல்லாம் இழந்து நிற்கிறானே. அவன் எதை விற்பான் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு, அதற்கு பதில் சொல்கிறார். "தன்னை விற்றாவது" அந்த செயலை செய்ய வேண்டும். 


தன்னை விற்று செய்யும் காரியம் உலகில் ஒன்றும் இல்லை. எனவே, அப்படி ஒன்றும் நிகழ்ந்து விடாது என்பதை குறிப்பால் உணர்த்தினார். 


இந்தக் குறளோடு, இந்த அதிகாரம் முற்றுப் பெறுகிறது. 


நாளை, இதன் தொப்புரையை காண்போம். 





Sunday, October 8, 2023

திருக்குறள் - வறுமை என்றால் என்ன?

 திருக்குறள் - வறுமை என்றால் என்ன?


வறுமை என்றால் என்ன?  


சொந்த விமானத்தில் போக முடியாத அளவுக்கு ஏழையாக இருக்கிறேனே என்று யாராவது கவலைப் படுவார்களா? அது வறுமை இல்லை. 


சரி, பத்து படுக்கை அறை உள்ள ஒரு வீடு இல்லையே என்ற வறுமையில் யாராவது வருந்துகிரார்களா?


இல்லை.


வறுமை என்றால் நமக்கு ஒன்று வேண்டும் ஆனால் அதை அடைய முடியவில்லை என்றால் வருவது. 


ஒரு கார் வேண்டும், இரண்டு அல்லது மூன்று படுக்கை அறை கொண்ட வீடு வேண்டும், மூணு வேளை நல்ல உணவு வேண்டும், இதெல்லாம் இல்லை என்றால் வறுமை என்று சொல்லலாம். 


ஒரு பிச்சைகாரன் ஒரு வேளை உணவு கிடைக்காவிட்டால் வறுமை என்பான். 


எனவே, தான் அனுபவிக்க நினைப்பதை அனுபவிக்க முடியாமல் போனால் அது வறுமை. 


இப்படி பார்ப்போம். 


ஒருவனுக்கு ஏராளமான செல்வம் இருக்கிறது. ஊர் பக்கம் பத்து பதினைந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. வருடா வருடம் நெல் வருகிறது. வீட்டின் பின் புறம் பத்து பசு நிற்கிறது. பாலும், தயிரும் செழிப்பாக இருக்கிறது. 


ஆனால், மருத்துவர் சொல்லி இருக்கிறார் "அரிசியை கையில் எடுத்தால், சர்க்கரை கூடும், அப்புறம் அந்த கையையே எடுக்க வேண்டி வரும்" என்று. 


வீட்டு வேலைகாரர்கள் சோறு, குழம்பு என்று உண்டு மகிழ்வார்கள். முதலாளிக்கு கேப்பை களி தான் உணவு. அதுவும் ஒரு உருண்டைதான். 


யார் வறுமையில் இருக்கிறார்கள் என்று யோசிக்க வேண்டும். 


அனுபவிக்க நினைப்பதை அனுபவிக்க முடியாவிட்டால் அது வறுமை. 


வள்ளுவர் சொல்கிறார், 


ஒரு ஒப்புரவு செய்பவனுக்கு வறுமை எது என்றால், அவன் ஒப்புரவு செய்ய முடியாமல் போவதுதான். 


ஊருக்கு நல்லது செய்ய நினைக்கிறான். ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த வருத்தம் தான் அவனுக்கு வறுமை என்று. 


பாடல் 


நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர

செய்யாது அமைகலா வாறு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_8.html


(please click the above link to continue reading)


நயனுடையான் = நயன் + உடையான் = நல்லது உள்ளவன், நல்லவன், ஒப்புரவு செய்பவன் 


நல்கூர்ந்தான் ஆதல் = ஏழையாக ஆகி விடுதல் 


செயும்நீர = செய்யும் தன்மை, அதாவது ஒப்புரவு செய்யும் தன்மை 


செய்யாது = செய்ய முடியாமல் 


அமைகலா வாறு = அமைந்து விட்டால் 


இரண்டு விடயங்களை நாம் சிந்திக்க வேண்டும்.


ஒன்று, இவ்வளவு பணம் இருந்து என்ன பலன்? யாருக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படி ஊருக்கு நல்லது செய்து அதனால் வரும் இன்பத்தை அனுபவிக்க முடியவில்லையே என்று வருந்துவானம். இந்த பணம் இருந்தும் ஒன்றுதான், இல்லாததும் ஒன்றுதான். இல்லை என்றால் வறுமை. இருந்தும் ஒன்றும் பலன் இல்லை என்றால், அதுவும் வருமைதானே. 


இரண்டாவாது, ஒப்புரவு செய்தால் வறுமை வந்துவிடுமே என்ற பயந்து, பணத்தை இறுக்க கட்டிப் பிடித்துக் கொண்டால், அந்த பணத்தை நல்ல வழியில் செலவழிக்க முடியாததும் ஒரு விதத்தில் வறுமைதான் என்கிறார்.


எந்த அளவுக்கு சிந்தித்து இருக்கிறார்கள். 


பொது நலம் என்பதின் உச்சம் தொட்டு இருக்கிறார்கள். 


ஏதோ கம்யூனிசம் , சோசியலிசம் என்பதெல்லாம் மேலை நாடுகளின் கண்டு பிடிப்புகள் என்று நாம் நினைக்கிறோம். அல்ல. வள்ளுவப் பெருந்தகை அவற்றைப் பற்றி எல்லாம் என்றோ சிந்தித்து இருக்கிறார். 


இதில் ஆச்சரியம் என்ன என்றால், இந்த பொது நல சிந்தனையை ஒரு அரசாங்கம் செய்ய வேண்டும், சட்டம் போட்டு கொண்டு வர வேண்டும் என்று இல்லாமல், அதை இல்லற தர்மமாக நம்மவர்கள் சிந்தித்து இருக்கிறார்கள். 


கார்ல் மார்க்ஸ், angels எல்லாம் சிந்திக்காத பகுதி. 


தனி  மனித சொத்துரிமை கூடாது என்று சோசியலிசம் கூறுகிறது. அபப்டி என்றால் எதற்காக உழைக்க வேண்டும் என்ற கேள்வி வரும். உழைப்ப கட்டாயமாக்க வேண்டும் என்ற சூழ்நிலை வரும். அதெல்லாம் நடக்காது. 


வள்ளுவர் வழி தனி வழி. நீ நன்றாக உழை. பொருள் சேர். அதை அனுபவி. அதே சமயம் அந்த பொருளால் சமுதாயத்துக்கும் ஏதாவது நன்மை செய் என்கிறார். 


இதை அறமாக நம்மவர்கள் கருதினார்கள். 


அப்படி ஒரு பரம்பரை நம்முடையது. பெருமை கொள்வோம். 





Thursday, October 5, 2023

திருக்குறள் - ஒப்புரவிற்கு ஒல்கார்

 திருக்குறள் - ஒப்புரவிற்கு ஒல்கார்


ஒப்புரவு, அதாவது பொதுநலம் என்பது கட்டாயமா? எல்லோரும் செய்ய வேண்டுமா? செல்வம் இருப்பவர்கள், அரசியல் அதிகாரம், செல்வாக்கு உள்ளவர்கள், சமுதாயத்தில் உயர் நிலையில் உள்ளவர்கள் செய்யலாம். அவர்களால் செய்ய முடியும். 


சாதாரண மக்களால் செய்ய முடியுமா? நம் வீட்டை பார்க்கவே நமக்கு செல்வம் இல்லை. இதில் எங்கிருந்து ஊருக்கு நல்லது செய்வது என்ற கேள்வி எல்லோர் மனத்திலும் எழும். 


இந்த வாதம் சரி என்று எடுத்துக் கொண்டால், உலகில் யாருமே செய்ய மாட்டார்கள். ஆயிரம் உரூபாய் உள்ளவன், பத்தாயிரம் இருப்பவன் செய்யட்டும், என்னால் முடியாது என்பான் பத்தாயிரம் உள்ளவன், இலட்சம் உள்ளவன் செய்யட்டும், என்னால் முடியாது என்பான். இப்படி போய்க் கொண்டே இருந்தால், உலகில் யாருமே மிஞ்ச மாட்டார்கள். உலகிலேயே மிகப் பெரிய பணக்காரனிடம் கேட்டால், நான் எவ்வளவு வரி கொடுக்கிறேன். அந்த வரி எல்லாம் அரசாங்கம் பொது நன்மைக்குத்தானே செலவழிக்கிறது. அதற்கு மேலும் வேறு நான் என்ன செய்ய வேண்டும் என்று பதில் கேட்பான். 


இதை அறிந்த வள்ளுவர் சொல்கிறார், 


ஒப்புரவு என்பது கடமை இல்லை. சட்டம் இல்லை. யாரும் ஒருவர் மீது திணிக்க முடியாது.. ஆனால், நீயே சுற்றிமுற்றிப் பார். நீ சார்ந்த சமுதாயம் எப்படி இருக்கிறது என்று பார். அதை உயர்த்துவது அந்த சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவர் கடமை என்று உனக்கே புரியும். நீ செய், நான் செய் என்பதிற்கு பதில், எல்லோரும் செய்ய வேண்டும் என்ற இயற்கை அறிவு தானே வரும் உனக்கு. அந்த அறிவில் இருந்து நீ செய்வாய் என்கிறார். 


பாடல் 



இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_5.html

(pl click the above link to continue reading)



இடனில் = இடம் + இல் = இடம் இல்லாத. அதாவது ஒப்புரவு செய்ய இடம் இல்லமால், செல்வம் இல்லாமல் 


பருவத்தும் = இருக்கின்ற காலத்திலும் 


 ஒப்புரவிற்கு = ஒப்புரவு செய்ய 


 ஒல்கார் = தயங்க மாட்டார்கள் 


கடனறி = கடன் (கடமை) + அறி = அது கடமை என்று 


காட்சி யவர் = கண்டு கொண்டவர்கள், அறிந்தவர்கள்


அதாவது, ஒப்புரவு என்பது ஒவ்வொருவரது கடமை. 


பணம் இல்லை என்றால் என்ன? மனம் இருந்தால் போதும். அருகில் உள்ள பள்ளியில் சென்று பிள்ளைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லித் தரலாம், வருடம் இரண்டு முறையாவது இரத்த தானம் செய்யலாம், தெருவில் நடந்து செல்லும் போது, பெரிய கல் சாலையில் கிடந்தால் அதை ஓரமாக தள்ளிப் விட்டுப் போகலாம், குப்பையை கண்ட இடத்தில் போடாமல், சுத்தமாக வைத்து இருக்கலாம், முடிந்த வரை தண்ணீரை சிக்கனமாக செலவழிக்கலாம்...இதெல்லாம் சமுதாய நன்மை கருதித்தான்.


என்னிடம் பணம் இருக்கிறது என்று 24 மணி நேரமும் குளிர் சாதனத்தை ஓடவிடாமல், குறைத்து செலவழிக்கலாம். 


வீட்டில் ஏதோ விசேடம் என்றால் அருகில் உள்ள அனாதை இல்லம் அல்லது முதியோர் இல்லத்துக்கு ஒரு வேளை உணவை இலவசமாகத் தரலாம். ஒரு இடத்தில் எல்லோரும் இதைச் செய்தால், வருடம் முழுவதும் அந்த பிள்ளைகள் பசியால் வாடாமல் இருக்கும். 


இப்படி ஆயிரம் வழியில் ஒப்புரவு செய்யலாம்.. 



சமுதாய அக்கறை என்பது பணம் மூலம் தானம் செய்வது மட்டும் அல்ல. எவ்வளவோ வழியில் செய்யலாம். செய்ய வேண்டும். அது கடமை என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. 




Monday, October 2, 2023

திருக்குறள் - மருந்து மரம்

 திருக்குறள் - மருந்து மரம் 


ஊருக்கு நல்லது செய்கிறேன் என்று இருக்கிற செல்வத்தை எல்லாம் செலவழித்து விட்டால், பின் நமக்கு ஒரு தேவை என்றால் யார் தருவார்கள்? நமக்குப் பின் நம் பிள்ளைகளுக்கு ஒரு அவசரம், அவசியம் என்றால் யார் வந்து உதவுவார்கள்?  


அதெல்லாம் இந்த வள்ளுவர் யோசித்து இருக்க மாட்டாரா?


ஒப்புரவு செய்பவன் கையில் உள்ள செல்வம், நல்ல மருந்து தரும் மரம் போன்றது என்கிறார். 


பாடல் 


மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post.html


(please click the above link to continue reading)



மருந்தாகித் = நோய் தீர்க்கும் மருந்தாகி 


தப்பா  = தவறாமல் உதவி செய்யும் 


மரத்தற்றால் = மரம் போன்றது 


செல்வம் = செல்வம் 


பெருந்தகை  யான்கண்  = பெரிய தகைமை உடையவன் இடத்தில்  


படின் = இருக்குமானால் 


அது என்ன தவறாத மரம்?


பரிமேலழகர் சொல்கிறார்...


"சில மரங்கள் பலன் தரும், ஆனால், எங்கோ காட்டில் இருக்கும். அதை தேடி கண்டு பிடிக்கவே முடியாது அல்லது நாள் ஆகும். அவசரத்துக்கு உதவாது. 


சில மரங்கள், கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும். ஆனால், அதன் பழமோ, பூவோ எப்போதும் இருக்காது. ஒரு சில பருவத்தில் மட்டும் தான் பூக்கும், காய்க்கும். நம்ம அவசரத்துக்கு உதவாது.


சில மரங்கள், ஊரின் நடுவில் இருக்கும், எப்போதும் பூக்கும், காய்க்கும் ஆனால் பலன் ஒன்றும் இருக்காது."


இப்படி எவ்வளவோ விதங்களில் பலன் தர தவறி விடலாம். 


அப்படி இல்லாமல், தன்னுடைய எல்லா பாகங்களையும் மருந்தாக பயன்படும்படி, எப்போதும் தந்து நிற்கும் மரம் போன்றது, ஒப்புரவு செய்பவன் கையில் உள்ள செல்வம். 


மீண்டும் அந்த கேள்விக்கு வருவோம். 


ஒப்புரவு செய்து கொண்டே போனால் நம் கதி என்ன ஆவது?


ஒரு காலத்தில் மக்கள், அதிலும் பணம் படைத்தவர்கள், சமுதாயத்துக்கு உதவுவதை கடமையாக கொண்டு இருந்தார்கள். 


நாளடைவில் சுயநலம் பெருகி, கொடுப்பது குறைந்து விட்டது. 


இப்போது, அதிக இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் பொது சேவைக்கு பணம் செலவழிக்க வேண்டும் என்பது சட்டம். 


Corporate Social Responsibility 


என்று அதற்குப் பெயர். 


நிறுவனங்கள்தானே செலவழிக்கிறார்கள். நான் இல்லையே என்று நினைக்கலாம். 


அப்படி செலவு செய்யும் நிறுவனங்கள் அந்த செலவை அவர்கள் விற்கும் பொருள்கள் மேல் ஏற்றி விடுவார்கள். அந்தப் பொருள்களை வாங்கும் நீங்களும் நானும் மறைமுகமாக ஒப்புரவு செய்து கொண்டுதான் இருக்கிறோம். 




Sunday, September 24, 2023

திருக்குறள் - ஊர் நடுவே ஒரு பழ மரம்

 திருக்குறள் - ஊர் நடுவே ஒரு பழ மரம் 


ஊருக்கு நடுவே ஒரு நல்ல மா மரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கோடை காலத்தில் அந்த மரத்தில் மிக சுவையான பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன. அந்த மரம் யாருக்கும் சொந்தமானது அல்ல. யார் வேண்டுமானாலும் அந்தப் பழத்தை பறித்து சுவைக்கலாம் என்றால் எப்படி இருக்கும்?


எல்லோரும் எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும் என்று அந்தப் பழங்களை பறித்து உண்டு இன்புறுவார்கள் அல்லவா? 


அது போல 


ஒப்புரவு அறிந்தவனின் செல்வமும் எல்லோருக்கும் பயன் தரும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/09/blog-post_24.html


(pl click the above link to continue reading)



பயன்மரம் = பயன் தரக்கூடிய மரம் 


உள்ளூர்ப் = ஊரின் உள்ளே 


பழுத்தற்றால் = பழுத்து இருந்தது போல 


 செல்வம் = செல்வமானது 


நயனுடையான் = ஒப்புரவு செய்பவன் 


கண் = இடத்தில் 


படின் = இருக்குமானால் 


இது என்ன குறள்? புறம்போக்கு நிலத்தில் உள்ள மரத்தின் பழங்களை போகிறவன் வருகிறவன் எல்லாம் பறித்துக் கொண்டு போவது போல, ஒப்புரவு செய்பவனின் செல்வம் என்றால் என்ன அர்த்தம். யார் வேண்டுமானாலும் அவன் செல்வத்தை எடுத்துக் கொண்டு போய் விடலாம் என்கிறாரா வள்ளுவர்? அது சரியா?  கேட்க வேண்டுமானால் நன்றாக இருக்கும். நடைமுறையில் இது எப்படி சாத்தியப்படும் என்று நமக்கு சந்தேகம் வரலாம். 


உரை ஆசிரியர்கள் இந்தக் குறளை பெரிதாக உரை செய்யவில்லை. நாமே சிந்தித்துக் கொள்ள வேண்டியதுதான். எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டா இருக்க முடியும்?


பழ மரம் என்று ஏன் சொன்னார்?  மரம் பழம் தரும். எல்லோரும் பறித்துக் கொண்டு போய் விடுவார்கள்.  அப்புறம் என்ன ஆகும்?  அவ்வளவுதானா? இல்லை, அடுத்த வருடம் மீண்டும் அதே அளவு பழங்கள் தோன்றும். கொடுப்பதால் யாரும் குறைந்து விடமாட்டார்கள். இறைக்கும் கிணறு ஊறும் என்பது போல, கொடுக்க கொடுக்க மேலும் வரும். பயப்படாதே என்று வள்ளுவர் சொல்கிறாரோ?


மரத்தில் இருந்து மக்கள் பழத்தைத் தான் எடுப்பார்கள். பழம் தருகிறதே என்று வேரோடு யாரும் பிடுங்கிக் கொண்டு போய் விடுவதில்லை. அல்லது கிளையை வெட்டுவோம், இலையை வெட்டுவோம் என்று ஆரம்பிப்பது இல்லை. பழம் என்பது மரத்தின் அதிகப்படி.  தன் தேவைக்கு போக மீதியைத்தான் அந்த மரம் பழமாக மாற்றி வைக்கிறது. 


மேலும், பழம் தரும் மரம் என்றால் மக்கள் அதை பாதுகாப்பார்கள். யாரும் வெட்டி விடாமல் வேலி போட்டு காவல் செய்வார்கள். அடுத்த வருடமும் பழம் வேண்டுமே என்று மரத்தை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார்கள். அதுவே ஊருக்கு நடுவில் ஒரு முள் மரம் அல்லது விஷ மரமாக இருந்தால் என்ன செய்வார்கள்? முதல் காரியமாக அதை வெட்டி விடுவார்கள். எனவே, ஒப்புரவு என்பது ஊருக்கு மட்டும் அல்ல, தனக்கும் நல்லது என்றும் பொருள் கொள்ளலாம். 


மேலும், பழத்தை பறித்துக் கொண்டு செல்பவர்கள், அதை உண்ட பின் அதன் விதையை தூர எறிந்து விடுவார்கள். எங்கோ விழுந்த விதை, அங்கு முளைக்கும். அது போல, ஒருவன் செய்யும் உதவி, பின் வரும் அவன் தலைமுறைக்கும் உதவி செய்யும். 


"அந்த காலத்தில உங்க அப்பா, தாத்தா எல்லாம் எங்க குடும்பத்துக்கு எவ்வளவோ நல்லது செஞ்சிருக்காங்க.." என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம். 


"உங்க அண்ணன் எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சு இருக்கார்...உங்களுக்காக இது கூட செய்ய மாட்டேனா" என்று எங்கோ செய்த உதவி, வேறு எங்கோ சென்று பலன் தருவதை நாம் கேட்டு இருக்கிறோம். 


மேலும், வள்ளுவர் பயன் தரும் மரம் என்றுதான் கூறி இருக்கிறார். பழம் தரும் மரம் என்று சொல்லவில்லை. பயன் என்றால் நிழல் தரும் மரமாகக் கூட இருக்கலாம். ஊருக்கு நடுவில்  ஒரு நிழல் மரம் இருந்தால், மக்கள் அதன் நிழலில் இளைப்பாறுவார்கள்.  அதன் கீழே அமர்ந்து உணவு உண்ணலாம், நீர் அருந்தலாம், பின் மீதி உள்ளதை அந்த மரத்தின் அடியில் கொட்டி விட்டுப் போவார்கள். அது மரத்துக்கு உரமாக பயன்படும். இப்படி ஊருக்கு நல்லது செய்வதன் மூலம், மரம் தனக்கும் நல்லது செய்து கொள்கிறது. 


குறளில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். தோண்டி நாம் தான் எடுக்க வேண்டும். 






Friday, September 8, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - பேரறிவாளன்

 திருக்குறள் - ஒப்புரவறிதல் - பேரறிவாளன் 


ஏதோ ஒரு பொருளை வாங்க கடைக்குச் செல்கிறோம். கடைக்காரர் ஒரு விலை சொல்கிறார். அது அதிகம் போலத் தெரிகிறது. நாலு கடையில் விசாரித்து, எங்கே மலிவாக இருக்கிறதோ அங்கே வாங்குகிறோம். 


ஏன்?


அதிக விலை கொடுத்து வாங்கினால் என்ன?


அது முட்டாள்தனம் அல்லவா. எதற்காக ஒரே பொருளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும்?  அது அறிவான செயல் அல்லவே?


ஒரு வேலை செய்கிறோம் என்றால் அதனால் அதிக பட்ச பலன் என்ன என்று அறிந்து அதைச் செய்ய வேண்டும். அது தானே புத்திசாலித்தனம்.


நாம் செய்யும் வேலைக்கு ஒரு நிறுவனத்தில் மாதம் ஒரு தொகை சம்பளமாக கொடுக்கிறார்கள். அதே வேலைக்கு இன்னொரு இடத்தில் மூன்று மடங்கு சம்பளம் தருகிறார்கள் என்றால் அந்த புது இடத்துக்கு போவதுதானே புத்திசாலித்தனம்?


அதைத்தான் வள்ளுவர் சொல்கிறார். 


உன்னிடம் செல்வம் இருக்கிறது. அதை நீ உனக்காகவும், உன் குடும்பத்துக்கும் செல்வழிக்கிறாய். மீதம் உள்ளதை சேமித்து வைகிறாய்.


அந்த செல்வத்தின் உச்ச பட்ச பயன்பாடு அதுதானா? அதை விட சிறப்பாக அந்த செல்வத்தை பயன்படுத்த முடியுமா? முடியும் என்றால் அது என்ன?


பாடல் 


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/09/blog-post_8.html


(pl click the above link to continue reading)



ஊருணி - ஊர் உண்ணுகின்ற 


நீர் = நீர், குளம் 


நிறைந் தற்றே = நிறைந்தது போல 


உலகவாம் = உலகு + அவாம்  = உலக நடை, உலக வழக்கு 


பேரறி வாளன் திரு = பெரிய அறிவுடையவன் இடம் இருக்கும் செல்வம் 


ஊர் குடிக்க பயன்படும் குளம் நிறைந்து இருந்தால் அது எப்படி எல்லோருடைய தாகத்தையும் போக்கி நலம் தருமோ, அது போல, பெரிய அறிவுடையவனிடம் அமைந்த செல்வம்.


செல்வத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்று இங்கே எங்கே வந்தது?


குளம் நிறைந்தது போல ஊர் பெரியவரிடம் நிறைந்த செல்வம், அரசனிடம் நிறைந்த செல்வம், சான்றோரிடம் நிறைந்த செல்வம் என்று சொல்லி இருக்கலாம். மாறாக, பேரறிவாளனிடம் அமைந்த திரு என்று ஏன் சொல்ல வேண்டும். 


மற்றவர்களிடம் செல்வம் சேரும். ஆனால், அது ஊருக்கு பயன்படாது. சிலர், சொந்த பிள்ளைகளுக்கே தர மாட்டேன் என்கிறார்கள், உடன் பிறப்பு, பெற்றோருக்கு தர மாட்டேன் என்கிறார்கள். அண்ணன் தம்பிகள் நீதி மன்ற வாசலை மிதிக்கிறார்கள். 


நான் இப்படி சிந்தித்துப் பார்க்கிறேன்.


அறிவில்லாதவன் - தன் செல்வத்தை தனக்கு கூட செலவழிக்க மாட்டான். எதிர் காலத்துக்கு வேண்டும் என்று பயந்து பயந்து சேர்த்து வைத்து, தானும் அனுபவிக்காமல், பிறருக்கும் கொடுக்காமல் துன்பப் படுவான். 


அறிவுள்ளவன் - தன் செல்வத்தை தனக்கும், தன் குடும்பத்துக்கும் செலவழிப்பான். 


பேரறிவாளன் - தன் செல்வத்தை தனக்கும், தன் குடும்பத்துக்கும், தான் சார்ந்த சமூகத்துக்கும் செலவழிப்பான். 


இதை சற்று வேறு விதமாகவும் யோசிக்கலாம்.


அறிவு இல்லாதவன், தன் செல்வத்தால் இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை தேட மாட்டான். 


அறிவு உள்ளவன், இம்மைக்கு நன்மை தேடுவான். செல்வத்தை குடும்பத்தோடு அனுபவிப்பான்.


பேரறிவு உள்ளவன், செல்வத்தின் மூலம் இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை தேடுவான். ஊருக்கு கொடுப்பது புண்ணியம். அது மறுபிறப்பிலும் தொடரும். 


நாம் செய்யும் நன்மை தீமைகள், பாவ புண்ணியமாக மாறி மறு பிறவியில் இன்ப துன்பமாக வந்து சேரும். 


வள்ளுவர் அப்படி நினைத்து சொன்னாரா என்று தெரியாது. 


இப்படி சிந்திக்க இடம் இருக்கிறது.


சரி என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் தள்ளி விடலாம். 




 

Tuesday, August 29, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - உயிர் வாழ்வான்

 திருக்குறள் - ஒப்புரவறிதல் - உயிர் வாழ்வான் 


ஒருவனை பணம் இல்லாதவன், ஏழை என்று திட்டலாம். பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான். 


அறிவில்லாதவன் என்றால் கொஞ்சம் கோபம் வரும். இருந்தாலும், அறிவு என்பது கடல் போன்றது என்பதால், ரொம்ப பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான். 


உயிரில்லாத பிணமே என்று திட்டினால் யாருக்கும் பெரும் கோபம் வரத்தான் செய்யும். 


வள்ளுவர், அப்படி திட்டுகிறார். 


யாரைத் தெரியுமா?


ஒப்புரவு அறியாத மக்களை, உயிரற்ற பிணம் என்று சாடுகிறார். 


பாடல் 


ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_29.html


(Please click the above link to continue reading)


ஒத்தது = உலகுக்கு ஏற்றது எது என்பதை  


அறிவான் = அறிந்து செய்பவன்


உயிர்வாழ்வான் = உயிரோடு வாழ்பவன் என்று ஏற்றுக் கொள்ளப்படுவான் 


மற்றையான் = மற்றவர்கள் எல்லாரும் 



செத்தாருள் வைக்கப் படும் = இறந்தவர்கள் வரிசையில் வைத்து எண்ணத் தக்கவர்கள். 


அது எப்படி, ஒத்தது அறியாவிட்டால் பிணம் என்று எப்படிச் சொல்ல முடியும்?


உயிர் என்பது என்ன?


உயிர் மூன்று வகையான செயல்களை செய்விக்கும். 


ஆசையைத் தூண்டும். 


அறிவைத் தூண்டும். 


செயலைத் தூண்டும். 


இந்த மூன்றும் இல்லாவிட்டால், உயிரில்லை என்று பொருள். 


எறும்பில் இருந்து, புல் , பூண்டு, மரம், செடி, கொடி என்று உயிர் உள்ள அனைத்தும் இந்த மூன்றையும் வெளிப்படுத்தும். 


இதை நம் சமயத்தில் இச்சா சக்தி (ஆசை), கிரியா சக்தி (செயல்), ஞானா சக்தி என்று கூறுவார்கள். 


நமக்கு ஆசை இருக்கிறது. அதை அடைய அறிவு இருக்கிறது. அதை செயல்படுத்த உடல் இருக்கிறது. 


எங்கோ இருக்கும் நீரைத் தேடி ஆசை ஆசையாக மரம் தன் வேரை அனுப்புகிறது. வெளிச்சம் தேடி மேலும் மேலும் வளர்கிறது. 


இங்கே ஒப்புரவு இல்லாதவன் அறிவும், செயலும் இல்லாமல் இருப்பதால் அவனை உயிரற்ற பிணம் என்றார் என்று பரிமேலழகர் உரை செய்கிறார். 


"உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார்"


ஒப்புரவு செய்யாதவன் வெறும் ஆசை மட்டும் உள்ளவன். எல்லாம் எனக்கு என்ற ஆசை உள்ளவன். 




Wednesday, August 23, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - பெறல் அரிதே

 திருக்குறள் - ஒப்புரவறிதல் - பெறல் அரிதே 


கொல்லாமை, பொய் சொல்லாமை என்று பல அறங்கள் இருக்கின்றன. இதில் எது சிறந்தது? இந்த ஒப்புரவு என்பது கொஞ்சம் கடினமான விடயம் போல இருக்கிறதே. கஷ்டப்பட்டு சம்பாதித்ததை எல்லாம் மற்றவர்களுக்கு கொடு என்றால் எளிதான காரியமாகத் தெரியவில்லை. 


பெற்ற பிள்ளைகளுக்கு, உடன் பிறந்தவர்களுக்கு கொடுப்பதே கடினமாக இருக்கிறது. இதில் எங்கிருந்து சமுதாயத்துக்கு கொடுப்பது? 


நன்றாக உடற் பயிற்சி செய்பவர்களை கேளுங்கள். ஒரு நாள் உடற் பயிற்சி செய்ய முடியவில்லை என்றால் அவர்களுக்கு ஏதோ ஒரு குறை போல இருக்கும். உடற் பயிற்சி என்பது கடினம்தான். இருந்தும், அதை செய்யாவிட்டால் ஏதோ இழந்த மாதிரி இருக்கும் அவர்களுக்கு. 


நன்றாக உணவு கட்டுப்பாடு உள்ளவர்களை பாருங்கள். ஒரு நாள் ஏதோ ஒரு இனிப்பு அல்லது ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட்டால், மிகப் பெரிய தவறு போல சொல்லிக் கொண்டு இருப்பார்கள். 


அவர்களைப் பொறுத்தவரை அந்த பயிற்சியும், உணவு கட்டுப்பாடும் அவ்வளவு நல்லது. அது இல்லாமல் இருக்க முடியாது. 


காரணம், அவர்கள் அதன் நன்மையை உணர்ந்து இருக்கிறார்கள். மேலும், அதை செய்து செய்து பழகி இருக்கிறார்கள். முதலில் அவர்களும் சங்கடப்பட்டுத்தான் இருப்பார்கள். 


பழகிய பின் அதன் சுகம் தெரிய ஆரம்பித்து விடுகிறது. 


அது போல, ஒப்புரவும், முதலில் சங்கடமாக இருக்கும். பழகினால் அதன் சுகம் தெரிய ஆரம்பிக்கும். 


வள்ளுவர் சொல்கிறார், "ஒப்புரவுக்கு இணையான ஒன்றை தேவர் உலகிலும், இந்த பூமியிலும் காண முடியாது" என்று. அவ்வளவு உயர்ந்தது என்று கூறுகிறார். 


பாடல் 


புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே

ஒப்புரவின் நல்ல பிற


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_23.html


(Please click the above link to continue reading)



புத்தேள் = சொர்கம், தேவர் உலகம்  


உலகத்தும் = உலகிலும் 


ஈண்டும் = இங்கும், அதாவது இந்த பூமியிலும் 


பெறல்அரிதே = பெற முடியாதே 


ஒப்புரவின் = ஒப்புரவைப் போல 


நல்ல பிற = பிற நல்ல ஒன்றை 


தேவர் உலகில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்பதால் அங்கே போய் ஒப்புரவு செய்ய முடியாது. யாருக்கும் ஒன்றும் வேண்டாம். 


இந்த உலகில், மக்கள் ஒப்புரவின் நன்மைகளை புரிந்து கொள்வதில்லை. அதனால் செய்வது இல்லை. எனவே இங்கும் ஒப்புரவை செய்வது அரிது. 


அங்கே செய்வது அரிது. இங்கே காண்பது அரிது. 


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்பார் வள்ளுவ ஆசான். 


எலும்பைக் கூட கொடுத்து விடுவார்களாம். 


சமுதாயத்துக்கு கொடுப்பது என்றால் என்ன என்று சிந்தித்துப் பார்த்தேன். பொருள் சொன்ன பெரியவர்கள் எல்லோரும் பொருள் உதவி என்றுதான் உரை செய்து இருக்கிறார்கள். 


சற்று வித்தியாசமாக சிந்தித்தால் என்ன?


பொருள் உதவி மட்டும்தானா உதவி?


நம்மிடம் அறிவு இருக்கிறது. அதை சமுதாயத்துக்கு என்று செலவழித்தால் என்ன?  புத்தகம் எழுதலாம், ப்ளாக் எழுதலாம், நாலு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தரலாம் (பணம் வாங்காமல்)...


நம்மிடம் அன்பு இருக்கிறது, அந்த அன்பை சமுதாயத்துக்குத் தரலாம். எப்படி?  இலவச சேவை, பொது நல சேவை,  தொண்டு நிறுவனங்களுக்கு சென்று நம்மால் முடிந்த உதவி. மாதத்தில் ஒரு நாள் சென்று பலன் எதுவும் எதிர்பார்க்காமல் சேவை செய்து விட்டு வருவது, இரத்த தானம் செய்வது, அன்ன தானம் செய்வது...செய்யலாம் தானே. 


தெருவில் நடந்து போகிற போது, பாதையில் கல் கிடந்தால் அதை ஓரமாக தள்ளிவிட்டுப் போவது கூட ஒரு ஒப்புரவுதான். 


இன்றைய சூழ்நிலையில், முடிந்த வரை நடந்து போவது, காரில் போனால் புகை, சுற்றுச் சூழல் மாசுபடும். அது மாசுபடாமல் காப்பது கூட சமுதாயத்துக்கு நாம் செய்யும் உதவிதான். 


ஒரு மணி நேரம் குறைவாக Air Condition ஐ உபயோகம் செய்தால், அதுவும் ஒப்புரவுதான். 


வாரத்தில் ஒரு நாள் ஒரு பொழுது விரதம் இருந்தால் எவ்வளவு பெரிய நன்மை இந்த சமுதாயத்துக்கு. 




வீட்டில் ஒரு விசேடம் என்றால் அருகில் உள்ள அனாதை இல்லம், முதியோர் இல்லம் போன்ற இடங்களுக்கு ஒரு வேளை இலவச உணவு கொடுங்கள். 


எவ்வளவோ செய்யலாம். மனம்தான் வேண்டும். 


சிறிதாக ஒன்றில் ஆரம்பியுங்கள்.  பழக பழக பிடித்துப் போய் விடும். 

Sunday, August 20, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - வேளாண்மை

 திருக்குறள் - ஒப்புரவறிதல் - வேளாண்மை 


ஊருக்கு நல்லது செய்வது என்பதுதான் ஒப்புரவு. 


எவ்வளவு செய்வது? யாருக்குச் செய்வது என்றெல்லாம் கேள்வி வரும். ஊருக்கு செய்வது என்றால் செய்து கொண்டே இருக்கலாம். எவ்வளவு செய்தாலும், மேலும், மேலும் வேண்டும் என்று தோன்றும். நம்மிடம் அவ்வளவு செல்வம் இருக்க வேண்டுமே. 


அது முதல் சிக்கல். 


இரண்டாவது, ஊருக்குள் பல பேர் வேலை வெட்டி இல்லாமல், சோம்பேறியாக திரிந்து கொண்டிருப்பான். நல்லது செய்கிறேன் என்று அவர்களை எல்லாம் கூட்டி வந்து சாப்பாடு போட்டு பராமரிக்க முடியுமா?


மூன்றாவது, ஒருவனிடம் உள்ள செல்வம் அவன் மூதாதையர் தந்த செல்வமாக இருக்கலாம். பரம்பரை சொத்து என்று சொல்வார்கள். அதை தானம் செய்ய அவனுக்கு அதிகாரம் கிடையாது. பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் அதற்கு வாரிசு. பணம் இருக்கும், ஆனால், கொடுக்க முடியாது. 


நான்காவது, தவறான முறையில் சேர்த்த பணத்தில் அன்ன தானம் செய்கிறேன், தண்ணீர் பந்தல் வைக்கிறேன் என்று ஊருக்கு நல்லது செய்தால் அது சரியா? ஊரை ஏமாற்றி, பொய் சொல்லி, திருடி, இலஞ்சம் வாங்கி சேர்த்த பணத்தில் ஊருக்கு நல்லது செய்யலாமா?


இப்படி பல நடைமுறை சிக்கல்களை எடுத்துக் கொண்டு, ஒரே குறளில் அனைத்திற்கும் பதில் தருகிறார் வள்ளுவ ஆசான். 


பாடல் 


தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_20.html


(please click the above link to continue reading)



தாளாற்றித் = முயற்சி செய்து 


தந்த = பெற்ற 


பொருளெல்லாந் = பொருள் எல்லாம், செல்வம் எல்லாம் 


தக்கார்க்கு = தகுதியானவர்களுக்கு 


வேளாண்மை = உதவி 


செய்தற் பொருட்டு = செய்வதற்காக 


முயற்சியால் பெற்ற செல்வம் , மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக. 


இதில் எங்கே மேலே சொன்ன கேள்விகளுக்கு விடை இருக்கிறது?  


தாளாற்றி = முயற்சியால். 


அதாவது ஒருவனின் சொந்த சம்பாத்தியம். பரம்பரை சொத்து இல்லை.  

மேலும், திருடி, கொள்ளை அடித்து அல்ல. வேலை செய்து, முயற்சியால் ஈட்டிய செல்வத்தைப் பற்றி இங்கே கூறுகிறார். 


தக்கார்க்கு = தகுதி உள்ளவர்களுக்கு. அரசியல்வாதிகளுக்கு நன்கொடை கொடுப்பதைப் பற்றி இங்கே கூறவில்லை. நாம் உதவி செய்ய, அதை பெற்றுக் கொள்ளும் தகுதி அவனுக்கு இருக்கிறதா என்று அறிந்து செய்ய வேண்டும். பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்று சொல்லுவார்கள். 


வேளாண்மை செய்தல் = வேளாண்மை என்றால் உதவி. உதவி செய்யச் சொல்கிறார். இந்த அதிகாரம் ஒப்புரவு. எனவே, இது தனி மனித உதவி அல்ல. சமுதாய உதவி. சமுதாயத்தில் எந்தப் பிரிவினருக்கு உதவி தேவையோ அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். 


பொருள் எல்லாம் = இது ஒரு சிக்கலான இடம். தன்னிடம் உள்ள பொருள் எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் சொல்கிறார். அது நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்று. எல்லாவற்றையும் எப்படி கொடுக்க முடியும். இதற்கு சரியான பொருள் எனக்குத் தெரியவில்லை. எப்படி வலிந்து பொருள் சொன்னாலும், அது மனதுக்கு சரி என்று படவில்லை. சிந்திக்க வேண்டிய இடம். அறிவும், அனுபவமும் வளர்ந்தால், ஒரு வேளை இதற்கு என்ன அர்த்தம் என்று தெரிய வரலாம். பொறுத்து இருக்க வேண்டும். 


இந்தப் குறளில் பரிமேலழகர் ஒரு பெரிய நுணுக்கம் செய்கிறார். உங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடிகிறதா என்று பாருங்கள். 


இந்த குறளை இரண்டு விதமாக பிரிக்கலாம். 


தாளாற்றி தந்த பொருள் எல்லாம்

தக்கார்க்கு 

வேளாண்மை செய்தல் பொருட்டு 


என்று பிரித்தால், நாம் மேலே சொன்ன பொருள் வரும். 


மாறாக, பரிமேலழகர் இதை,


தாளாற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு 

வேளாண்மை செய்தற் பொருட்டு 


என்று பிரிக்கிறார். 


அதாவது, முயற்சியால் வரும் பொருள் எல்லாம் நல்லவர்கள் கையில் போய் சேர்ந்தால், அது பிறருக்கு உதவியாகப் பயன்படும் என்று பொருள் கொள்கிறார். 


தாளாற்றி வந்த செல்வம் எல்லாம் தக்கார்க்கு ஆயின், அவர்களுக்கு கிடைக்கும் என்றால், அது வேளாண்மை செய்தல் பொருட்டு, அது ஊருக்கு உதவி செய்ய கிடைத்த மாதிரி என்று பொருள் கொள்கிறார். 


நல்லவன் கையில் கிடைத்த பொருளால் ஊருக்கு நன்மை உண்டு; கெட்டவன் கையில் கிடைத்த பொருளால் ஊருக்கு ஒரு நன்மையையும் இல்லை. தனக்கும் தன் குடும்பத்துக்கும் என்று வைத்துக் கொள்வான் என்று பொருள் சொல்கிறார். 


கொஞ்சம் நீட்டித்து பொருள் சொல்வதாகப் படுகிறது. 


உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அதை ஏற்றுக் கொள்ளுங்கள். 


 



Monday, August 14, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - மழை

திருக்குறள் - ஒப்புரவறிதல் - மழை 


அன்புப் பெருக்கமே இல்லறம் என்று சிந்தித்தோம். தன் வீடு, சுற்றம், நட்பு தாண்டி, தான் வாழும் சமுதாயத்துக்கு ஒருவன் செய்யும் உதவிகள் ஒப்புரவறிதல் எனப்படும். 


ஒருவன் சிறப்பாக இல்லறம் நடத்துகிறான் என்றால், அவன் அன்பு நாளும் விரிந்து சமுதயாத்தின் மேலும் அவன் அன்பு செலுத்த நினைப்பான்.


அதில் முதல் குறள் 


உலகுக்கு மழை தந்து உதவும் அந்த மேகங்களுக்கு இந்த உலகம் என்ன கைம்மாறு செய்ய முடியும்?


பாடல் 


 கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றும் கொல்லோ வுலகு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_14.html


(pl click the above link to continue reading)


கைம்மாறு = பிரதிபலன், 


வேண்டாக் = வேண்டாத, விரும்பாத, எதிர்பார்க்காத 


கடப்பாடு = கடமையாக 


மாரிமாட்டு = மழைக்கு 


என்ஆற்றும் = என்ன செய்யும் 


கொல்லோ = கொல் என்பது அசைச் சொல். அதாவது பொருள் இல்லாத, இலக்கணத்தை சரி செய்யும் ஒரு சொல். 


 வுலகு = இந்த உலகம் 


மழை இல்லாமல் உயிர்கள் இல்லை. அந்த மழையைத் தரும் மேகத்துக்கு இந்த உயிர்கள் என்ன நன்றியைச் திருப்பிச் செய்கின்றன?


யாராவது அவர்கள் வீட்டில், ஒரு மேகத்தின் படத்தை வைத்து பூஜை செய்கிறார்களா? மேகத்துக்கு ஒரு திருவிழா உண்டா?  பொங்கல், தீபாவளி போல் ஒரு சிறப்பு நாள் உண்டா? 


மேகம் ஏதோ ஒரு இடத்தில் இருந்து பெய்வது கிடையாது. அங்கும் இங்கும் அலைகிறது. அங்கு போய் பெய்கிறது. பின் ஓடிச் சென்று இன்னொரு இடத்தில் பெய்கிறது. உலகம் அனைத்தையும் உயிர் வாழச் செய்கிறது. 


அது மட்டும் அல்ல, மேகம், அது ஏதோ அதன் கடமை போலச் செய்கிறது. 


அது போல, ஒப்புரவு செய்பவன், யாராவது வந்து என்னிடம் கேட்டால் செய்வேன் என்று இருக்கக் கூடாது. இந்த சமூகத்துக்கு என்ன தேவை என்று அங்கும் அலைந்து சென்று, அறிந்து செய்ய வேண்டும். 


அது அவன் கடமை. 


அவன் கடமை என்றால் ஏதோ அவன் ஒரு ஆள் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. 


அது நம் கடமை. 


இல்லறம் நல்ல படியாக நடந்தால், அன்பு தானே பெருகும். 


எங்கே பெருகுகிறது?


கணவன் மனைவிக்கு நடுவில், யார் பெரியவர், எந்த வேலையை யார் செய்வது என்று சண்டை. உனக்கு ஒன்றும் தெரியாது என்று ஆணவம் கொள்ளும் பிள்ளைகள், முதியோர் இல்லங்களும், குழந்தை காப்பகங்களும் (Creche) நிறைந்து வரும் இந்நாளில் ஒப்புரவு பற்றி பேசுவது கூட கடினம். 


அண்ணன் தம்பிக்குள் சண்டை, கணவன் மனைவிக்குள் சிக்கல், பெற்றோர் பிள்ளைகளுக்குள் கருத்து, மன வேறுபாடு...இல்லத்திலேயே அன்பு இல்லை. பின் எப்படி அது சமுதாய தோட்டத்துக்குப் பாயும். 


சம உரிமை, முழு உரிமை, முக்கால் உரிமை என்று குடும்பம் என்பது ஒரு போராட்ட களமாக மாறிவிட்டது. 


இருந்தாலும், அன்பின் நீட்சி பற்றி வள்ளுவர் சொல்லி இருப்பதை அறிந்து கொள்வோம். அதை விட்டு நாம் எவ்வளவு தூரம் வந்து விட்டோம் என்று தெரியும். 


மீண்டும் அந்த அன்புப் பாதைக்கு செல்ல முயற்சி செய்யலாம். 





Wednesday, August 9, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - ஒப்புரவறிதல் - ஒரு முன்னோட்டம் 


திருக்குறள் மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது என்று நமக்குத் தெரியும். 


அறம், பொருள், இன்பம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. 


அதில் அறம் என்ற பகுதி - இல்லறம், துறவறம் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. 


நாம் இப்போது இல்லறத்தின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம். 


இல்லறம் என்பது என்ன?


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_9.html

(please click the above link to continue reading)


சுருக்கமாகச் சொன்னால் அன்பின் விரிவு. 


தனி மனிதனாக இருந்த ஒருவன் மனைவி, மக்கள், சுற்றம், நட்பு, சமுதாயம் என்று அவன் அன்பு விரிந்து கொண்டே போவதுதான் இல்லறம். 


துறவறமும் அதுதான். அது பற்றி பின் சிந்திப்போம். 


இல்லறத்தின் மூலம் விரியும் அன்பானது இல்லத்தைத் தாண்டி சமுதாயத்துக்குளும் பரவும். பரவ வேண்டும். 


அப்படி, தான் சார்ந்த ஒரு சமுதாயத்தின் மேல் அக்கறை உள்ள ஒருவன், அதன் மேல் அன்பு கொண்டு அந்த சமுதாயத்துக்கு செய்யும் நன்மைகள்தான் "ஒப்புரவு அறிதல்" என்று சொல்லப்படும். 


திருவள்ளுவர் ஒவ்வொரு அதிகாரத்துக்கும் தரும் தலைப்பே ஆயிரம் அர்த்தம் சொல்லும். 


முந்தைய அதிகாரம் "தீவினை அச்சம்". தீவினை செய்யாமை என்று வைத்து இருக்கலாம். அச்சம் என்று வைத்தார். 


இங்கே, ஒப்புரவு செய்தல் என்று வைத்து இருக்கலாம். ஆனால், ஒப்புரவு அறிதல் என்று வைத்து இருக்கிறார். 


காரணம் என்ன என்று நாம் எவ்வளவு சிந்தித்தாலும் புரியாது. 


பரிமேலழகர் விளக்குகிறார். 


"அஃதாவது உலக நடையினை அறிந்து செய்தல்.உலகநடை வேதநடை போல அறநூல்களுட் கூறப்படுவதன்றித் தாமே அறிந்து செய்யுந் தன்மைத்தாகலின் , ஒப்புரவு அறிதலென்றார்."


ஏதாவது புரிகிறதா?


என்ன சொல்ல வருகிறார் என்றால், உலகத்துக்கு இன்ன இன்னது தேவை என்று பட்டியல் போட்டு சொல்ல முடியாது. 


தெருவில் போகிறோம்.  இரவு நேரம். இருண்டு கிடக்கிறது. விபத்து நேரலாம். அல்லது சில கயவர்கள் ஏதேனும் செய்யலாம். அங்கு ஒரு விளக்கு போட உதவி செய்வது ஒப்புரவு அறிதல். இது ஏதேனும் நூலில் சொல்லி இருக்கிறதா என்றால் இல்லை. நீயே அறிந்து செய் என்கிறார். 


வேத நடை என்றால் வேதம் முதலிய அற நூல்களில் கூறி உள்ளது போல என்று அர்த்தம். அப்படி எல்லாவற்றையும் கூறிக் கொண்டு இருக்க முடியாது. நீயே அறிந்து செய். புத்தகத்தில் இல்லை, எனவே செய்ய மாட்டேன் என்று சொல்லாதே என்கிறார். 


இந்த ஒப்புரவு ஏன் செய்ய வேண்டும் என்றால், தான் வாழும் சமுதாயம் சிறக்க வேண்டும் என்று நினைத்து செய்வது.


எப்படி தன் குடும்பம் சிறக்க வேண்டும் என்று ஒருவன் நினைப்பானோ, அப்படியே தான் சார்ந்த சமுதாயத்தையும் தன் குடும்பமாக பாவித்து அதற்கும் உதவி செய்ய வேண்டும். 


இப்படி யோசித்துப் பாருங்கள்...ஒரு சமுதாயத்தில் உள்ள அனைவரும், அவர்களுடைய சமுதாயம் மேம்பட வேண்டும் என்று நினைத்து செயல்பட ஆரம்பித்தால் அந்த சமுதாயம் எப்படி இருக்கும். 


ஒரு மருத்துவர், நான் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் செய்கிறேன் என்று ஆரம்பிக்கிறார். 


ஒரு ஆசிரியர், நான் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக படிப்பு சொல்லித் தரப் போகிறேன் என்கிறார். 


ஒரு செல்வந்தர், இங்குள்ள எல்லோருக்கும், நான் இலவச உணவு அளிக்கப் போகிறேன் என்கிறார். 


இப்படி ஒவ்வொருவரும், சமுதாயம் சிறக்க பாடுபட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். 


இல்லறம் என்பது நாலு சுவருக்குள் இருப்பது அல்ல. 


இனி, அதிகாரத்துக்குள் செல்வோமா....







Friday, August 4, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - தொகுப்புரை

திருக்குறள் - தீவினையச்சம் - தொகுப்புரை 


திருக்குறளும் அதன் உரையும் மிக கட்டுக் கோப்பாக எழுதப்பட்டுள்ளது. எப்படி இப்படி ஆராய்ந்து, ஒரு ஆற்றோட்டமான ஒரு ஒழுங்கில் எழுதி இருக்கிறார்கள். 


வாழ்க்கையை அறம், பொருள், இன்பம், வீடு என்று பிரித்துக் கொள்கிறார்கள். நாம் வாழ்வில் செய்யும் எந்த ஒரு காரியமும் இந்த நான்கில் ஒன்றில்தான் இருக்க முடியும். இதற்கு வெளியே எதுவும் கிடையாது. 


இதில் வீடு என்பது அறிவால் அறிய முடியாது, என்பதால் அதை விட்டு விட்டு மற்ற மூன்றையும் மூன்று பாலாக பிரித்துக் கொண்டு நூல் செய்தார். 


அதில்  அறம் என்பதை இல்லறம், துறவறம் என்று பிரித்துக் கொள்கிறார். 


முதலில் இல்லறத்தை பற்றி சொல்லத் தொடங்கி, ஒவ்வொரு அதிகாரமாக,ஒவ்வொரு அதிகாரமும் அது எப்படி அங்கு வந்தது, அதற்கு முன் உள்ள அதிகாரம் என்ன, அடுத்து வரும் அதிகாரம் என்ன என்று ஒரு ஒழுங்கில் எழுதினார். 


இதில், பரிமேலழகர் செய்த நுண்ணிய வேலை என்ன என்றால், ஒரு அதிகாரத்துக்குள் உள்ள பத்து குறள்களும் எப்படி அந்த வரிசையில் வந்தன, அதில் உள்ள உட்பிரிவுகள் என்னென்ன என்று விளக்கியது. 


நாம் தீவினையச்சம் என்ற அதிகாரம் பார்த்தோம். அதில் உள்ள குறள்கள் எப்படி தொகுக்கப்ட்டு இருக்கின்றன என்று நம்மால் புரிந்து கொள்ள முடியாது. பரிமேல் அழகர் அதை நமக்கு எடுத்துக் காட்டுகிறார். 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_4.html


(please click the above link to continue reading)


முதல் மூன்று குறள்கள் நாம் ஏன் தீவினைக்கு அஞ்ச வேண்டும் என்று கூறுகிறது என்கிறார். 


1. தீவினையார் அஞ்சார் விழுமியர் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு.


2. தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.


3. அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்.


அடுத்து வரும் ஆறு பாடல்களில், தீவினை செய்தார்க்கு தீமை வந்து சேரும் என்று கூறுகிறார். 



4. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு


5. இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்

இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.


6. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்


7. எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும்.


8. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடிஉறைந் தற்று.


9. தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்


கடைசி ஒரு பாட்டில், தீவினை செய்யாமல் இருப்பவர்களுக்கு தீமை ஒன்றும் வராது என்றும் கூறினார் என்கிறார். 



10. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்.


இதுவரை மன, மொழி, மெய்யால் தவிர்க்க வேண்டியவற்றை கூறினார். 


அடுத்து என்ன கூற வேண்டும் ?


செய்ய வேண்டாதவற்றை பற்றி கூறினார். 


இனி செய்யவேண்டியவற்றைப் பற்றி கூற உள்ளார். 


ஒப்புரவு அறிதல் பற்றி கூற இருக்கிறார். 


ஒப்புரவு அறிதல் என்றால் என்ன?


 



Wednesday, August 2, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - அருங்கேடன் என்பது அறிக

 திருக்குறள் - தீவினையச்சம் -  அருங்கேடன் என்பது அறிக


ஒருவனுக்கு துன்பம் வருமா இல்லையா என்று துல்ல்லியமாக கூற முடியும். யாருக்குத் துன்பம் வரும், யாருக்கு துன்பம் வராது என்று கணிக்க முடியும். உங்களுக்கு எதிர்காலத்தில் துன்பம் வருமா என்று அறிய வேண்டுமா? மேலும், அந்தத் துன்பங்கள் வராமல் தடுக்க வேண்டுமா?


வள்ளுவர் வழி சொல்கிறார். 


"தீய வழிகளில் சென்று மற்றவர்களுக்கு ஒருவன் துன்பம் செய்யாமல் இருப்பான் என்றால் அவனுக்கு ஒருபோதும் துன்பம் வராது"


பாடல் 


அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_2.html


(please click the above link to continue reading)



அருங்கேடன் = அருமை + கேட்டினை உடையவன் 


என்பது = என்று 


அறிக = அறிந்து கொள்க 


 மருங்கோடித் = தவறான வழியில் சென்று 


தீவினை = தீய வினைகளை 


செய்யான் = செய்யாதவன் 


எனின் = என்றால் 


அருங்கேடன்  என்றால் என்ன?  ஒரு பொருள் அருமையானது என்றாது கிடைப்பதற்கு அரிதானது என்று பொருள். ஒருவன் அருங்கேடன் என்றால் அவனுக்கு கெடுதல் அரிதாக வரும். அதாவது வராது என்று பொருள். 


எப்போது வராது என்றால் 


மருங்கோடி தீயன செய்யான் எனில். 


மருங்கு என்றால் பக்கம். ஒரு பக்கமாகச் சென்று. அதாவது, அற வழி என்ற நேர் வழியை விட்டு, வேறு பக்கம் சென்று, மற்றவர்களுக்கு தீமை செய்யாமல் இருப்பான் என்றால், அவனுக்கு ஒருக் காலும் தீமை வராது என்கிறார். 


இந்த மருங்கு என்ற சொல் பல இடங்களில் பல விட அர்த்தங்களில் சொல்லப் பட்டு இருக்கிறது. 


பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்

மருங்குடையார் மாநிலத்து இல்


என்ற திருக்குறளில் மருங்கு என்பது சுற்றத்தார் என்ற பொருளில் வந்துள்ளது. 


செல்வர்யாம் என்று செல்வுழி எண்ணாத

புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்

கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி

மருங்கறக் கெட்டு விடும்


என்ற நாலடியாரில், மருங்கு என்ற சொல் அடையாளம் என்ற பொருளில் வந்துள்ளது. மின்னல் போல் செல்வம் அடையாளம் இல்லாமல் சென்று விடும் என்ற அர்த்தத்தில். 


சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யப்படும்.

பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த

கன்னங்கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில் வைத்துத்

தன்னந்தனியிருப்பாக்கு இதுபோலும் தவம் இல்லையே


என்ற அபிராமி அந்தாதியில் மருங்கு என்பது வயிறு, அல்லது இடை என்ற பொருளில் வந்துள்ளது. 


அது ஒரு சுவாரசியமான வார்த்தை. 


எப்படி ஒரு சொல் சம்பந்தமே இல்லாத வெவேறு பொருள் கொள்கிறது?


சிந்தித்துப் பார்த்தால் அடிநாதமாக உள்ள பொருள் விளங்கும்.


மருங்கு என்றால் பக்கம் என்று பார்த்தோம். 


உடம்பின் இரண்டு பக்கமும் இருப்பது இடுப்பு. எனவே மருங்கு, இடுப்பு என்ற பொருள் கொண்டது. 


அக்கம் பக்கம் இருப்பவர் சுற்றத்தார். எப்போதும் நமக்கு பக்கத்தில் இருப்பவர்கள் சுற்றத்தார். நம்மை விட்டுப் போய் விட மாட்டார்கள். எனவே, மருங்குடையார் என்று அவர்கள் அழைக்கபடுகிரார்கள். 


செல்வம் எப்போதும் நம் பக்கம் இருக்காது. இன்று நம் பக்கம் இருக்கும், நாளை வேறொருவர் பக்கம் போய் விடும். எப்ப எந்தப் பக்கம் இருக்கும் என்று தெரியாததால் அதை மருங்கற கெட்டு விடும் என்கிறது நாலடியார்.