Tuesday, May 21, 2013

வாலி வதம் - என்ன காரணம்

வாலி வதம் - என்ன காரணம்


காலம் காலமாய் எத்தனையோ பெரியவர்களால் அலசி ஆராயப் பட்ட விஷயம் இது.

மறைந்து நின்று அம்பு எய்தது சரி என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.வேண்டுமானால் அதற்க்கு சில காரணங்கள் சொல்லலாமே தவிர அது நூற்றுக்கு நூறு சரி என்று யாரும் சொல்ல முடியாது.

ஒரு வாதத்திற்கு அது தவறு என்றே வைத்துக் கொள்வோம்.

அந்த தவறு ஏன் நிகழ்ந்தது ? அப்படி ஒரு தவறை இராமன் செய்ததாக வால்மீகியும், கம்பனும் ஏன் சொல்ல வேண்டும் ? அதை விட்டுவிட்டு காப்பியத்தை எழுதி இருக்கலாமே ? அல்லது அதை கொஞ்சம் மாற்றி எழுதி இருக்கலாமே ?

அவர்கள் அதை அப்படியே எழுத ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும்.

என்ன, அது என்ன என்று சிந்திததில் எனக்கு கிடைத்த விடையை கீழே தந்திருக்கிறேன். இது சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனக்கு தோன்றியது - அவ்வளவுதான்.

இராமாயணம் என்றாலே இராமனின் வழி என்று பொருள் (அயனம் = பாதை. உத்தராயணம், தக்ஷினாயனம்).

அவதாரம் என்றால் இறை மேலிருந்து கீழே வந்து, கீழே உள்ளவர்களை மேலே உயர்த்த  நடந்த ஒரு சம்பவம்.

எல்லோரும் இராமனின் வழியை பின் பற்ற வேண்டும் என்பது வால்மீகி மற்றும் கம்பனின் விருப்பம்.

இராமனை ஒரு அப்பு அழுக்கு இல்லாத ஒரு நாயகனாக காட்டி இருந்தால், எல்லோரும் என்ன செய்திருப்பார்கள் ? படித்துவிட்டு, இரசித்து விட்டு போய் இருப்பார்கள். அப்படி ஒரு மனிதன் வாழவே முடியாது. அது ஒரு கற்பனை பாத்திரம். கற்பனை பாத்திரம் என்ன வேண்டும் என்றாலும் செய்யும். அதை எல்லாம் நாம் செய்ய  முடியுமா என்று கதையை படித்து விட்டு போய் விடுவார்களே தவிர  இராமன் வழி நிற்க முயல மாட்டார்கள்.

Super  Man படம் பார்க்கும் யாராவது அவன் போல் பறக்க முயல்வார்களா ? அது முடியாது என்று தெரியும். அது பார்க்க, இரசிக்க அவ்வளவுதான்.

இராமன் வழி மக்கள் நடக்க வேண்டும் என்றால் அவனும் நம்மில் ஒருவனாய் இருக்க வேண்டும். ஆசா பாசங்களுக்கு உட்பட வேண்டும், துன்பங்களை அனுபவிக்க வேண்டும், துன்பத்தில் சில மதி தடுமாறி தவறு செய்ய வேண்டும், செய்த தவறை உணர்ந்து திருந்த வேண்டும்....இவை எல்லாம்  செய்தால்  அவனும் நம்மை போல் ஒரு வாழக்கை வாழ்ந்தவன் தான் ...அவனை போல் நாமும் வாழ முடியும்  என்ற எண்ணம் மக்களுக்கு வரும்.

அதை விடுத்து அவனின் எல்லா காரியங்களும் அமானுஷ்யமான காரியங்களாக இருந்தால் மக்கள் பாடம் படிக்க மாட்டார்கள். அது வெறும் கதை என்று சொல்லிவிட்டு  போய் விடுவார்கள்.

எனவே, இராமனின் வாழ்வில் ஒரு சில தவறுகளை அந்த மகா கவிகள் வேண்டும் என்றே வைக்கிறார்கள்.

நமக்காக, நாம் உய்ய, நாம் அவன் வழி நடக்க அவன் மேல் சில பழிகளை ஏத்தி சொல்லுகிறார்கள்

சுத்த தங்கம் ஆபரணம் செய்ய உதாவது. அதில் கொஞ்சம் போல் காட்மியம் சேர்த்தால் அது  ஆபரணம் செய்ய உதவும். அது போல், இராமனின் வாழ்வில் ஒரு சில சம்பவங்களை சேர்க்கிறார்கள்.

அது நடந்ததா, நடக்க வில்லையா என்பதல்ல கேள்வி.

அந்த சம்பவம் நடந்ததாக சொல்வதற்கு காரணம் உங்கள் மேல் உள்ள அன்பு, கருணை.

நீங்கள் நல்ல வழியில் செல்ல வேண்டும். இராமன் காட்டிய வழியில் செல்ல வேண்டும்  என்ற அளவு கடந்த வாஞ்சையால் சொல்லப்பட்டது. இராமன் தங்களை மன்னிப்பான் என்று அவர்கள் நம்பி இந்த சில "தவறுகள்" என்று சொல்லப்படும் சம்பவங்களை சேர்த்து இருக்கிறார்கள் என்பது என் எண்ணம்.

அந்த உயர்ந்த நோக்கத்தை நாம் விட்டு விட்டு இராமன் தவறு செய்தானா என்று ஆராயப் புறப்பட்டு விடுகிறோம். இராமன் குற்றவாளி என்று தீர்ப்பு சொல்லும் நீதிபதி இடத்திற்கு நம்மை நாமே உயர்த்திக் கொள்கிறோம்.

நமக்காக அவன் பழி சுமந்தான் என்று நினைத்துப் பாருங்கள்.

காப்பிய நோக்கம் இராமன் வழியில் மற்றவர்கள் நடக்க வேண்டும் என்பதுதான். அதுதான் அவதார நோக்கமும் கூட.

இந்த கோணத்தில் பார்க்கும் போது, என்னை போல் அவனும் "தவறு" செய்திருக்கிறான் எனவே அவனைப்போல் நான் வாழ முடியும் என்ற நம்பிக்கை  வரும்.

வாலி அவ்வளவு கேள்வி கேட்டும் இராமன் பதில் சொல்ல வில்லை.

என்ன பதில் சொல்ல முடியும் - நான் வேண்டும் என்றே இந்த தவறை செய்தேன் என்று சொன்னால், செய்த காரியத்தின் நோக்கம் நிறைவேறாது. தவறு இல்லை என்றும் சொல்ல முடியாது.

எனவே அமைதியாக   நிற்கிறான்.

மகன் தவறு செய்யும் போது தாய் திட்டுவாள். கோபம் கொள்வாள். மனம் எல்லாம் அன்பு நிறைந்து இருக்கும். என் கோபம் பொய் என்று குழைந்தையிடம் சொல்ல  முடியாது.

வாலி அறிவாளி. கேள்வி கேட்டு கொண்டே வந்தவன், இராமனை பார்க்கிறான். அந்த பார்வையில் ஏதோ ஒன்று அவனுக்கு புரிகிறது.

என்னை பொருத்தவரை, வாலி புரிந்து கொள்கிறான். இராமன் செய்வது ஒரு நாடகம் என்று அவனுக்கும் புரிகிறது. என்ன செய்ய, அவனும் அதை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறான். சொன்னால், காரியம் கெட்டு விடும். எனவே,  பொங்கி வரும் அன்பில், உண்மை புரிந்ததால், அவன் கருணை தெரிந்ததால்  - அவன் சில வார்த்தைகள் சொல்கிறான்.

இராமன் செய்தது தவறு என்று அவன் நினைத்திருந்தால் இந்த வார்த்தைகளை  சொல்லி இருப்பானா என்று யோசித்துப்  பாருங்கள்.

அந்த வார்த்தைகள் ....



1 comment: