Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Monday, July 31, 2023

திருக்குறள் - தன் மேல் காதல்

 திருக்குறள் - தன் மேல் காதல் 


நாம் ஏன் பிறருக்கு தீமை செய்கிறோம்?  


நம்மை நாம் காதலிக்காததால் என்கிறார் வள்ளுவர். 


இது என்ன புதுக் கதை? நம்மை நாம் காதலிப்பதா? 


உலகிலேயே நமக்கு மிக நெருக்காமான நபர் யார் என்றால் அது நாம்தான். நம்மையே நாம் விரும்புகிறோமா? நம் அழகு, அறிவு, திறமை, குணம், பேச்சு, நடை, உடை, பாவனை...இதில் எவ்வளவு நாம் நம்மை விரும்புகிறோம்?


நம்மில் நமக்கு பிடிக்காத குணங்கள் எவ்வளவு இருக்கிறது? 


நாம் நம்மை காதலிக்க ஆரம்பித்துவிட்டால், அந்தக் காதல் மற்றவர்கள் மேலும் படரும். எனக்கு எது துன்பம் தருகிறதோ, அது மற்றவர்களுக்கும் துன்பம் தரும் என்று நான் சிந்திப்பேன். அந்தத் துன்பத்தை மற்றவர்களுக்கு தர மாட்டேன். 


அடிப்படை என்ன என்றால், நாம் நம்மை காதலிப்பது இல்லை. 


பாடல் 


தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_31.html


(please click the above link to continue reading)


தன்னைத்தான் = ஒருவன் தன்னைத் தானே 


காதலன் ஆயின் = காதல் செய்வான் என்றால் 


எனைத்தொன்றும் = எவ்வளவு சிறிய அளவாயினும் 


துன்னற்க = செய்யாமல் இருக்க 


தீவினைப் பால் = தீயவினைகளின் பக்கம், தீய வினைகளின் பகுதியில் 


நீ உன்னை விரும்புகிறாயா, அப்படி என்றால் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதே என்கிறார்.


ஏன்?


பிறருக்கு தீங்கு செய்தால் அந்த தீமையின் பலன் உனக்கு வரும். நீ வருத்தப்படுவாய். அந்த வருத்தத்தை உன்னால் தாங்கிக் கொள்ள முடியாது. காரணம், நீ உன்னை விரும்பிகிறாய். 


மாற்றாக, உனக்கு உன் மேல் விருப்பு இல்லை என்றால், உனக்கு ஒரு துன்பம் வந்தாலும், நீ அதை சகித்துக் கொள்வாய். நீ ஒருவனை அடிக்கிறாய். அவன் உன்னை பதிலுக்கு அடிக்கிறான். நீ என்ன நினைப்பாய்?  நான் அடித்தேன், பதிலுக்கு அடித்தான் என்று அதற்கு ஒரு சமாதனம் சொல்வாய். அடியின் வலியும், அவமானமும் பெரிதாகத் தெரியாது. 


முதலில் நீ உன்னை காதலிக்கத் தொடங்கு. நீ உன்னை விரும்புபவன் என்றால் மற்றவர்களுக்கு ஒரு சிறிதும் துன்பம் நினைக்காதே. 


இன்று முதல் நமக்கு ஒரு புது காதலன், காதலி கிடைத்தார் என்று எண்ணிக் கொள்வோம். நம்மையே நாம் விரும்ப ஆரம்பிப்போம்.  


எவ்வளவு இனிமையான விடயம். 



Thursday, July 27, 2023

திருக்குறள் - நிழல் போல்

 திருக்குறள் - நிழல் போல் 


இந்த அற நூல்கள், நியாயம், தர்மம் என்பதில் எல்லாம் ஒரு நம்பிக்கை குறைந்து வரும் காலம் இது. 


தவறு செய்கிறவன் நன்றாக இருக்கிறான். நல்லது செய்பவன் துன்பப்படுகிறான். இதுதான் நடைமுறையில் காணக் கிடைக்கிறது. யாருக்கு நம்பிக்கை வரும்?


வள்ளுவர் சொல்கிறார்....அப்படி எண்ணாதே என்று. ஒருவனுடைய நிழல் எப்படி அவனை விட்டுப் போகாதோ, அது போல் ஒருவன் செய்த தீவனை அவனை விட்டு ஒரு போதும் நீங்காது. காத்திருக்கும். சரியான காலத்தில் தண்டிக்கும்.


பாடல்  

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடிஉறைந் தற்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_27.html


(pl click the above link to continue reading)



தீயவை = தீய வினைகளை 


செய்தார் = செய்தவர் 


கெடுதல் = கட்டாயம் கேட்டினை அடைவர்  என்பது 


நிழல்தன்னை = ஒருவனுடைய நிழல் 


வீயாது = விடாமல், நீங்காமல் 


அடி = அவன் அடிக்கீழேயே 


உறைந் தற்று = சேர்ந்து இருப்பது போன்றது 


உடம்போடு நிழல் இருப்பது எவ்வளவு உறுதியோ அது போல ஒருவனோடு அவன் வினையும் இருப்பது உறுதி என்கிறார். 


இதில் பல நுணுக்கங்கள் இருக்கிறது. 


ஒன்று, சில சமயம் நிழல் சிறிதாக, காணமல் போய் விடுவது உண்டு. ஆகா, நாம் தப்பி விட்டோம் என்று நினைக்கக் கூடாது. உச்சி வேளை சென்ற பின், மாலையில் அதே நிழல் மிக நீண்டு வரும். உடம்பில் வலு இருக்கும் போது, செல்வம் இருக்கும் போது, அதிகாரம் இருக்கும் போது செய்யும் தவறுகள், பின்னால் பெரிதாக வந்து தாக்கும். 


இரண்டாவது, ஒருவனுடைய நிழல் அவனைப் போலவே இருக்கும். அவன் நிழல் யானை போலவோ, குதிரை போலவோ இருக்காது. அதே போல், அவன் செய்த வினைகளுக்கு தக்கவாறு பலன் கிடைக்கும். கூடவும் செய்யாது, குறையவும் செய்யாது. 


மூன்றாவது, இரவில், வெளிச்சம் இல்லாத போது நிழல் தெரியாது. மறைந்து வாழ்ந்து விடலாம் என்று சிலர் நினைக்கலாம். என்றோ ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும் போது, அந்த நிழல் உடனே வெளிப்படும். இத்தனை நாள், நேரம் மறைந்து இருந்த நிழல் உடனே வெளிப்படும் என்பது சர்வ நிச்சயம். அது போல, வினைகளுக்கு பயன் உண்டு என்பது சர்வ நிச்சயம். சில சமயம் அப்படி இல்லாதது போல தோன்றலாம். கட்டாயம் திரும்பி வரும். 


எனவே, உடனடியாக தண்டனை இல்லை என்று நினைத்து தீவினை செய்ய நினைக்கக் கூடாது. கட்டாயம் அது திரும்பி வரும் என்று நினைத்தால் தீ வினை செய்ய அச்சம் வரும். 


நான் இன்று ஒருவனை அடிக்கிறேன், திட்டுகிறேன் என்றால், அந்த அடியும், திட்டும் எனக்கு ஒரு நாள் திரும்பி கட்டாயம் வரும் என்றால் அதை நான் செய்வேனா?







Monday, July 24, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - விடாது கருப்பு

 திருக்குறள் - தீவினையச்சம் - விடாது கருப்பு 


தவறு செய்தால் தண்டனை உண்டு என்ற பயம் இருப்பதால் பலர் தவறு செய்வதில்லை. 


எந்தத் தவறுக்கும் தண்டனையே கிடையாது என்று வைத்துக் கொண்டால், தவறுகள் குறையுமா? கூடுமா?


இன்று பலர் தவறு செய்வதற்கு காரணம், சட்டத்தில் இருந்து தப்பி விடலாம் என்ற எண்ணம். ஒரு வேளை மாட்டிக் கொண்டாலும், சட்டத்தில் உள்ள ஓட்டைகள், வக்கீலின் சாமர்த்தியம், நிர்வாக குறைபாடுகள் இவற்றில் புகுந்து வெளியே வந்து விடலாம் என்ற தைரியம். 


வள்ளுவர் சொல்கிறார், தப்பிகவே முடியாத ஒரு சட்ட வரைமுறை இருக்கிறது. அது தான் வினைப்பயன். அதில் இருந்து தப்பவே முடியாது. தீவினை செய்தால் அது எங்கு சென்றாலும், விடாது வந்து நம்மைப் பற்றும் என்கிறார். 


பாடல் 


எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_24.html

(click the above link to continue reading)


எனைப்பகை = எந்த விதமான பகையை 


உற்றாரும் = உடையவர்களும் 


உய்வர் = அதில் இருந்து தப்ப வாய்ப்பு இருக்கிறது 


வினைப்பகை = வினை என்ற பகை (தீவினை) 


வீயாது = விடாமால் 


பின்சென்று அடும் = பின் சென்று பற்றும், வெல்லும், பலனைத் தரும் 


நமக்கு ஒரு பகைவன் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனிடம் மன்னிப்பு கேட்டால், ஒரு வேளை அவன் நம்மை பெரிய மனது பண்ணி மன்னித்து விடலாம். அல்லது, அவன் ஏதோ ஒரு வகையில் பலம் குன்றி நம்மை ஒன்றும் செய்ய முடியாத ஒரு நிலைக்கு சென்று விடலாம், அல்லது நாம் மிக பலம் பெற்று அவனுடைய பகை பற்றி கவலைப் படாமல் நிம்மதியாக இருக்கலாம். 


எப்படியாவது தப்பிவிட முடியும். 


ஆனால், ஒருவருக்கு தீவினை செய்து விட்டால், அதனால் வரும் துன்பத்தில் இருந்து ஒருகாலும் தப்ப முடியாது. 


வீயாது என்றால் விடாமல். 


இந்தப் பிறவியில் மட்டும் அல்ல, இனி வரும் பிறவிகளிலும் தொடரும். சில சமயம் சிலருக்கு நிகழும் துன்பங்களை பார்க்கும் போது, ஒன்றும் செய்யாத அப்பாவிகளுக்கும் ஏன் இவ்வளவு துன்பம் வருகிறது என்று நினைப்போம். யாருக்குத் தெரியும். என்று செய்தோ தீவினையோ இன்று வந்து பிடிக்கிறது. 


அயோக்கியத்தனம் செய்பவன் எல்லாம் நல்லாத்தானே இருக்கிறான் என்று சலிப்பவர்களுக்கு  வள்ளுவர் சொல்கிறார். இன்று அவன் நல்லா இருக்கலாம்.  அவன் செய்யும் தீவினைகள் அவனை ஒருக்காலும் விடாது. தொடர்ந்து கொண்டே இருக்கும். அவன் வலி குன்றிய நேரத்தில் அவனைப் பிடிக்கும். அப்போது தாங்க முடியாது.


எப்படியாவது தப்பிவிடலாம் என்று எண்ணவே கூடாது.  ஒருக்காலும் தப்ப முடியாது. 


எனவே, தீய வினைகள் செய்ய பயப்பட வேண்டும். 





Thursday, July 13, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - துன்பம் வேண்டாம் என்றால்

 திருக்குறள் - தீவினையச்சம் - துன்பம் வேண்டாம் என்றால் 


துன்பம் யாருக்கு வேண்டும்?


ஒருவரும் துன்பம் வேண்டும் என்று விரும்புவதில்லை. இருந்தும் துன்பம் வருகிறதே. ஏன்?


துன்பம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? 


நாம் என்ன செய்கிறோமோ அது நமக்கு வரும். அதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா? 


நல்லது செய்தால் நல்லது வரும், தீமை செய்தால் துன்பம் வரும். 


எனவே, துன்பம் வேண்டாம் என்றால் மற்றவருக்கு துன்பம் செய்யாமல் இருக்க வேண்டும். 


இதைவிட எளிதாக இதை எப்படிச் சொல்ல முடியும்?


பாடல் 


தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_13.html


(please click the above link to continue reading)


தீப்பால = தீயன 


தான் = ஒருவன் 


பிறர்கண் = பிறருக்கு 


செய்யற்க = செய்யாமல் இருக்க வேண்டும் 


நோய்ப்பால = துன்பம் 


தன்னை = ஒருவனை 


அடல் = நெருங்கி வர 


வேண்டா தான் = வேண்டாதவன், விரும்பாதவன் 


நமக்கு துன்பம் வருகிறது என்றால் நாம் எவ்வளவு பயப்படுவோம்? 


அதே அளவு நாம் பிறருக்கு துன்பம்/தீமை செய்யவும் பயப்பட வேண்டும். 


மற்றவரை திட்டும் போதும்,  மனதளவில் தீமை நினைக்கும் போதும், தீயவற்றை செயலாக்கும் போதும், நாம் பயப்படுவதில்லை. மாறாக சந்தோஷம் கொள்கிறோம். ஆனால், அது நமக்கே திரும்பி வரும் என்று நாம் நினைப்பதில்லை. 


வள்ளுவர் அதை நினைவு படுத்துகிறார். 


அடுத்த முறை யாரையாவது whatsapp இல் புண்படுத்தும் போதோ, மனம் புண் படும்படி பேசும்போதோ நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் - இது திரும்பி வரும் என்று. 



Thursday, July 6, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - இலன் என்று

 திருக்குறள் - தீவினையச்சம் - இலன் என்று 


நாம் ஏன் சில தீமைகளைச் செய்கிறோம் என்றால் வறுமை ஒரு காரணம். பசி, மருத்துவ செலவுக்கு பணம் இல்லை, பிள்ளை படிப்புக்கு பணம் இல்லை, எனவே இலஞ்சம் வாங்கினேன், திருடினேன், கொள்ளியடித்தேன் என்று சிலர் கூறுவார்கள். 


அவர்கள் கூறுவது ஞாயம் போலத் தெரியும். 


வறுமையில் இருப்பவர்களை தீயவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். நீ இதைச் செய், உனக்கு இவ்வளவு பணம் தருகிறேன் என்று ஆசை காட்டுவார்கள். 


வள்ளுவர் சொல்கிறார் 


"என்னிடம் பணம் இல்லை, வறுமையில் வாடுகிறேன் என்று எண்ணி தீயவை செய்து விடாதே. அப்படிச் செய்தால், உன் வறுமையினால் உள்ள துன்பத்தோடு கூட மேலும் பல துன்பங்கள் வந்து சேரும்"  என்கிறார். 



பாடல் 


இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்

இலன்ஆகும் மற்றும் பெயர்த்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_6.html


(please click the above link to continue reading)



இலன்என்று = இல்லை என்று. பொருள் இல்லை என்று 


தீயவை  = தீயனவற்றை (களவு, கொலை, கொள்ளை போன்றவை) 


செய்யற்க = செய்யக் கூடாது 


செய்யின் = செய்தால் 


இலன்ஆகும் = இல்லாமல் போகும் 


மற்றும் = மற்றும் 


பெயர்த்து = மேலும், மறுபடியும், பின்பும் 


முதலில் வறுமை இருந்தது. ஏதாவது தவறு செய்தால், தண்டனை வரும், பழி வரும், இருக்கிற பணமும் வக்கீல், நீதி மன்றம், வழக்கு, வாய்தா என்று போகும். சமுதாயத்தில் பழிச் சொல் வரும். கெட்டவன் என்ற முத்திரை விழும். நல்லவர்கள் அவனோடு சேர மாட்டார்கள். நல்ல வாய்புகள் பறிபோகும். தீயவர் சகவாசம் வரும். மேலும் பல தீமைகளைச் செய்யத் தூண்டும். 


"பெயர்த்து" என்ற சொல்லுக்கு மேலும், பின்பும், மறுபடியும் என்று பொருள் சொல்கிறார்கள். அதன் விரிவு என்ன என்றால், இந்தப் பிறவியில் மட்டும் அல்ல, பின் வரும் பிறவிகளிலும் இந்தப் பாவம் தொடரும் என்பது. 


ஒரு பிறவியில் கொஞ்சம் பொருள் வேண்டி, பல பிறவிகளில் துன்பம் அனுபவிப்பது சரியான செயலா?  


முந்தைய குறளில் "மறந்தும் பிறன் கேடு சூழற்க" என்றார். 


எங்கே, "வறுமையின் காரணமாக தீங்கு செய்யாதே" என்கிறார். 


வறுமையைக் காரணம் காட்டி தீங்கு செய்யாதே என்கிறார் வள்ளுவர். 







Sunday, July 2, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - மறந்தும் பிறன் கேடு சூழற்க

 திருக்குறள் - தீவினையச்சம் - மறந்தும் பிறன் கேடு சூழற்க 


ஏன் மற்றவர்களுக்கு நாம் தீமை செய்கிறோம்? மற்றவர்களுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று நமக்கு ஒன்றும் பெரிய ஆசை இல்லை. இருந்தும் செய்கிறோம். 


காரணம் என்ன?


அதை எப்படி தவிர்ப்பது என்று வள்ளுவர் ஆராய்ந்து நமக்குச் சொல்கிறார். 


முதல் காரணம் - மறதி. 


தெரியாம சொல்லிட்டேன். நானா அப்படிச் செய்தேன், அப்படி சொன்னேன் என்று நாமே பலமுறை நினைத்து இருப்போம். என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்ற ஞாபகமே இருக்காது. யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்ற  நினைவு இருக்காது. 


அது ஒரு வித மறதி. 


இன்னொன்று, இப்படி பேசினால், செய்தால் நமக்கு தீமை வரும் என்ற நினைவு, இல்லாமல் பேசி விடுவது, செய்து விடுவது. 


"அவன் நாசாமா போகனும்" நு மனதுக்குள் நினைப்போம். அப்படி நினைப்பது கூட நமக்கு தீமை செய்யும் என்று அறியாமல் செய்து விடுவது. 


சரி, ஞாபக மறதியா ஒரு தீங்கு செய்து விட்டால் என்ன ஆகும்? தெரியாமல் செய்வது ஒரு குற்றமா? என்று கேட்டால், சட்டம் ஒரு வேளை மன்னித்து விடலாம். அறம் ஒரு போதும் மன்னிக்காது. 


நீ ஒருவனுக்கு தீங்கு நினைத்தால், அறக் கடவுள் உனக்கு தீங்கு நினைப்பார் என்கிறார் வள்ளுவர். 


பாடல்


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post.html


(pl click the above link to continue reading)




மறந்தும் = மறந்து போய் கூட 


பிறன்கேடு = பிறருக்கு கேட்டினை 


சூழற்க = நினைக்காதே 


சூழின் = நீ நினைத்தால் 


அறம்சூழும் = அறக்கடவுள் நினைக்கும் 


சூழ்ந்தவன் = அப்படி மற்றவருக்கு கேட்டினை நினைத்தவனின் 


கேடு = கேட்டினை 


இந்த அறக் கடவுள் நம்மை மாதிரித்தானா?  நல்லது செய்தால் நல்லது செய்வார், தீமை செய்தால் பதிலுக்கு தீமை செய்வார். அவரும் நம்மைப் போலத்தானா?  என்று ஒரு கேள்வி வரும். 


நாம் மற்றவருக்கு தீமை நினைத்தால், அறக் கடவுள் நமக்கு தீமை நினைப்பார் என்றால் நினைத்து விட்டுப் போகட்டும். என்ன இப்ப? என்று நினைக்கலாம். 


பரிமேலழகர் உரை இல்லமால் இதற்கு எல்லா பதில் சொல்ல முடியாது. 


பரிமேலழகர் சொல்கிறார்:


"நீ மற்றவனுக்கு தீமை நினைக்கிறாய். அந்த தீமையை உன்னால் செயல் படுத்த முடியுமோ இல்லையோ தெரியாது. பெரிய அரசியல் தலைவர் செய்வது சரி அல்ல. அவரால்எனக்கு பெரிய பாதிப்பு. அவருக்கு ஏதாவது செய்யணும் என்று நினைத்தால் முடியுமா? முடியாது. ஆனால், நீ எப்போது மற்றவருக்கு தீமை செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்போதே அறக் கடவுள் உனக்கு தீமை செய்ய வேண்டும் என்று நினைப்பார். உன்னால் நீ நினைத்ததை செய்ய முடியாமல் போகலாம். ஆனால், அறக் கடவுள் நினைத்தால் அவர் நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர். எனவே, அவர் உனக்கு கட்டாயம் தீங்கு செய்து விடுவார். அது எப்படி என்றால், இவனிடம் நல்ல குணம் இல்லை. இவனை விட்டுப் போய் விடுவதே நல்லது என்று நினைத்து உன்னை விட்டு அவர் போய் விடுவார். அறக் கடவுள் உன்னை விட்டு போய் விட்டால் உனக்கு துன்பங்கள் தானே வரும்" 


என்பது கருத்து. 


எப்படி யோசித்து இருக்கிறார்கள். 


"சூழ்கின்ற பொழுதேதானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்."


என்பது பரிமேலழகர் உரை. 


எனவே, பிறருக்கு தீமையை மறந்தும் கூட நினைக்கக் கூடாது. 


இப்போதெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு தீமை வரும் என்று சொல்லவே வேண்டாம். 



Friday, June 23, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - அறிவினுள் எல்லாம் தலை

 திருக்குறள் - தீவினையச்சம் - அறிவினுள் எல்லாம் தலை 


நமக்கு தீமை செய்பவர்களுக்கு, பதிலுக்கு தீமை செய்யாமல் விட்டு விடுவது அறிவினுள் எல்லாம் தலை சிறந்தது என்கிறார் வள்ளுவர். 


அவருக்கு என்ன எளிதா சொல்லிவிட்டுப் போய் விடுவார். இதெல்லாம் முடிகிற காரியமா? நமக்கு தீமை செய்பவர்களுக்கு பதிலுக்கு பதில் கொடுக்காவிட்டால் அவர்கள் மீண்டும் மீண்டும் நமக்கு தீமை செய்து கொண்டே இருக்க மாட்டார்களா?  இது என்ன அறிவுரை ? என்று நாம் நினைப்போம். பரிமேலழகர் இல்லாவிட்டால் 


பாடல் 


அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/06/blog-post_23.html


(pl click the above link to continue reading)


அறிவினுள் = நன்மை தருகின்ற அறிவினுள் 


எல்லாம் = அனைத்திலும் 


தலை = உயர்ந்தது, சிறந்தது 


என்ப = என்று சொல்லுவார்கள் 


தீய செறுவார்க்கும்  = (நமக்கு) தீமை செய்தவர்களுக்கும் 


செய்யா விடல் = (பதிலுக்கு) தீமை செய்யாமல் விட்டு விடுதல் 


சரி, அப்படி என்னதான் பரிமேலழகர் சொல்லி இருப்பார்?


தீமை செய்தால் தீமை விளையும், நன்மை செய்தால் நன்மை விளையும் என்பதில் சந்தேகம் இல்லையே?  


ஒருவன் நமக்கு தீமை செய்கிறான். பதிலுக்கு நாம் அவனுக்கு தீமை செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ? அவன் முதலில் செய்தான், நாம் இரண்டாவது செய்தோம் என்பதைத் தவிர வேறு என்ன வித்தியாசம்? இருவர் செய்ததும் தீமைதான். ஒருவர் முதலில் செய்தார், மற்றவர் இரண்டாவது செய்தார்.  எனவே இருவருக்கும் செய்த தீமைக்கும் பலன் கிடைக்கும்தானே. 


அது மட்டும் அல்ல. 


ஒருவன் நமக்கு ஒரு தீங்கு செய்கிறான். அது நமக்கு நிகழும் முதல் தீமை. நாம் பதிலுக்கு அவனுக்கு ஏதோ ஒரு தீமை செய்கிறோம். அப்படி நாம் தீமை செய்தால், அந்த தீமைக்கு நமக்கு பின்னாளில் வேறு ஒரு தீமை வரும். அது நமக்கு இரண்டாவது நிகழும் தீமை. அது புத்திசாலித்தனமா?


சின்ன உதாரணம். 


ஒருவன் நம்மை ஏதோ தவறான சொல் சொல்லி திட்டிவிடுகிறான். நாம் பேசாமல் போய் இருந்தால் அதோடு போய் இருக்கும். அதெப்படி சும்மா விடுவது என்று பதிலுக்கு நாம் அவனை திட்டினால், அவன் நம்மை மேலும் பல வார்த்தைகள் சொல்லித் திட்டலாம். முதலில் ஒரு தரம் திட்டு வாங்கினோம், பின் இரண்டாவது முறை திட்டு வாங்குகிறோம். அது புத்திசாலித்தனமா? 


எனவே, வள்ளுவர் செய்கிறார், நாம் பதிலுக்கு தீமை செய்தால் நமக்கு மீண்டும் தீமை வரும் என்று "அறிந்து" பதிலுக்கு தீமை செய்யாமல் விடுதல் அறிவினுள் எல்லாம் உயர்ந்த அறிவு என்றார். 


இது எளிதில் புரியாது. அடியும் வாங்கிக் கொண்டு, சும்மா இருப்பது நல்லது என்று அறிந்து கொள்ளும் அறிவு எளிதில் வராது. அடித்தால் திருப்பி அடிக்கத் தான் தோன்றும். அதை விடுத்து, தீங்கு செய்தார்க்கும் தீமை செய்யாமல் விடுதல் ஏதோ அவனுக்கு செய்த நன்மை அல்ல, அது நமக்கு நாமே செய்து கொள்ளும் நன்மை என்ற அறிவு இருக்கிறதே,  அது எல்லாவற்றிலும் உயர்ந்த அறிவு என்கிறார். 


"தலை என்ப" என்றால் தலை சிறந்தது என்று சொல்லுவார்கள் என்று அர்த்தம். யார் சொல்லுவார்கள்?  அறிவுள்ள சான்றோர்கள் சொல்லுவார்கள். அறிவில்லாதவர்கள் என்ன சொல்லுவார்கள்? பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தம் என்று கொந்தளிப்பார்கள். அறிவுடையார் சொல்லக் கேட்டு நடப்பது சிறந்த அறிவு. 


"அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்"


 என்பதில் ஒரு சின்ன இலக்கண நுணுக்கம் இருக்கிறது. 


அறிவினுள் எல்லாம் தலை சிறந்தது இன்னொரு அறிவாகத்தானே இருக்க முடியும்?  குத்து சண்டை வீரர்களில் தலை சிறந்தவர் என்றால் முகமது அலி, டைசன் என்று ஒரு குத்து சண்டை வீரரைத்தானே சொல்ல முடியும். அது போல அறிவில் எல்லாம் சிறந்தது என்றால் அது ஒருவிதமான அறிவாகத்தானே இருக்க முடியும்? ஆனால், குறளில் அப்படி ஒரு அறிவு பற்றி சொல்லவில்லையே என்றால் "செய்யா விடல்" என்பதில் செய்யாமல் இருப்பது சிறந்த அறிவு அல்ல, செய்யாமல் இருக்க வேண்டும் என்று அறிகிறோம் அல்லவா, அந்த அறிவு மற்றவை எல்லாவற்றையும் விட சிறந்தது என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் பரிமேலழகர். 


எவ்வளவு நுணுக்கமாக எழுதி இருக்கிறார் வள்ளுவர், அதை எப்படி படித்து, அறிந்து சொல்லி இருக்கிறார் பரிமேலழகர்.


யார் மேலாவது கோபம் வந்தால், அவர்களுக்கு எப்படியாவது ஒரு தீமை செய்யவேண்டும் என்று தோன்றினால், இந்தக் குறளை ஒரு முறை நினைத்துக் கொள்ள வேண்டும். 




Sunday, June 11, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - தீயும், தீயவையும்

 திருக்குறள் - தீவினையச்சம் - தீயும், தீயவையும் 


தீவினைகளை செய்து பழகியவர்கள் பயம் இல்லாமல் அவற்றைச் செய்வார்கள் என்றும், அந்தப் பழக்கம் இல்லாதவர்கள் தீயவை செய்ய பயம் கொள்வார்கள் என்றும் முந்தைய குறளில் கூறினார். 


தீயவை செய்தால் என்ன?  தீயவை செய்பவர்கள் எல்லோரும் சுகமாகத்தான் இருக்கிறார்கள். இந்த பாவம், புண்ணியம் என்று சொல்லிக் கொண்டு இருப்பதில் ஒரு பலனும் இல்லை என்று சிலர் நினைக்கலாம். 


தீயவை செய்தால் என்ன நிகழ்ந்து விடும்?  ஒரு கை பார்த்து விடலாம் என்று கூட சிலர் நினைக்கலாம்.


வள்ளுவர் சொல்கிறார், "தீயவை செய்தால் தீமையே வந்து சேரும் என்பதால், தீயவற்றை தீயை விட மோசமானது என்று எண்ண வேண்டும்" என்கிறார். 


பாடல் 


தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/06/blog-post_11.html



(pl click the above link to continue reading)


தீயவை  - தீய வினைகள் 


தீய பயத்தலால் = தீமை தருவதால் 


தீயவை = அந்தச் தீச் செயல்கள் 


தீயினும் = தீயைவிட 


அஞ்சப் படும் = அச்சம் கொள்ள வைக்கும். 


அது என்ன தீயை விட? 


தீ, சுட்ட போது வலிக்கும். போன வருடம் தீபாவளியின் போது வெடி வெடித்த போது கையை சுட்டுக் கொண்டாலும், அது இந்த வருடம் வலிக்காது.  அது ஒரு சில நாள் இருக்கும், அப்புறம் போய் விடும்.  ஆனால், தீமை ஒரு காலத்தில் செய்தால் அது எப்போது வேண்டுமானாலும் வந்து சுடும். எப்போது சுடும் என்று தெரியாது. எப்ப வருமோ, எப்ப வருமோ என்ற வலி ஒருபுறம், பின் எதிர் பாராத நேரத்தில் வந்து தாக்கும் போது வலி பல மடங்காக இருக்கும். 


தீயால் சில சமயம் நன்மைகளும் உண்டு. உணவு சமைக்கலாம், குளிர் காயலாம். ஆனால், தீய செயல்களால் ஒரு காலத்திலும் ஒரு நன்மையையும் கிடையாது என்பதால் தீயினும் அஞ்சப்படும் என்றார். 


நாம் யார்க்கும் ஒரு தீங்கும் செய்து இருக்க மாட்டோம். ஒருத்தரைப் தவறாக பேசி இருக்க மாட்டோம். சட்ட திட்டங்களுக்கு பயந்து நடப்போம். இருந்தும் பெரிய துன்பங்கள் சில சமயம் நம்மை தாக்கியிருக்கும். ஏன்?  என்றோ, எந்தப் பிறவியிலோ செய்த தீமை இந்தப் பிறவியில் வந்து தாக்குகிறது.   தீ ஒரு பிறவியில் சுட்டால், அந்தப் பிறவியோடு போய் விடும். ஆனால், தீய வினைகள் மறு பிறவியில் கூட வந்து தாக்கும். 


தீமை செய்பவர்கள் நினைக்கலாம், தப்பிவிட்டோம் என்று. ஆனால், அறம் விடாது.  எங்கு எப்படி திருப்பித் தர வேண்டுமோ, அப்படித்  தரும்.


எனவே, தீயவை செய்ய அச்சம் கொள்ள வேண்டும். ரொம்ப பயப்பட வேண்டும். 


 



Wednesday, June 7, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - தீவினை எனும் செருக்கு

 திருக்குறள் - தீவினையச்சம் - தீவினை எனும் செருக்கு 


பயனிலசொல்லாமை பற்றி முந்தைய அதிகாரத்தில் கூறினார். 


அடுத்தது, உடலால் ஏற்படும் குற்றங்கள் அனைத்தையும் தொகுத்துக் கூறுகிறார். 


தீவினையச்சம் என்றால், தீய செயல்கள் செய்ய அச்சப் படுதல். 


தீவினை ஏன் செய்யாமல் இருக்கிறோம், என்றால் அதைச் செய்வதில் உள்ள அச்சம். 


மாட்டிக் கொண்டால், தண்டனை கிடைக்கும். வெளியில் தெரிந்தால் அசிங்கம், அவமானம் என்றெல்லாம் அச்சம் வருவதால் தீவினை செய்ய பயப்படுகிறோம். 


அந்த பயம் இல்லை என்றால், துணிந்து தீய செயல்களை செய்ய முடியும். 


பாடல் 

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/06/blog-post_7.html


(Pl click the above link to continue reading)


தீவினையார் = தீய செயல்களை செய்பவர்கள் 


அஞ்சார் = அச்சம் கொள்ள மாட்டார்கள் 


 விழுமியார் = அந்த அச்சம் இல்லாத நல்லவர்கள் 


அஞ்சுவர் = பயப்படுவார்கள்  


தீவினை = தீயவினை 


என்னும்  = என்று சொல்லப்படும் 


செருக்கு = மயக்கம். 


கெட்டவர்கள் தீய செயல்களை செய்ய அஞ்ச மாட்டார்கள். நல்லவர்கள் அஞ்சுவார்கள். 


இது மிக மேலோட்டாமான பொருள். 


இதற்கு பரிமேலழகர் செய்திருக்கும் உரை பிரமிப்பைத் தரக்கூடியது. 


நம்மால் சிந்தித்தும் பார்க்க முடியாத ஒன்று. 


ஒன்று செய்யுங்கள். ஒரு நிமிடம் மீண்டும் ஒரு முறை இந்தக் குறளைப் படியுங்கள். எவ்வளவு வேண்டுமானாலும் சிந்தித்துக் கொள்ளுங்கள். எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு சிந்தியுங்கள். பின் பரிமேலழகர் உரையைப் படியுங்கள். அவர் உரையின் ஆழம் அப்போது புரியும். 


முதலாவது, "தீவினை என்னும் செருக்கு". செருக்கு என்றால் பெருமிதம், ஒரு தன் மதிப்பு என்று நாம் பொருள் சொல்வோம். ஒரு தீவினையை செய்து விட்டு மாட்டிக் கொள்ளவில்லை என்றால் அது ஏதோ பெரிய சாமர்த்தியம் போல காண்பித்துக் கொள்கிறோம். நினைக்கிறோம்.   பரிமேலழகர் சொல்கிறார். அது பெருமிதம் அல்ல, அது ஒரு பெருமை போன்ற ஒரு மயக்கம். அதில் எல்லாம் ஒரு பெருமையும் கிடையாது. மயங்காதே என்கிறார்.


இரண்டாவது, நாம் ஒரு செயலை செய்யும் போது அச்சம் வருகிறது என்றால் என்ன அர்த்தம்? அதை முன்ன பின்ன செய்து பழக்கம் இல்லை என்று அர்த்தம். முதன் முதலாக கார் ஓட்டும் போது ஒரு பயம் வரும் அல்லவா. போகப் போக பழகி விடும். ஒருவன் பயம் இல்லாமல் தீ வினை செய்கிறான் என்றால் என்ன அர்த்தம்?  அவனுக்கு அதில் நல்ல பழக்கம் என்று அர்த்தம். 


பரிமேல் அழகர் சொல்கிறார், இந்தப் பிறவியில் பழகியது மட்டும் அல்ல, முன் பிறவிகளிலும் ஒருவன் தீய செயல் செய்து பழகி இருப்பான். அதனால் இந்தப் பிறவியில் அவ்வளவு எளிதாக செய்ய முடிகிறது என்கிறார்.


நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். நள்ளிரவில், ஒரு பெண்ணை, ஒரு பேருந்தில் மிருகத்தை விட கேவலமாக நடத்தி இருக்கிறார்கள் என்றால் அவ்வளவு பெரிய தீய செயலை இந்தப் பிறவியில் செய்து பழகி இருக்க மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. 


இதில் இருந்து நாம் சில பாடங்களை படித்துக் கொள்ள முடியும். 


முதலில், சிறு சிறு தவறுகளை செய்வதை நிறுத்த வேண்டும். ஏன் என்றால் அது செய்யப் பழகிவிட்டால் பயம் போய் விடும். அதை விட கொஞ்சம் அதிகம் செய்தால் என்ன என்ற தைரியம் வரும்.  அலுவகலத்தில் இருந்து பேனா, பென்சில், பேப்பர் எடுத்து வருவது, அலுவலக xexrox இயந்திரத்தை சுய உபயோகத்துக்கு பயன்படுத்திக் கொள்வது என்று ஆரம்பித்து பெரிய அளவில் போய் முடியும். 


இரண்டாவது, இந்தப் பிறவியில் தீ செயல் செய்து பழகினால் அது அடுத்த பிறவிக்கும் வரும். இன்று அதிகாரம் இருக்கிறது, பணம் இருக்கிறது என்று தீய செயல் செய்ய ஆரம்பித்தால், அடுத்த பிறவியில் தீய செயல் செய்ய எளிதாக வரும். ஆனால், அதிகாரமும், பணமும் இல்லாமல் போகலாம். தண்டனை அங்கு கிடைக்கும். 


மூன்றாவது, ஒரு சிகரெட் தானே, ஒரு peg தானே என்று ஆரம்பித்து பின் அதில் உள்ள பயமும், கூச்சமும் விட்டுப் போய் விடும். ஒன்று பலதாக மாறி, பெரிய துன்பத்தில் தள்ளி விடும். 


தீவினை செய்ய அச்சப் பட வேண்டும் என்கிறார். 








Saturday, June 3, 2023

திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 4

   திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 4



(இந்தத் தொகுப்புரையின் முந்தைய பாகங்களின் வலை தள முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)


இதுவரை நாம் வாசித்த அதிகாரங்களின் தொகுப்பை ஒரு முறை சிந்திக்கலாம். 


முதலில் கடவுள் வாழ்த்து.  வான்சிறப்பு , நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல், இல் வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம்,  புதல்வரைப் பெறுதல், அன்புடைமை, விருந்தோம்பல் , இனியவை கூறல் , செய்நன்றி அறிதல்,  நடுவு நிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை,  பிறனில் விழையாமை, மற்றும் பொறையுடைமை 


என்ற 15 அதிகாரங்களின் தொகுப்புரையை முந்தைய பிளாகில் பார்த்தோம். 


தொடர்வோம்.


16. அழுக்காறாமை - பொறையுடைமையைத் தொடர்ந்து அடுத்த அதிகாரமாக அழுக்காறாமை என்ற அதிகாரத்தை வைக்கிறார். அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமல் இருத்தல். பொறாமை ஏன் வருகிறது? மற்றவன் வைத்திருக்கும் ஏதோ ஒன்றின் மேல் நமக்கு ஆசை. அது நமக்கு கிடைக்கவில்லை. மற்றவனுக்கு கிடைத்து விட்டது. எனவே ஒரு பொறாமை வருகிறது. அடக்கமும் பொறுமையும் இருந்தால், இந்த பொறாமை வராது என்பதால், இதை அந்த அதிகாரங்களுக்குப் பின் வைத்தார். 


17. வெஃகாமை: அதாவது பிறரது பொருளை தவறான வழியில் அபகரிக்க நினைக்காமல் இருப்பது. பொறாமை வந்தால், எப்படியாவது மற்றவன் பொருளை தான் அடைய வெறி வரும். அது சில சமயம் தவறான வழியிலும் நம்மை இட்டுச் சென்று விடலாம் என்பதால், இதை அழுக்காறாமையின் பின் கூறினார். இலஞ்சம், கொள்ளை, திருட்டு, போன்றவை ஏன் நிகழ்கின்றன?  பிறரது பொருளை தவறான வழியில் அடைந்து விடலாம் என்ற எண்ணத்தில். அதைத் தவிர்க்க இந்த அதிகாரம் செய்தார். 



https://interestingtamilpoems.blogspot.com/2023/06/4.html


(please click the above link to continue reading)




18. புறங்கூறாமை - புறம் சொல்லுதல் என்றால் ஒருவரை பற்றி தவறாக அவர் இல்லாத போது மற்றவர்களிடம் சொல்லுவது. இது சொல்லில் வரும் குற்றம் என்பதால் அழுக்காறாமை, வெஃகாமை போன்ற மனக் குற்றங்களுக்குப் பின் வைத்தார். 


19. பயனில சொல்லாமை - சொல்லில் வரும் குற்றங்கள் நான்கு. அவையாவன, பொய், குறளை , கடுஞ் சொல், பயனில்லாத சொல் என்பன. இதில், இல்லறத்தில் இருப்பவன் பொய்யை முழுவதும் விட முடியாது. சில சில தீமை இல்லாத பொய்களை சொல்லத்தான் வேண்டி இருக்கும். சமையல் எப்படி இருக்கிறது என்று மனைவி கேட்டால், அது நன்றாக இல்லாவிட்டாலும் "மிகப் பிரமாதம்" என்று பொய் சொல்லத்தான் வேண்டும். அது தவிர்க்க முடியாது என்பதால் அதை விட்டுவிட்டார். குறளை என்பது புறம் சொல்லுவது. அது பற்றி முந்தைய அதிகாரத்தில் பார்த்தோம். கடும் சொல் கூறக் கூடாது என்பதை "இனியவை கூறல்" என்ற அதிகாரத்தில் கூறினார். எனவே, இறுதியாக பயனில சொல்வதை பற்றி இணைத்த அதிகாரத்தில் கூறினார்.


இதுவரை நாம் சிந்தித்த திருக்குறளின் தொகுப்பை பார்த்தோம். இனி அடுத்த அதிகாரமான "தீ வினை அச்சம்" பற்றி சிந்திப்போம். 


[

தொகுப்புரை - பாகம் 1

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/1.html

தொகுப்புரை - பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/2.html

தொகுப்புரை - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/3.html


]






















Wednesday, May 31, 2023

திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 3

  திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 3


(இந்தத் தொகுப்புரையின் முந்தைய பாகங்களின் வலை தள முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)



இதுவரை நாம் வாசித்த அதிகாரங்களின் தொகுப்பை ஒரு முறை சிந்திக்கலாம். 


முதலில் கடவுள் வாழ்த்து.  வான்சிறப்பு , நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல், இல் வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம்,  புதல்வரைப் பெறுதல், அன்புடைமை, விருந்தோம்பல் , இனியவை கூறல் , செய்நன்றி அறிதல்


என்ற 10 அதிகாரங்களின் தொகுப்புரையை முந்தைய பிளாகில் பார்த்தோம். 


தொடர்வோம்.


11. நடுவு நிலைமை : இல்லறத்தில் ஈடுபட்டு இருக்கும்போது, நண்பர்கள், உறவினர்கள் என்று  இல்லறம் பரந்துபட்டு இருக்கும். அவர்கள் நமக்கு பல நன்மைகள் செய்து இருப்பார்கள். உதவி செய்து இருப்பார்கள். நாளும் கிழமையும் என்றால் வாழ்த்துச் சொல்வார்கள், பரிசுகள் தருவார்கள். நம் வீட்டில் நடக்கும் நல்லது, அல்லாதது போன்ற நிகழ்வுகளுக்கு  வருவார்கள். ஆனால், அவர்கள் நமக்கு முக்கியமானவர்கள் என்று நினைத்து நீதி அல்லாத, நடு நிலை தவறி நாம் ஒன்று செய்து விடக்கூடாது. ஒரு நீதிபதி, ஒரு காவல் அதிகாரி, ஒரு அரசாங்க அதிகாரி வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்க்காமல் நடுவு நிலையாக செயல் பட வேண்டும். அம்மாவுக்கும், மனைவிக்கும்  இடையில் மனக்கசப்பு என்றால், நடு நிலை பேண வேண்டும். நமக்கு பிடித்த தலைவர், கட்சி என்றால் செய்தது எல்லாம் சரி என்று சொல்லக் கூடாது. அதே போல பிடிக்காத கட்சி, தலைவர் என்றால்   செய்வது எல்லாம் தவறு என்றும் சொல்லக் கூடாது. நடு நிலை மிக அவசியம். 



12. அடக்கமுடைமை - நடுவு நிலை என்றால் மற்றவர்கள் பொறுத்தது மட்டும் அல்ல. நாமே தவறு செய்தாலும், அது தவறு என்று அதை அறிந்து, கடிந்து, திருத்திக் கொள்ள வேண்டும். நான் எப்படி தவறு செய்வேன், என்று அடம் பிடிக்கக் கூடாது. அப்படி தவறை திருத்த முயற்சி செய்யும் போது , தவறான வழியில் செல்லும் மனம், வாக்கு, உடம்பை கட்டுப் படுத்த வேண்டும். எனவே, அடுத்து அடக்கமுடைமை பற்றி கூறுகிறார். 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/3.html



(please click the above link to continue reading)


13. ஒழுக்கமுடைமை: நடுநிலையில் நின்று, மெய், வாக்கு, உடலை அடக்கி ஆண்டாள், ஒழுக்கம் தானே வரும் என்பதால் அது பற்றி அடுத்துக் கூறினார். 


14. பிறனில் விழையாமை - ஒரு நாடு சிறக்க வேண்டும் என்றால், அதில் உள்ள சமுதாயங்கள் சிறக்க வேண்டும். சமுத்தியாம் சிறக்க வேண்டும் என்றால், குடும்பங்கள் சிறக்க வேண்டும். குடும்பத்தின் ஆணி வேர் கணவன் மனைவி உறவு. பந்தம். அது அசைக்கப் படும் என்றால், குடும்பம் சீரழியும், சமுதாயம் கெடும், நாடு கெடும். எனவே, ஒழுக்கமுடைமையின் பின் பிறனில் விழையாமை பற்றிக் கூறினார். வல்லவர்கள், பணம் உள்ளவர்கள், அழகு உள்ளவர்கள் அது அவ்வளவாக இல்லாத ஒருவனின் மனைவியை ஏதோ ஒருவிதத்தில்   அபகர்த்துக் கொள்ள முடியும் என்றால், பின் சமுதாயம் சீர் குலையத் தொடங்கி விடும். 


15. பொறையுடைமை - பொறுமையை கடைபிடித்தல். எதற்கு எடுத்தாலும் கோபம், எரிச்சல், பகைமை என்று போகாமல், பொறுமையை சொல்லும் அதிகாரம். எதை எடுத்துக் கொண்டாலும் பொறுத்துக் கொள்ள முடியும், ஆனால் ஒருவனின் மனைவியை எடுத்துக் கொண்டால் பொறுக்க முடியுமா?  அந்த சமயத்திலும் பொறுமை வேண்டும் என்று சொல்வதற்காக இந்த அதிகாரத்தை பிறனில் விழையாமை என்ற அதிகாரத்தின் பின் வைத்தார். தன் மனைவியை கவர்ந்து சென்ற இராவணனிடம் பொறுமை காட்டினான் இராமன் (இன்று போய் நாளை வா), தன் மனைவியை சபையில் மானபங்கப் படுத்திய துரியோதனன் மீது பொறுமை காட்டினார் தர்மர். நம் இதிகாசங்கள் போதிக்கும் அறம் இது. 


[


தொகுப்புரை - பாகம் 1


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/1.html

தொகுப்புரை - பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/2.html



]












Monday, May 22, 2023

திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 2

 

 திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 2


(இந்தத் தொகுப்புரையின் முந்தைய பாகங்களின் வலை தள முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)


இதுவரை நாம் வாசித்த அதிகாரங்களின் தொகுப்பை ஒரு முறை சிந்திக்கலாம். 


முதலில் கடவுள் வாழ்த்து. 


வான்சிறப்பு , நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல், இல் வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம்


என்ற ஐந்து அதிகாரங்களின் தொகுப்புரையை முந்தைய பிளாகில் பார்த்தோம். 


தொடர்வோம்.


6. புதல்வரைப் பெறுதல் - இல்வாழ்வில், மனைவியோடு வாழும் ஒருவன் அடுத்து அடைவது குழந்தைப் பேறு. குழந்தைகள், அவர்களின் இனிமை, அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பதெல்லாம் இந்த அதிகாரத்தில் கூறுகிறார். சில இல்லறக் கடமைகளை பிள்ளைகள் மூலம் மட்டுமே செய்ய முடியும் என்றும் வலியுறுத்துகிறார். 


7. அன்புடைமை - மனைவி, குழந்தைகள் என்று வரும் போது , ஒருவனின் அன்பு வட்டம் விரிகிறது. தனக்கு தனக்கு என்று நினைத்துக் கொண்டிருந்தவன், தன் மனைவி, தன் பிள்ளைகள் என்று அவர்கள் மேல் அன்பு செலுத்தத் தொடங்குகிறான். அவனின் அன்பின் எல்லை விரிகிறது. இதுவரை பெற்றோரிடம் இருந்து அன்பை பெற்றுக் கொண்டிருந்தவன் , இப்போது அன்பை கொடுக்கப் பழகுகிறான். 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/2.html

(please click the above link to continue reading)



8. விருந்தோம்பல் - தான், மனைவி, மக்கள் என்று விரிந்த அன்பின் எல்லை மேலும் விரிகிறது. வீடு என்று இருந்தால் விருந்தினர்கள் வருவார்கள். அவர்களை வரவேற்க வேண்டும், போற்ற வேண்டும், உபசரிக்க வேண்டும். அவர்கள் மேல் அன்பில்லாமல் அது முடியாது. அன்பின் எல்லை மேலும் விரிந்து விருந்தினர்களையும் சேர்த்துக் கொள்கிறது. 


9. இனியவை கூறல் - விருந்தோம்பல் என்று கூறினால், எப்படி விருந்தை உபசரிப்பது என்ற கேள்வி வரும். இனிய சொல் சொல்லாதவன் வீட்டுக்கு யார் வருவார்கள். பேச்சில் இனிமை வேண்டும். அது இல்லறத்தில் உள்ளவனுக்கு இன்றியமையாத பண்பு. எனவே, அதை அடுத்துக் கூறினார். 


10. செய்நன்றி அறிதல் - வீடு என்று இருந்தால் நண்பர்கள், உறவினர்கள் வருவார்கள். நாம் அவர்களுக்கு சிலவற்றை செய்வோம். அவர்கள் நமக்கு சில நன்மைகளைச் செய்வார்கள். அப்படி நாம் பெற்ற நன்மைகளை ஒரு நாளும் மறக்கக் கூடாது என்பதை வலியுறுத்த இந்த அதிகாரம் செய்தார். பெற்றோர், ஆசிரியர், அக்கம், பக்கம், நட்பு, உறவு, உணவு செய்யும் உழவன், நாட்டைக் காக்கும் வீரன், உயிர் காக்கும் மருத்துவன் என்று ஆயிரம் பேரிடம் நாம் உதவிகளைப் பெறுகிறோம். அந்த உதவிகளை மறக்கக் கூடாது என்று கூறும் அதிகாரம் இது. 


(மேலும் சிந்திப்போம்) 



[

தொகுப்புரை - பாகம் 1

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/1.html


]







Thursday, May 18, 2023

திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 1

 திருக்குறள் - தொகுப்புரை - பகுதி 1


இதுவரை நாம் வாசித்த அதிகாரங்களின் தொகுப்பை ஒரு முறை சிந்திக்கலாம். 


முதலில் கடவுள் வாழ்த்து. இந்த உலகம் மூன்று குணங்களின் தொகுதியால் ஆனது. சத்துவம், தாமசம், ராஜஸம் என்ற இந்த  முக்குண கூட்டே இந்த உலகு. உலகம் என்பது பொருள்களால் ஆனது என்று நாம் அறிவோம். காடு, மலை, கடல், மரம், செடி, கொடி, கல், மண் என்று அமைந்து இருக்கிறது. இந்த பொருட்கள் எல்லாம் குணங்களின் தொகுதியே. குணங்களை எடுத்து விட்டால் பொருள் என்று ஏதும் தனித்து இல்லை. அப்படி அமைந்தவற்றில் பதி , பசு, பாசம் என்பவை நிரந்தரமானவை. அவற்றுள் முதலான பதி பற்றி முதலில் கூறினார். 


வான்சிறப்பு - திருக்குறள் என்பது ஒரு அற நூல். இல்லறம், துறவறம் என்ற இரண்டு அறங்களைப் பற்றி கூறும் நூல். இந்த இரண்டு அறங்களும் செவ்வனே நடக்க வேண்டும் என்றால் மழை இன்றி அமையாதது. மழை இல்லாவிட்டால் எல்லா அறங்களும்  பாழ்பட்டு விடும் என்பதால், அதை கடவுள் வாழ்த்துக்குப் பின் கூறினார். 


நீத்தார் பெருமை - அறம் என்றால் என்ன? அது காலத்தோடு மாறுவது. அதை சரியானபடி எடுத்துச் சொல்ல ஆள் வேண்டும். இல்லறத்தில் இருப்பவனுக்கு ஆயிரம் நெருக்கடிகள். மனைவி, குழந்தைகள், உற்றார், உறவு, மேலதிகாரி, அரசாங்கம் என்று அவன் பயந்து வாழ வேண்டும். அவனால் தைரியமாக உண்மையை சொல்ல முடியாது. முற்றும் துறந்த துறவியால்தான் அறத்தை உள்ளது உள்ளபடியே கூற முடியும் என்பதால், முற்றும் துறந்தாரைப் பற்றி "நீத்தார் பெருமை" என்று அடுத்த அதிகாரத்தில் கூறினார். 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/1.html


(please click the above link to continue reading)


"அறன் வலியுறுத்தல்" - அறம், பொருள், இன்பம், வீடு என்று வாழ்வை நான்கு கூறுகளாக பிரித்துக் கொள்ளலாம். இதில் இன்பம்தானே எல்லோரும் விழைவது. அதை முதலில் கூறினால் நன்றாக இருக்குமே என்று நாம் நினைக்கலாம். மக்களுக்கு ஒரு ஈர்ப்பு வரும் அல்லவா? இன்பத்துப் பாலை முதலில் சொன்னால் என்ன?  


அறம் என்பது இம்மை, மறுமை, வீடு என்ற மூன்றையும் தரும். 


பொருள் என்பது இம்மை, மறுமைக்கு இன்பம் தரும். வீடு பேற்றைத் தராது. 


இன்பம் என்பது இம்மைக்கும் மட்டும் நலம் பயக்கும். மறுமையும், வீடும் அதில் வராது. 


எனவே, இந்த மூன்றில் அதிகமான பபாலன் தரும் அறத்தை முதலில் சொல்லத் தொடங்கி, "அறன் வலியுறுத்தல்" என்ற அதிகாரத்தை அடுத்து வைத்தார்.  


"இல் வாழ்க்கை". வீடு பேறு வாழ்வின் நோக்கம். அதற்கு துறவு வேண்டும். துறவுக்கு இல்லறம் வேண்டும். இல்லறத்தில் அன்பு விரியும். விரிந்து கொண்ட போகும் அன்பு அருளாக மாறும். அருள் , துறையில் கொண்டு சேர்க்கும். துறவு வீடு பேற்றினைத் தரும் என்பதால், முதலில் இல்லறம் பற்றி கூறினார். 


"வாழ்க்கைத் துணை நலம்" , இல்வாழ்க்கை என்பது பொறுப்புகளும், கடமைகளும் நிறைந்தது. அவற்றை தனி ஒருவனாக ஒருவனால் செய்து முடிக்க முடியாது.  அவனுக்கு ஒரு துணை வேண்டும். அது தான் மனைவி. அவளின் சிறப்பு மற்றும் நன்மைகளை அடுத்து "வாழ்க்கை துணைநலம்" என்ற அதிகாரத்தில் கூறினார். 






Sunday, May 14, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - சொல்ல வேண்டியதும் வேண்டாததும்

      

 திருக்குறள் - பயனில சொல்லாமை - சொல்ல வேண்டியதும் வேண்டாததும் 



(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


முந்தைய குறளில் 


பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீரந்த

மாசறு காட்சி யவர்.


என்று கூறினார். 


அதாவது மயக்கம் அற்ற, குற்றம் அற்ற பார்வை உடையவர்கள் மறந்தும் கூட பொருள் இல்லாத வெட்டிப் பேச்சுகளை பேசமாட்டார்கள் என்றார். 


சரி. 


எதை பேச மாட்டார் என்று கூறினார். 


எதைப் பேச வேண்டும் என்றும் கூற வேண்டும் அல்லவா?


அதை இங்கே கூறுகிறார். 



முதலில் ஒன்றுமே பேசாமல் இருப்பது நலம். 


ஒருவேளை பேச வேண்டி வந்தால், மிக்க பலன் உள்ள சொற்களை தேர்ந்து எடுத்து பேச வேண்டும்.  பெரும் பலன் தராத   சொற்களைப் பேசக் கூடாது என்கிறார். 


பாடல் 


சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க

சொல்லின் பயனிலாச் சொல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post_14.html


(please click the above link to continue reading)


சொல்லுக = சொல்ல வேண்டி வந்தால் சொல்லுக 


சொல்லின் = சொற்களில் 


பயனுடைய = பயனுடைய சொற்களை 


சொல்லற்க = சொல்லாமல் விடுக 



சொல்லின் = சொற்களில் 


பயனிலாச் சொல் = பயன் இல்லாத சொற்களை 



முதலில், இவரோடு, இன்று, இது பற்றி பேச வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும். கேட்பவர் தரம் அறிந்து பேச வேண்டும். தெரியாதவர்களுக்கு விளங்கும்படி பேச வேண்டும். அறிந்தவர்களுக்கு சுருக்கமாக பேச வேண்டும். என்ன பேசப் போகிறோம் என்று அறிந்து பேச வேண்டும். எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும். இவை எல்லாம் அறிந்து தெளிந்த பின்தான் பேசவே தொடங்க வேண்டும். 


சும்மா, தொலைபேசி வந்தால் உடனே எடுத்து மணிக்  கணக்கில் வள வளா என்று பேசிக் கொண்டு இருக்கக் கூடாது. 


சரி, பேசுவது என்று முடிவு எடுத்து விட்டால், நாம் பேசுவதால் கேட்பவருக்கு என்ன பலன் என்று அறிந்து பேச வேண்டும். ஒரு மணி நேரம் சிலர் பேசுவார்கள். ஒரு சாரமும் இருக்காது. பேசிய பின் தொலை பேசியை வைத்து விட்டு நாம் நம் வேலையை பார்க்க போய் விடலாம். ஒரு பலனும் இருக்காது. அப்படிப் பேசக் கூடாது. பேசினால், கேட்பவருக்கு ஏதோ ஒரு பலன் இருக்க வேண்டும்.


சொல்ல ஒன்றும் இல்லையா, அல்லது சொல்ல வந்த விடயத்தை எப்படி தெளிவாகச் சொல்வது என்று தெரியவில்லையா? பேசாமல் இருந்து விடுவது நலம். 


"சொல்லற்க" என்று ஒரு கட்டளையாகச் சொல்கிறார். 


நீ சொல்வதால் ஒரு பலனும் இல்லை என்றால் எதற்கு உன் நேரத்தையும், கேட்பவர் நேரத்தையும் வீணாக்குகிறாய் என்று கேட்கிறார். 


சில பேர் இருக்கிறார்கள், என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது. அல்லது தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதித்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களிடம் சொல்வதால் ஒரு பயனும் இல்லை என்பதால், சொல்லாமல் இருப்பதே நலம். 



(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


நயன்சாரா நன்மையின் நீக்கும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html


சீர்மை சிறப்பொடு நீங்கும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_23.html


 பதடி எனல் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_28.html


பயனில சொல்லாமை நன்று




அரும்பயன் ஆயும் அறிவினார்

Saturday, May 6, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - மாசறு காட்சி யவர்

     

 திருக்குறள் - பயனில சொல்லாமை - மாசறு காட்சி யவர்



(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


ஏன் பயனற்ற சொற்களை பேசுகிறோம்? 


இது பற்றி என்றாவது சிந்தித்தது உண்டா? 


பொழுது போகவில்லை, சும்மா அரட்டை அடிப்பது...


பேச ஒன்றும் இல்லை. சும்மா மெளனமாக இருக்க முடியுமா? எதையாவது பேசுவது. 


என்ன பேசுகிறோம், எதற்கு பேசுகிறோம் என்று தெரியாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருப்பது. 


இப்படி பல காரணங்கள். 


எல்லாவற்றையும் ஆராய்ந்து, வள்ளுவர் சொல்கிறார் 


நாம் தேவையற்ற சொற்களை பேசுவதற்கு காரணம் நம்மிடம் ஒரு தெளிவு இல்லாமை என்று. 


எது சரி, எது தவறு என்ற தெளிவு இல்லை. 


எது நல்லது, எது கெட்டது என்ற தெளிவு இல்லை. 


எது உண்மை, எது அபிப்ராயம் என்ற தெளிவு இல்லை. 


உண்மையை கண்டு பிடிக்க முயற்சி செய்வது இல்லை. சொல்வதை எல்லாம், கேட்பதை எல்லாம் 

நம்பிக் கொண்டு, அது தான் சரி என்று வாதம் செய்துகொண்டு திரிவது. 


இப்படி பல காரணங்களால் நம்மிடம் ஒரு தெளிவு இருப்பது இல்லை. 


பாடல் 

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post.html



(please click the above link to continue reading)



பொருள்தீர்ந்த = பொருள் தீர்ந்து போன, பொருளற்ற, அர்த்தம் இல்லாத, பயனில்லாத (சொற்களை)

 


பொச்சாந்தும் = மறந்தும் கூட 


சொல்லார் = சொல்ல மாட்டார்கள் 


மருள்தீர்ந்த = மயக்கம் நீங்கிய, மயக்கம் இல்லாத, 


மாசறு = குற்றம் இல்லாத 


காட்சி யவர் = பார்வை கொண்டவர்கள். 


மருள் என்றால் மயக்கம். 


இதுவா, அதுவா எது சரி என்று தெரியாமல் மயங்குவது. 


இதுவோ, அல்லது அதுவோ என்று குழம்புவது. 


எப்படி முடிவு செய்வது என்று அறியாமல் தவிப்பது. 


இந்த மயக்கம் முதலில் தீர வேண்டும். 


அப்படி தீர்ந்தால், மாசறு காட்சி கிடைக்கும். 


அது என்ன மாசறு காட்சி. 


நாம் ஒன்றை பார்க்கிறோம் (கேட்கிறோம், படிக்கிறோம்) என்றால் அது உண்மையில் என்ன என்று பார்பது கிடையாது. 


நமக்கு தெரிந்த, பிடித்த, நாம் நம்பும் வகையில் அவற்றைப் பார்ப்போம்.


அது குற்றம் உள்ள பார்வை. வேண்டியவன், வேண்டாதவன், பிடித்தது, பிடிக்காதது, என்பதை எல்லாம் தள்ளி வைத்து விட்டு, தெளிவான காட்சி இருந்தால், பேச்சு குறையும். பயனற்ற பேச்சு குறையும். 


மருள் தீர்ந்த 

மாசறு காட்சி 


நம்மிடம், எத்தனை விடயங்களில் இப்படிப்பட்ட காட்சி இருக்கிறது?


நாம் நம்புவது எல்லாம் சரியாகி விடாது. நம்பிக்கையைத் தாண்டி உண்மை எது என்று அறிய வேண்டும். அந்த உண்மையின் மேல் ஒரு குழப்பமும் இருக்கக் கூடாது. அப்போது தெளிவான காட்சி கிட்டும். அப்போது பயனற்ற சொற்கள் மறையும். 







(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


நயன்சாரா நன்மையின் நீக்கும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html


சீர்மை சிறப்பொடு நீங்கும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_23.html


 பதடி எனல் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_28.html


பயனில சொல்லாமை நன்று




அரும்பயன் ஆயும் அறிவினார்

Wednesday, April 12, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - அரும்பயன் ஆயும் அறிவினார்

    

 திருக்குறள் - பயனில சொல்லாமை - அரும்பயன் ஆயும் அறிவினார்



(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 



பயனற்ற சொற்களை பேசுவதை எப்படி விடுவது?  


பேசாதே பேசாதே என்று சொன்னால் போதாது. எப்படி அப்படி பேசாமல் இருக்க வேண்டும் என்ற வழியைச் சொல்ல வேண்டாமா?



வள்ளுவர் சொல்கிறார். 



நாம் எதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறோமோ அதைப் பற்றித்தான் பேசுவோம். இல்லையா?



மனதில், சிந்தனையில் எது ஓடிக் கொண்டிருக்கிறதோ அது தான் சொல்லில் வரும். 


நம் சிந்தனை எல்லாம் சில்லறை விடயங்களில் போய் கொண்டிருக்கிறது. 



அரசியல், சினிமா, டிவி யில் வரும் தொடர்கள், நாள் வார இதழ்களில் வரும் உணர்வுகளை தூண்டும் செய்திகள்,  என்று இருக்கிறது. 


whatsapp போன்ற சமூக வலை தளங்களில் யாராவது ஒன்றைச் சொன்னால் அதைப் பிடித்துக் கொண்டு மாறி மாறி கருத்துப் பரிமாற்றம் செய்வது. காலணாவுக்கு பிரயோஜனம் இல்லாத விடயமாக இருக்கும். 



எனவே, நம் சிந்தனையை மாற்றினால், நம் பேச்சு மாறும். 


சிந்தனையை எதன் மேல் செலுத்துவது என்ற கே கேள்வி வரும். 


சமையல் குறிப்பு, அழகுக் குறிப்பு இதெல்லாம் முக்கியமில்லையா என்ற கேள்வி வரும். 


அதற்கும் பதில் சொல்கிறார் வள்ளுவர். 


பாடல் 


அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்


பொருள் 





(please click the above link to continue reading)


அரும்பயன் = அரிய பயன்களை 

ஆயும் = ஆராய்ச்சி செய்யும் 

அறிவினார் = அறிவு உள்ளவர்கள் 

சொல்லார் = சொல்ல மாட்டார்கள் 

பெரும்பயன் = பெரிய பயன் 

இல்லாத சொல் = தராத சொற்களை 


அதாவது, அரிய  பயன்களைத் தருபவைகளைப் பற்றி ஆராயும் அறிவை உடையவர்கள் பெரிய பலன் தராத சொற்களை பேச மாட்டார்கள். 

சரி, அரிய பயன் என்றால் என்ன?


பரிமேல் உரையை பின் பார்ப்போம்.

நம்மிடம் கேட்டால் என்ன சொல்லுவோம்?


அரிய என்றால் அபூர்வமான, எளிதில் கிடைக்காத என்று பொருள் சொல்லுவோம். அரிய வகை பூ என்றால் சாதாரணமாக பூக்காத பூ. குறிஞ்சி மலர் போல.

எளிதில் கிடைக்காத பலன் எது?


பணம், செல்வாக்கு, அதிகாரம், உடல் நலம், உறவுகள்...இதெல்லாம் எளிதில் கிடைக்காதா?


இறை அருள், வீடு பேறு , முக்தி...இவை எளிதில் கிடைக்குமா?

பரிமேலழகர் சொல்கிறார் " அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார்" என்று. 

எளிதில் ஆராய்ந்து அறிந்து விட முடியாத பயன்கள். 


யோக முயற்சி செய்தால் என்ன கிடைக்கும்? அதன் பலன்களை எளிதில் அறிய முடியாது. துறவறம் நல்லதா?  எவ்வளவு சிந்தித்தாலும்  அதை முழுவதும் அறிந்து கொள்ள முடியாது. 

அது போன்ற விடயங்களை ஆராயும் அறிவை உடையவர்கள் என்று உரை செய்கிறார்.  மேலும், 


அது எது பற்றியது என்றால் "வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின" என்பார். 

கதி என்றால் பாதை. மேற்கதி உயர்ந்த நிலைக்கு நம்மை கொண்டு செல்லும் பாதை. அதைப் பற்றி ஆராயும் அறிவுஉள்ளவர்கள் என்கிறார். 




 
பெரும் பயன் இல்லாத சொற்களை பேச மாட்டார்கள் என்றால் சிறு பயன் தரும் சொற்களைப் பேசுவார்களா என்று கேட்கக் கூடாது. 

பெரிய பயன் இல்லாத சொற்களை பேச மாட்டார்கள் என்றால் சிறு பயன் இல்லாத சொற்களையும் பேச மாட்டார்கள் என்பது குறிப்பு. 

பெரும் பயன் தரும் சொற்களை மட்டும் தான் பேசுவார்கள். 


அதாவது, நாம் பேசினால் அதனால் மற்றவர்களுக்கு பெரிய பயன் விளைய வேண்டும். ஏதோ பொழுது போக அரட்டை அடித்தேன் என்றால் அதுவும் ஒரு பலன் தான்.   ஆனால் அது சிறு பயன். அது பற்றி பேசக் கூடாது. 


இரண்டாவது, அறிவுள்ளவர்கள் அப்படி பேச மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்?  அறிவு இல்லாத முட்டாள்கதான்  பெரும் பயன் அற்ற சொற்களைப் பேசுவார்கள் என்று அர்த்தம். 

நாம் யார் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். 



(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


நயன்சாரா நன்மையின் நீக்கும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html


சீர்மை சிறப்பொடு நீங்கும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_23.html


 பதடி எனல் 

Thursday, April 6, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - பயனில சொல்லாமை நன்று

   

 திருக்குறள் - பயனில சொல்லாமை - பயனில சொல்லாமை நன்று



(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


பயனற்ற சொற்களை பேசுவதை எவ்வளவு தூரம் வள்ளுவர் கண்டிக்கிறார் என்பதற்கு இன்று நாம் பார்க்க இருக்கும் குறள் ஒரு உதாரணம். 


நீதியற்ற சொற்களை, இனிமை இல்லாத சொற்களை சொன்னால் கூட ஒருவிதத்தில் பரவாயில்லை, ஆனால் ஒரு போதும் பயனற்ற சொற்களை சொல்லக் கூடாது என்கிறார். 



நல்ல பலன் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தீய பயன் தந்தால் கூடப் பரவாயில்லை, ஒரு பயனும் இல்லாத சொற்களை சொல்லாதே என்கிறார். 




பாடல் 


நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று



பொருள் 




(please click the above link to continue reading)



நயனில = நீதியற்ற, இனிமையற்ற 


சொல்லினும் = (சொற்களை) சொன்னாலும் 


சொல்லுக = சொல்லலாம் 


சான்றோர் = பெரியவர்கள் 


பயனில = பயனற்ற (சொற்களை)  


சொல்லாமை  = சொல்லாமல் இருப்பது 


நன்று = நல்லது 


அதற்காக, வள்ளுவரே சொல்லிவிட்டார் அறன் அல்லாத சொற்களை பேசலாம் என்று ஆரம்பிக்கக் கூடாது. 


"ஐயோ டாக்டர் இந்த பல் வலி தாங்க முடியவில்லை. செத்தாலும் பரவாயில்லை, அந்த பல்லை பிடுங்குருங்க " என்று ஒரு நோயாளி சொன்னால், கொல்வதற்கு அனுமதி அளித்து விட்டான் என்று கொள்ளக் கூடாது.  


"உயிரே போனாலும்" என்பதில் உள்ள 'ம்', போகக் கூடாது என்பதை அறிவுறுத்தும். 



அது போல 


நயனில சொல்லினும் 


என்பதில் உள்ள 'ம்' சொல்லக் கூடாது என்பதை அறிவுறுத்தும். 


ஒரு வேளை , அரிதான ஒரு சமயத்தில் சொல்ல வேண்டி வந்தால், சொல்லலாம் ஆனால் ஒரு காலத்திலும் பயனற்ற சொற்களை பேசக் கூடாது. 


(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


நயன்சாரா நன்மையின் நீக்கும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html


சீர்மை சிறப்பொடு நீங்கும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_23.html


 பதடி எனல் 

Tuesday, March 28, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - பதடி எனல்

  

  திருக்குறள் - பயனில சொல்லாமை - பதடி எனல் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


வள்ளுவர் சொல்லுவதைப் பார்த்தால் நாம் பேசவே முடியாது போல இருக்கே. எப்போது பார்த்தாலும் 

ஒரு கல்லூரி பேராசிரியர் மாதிரி பயனுள்ள சொற்களையே பேசிக் கொண்டிருக்க முடியுமா? சில சமயம் நண்பர்களோடு, உறவினர்களோடு அரட்டை அடித்து, பேசி, சிரித்து மகிழ்ந்து இருக்கக் கூடாதா?


வள்ளுவர் அப்படிச் சொல்லவிலை. 



நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத எதையும் வள்ளுவர் சொல்ல மாட்டார். 



இல்லறத்தில் இருப்பவன் ஒரு சில சமயம் பயனற்ற சொற்களை பேச வேண்டி வரலாம். 



ஆனால், எல்லா நேரமும் அப்படியே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. 


அப்படி பேசுபவனை மக்களுள் பதர் என்று சொல்ல வேண்டும் என்கிறார். 



பாடல் 


பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி எனல்.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_28.html


(please click the above link to continue reading)



பயனில்சொல் = பயனற்ற சொற்களை 


பாராட்டு வானை = நீண்ட காலமாக சொல்லுபவனை 


மகன்எனல் = மக்களில் ஒருவராக சொல்லக் கூடாது 


மக்கட் = மக்களுள் 


பதடி எனல் = பதர் என்று கூற வேண்டும் 


பதர் என்பது அரிசி உள்ளே இல்லாத நெல்லைக் குறிக்கும். 


மனிதருள் பதர் என்றால் அறிவு இல்லாததால் அவனை பதர் என்று சொல்ல வேண்டும் என்கிறார். 


அதாவது, அறிவில்லாதவன்தான் பயனற்ற வார்த்தைகளை பேசிக் கொண்டிருப்பான் என்கிறார். 


அறிவுள்ளவன், அளந்து, பயனுள்ள வார்த்தைகளையே பேசுவான் என்பது குறிப்பு. 


யாரவது வளவள என்று  அர்த்தம் இல்லாமல், பயனற்ற முறையில், அடிக்கடி பேசிக் கொண்டிருந்தால், அவனுடைய அறிவின் ஆழத்தை நாம் புரிந்து கொள்ளலாம் என்கிறார். 



(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


நயன்சாரா நன்மையின் நீக்கும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html


சீர்மை சிறப்பொடு நீங்கும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_23.html




Thursday, March 23, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - சீர்மை சிறப்பொடு நீங்கும்

 

  திருக்குறள் - பயனில சொல்லாமை - சீர்மை சிறப்பொடு நீங்கும்


(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


சில பேர் நிறைய நல்லது செய்வார்கள். மற்றவர்களுக்காக ஓடி ஓடி உழைப்பார்கள். தன்னலம் பாராமல் உதவி செய்வார்கள். இருந்தும் அவர்களுக்கு ஒரு நல்ல பேர் இருக்காது. 


ரொம்ப தூரம் போவானேன், பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தங்களை அறிந்து கொள்ளவில்லையே என்று வருந்துவதை நாம் காண்கிறோம். எல்லாம் அவன்/அவள் நன்மைக்காகத்தானே செய்தேன். ஏன் என்னை வெறுக்கிறார்கள் என்று வருந்துவார்கள். 


வள்ளுவர் சொல்கிறார், 


"எவ்வளவுதான் நல்லது செய்தாலும், ஒருவர் பயனற்ற சொற்களை பேசுவாராயின் அவருக்கு உள்ள சிறப்பும், பெருமையும் போய் விடும்"


பாடல் 


சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல

நீர்மை உடையார் சொலின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_23.html


(please click the above link to continue reading)



சீர்மை = நன்மை  


சிறப்பொடு = சிறப்பு 


நீங்கும் = நீங்கும் 


பயன்இல = பயன் இல்லாத சொற்களை 


நீர்மை = நல்ல குணம்  


உடையார் = உள்ளவர்கள் 


சொலின் = சொல்வாராயின் 


நல்லதும் போகும், சிறப்பும் போகும். 


அது எப்படி?  யோசிப்போம். 


பொதுவாக வீடுகளில் நடப்பதுதான். 


அம்மாவுக்கு பிள்ளை மேல் அளவு கடந்த பாசம் இருக்கும். மருமகள் ஏதோ ஒன்று செய்யப் போக, அம்மா ஏதோ ஒன்று சொல்ல, அதை அவள் தன் கணவனிடம் சொல்ல, அம்மாவுக்கும் மகனுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகும். 


காரணம் என்ன?


மருமகளைப் பற்றிய பயனற்ற சொற்கள். 


அலுவகலத்தில் சிலர் மிக கடுமையாக உழைப்பார்கள். நல்ல திறமையும் இருக்கும். இருந்தும் நல்ல பதவி உயர்வு கிடைக்காது.  காரணம், மனதில் பட்டதை அப்படியே பேசி விடுவது.  அவர் பேச்சை  மற்றவர்கள் ஒன்றுக்கு இரண்டாக திரித்துக் கூறி அவர்கள் முன்னேற்றத்தை தடுத்து விடுவார்கள். 


இப்படி, பயனற்ற சொற்களைப் பேசி மனத் துன்பம், பணத் துன்பம், உறவுச் சிக்கல், தனிமை, வெறுமை என்று பல துன்பகளை நிறைய பேர் சம்பாதித்துக் கொள்கிறார்கள். 


அவர்களுக்கு தெரிவது இல்லை...தங்கள் பயனற்ற சொற்கள்தான் தங்களது எதிரி என்று. 


மனதில் பட்டதை பட் என்று பேசி விடுவேன்.....


உள்ள கள்ளம் கபடம் இல்லாமல் பேசி விடுவேன் ...


நம்ம கிட்ட எப்போதும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டுதான் ...


இப்படி எல்லாம் பேசுவதால் துன்பமே மிஞ்சும். 


"நீர்மை உடையார் சொலின்" என்பதில் "சொன்னால்"  என்பது ஒரு கேள்வியாக நிற்கிறது. "கடினமாக உழைத்தால் வெற்றி பெறலாம்" என்றால் கடினமாக உழைப்பது எளிது அல்ல என்று விளங்கும். 


நீர்மை உடையவர்கள் அப்படிச் 'சொன்னால்' என்பதில், சொல்ல மாட்டார்கள் என்பது தெளிவு. 


பயனுள்ள சொற்களை பேசி பழக வேண்டும். ஒரு நாளில் வந்து விடாது. கொஞ்சம் கொஞ்சமாக பழக வேண்டும். 


அப்படிப் பழகினால், வாழ்க்கை வசந்தமாக இருக்கும். 





(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


நயன்சாரா நன்மையின் நீக்கும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html





Wednesday, March 15, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - நயன்சாரா நன்மையின் நீக்கும்

  திருக்குறள் - பயனில சொல்லாமை - நயன்சாரா நன்மையின் நீக்கும்


(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


நீதி !



நீதி என்றால் என்ன?  



ஒரு சமுதாய கோட்பாடு. கட்டுப்பாடு. 



ஒரு சமுதாயத்தில் உள்ள எல்லோரும் கூடி வகுத்த ஒரு வாழ்க்கை நெறிமுறை. அதில் இருந்து 

விலகக் கூடாது. மீறினால் தண்டனை உண்டு. 



ஒரு மனிதனை சமுதாயத்தோடு ஒட்டி வாழ வழி செய்வது நீதி. 



ஒருவன் நீதியை மதிக்காமல் மனம் போனபடி வாழத் தலைப்பட்டால், அவனை சிறையில் அடைத்து, 

அவனை சமுதாயத்தில் இருந்து பிரித்து, தனி மனிதனாக ஆக்கப் படுவான். 



இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 



பயனில்லாத சொற்களை ஒருவன் பேசினால், அவனுக்கு நல்லது கிடைக்காதது மட்டும் அல்ல அவன் 

சமுத்தியாத்தால் தனிமை படுத்தப் படுவான் என்கிறார் வள்ளுவர். 



பாடல் 


நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லார் அகத்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html


(please click the above link to continue reading)



நயன்சாரா = நீதியோடு சேராத 



நன்மையின் = நன்மைகளில் இருந்து 



நீக்கும் = ஒருவனை நீக்கும் 



பயன்சாராப் = பயன்தராத 



பண்பில்சொல் = பண்பற்ற சொற்களை 



பல்லார் அகத்து = பலர் முன்னிலையில் (ஒருவன் பேசினால்)




பயனற்ற சொற்களை பேசினால் நன்மை வராது என்பது மட்டும் அல்ல, அவனை எல்லோரும் ஒதுக்கி வைத்து 


விடுவார்கள். அவன் தனிமை படுத்தப்படுவான். ஏறக்குறைய சிறைச்சாலை மாதிரித்தான். 


யோசித்துப் பாருங்கள். 


உங்கள் நட்பிலும், உறவிலும் கூட ஒரு சிலர் இருக்கலாம். 


'இரம்பம்', "சரியான அறுவை", "வாயாடி",  என்றெல்லாம் அழைக்கப் படுபவர்கள் இருப்பார்கள். 


அவர்களை கண்டு நீங்கள் விலகிப் போகிறீர்கள் அல்லவா? 


பயனற்ற சொற்களை பேசினால், நம்மை விட்டும் மற்றவர்கள் விலகிப் போய் விடுவார்கள். 


இல்லறத்தில் இருப்பவன் சமுதாயத்தோடு ஒன்றி வாழவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும். 


ஊருடன் பகைக்கில் வேருடன் கெடும் 


"எனக்கு ஒரு நன்மையையும் வேண்டாம். நான் மனதில் பட்டதை பட்டென்று சொல்லி விடுவேன்" என்று பெருமை  பேசக் கூடாது. 


நன்மை வேண்டாம் என்று தள்ளிவிடலாம். 


உறவும், நட்பும் இல்லாமல் எப்படி வாழ்வது?


பிள்ளைகள், கணவன்/மனைவி, உடன் பிறந்தோர், சுற்றம், நட்பு எல்லாம் நாளடைவில் தள்ளிப் போய்விடும். 


"நான் சொல்வதை யாரும் கேட்பது இல்லை. பேச்சுத் துணைக்கு கூட யாரும் இல்லை" என்று பின்னால் வருந்து பயன் இல்லை. 


பயனுள்ள சொற்களை பேசிப் பழகிவந்தால் எல்லோரும் நம்மிடம் பேச விரும்புவார்கள். 


இப்படி எல்லாம் இந்தக் குறளில் இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம். 


"நயன்சாரா நன்மையின்" எனபதில் நயன் என்ற சொல்லுக்கு "நீதி" என்று பொருள் சொல்கிறார் பரிமேலழகர். 


"நயன் சாரா நன்மையின் நீக்கும் - அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும்"


என்பது அவர் உரை. 


நீதி என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று சிந்தித்தபோது இப்படியும் ஒரு பொருள் இருக்கலாம் என்று தோன்றியது. 


தவறாகவும் இருக்கலாம். 


சரி என்றால் ஏற்றுக் கொள்ளவும். இல்லை என்றால் தள்ளி விடவும். 


(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html