Wednesday, August 9, 2023

திருக்குறள் - ஒப்புரவறிதல் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - ஒப்புரவறிதல் - ஒரு முன்னோட்டம் 


திருக்குறள் மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது என்று நமக்குத் தெரியும். 


அறம், பொருள், இன்பம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. 


அதில் அறம் என்ற பகுதி - இல்லறம், துறவறம் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. 


நாம் இப்போது இல்லறத்தின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம். 


இல்லறம் என்பது என்ன?


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_9.html

(please click the above link to continue reading)


சுருக்கமாகச் சொன்னால் அன்பின் விரிவு. 


தனி மனிதனாக இருந்த ஒருவன் மனைவி, மக்கள், சுற்றம், நட்பு, சமுதாயம் என்று அவன் அன்பு விரிந்து கொண்டே போவதுதான் இல்லறம். 


துறவறமும் அதுதான். அது பற்றி பின் சிந்திப்போம். 


இல்லறத்தின் மூலம் விரியும் அன்பானது இல்லத்தைத் தாண்டி சமுதாயத்துக்குளும் பரவும். பரவ வேண்டும். 


அப்படி, தான் சார்ந்த ஒரு சமுதாயத்தின் மேல் அக்கறை உள்ள ஒருவன், அதன் மேல் அன்பு கொண்டு அந்த சமுதாயத்துக்கு செய்யும் நன்மைகள்தான் "ஒப்புரவு அறிதல்" என்று சொல்லப்படும். 


திருவள்ளுவர் ஒவ்வொரு அதிகாரத்துக்கும் தரும் தலைப்பே ஆயிரம் அர்த்தம் சொல்லும். 


முந்தைய அதிகாரம் "தீவினை அச்சம்". தீவினை செய்யாமை என்று வைத்து இருக்கலாம். அச்சம் என்று வைத்தார். 


இங்கே, ஒப்புரவு செய்தல் என்று வைத்து இருக்கலாம். ஆனால், ஒப்புரவு அறிதல் என்று வைத்து இருக்கிறார். 


காரணம் என்ன என்று நாம் எவ்வளவு சிந்தித்தாலும் புரியாது. 


பரிமேலழகர் விளக்குகிறார். 


"அஃதாவது உலக நடையினை அறிந்து செய்தல்.உலகநடை வேதநடை போல அறநூல்களுட் கூறப்படுவதன்றித் தாமே அறிந்து செய்யுந் தன்மைத்தாகலின் , ஒப்புரவு அறிதலென்றார்."


ஏதாவது புரிகிறதா?


என்ன சொல்ல வருகிறார் என்றால், உலகத்துக்கு இன்ன இன்னது தேவை என்று பட்டியல் போட்டு சொல்ல முடியாது. 


தெருவில் போகிறோம்.  இரவு நேரம். இருண்டு கிடக்கிறது. விபத்து நேரலாம். அல்லது சில கயவர்கள் ஏதேனும் செய்யலாம். அங்கு ஒரு விளக்கு போட உதவி செய்வது ஒப்புரவு அறிதல். இது ஏதேனும் நூலில் சொல்லி இருக்கிறதா என்றால் இல்லை. நீயே அறிந்து செய் என்கிறார். 


வேத நடை என்றால் வேதம் முதலிய அற நூல்களில் கூறி உள்ளது போல என்று அர்த்தம். அப்படி எல்லாவற்றையும் கூறிக் கொண்டு இருக்க முடியாது. நீயே அறிந்து செய். புத்தகத்தில் இல்லை, எனவே செய்ய மாட்டேன் என்று சொல்லாதே என்கிறார். 


இந்த ஒப்புரவு ஏன் செய்ய வேண்டும் என்றால், தான் வாழும் சமுதாயம் சிறக்க வேண்டும் என்று நினைத்து செய்வது.


எப்படி தன் குடும்பம் சிறக்க வேண்டும் என்று ஒருவன் நினைப்பானோ, அப்படியே தான் சார்ந்த சமுதாயத்தையும் தன் குடும்பமாக பாவித்து அதற்கும் உதவி செய்ய வேண்டும். 


இப்படி யோசித்துப் பாருங்கள்...ஒரு சமுதாயத்தில் உள்ள அனைவரும், அவர்களுடைய சமுதாயம் மேம்பட வேண்டும் என்று நினைத்து செயல்பட ஆரம்பித்தால் அந்த சமுதாயம் எப்படி இருக்கும். 


ஒரு மருத்துவர், நான் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் செய்கிறேன் என்று ஆரம்பிக்கிறார். 


ஒரு ஆசிரியர், நான் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக படிப்பு சொல்லித் தரப் போகிறேன் என்கிறார். 


ஒரு செல்வந்தர், இங்குள்ள எல்லோருக்கும், நான் இலவச உணவு அளிக்கப் போகிறேன் என்கிறார். 


இப்படி ஒவ்வொருவரும், சமுதாயம் சிறக்க பாடுபட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். 


இல்லறம் என்பது நாலு சுவருக்குள் இருப்பது அல்ல. 


இனி, அதிகாரத்துக்குள் செல்வோமா....







Monday, August 7, 2023

நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - தீ

 நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் - தீ 


தவறு செய்யாதவர் யார்? 


குறை இல்லாதவர் யார்?  


குறை இருக்கிறது, தவறு செய்து விட்டார்கள் என்று ஒருவரை நம் நட்பில் இருந்து விலக்கி விட்டால், அதனால் நட்டம் அடையப் போவது நாம் தான் என்கிறது நாலடியார். 


தீ சில சமயம் வீட்டையே எரித்து விடுகிறது. அதற்காக தீ வேண்டாம் என்று வைத்தால், எப்படி உணவு சமைப்பது? உண்பது? உயிர் வாழ்வது?


என்ன செய்வது, சில சமயம் வரம்பு மீறிப் போய் துன்பம் தந்து விடுகிறது. அதற்காக அது வேண்டாம் என்று ஒதுக்க முடியாது. 


அது போல, நண்பர்கள் சில சமயம் நமக்கு இன்னல் விளைவித்து விடலாம். பொறுத்துக் கொள்வது நமக்கு நன்மையே பயக்கும். 



பாடல் 


இன்னா செயினும், விடற்பாலர் அல்லாரைப்

பொன்னாகப் போற்றிக் கொளல் வேண்டும்-பொன்னொடு

நல் இல் சிதைத்த தீ நாள்தொறும் நாடித் தம்

இல்லத்தில் ஆக்குதலால்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_7.html


(please click the above link to continue reading)


இன்னா செயினும் = துன்பம் செய்தாலும், இன்பம் அல்லாதவற்றைச் செய்தாலும் 


விடற்பாலர் = விட்டு விடுதற்கு உகந்தவர் 


அல்லாரைப் = அல்லாதவரை. அதாவது, விடக் கூடாதவர்களை 


பொன்னாகப் = தங்கத்தைப் போல் 


போற்றிக் = சிறப்பாக 


கொளல் வேண்டும் = கொள்ள வேண்டும். நட்புக் கொள்ள வேண்டும் 


பொன்னொடு = தங்கத்தோடு, மதிப்புள்ள பொருள்களோடு உள்ள 


நல் இல் = நல்ல வீட்டை 


சிதைத்த = நாசம் செய்த 


தீ = தீயானது 


நாள்தொறும் = ஒவ்வொரு நாளும் 


 நாடித் = விரும்பி 


தம் = நமது 


இல்லத்தில் = இல்லத்தில் 


ஆக்குதலால் = சோறு ஆக்குதலால் 


என்றோ ஒரு நாள், ஒரு விபத்து மூலமாக, ஒரு அசாதரண சூழ்நிலையில் தீ நமக்கு துன்பம் விளைவித்து விடலாம். அதனால் வரும் துன்பம் பெரியதுதான். இல்லை என்று சொல்வதற்கு இல்லை. ஆனால், அப்படி ஒரு துன்பம் தந்த தீ இனிமேல் என் வீட்டில் இருக்கக் கூடாது என்று யாராவது சொல்லுவார்களா?  தீ இல்லாமல் உணவு சமைக்க முடியாது. 


அது போல நண்பர்களும், சில சமயம் நமக்கு பெரிய தீங்கு செய்துவிட்டாலும், அதை ஒரு விபத்து என்றே எடுத்துக் கொண்டு, அவர்களை விட்டு விடக் கூடாது. 


அதற்காக எல்லா நண்பர்களையும், எல்லா சமயத்திலும் என்று சொல்லவில்லை. 


சில நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் நமக்கு பல உதவிகள் செய்து இருப்பார்கள். நம் மேலும், நம் குடும்பத்தின் மேலும் மிகுந்த அக்கறை உள்ளாவர்களாக இருப்பார்கள். ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால், அவர்களின் ஒரு செயல் நமக்கு துன்பம் தந்து இருக்கலாம். அதற்காக அவர்களை விட்டு விடக் கூடாது. 


"விடற்பாலர் அல்லாரைப்"


விடற்பாலர் என்றால் விட்டு விட கூடியவர்கள் 


அல்லாரை என்றால் அப்படி விட முடியாதவர்களை.


நல்ல நண்பர்களை இழந்துவிடக் கூடாது, அவர்களால் ஏதேனும் சில சங்கடங்கள் வந்தாலும். 




Friday, August 4, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - தொகுப்புரை

திருக்குறள் - தீவினையச்சம் - தொகுப்புரை 


திருக்குறளும் அதன் உரையும் மிக கட்டுக் கோப்பாக எழுதப்பட்டுள்ளது. எப்படி இப்படி ஆராய்ந்து, ஒரு ஆற்றோட்டமான ஒரு ஒழுங்கில் எழுதி இருக்கிறார்கள். 


வாழ்க்கையை அறம், பொருள், இன்பம், வீடு என்று பிரித்துக் கொள்கிறார்கள். நாம் வாழ்வில் செய்யும் எந்த ஒரு காரியமும் இந்த நான்கில் ஒன்றில்தான் இருக்க முடியும். இதற்கு வெளியே எதுவும் கிடையாது. 


இதில் வீடு என்பது அறிவால் அறிய முடியாது, என்பதால் அதை விட்டு விட்டு மற்ற மூன்றையும் மூன்று பாலாக பிரித்துக் கொண்டு நூல் செய்தார். 


அதில்  அறம் என்பதை இல்லறம், துறவறம் என்று பிரித்துக் கொள்கிறார். 


முதலில் இல்லறத்தை பற்றி சொல்லத் தொடங்கி, ஒவ்வொரு அதிகாரமாக,ஒவ்வொரு அதிகாரமும் அது எப்படி அங்கு வந்தது, அதற்கு முன் உள்ள அதிகாரம் என்ன, அடுத்து வரும் அதிகாரம் என்ன என்று ஒரு ஒழுங்கில் எழுதினார். 


இதில், பரிமேலழகர் செய்த நுண்ணிய வேலை என்ன என்றால், ஒரு அதிகாரத்துக்குள் உள்ள பத்து குறள்களும் எப்படி அந்த வரிசையில் வந்தன, அதில் உள்ள உட்பிரிவுகள் என்னென்ன என்று விளக்கியது. 


நாம் தீவினையச்சம் என்ற அதிகாரம் பார்த்தோம். அதில் உள்ள குறள்கள் எப்படி தொகுக்கப்ட்டு இருக்கின்றன என்று நம்மால் புரிந்து கொள்ள முடியாது. பரிமேல் அழகர் அதை நமக்கு எடுத்துக் காட்டுகிறார். 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_4.html


(please click the above link to continue reading)


முதல் மூன்று குறள்கள் நாம் ஏன் தீவினைக்கு அஞ்ச வேண்டும் என்று கூறுகிறது என்கிறார். 


1. தீவினையார் அஞ்சார் விழுமியர் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு.


2. தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.


3. அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்.


அடுத்து வரும் ஆறு பாடல்களில், தீவினை செய்தார்க்கு தீமை வந்து சேரும் என்று கூறுகிறார். 



4. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு


5. இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்

இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.


6. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்


7. எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும்.


8. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடிஉறைந் தற்று.


9. தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்


கடைசி ஒரு பாட்டில், தீவினை செய்யாமல் இருப்பவர்களுக்கு தீமை ஒன்றும் வராது என்றும் கூறினார் என்கிறார். 



10. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்.


இதுவரை மன, மொழி, மெய்யால் தவிர்க்க வேண்டியவற்றை கூறினார். 


அடுத்து என்ன கூற வேண்டும் ?


செய்ய வேண்டாதவற்றை பற்றி கூறினார். 


இனி செய்யவேண்டியவற்றைப் பற்றி கூற உள்ளார். 


ஒப்புரவு அறிதல் பற்றி கூற இருக்கிறார். 


ஒப்புரவு அறிதல் என்றால் என்ன?


 



Page view 24 Lacs

 

My blog's page view crossed 24 Lacs.


Thank you all.



Thursday, August 3, 2023

கந்தரனுபூதி - எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே

  

கந்தரனுபூதி -   எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


உண்மை, மெய் ஞானம் என்று சொல்கிறீர்களே அது  என்ன?  அது என்ன என்று தெளிவாகச் சொன்னால் நாங்களும் அறிந்து கொள்ள முடியுமே? அதை சரி பார்க்க முடியுமே என்று பகுத்தறிவாளர்கள் கேட்கலாம். சொல்ல முடியாது என்றால் அது என்ன ஞானம் என்று கேலி செய்யலாம். 


பல விடயங்களை நம்மால் விவரித்துச் சொல்ல முடியாது. 


ரொம்ப தூரம் போவானேன். 


கற்கண்டின் சுவை எப்படி இருக்கும் ? எனக்கு விளக்கிச் சொல் என்றால் எப்படி சொல்லுவது?  கற்கண்டு இருக்கிறது. வாயில் போட்டால் இனிக்கிறது. அது உண்மைதான். சரி, சுவைத்தாய் அல்லவா, அது என்ன சுவை என்று சொல் என்றால் எப்படி சொல்லுவது. 


மல்லிகையின் மணம் எப்படி இருக்கும் சொல். அது ரோஜாவின் வாசனையில் இருந்து எவ்வாறு வேறுபட்டது சொல் என்றால் எப்படிச் சொல்லுவது?


கற்கண்டு எப்படி இருக்கும் என்றால் ஒரு துண்டு வாயில் போட்டால் தெரிந்து விடும். அனுபவம் இருந்தால் புரியும். சொல்லி விளங்க வைக்க முடியாது. 


அது போல இறை அனுபவமும், மெய் ஞானமும் அனுபவ பூர்வமாக அறிய முடியுமே அல்லாமல் படித்து அறிய முடியாது. 


அருணகிரிநாதர் சொல்கிறார்....


"இந்த உலக வாழ்க்கையில் அகப்பட்டு நான் செய்கின்ற செயல்கள் எல்லாம் ஆன்ம முன்னேற்றத்திற்கு உகந்தது அல்ல என்று முருகா நீ என்னை தடுதாட்கொண்டாய். அது மட்டும் அல்ல எனக்கு மெய்பொருளை உணர்வித்தாய். அப்படி குருவின் மூலம் அறிய வேண்டிய ஒன்றை மற்றவர்களுக்கு எப்படி விளங்கிச் சொல்ல முடியும்?" என்று


பாடல் 


செவ்வான்  உருவிற் றிகழ் வேலவன் அன் ( று ) 

ஒவ்வாததென உணர்வித்ததுதான் 

அவ்வாறு அறிவார் அறிகின்றதலால் 

எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே . 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_3.html


(pl click the above link to continue reading)



செவ்வான் = சிவந்த வானம், மாலை நேர வான போல்


உருவிற் = சிவந்த உருவம் 


றிகழ் = கொண்டு திகழ்கின்ற 


வேலவன் = வேலை உடைய முருகப் பெருமான் 


அன் ( று ) = அன்று ஒரு நாள் 

 

ஒவ்வாததென = ஒவ்வாது, சரி வராது என்று 


 உணர்வித்ததுதான் = உணர்வித்தான் 

 

அவ்வாறு = அவ்வாறு குருவால் உணர்விக்கப்பட்டால் 


அறிவார் = அறிந்து கொள்வார் 


 அறிகின்றதலால் = அறிய முடியுமே அல்லாது 

 

எவ்வாறு = வேறு எப்படி 


ஒருவர்க்கு = வேறு ஒருவருக்கு 


இசைவிப்பதுவே = விளங்க வைப்பது ?


இறைவன் அருணகிரிநாதற்கு "உணர்வித்தான்". சொல்லிக் கொடுக்கவில்லை.  உணரும் படி செய்தான். 


எனவேதான் ஆன்ம தேடல் என்பது தனி மனித அனுபவமாகவே இருக்கிறது. ஒருவர் போன வழியில் இன்னொருவர் போக முடியாது. 


திருநாவுக்கரசர் போன வழியில் மணிவாசகர் போகவில்லை.  அவரவர் அனுபவம் தனி. 


அருணகிரிநாதர் மலைக்கிறார். 


தனக்கு முருகன் உணர்வித்தான். அதை மற்றவர்களுக்கு எப்படி சொல்லுவது என்று தெரியாமல் திகைக்கிறார். 


கணிதத்தில் முனைவர் (Dr ) பட்டம் பெற்ற பெரிய அறிஞர் ஒருவர் இருக்கிறார். இரண்டாம் வகுப்பு பிள்ளைக்கு அவர் அறிந்த கணிதத்தை சொல்லிக் கொடுக்க முடியுமா?  அவருக்குத் தெரியும். அந்தக் குழந்தையால் புரிந்து கொள்ள முடியாது. 


அது வளர்ந்து, பக்குவப் பட வேண்டும். 


அதற்கு முன்னால் அது எவ்வளவு விருமினாலும், அதற்கு எவ்வளவு சொன்னாலும் ஒன்றும் புரியாது. 


ஆன்மா பக்குவப் படவேண்டும். இறைவன் அருள் வேண்டும். இரண்டும் நிகழ்ந்தால்தான் அந்த அனுபவம் கிட்டும். 


திருமூலர் அதை வேறு விதமாக சொல்லிக் காட்டுவார். 


தாய், தன் கணவனோடு அனுபவித்த சுகத்தை தன் சிறுவயது மகளுக்கு எப்படி சொல்லி விளங்கப் பண்ண முடியும்? அந்த சிறுபெண் வயதுக்கு வந்து, மனமும், உடலும் பக்குவப்பட்டால் அவளுக்கே அது என்ன என்று புரியும். 


முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்!

அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்!

மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய

சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமாறு எங்ஙனே? (திருமந்திரம் 2944)




 [


மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html

மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html

மெய்யியல் - பகுதி 4

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html

மெய்யியல் - பகுதி 5 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html

மெய்யியல் - பகுதி 6 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html

மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html

நின்று தயங்குவதே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html

வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html

விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html

 பரிசென் றொழிவேன் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html

எதிரப் படுவாய்

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html

அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html

முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html

என்று அருள்வாய் ? 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/1.html

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_24.html

யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

 யாமோதிய கல்வியும் பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

உதியா மரியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html

மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html

உபதேசம் உணர்தியவா 

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_18.html

கருதா மறவா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_23.html

வள்ளிபதம் பணியும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_4.html

அடியைக் குறியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_21.html

அருள் சேரவும் எண்ணுமதோ 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_26.html

அலையத் தகுமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post.html

நினைந்திலையோ  

https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post_29.html

மின்னே நிகர்வாழ்வை

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post_16.html

யானாகிய என்னை விழுங்கி 

]

Wednesday, August 2, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - அருங்கேடன் என்பது அறிக

 திருக்குறள் - தீவினையச்சம் -  அருங்கேடன் என்பது அறிக


ஒருவனுக்கு துன்பம் வருமா இல்லையா என்று துல்ல்லியமாக கூற முடியும். யாருக்குத் துன்பம் வரும், யாருக்கு துன்பம் வராது என்று கணிக்க முடியும். உங்களுக்கு எதிர்காலத்தில் துன்பம் வருமா என்று அறிய வேண்டுமா? மேலும், அந்தத் துன்பங்கள் வராமல் தடுக்க வேண்டுமா?


வள்ளுவர் வழி சொல்கிறார். 


"தீய வழிகளில் சென்று மற்றவர்களுக்கு ஒருவன் துன்பம் செய்யாமல் இருப்பான் என்றால் அவனுக்கு ஒருபோதும் துன்பம் வராது"


பாடல் 


அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_2.html


(please click the above link to continue reading)



அருங்கேடன் = அருமை + கேட்டினை உடையவன் 


என்பது = என்று 


அறிக = அறிந்து கொள்க 


 மருங்கோடித் = தவறான வழியில் சென்று 


தீவினை = தீய வினைகளை 


செய்யான் = செய்யாதவன் 


எனின் = என்றால் 


அருங்கேடன்  என்றால் என்ன?  ஒரு பொருள் அருமையானது என்றாது கிடைப்பதற்கு அரிதானது என்று பொருள். ஒருவன் அருங்கேடன் என்றால் அவனுக்கு கெடுதல் அரிதாக வரும். அதாவது வராது என்று பொருள். 


எப்போது வராது என்றால் 


மருங்கோடி தீயன செய்யான் எனில். 


மருங்கு என்றால் பக்கம். ஒரு பக்கமாகச் சென்று. அதாவது, அற வழி என்ற நேர் வழியை விட்டு, வேறு பக்கம் சென்று, மற்றவர்களுக்கு தீமை செய்யாமல் இருப்பான் என்றால், அவனுக்கு ஒருக் காலும் தீமை வராது என்கிறார். 


இந்த மருங்கு என்ற சொல் பல இடங்களில் பல விட அர்த்தங்களில் சொல்லப் பட்டு இருக்கிறது. 


பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்

மருங்குடையார் மாநிலத்து இல்


என்ற திருக்குறளில் மருங்கு என்பது சுற்றத்தார் என்ற பொருளில் வந்துள்ளது. 


செல்வர்யாம் என்று செல்வுழி எண்ணாத

புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்

கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி

மருங்கறக் கெட்டு விடும்


என்ற நாலடியாரில், மருங்கு என்ற சொல் அடையாளம் என்ற பொருளில் வந்துள்ளது. மின்னல் போல் செல்வம் அடையாளம் இல்லாமல் சென்று விடும் என்ற அர்த்தத்தில். 


சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யப்படும்.

பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த

கன்னங்கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில் வைத்துத்

தன்னந்தனியிருப்பாக்கு இதுபோலும் தவம் இல்லையே


என்ற அபிராமி அந்தாதியில் மருங்கு என்பது வயிறு, அல்லது இடை என்ற பொருளில் வந்துள்ளது. 


அது ஒரு சுவாரசியமான வார்த்தை. 


எப்படி ஒரு சொல் சம்பந்தமே இல்லாத வெவேறு பொருள் கொள்கிறது?


சிந்தித்துப் பார்த்தால் அடிநாதமாக உள்ள பொருள் விளங்கும்.


மருங்கு என்றால் பக்கம் என்று பார்த்தோம். 


உடம்பின் இரண்டு பக்கமும் இருப்பது இடுப்பு. எனவே மருங்கு, இடுப்பு என்ற பொருள் கொண்டது. 


அக்கம் பக்கம் இருப்பவர் சுற்றத்தார். எப்போதும் நமக்கு பக்கத்தில் இருப்பவர்கள் சுற்றத்தார். நம்மை விட்டுப் போய் விட மாட்டார்கள். எனவே, மருங்குடையார் என்று அவர்கள் அழைக்கபடுகிரார்கள். 


செல்வம் எப்போதும் நம் பக்கம் இருக்காது. இன்று நம் பக்கம் இருக்கும், நாளை வேறொருவர் பக்கம் போய் விடும். எப்ப எந்தப் பக்கம் இருக்கும் என்று தெரியாததால் அதை மருங்கற கெட்டு விடும் என்கிறது நாலடியார். 





Tuesday, August 1, 2023

நாலடியார் - நட்பிற் பிழைபொறுத்தல் - தாம் வேண்டிக் கொண்டார் நட்பு

 நாலடியார் - நட்பிற் பிழைபொறுத்தல் - தாம் வேண்டிக் கொண்டார் நட்பு


வயக்காட்டில் நீர் பாய்ச்சுவார்கள். ஓடை வழி வரும் அந்த நீர் சில சமயம் அந்த ஓடையின் கரையை உடைத்துக் கொண்டு வெளியே செல்லும்.  சில சமயம் வயலுக்கு பாய்ச்சிய நீர், வரப்பில் எங்கேனும் விரிசல் இருந்தால் அந்த வழியாக வெளியே ஓடிவிடும். 


நீர் இப்படி வெளியே போகிறதே என்று கோபித்துக் கொண்டு, யாரும் மீண்டும் கரையையோ, வரப்பையோ எடுத்துக் கட்டாமல் இருக்க மாட்டார்கள். அது எத்தனை தரம் உடைந்தாலும், அத்தனை தரமும் சரி செய்வார்கள். 


அது போல, ஆராய்ந்து நட்பு கொண்டவர்கள், நண்பர்கள் எத்தனை முறை பிழை செய்தாலும், அவர்களை மீண்டும் மீண்டும் சேர்த்துக் கொள்வார்கள். 


பாடல் 


செறுத்தோறு உடைப்பினும், செம் புனலோடு ஊடார்,

மறுத்தும் சிறைசெய்வர், நீர் நசைஇ வாழ்நர்;-

வெறுப்ப வெறுப்பச் செயினும், பொறுப்பரே,

தாம் வேண்டிக் கொண்டார் தொடர்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post.html


(please click the above link to continue reading)



செறுத்தோறு = செறுத்தல் என்றால் அடக்குதல், தடுத்தல் என்று பொருள். இங்கே, ஒவ்வொரு முறையும் கரையை  


 உடைப்பினும் = உடைத்துக் கொண்டு வெளியே சென்றாலும் 


செம் புனலோடு = செம்மையான நீரோடு (சிறந்த நீரோடு) 


ஊடார் = யாரும் கோபம் கொள்ள மாட்டார்கள் 


மறுத்தும் = மீண்டும் 


 சிறைசெய்வர் = அணை கட்டுவார்கள் வரப்பை எடுத்துக் கட்டுவார்கள். 


நீர் = தண்ணீரை 


நசைஇ வாழ்நர் = விரும்பி, அண்டி வாழ்பவர்கள் 


வெறுப்ப வெறுப்பச் = மீண்டும் மீண்டும் வெறுக்கத் தக்க செயல்களை 


 செயினும் = செய்தாலும் 


பொறுப்பரே = பொறுத்துக் கொள்வார்களே 


தாம் = அவர்களே 


வேண்டிக்  = விரும்பி 


கொண்டார் தொடர்பு = கொண்டவர்களின் தொடர்பை 


நண்பர்கள் தவறு செய்வார்கள். நாம் விரும்பாத காரியங்களை செய்வார்கள்.  அதற்காக அவர்களை விட்டு விட முடியாது. 


இது உறவுக்கும் பொருந்தும். 


புதிதாக வரும் உறவுகள் சில சிக்கலாக இருக்கும். சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். வெட்டி விட முடியாது. 


நட்பு, உறவு என்றால் சில சமயம் அப்படித்தான் இருக்கும். சேர்த்து அணைத்துக் கொண்டு போக வேண்டும்.