Tuesday, January 31, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - பகச் சொல்லி

      

 திருக்குறள் - புறங்கூறாமை -  பகச் சொல்லி 


(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


புறம் சொல்லுவது தவறு என்று தெரிந்தும் ஏன் சிலர் புறம் சொல்கிறார்கள்?


தவறு என்று தெரிந்தாலும் ஏன் திருத்திக் கொள்ள முடிவதில்லை? 


காரணம் சொல்கிறார் வள்ளுவர். 


"உறவினர்களோடு சேர்ந்து, சிரித்து பேசி மகிழ்ந்து இருக்கத் தெரியாதவர்கள்தான் உறவுகள் பிரியும்படி புறம் சொல்லித் திரிவார்கள்"


பாடல் 


பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_31.html


(pl click the above link to continue reading)


பகச்சொல்லிக் = பக என்றால் பகுத்தல், பிரித்தல். பிரியும்படி சொல்லி 


கேளிர்ப் = உறவினர்களை 


பிரிப்பர் = பிரியும்படி செய்வர் 


நகச்சொல்லி = சிரிந்துப் பேசி 


நட்பாடல் = நட்போடு இருக்கத் 


தேற்றா தவர். = தெரியாதவர், தெளியாதவர் 


இதற்கு மிக நுணுக்கமாக உரை செய்கிறார் பரிமேலழகர். 


"கேளிர் பிரிப்பர்" : கேளிர் என்றால் உறவினர். குகனை விட்டுப் பிரியும் போது இராமன் சொல்லுவான், நீ என் தம்பி, இந்த இலக்குவன் உனக்கு உன் தம்பி. இதோ இருக்கிறாளே இந்த சீதை, இவள் உன் உறவினள் (கேளிர்)"


"நன்னுதலவள் நின் கேள்" ;: அழகான நெற்றியை உடைய இவள் (சீதை) உன் கேள் (உறவினள்)


அன்னவன் உரை கேளா,

     அமலனும் உரைநேர்வான்;

‘என் உயிர் அனையாய் நீ’

     இளவல் உன் இளையான்; இந்

நன்னுதலவள் நின் கேள்;

     நளிர் கடல் நிலம் எல்லாம்

உன்னுடையது; நான் உன் தொழில்

     உரிமையின் உள்ளேன்.’


புறம் சொல்லிக் கொண்டுத் திரிந்தால் உறவு பிரியும் என்று நமக்குத் தெரிகிறது. இன்று இல்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் நம்மைப் பற்றி புறம் சொன்னது நம் காதுக்கு எட்டும். அப்படி தெரிய வரும்போது, நம்மைப் பற்றி புறம் சொன்னவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம். "அவன் எவ்வளவு மோசமானவன். நம்மைப் பற்றி எப்படி எல்லாம் சொல்லி இருக்கிறான். அவனை நம்பினேனே...அவன் முகத்தில் இனி விழிக்கக் கூடாது"  என்றுதானே நினைப்போம்?


நாம் பிறர் பற்றி புறம் கூறி இருந்தால், அவர்கள் நம்மைப் பற்றி அப்படித்தான் நினைப்பார்கள். 


உறவு பிரிந்து போய் விடும். 


பரிமேலழகர் கூறுகிறார், உறவையே பிரிப்பவன், உறவு இல்லாத அயலாரை பிரிக்க மாட்டானா என்று. 


ஒரு குடும்பத்தில் ஒற்றுமையாக அண்ணன் தம்பி இருக்கலாம். அவர்களுக்கு இடையே புறம் சொல்லி அவர்களை பிரித்து விடுவது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இல்லாதைச் சொல்லி அந்த உறவில் விரிசல் விழும்படி செய்வது, மேலதிகாரிக்கும், அவருக்கு கீழே உள்ளவருக்கும் இடையில் ஒன்றிருக்க ஒன்று சொல்லி சண்டை மூட்டி அவர்களை பிரித்து விடுவது என்று பல அயலாரையும் பிரித்து விடுவார்கள். 


இப்படி செய்து கொண்டு திரிபவர்கள் இறுதியில் யாருமே அவருக்கு நட்போ, உறவோ இல்லாமல் தனித்து விடப் படுவார்கள் என்கிறார். 


கேளிர் பிரிப்பர் என்றால் கேளிரையே பிரிப்பவன் அயலாரை பிரிக்க மாட்டானா என்று கேட்கிறார். 


"நட்பாடல் தேற்றா தவர்" : தேற்றாதவர். என்றால் தெரியாதவர். நடிப்பின் நன்மை, சுகம், அருமை தெரியாதவர். நட்பு எவ்வளவு உயர்ந்தது என்று தெரியாதவர்கள்தான் அப்படிச் செய்வார்கள் என்கிறார். வள்ளுவர் நட்புக்கு மிக அதிக முக்கியத்வம் கொடுக்கிறார். ஐந்து அதிகாரம் எழுதி இருக்கிறார் நட்பு பற்றி. 


இங்கே ஒரு இலக்கண குறிப்பு தருகிறார் பரிமேலழகர். 


தமிழில் தன் வினை, பிற வினை என்று இரண்டு உண்டு. 


நான் படித்தேன் என்பது தன் வினை. 


நான் படிப்பித்தேன் என்பது பிற வினை. 


இங்கே, நட்பாடல் தேறாதவர் என்று இருக்க வேண்டும். (தன் வினை). தேற்றாதவர் என்று பிற வினையாக வந்திருக்கிறது. அப்படி வந்தாலும், அதை தன் வினையாகக் கொள்ள வேண்டும் என்கிறார். அதற்கு மேற்கோளும் காட்டுகிறார். 


தமிழில் தொக்கி நிற்பது என்று ஒரு இலக்கணம் உண்டு. தொக்கி என்றால் மறைந்து நிற்பது.


சில சமயம் சில சொற்கள் மறைந்து இருந்து பொருள் தரும். 


கடைக்குப் போய் கத்தரிக்காய் வாங்கி வரச் சொன்னேனே வாங்கி வந்தாயா என்று கேட்டால், 


கத்திரிக்காயும் வாங்கி வந்தேன்


என்று சொன்னால், அந்த 'உம்' என்ற உம்மை கத்திரிகாயோடு சேர்த்து வேறு எதையோ வாங்கி வந்தான் என்று தெரிகிறது அல்லவா?


சில சமயம் அந்த உம்மை தொக்கி நிற்கும். 


"கேளிர் பிரிப்பர்" என்பதில் கேளிரையும் பிரிப்பர் என்று ஒரு உம்மை இருக்கிறது. ஆனால், அது வெளிப்படாமல் தொக்கி நிற்கிறது என்கிறார். 


கேளிரையும் பிரிப்பார் என்றால் அயலாரையும் பிரிப்பார் என்பது சொல்லாமல் விளங்கும். 







(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html


அறம்கூறும் ஆக்கம்


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html


முன்இன்று பின்நோக்காச் சொல்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_16.html


புன்மையால் காணப் படும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_21.html


பிறன்பழி கூறுவான் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_25.html




Sunday, January 29, 2023

கந்தரனுபூதி - யாமோதிய கல்வியும் பாகம் 2

                  

 கந்தரனுபூதி -  யாமோதிய கல்வியும் பாகம் 2




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 




பாடல் 



யாமோதிய கல்வியும் எம்மறிவுந்

 தாமேபெறவேலவர் தந்ததனாற்

 பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்

 நாமேல் நடவீர் நடவீர் இனியே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

(pl click the above link to continue reading)


யாமோதிய = யாம் ஓதிய. ஓதுதல் என்றால் திரும்பச் திரும்பச் சொல்லுதல். மனப்பாடம் செய்தல். 


கல்வியும் = கல்வியும் 


எம்மறிவுந் = கல்வியில் இருந்து வரும் அறிவும் 


 தாமே = நாமே 


பெற = பெற்றுக் கொள்ள 


வேலவர் = வேலைக் கொண்டவர் (முருகர்) 


தந்ததனாற் = தந்த அதனால் 


 பூமேல் = பூமியின் மேல். அதில் உள்ள உயிர்கள், பொருள்கள் மேலும் 


மயல்போய் = மையல் போய். ஆசை போய். 


அற = அறம் 


மெய்ப் = உண்மை 


புணர்வீர் = சென்று அடைவீர் 



 நாமேல் = நாவின் மேல் 


நடவீர் நடவீர் இனியே! = செல்லுங்கள், செல்லுங்கள் இனியே. அதாவது அவன் திருநாமத்தை சொல்லிக் கொண்டு செல்லுங்கள் 


" தாமேபெறவேலவர் தந்ததனாற்"


என்ற இந்த வரிக்கு என்ன அர்த்தம்? பல உரைகளில் "தாமே" என்பதை "நாமே" என்று எடுத்துக் கொண்டு உரை செய்கிறார்கள். அது நாமே என்றால் ஏன் அருணகிரிநாதர் அப்படியே சொல்லி இருக்கலாமே? தாமே என்பதற்கும் நாமே என்பதற்கும் ஒரு யாப்பிலக்கண வேறுபாடு ஒன்றும் இல்லையே?


எனவே, எனக்குத் தோன்றியதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். சரியா தவறா என்று தெரியாது. தவறென்றால், ஆன்றோர் பொறுக்க.


இதற்கு முந்தைய வரியில் 


"நாமோதிய கல்வியும் அறிவும்" என்று சொல்கிறார். 


கல்வி வேறு, அறிவு வேறு என்று தெரிகிறது அல்லவா?


கல்வி என்பது வெளியில் இருந்து உள்ளே செல்வது. அறிவு என்பது உள்ளே இருந்து வெளியில் வருவது. 


நாம் பிறக்கும் போதே ஏதோ ஒரு அறிவுடன் பிறக்கிறோம். நாம் கற்கும் கல்வி அந்த அறிவை வெளியே கொண்டு வரும். 


வயற்காட்டில் நீர் பாய்சுபவர்கள் முதலில் அந்த எந்திரதுகுள் ஒரு சொம்பு நீரை விட்டு அந்த அந்த எந்திரத்தை ஒரு சுற்று சுற்றி விடுவார்கள். அது டப் டப் என்று தொடங்கி கிணற்றில் உள்ள நீரை வெளியே கொண்டு வரும். 


ஆங்கிலத்தில் priming the pump என்று சொல்லுவார்கள். 


முதலில் கொஞ்சம் நீரை விட வேண்டும். பின் அது உள்ளுக்கு இருக்கும் நீரை வெளியே கொண்டு வரும். 


அது போல, நாம் கற்ற கல்வி, அறிவாக வெளியே வர வேண்டும். 


சரி, அந்த வரிக்கும்,இந்த வரிக்கும் என்ன சம்பந்தம். 


ஒரு வீட்டில் அப்பாவும், அம்மாவும் பெரிய படிப்பு படித்து இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து இருக்கும். அதற்கு ஒரு வயது ஆகும் போது, அவர்கள் அந்த குழந்தைக்கு அம்மா, அத்தை, அப்பா என்று சொல்லித் தருவார்கள். அந்தக் குழந்தையும், தட்டுத் தடுமாறி மழலை மொழியில் அம்மம்மா, அப்பப்பா என்று சொல்லும். 


பெற்றோர் பூரித்துப் போவார்கள். இன்னிக்கு என் பிள்ளை அம்மான்னு சொல்லுச்சு என்று போன் போட்டு அவர்கள் அம்மா அப்பாவிடம் சொல்லி மகிழ்வார்கள். 


அம்மா அப்பா என்று சொல்லுவது என்ன பெரிய கடினமான செயலா? அவர்களுக்குத் தெரியாதா? அவர்கள்தானே சொல்லித் தந்தார்கள். 


இருந்தும் பிள்ளை சொன்னால் அது பெரிய மகிழ்ச்சி. 


அது போல இறைவன் தந்த அறிவும், கல்வியும், அவனை நாம் போற்ற, அவனை நாம் அறிந்து கொள்ள, அவன் அருளியது.  அவனை அறிந்து, அவனை அடைய அவன் நமக்குத் தந்தது. 


நாமே அவனிடம் அடைக்கலம் ஆகும் போது, நம் கல்வியும், அறிவும் அவனை சேர்ந்து விடுகிறதுதானே. 


அவன் கொடுத்தான், அவனே பெற்றுக் கொண்டான். 


தாமே பெற வேலவர் தந்ததனால் 


அதாவது, அறிவும், கல்வியும் இறைவனை அடைய வழி செய்ய வேண்டும். 


இதையே வள்ளுவரும்


கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் 


என்பார்.


கல்வி, உயிர்களை இறைவனிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 


மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில்,


அம்மா, பிள்ளைக்கு அப்பாவை அறிமுகம் செய்கிறாள். 


அப்பா, பிள்ளைக்கு குருவை அறிமுகம் செய்கிறார். 


குரு, பிள்ளைக்கு இறைவனை அறிமுகம் செய்கிறார். 


குரு தரும் கல்வி இறைவனிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 


இது என் கருத்து. சரியோ, தவறோ தெரியாது. 


சரி என்றால் நல்லது. 


இல்லை என்றால் தள்ளி விடவும். 



 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 


]




Friday, January 27, 2023

கம்ப இராமாயணம் - அறத்தின் ஊங்கு இனிக் கொடிது

கம்ப இராமாயணம் -  அறத்தின் ஊங்கு இனிக் கொடிது


இராமனுக்கு முடி சூட்டுவது என்று முடிவாகி விட்டது. தயரதனுக்கு கீழே உள்ள அமைச்சர்கள் எல்லோரும் அது சரியான முடிவு என்று ஏற்றுக் கொண்டு விட்டார்கள். வசிட்டரும் அது சரி என்று சொல்லி விட்டார். .


இறுதியாக முதல் அமைச்சர் சுமந்திரன் தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிறான். 


அதுதான் சூழ்நிலை. அதை மனதில் நாம் கற்பனை செய்து கொள்ள வேண்டும். 


அற வழியில் வாழ்வது எளிதா? அல்லது அறம் அல்லாத வழியில் வாழ்வது எளிதா? என்று கேட்டால், அற வழியில் வாழ்வது மிகக் கடினம். 


பொய், புரட்டு, முகஸ்துதி, முன்னுக்கு பின் முரணாகப் பேசுவது, தவறென்றாலும், பெரிய ஆள் சொன்னால் சரி என்று ஏற்றுக் கொள்வது, என்பதெல்லாம் எளிதாக இருக்கிறது. 


நீதி, நேர்மை, நடு நிலைமை, உண்மை, தர்மம் என்று வாழ்வது கடினமாக இருக்கிறது. 


நினைத்துப் பாருங்கள், பொய்யே சொல்ல மாட்டேன் என்று ஒருவன் வாழ முடியுமா? 


இலஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று இருக்க முடியுமா?  நமக்கு வேலை நடக்கும் என்றால் கொஞ்சம் பணம் கொடுத்து சாதித்துக் கொள்வதுதானே புத்திசாலித்தனம். 


இறைவனைப்  பார்க்கக் கோவிலுக்குப் போகும் போதும், தனி வழி, சிறப்பு வழி, சிபாரிசு கடிதம் என்று கொடுத்து எளிதாக போய் வந்து விடுகிறோம். நீண்ட வரிசையில் நிற்பது கடினமாக இருக்கிறது. 


குறுக்கு வழி சுகமாக இருக்கிறது. எளிதாக இருக்கிறது. நேர் வழி கடினமாக இருக்கிறது. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


சுமந்திரன் சொல்கிறான் 


"அரசரே, ,நீங்கள் இராமனுக்கு முடி சூட்டப் போகிறீர்கள் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம் நீங்கள் முடி துறக்கப் போகிறீர்கள் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அதற்காக உங்கள் குல மரபை விடுவதும் சரி அல்ல. அற வழியில் செல்வதைப் போல கொடுமையான ஒன்று இல்லை போலும்"


என்றான். 


இறுதி வரி தூக்கி வாரிப் போடுகிறது. அற வழியில் செல்வதைப் போல கொடுமையான ஒன்று இல்லை போலும் என்கிறான். 


இலஞ்சம் வாங்கி சம்பாதிப்பவன் காரு, வீடு என்று மகிழ்ச்சியாக இருக்கிறான். நேர்மையாக வாழ்பவன் அடிப்படை தேவைகளுகுக் கூட துன்பப் படுகிறான். அதுதானே உலக இயற்க்கையாக இருக்கிறது?


பாடல் 



“உறத் தகும் அரசு இராமற்கு என்று

    உவக்கின்ற மனத்தைத்

துறத்தி நீ எனும் சொல் சுடும்;

    நின்குலத் தொல்லோர்

மறத்தல் செய்கிலாத் தருமத்தை

    மறப்பதும் வழக்கு அன்று;

அறத்தின் ஊங்கு இனிக் கொடிது எனல்

    ஆவது ஒன்று யாதே?‘‘



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_27.html


(please click the above link to continue reading)


“உறத் தகும் = பொருத்தமானது 


அரசு இராமற்கு = அரசை இராமனுக்குத் தருவது 


என்று = என்று 


உவக்கின்ற மனத்தைத் = மகிழ்ச்சி கொள்கின்ற மனத்தை 


துறத்தி நீ = நீ (தயரதன்) முடி துறக்கப் போகிறாய் 


எனும் சொல் சுடும்; = என்ற சொல் சுடும் 


நின்குலத் தொல்லோர் = உன் குலத்தில் வந்த முன்னோர் 


மறத்தல் = மறக்காமல் 


செய்கிலாத் தருமத்தை = தொடர்ந்து செய்து வந்த தர்மத்தை 


மறப்பதும் வழக்கு அன்று; = நீ மறப்பது என்பது சரி அல்ல 


அறத்தின் ஊங்கு = அற வழியில் செல்வது 


இனிக் = இனிமேல் 


கொடிது எனல் =  கொடுமையானது என்று சொன்னால் 


ஆவது ஒன்று யாதே?‘‘ = வேறு என்னதான் செய்வது 


அற வழியில் செல்வது கொடுமையான செயல் என்றால், வேறு என்னதான் செய்வது என்று கேட்கிறான். 


சரியாகப் படிக்காமல், சரிதான் கம்பரே சொல்லிவிட்டார், இனி அற வழியில் செல்ல வேண்டாம் என்று முடிவு எடுக்கக் கூடாது. 


அற வழியில் செல்வது கடினம்தான். மறுப்பதற்கு இல்லை. ஆனால், அதுவே கடினம் என்றால், அறம் அல்லாத வழியில் செல்வது அது எவ்வளவு பெரிய கொடுமையாக இருக்கும் என்று முடிக்கிறான். 


அற வழியே கடினம் என்றால் பின் என்னதான் செய்வது என்று கேட்டால், ஒன்றும் செய்ய வேண்டாம். கடினமாக இருந்தாலும் அற வழியில்தான் போக வேண்டும். அதுதான் சரி. 


படிப்பதற்கு செலவாகும். உண்மைதான். அதற்காக படிக்காமல் இருந்தால் செலவு குறையுமா?  நாள் வாழ் நாள் எல்லாம் ஒரு பைசா கூட படிப்புக்கு என்று செல்வழித்ததே கிடையாது என்று ஒருவன் சொன்னால் அவனைப் பற்றி என்ன நினைக்கத் தோன்றும்?  


உடற் பயிற்சி கடினம்தான். அதற்காக சாப்பிட்டு சாப்பிட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தால்?


கடினமாக இருந்தாலும், அற வழியில்தான் செல்ல வேண்டும். ஏன் என்றால், அறம் அல்லாத வழி அதைவிட மிக மிக கடினமான ஒன்று. 


எந்த இடத்தில் அறத்தை போதிக்கிறார் பாருங்கள். 


ஒரு பாடலைக் கூட வேண்டாம் என்று தள்ளி விட்டுப் போய் விட முடியாது. 


அவ்வளவு பெரிய புதையல் கம்ப இராமாயணம். 




Thursday, January 26, 2023

கம்ப இராமாயணம் - நினைக்கும்தோறும் திடுக்கிடும்

கம்ப இராமாயணம் - நினைக்கும்தோறும் திடுக்கிடும் 


வீடணன் அடைக்கலம் அடைந்து விட்டான். அவனிடம் இராவணனின் படை பலம், துணை பலம் என்று எல்லாவற்றையும் இராமன் கேட்டு அறிந்து கொள்கிறான். இலங்கைக்குப் போக சேது பந்தனம் அமைக்கச் சொல்கிறான். 


இராமன் என்ன செய்கிறான் என்று அறிந்து வர இராவணன் ஒற்றர்களை அனுப்புகிறான். 


அந்த ஒற்றர்களை வீடணன் அடையாளம் கண்டு சொல்லி விடுகிறான். வானரங்கள் அந்த ஒற்றர்களை "கவனிக்கிறார்கள்". இராமன் அவர்களை விசாரித்து பின் அவர்களை விட்டு விடுகிறான். 


அவர்கள் இராவணனிடம் போகிறார்கள். 


அவர்கள் வந்து சொன்னதை கம்பன் சொல்லும் அழகு இருக்கிறதே, அடடா. 


"ஒற்றர்கள் உள்ளே வருகிறார்கள். வந்து இராவணனின் பாதங்களை வணங்குகிறார்கள்.  பனை மரம் போன்ற வலுவான கைகளைக் கொண்ட வானரங்களை நினைத்துப் பார்க்கிறார்கள். நினைக்கும் போதெலாம் அவர்கள் மனம் திடுக்கிடுகிறது. கொஞ்சம் செருமிக் கொள்கிறார்கள். இருமல் வருகிறது. இருமினால் இரத்தம் வருகிறது"


எந்த அளவுக்கு பயந்திருப்பார்கள் !


பாடல் 


மனைக்கண் வந்து, அவன் பாதம் வணங்கினார் - 

பனைக் கை வன் குரங்கின் படர் சேனையை 

நினைக்கும்தோறும் திடுக்கிடும் நெஞ்சினார், 

கனைக்கும் தோறும் உதிரங்கள் கக்குவார்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_26.html


(Please click the above link to continue reading)


மனைக்கண் வந்து = இராவணன் இருக்கும் இடத்துக்கு (ஒற்றர்கள்) வந்து  


அவன் பாதம் வணங்கினார் = அவனை வணங்கி 


பனைக் கை = பனை மரம் போல பருத்த, உறுதியான கைகளைக் கொண்ட 


வன் குரங்கின் = வலிமையான குரங்குகளின் 


படர் சேனையை  = பெரிய சேனையை 


நினைக்கும்தோறும் = மனதில் நினைத்து பார்க்கும் போதெல்லாம் 


திடுக்கிடும் நெஞ்சினார்,  = திடுக்கிடும் மனதினை உடையவராய் 


கனைக்கும் தோறும் = இருமும் பொழுதெல்லாம்  


உதிரங்கள் கக்குவார் = இரத்தம் கக்கினார்கள் 


இன்று சினிமா படம் எடுக்கும் போது கதை, திரைக் கதை என்று இரண்டு சொல்லுவார்கள். 


இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?


கதாநாயகன் பெரிய பணக்காரன். அவனிடம் நிறைய சொத்து இருக்கிறது. அவனுக்கு கீழே பலர் வேலை செய்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு போவது கதை. 


கதாநாயகன் கப்பல் போல ஒரு பெரிய காரில் வந்து இறங்குகிறான். அவனுக்கு ஒருவன் கார் கதவை திறந்து விடுகிறான். அவன் ஒரு பெரிய பங்களாவுக்குள் நுழைகிறான். அவனுக்கு ஒருவன் கதவு திறந்து விடுகிறான். 


ஒரு வார்த்தை சொல்லவில்லை.  நமக்கு புரிந்து விடுகிறது கதாநயாகன் பெரிய பணக்காரன் என்று. அது திரைக் கதை. திரையில் பார்த்து கதையைப் புரிந்து கொள்ள வைப்பது. 


இங்கே கம்பன் திரைக் கதை வடிக்கிறான். 


ஒற்றர்கள் ஒன்றும் சொல்லவில்லை. 


நடுங்கிறார்கள், இருமினால் இரத்தம் தெறிக்கிறது. அவ்வளவுதான். 


அதில் இருந்து அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள். அங்கே என்ன நடந்திருக்கும் என்று அந்த அவையில் உள்ளவர்கள் அறிந்து கொள்ள முடியும் அல்லவா?


அது தான் கம்பன். 





Wednesday, January 25, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - பிறன்பழி கூறுவான்

     

 திருக்குறள் - புறங்கூறாமை -  பிறன்பழி கூறுவான் 


(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


கெட்ட பழக்கங்களை விட வேண்டும் என்று எல்லோருக்கும் தெரியும். புகை பிடிக்கக் கூடாது, நொறுக்கு தீனி தின்னக் கூடாது, சோம்பேறியாக அதிகாலையில் தூங்கக் கூடாது என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தும் கெட்ட பழக்கங்களை விட முடிவதில்லை. 


காரணம் என்ன?


ஒன்று பழகி விட்டது.  மற்றது எப்படி விடுவது என்று தெரிவதில்லை. 


புறம் கூறுவது கெட்ட பழக்கம்தான். அதை எப்படி விடுவது?


அதற்கும் ஒரு வழி சொல்கிறார் வள்ளுவர். 


"நீ ஒருவனைப் பற்றி அவன் இல்லாத போது தவறாக ஒன்றைச் சொன்னால், அதை என்றாவது அவன் அறிவான். அப்படி அறியும் போது, அவனுக்கு கோபம் வரும். என்னைப் பற்றி அப்படியா சொன்னனாய் என்று கோபம் கொண்டு,  உன் வாழ்வில் நடந்த ஏதேனும் ஒரு தவறான சம்பவத்தை தேடிக் கண்டு பிடித்து, உனக்கு மறைவாக இல்லை, உன் முகத்தின் முன் உனக்கு எவ்வளவு வலி தர முடியுமோ அவ்வளவு வலியைத் தருவான். எனவே, புறம் சொல்லாதே"


என்று எச்சரிக்கிறார். 


பாடல் 



பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

திறன்தெரிந்து கூறப் படும்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_25.html


(pl click the above link to continue reading)


பிறன்பழி = மற்றவனின் தவறை 


கூறுவான்  = புறம் கூறுவான் (அவன் இல்லாதபோது ஸொல்லுவான்) 


தன்பழி = தன்னுடைய தவறை 


யுள்ளும் = பலவற்றில் 


திறன்தெரிந்து = பெரிதான ஒன்றை 


கூறப் படும் = எடுத்துக் கூறப் படும் 


குறளை நேரடியாகப் படித்தால் பொருள் விளங்காது. 


பிறன் பழி கூறுவான் - புரிகிறது. 


தன் பழியுள்ளும் திறன் அறிந்து கூறப்படும் என்றால் என்ன?  சொல்லுக்குப் பொருள் விளங்குகிறது. ஆனால், அதன் உள் அர்த்தம் விளங்கவில்லை. 


பரிமேலழகர் இல்லை என்றால் நமக்கு இதெல்லாம் புரியாமலேயே போய் இருக்கும். 


பகுதி பகுதியாகப் பிரித்துக் கொண்டு பொருள் சொல்கிறார். 


முதலாவது "பிறன் பழி கூறுவான்" . இதில் பிறரைப் பற்றி அவன் இல்லாத போது தவறாகக் கூறுவான் என்று பொருள் சொல்கிறார். எப்படி அப்படி பொருள் சொல்ல முடியும் என்றால், நாம் படிக்கும் அதிகாரம் "புறங்கூறாமை". எனவே, இங்கே கூறுதல் என்பது புறம் கூறுதல் என்று கொள்ள வேண்டும் என்கிறார். 


இரண்டாவது, "தன் பழியுள்ளும் திறன் அறிந்து கூறப் படும்" என்பதற்கு 


"தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து அவனால் கூறப்படும். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியார்க்கு அவ்வளவன்றி அவன் இறந்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின், 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார்."


இனி உரையை பிரிப்போம்:



"தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து"


நம்மிடம் பல குற்றங்கள் இருக்கும். பல வெளியே தெரியாமலேயே இருக்கும். அந்தக் குற்றங்களில், வெளியே தெரிந்தால் எது நமக்கும் பெரிய துன்பத்தை, அவமானத்தைத் தருமோ அதைக் கண்டு பிடித்து. "


மூன்றாவது, 


"தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியார்க்கு அவ்வளவன்றி"


நாம் ஒருவரைப் பற்றி புறம் கூறி விடுகிறோம். அது அவனுக்கு ஒரு வருத்தத்தை தரும். ஆனால, அவன் பதிலுக்கு அதே அளவு வருத்தம் தரும் ஒன்றை நமக்குச் செய்ய மாட்டான். ஒன்றுக்கு பத்தாகச் செய்வான். 


"அவன் இறந்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளை நாடி"


அவன் எப்படி நம்மைப் பற்றி சொல்லுவான் என்றால், நமக்கு உயிரே போய் விடும்படியான குற்றங்களை கண்டு பிடித்து சொல்லுவான். அதுவும் எப்படிச் சொல்லுவான் தெரியுமா?


"எதிரே கூறுமாகலின், 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார்"


நம் எதிரிலேயே, பலர் முன்னிலையில் கூறுவான். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. தலை குனிந்து நிற்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது. 


"திறன் அறிந்து" என்ற வார்த்தைக்கு பரிமேல் அழகர் கூறும் உரை அது. 


- நம்முடைய மிகப் பெரிய குற்றத்தை கண்டு பிடித்து 

- நமக்கு உயிரே போகும் படி 

- பலர் முன்னிலையில் நம் எதிரிலேயே சொல்லுவான் 


இது உனக்குத் தேவையா?  


தேவை என்றால் சரி, நீ புறம் சொல்லிக் கொண்டுத் திரி என்கிறார். 


யாருக்கு இந்த அவமானம், துன்பம் வேண்டும்? 


அதைத் தவிர்க்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்?  புறம் சொல்லாமல் இருக்க வேண்டும். 


புறம் சொல்லுவதால் வரும் மிகப் பெரிய தீமையை சுட்டிக் காட்டி, அந்தத் துன்பத்தில் இருந்து நாம் விடுபட  வழி சொல்லித் தருகிறார். 


இதைத் தெரிந்த பின், யாருக்காவது, புறம் சொல்ல மனம் வருமா?






(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html


அறம்கூறும் ஆக்கம்


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html


முன்இன்று பின்நோக்காச் சொல்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_16.html


புன்மையால் காணப் படும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_21.html




Tuesday, January 24, 2023

கந்தரனுபூதி - பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

                 

 கந்தரனுபூதி -  பேராசை எனும் பிணியில் பிணிபட்டு




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


பெரிய வீடு வேண்டும், வங்கியில் பல கோடிக்கு பணம் வேண்டும், பெரிய கார் வேண்டும், வருடத்துக்கு நாலு அயல் நாடுகளை சுற்றிப் பார்க்க வேண்டும், போட்ட பணத்துக்கு ஒன்றுக்கு பத்து வட்டி வேண்டும், அந்த நடிகர்/நடிகை போல் அழகாக இருக்க வேண்டும்...இப்படி எல்லாம் ஆசைப்படாதவர் யார்?


அது ஒரு புறம் இருக்கட்டும். 


நம் புராணங்களில் அரக்கர்கள் என்று சிலர் வருவார்கள்.  அவர்களின் குணத்தை ஆராய்ந்தால் ஒன்று பொதுவான குணமாகப் படும். 


உலகை எல்லாம் கட்டி ஆள வேண்டும், எல்லோரும் தனக்கு அடிபணிய வேண்டும், சாகா வரம் இல்லாவிட்டாலும் மிக மிக நீண்ட நாள் வாழும் வரம் வேண்டும், தேவர்களும் தனக்கு அடி பணிய வேண்டும்....என்று அவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போகும். 


ஆசை. பேராசை. 


யார் உன்னை வணங்கினால் என்ன, வணங்காவிட்டால் என்ன? அதனால் உனக்கு என்ன பலன்?  


அவன் பலத்துக்கு அவன் பேராசை. நம் பலத்துக்கு நாம் ஆசைப் படுகிறோம். வேண்டுமானால் நம்மை குட்டி அரக்கர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். 


அந்த அரக்கர்கள் கொண்ட பேராசையால் விளைந்தது என்ன?  அவர்கள் கேட்டது எல்லாம் கிடைத்தது. அத்தனை உலகையும் ஆண்டார்கள். ஆனால், இறைவனை விட்டு வெகு தூரம் போய் விடுகிறார்கள். இறுதியில் வரம் தந்த இறைவனே அவர்களை அழிக்கிறான். அது நான் நிகழும். 


ஆசை, பேராசை இறைவனை விட்டு நம்மை வெகு தூரம் கொண்டு சென்று விடும். அதனால் வரும் துன்பங்கள், பின் அழிவு. 


அது வேண்டும், இது வேண்டும் என்று இறைவனை குறித்து தவம் இருந்து, வரங்களைப் பெற்று, அதனாலேயே அவர்கள் அழிந்தார்கள். 


இன்றும் அது நடக்கிறது. கோவிலுக்கு நடையாக நடக்கிறார்கள், வேண்டிக் கொள்கிறார்கள்...


இலக்கியம் கொஞ்சம் மிகைப் படுத்தித் தான் சொல்லும். அதன் உள்ளே உள்ள பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 


அருணகிரிநாதர் சொல்கிறார் 


"பேராசை என்ற பிணியால் கட்டப்பட்டு நான் துன்பத்தில் தவிப்பது சரியா? சூரனின் மலை அழிய வேலை விடுத்தவனே, தேவ லோக அதிபதியே, என்னை இந்த பேராசைப் பிணியில் இருந்து காத்தருள்வாய்" என்று. 



பாடல் 


பேராசை எனும் பிணியில் பிணிபட்டு , 

ஓரா வினையேன் உழலத் தகுமோ ? 

வீரா ! முதுசூர் படவேல் எறியும் 

சூரா ! சுரலோக துரந் தரனே . 




பொருள் 





(pl click the above link to continue reading)


பேராசை = பேராசை 


எனும் = என்ற 


பிணியில் = நோயில் 


பிணிபட்டு ,  = கட்டப்பட்டு 


ஓரா  = சிந்திக்கும் திறன் அற்ற 


வினையேன் = வினை உடையவனான நான் 


உழலத் தகுமோ ?  = துன்பப் படுவது தகுமோ ?


வீரா ! = வீரனே 


முதுசூர் = சூரர்களில் மூத்தவனான பத்மாசுரன் 


பட = மேலே படும் படி 


வேல் எறியும்  = வேலை எறிந்த 


சூரா ! = சூரனே 


சுரலோக  = தேவர் உலகை 


துரந் தரனே .  = காப்பவனே 


தமிழில் நோய், பிணி என்று இரண்டு சொற்கள் உண்டு. 


நோய் என்றால் மருந்து சாப்பிட்டால் குணமாகி விடும். 


பிணி என்றால் குணமாகாது. சர்க்கரை நோய், கான்சர் போல. குறையும், பின் வந்து விடும். போகாது. 


பசியைப் பிணி என்று சொல்லுவார்கள். காலையில் சாப்பிட்டால் பசி குறைந்த மாதிரி இருக்கும் மதியம் வந்து விடும். மதியம் சாப்பிட்டால் பசி குறைந்த மாதிரி இருக்கும், இரவு பசிக்கும். விடாது. 


பிறவிப் பிணி என்பார்கள். விடாது தொடரும். 


அருணகிரி நாதர் பேராசை எனும் பிணி என்கிறார். அது விடாது. ஒன்றைக் கொடுத்தால் அடுத்தைக் கேட்கும். நூற்றி எட்டு அண்டம் கொடுத்தால் ஆயிரத்து எட்டு அண்டத்தையும் கொடு என்று கேட்கும். 


நம் துன்பத்துக்கு எல்லாம் காரணம் இந்த பேராசைதான். 


அதை அறியாமல் எதை எதையோ நினைத்து புலம்புகிறோம். 


"ஓரா வினையேன்" என்றார். சிந்திக்கும் திறன் இல்லாதவன். நான் கொண்ட பேராசையால் எனக்கு துன்பம் வந்தது என்று அறியாமல் இருக்கிறேனே என்கிறார். 


முருகா, நீ சூரபத்மனின் கிரௌஞ்ச மலையை உன் வேலால் அழித்தவன். என் பேராசையை உன்னால் அழிக்க முடியும். எனவே,  என் ஆசைகளை அழித்து என்னையும் காப்பாற்று என்று வேண்டுகிறார். 


நாம் எல்லாம் நம் ஆசைகளை நிறைவேற்றி வை என்று ஆண்டவனை வேண்டுவோம். 


அருணகிரிநாதர், அவர் ஆசைகளை நீக்கி விடு என்று ஆண்டவனை வேண்டுகிறார். 






 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 




]




Monday, January 23, 2023

திருவாசகம் - திரு அம்மானை - கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்

                

திருவாசகம் - திரு அம்மானை  -   கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் )



கண் பார்க்கிறது. 

பார்க்கிறது என்றால் என்ன?  

வெளியில் இருந்து வரும் ஒளியை கண் உள்ளே செலுத்துகிறது. கண்ணின் பின்னே உள்ள ஒளித் திரையில் அது விழுகிறது. அங்கிருந்து அது மூளைக்கு மின் அலைகள் மூலம் அந்த செய்தியை அனுப்புகிறது. மூளையில் சில வேதியல் நிகழ்வுகள் நிகழ்கின்றன. 


நாம் பார்த்தது இலட்டு என்றோ, நாய் குட்டி என்றோ, அம்மா என்றோ, பேனா என்று அறிந்து கொள்கிறோம். 


இதில், பார்ப்பது யார்?


கண்ணா? விழித் திரையா? மூளையா? 


கண்ணும், மூளையும் எல்லாம் இருந்தாலும், இருட்டில் தெரிவது இல்லை. 


கண்ணில் அடி பட்டால் ஒளி விழுந்தாலும் தெரிவது இல்லை. 


கண் நன்றாக இருந்து மூளையில் ஏதேனும் பிரச்சனை என்றாலும் தெரிவது இல்லை. 


எல்லாம் சரியாக இருந்தாலும், மனம் எதையோ நினைத்துக் கொண்டிருந்தால் கண் முன்னால் இருப்பது கூட தெரிவது இல்லை. 


பார்ப்பது யார்? 


மனமா? புத்தியா? சித்தமா? அகங்காரமா?  


ஒரே பெண்ணைப் பார்த்து ஒருவன் தாய் என்கிறான், அவளையே இன்னொருவன் தாரம் என்கிறான், மற்றொருவன் சகோதரி என்கிறான்...மாற்றுவது எது? 


ஒருவன் காரம் மண்டையை பிளக்கிறது என்கிறான். அதையே இன்னொருவன் உண்டுவிட்டு என்ன இது உப்பு உறைப்பு இல்லாமல் சப் என்று இருக்கிறது என்கிறான். 

எது பொருளின் நிஜமான சுவை?


பொருள்களுக்கு என்று ஒரு குணம் இருக்கிறதா இல்லையா அல்லது பார்பவரைப் பொறுத்து அது மாறுகிறதா? மாறும் என்றால் உலகம் என்பது தனித்து ஒன்று இல்லையா?


பொருள்கள்தான் என்று இல்லை. 


இன்பமும் துன்பமும் தனித்து இருக்கிறதா அல்லது அனுபவிப்பர்களைப் பொறுத்து மாறுமா? 

அப்படி மாறும் என்றால், நம் மனதை மாற்றிவிட்டால் எப்போதும் இன்பமாக இருக்கலாமா?

எப்போதுமே இன்பமாக இருக்க முடியும் என்றால், அதுதான் சொர்கமா?


அது தான் இறை அனுபவமா?


மனிவாசககர் சொல்கிறார் 


"என்னுடைய் உடலாகி, ,உயிர் ஆகி, உணர்வு ஆகி, எனக்குள்ளே கலந்து, தேன் ஆகி, அமுதம் ஆகி, கரும்பின் சுவையாகி, வானவரும் அறியாத வழியில் எமக்கு தந்து அருளும் சிவன் என்னுடைய அறிவாகி, பல உயிர்களுக்கும் தலைவனாக நின்றான். அவனைப் போற்றுவோம்" என்கிறார். 



பாடல் 





ஊன் ஆய், உயிர் ஆய், உணர்வு ஆய், என்னுள் கலந்து,
தேன் ஆய், அமுதமும் ஆய், தீம் கரும்பின் கட்டியும் ஆய்,
வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும்,
தேன் ஆர் மலர்க் கொன்றைச் சேவகனார், சீர் ஒளி சேர்
ஆனா அறிவு ஆய், அளவு இறந்த பல் உயிர்க்கும்
கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்; அம்மானாய்!


பொருள் 



(pl click the above link to continue reading)


ஊன் ஆய் = உடம்பு ஆகி 


உயிர் ஆய் = உயிர் ஆகி 


உணர்வு ஆய் = உணர்வு ஆகி 


என்னுள் கலந்து = எனக்குள்ளே கலந்து 


தேன் ஆய் = தேன் ஆகி 


அமுதமும் ஆய் = அமுதம் ஆகி 


தீம் கரும்பின் = இனிய கரும்பின் 


கட்டியும் ஆய் = கட்டியாகி (வெல்லக் கட்டி) 


வானோர் அறியா வழி = தேவர்களும் அறியாத வழியை 


எமக்குத் தந்தருளும், = எங்களுக்கு தந்து அருளும் 


தேன் ஆர்  = தேன் சொரியும் 


மலர்க் கொன்றைச் = கொன்றை மலர் சூடிய 


சேவகனார்= வீரம் பொருந்திய 


சீர் ஒளி சேர் = சிறந்த ஒளி பொருந்திய 


ஆனா அறிவு ஆய் = பெரிய அறிவாகி  


அளவு இறந்த = எண்ணில் அடங்காத  



பல் உயிர்க்கும் =  அனைத்து உயிர்களுக்கும் 


கோன் ஆகி நின்றவா = தலைவனாகி நின்றவனின் பெருமைகளை 


கூறுதும் காண்; அம்மானாய்! = பாடிப் புகழ்வோம் அம்மானாய் 






[


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி



அப்பாலைக்கு அப்பாலை 




 சேர்ந்து அறியாக் கையானை

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post.html


என்வினையை ஓட்டுகந்து



)