Friday, February 17, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - அறன்நோக்கி ஆற்றுங்கொல்

        

 திருக்குறள் - புறங்கூறாமை -  அறன்நோக்கி ஆற்றுங்கொல் 



(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


சில சமயம் நமக்கு பிடிக்காத வேலைகளைக் கூட நாம் "எல்லாம் என் தலை எழுத்து" என்று நொந்துகொண்டே செய்வோம். 


மனதுக்கு பிடிக்காத வேலையாக இருக்கும். வேறு வழியில்லாமல் செய்வோம். ஏதோ முன் பிறவி வினை என்று நினைத்துக் கொண்டு செய்வோம் அல்லவா?


அது போல, 


இந்த பூமியும், புறம் சொல்லுவாரை தாங்குகிறதாம். செய்ய வேண்டியது என்ன என்றால், நிலம் பிளந்து அவர்களை அப்படியே விழுங்கி விட வேண்டும். அப்படிச் செய்யாமல், புறம் கூறுபவர்களை நிலம் தாங்கிக் கொண்டு இருக்கக் காரணம், அது தனக்கு விதித்த அறம்  என்று நிலம் நினைபதால் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்

புன்சொ லுரைப்பான் பொறை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_4.html


(pl click the above link to continue reading)


அறன்நோக்கி = அறம் என்று கருதி 


ஆற்றுங்கொல் = பொறுத்துக் கொண்டு இருக்கிறதோ ?


வையம் = இந்த பூமி 


புறன்நோக்கிப் = மற்றவர்கள் சென்ற பின் அவர்கள் பின்னால் (புறத்தே) 


புன்சொ லுரைப்பான் = தீய சொற்களை சொல்லுபவனின் 


பொறை = சுமை 


அதாவது, அப்படிப்பட்டவர்கள் இந்த உலகிலேயே இருக்கக் கூடாது என்கிறார். இருக்கிறார்களே என்றால், பூ மகள் அறம் நோக்கி அவர்களை தாங்கி நிற்பதால் என்கிறார். அது மட்டும் இல்லை என்றால் இந்த புறம் சொல்பவர்களை நிலம் என்றோ விழுங்கி இருக்கும் என்கிறார். 


அந்த அளவுக்கு புறம் சொல்லுவது குற்றம் என்று சொல்கிறார். 


பலர் அது ஏதோ ஒரு பொழுது போக்கு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 


படிக்க வேண்டும். 


படித்தபின் மாற வேண்டும். 






(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html


அறம்கூறும் ஆக்கம்


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html


முன்இன்று பின்நோக்காச் சொல்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_16.html


புன்மையால் காணப் படும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_21.html


பிறன்பழி கூறுவான் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_25.html


பகச் சொல்லி 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_31.html


தூற்றும் மரபினார்



கம்ப இராமாயணம் - மறைகளுக்கு இறுதி ஆவார்

 கம்ப இராமாயணம் - மறைகளுக்கு இறுதி ஆவார்


மாலை பாம்பு போலத் தெரியும் உதாரணம் பலவிதங்களில், பல இடங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. எல்லோரும் அறிந்ததுதான். அந்த உதாரணத்தை கம்பர் காட்டும் விதம் பிரமிப்பு ஊட்டும்.


நாம் உலகில் பலவற்றை காண்கிறோம். 


பொருள்கள், உறவுகள், நட்பு,  இன்பம், சுகம், பகை, துன்பம், செல்வம், வறுமை என்று காண்கிறோம். 


அவை எல்லாம் உண்மையா? எது உண்மை? எது பொய் ?


செல்வம் இருந்தால் நம் துன்பங்கள் நீங்கிவிடும்.


வயதான காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை பார்த்துக் கொள்வார்கள். 


இப்படி பல "உண்மைகளை" நாம் கொண்டிருக்கிறோம். 


கம்பர் விளக்குகிறார். 


வெளிச்சம் போதுமானதாக இல்லாமல் இருப்பதால் மாலையா பாம்பா என்று தெரியவில்லை. 


கொஞ்சம் வெளிச்சம் வந்தவுடன், ஓ...இது மாலை, பாம்பு இல்லை என்று அறிந்து பெருமூச்சு விடுகிறோம். 


சற்றுப் பொறுங்கள். 


அது மாலையா? 


இல்லை, பூ, நார், நூல், ஜரிகை சேர்ந்த கலவை.  மாலை என்று பெயர் தந்திருக்கிறோம் அவ்வளவுதான். 


சரி,  நூல் என்றால் பஞ்சு. நார் பூ என்பது செடி கொடியில் இருந்து வருவது.  செடி கொடி என்பது விதை, நீர், சூரிய ஒளி, மண் சத்து இவற்றின் கலவை. 


இது இப்படி போய்க் கொண்டே இருக்கும். எங்கு போய் இது முடியும்? எது உண்மை? 


எந்த அளவில் நாம் நிறுத்துவது? 


இந்த உலகம் என்பது பஞ்ச பூதங்களின் கலவை. அடிப்படையில் பஞ்ச பூதங்கள். அவ்வளவுதான்.  


ஆனால், அது நமக்குத் தெரியுமா? மனைவி, கணவன், பிள்ளைகள், என்றால் உணர்ச்சிகள், ஞாபகங்கள் எல்லாம் சேர்ந்து வருகிறது. பஞ்ச பூதங்களின் கலவை என்று நினைக்க முடியுமா? 


முடியும். 


எப்போது என்றால் இறைவன் முன். இறை உணர்வோடு நாம் ஒன்று படும்போது இந்த வேறுபாடுகள் மறைந்து எல்லாம் ஒன்றே என்ற எண்ணம் வரும். 



பாடல் 


அலங்கலில் தோன்றும் பொய்ம்மை  அரவு என, பூதம் ஐந்தும்

விலங்கிய விகாரப்பாட்டின்  வேறுபாடு உற்ற வீக்கம்

கலங்குவது எவரைக் கண்டால் ?  அவர், என்பர்- கைவில் ஏந்தி,

இலங்கையில் பொருதார்; அன்றே,  மறைகளுக்கு இறுதி யாவார்!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_17.html


(Please click the above link to continue reading)


அலங்கலில் = மாலையில் 


தோன்றும்  = தோன்றும் 


பொய்ம்மை = பொய்மை 


அரவு என = பாம்பு என்று 


பூதம் ஐந்தும் = ஐந்து பூதங்களும் 


விலங்கிய விகாரப்பாட்டின்  = ஒன்றோடு ஒன்று சேர்ந்தும், விலகியும் தோன்றும் 


வேறுபாடு = வேறு வேறாக  தோன்றும் 


உற்ற வீக்கம் = பெரிதாகத் தோன்றும் 


கலங்குவது = மறைவது 


 எவரைக் கண்டால் ? = யாரைப் பார்த்து என்றால் 


அவர், = அவர் 


என்பர் = என்று சொல்லுவார்கள் 


கைவில் ஏந்தி = கையில் வில் ஏந்தி 


இலங்கையில் = இலங்கையில் 


பொருதார் = சண்டையிட்டார் 


அன்றே = அப்போதே 


மறைகளுக்கு = வேதங்களுக்கு 


இறுதி யாவார்! = முடிவில் உள்ளார் 


இறைவன் முன் இந்த வேறுபாடுகள் எல்லாம் மறையும்.  உயர்ந்தவன், தாழ்ந்தவன், இன்பம், துன்பம், செல்வம், வறுமை என்ற வேறுபாடுகள் எல்லாம் இறைவன் முன் மறையும்


யார் அந்த இறைவன் என்றால், அது இராமன்தான் என்கிறார் கம்பர். 




Sunday, February 12, 2023

கந்தரனுபூதி - மிடியென் றொரு பாவி

                    

 கந்தரனுபூதி - மிடியென் றொரு பாவி




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


மதம் என்பது ஒரு ஆடம்பரம் என்பார்கள் (religion is a luxury).  அடுத்த வேளைக்கு உணவு இல்லாதவன் ஆத்மா, வீடு பேறு, பிரம்மம் என்று ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டான். அவன் கவலை எல்லாம் இன்னும் சிறிது நேரத்தில் பசிக்கும். உணவுக்கு என்ன செய்வது என்பது பற்றித்தான் அவன் கவலை எல்லாம் இருக்கும். அவனிடம் போய் அத்வைதம், துவைதம் என்று சொன்னால் அவன் கேட்க மாட்டான். 


இறைவனை நாடிச் செல்வது என்றாலும், பொருள் வேண்டும். 


உணவு, உடை, வீடு, எதிர்காலம் பற்றிய கவலை எல்லாம் இல்லாமல் இருந்தால்தான் தேவாரம், திருவாசகம் எல்லாம் படிக்க மனம் ஓடும். 


வறுமை வந்து விட்டால் படித்த படிப்பு, குலம், அழகு, குடிப்பிறப்பு எல்லாம் போய் விடும். 


எல்லாம் துறந்தால் தான் இறைவனை அடைய முடியும் என்பதெல்லாம் சரியான வாதம் அல்ல. எங்கே,இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்து பாருங்கள். பசி அழைக்கிறதா, பக்தி அழைக்கிறதா என்று தெரியும். 


இரண்டு நாள் முடியும் என்றால், இருப்பது நாள் இருந்து பாருங்கள். 


கடன்காரன் வருவான், வீட்டை காலி பண்ணச் சொல்லுவான், பிள்ளைகளோடு தெருவில் நிற்க வேண்டி வரும் என்ற பயம் இருந்தால், பக்தி வருமா?


சொல்லுவது அருணகிரிநாதர். 


பாடல் 


வடிவுந் தனமு மன முங் குணமுங் 

குடியுங் குலமுங் குடி போகியவா 

அடியந் தமிலா வயில் வேலரசே 

மிடியென் றொரு பாவி வெளிப்படி னே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html


(pl click the above link to continue reading)



வடிவுந் = அழகான வடிவமும் 


தனமும் = செல்வங்களும் 


மனமுங் = மன வலிமையையும் 


குணமுங்  = நல்ல குணங்களும் 


குடியுங் = குடிப்பிறப்பும் 


குலமுங் = குலமும் 


குடி போகியவா  = முழுவதும் போய் விடும் 


அடி = தொடக்கம் 


அந் தமிலா = முடிவு இல்லாத 


வயில் வேலரசே  = கூறிய வேலை உடைய என் தலைவனே 


மிடி = வறுமை 


யென் றொரு பாவி = என்ற ஒரு பாவி 


வெளிப்படி னே  = நம்மைப் பிடித்துக் கொண்டால் 


வறுமை வந்துவிட்டால் எல்லாம் போய் விடும். 


பசி இருக்கும் இடத்தில் பக்தி இருக்காது. 


எனவேதான் வள்ளலார் அணையா அடுப்பு ஏற்றி பசி என்று வந்தவர்களுக்கு எல்லாம் உணவு அளித்தார். 


சரி, அருணகிரிநாதர் சொல்லிவிட்டார் என்பதற்காக பொருள் சம்பாதிப்பதே குறி என்று இருக்கக் கூடாது. 


அவர், செல்வத்தை சேர்க்கச் சொல்லவில்லை. 


வறுமை இல்லாமல் பார்த்துக் கொள் என்கிறார். 


இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.


துறவிக்கும் உணவு வேண்டும். 


எல்லாவற்றையும் விட்டு விட்டு காட்டுக்குப் போ என்று சொல்லவில்லை. அதற்காக வாழ்நாள் முழுவதும் பணம் சேர்த்துக் கொண்டே இரு என்றும் சொல்லவில்லை. 


பக்திப் பாடல்களுக்கு நடுவே இப்படி ஒரு ஆச்சரியமான பாடல். 





 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 


]




Friday, February 10, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - தூற்றும் மரபினார்

       

 திருக்குறள் - புறங்கூறாமை -  தூற்றும் மரபினார்


(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


நமது சுற்றத்திலோ, உறவிலோ சிலர் புறம் சொல்லுவதையே ஒரு பொழுது போக்காக கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு யாரையாவது பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. 


அப்படிப் பட்டவர்களிடம் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். 


"உறவுகளுக்குள் புறம் சொல்லுபவன் மற்றவர்களிடம் வேறு என்ன செய்ய மாட்டான் " என்கிறார். 


பாடல் 



துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்

என்னைகொல் ஏதிலார் மாட்டு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_10.html


(pl click the above link to continue reading)


துன்னியார் = நெருங்கிய சுற்றத்தார் 


குற்றமும் = செய்த குற்றங்களை 


 தூற்றும்  = அவர் இல்லாதபோது அதை மற்றவர்களிடம் சொல்லும் 


மரபினார் = பழக்கம் உள்ளவர்கள் 


என்னைகொல் = வேறு என்ன செய்ய மாட்டார்கள் 


ஏதிலார்  மாட்டு = மற்றவர்களிடம் 


மிக எளிமையான குறள். 


இதில் நாம் ஆழ்ந்து சிந்திக்க சில கருத்துக்கள் இருக்கின்றன. 


முதலாவது, சொந்ததுக்குள் புறம் சொல்லுபவன், நம்மைப் பற்றியும் பிறரிடம் இப்படித்தான் கூறுவான். அவனுக்கு அதுதான் பழக்கம் . அவன் மற்றவர்களைப் பற்றி சொல்லும் போது நாம் அதை கேட்க்கக் கூடாது. காரணம், அவன் நம்மைப் பற்றி பிறரிடம புறம் சொல்லுவான் என்பது மட்டும் அல்ல, நாம் சொல்லாததையும் சொன்னதாக பிறரிடம் சொல்லி விடுவான். ஏதோ அவன் சொல்வது எல்லாம் நமக்கு உடன்பாடு போலச் சொல்லி விடுவான். அனாவசியமாக நம் பேர் கெடும். 


இரண்டாவது, உடன் இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பற்றி இப்படி இல்லாததையும் பொல்லாததையும் சொல்பவன், பெரிய கல் நெஞ்சக் காரனாக இருப்பான். இரக்கம் இல்லாத அவன், உறவு இல்லாத மற்றவர்களிடம் என்னென்ன செய்ய மாட்டான்.  செய்வான். பெரிய குற்றங்களைச் செய்பவன் தொடர்பு நமக்கு இருந்தால் அது ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் நம்மை ஏதாவது ஒற்று சிக்கலில் கொண்டு சேர்த்து விடும். எனவே, அவனை விட்டு விலகி நிற்பது நல்லது. 


மூன்றாவது,  புறம் சொல்லுவது என்பது பெரிய தீய செயல் என்று அறியாமலேயே சிலர் ஏதோ அது ஒரு பொழுது போக்கு என்று நினைத்துச் செய்வார்கள். அது தவறு என்றே அவர்களுக்குத் தெரியாது .அப்படி தவறு செய்வதே இயல்பாகப் போய்விடுகிறது. அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். 


நான்காவது,  இதை ஏன் அவன் செய்வான் என்று சொல்ல வேண்டும்? நாமே கூட செய்து கொண்டிருக்கலாம். நம்மையும் அறியாமால் நாமே கூட புறம் சொல்லித் திரியலாம். அது மிகப் பெரிய தவறு. அந்தத் தவறு நம்மை பிற பெரிய தவறுகளுக்கு இட்டுச் செல்லும். எனவே, இந்தத் தவறு நம்மிடம் இருந்தால், அதை விட்டு விட வேண்டும். 




(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html


அறம்கூறும் ஆக்கம்


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html


முன்இன்று பின்நோக்காச் சொல்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_16.html


புன்மையால் காணப் படும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_21.html


பிறன்பழி கூறுவான் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_25.html


பகச் சொல்லி 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_31.html




Monday, February 6, 2023

கந்தரனுபூதி - உதியா மரியா

                   

 கந்தரனுபூதி - உதியா மரியா




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


கடவுள் என்றால் என்ன?  


அது ஆணா, பெண்ணா, அலியா,உருவம் உள்ளதா, அருவமானதா? 


ஒன்றும் தெரியாது. இருந்தும் உருவ வழிபாடு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 


இப்படி சிந்தித்தால் என்ன?


உருவம் என்பதை விட்டு விட்டு,, தன்மை, குணம் என்று நினைத்தால் என்ன?


அப்படி நினைத்தால், எல்லா கடவுளுக்கும் உள்ள குணங்கள் ஒரே மாதிரித்தான் இருக்கும். 


சிவன், திருமால், முருகன், விநாயாகர் என்று பல்வேறு வடிவங்களில் வழிபட்டாலும், குணம் என்று பார்க்கும் போது அது ஒன்றாகவே இருக்கும் என்று அருணகிரிநாதர் சொல்கிறார். 


பாடல் 



உதியா மரியா உணரா மறவா 

விதிமா லறியா விமலன் புதல்வா ! 

அதிகா ! அநகா ! அபயா ! அமரா 

பதிகாவல ! சூர பயங்கரனே ! 


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html


(pl click the above link to continue reading)


உதியா = உதிக்காமல் இருப்பவன். அதாவது இறைவனுக்கு தோற்றம் என்று ஒன்று கிடையாது. அது ஒரு குணம். 


மரியா  = மரித்தல் என்றால் இறத்தல். இறைவனுக்கு இறப்பு கிடையாது. முடிவு கிடையாது. பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை. 


உணரா =  உணர்தல் என்றால் நினைத்தல் 


மறவா  = மறவா என்றால் மறத்தல். நினைப்பும் இல்லை, மறப்பும் இல்லை. 


விதி = விதி, தலை எழுத்தை எழுதும் பிரமன் 


மால்  = மால் என்றால் திருமால் 


அறியா = அறியாதவன் 


விமலன் புதல்வா ! = வி என்றால் இல்லை. நாயகன் என்றால் தலைவன். வி-நாயகன் என்றால் தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன். மலம் (குற்றம்) உள்ளவன் மலன். குற்றமே இல்லாதவன் வி-மலன். குற்றமே இல்லாத சிவனின் புதல்வன். 



அதிகா ! = உயர்ந்தவன் 


அநகா  = பாவம் இல்லாதவன் 


அபயா ! = அபயம் அளிப்பவன் 


அமரா  = என்றும் இருப்பவன் 


பதிகாவல ! = தேவர் உலகை காப்பவன் 


சூர பயங்கரனே !  = சூரர்களுக்கு பயங்கரமானவன் 


இப்படி இறைவனின் குணங்களை மட்டும் அடுக்கிக் கொண்டே போகிறார். 


உருவம் இல்லாத ஒன்றை சிந்திக்க சிந்திக்க, இறை என்பது ஒன்றுதான் என்ற தெளிவு பிறக்கும். 


என் கடவுள் உயர்ந்தவர்.உன் கடவுள் தாழ்ந்தவர். என் மதம் சிறந்தது.உன் மதம் கீழானது என்ற பாகுபாடுகள் மறையும். 


பாகுபாடு மறைந்தால், மனதில் உள்ள விருப்பு வெறுப்பு குறையும். மனம் சலனப்படாது. 


சலனமற்ற மனதில் தான் உண்மை தெளிவு பிறக்கும். 


அடுத்த முறை உதயா மரியா என்று இந்தப் பாடலை பாடும் போது உருவம் அற்ற, குணங்கள் நிறைந்த அந்த ஒன்றை எண்ணிப் பாருங்கள். 





 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 


]




Tuesday, January 31, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - பகச் சொல்லி

      

 திருக்குறள் - புறங்கூறாமை -  பகச் சொல்லி 


(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


புறம் சொல்லுவது தவறு என்று தெரிந்தும் ஏன் சிலர் புறம் சொல்கிறார்கள்?


தவறு என்று தெரிந்தாலும் ஏன் திருத்திக் கொள்ள முடிவதில்லை? 


காரணம் சொல்கிறார் வள்ளுவர். 


"உறவினர்களோடு சேர்ந்து, சிரித்து பேசி மகிழ்ந்து இருக்கத் தெரியாதவர்கள்தான் உறவுகள் பிரியும்படி புறம் சொல்லித் திரிவார்கள்"


பாடல் 


பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_31.html


(pl click the above link to continue reading)


பகச்சொல்லிக் = பக என்றால் பகுத்தல், பிரித்தல். பிரியும்படி சொல்லி 


கேளிர்ப் = உறவினர்களை 


பிரிப்பர் = பிரியும்படி செய்வர் 


நகச்சொல்லி = சிரிந்துப் பேசி 


நட்பாடல் = நட்போடு இருக்கத் 


தேற்றா தவர். = தெரியாதவர், தெளியாதவர் 


இதற்கு மிக நுணுக்கமாக உரை செய்கிறார் பரிமேலழகர். 


"கேளிர் பிரிப்பர்" : கேளிர் என்றால் உறவினர். குகனை விட்டுப் பிரியும் போது இராமன் சொல்லுவான், நீ என் தம்பி, இந்த இலக்குவன் உனக்கு உன் தம்பி. இதோ இருக்கிறாளே இந்த சீதை, இவள் உன் உறவினள் (கேளிர்)"


"நன்னுதலவள் நின் கேள்" ;: அழகான நெற்றியை உடைய இவள் (சீதை) உன் கேள் (உறவினள்)


அன்னவன் உரை கேளா,

     அமலனும் உரைநேர்வான்;

‘என் உயிர் அனையாய் நீ’

     இளவல் உன் இளையான்; இந்

நன்னுதலவள் நின் கேள்;

     நளிர் கடல் நிலம் எல்லாம்

உன்னுடையது; நான் உன் தொழில்

     உரிமையின் உள்ளேன்.’


புறம் சொல்லிக் கொண்டுத் திரிந்தால் உறவு பிரியும் என்று நமக்குத் தெரிகிறது. இன்று இல்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் நம்மைப் பற்றி புறம் சொன்னது நம் காதுக்கு எட்டும். அப்படி தெரிய வரும்போது, நம்மைப் பற்றி புறம் சொன்னவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம். "அவன் எவ்வளவு மோசமானவன். நம்மைப் பற்றி எப்படி எல்லாம் சொல்லி இருக்கிறான். அவனை நம்பினேனே...அவன் முகத்தில் இனி விழிக்கக் கூடாது"  என்றுதானே நினைப்போம்?


நாம் பிறர் பற்றி புறம் கூறி இருந்தால், அவர்கள் நம்மைப் பற்றி அப்படித்தான் நினைப்பார்கள். 


உறவு பிரிந்து போய் விடும். 


பரிமேலழகர் கூறுகிறார், உறவையே பிரிப்பவன், உறவு இல்லாத அயலாரை பிரிக்க மாட்டானா என்று. 


ஒரு குடும்பத்தில் ஒற்றுமையாக அண்ணன் தம்பி இருக்கலாம். அவர்களுக்கு இடையே புறம் சொல்லி அவர்களை பிரித்து விடுவது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இல்லாதைச் சொல்லி அந்த உறவில் விரிசல் விழும்படி செய்வது, மேலதிகாரிக்கும், அவருக்கு கீழே உள்ளவருக்கும் இடையில் ஒன்றிருக்க ஒன்று சொல்லி சண்டை மூட்டி அவர்களை பிரித்து விடுவது என்று பல அயலாரையும் பிரித்து விடுவார்கள். 


இப்படி செய்து கொண்டு திரிபவர்கள் இறுதியில் யாருமே அவருக்கு நட்போ, உறவோ இல்லாமல் தனித்து விடப் படுவார்கள் என்கிறார். 


கேளிர் பிரிப்பர் என்றால் கேளிரையே பிரிப்பவன் அயலாரை பிரிக்க மாட்டானா என்று கேட்கிறார். 


"நட்பாடல் தேற்றா தவர்" : தேற்றாதவர். என்றால் தெரியாதவர். நடிப்பின் நன்மை, சுகம், அருமை தெரியாதவர். நட்பு எவ்வளவு உயர்ந்தது என்று தெரியாதவர்கள்தான் அப்படிச் செய்வார்கள் என்கிறார். வள்ளுவர் நட்புக்கு மிக அதிக முக்கியத்வம் கொடுக்கிறார். ஐந்து அதிகாரம் எழுதி இருக்கிறார் நட்பு பற்றி. 


இங்கே ஒரு இலக்கண குறிப்பு தருகிறார் பரிமேலழகர். 


தமிழில் தன் வினை, பிற வினை என்று இரண்டு உண்டு. 


நான் படித்தேன் என்பது தன் வினை. 


நான் படிப்பித்தேன் என்பது பிற வினை. 


இங்கே, நட்பாடல் தேறாதவர் என்று இருக்க வேண்டும். (தன் வினை). தேற்றாதவர் என்று பிற வினையாக வந்திருக்கிறது. அப்படி வந்தாலும், அதை தன் வினையாகக் கொள்ள வேண்டும் என்கிறார். அதற்கு மேற்கோளும் காட்டுகிறார். 


தமிழில் தொக்கி நிற்பது என்று ஒரு இலக்கணம் உண்டு. தொக்கி என்றால் மறைந்து நிற்பது.


சில சமயம் சில சொற்கள் மறைந்து இருந்து பொருள் தரும். 


கடைக்குப் போய் கத்தரிக்காய் வாங்கி வரச் சொன்னேனே வாங்கி வந்தாயா என்று கேட்டால், 


கத்திரிக்காயும் வாங்கி வந்தேன்


என்று சொன்னால், அந்த 'உம்' என்ற உம்மை கத்திரிகாயோடு சேர்த்து வேறு எதையோ வாங்கி வந்தான் என்று தெரிகிறது அல்லவா?


சில சமயம் அந்த உம்மை தொக்கி நிற்கும். 


"கேளிர் பிரிப்பர்" என்பதில் கேளிரையும் பிரிப்பர் என்று ஒரு உம்மை இருக்கிறது. ஆனால், அது வெளிப்படாமல் தொக்கி நிற்கிறது என்கிறார். 


கேளிரையும் பிரிப்பார் என்றால் அயலாரையும் பிரிப்பார் என்பது சொல்லாமல் விளங்கும். 







(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html


அறம்கூறும் ஆக்கம்


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html


முன்இன்று பின்நோக்காச் சொல்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_16.html


புன்மையால் காணப் படும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_21.html


பிறன்பழி கூறுவான் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_25.html




Sunday, January 29, 2023

கந்தரனுபூதி - யாமோதிய கல்வியும் பாகம் 2

                  

 கந்தரனுபூதி -  யாமோதிய கல்வியும் பாகம் 2




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 




பாடல் 



யாமோதிய கல்வியும் எம்மறிவுந்

 தாமேபெறவேலவர் தந்ததனாற்

 பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்

 நாமேல் நடவீர் நடவீர் இனியே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

(pl click the above link to continue reading)


யாமோதிய = யாம் ஓதிய. ஓதுதல் என்றால் திரும்பச் திரும்பச் சொல்லுதல். மனப்பாடம் செய்தல். 


கல்வியும் = கல்வியும் 


எம்மறிவுந் = கல்வியில் இருந்து வரும் அறிவும் 


 தாமே = நாமே 


பெற = பெற்றுக் கொள்ள 


வேலவர் = வேலைக் கொண்டவர் (முருகர்) 


தந்ததனாற் = தந்த அதனால் 


 பூமேல் = பூமியின் மேல். அதில் உள்ள உயிர்கள், பொருள்கள் மேலும் 


மயல்போய் = மையல் போய். ஆசை போய். 


அற = அறம் 


மெய்ப் = உண்மை 


புணர்வீர் = சென்று அடைவீர் 



 நாமேல் = நாவின் மேல் 


நடவீர் நடவீர் இனியே! = செல்லுங்கள், செல்லுங்கள் இனியே. அதாவது அவன் திருநாமத்தை சொல்லிக் கொண்டு செல்லுங்கள் 


" தாமேபெறவேலவர் தந்ததனாற்"


என்ற இந்த வரிக்கு என்ன அர்த்தம்? பல உரைகளில் "தாமே" என்பதை "நாமே" என்று எடுத்துக் கொண்டு உரை செய்கிறார்கள். அது நாமே என்றால் ஏன் அருணகிரிநாதர் அப்படியே சொல்லி இருக்கலாமே? தாமே என்பதற்கும் நாமே என்பதற்கும் ஒரு யாப்பிலக்கண வேறுபாடு ஒன்றும் இல்லையே?


எனவே, எனக்குத் தோன்றியதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். சரியா தவறா என்று தெரியாது. தவறென்றால், ஆன்றோர் பொறுக்க.


இதற்கு முந்தைய வரியில் 


"நாமோதிய கல்வியும் அறிவும்" என்று சொல்கிறார். 


கல்வி வேறு, அறிவு வேறு என்று தெரிகிறது அல்லவா?


கல்வி என்பது வெளியில் இருந்து உள்ளே செல்வது. அறிவு என்பது உள்ளே இருந்து வெளியில் வருவது. 


நாம் பிறக்கும் போதே ஏதோ ஒரு அறிவுடன் பிறக்கிறோம். நாம் கற்கும் கல்வி அந்த அறிவை வெளியே கொண்டு வரும். 


வயற்காட்டில் நீர் பாய்சுபவர்கள் முதலில் அந்த எந்திரதுகுள் ஒரு சொம்பு நீரை விட்டு அந்த அந்த எந்திரத்தை ஒரு சுற்று சுற்றி விடுவார்கள். அது டப் டப் என்று தொடங்கி கிணற்றில் உள்ள நீரை வெளியே கொண்டு வரும். 


ஆங்கிலத்தில் priming the pump என்று சொல்லுவார்கள். 


முதலில் கொஞ்சம் நீரை விட வேண்டும். பின் அது உள்ளுக்கு இருக்கும் நீரை வெளியே கொண்டு வரும். 


அது போல, நாம் கற்ற கல்வி, அறிவாக வெளியே வர வேண்டும். 


சரி, அந்த வரிக்கும்,இந்த வரிக்கும் என்ன சம்பந்தம். 


ஒரு வீட்டில் அப்பாவும், அம்மாவும் பெரிய படிப்பு படித்து இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து இருக்கும். அதற்கு ஒரு வயது ஆகும் போது, அவர்கள் அந்த குழந்தைக்கு அம்மா, அத்தை, அப்பா என்று சொல்லித் தருவார்கள். அந்தக் குழந்தையும், தட்டுத் தடுமாறி மழலை மொழியில் அம்மம்மா, அப்பப்பா என்று சொல்லும். 


பெற்றோர் பூரித்துப் போவார்கள். இன்னிக்கு என் பிள்ளை அம்மான்னு சொல்லுச்சு என்று போன் போட்டு அவர்கள் அம்மா அப்பாவிடம் சொல்லி மகிழ்வார்கள். 


அம்மா அப்பா என்று சொல்லுவது என்ன பெரிய கடினமான செயலா? அவர்களுக்குத் தெரியாதா? அவர்கள்தானே சொல்லித் தந்தார்கள். 


இருந்தும் பிள்ளை சொன்னால் அது பெரிய மகிழ்ச்சி. 


அது போல இறைவன் தந்த அறிவும், கல்வியும், அவனை நாம் போற்ற, அவனை நாம் அறிந்து கொள்ள, அவன் அருளியது.  அவனை அறிந்து, அவனை அடைய அவன் நமக்குத் தந்தது. 


நாமே அவனிடம் அடைக்கலம் ஆகும் போது, நம் கல்வியும், அறிவும் அவனை சேர்ந்து விடுகிறதுதானே. 


அவன் கொடுத்தான், அவனே பெற்றுக் கொண்டான். 


தாமே பெற வேலவர் தந்ததனால் 


அதாவது, அறிவும், கல்வியும் இறைவனை அடைய வழி செய்ய வேண்டும். 


இதையே வள்ளுவரும்


கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் 


என்பார்.


கல்வி, உயிர்களை இறைவனிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 


மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில்,


அம்மா, பிள்ளைக்கு அப்பாவை அறிமுகம் செய்கிறாள். 


அப்பா, பிள்ளைக்கு குருவை அறிமுகம் செய்கிறார். 


குரு, பிள்ளைக்கு இறைவனை அறிமுகம் செய்கிறார். 


குரு தரும் கல்வி இறைவனிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 


இது என் கருத்து. சரியோ, தவறோ தெரியாது. 


சரி என்றால் நல்லது. 


இல்லை என்றால் தள்ளி விடவும். 



 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 


]